திங்கள், ஏப்ரல் 30, 2012

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஷா ஆலம் விஜயாவுடன் ஒர் நேர்காணல் –

கேள்வி: வாசகர்களால் அடிக்கடி காயப்படுகிறீர்களே, எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?
 எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார், எழுதுவதற்கு ஏழ்மை நிலையும் கோபமும் அவசியம் வேண்டுமென்று. நாமெல்லம் ஏழைகளே அல்ல, மூன்றுவேளை மூக்கப்பிடிக்க சாப்பிட்டு விட்டு, குளுகுளு அறையிலேயே பெரும்பாலும் வாழ்கிறோம். ஆகவே பண்பட்ட எழுத்து வருவதற்கு வாய்ப்பில்லைதான் ஆனால் கோபம்? அது எல்லோருக்கும் வரும். அதுவும் எழுத்தாளர்களின் நியாயமான கோபம் எழுத்து வடிவம் பெறுகிறபோது, அது அற்புதமான இலக்கியமாகிறது. இது பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் தெரிந்து விடுவதால் சில வாசகர்கள் வாசக நிலையிலேயே தேங்கிவிடாமல், அவர்களை அடுத்தக்கட்ட நிலைக்குக் கொண்டு செல்லத் தூண்டுவதே இந்த சர்ச்சை சமாச்சாரங்கள்.  மேலும், சிலரைத்தான் இதுபோன்ற சர்ச்சைகளில் மாட்டிவிடுவார்கள், எல்லோரையும் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று, அதாவது.. காயமே இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்பவன், எதுவுமே செய்யாதவன் என்று அர்த்தம். புண்பட்டவன் பண்படுகிறான். மிதிக்கப்பட்டவன் குடமாகிறான், குத்தப்பட்டவன் சிலையாகிறான், அடிக்கப்பட்டவன் தங்க ஆபரணமாகிறான். ஆக, காயமெல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை. வாசிப்பில் ஒரு படி மேலே வளர அது உரமிட்டிருக்கு. பேட்டி எடுக்க, என்னை நீஙகள் தேர்ந்தெடுக்க இவையும் காரணம்தானே.! பெரிய விஷயமில்லையா இது.! கொஞ்சம் வலி இருக்கும், இரண்டு மூன்று நாள்கள் கழித்து அற்புதமான விவாதக் கட்டுரை தயாராகும். அவ்வளவே.

கேள்வி : வாசகர் தளத்தில் ஏற்படும் சர்ச்சைகளால் எழுதுகோல் சோர்ந்துபோன நிகழ்வுகள் உண்டா?
இல்லைஎழுதுகோலின் இதயத்துடிப்பு அதிகரித்து, அது இன்னும் அதிவேகமாகக் கிறுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளை காகிதத்தை கருப்பு எழுத்துகளால்.!

கேள்வி : வாசகர்களின் தாக்குதல்களுக்கு இரையாகும்போது, அதை எவ்வாறு மத்திப்பீடு செய்கிறார் உங்களின் கணவர்?
அவரின் வாசிப்பு எல்லாம் அரசியல் சம்பந்தபட்டது. இங்கே நாம் உளறிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒரு பொருட்டாக அவர் வாசிக்கமாட்டார். ஆரம்பத்தில் அவரும் எழுத்துலகில் இருந்ததால், இவையெல்லாம் ஒரு விஷயமாகக் கருதி மூக்கை நுழைக்கமாட்டார். (அப்பாடா தப்பித்தேன்)

கேள்வி : வலைப்பூ, முகநூல் மற்றும் இணையங்களில் மிகுதியாக முகங்காட்டுவதால், வாசிப்பின் பரப்பளவு சுறுங்கிவிட்டதாக உரைக்கப்படுகிறதே, இதை மீட்டெடுக்க முடியுமா?
முகநூல் உலகிற்கு அறிமுகமாகி ஏறக்குறைய ஏழு வருடங்கள் தான் ஆகின்றன.! இதற்கு முன் நாம் புத்தகமும் கையுமாக இருந்தோமா என்ன? எனக்கென்னவோ, தமிழ் நாட்டுத் தொடர்களின் ஆதிக்கம் நம் தொலைக்காட்சியை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் நாம் நமது வாசிப்புப் பழக்கத்திற்கு முழுக்கு போட்டுவிட்டோமென்று தாரளமாகச் சொல்வேன்.  புத்தக வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்கள் இன்னமும் தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எந்த இணையச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரையில், முகநூல் சகவாசமே என்னை அதிகமாக வாசிக்கத்தூண்டியது என்பேன். வலைப்பூவில் கால் பதிக்கவும் இந்த மூகநூல் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளதை இங்கே நான் கண்டிப்பாக சொல்லியாகவேண்டும் .
சமூக வலைத்தளங்களில், முகநூல் மிகப்பிரபலம், அதில் தம்மை இணைத்துக்கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு குறுகிய காலகட்டத்திலேயே உலகம் முழுக்க தமது அசுர ஆதிக்கத்தைச் செலுத்திய ஒர் தொடர்புச்சாதனம் இந்த முகநூல்.. இதில் நண்பர்களின் வெட்டி அரட்டைகள் வீன் வம்புப்பேச்சுகள் ஒரு புறமிருந்தாலும், கற்பதற்கு அரிய விஷயங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. என் விஷயத்தில், எல்லோரும் நுழைகின்றார்களே என்று சும்மானாலும் நுழைந்து பார்த்தேன், அதன் பிறகுதான் தமிழ் நாட்டின் அற்புதமான இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அற்புதமான வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த அறிமுகம் இலக்கிய உலகின் மேல் மரியாதை வருவதற்குக் காரணமாக அமைந்தது. கவிதைகளை அதிகமாக வாசிக்கக் கற்றுகொண்டேன். (கவிதைகள் எழுதுவது ஒரு புறமிருக்க, அவைகளை வாசித்து உள்வாங்கி மறைந்து கிடக்கின்ற கருபொருளைப் புரிந்துகொள்வது,  விடுகதைகளுக்கு விடை தேடுவதைப்போல் சுவாரஸ்யமான ஒன்று.) கவிதை மொழி, கவிதை உணர்வு, கவிதைக்கரு என மேலும் உள்வாங்கப் பழகிக்கொண்டேன். சமூதாயத்தில் எழுத்தாளார்களின் பங்கு பற்றிய தெளிவு வந்தது, இலக்கு நோக்கி எழுதப்படுவதுதான் இலக்கியம் என்கிற புரிந்துணர்வு புத்தியில் புகுத்தப்பட்டது. பட்டைதீட்டிய மறுவாழ்வு கிடைக்கப்பெற்றதுபோன்ற தெளிவு எட்டிப்பார்த்தது . அவற்றை நமது படைப்பு இலக்கியத்தில் எப்படிப்புகுத்துவதென்பது யோசிக்கப்பட்டது.. அதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் முத்திரை பதிப்பதென்பது அவ்வளவு எளிதல்லவே.! காலம் வரட்டும். பார்ப்போம்.

