ஞாயிறு, மார்ச் 25, 2012

பழைய வீடு

முன்பு நாங்கள் வசித்த இடம், வீடு, எங்களை அவ்வளவாகக் கவரவில்லை. பெரும்பாலும் மலாய்க்காரர்கள் வசிக்கும் ஓர் இடம் அது.

அவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லைதான். இருந்தபோதிலும், அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூனை வளர்ப்பார்கள். அவர்களின் அந்த வளர்ப்புப் பூனைகள் இரவு வேளைகளில் அந்த ஏரியாவையே சுற்றும். நாம் கதவை மூடிவைத்திருந்தாலும் அது நம் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து அடுப்பங்கரையில் குடும்பம் நடத்திக் குட்டிகள் போடும்.

ஒரு முறை அப்படித்தான், மகள் தூங்கும் அறையின் கட்டிலுக்கு அடியில் அமைதியாகப் படுத்துக்கொண்டது ஒரு கருப்புப்பூனை. நடு இரவில் அங்கே ஒரு எலி வர, அந்த எலியைப்பிடிப்பதற்குத் தாவிய பூனை, மகளில் மேல் பாய்ந்தது. அதைக்கண்டு அவள் அலற (பயங்கரமாக)  ஓரே அமளித்துமளியாகிவிட்டது.

அதுமட்டுமல்ல, இரவு நேரங்களில் வீட்டின் கூறையில் பூனைகளின் ராஜ்ஜியம் தாங்க முடியாத ஒன்று. நள்ளிரவு வேளைகளில் திடுதிமென தாறுமாறாக சத்தங்களை எழுப்பிக்கொண்டு ஓடும். ஓடுகளைப் பிராண்டும்.. அயர்ந்து உறங்கும் நமக்கு தீடிரென்று விழிப்பு வரும், அதன் பிறகு உறக்கம் களைந்து, உறங்காமலேயே எத்தனையோ இரவுப்பொழுதுகள் பாழாய்ப்போயின, இந்தப் பூனைகளால்..

பூனைகளுக்குள் பயகரச்சண்டையெல்லாம் வரும். சண்டைகள் கடுமையாகவே நிகழும். சண்டை என்று இறங்கிவிட்டால் அதுகளில் பேச்சையே அதுகள் கேட்காதுகள் போலிருக்கு. விடாமல் போராட்டம் நடக்கும்.

சிலவேளைகளில் குழந்தைகள் அழுவதைப்போன்ற சத்தத்தில், ஊளையிடும் பாருங்க, கேட்கவே பரிதாபமாக இருக்கும்.  சில நேரங்களில் பொழுது விடியும் வரை அதே போல் கத்திக்கொண்டே இருக்கும். ஒரு முறை கடுமையான கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பிரம்பால் வசமாக மாட்டிய ஒரு பூனையை வாங்கு வாங்கு என வாங்கினேன். அப்போது என் மகனுக்கு ஏழு வயது இருக்கும்..

``ஏம்மா, பேசவே முடியாத இந்த ஜீவனை அடிக்கிறீங்க? பாவம் இல்லையா? இந்த பிரம்பால் (ரோத்தான்) அடித்தால் எப்படி வலிக்கும் தெரியுமா? குடுங்க நான் உங்கள திருப்பி அடிக்கிறேன், எப்படி இருக்குன்னு அப்புறம் தெரியும்!. எனக்கு நீங்க சோறு ஊட்டறீங்க, அதுக்கு அவங்க அம்மா சோறு ஊட்டல, அதான் அது அழுவுது, அத போய் இப்படி அடிக்கிறீங்களே அறிவிருக்கா!?’’ என்று கைகளை முகத்திற்கு நேராக நீட்டி என்னைத் திட்டினான்.

