புதன், அக்டோபர் 17, 2012

அன்புள்ள....

நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு கடிதம் எழுதினேன்..

பள்ளியில் படித்ததைப்போல்
அப்பா தமது உறவுகளுக்கு எழுதச்சொன்னதைப்போல்
பக்கத்து வீட்டுப்பையன்
எனக்காக எழுதிய காதல் கடிதம்போல்
கண்மணி அன்போடு காதலன் எழுதும் லெட்டர் போல்
காதலிகளுக்கு காதலர்கள் எழுதி அனுப்பிய கடிதம்போல்
அவருக்கு நான் எழுதியது போல்
அக்காவிற்கு வந்த சர்ச்சைக் கடிதம்போல்
வெறும் உதட்டுச்சாயத்தால் முத்தமிட்டது போல்
இரத்தத்தால் எழுதியதுபோல்
எழுதி கண்ணீரால் அழித்ததைப்போல்


பெயர்
முகவரி
தேதி
வணக்கம்
அன்புள்ள நீ ....
நாங்க நலம். நீங்க நலமா?
இடையில் நிற்க; என்கிற சொல்லும் மறவாமல்..

இதுவரைதான் பழயபாணி
அதற்குப்பிறகு?

மனதில் வந்த அனைத்தையும் எழுதினேன்
கொட்டித்தீர்த்தேன்,
எழுதிக்கொண்டே அழுதேன்
நிறுத்தினேன்..
வேதனையைச் சொன்னேன்
வேண்டாமென்றேன்
வேண்டுமென்றேன்
கிடைக்காது, நிலைக்காது என்றேன்
ஏமாற்றத்தின் சீற்றம்
இச்சையாகி கொச்சையாகி
பீடிகையோடு பல கேள்விக்குறிகள்..
தொடர்ந்தேன்
ஒன்று இரண்டு மூன்று போதாது என்றேன்
உன்னையும் நொந்தேன்
என்னையும் நொந்தேன்
இடையில் ஒரு கவிதையையும் நுழைத்தேன்
சிறிய உதாரணமாக ஒரு விளக்கமும் அங்கே
அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டேன்
போதவில்லை போதவில்லை
மனம அமைதியடையவில்லை
இன்னும் இன்னும் என்னன்னமோ
கிறுக்கினேன்..
கண்ணம்மா வந்தாள்
கலீல் ஜிப்ரான்
மைக்கெல் எஞ்சலா
கம்பர் காளிதாசன் கண்ணதாசன்
நீயும் அங்கே
யார் யார் என்று..
புரிந்தும் புரியாமலும்..
எனக்கே ஒன்றும் விளங்காமல்
என்னையே அவை குழப்பியதால்
ஒரு ஹைக்கூ’வை எழுதி
முற்றுப்புள்ளி வைத்தேன்..

இப்படிக்கு,
அன்புடன் உன் விஜி
மற்றவை நேரில்.

முடித்துவிட்டேன்,  
கடிதம் எங்கே?