கேள்வி : புனைவிலக்கியம், பத்தி, கவிதை, இவற்றில் தீவிர கவனம் செலுத்துவது எதில்?
தீவிர கவனம் செலுத்துவதால் இலக்கியம் வந்துவிடாது. அது ஒரு நிகழ்வு, காதல் போல்.! ஓஷோ சொல்கிறார், ‘மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது நேர்மையுடன்.’  82வயது மூதாட்டியின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது பாணியிலேயே எழுதப்பட்டுதமிழ் நாட்டில் சிறந்த இலக்கியமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதாக, அண்மையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.  மனதில் உதிப்பதை நமது பாணியில் இஷ்டம் போல் கிறுக்கி வைக்கவேண்டியதுதான். கட்டுரையாக வந்தால், அது கட்டுரை.! கதைபோல் வந்தால், அது கதை.! கவிதைபோல் இருந்தால், கவிதை. எல்லாமே இலக்கியம்தான். சிலது நம்மை என்னவோ செய்த இலக்கியம். சிலது நம்மை ஒன்றுமே செய்யாத இலக்கியம். அவ்வளவுதான்.! எனக்கு எல்லாமும் வரும் இலக்கண எழுத்துப் பிழைகளோடு. அவைகளை பொறுமையாகத் திருத்தி வெளியிட்டு, தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இவ்வேளையில் எனது மனப்பூர்வ நன்றி.

கேள்வி : உங்கள் எழுத்துக்களை ஆவணப்படுத்தியுள்ளீர்களா?
ஒரே ஒரு சிறுகதை, எண்பதுகளில், ஒரு வருட தைபூச வெளியீடாக வந்திருந்தது. அந்தச் சிறுகதையின் பெயர் பூஜைக்கு வந்த மலர்’. என் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பும். நம் நாட்டின் பிரபல எழுத்தாளர் கா.இளமணியின் அறிமுக முன்னுரையால் அன்று எழுத்துலகில் கால் பதிக்க நினைத்த முற்றிலும் புதிய வாசகர்களை உற்சாகமூட்டும் வகையில் மலர்ந்து பலரைச் சென்றடைந்தது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லைதான். பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது அனைத்து எழுத்துப்படிவங்களையும் வெட்டிச் சேகரித்து வைத்துள்ளேன். இப்போது அவைகளைக் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கின்றேன். உலகமுழுக்கப் போகின்றன. எனது வலைப்பூவை அதிகமாக வாசிப்பவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். (யூ.எஸ்). தமிழ் நாட்டு இணைய இதழிலும் எனது கவிதைகள் கட்டுரைகள் அவ்வப்போது இடம்பெற்று உட்சாகமூட்டிய வண்ணமாகத்தான் இருக்கின்றன.

கேள்வி : வெற்றிகரமாக பெண் இலக்கியவாதிகள் தங்களின் ஆய்வுக்களத்தை நகர்த்தியிருக்கின்றார்களே!
ஆமாம், கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்

கேள்வி: ஆண் இலக்கியவாதிகளுக்கு நிகராக பெண் இலக்கியவாதிகளும் இப்பரப்பில் உழுது வந்திருப்பதானது தித்திப்பான விஷயம் தானே!!
இன்னும் சரியாக வெளியே வரவில்லை என்றுதான் சொல்வேன். பொதுவாழ்க்கை கொடுக்கின்ற காயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது பெண்கள் இன்னமும்  இந்திய சமூகக் கலாச்சாரப் பின்னணியில் பிண்ணிப் பிணைந்திருப்பதால்ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனையிலே முடக்கப்பட்டு விடுகின்றனர். பெண்கள் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து, படப்பிலக்கியத்தில் வலம்வர ஆரம்பித்தால்ஆண்களையே மிஞ்சி விடுவார்கள் என்று நம்பலாம். பெண்கள் சிறந்த படைப்பாளிகள். சமூதாய அவலங்களை அழுத்தமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெண்களிடம் உண்டு. தேவதாசி பரம்பரைக்கு மீண்டும் உயிரூட்ட நினைத்த ஒரு பிராமணரின் முகத்திரையைக் கிழித்தவர் முத்துலட்சுமி என்கிற பெண் தான். பாரதியார் சொல்லியிருப்பார், பெரியார் சொல்லியிருப்பார், மகாத்மா காந்தி சொல்லியிருப்பார் பெண்ணுரிமையைப் பற்றி ஆனால் தனிப்பட்ட பெண் ஒருவளுக்கு அவளின் உரிமை பற்றியும் சுத்தந்திரம் பற்றியும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். திட்டுகிற கணவனை உடனே விவாகரத்து செய்வது தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்ற ஊனத்தனமான சிந்தனை எங்கிருந்து வந்ததென்பதுதான் புரியவில்லை.!?

கேள்வி : இன்று புதுக்கவிதையிலும் சுரத்து குறைந்து இருப்பதாக குற்றச்சாட்டு பதிவாகிறதே! (உங்களையும் என்னையும்)
அப்படியில்லையே.. புதுக்கவிதைகள்தாம் அற்புதமான விவரங்களை இரண்டு மூன்று வரிகளிலேயே மிக எளிமையாக எடுத்தியம்புகின்றனவே.

உதாரணம் சில  

காவடி

மயில்கள் வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும்
முருகனுக்காக..

தேங்காய்கள்
பற்றாக்குறை
தெருவில் உடைக்க
பக்தர்கள் கோஷம்
தைபூசத்திருநாள்

எளிய வழி
இலக்கியத்தில்
எல்லாமும் உண்டு
இறைவனையே
நாடுகிறார்கள்

இவைகளின் சுரத்தில் என்ன குறை? (நான் எழுதியவை)

யாருக்கு எது பிடிக்கிறதோ அதைப் பிடித்துக்கொள்ளவேண்டியது தான். பிரம்பால் அடித்தாலும் வராத விஷயத்தில் மூக்கை நுழைக்க எனக்கு எப்போதுமே விருப்பமில்லை.

கேள்வி : வாசிக்க நேரத்தை எவ்வாறு ஒழுங்குப்படுத்துகிறீர்கள்?
தொலைக்காட்சி பக்கமே போக மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன் ஆங்கிலம் மலாய் என எதுவாக இருந்தாலும். கையடக்க இதழ்தென்றல் எப்போதும் இருக்கும் என்னோடு.

கேள்வி:  உங்களின் எழுத்துப் பணிக்கு கணவரின் பங்களிப்புப் பற்றி கூற இயலுமா?
தொல்லை கொடுக்காமல் சும்ம இருப்பதுவே.

கேள்வி : தாங்களின் அன்புக் கணவர், மழலைச் செல்வங்கள் ஆகியோருக்கு முகங்காட்டி வளர்த்தெடுத்தது செம்மொழி தமிழா?
ஆம்

கேள்வி : வாசகர் தளத்தில் முன் மொழிய ஏதேனும் விருப்பம் உண்டா?
நீ கற்பதை நிறுத்தினாலும், வாழ்க்கை உனக்குப் போதிப்பதை நிறுத்தாது. தெரியாத்தை தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருங்கள். கற்றவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கற்றுக்கொடுக்க.!

தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்.

கேள்விகள் அனைத்தும் அற்புதம் ஐயா. உள்ளபடியே யோசிக்க வைத்தன. நன்றி.

(இன்று, தென்றல் வார இதழில் வந்த எனது நேர்காணல்)

வியாழன், ஏப்ரல் 26, 2012

இயந்திர வாழ்வின் ஆரம்பம்

இப்போதெல்லாம் நான் தினமும் காலையிலே, எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் மகளை ஏற்றிக்கொண்டுதான் வேலைக்கு வந்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக.! அவள் பள்ளி விடுமுறையில் பக்கத்துக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். பதினேழு வயது பெண் தான். பள்ளி மாணவிபோல், அமைதியாகவே இருப்பாள். சிரிப்பதுகூட தவணை முறையில்தான். யோசித்து சிரிப்பாள். அவளை அழைத்துக்கொண்டு வருவதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பினும், அவர்களுக்கு வேறு வழியில்லை. நானும் உதவுகிறேன்.