அன்றுமுதல் எனக்கு பிடிச்சது சனியன் என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் சமைப்பதை, தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, பூனைகளுக்குக் கட்டாயம் போட்டாகவேண்டுமென்று, சமைத்து வைத்த உணவுகளை அப்படியே எடுத்து பூனைகளுக்கு உணவாகக் கொடுப்பான். ஒரு முறை மார்க்கெட்டில் இருந்து அப்போதுதான் வாங்கிவந்த வஞ்சரை மீன் துண்டு ஒன்றை அப்படியே தூக்கி பூனைக்குப் போட்டான்.

``மீன் விக்கிற விலைக்கு, பூனைக்கு மீன் கேட்குதா?, இரு உன்ன என்ன பண்ணுகிறேன் பார் என ஒரு முறை அவனையும் அடித்தேன். அசரவில்லை, தொடர்ந்து வீட்டில் உள்ள கருவாடு, சார்டின், நெத்திலி என ஓயாமல் எடுத்துப் போட்டுக்கொண்டே இருப்பான். இதனாலேயே, அவனைக்கண்டால் சில பூனைகள் உடனே ஓடிவந்து விடும்.

வீட்டு வாசட்படியில் உட்கார்ந்திருப்பான், அவனைச் சுற்றி பூனைகள் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும் `மீயாவ்,மீயாவ்’ என. என்னன்னவோ பேசிக்கொண்டிருப்பான் பூனைகளோடு.

அந்த பழைய வீட்டு வாசலில் ஒரே பூனை மலமாக இருக்கும். பூனையின் மலம்  துர்நாற்றம் வீசும். வீடே நாறும். நான் நட்டுவைத்துள்ள செடிகள் அனைத்தும் செத்துப்போகும் இந்தப் பூனை மலத்தின் கொடுமையால். பூனையின் மலம் புல்லில் பட்டால் கூட அந்த புற்கள் கருகிப்போகும். எத்தனையோ முறை முயன்று தோற்றுப்போனேன் துளசி செடியை முளைக்க வைப்பதற்காக.. பூனைகளின் அராஜகத்தால் துளசி செடி வளரவே வளராது. பூச்செடியில் உள்ள பூவைப் பறித்து பூஜைக்குப் போடுவதற்குக்கூட மனம் ஒவ்வாது, காரணம் அந்த செடியின் கீழ் ஒரே பூனை மலமாக இருக்கும். ஒரு முறை, என் மகனைத் திட்டினேன், உன் பூனைகளால் தான், அம்மாவிற்கு பூஜைக்குக் கூட பூக்கள் கிடப்பதில்லை என்று. !

மறுநாள் குழந்தை, பூனை மலங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். என்ன கொடுமை.!! நான் மலம் அல்லினாலும் அல்லுவேனேயேயொழிய அவைகளை விரட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தான்.

இதுவாவது பரவாயில்லை, ஒரு நாள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, மழையில் நனைத்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பூனைக் குட்டியை, கால்வாயில் இறங்கித் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். கால்வாயில் இறங்கியது எப்படித் தெரியுமென்றால், அவனின் வெள்ளைச் சட்டையெல்லாம் அழுக்கு.

பூனை தொப்பையாக நனைந்து, வெடவெட என நடுங்கிக்கொண்டிருந்தது. பள்ளிச் சீருடையைக்கூட கலற்றாமல், அந்தப் பூனைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். பால் கலக்குங்க, பாவம் பூனை என, எனக்கு வேறு ஆடர் கொடுத்துக்கொண்டிருந்தான். எங்கேயோ கிடந்த ஒரு காகிதப் பெட்டியைக் கொண்டு வந்து அதை அதனுள் வைத்து இங்கேயும் அங்கேயும் தூக்கிக்கொண்டு, அவனின் அக்காவிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, பள்ளி வீட்டுப்பாடங்களைக் கூட செய்யாமல், பூனைகளிலேயே கவனத்தைச் செலுத்தி பொழுதை ஓட்டினான்.

கணவர் அவனைத் தொடர்ந்து மிரட்டி எச்சரித்து, படிப்பில் கவனம் வைக்கச்சொல்லி,  கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பூனை பாசத்தை விலக்கினார்.

