வியாழன், டிசம்பர் 29, 2011

கருணை காட்டு

மக்கள் ஓசையில் வந்தது.. 2007

ஏய்
விவஸ்தைகெட்ட
வெயிலே..

என் கண் முன் வந்து நிற்காதே
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
மென்மையான மலர் அல்ல
நான்.!

காலையில்
கண்ணெதிரே தோன்றி
சாலையை இருளடையச் செய்து
என்னை அலைக்கழிக்க வைப்பதில்
உனக்கென்ன அப்பேர்பட்ட மகிழ்ச்சி!?

தங்கப்பல்லைக் காட்டி
இளித்து நிற்கும் உன்
பிரகாசத்தை
அவசர யுகத்தில்
அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் ரசிக்க முடியவில்லை..

ஒரு நொடி அசந்திருப்பின்
உன் ஒளிக் கதிர் தாக்குதலால்
ஓர் உயிரைக் கொன்று
எம பாதகியாயிருப்பேனே!

பழி பாவத்திற்கு அஞ்சி
கெஞ்சிக்கேட்கும்
எனக்குக் கருணைக் காட்டு..

கொஞ்ச நேரம் மேகத்திற்குள்
ஒளிந்துக்கொண்டு
வழிவிடு சூரிய பகவானே
நான் வேலைக்குப் போகணும்.

மனிதன் இல்லை-நோய் பயமுமில்லை

H1N1 பயங்கரம் பற்றிய அறிவிப்பு எங்கு பார்த்தாலும். எங்க ஆபிஸிலும் அறிக்கைகள், முக மஸ்ஃக் கள் வினியோகம் கட்டுக்கட்டாக. அரசாங்கமும் செய்தி வழி, அதன் பயங்கரத்தைப் போதித்த வண்ணமாக..

அப்போது எழுதிய எனது கிறுக்கல் இது - மக்கள் ஓசை 2008


நாலாப் பக்கமும் மரம்
நடுவில் நான்

வானம் தெரியவில்லை
வானவில் போல்
வர்ணக் கம்பளமாக
இலைகள்
கதிரவனையே மறைத்து..

கிளைகளை உரசவிட்டு
சேட்டைகள் செய்யும்
குரங்குகளும் அணில்களும்
ஒரு புறம்..

சல சல சத்தம்
மிக அருகில்
அது அருவியல்ல
எங்கிருந்தோ ஓடிவரும்
கால்வாயின் நீரோட்டம்

எதையோ வேண்டி
காகம் கரைவது கூட
குயிலின் கானமாக
காதுகளுக்கு இனிமை

நனைந்தும் நனையாத
மரங்களிலிருந்து
வடியும் நீர் கூட
இனம் புரியாத
இதம்..

முக கவசத்தை அகற்றி விட்டு
மூச்சை இழுத்து
சுதந்திரமாக
சுவாசித்துக் கொண்டிருந்தேன்
H1N1 பயமில்லாமல்

குண்டுசட்டி நிருபர்கள்

தென்றலில் வந்த எனது கட்டுரை (வாசகர் கடிதம்) -2008

நமது நிருபர்களின் நிலையை நினைக்கின்ற போது, பயங்கர நகைச்சுவைதான் போங்க. !

இங்கே உள்ள நிருபர்களில் பெரும்பாலானோருக்கு ஆராயும் திறன் அறவே இல்லை என்கிற உண்மையை எவ்வளவு நாள் தான் மனதிலேயே பூட்டி வைப்பது? இவர்களின் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது என்பதை நான் சொல்லித்தான் பிறருக்குத்தெரிய வேண்டுமா என்ன!

கண்ணால் கண்டதையும் காதால் கேட்பதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியோ அல்லது அதில் கண், காது, மூக்கு வைத்து ஜோடித்துச் சொல்வதையோதான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சொல்லப்படுகிற தகவல்களில் ஓர் ஆழமான ஆராய்ச்சியோ அல்லது விசாலமான பார்வையோ இருப்பதில்லை. சராசரி வாசகனின் பார்வையை விட, மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பார்கள்.

அதைவிட அதிர்ச்சியூட்டும் விவரம் என்னவென்றால், ஒரு சில நிருபர்கள் (சிலர்தான்) உட்கார்ந்த இடத்திலேயே செய்திகளைச் சேகரித்து எழுதிவிடுகிறார்களாம். ஆச்சிரியமாக இருக்கின்றதல்லவா.! ஆனாலும் இது உண்மை.