உங்கள் ஏரியா உள்ளே நுழைய முடியவில்லை, வாகன நெரிசல், வெளியே எப்படியாவது வந்துவிடு, என்றேன். அவளும் இப்போது வெளியே ரோட்டோரமாகத்தான் நிற்கிறாள். மேட்டில் ரோடு என்றால், கீழே சாலையோறமாக அவளின் அம்மாவும், நான் வரும் வரை அங்கேயே காத்திருப்பார். இதுவரையில் அவள் தாமதமா வந்ததேயில்லை. நான் எவ்வளவு விரைவாகச் சென்றாலும், அவள் அங்கே அந்த பேருந்து நிலையத்தில் காத்திருப்பாள். 

வெளியே நிற்கச்சொல்லியும், அவளுக்கு நான் கொடுக்கும் கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. உதவுதல் என்றால் சும்மாவா! என் வசதிக்கேற்ப, இங்கே நிற்கவேண்டாம், காரை இந்த இடத்தில் நிறுத்த முடியாது, அதனால் அங்கே நில், என்றேன். அவளும் மறு நாள் அதே போல். அங்கே நின்றாள். அங்கே நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் பொறுமையை இழந்து ஹாரன் செய்யும் போது, எனக்கு தர்மசங்கடமாக இருந்ததால், இங்கே வேண்டாம், கொஞ்சம் தள்ளி அந்தப்பக்கம் நில் என்றேன், அவளும் அதுபோலவே.. இருப்பினும் என்க்கு அங்கு நிறுத்தி அவளை ஏற்றுவதும் கடினமாகவே இருந்தது. காரணம் அந்த சாலை ஒரு ஹைவே. கார்களின் வேகம் பற்றிச்  சொல்லவே வேண்டாம்.! அங்கும் நினைத்த நேரத்தில் இஷ்டம்போல் கார்களை நிறுத்தவே முடியாது . பின்னாலிலிருந்து அடித்துப்போட்டு விட்டுச்செல்லுகிற வாய்ப்பு உண்டு. அது ஆபத்து.

ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கும், அதற்கு முன்னால் ஒரு நீளமான மேம்பாலம் இருக்கும், அங்கே நிறுத்தலாம் ஏற்றலாம். காரணம் அந்தப்பக்கம் ஒரு பள்ளி இருப்பதால், வரும் கார்களின் வாகனம் கொஞ்சம் மெதுவாகவே இருக்கும், அதனால் அங்கு பயமில்லை. அங்கே நிற்கமுடியுமா? என்றேன். அமைதியானாள், காரணம் அவர்களின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் வரவேண்டும். நடந்து வரவேண்டுமென்றால் நேரமெடுக்கும், கண்டிப்பாக காரிலோ மோட்டாரிலோ தான் கொண்டுவந்து விடவேண்டும். பெற்றவர்கள் தான் செய்யவேண்டும். கடமையல்லவா! என்ன செய்வது, எல்லோருக்கும் தான் பிரச்சனை. ஒன்றும் பேசவில்லை அவரின் அம்மா, சரி செய்கிறேன் என்றார்.

மழையோ வெய்யிலோ.. அவர்கள் அங்கே இருப்பார்கள் இல்லையேல் நான் கிளம்பி விடுவேன். இப்படியே போராடி போராடி ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது.

இந்த ஒரு மாத காலத்தில், அவள் பண்ணிய ஒரே ஒரு கூத்து என்னெவென்றால்.. !! அன்று ஒரு நாள், வேலை முடிந்து, நான் வெளியே காத்திருந்தேன். முன்பெல்லாம் வேலை முடிந்தவுடன்,  தோழியைப் பார்க்கச்செல்வேன், மார்க்கெட் செல்வேன், நானும் தோழியும், அன்னா கடை ரொட்டி சானாய்’யும் ப்ரூ காப்பியும் குடிக்கச்செல்வோம், அந்த ஏரியா பக்கம், வியாழன் அன்று போடப்படும் இரவு சந்தைக்கு, இங்கே வேலை செய்யும்  தோழிகளோடு உலா செல்வேன். அங்கே விற்கப்படும் அப்பம்பாலிக் ரொம்ப ஸ்பெஷல். எங்குமே அந்த சுவை  கிடைக்காது. மேலும் அங்கே செய்கிற அப்பம்பாலிக் வெறும் கச்சான் மட்டும் போடப்பட்டு செய்யப்படுகிற அப்பம்பாலிக்காக  இருக்காது, அவை பலவித சுவைகளில் கிடைக்கும். வேறு எங்குமே அம்மாதிரியான அப்பம் பாலிக் நான் பார்த்ததில்லை. வாழப்பழ அப்பம்பாலிக், டுரியான் அப்பம்பாலிக், பலா அப்பம்பாலிக், சோள அப்பம்பாலிக், சாக்லெட் அப்பம் பலிக், ரொட்டிதூள் அப்பம்பாலிக் ச்சீஸ் அப்பம்பாலிக் என வித விதமாகக் கிடைக்கும். அதை வாங்குவதற்கென்றே செல்வோம்.

இந்த பெண்னை, நான் ஏற்றிச்செல்கிற கடமை வந்ததிலிருந்து, இந்த வேலையெல்லாம் இல்லாமல், வேலை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பி விடுவேன்.  (சோகமாக). அவளையும் அழைத்துக்கொண்டு சுற்றச்  செல்லலாம் தான், பாவம் அவளின் அம்மா, ரோட்டோறமாக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்.!? இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும் என, எனது சுற்றும் வேலைகளையெல்லாம் ஒத்திப்போட்டேன்.

வேலை முடிந்து விட்டது, நான் வெளியே காத்திருக்கிறேன். மணி  ஐந்தரை  ஆகி, ஆறாகிவிட்டது, போன் செய்கிறேன் வாயிஸ் மெசிஜ் போகிறது. அவங்க அம்மாவிற்கு அழைத்துச்சொன்னேன், அவரும் இதே பதில் தான், அழைப்பு போகவில்லை என. சரி கிளம்பிம்புவோம் என கிளம்பினேன் மனசு வரவில்லை. காத்திருந்தேன்.

மெதுவாக வந்தாள், எனக்கோ.. பயங்கர கோபம். ``ஏன் இவ்வளவு நேரம், எனக்கு என்ன, வேறு வேலை வெட்டி இல்லியா!? போன் அடிச்சாலும் கிடக்கல, என்ன விவரம்னு சொல்லிட்டா நானும் கொஞ்ச நேரம் ஆபிஸிலே உட்கார்ந்திருப்பேன்ல.. கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல், நான் என்ன நீங்க வைச்ச டிரைவரா, இஷ்டத்திற்கு ஆட்டிக்கிட்டு வறீங்க ஆ!?’’  கொஞ்சம் கடுமையாகவே திட்டி விட்டேன்.

மிகுந்த களைப்புடன்  சோர்வாக தென்பட்டாள்,  அமைதியாக பதில் வந்தது, `` சாரி அண்டி, திடீரென்று ஒரு வேலை, ஜாப் ஷிட் தயார் செய்யச் சொல்லி கடைசி நேரத்தில் பாஸ் கொண்டுவந்து கொடுத்தார். அவ்வேலையில் எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் சீனியர் வீட்டிற்குக் கிளம்பிட்டாங்க, அதனால நான் ஒண்டியா அந்த ஜாப் ஷிட் செய்யனும், முதல் முறையா தனியா அதை செய்வதால் கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது,  பிழை வேறு வந்துவிட்டது, பாஸ்  பக்கத்திலே இருந்தார், திட்டினார், ஒரு மாதமா செய்யற, இன்னும் நீ பிழை செய்வாயா’ன்னு. பதற்றத்தில் லேட் ஆயிடுச்சு. ஹேன்போன் பேட்டரி வீக், பாஸ் வேறு கோபமா இருந்ததால, ஆபிஸ் போன் பயன் படுத்த பயமா இருந்தது.. அதான்..”  என்றாள் தாழ்ந்த குரலில்.