இப்படியாக பூனைக்கதைகள்...

மேலும் அந்தப் பழைய வீட்டில் கொசு தொல்லை அதிகம். அங்கே வசிப்பவர்கள் அதிக அளவில் டிங்கி காய்ச்சலுக்கு பலியாவார்கள். இதற்குக்காரணம், முறையான கால்வாய் துப்புறவுப் பணி  நடைபெறாததுவே. வீட்டின் பின்புறமிருக்கும் கால்வாயில் கழிவுகளின் அடைப்பு அடிக்கடி நிகழும். நான் வசித்த வீட்டின் எதிர் வீட்டில் மலாய்க்காரப்பெண்மணி ஒருவர் வீட்டிலேயே அதிக அளவில் சமைத்து கம்பனி கம்பனியாக கேட்டரிங் சப்ளை செய்து வியாபாரம் செய்கிறாள். அவள் சுத்தம் செய்கிற மீன்,கோழி, இறைச்சி, இரால், நண்டு போன்றவற்றின் கழிவுகள் அனைத்தும் அந்த கால்வாயிலேயே தேங்கி இரவுவேளைகளில் துர்நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். கடுமையான மழைவந்தால் ஒரிரு நாட்கள் விடுதலை கிடைக்கலாம், இல்லையேல் மூக்கைத்துளைக்கும் நாற்றத்திலேயே நாள்பொழுதுகள் நகரவேண்டியிருக்கும். இரவில் வெளியே ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு நாற்றம். எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டுதான் என் வீட்டையும் அவள் வீட்டையும் கடப்பார்கள்.

மக்கள் குடியிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற வியாபாரங்களுக்குத்  தடைவிதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  அதுவும் பானை பானையாக சமையல் செய்து கேட்டரிங் வியாபாரம் செய்வது கூடவே கூடாது. பிடித்தால் அபராதத்தொகை செலுத்துவதோடல்லாமல் வியாபாரத்திற்குப் பயன்படுத்துகிற பொருட்களையும் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

இருப்பினும் அப்பெண்மணியை மட்டும் யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு மூலக்காரணம் அவளின் கணவன் ஒரு போலிஸ் அதிகாரி என்பது கூடுதல் தகுதி அங்கே.  மேலும் அவர்கள் மலாய்க்காரர்கள். நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் வசிக்கின்ற தமிழர்கள் சிலர் ஒற்றுமையாக செயல் பட்டு புகார் கொடுத்தால், புகாரைத்தூக்கிக்கொண்டு, இன்னார் இன்னார்தான் இப்படிப்புகார் கொடுத்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே ஒருமுறை அப்படித்தான் நடந்தது. புகார் கொடுத்த அந்த தமிழ் குடும்பத்தை அப்படியே புறக்கணித்தார்கள் அங்குள்ள மலாய்க்காரகள். அவர்களின் புறக்கணிப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாதுதான் இருப்பினும், ஊருடன் கூடிவாழ் என்பது நமது தாரகமந்திரமாச்சே. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்தான் நமது முதல் சொந்தங்கள். பகைத்துக்கொள்ள முடியுமா?  இதற்கு பயந்துகொண்டே, புகார் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பொறுத்துக்கொண்டோம் நாற்றத்தை.

நாம் ஒரு நாய் வளர்த்தால் போதும் உடனே முனிசிபலுக்கு புகார் போகும்.. நாயைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

அந்த இடத்தில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், எங்களின் வீட்டு வரிசையின் பின்புற இறுதியில்தான் பொதுத்தொலைபேசிக் கூடாரம் உள்ளது. அதன் அருகிலேயே பஸ் நிறுத்தும் இடம் வேறு அமைந்துவிட்டதால், காலை மாலை இரவு என எந்த நேரமாக இருந்தாலும் ஆட்களில் நடமாட்டத்திற்கு குறைவே இருக்காது.