சிலரின் செய்திகளால், தனி மனிதனின் தன்மான உணர்வு கூட பாதிக்கப்படுகிறதென்பதும், கேள்விப்பட்ட ஒன்று.

உதாரணத்திற்கு; தலையைச் சொரிந்தால் - பேண் தொல்லையால் திண்டாடுகிறார், என்றும், கொட்டாவி விட்டால் - கூட்டத்தில் குறட்டை விட்டு நன்கு தூங்கினார், என்றும், கண்களைத்துடைத்தால் - சோகம் தாளாமல் பொது நிகழ்வில் கண்ணீர் விட்டுக் கதறியழுதார், என்றும் பரபரப்பாக செய்திகள் எழுதிவிடுவார்களாம்.

பாருங்கள், எப்படியெல்லாம் ஒரு படி மேலே சென்று, அறிவுப்பூர்வமாக யோசித்து கதைகளைச் சேர்த்து செய்தி எழுதுகிறார்கள் என்று. !?

நிருபர்களின் கூர்மையான சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் கண்டு புல்லரித்த அனுபவமும் உண்டு.

‘புளிய மரத்தில் புள்ளையாருக்குப் பூஜை. அரசமரத்தில் ஆத்தாவிற்கு அருள் வந்தது. மாங்கா மரத்தில் மாரியம்மாளுக்கு மாலைகள் குவிகின்றன. ஆலமரத்தடி கணபதி பால் அருந்துகிறார். வேப்பமரத்தில் பேய், போன்ற விவரங்கள் அரசல்புரசலாக தெரியவந்தால் - பேனா என்கிற கூர் ஆயுதத்தையும், கேமரா என்கிற போர்வாளையும் தூக்கிக்கொண்டு தலைத்தெறிக்க அவ்விடம் நோக்கி ஓடி.. நான், நீ என முந்தி கொண்டு, அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கிப் பிரபலப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு அது அதிசயம் என்பதால் எழுதிப் பிரபலப்படுத்துகிறார்களா அல்லது உள்ளபடியே அவலம் என்கிற பார்வையில் பதியப்பட்டதா என்பது கூட நமக்குக் குழப்பமாக இருக்கும்.

இதைவிட இன்னொரு மிக மோசமானது - யாராவது ஒரு ஏழைப்பாட்டி, வயிற்றுப்பிழைப்புக்காக ‘கரிபஃப்’ செய்து பிழைப்பு நடத்துகையில், அவரின் செய்கிற வியாபார விளம்பரப் பலகையில் ‘கரிபஃப் விற்கப்படும்’ என்று எழுதிவிட்டால் போதுமே.. `தமிழ் கொலை செய்யும் வியாபாரிகள்’ என்கிற செய்தியோடு, பாட்டியின் புகைப்படமும், அந்த ஒட்டுக்கடையின் புகைப்படமும் ‘கரிபஃப்’பைத் தமிழில் எப்படிச்சொல்வார்கள் என்கிற விளக்கத்தோடு செய்தி ஒன்று வெளிவந்துவிடும். கேட்டால், சமூதாய அவலத்தைக் கண்டு வெகுண்டெழுகிறார்களாம்!

புகைப்பட கலைஞர்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் எல்லாப் புகைப்படங்களுமே, யாருக்காவது கூஜா தூக்குவதைப்போல் தான் இருக்கும். தமக்கு வேண்டப்பட்டவர்களென்றால், அவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து அழகாகக் காண்பிப்பார்கள். அரசியல் பிரமுகரென்றால், புகைப்படக் கலைஞருக்கு எல்லாமும் அவர்தான். மேலும் அந்தக் கேமரா கலைஞரை யாராவது ஓரிரு வரிகள் மேடையில் புகழ்ந்து பேசிவிட்டால் போதும். ஃக்ளோசப்பில் அவர்கள் தான், எல்லாக் கோணத்திலும் அவர்கள் இருப்பார்கள்.  அதிலேயே நமக்குத் தெரிந்துபோகும் அவர்களின் சீரிய சமுதாயப் பார்வையும் உள் நோக்கமும்.!