யாரோ என் கன்னத்தில் பளாரென்று அரைந்தாட்போல இருந்தது. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. ச்ச்சே பாவம்...,  புதிதாக வேலைக்குச் சேர்ந்துக் கொள்பவர்கள்,  இது போன்ற சங்கடமெல்லாம் சந்தித்துத்தானே ஆகனும். அதுவும் இவள் வேலை அனுபவமே இல்லாத பள்ளி மாணவி, வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. இவளின் தாயும் ஒரு கிணற்றுத்தவளை, தந்தையும் படிப்பறிவு இல்லாதவர். நிலைமை புரியாமல் நான் தான் கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டேனோ!?  மனசு கிடந்து அடித்துக் கொண்டது. இருப்பினும் ஈகோவை விட்டுக்கொடுக்காமல்.. ``ம்ம்,சரி சரி பரவாயில்லை, இனி எதாவதென்றால் சொல்லிவிடு, நான் என் ஆபிஸிலே, கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேனே.. இப்படி சும்மா காரில் உட்கார்ந்திருப்பதை விட..’’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, மன்னிப்பு கூட கேட்காமல், காரை செலுத்தினேன். ஆனாலும் மனதிற்குள் லேசான வலி.

இருவரும் அமைதியாக சென்றோம். கொஞ்சம் தாமதமாகச் சென்றால் சாலை நெரிசலில் மாட்டிக்கொள்வது என்பது இங்கே வழக்கமானதுதான். அன்றும் சாலை நெரிசல்.  மழைவேறு, எப்படி இவளை மழையில் ரோட்டோறம் இறக்கிவிடுவது!? திட்டிவிட்டதால் குற்றவுணர்வில் வேறு குறுகுறுத்துக் கொண்டிருந்தேன்.

`சரி இன்னிக்கு அண்டி, வீட்டிலே கொண்டு இறக்கிவிடுகிறேன், அம்மாவை வரவேண்டாமென்று சொல்..’’ என்றேன். பதிலே இல்லை..  ஓ, போனில் சார்ஜ் இல்லையென்றாளே, சரி என, எனது போனை எடுத்து அவள் பக்கம், அவளைப் பார்க்காமலே கொடுத்து,  ``இந்தா அம்மாவிடம் சொல்’’, என்றேன். அதை அவள் வாங்கவில்லை.. என்ன என்று பார்த்தால், அசதியில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்தாள், வெளியே மழைவேறு..!

நானே அவளின் அம்மாவிற்கு அழைத்து, நேரமாச்சு, மழை, நீங்கள் வரவேண்டாம், நானே கொண்டுவந்து வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி, அவளை வீட்டிலே கொண்டு விட்டு வந்தேன்.

அன்றிலிருந்து, தினமும் சரியான நேரத்தில் வந்துவிடுவாள். இப்போதெல்லாம் அவரின் அம்மா எனக்கும் மதிய உணவு, காலை பசியாற என தினமும் எதாவது. சில நேரம் வேண்டாம் என்றாலும் பெரும்பாலும் வாங்கிக்கொள்வேன். அறுசுவை உணவாக இருக்கும்.

இன்று காலையிலே ஒரு சம்பவம். வழக்கம்போல் அவளை ஏற்றுவதற்கு அந்த மேம்பாலத்தின் அருகே சென்றேன். நான் வருவதைக் கண்டவுடன், வேகமாக எழுந்து காருக்கருகில் வந்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில்தான் ஒரு அஃக்‌ஷிடண்ட் நடந்திருந்தது. இரண்டு மோட்டார்கள் மோதிக்கொண்டன. இருவர் சாலையில் கிடந்தனர். கார்கள் அதற்குள் அங்கே வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன. மோட்டாரில் செல்பவர்கள் கீழே இறங்கி உதவ முன்வந்துக்கொண்டிருந்தனர். ஒரு மோட்டாரில் ஒரு வயதானவர், இன்னொரு மோட்டாரில் ஒரு இளஞர் மற்றும் அவரின் மகள், பாலர் பள்ளிச் சீருடையுடன் நான்கு வயது பெண்குழந்தை. குழந்தை அழுதுக்கொண்டும். அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டும், கீழே விழுந்த மூதியவரை ஒரு கையில் பிடிக்க முயன்றுக்கொண்டும், அதற்குள் ஆட்கள் வரவே, எல்லோரும் சேர்ந்து இருவருக்கும் உதவிக்கொண்டும் ஒரே பரபரப்பாக இருந்தது அவ்விடம்.

நான் அங்கே செல்வதற்கு சில வினாடிகள் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். யாருக்கும் அடி அவ்வளவாக இல்லை. குழந்தைதான் பயத்தில் தனது அப்பாவை இறுக்கிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தது.

காருக்குள் வந்து அமர்ந்த இவளிடம், ``எப்படி நடந்தது இந்த விபத்து?’’ என்றேன். ``எங்கே..எங்கே??” என்று தேடினாள். ``அடக் கடவுளே!, தோ, நீ உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் தானே நடந்தது இச்சம்பவம்,  நீ பார்க்கவில்லையா?” என்றேன்.

`` இல்லையே,  நீங்கள் வரும் திசை நோக்கியே என் சிந்தனை..” என்றாள். தொடர்ந்து..``ஐயோ பிள்ளை ஏன் அழறது, ரொம்ப அடியா இருக்குமோ?”  என்று கேட்டுக்கொண்டே, திரும்பி அச்சம்பவத்தை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தாள்.

என்னன்னு சொல்வதுங்க..!!? மனிதன், இயந்திர வாழ்விற்குள் நுழைகின்ற ஆரம்ப காலகட்டம் எதுவென்பதை, ஆராய்ச்சி செய்யாமலேயே புரிந்து போனது எனக்கு.!!!!!
  

புதன், ஏப்ரல் 25, 2012

தலைவலி போ(பே)ய்

தலைவலி தலைவலி
தினமும் தலைவலி
தலையில் எந்த பக்கம் வலி
என்பது கூட தெரியாமல்
ஒருபக்கம் இல்லையேல்
இருபக்கமும் வலி
நடுமண்டையிலும்..வலி

எட்டு என்ன, ஒன்பது மணிநேரம்
தூங்கிப்பார்த்தேன்
தலைவலி விட்டபாடில்லை

சும்மா கணினியை விரைக்காதே
அறிவுரை வழங்கப்பட்டது
ஒரு நாள் முழுக்க
கணினியையும் தொலைக்காட்சியையும் கூட
பார்க்கவேயில்லை
தலைவலி தலைவலி

பளிச் விளக்கு வெளிச்சம் கூட
தலைவலிதான்
ஆலோசனைகள் குவிந்தன
இருட்டில் கிடந்துப்பார்த்தேன்
குறைந்தபாடில்லை

அதிக உஷ்ணமும் ஒரு காரணம்
வெயில் படாமல் உள்ளே இருந்துப்பார்த்தேன்
தலைவலி விடவில்லை

குளிரால் கூட இருக்கலாம்
ஏர்கோண்ட் பயன்பாட்டைத் தவிர்த்தேன்
தலைவலி காலையிலும் மாலையிலும்
தொடர்ந்தபடியாக

காப்பி.. டீ.. மசாலா,காரம்
தூரவிலகினேன்
அப்பவும் தலைவலிதான்

இரைச்சல் கூட தலைவலியாம்
சத்தமில்லாத இடத்திலும்
பதுங்கிப்பார்த்தேன்
ம்ஹும் விட்டபாடில்லை

இரத்த கொதிப்பின் ஆரம்பமோ!?
உடனே முழுபரிசோதனைக்கு
சென்று வந்தேன்
எல்லாமே நார்மல்தான்.
தலைவலி மட்டும் அப்நார்மலாக..