வேலை முடிந்து வந்து இரவாகும் நான் சமைத்து முடிக்க. இப்படித்தான் ஒருநாள் இரவுவேளையில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பெண் அலறும் குரல் கேட்டது,  ‘அக்கா கதவைத்திறங்கக்கா...! ஒருவன் என்னைத்தொடர்கிறான்..’ என்று என் பின் வாசல் அருகில் நின்றுக்கொண்டு மன்றாடினாள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யார், எவர் என்று தெரியாத பட்சத்தில் எப்படி வீட்டைத்திறந்து உதவுகிறேன் என்கிற பெயரில் அடைக்கலம் கொடுப்பது? காலம் வேறு கெட்டுக்கிடக்கிறது. நான் திருதிருவென முழித்து யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.. துரத்திவந்த அந்தத் திருட்டு ராஸ்கல், அவளை நெருங்கி, அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் கதற கதற பிடுங்கிச்சென்றான். என் கண் முன்னேயே நடந்தது அச்சம்பவம்.
கத்துகிறாள் கதறுகிறாள், காப்பாற்றுங்கள் திருடன் திருடன் என்று.. எந்த மலாய்க்காரர்களும் தமது கதவுகளைத் திறக்கவேயில்லை. சாட்சியாக நின்ற நானும் வாய்பேசா மௌனியாக உரைந்து போனேன்.

அவ்வீட்டின் சமையல் அறை பின் பக்கம் உள்ள ஒரு தாழ்வாரத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும். வீட்டோடு ஒட்டியிருந்தாலும் சமையல் அறை தனியாகவே இருந்தது. நான் கேட்டுக்கொண்டதின் பேரில் அதுமாதிரி கட்ட உத்தரவு போட்டார் கணவர். அங்கே பாதி சுவர், பாதி ஃகிரில் போடப்பட்டிருக்கும். பின் பக்கமாக போவோர் வருவோரெல்லாம் என் சமையல் மணத்தை நுகரலாம் அதோடு நான் சமைப்பதையும்   நன்றாகப்பார்க்கலாம். அவ்வேளையில் சிலரை அடிக்கடி சந்திப்பதால், சந்திக்கின்றபோதெல்லாம் ஒரு `ஹை’ சொல்லுவார்கள்.

பொதுவாக அதிகாலையில் எழுத்தவுடன் நேராக அடுப்பங்கரைக்குச் செல்வது என வழக்கம். அப்படிச்செல்லும் போதெல்லாம், யாராவது நடமாடுக்கிறார்களா என்று பார்ப்பது வழக்கமான ஒன்று. ஒரு நாள் அந்த அதிகாலைவேளையில்  இருட்டில் ஒரு பெண் மறைவாக நின்றுகொண்டு, என் வீட்டையே கண்காணித்துக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும்.!?  மனதிற்குள் கேட்டுக்கொண்டே, நானும் குனிந்து அவளை உற்று நோக்கினேன். அவள் வைத்தக்கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ``யாருங்க?’’ அவள் பதிலே பேசவில்லை. மீண்டும் குரல் கொடுத்தேன். அவள் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரத்தமே உரைந்து விடுவதைபோன்றதொரு பயம் கவ்வியது எனக்குள். கதவை விரைவாக மூடிவிட்டு உள்ளே ஓடினேன். வேலை முடிந்து வீடு திரும்பியதும், பக்கத்து வீட்டு மலாய் பெண் மூலமாகத்தெரிந்தது அவள் ஒரு போதைப் பித்தர், இரவில் பசங்களோடு தெருத்தெருவாக சுற்றுபவள் என்று.