புதுமைச் செய்திகளால் கண்களை அகல விரியவைக்கும் ஆய்வுகள், புல்லரிக்கவைக்கும் புதிய தகவல்கள், உலகையே புரட்டிப்போடும் புகைப்படங்கள், மெய் சிலிர்க்கவைக்கும் கருத்துக்கணிப்புகள், அதிர்ச்சியும் ஆச்சிரியமும் நிறைந்த மர்ம புகைப்படங்கள், விசாலமான வித்தியாசமான பார்வை, அறிவியல் ஆராய்ச்சி, ஆதாரப்பூர்வமான உலகக் குறிப்புகள், விவேகமாக வேகமாக  சிந்திக்கும் திறன் என நித்தம் போராடிக்கொண்டிருக்கும் உலக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் எங்கே! குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் நமது நிருபர்கள் எங்கே?

(இதையொட்டி, மிக மோசமாக  என்னைத்திட்டித்தீர்த்த கடிதங்களையும் சேகரித்துள்ளேன்.  (விடுவார்களா பின்ன!?) அது வேண்டாம்) ..




ஓஷோவின் தேன் துளிகள்

எனது தொகுப்பு- மக்கள் ஓசையில் வந்தது (2006)

1. உங்களைப் பற்றிய அதிக அக்கறையே, உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.

2. உண்மையை தரிசியுங்கள், விளக்கமளிக்கத்தேவையில்லை.

3. அழாமல், அஞ்சாமல், துணிவுடன், அன்பாகவும் ஆடியும் கொண்டாடியும் வாழ்பவர்களுக்கே மரணம் அழகானது.

4. அநியாயத்திற்குள் நுழையத் தயாராய் இருப்பவர்களால் மட்டுமே வாழ்வைப் புரிந்துக்கொள்ள முடியும்.

5. அறியாததிற்குத் தயாராக - அறிந்ததிற்கு இறந்தவராய் ஆகுங்கள்.

6. வாழ்வு சமயத் தன்மையோடு இருக்கவேண்டும். ஆனால் சமயம் வாழ்க் கூடாது. தெய்வத்தன்மையே அவசியம். தெய்வம் அவசியமில்லை.

7. தொண்டு செய்தல் கேவலமான சொல். என்னிடம் உள்ளதை பல வழிகளில் பகிரிந்துக் கொள்கிறேன் என்பதுவே சிறந்தச் சொல்.

8. குழந்தையாய் இருங்கள். சிறுபிள்ளைத்தனம் வேண்டாம்.

9. உண்மையாய் இருங்கள். அஞ்சாமையை ஊட்டும்.

10. பிராத்தனை ஒரு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. கோவிலுக்குச் செல்பவர்கள் கடினமானவர்களாக மாற வேண்டிய அவசியமில்லை.

11. ஆழமாய் வாழுங்கள், முழுமையாய் வாழுங்கள். அனைத்தையும் அனுபவித்து வாழுங்கள். அப்போதுதான் விழத்தயாராய் இருக்கும் கனிந்த பழம்போல், மரணம் வந்து உங்களைத் தழுவும் போது, நீங்கள் தயாராக இருக்க முடியும்.

12. ஆதாரப்பூர்வமாக வாழுங்கள். முகமூடியை அகற்றுங்கள். அவை உங்களது இதயத்தை அழுத்தும் சுமை. பொய்மையானவற்றையெல்லாம் விடுங்கள். வெளிப்படையாக இருங்கள். அது சிரமம் கொடுக்கக் கூடியது என்ற போதிலும், அந்தச் சிரமம் அருகதை உள்ளதே. ஏனெனில் அந்தச் சிரமத்திற்குப்பிறகு நீங்கள் பக்குவப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் வாழ்வு அதன் புதுமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

13. புரிந்துக் கொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சிந்திக்கும் உணர்வோடு, விழிப்புடன் இருப்பவனே. விழிப்புணர்வு ஒன்றே மதிப்பிற்குகந்தது. மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

14. நிர்வகிக்கக் கூடியதல்ல அன்பு, அது தானாகவே நடக்கும் ஒரு நிகழ்வு. அன்பை நிவகிக்க முயன்றால், அந்தக் கணத்திலேயே அது இல்லாமல் போய்விடும்.

நன்றி திரு. இராஜேந்திரன் ஞாயிறு பொறுப்பாசிரியர்.