இப்போ மூக்கின் மேல் ஒரு கண்ணாடி
தூரப்பார்வைக்கும்
கிட்டப்பார்வைக்கும் ஒரே லென்ஸில்

தலைவலி போய்
புருவத்தில் வலி
இமைகள் வலி
கண்ணின் கருவிழி வலி
கடவாய்ப்பல் வலி
கண்ணாடி அழுத்துகிற மூக்கில்
ஒருவித நெருடல் வலி
கண்ணாடியை பிடித்துக்கொள்கிற
காதுமடல்களின் பின்புறம் வலி
நெற்றிப்பொட்டில்
அருவருக்கும் ஒருவித வலி
பிடரியில் வலி
நடுமுதுகில் ஒருவித வலி
வாந்தி வருவதைப் போல்
வயிற்றிலும் வலி
நெஞ்சுவலி என
பலவித வலிகள்

இயற்கையே தேவலாம்...
தலைவலிபோல்



செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அம்மா திட்டுவார்

சென்ற ஆண்டு, எங்களின் கம்பனியில் நாங்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு நெட்பால் டீம் உருவாக்கியிருந்தோம்.

எங்களுடைய கம்பனி, பல கிளை நிறுவனங்களைக் கொண்டது. எல்லா கிளை நிறுவனங்களிலும் இந்த நெட்பால் டீம், மிக கடுமையான பயிற்சிகளின் மூலம் படு வேகமாக முன்னேறி, பல இடங்களுக்கு போட்டியிடச்சென்று, கிளைகள் சாரா வெளி நிறுவனங்களோடும் போட்டியிட்டு, வென்று, வாகைசூடி, கம்பனியின் பெயரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். எங்களது நிறுவனமானது தலைமை நிறுவனம், அதாவது ஆசியன் எச் ஃக்யூ.  ஆனால் பேர் சொல்லிக்கொள்ளும் படி, பெண்களின் பங்களிப்பு இந்த  விளையாட்டுத் துறையில் அவ்வளவாக இல்லை.

இப்போது, விளையாட்டுத்துறையில் இந்த திடீர் ஆர்வம் வந்ததிற்கு முக்கிய காரணம்;  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்களின் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமும், அதே வேளையில், காற்பந்து விளையாட்டில், எண்பதுகளில் தேசிய அளவில் விளையாடி, வென்று வெற்றிக்கொடி நாட்டிய ஒரு காற்பந்து வீரரை (தமிழர்)  உயர் அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அவர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, தூங்கிக்கிடந்த எங்களின் விளையாட்டுத்துறையை தூசு தட்ட ஆரம்பித்து விட்டார்.

பல குழுக்களைத் தயார் செய்தார். பகுதி பகுதியாக ஆட்களைப் பிரித்து, பல விதமான விளையாட்டுகளில் சேர்த்துவிட்டார். FUTSAL, NETBALL, TUG OF WAR, GOLF, TENNIS, VOLLEY BALL, BASKET BALL, BADMINTON, TABLE TENNIS, CAROM AND BOWLING என.

எல்லா விளையாட்டிற்கும் ஆட்கள் கணிசமாக சேர்ந்துவிட்டவேளையில் நெட்பால் விளையாட்டிற்கு மட்டும் வரவேற்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த அதிகாரி, எல்லா பெண் பணியாளர்களையும் ஒன்று திரட்டி, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து எல்லோரையும் வரும்படி மின்னஞ்சல் வழி அழைப்பு விடுத்திருந்தார். அனைவரும் சென்றோம். பேச்சிற்கே இடமில்லை, எல்லோரும் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.

குழந்தைகளை பள்ளியில் இருந்து ஏற்ற வேண்டும், கைப்பிள்ளைகள் வைத்திருப்பவர்களைத் தவிர மற்ற எல்லோரும் கண்டிப்பாக பயிற்சிகளில் பங்கு பெற வேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சிலர் சிணுங்கினார்கள் என்னைப்போல். விலை அதிகமுள்ள பிரண்டட் விளையாட்டு ஆடை, விளையாட்டுக் காலணி என உடனே அளவு எடுக்கப்பட்டதால், நிராகரிக்க முடியாமல், நிராகரிப்பதைப்போல் ஏற்றுக்கொண்டோம். கிடைக்காது இது போன்ற விலை அதிகமுள்ள ஆடைகள் காலணிகள் என எல்லோரும் நான் நீ என்று முந்தி கொண்டு அளவு கொடுத்து விட்டோம்.  அதுவும் அவர் முன்னிலையிலே. விடுவாரா!? தினமும் எங்களின் டீம் லீடரிடம் கேட்பார், பயிற்சிகள் எங்கே? இப்போ அதன் நிலை என்ன? தேர்ச்சி என்ன? இன்னும் என்னவெல்லாம் வேண்டும்? யார் யார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை? யாரெல்லாம் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர்? போன்ற விவரங்களை வாங்கிய வண்ணம் இருப்பார்.

முதலில், எங்களின் பயிற்சி ஒரு பள்ளியில் தொடங்கிற்று. பயிற்சிபெற்ற ஒரு ஆசிரியை எங்களுக்கு அவ்விளையாட்டு பற்றிய பயிற்சிகளை வழங்கினார். பந்தை எப்படிஅடுத்தவரிடம் கொடுப்பது, பந்து வீசும் போது கைகள் கால்கள் எந்த நிலையில் இருக்கவேண்டும், பந்து கையில் கிடைத்தவுடன் கால்களின் தடங்களில் கவனம் செலுத்துவது, நகராமல் இருப்பது, எங்கே நகர்வது, எங்கே நிற்பது, வருகிற பந்தை எப்படி வாங்குவது, எதிராளியின் கையில் பந்து கிடைத்து விட்டால் அதைப்பிடுங்காமல் எப்படி தன் கையிற்கு அந்த பந்தை வரவழைப்பது போன்றவற்றை மிக கவனமாக பயிற்சியின் வழி சொல்லிக் கொடுத்தார்.

எங்களில் பலர் அவ்விளையாட்டை முறையாகக் கற்காதவர்களாதலால்.. பயிற்சி சில மாதங்கள் தொடர்ந்தது. பயிற்சிகள் முடிந்து திடலுக்கு விளையாட அழைத்துச்செல்லுகையில் ஏறக்குறைய விளையாட கற்றுக்கொண்டோம். இருப்பினும் பலவிதமான குளறுபடிகள்தான்.

திடலில் நடந்த கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. விளையாடும் பெண்மணிகள் நாங்கள் எல்லோரும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். சிலரின் உடம்பு ஒத்துழைக்கவில்லை, சிலரின் வயது ஒத்துழைக்கவில்லை.  திடலிலே கால் சுளுக்கு ஏற்பட்டு நீலகிரி தையலமெல்லாம் கொண்டுவந்து ஒருவர் மாற்றி ஒருவர் கால்களைப்பிடித்து உறுவிக்கொண்டிருந்தோம். அதன்படி, தொடர்ந்து விளையாட முடியாமல் உட்கார்ந்து கொண்டவர்களும் உண்டு.

 ஆரம்பத்தில் எங்களுக்குள் பகுதியாக குழு பிரித்து, நாங்களே, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் எங்க ஆட்களுடனேயே மோதி விளையாடினோம், வெற்றிக் களிப்பில் மாறி மாறி ஒரே ஆர்ப்பாட்டம். விளையாடிய அலுப்பே தெரியாமல் வீடு திரும்புவோம். மிகவும் ஜாலியாக இருந்தது. நாங்கள் நன்றாக நெட்பால் விளையாடுகின்றோம் என்று பேஸ்புக்கில் பதிவேற்றம்.. நண்பர்களுக்கும் பந்தாவாக எஸ்.எம்.எஸ் பகிர்வு வேறு. ஒரே ஆர்வக்கோளாறுதான் போங்க..