அக்கம் பக்கத்தில் வீடுடைத்து உள்ளே நுழைந்து திருடுகிற திருட்டுச் சம்பவங்கள் வேறு சதா காதில் விழுந்தவண்ணமாகவே இருக்கும். நான் வசித்த வீட்டின் நேர் எதிர் வீட்டில், மகளை பள்ளி பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்புவதற்குள், உள்ளே நுழைந்து பணப்பை, கடிகாரம், கைப்பேசி என எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஊறுகாய் வியாபாரி, கார்பெட் வியாபாரி, தர்மம் கேட்பவர்கள், சிப்ஸ் பொறிகடலை வியாபாரிகள், ஜாதகம் ஜோசியம் பார்ப்பவர்கள் என சர்வசதா காலமும் யாராவது வீட்டின் வாசலில் கதவைத்தட்டி நின்ற வண்ணமாகவே இருப்பார்கள். பகல் வேளைகளில் நிம்மதியாக தலை சாய்க்கமுடியாது. (இப்போது தங்கியிருக்கும் வசிப்பிடத்தில் இந்தத் தொல்லைகளெல்லாம் இல்லை - நுழைவாசலில் இருக்கும் காவலாளிகள் யாரையும் எவரையும் லேசில் உள்ளே விட மாட்டார்கள், நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட, நிஜமாலுமே விருந்தாளிகள்தானா.!? என்பதனை அவர்களின் பின்னாலேயே வீடுவரை வந்து உறுதிபடுத்திக்கொள்வார்கள். )

அங்கே நடந்த இன்னோரு பயங்கரம், ஒரு நாள், நான் குளித்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரமாதலால், முன் கதவை தாழிடாமல் குளித்துக்கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை, ஆனால் யாரோ உள்ளே நுழைந்து விட்டதை என்னால் உணரமுடிந்தது. பிள்ளைகள் தான் வந்திருப்பார்கள் என நினைத்து, நானும் ஜாலியாகக் குளித்து விட்டு வெளியே (மாராப்புடன்) வந்தேன். ஒரு மலாய்க்காரன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து, வணக்கம் ஆச்சி என்றான்.  என் கை கால்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத்துவங்கி விட்டன. பட்டென்று மகளின் அறையில் புகுந்துகொண்டு, அவளின் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் மகனும் வந்துவிட்டான்.மகனின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, எங்கள் வீட்டில் உனக்கு என்ன வேலை.? என்று பதற்றத்துடன் கேட்டேன். தமது வீங்கிய கால்களைக் காட்டி, நான் தர்மம் வாங்கத்தான் வந்தேன் வேறு எந்த கெட்ட நோக்கமும் எனக்கில்லை அக்கா, என்னைத்திட்டாதே, என்றான். கையில் உள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்புவதைப்போல் அனுப்பிய பின் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தோம்.

அதுதான் முதல் முதலில் போலிஸுக்குப் அழைப்பு விடுத்த முதல் அனுபவம். போலிஸ்காரர்கள் கேட்டார்கள், `அவர் என்ன சட்டை போட்டிருக்கார்? என்ன கலர் ஆடை? முழு பேண்ட்’டா அரைக்கால் பேண்ட்’டா? அவன் உயரம் என்ன? அவன் கருப்பா சிகப்பா? எப்படி வந்தான்? நீ ஏன் கதவைப் பூட்டவில்லை? மோட்டார் ஓட்டி வந்தானா? இதற்கு முன் நீ அவனைப் பார்த்தாயா? அவன் எங்குள்ளவன்? புத்திசுவாதினமா? இப்போ அவன் எங்கே? இனிமேல் ஜாக்ரதையாக இரு...’ என்றார்கள். அவன் மலாய்க்காரர் என்றதுதான் போதும், நன்றாகத்திட்டினார்கள் என்னை. எப்படி நீ அப்படிச் சொல்லலாம்? இந்தோனிசியராகக் கூட இருக்கலாம்.! பங்களாதேசியாகக் கூட இருக்கலாம்.! ஏன் தமிழராகக்கூட இருக்கலாம்...! தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து இனத்தை அடையாளப்படுத்தாதே.. என்று கொஞ்சம் கடுமையாகவே எச்சரித்தார்கள். ஏன் தான் அழைப்புவிடுத்தோமே என்றிருந்தது.
ஒரு நாள் கடுமையான மழை, என் வீட்டு வாசலில் ஒருவன் விடிய விடிய உட்கார்ந்திருந்தான். மழைக்கு ஒதுங்க வந்திருப்பான் போலிருக்கிறது. உள்ளிருந்து நானும் என் கணவரும், ஜன்னல் வழியே அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருந்தோம். தாழ்வாரத்தின் கீழ், கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். காத்திருந்து காதிருந்து நாங்களும் உறங்கச்சென்று விட்டோம். காலையில் வீட்டு வாசலில், தீப்பெட்டி, சிகரெட் என சிதறிக்கிடந்தது.

இப்படியே ஒரு வழியாக விடுதலை கிடைத்தது அந்த இடத்திலிருந்து, புது வீடு வாங்கியப்பிறகு இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினேன். விடுதலை அவ்வளவு ஆறுதலாக இருந்தது...!!!

தற்போது தங்கியிருக்கின்ற வசிப்பிடத்தில் எந்தத் தொல்லையும் கிடையாது. காரில் ஸ்ட்டிக்கர் இருந்தால் தான் உள்ளே நுழைய  முடியும். வியாபாரிகள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. பால்காரர், பூக்காரர், ரொட்டிபாய் ஆகியோரைத்தான் பார்க்கலாம்.

அழகிய நந்தவனம் இந்த இடம். சுற்றிலும் அரசாங்க போலிஸ் அதிகாரிகள் காவல் காக்கும் அழகிய அடர்ந்த காடு. காட்டிற்குப் பாதுகாப்பு கொடுப்பதால், போலிஸ்காரர்கள் வட்டமிட்ட வண்ணமாகவே இருப்பார்கள். பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள், வக்கில், டாக்டர், தொழிலதிபர்கள்,அரசியவாதிகள், ஆன்மிகவாதிகள், தீயான மடம் என பெரிய பெரிய ஆட்கள் குடியிருக்கும் ஒர் குடியிருப்பு இது. தூய்மையாக அழகா இருக்கும்.

அண்மையில் கூட, சிலாங்கூர் மாநில சுல்தான் வருகை புரிந்திருந்தார்.  கோத்தோங் ரோயோங் முறைப்படி அவ்விடத்தை துப்புறவு செய்தார்கள். காட்டிற்குச் செல்ல எங்களின் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும், அவர் காட்டிற்கு வருகை புரிந்திருந்தார். அந்த காட்டின் உள்ளே, ஒரு பல்கலைக்கழக  (யூ.பி.எம்) ஆய்வுக்கூடமென்று மிக கம்பீரமாக இருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால், ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியும் உள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற, ஒன்று கூடல் நிகழ்வின் போது, பாதுகாவலாளிகளின் உதவியோடு நாங்களும் அங்கு சென்று வந்தோம்.

இன்று காலையில்,  எனது அந்தப் பழைய வீட்டை வாங்கிய மலாய் தோழி, என்னைத் தொலைப்பேசியில் அழைத்திருந்தாள். இன்னமும் அந்த வீட்டின் முகவரிக்குச் செல்லும் எங்களின் சில கடிதங்களை அவள் பத்திரமாக எடுத்து வைத்து, எங்களிடம் ஒப்படைப்பாள். மாதம் ஒரு முறை சென்று அவைகளை எடுத்துவருவேன். போன மாதம் செல்லவில்லை, அதனால் அதிகமான கடிதங்கள் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்தால். அப்படியே இந்தக் கேள்வியையும் கேட்டாள்.

``புது வீடு எப்படி இருக்கிறது, என்ன சொல்கிறது?’’

``என்ன இருந்தாலும், அந்த பழைய வீடு மாதிரி வராது, அங்குதான் அதிக மகிழ்ச்சி, எல்லா வசதிகளும் உண்டு.. ஏன் தான் விற்றோம், என்று கவலையாக உள்ளது.’’ என்றேன்.

நாங்கள் அதிர்ஷ்டசாலி என்று சொல்லி பெருமிதம் கொண்டாள்....