எங்களால் ஓரளவு விளையாட முடியுமென்கிற நம்பிக்கை துளிர்விட்டவுடன், எங்களை, பக்கத்து கம்பனியின் டீம்’மோடு மோதவிட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அந்த விளையாட்டின் சிக்கல். நாக்கு வெளியே தள்ளி, மரங்களைச் சாய்க்கும் அளவிற்கு மூச்சு தஸ் புஸ்ஸ்ஸ் என்று ஒரு பக்கம்.. திடலில் அங்கப்பிரதிஷ்டை செய்து, சேற்றில் மூழ்கி, கை கால்களிலெல்லாம் தேய்ந்து. முட்டியெல்லாம் வீங்கி... படு மோசமாகிவிட்டது நிலைமை.

அன்று முதல், பயிற்சி என்றால், ஒரு கலவரத்துடன் காணப்பட்டார்கள் வீராங்கணைகள். ஒவ்வொரு குழுவுடன் மோதும் போது (வெவ்வேறு கம்பனிகளுடன்) படுதோல்வியைத்தான் தழுவி மண்ணைக்கவ்வுவோம். அவர்களின் வேகத்திற்கு அரைகிழவிகளான எங்களால் ஈடு கொடுக்க முடியாமல் திணறி தடுமாறினோம். என்ன செய்வது, உடை காலணிகள் எல்லாம் அவரவர் அளவிற்கு ஏற்றாட்போல் ஆடர் கொடுத்தாகிவிட்டது.. கம்பனியின் ஸ்போர்ட்ஸ் வேறு கூடிய விரைவில் நடக்கவிருந்தது... பின் வாங்க முடியாமல் தத்தளித்தோம்.

பயிற்சி போதவில்லை என மீண்டும் பந்து பிடிக்கும், பந்து வீசும், பந்தை அடிக்கும் பயிற்சியும், திடலைச்சுற்றி ஓடுவது, கால்கள் நாட்டியம் ஆடுவதைப்போல் ஒன்று,இரண்டு, மூன்று என முன்னே இருந்து பின்னேயும், பின்னேயிருந்து முன்னேயும் நகரும் பயிற்சிகள் என வேலையிலிருந்து விடுப்பு எடுத்து பயிற்சிகள் பரபரப்பாக நடத்தப்பட்டது.
இருப்பினும் எல்லாம் கானல் நீராய்.. ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் ஸ்போர்ட்ஸில் படு தோல்வியைத் தழுவியே முடிவுற்றது சென்ற ஆண்டின் நெட்பால் குழு..

திடலில் நடந்த கூத்துகளையும் சொல்லத்தான் வேண்டும். ஒரு முறை எங்களின் ஸ்போர்ட்ஸ் கிளஃப் சேர்மென், நாங்கள் விளையாடுவதைப் பார்க்க திடலுக்கு வந்திருந்தார். அமைதியாக நாங்கள் விளையாடுவதைக் கண்ணுற்றார். நானும் அங்கேயும் இங்கேயும் மூச்சு வாங்க, ஓடினேன் ஓடினேன் திடலின் எல்லைக்கே ஓடினேன், பந்து மட்டும் கையில் கிடைத்த பாடில்லை. எங்கள் குழுவில் உள்ள ஒருவளுக்கு முட்டி வலி,  இங்கிருந்து அந்த பக்கமும், அங்கிருந்து இந்த பக்கமும் நடையாய் நடந்தே விளையாடி முடித்தாள்.  பந்து கிட்ட வரும் போது ஒரு குதி குதிப்பாள் அவ்வளவுதான், சும்மாலும் காற்றில் ஒரு அடி வைப்பதைப்போல் மேலே கையை உயர்த்தி ஒரு அடி அடிப்பாள், அதைப் பார்க்க எனக்கு வேறு பயங்கரக் காமடியாக இருக்கும்.. அப்படியே உட்கார்ந்து `காக்க்காக்க்கா’ என சிரித்து விடுவேன். ஒரு முறை எங்களின் கோர்ச் என்னைத் திட்டினாள், நீ என்னமோ சரியாய் விளையாடுவதைப்போல் அடுத்தவரைப் பார்த்து சிரிக்கின்றாயா? என.. நான் சிரித்த சிரிப்பில் அவளுக்கே தாங்க முடியாமல், அவளும் விழுந்து விழுந்து சிரித்து விட்டாள்.

இந்த முறை அப்படிசிரிக்கமுடியாமல், ஸ்போர்ட்ஸ் சேர்மென் அமர்ந்திருந்ததால், சிரிப்பை அடக்கிக்கொண்டு, விளையாடுவதைப்போல் பவனை செய்தேன். பலர் நிஜமாகவே கடுமையாக விளையாடினார்கள். சேர்மென் பலமுறை தலையை வலது இடது புறமாக ஆட்டிக் கொண்டேயிருந்தார்..(லட்டு சிலேபி கொடுக்கும் போது, சக்கரை வியாதிக்காரர்கள், வேண்டாம் வேண்டாம் என்பார்களே, அதுபோல்) அப்போதே அவர் சிலரை நீக்கி விடச் சொல்லி பட்டியல் கொடுத்து விட்டுச்சென்றார். அதில் என் பெயரும் வந்தது என் அதிர்ஷ்டமே!.

இந்த வருடமும் கூடிய விரைவில் ஸ்போர்ட்ஸ் வரப்போகிறது. பல பயிற்சிகள் தொடங்கிவிட்டன. வேலை முடிந்தவுடன், சார்ட்ஸ் டீசர்ட்ஸ் என, உடைகள் மாற்றிக்கொண்டு திடலுக்கு பயிற்சி மேற்கொள்ளச் செல்பவர்களைக் காணலாம். நெட்பால் குழுவும் இம்முறை பயிற்சியில் நன்கு தேறியிருந்தனர். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்  இம்முறை அதிக அளவில் இருப்பதால், எங்களில் பலர் (விலையுயர்ந்த டீ சர்ட், காலணிகளுக்கும் விளையாடும், போங்கு வீராங்கணைகள்) அந்தக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். முழுக்க முழுக்க இளைஞர்களையே பங்கு பெற வைத்து, சாதித்துக்காட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.. சென்ற வருட மூக்கறுப்பை சரிக்கட்ட.!

அதே பழைய சேர்மென் தான் இம்முறையும், அவர் என்னிடம் வந்து, நிறைய  மாணவர்கள், நம்ம பிள்ளைகள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கின்றார்களே, அவர்களையெல்லாம் விளையாட்டிற்கு அழைக்கவேண்டியதுதானே!? சீனர்கள், மலாய்க்காரர்களைப் பார், எல்லோரும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர். நம் பெண் பிள்ளைகள் சும்மா, இன்னும் கொஞ்ச நாளில், கம்பனியில் யார் மிகப்பெரிய குண்டுப்பெண் என்றால், சிலருக்கு முதல் பரிசு கிடைக்கலாம், என்று சொல்லி கண்களைச் சிமிட்டினார். எனக்கு சுறுக்கென்றது. நான் உங்களைச் சொல்லவில்லை என்றும் முன்னெச்சரிக்கையாக வேறு சொல்லிச்சென்றார்..!

நீங்கள், அவர்கள் எல்லோரையும் சந்தித்து, கண்டிப்பாக எதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள்ளச்சொல்லுங்கள், கம்பனியில் இது ஒரு அற்புதமான வாய்ப்பு, நன்கு பயன்படுத்திக்கொள்ளலாமே, என்று ஆலோசனையும் வழங்கினார்.

நானும் ஒவ்வொருவராக அழைத்து, விளையாட்டுகளைப் பற்றிச்சொல்லி, எதில் ஆர்வம் இருக்கிறது.? என்றும் கேட்டேன். ஒருவருக்கும், எதிலுமே ஆர்வம் இருப்பதாகத்தெரியவில்லை. வேலை முடிந்து, வீட்டுக்கு விரைவாகச் செல்ல வேண்டும். `அம்மா திட்டுவார் ’என்கிற பதில் தான் வந்தது.

அம்மா திட்டுவார்.. அம்மா திட்டுவார் என்கிற சாக்குப்போக்குகளைச் சொல்லிச்சொல்லியே - நாங்கள் சும்மா ஆனது போதுமே.. நீங்களாவது ஓடி விளையாடுங்கள் பாப்பா..

திங்கள், ஏப்ரல் 23, 2012

சுட்டுவிடு

காதலால் என்னை மூழ்கடி
தற்கொலையை விட
கொலை பிடித்திருக்கு
அதுவும் கொலைக்காரன் நீ என்பதால்
ஆத்ம திருப்தியுடன்
துப்பாக்கியை நானே எடுத்து
சுட்டுக்கொள்கிறேன்

சனி, ஏப்ரல் 21, 2012

தூசுகள்

உணரப்படும் 
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
துரத்தப்படுகின்றன..

துரத்தப்படுகின்ற
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
உணரப்படுகிறது...

தூசியும் தும்மலும்
துரத்தமுடியாதது தான்
உணரப்படுகின்ற போது

தூசு என்பது மறைமுகம்
தும்மல் என்பது வெளிப்படை..

நகைச்சுவை

எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதைக் கண் கூடாகக் காணலாம். ஆனால் நகைச்சுவை செய்வதில் மட்டும் ஆண்கள் தான் முன்னிலையில். 

ஆண்களுடைய நகைச்சுவைகள் கவர்வதைப்போல் பெண்களின் நகைச்சுவைகள் கவர்வதில்லை. நகைச்சுவைப் படங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, பெண்களின் body language தான் சிரிக்கவைக்குமேயொழிய அவர்களின் வசனம் அவ்வளவாக சிரிக்கவைக்காது. அப்படியே அவர்களின் வசனம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும்,அது ஒரு ஆண் எழுதிய நகைச்சுவை வசனமாகத்தான் இருக்கும். குறிப்பாக மகளிர் மட்டும் திரைப்படம், ஊர்வசியின் போடி லங்குவேஜ் தான் காப்பாற்றியது அப்படத்தை.

மனோரமா கூட, நகைச்சுவையை விட நவரச நடிப்பில் தான் முத்திரை பதித்தார். மனோரமாவின் நகைச்சுவை அறவே பிடிக்காது எனக்கு.

கோவை சரளா சொல்லவே வேண்டாம், பேசுகிற பாணியே ரசிக்கமுடியாது. கணவனை எட்டி உதைத்து சிரிக்கவைப்பார்.

ஆனால் என்.எஸ்.கே, தங்கவேலு முதல் நாகேஷ், கவுண்டமணி, விவேக் வடிவேலு சந்தானம் வரை எப்போதுமே ஆண்கள் தான் இந்த நகைச்சுவைத் துறையில் மிளிர்கின்றனர். 


நகைச்சுவைக் கதைகள் என்று வரும்போது, தங்கவேலு எப்படிப்பண்ணினார், கவுண்டமணி சொன்னார் பாருங்க, நாகேஷ் இல்லேன்னா.. விவேக் என, சொல்லிச் சொல்லி சிரிப்போம் ஆனால் பெண்கள் பேசிய நகைச்சுவை  வசனங்களை குறிப்பிட்டு யாருமே பேசுவதில்லை.. நான் கேள்விப்பட்டவரை. 

நண்பர்கள் கூட; பல பெண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆண்களாக இருப்பதற்கு இந்த நகைச்சுவை உணர்வுதான் முக்கிய காரணம். இந்த உணர்வு இல்லையென்றால் பெண்களை நெருங்கவே முடியாது. ஏன் இவளுக்கு ஆண்கள்தான் நிறைய நண்பர்க்ள் என் சிலர் நினைக்கலாம் .. எல்லாம் நகைச்சுவை உணர்வேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!  ஒரு பெண்ணிற்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்களேயென்றால் அவள் எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பாள். பெண்களின் இந்த ரசனை உணர்வை மெருகேற்றுவதற்காகவே சில ஆண்கள் தமது நகைச்சுவை உணர்வை அதிகமாக வளர்த்துக்கொள்வார்கள்.

ஆண்களின் நகைச்சுவை உணர்வின் மர்மத்தை ஆராயனும். எல்லா இனத்திலும் இதுதான்.!

வியாழன், ஏப்ரல் 19, 2012

அலுத்துப்போச்சோ...

நாளை நேர்முகத் தேர்வு. தேர்விற்கு வரவிருக்கும் இருபது பேருக்கு இன்று மதியம்தான் நினைவுறுத்தல் அழைப்பு விடுத்து ஓய்ந்தது. தேர்வு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.

நிறைய பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுக்கச்சொன்னார்கள். அந்த ஐம்பது பேர்களில் பத்து பேர் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பத்து பேர், சில தவிர்க்க முடியா காரணங்களால் வரமுடியாது என்றார்கள். மறுபடியும் அழைத்து உறுதி படுத்துக்கொள்கிறோம் என்கிற கோரிக்கையோடு.
ஆக முப்பது பேர் வரமுடியும் என்கிற நிலையில் அன்று.!

இன்று, மறுபடியும் நினைவுறுத்தல் அழைப்பு விடுக்கும் போது, அதில் இருபது பேர்தான் தேறினார்கள். ஒருவர் வரத்தெரியாது என்றும், ஒருவர் மன்னிக்கவும் என்றும் ஒருவர் பிடிக்கவில்லை என்றும், சிலர் தொலைப்பேசி அழைப்பை எடுக்காமலும்....

இந்த இறுதிநேர, நேர்முகத்தேர்வின் உறுதிபாடு அவசியம், காரணம் சில முன்னேற்பாடுளை செய்யவேண்டும். அதிகமானோர் என்றால், இரண்டு அறைகள் தயார் செய்யவேண்டும். முறைப்படி நேர ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் எல்லோரும் வந்து விட்டால் அவர்கள் அமர்வதற்கு இடம், பூர்த்தி செய்யபடுகிற விண்ணப்ப பாரங்கள், அனுப்பியிருக்கின்ற ரிஷுமி’யை  வரிசைப்படி தயார் படுத்துதல், நகல் எடுத்தல் போன்ற வேலைகள் சரியாகச் செய்யப்படுவதற்கே இந்த இறுதி கட்ட தயார் நிலையும் நினவுறுத்தலும்.

மேலும் யாருடைய நேரத்தையும் வீனடிக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை என்பதால், இதுபோன்ற எச்சரிக்கைகளில் நிர்வாகம் முழுக்கவனம் செலுத்துகிறது.

இன்று காலையில் ஒருவருக்கு அழைதிருந்தேன். படு சுவாரஸ்யமான அழைப்பு இது. சென்ற வாரம் இவருக்கு அழைப்பு விடுத்தபொழுதே, வேண்டா வெறுப்பாகவே வெட்டி வெட்டிப்பேசி அழைப்பை அலட்சியம் செய்தார். கோபம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு, `டேய் வர்றீயா, இல்லியா, அத மொதல்ல சொல்லு, கஸ்மாலம்’ என்று திட்டவேண்டும் போல் இருந்தது. இருப்பினும் இமெஜ் காக்க, வாயை மூடிக்கொண்டு..`யெஸ் சர், நோ ச்ர்’என்று முடித்துக்கொண்டேன். கம்பனி இமெஜ் முக்கியம், பிறகு மேலிடத்தில் எதாவது போட்டுக்கொடுத்தால், மேமோ வரும்.. ஏற்கனவே எனக்கு வந்திருக்கு. தனியறையில் வைத்து `ஆத்து ஆத்துன்னு’ ஆதிட்டானுங்க அறிவுரையை. போதுண்டா சாமி. இனி தேவையா என, அன்று முதல் மிக பவ்வியம் தான் எல்லோரிடமும்.

இன்று மீண்டும் அதே நபருக்கு அழைத்து, நாங்கள் அனுப்பிய மெயில் கிடைத்ததா? யெஸ்’ என்றார். இங்கே வருவதற்கு எதேனும் பிரச்சனை உள்ளதா? நோ’ என்றார். ``அப்படியென்றால் அந்த மெயிலில் குறிப்பிட்ட நேரப்படி சரியாக வந்து விடு, நன்றி.. என முடிக்கும் போது..`நில்லு, உன்னிடம் ஒரு கேள்வி’ என்றான். `யெஸ்’ என்றேன்.

யார் இண்டர்வியூ செய்வார்கள், நீ யா? என்றான். இல்லை, அந்த டிப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் என்றேன். `எம்.டி ஆர் ஜீ.எம்?’ கேட்டான். `இருவரும் அல்ல, மூன்று மனேஜர்கள் இருப்பார்கள்’ என்றேன். `இரண்டாவது இண்டர்வி யூ இருக்குமா?’ என்றான். `உங்களைத் தேர்ந்தெடுத்தால், சம்பளம் அலவன்ஸ் போன்றவற்றைப் பேசுவதற்கு நிச்சயம் வரச் சொல்வார்கள் தானே!’ என்றேன். ஆரம்பித்து விட்டான்.. ``முதலில் மானேஜர்கள் இண்டர்வியூ எடுப்பார்கள், பிறகு இரண்டாவது இண்டர்வியூ இருக்கு வா’ன்னு, ஜீ.எம்’கள் எடுப்பார்கள். அதன் பின்னர் எம்.டி எடுப்பார் வா’ன்னு மூணாவது இண்டர்வியூ வரும்.. பிறகு எம்.டி’ க்கு பிடிக்கவில்லைன்னு சொல்லி ரிஜெக்ட் செய்வீர்கள், இது எனக்குத் தேவையா? முதல் இண்டர்வியூவிலேயே பெரிய சூப்பர் ஸ்டார் கணக்கா கேள்விகள் கேட்கிறார்களே, பிறகு எதற்கு இரண்டாவது மூன்றாவது இண்டர்வியூ? மூன்று பேரும் ஒன்றாக இண்டர்வியூ செய்யமுடியாதா? நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? அழைக்கும்போதெல்லாம் வருவதற்கு. !!? எவ்வளவு தூரம் அலையவேண்டும்!? பெட்ரொல் டோல் என எவ்வளவு செலவு? எங்களின் நேரம் வினடிக்கப்படுகிறது. சக்தி வீனடிக்கப்படுகிறது. இப்போ வேலை செய்யுமிடத்தில் லீவு கேட்பதும் கிடைப்பதும் பெரும் பாடாகிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தில் அல்லல்பட்டு வந்தால், ரிஜெக்ட் செய்கிறீர்கள் சர்வ சாதாணரமாக..தேவையா இது எங்களுக்கு!?’’ புலம்பினான். நான் என்ன செய்ய முடியும்.? என் கடன், ஆணைப்படி பணி செய்துக் கிடப்பதே. !

ஒரே கேள்விதான் அவனிடம், கொஞ்சம் அதட்டலாக. `` நீ வறியா இல்லையா?, வரவில்லையென்றால் நன்றி. வணக்கம்’’ அவ்வளவுதான்.

``யெஸ் மேடம், ஐ எம் கமிங்க்’’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தான், இறுதியாக...

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு
அதிர்ஷ்டம்
வரும் போகும்..

அதிர்ஷ்டம் பணமாக வந்தால்
பணமும் வந்தவழியே..

அதிர்ஷ்டம்
பொருளாகக் கிடைப்பதால்

எனக்கு இது கிடைத்தது?
உனக்கு என்ன கிடைத்தது?
இந்த பொருள் என்னிடம் உண்டு!
அந்த பொருளும் என்னிடம் உண்டு!
என்ன செய்வது?
எனக்கும் புரியவில்லை!?
யாரிடமாவது விற்கவேண்டும்
பணமாக்கவேண்டும்..
போன வருடம் கிடைத்ததே அப்படியே இருக்கு
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
அவருக்கு என்ன கிடைத்ததாம்!
இவருக்கு என்ன கிடைத்திருக்குமோ!?
மாற்றிக்கொள்ள கேட்டால் கொடுப்பார்களா?
விலை ஒப்பீடு வந்தால், கூடுதல் பணம் கொடுக்கனுமே
நாமாக இருந்தாலும் சும்மா கொடுப்போமா?
பணம் வாங்காமல் விடமாட்டோமே!
சரி இருக்கட்டும்
உறவுகளில் யாருக்காவது
திருமணம் பிறந்தநாள் என்றால்
பரிசாக கொடுத்து விடலாம்

அதிர்ஷ்டம் கூட
குழப்பம்தான்

அதிர்ஷ்டம் ஒண்ணும்
இல்லாததைக் கொடுத்துவிட வில்லை

அதிர்ஷ்டம் கூட
வியாபார சிந்தனைதான்

அதிர்ஷ்டம் கூட
வெட்டி அரட்டைதான்...

இருப்பினும்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
அதிர்ஷ்ட சிந்தனை
எனக்கும் தான்..!!

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புளிப்பு மிட்டாய்

நீயும் திட்டு
விளங்காமல் நானும்
கொஞ்சம் திட்டி வைக்கிறேன்
இப்படி கொந்தளித்தால் தானே
உனக்கு நான் நல்லவன்
ஊருக்கு புரட்சியாளன்

யாருங்க ஊனம்?

சிலரிடம் இருக்கும் அபாரத் திறமைகளைக் காணும் போது, நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் செய்ய இயலவில்லை என்று நினைக்கையில் மனம் சில விஷயங்களைச் செய்துபார்க்கத் துடிக்கும்.

சில நாட்களாக என்னால் முடியுமா என சிலரின் கைவரப்பெற்ற அபாரத் திறமைகளை நான் என்னிடம் பரிசோதித்த்துப் பார்த்துக் கொண்டேன்.
கீழே ஒரு காகிதத்தை வைத்து, வலது கால் விரல்களில் பென்சிலைப் பொருத்தி, (கால்களால் வெட்கத்தில் கோலம் போடுவது சுலபம்) அந்த காகிதத்தின் மீது `விஜி’ என்று எழுதிப்பார்த்தேன். முடியவில்லை, அது அவ்வளவு சுலபமேயல்ல. மண்ணில் கோழி பிராண்டிய குப்பை போல் வந்தது என் எழுத்து. மீண்டும் முயன்றேன், தோல்வியே. மிக மிக கடினமான ஒரு காரியமாகவே இருந்தது. அதற்குள் காலின் நடு விரல் நரம்பு வேறு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அது வேறு ஒரு பக்கம் வலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது!  அந்த விரலை இழுத்து நேராக ஆக்கிக்கொண்டு மீண்டும் முயன்றேன், ஓரளவு வந்தது இருப்பினும் அழகாக வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றும் கோணல்மாணலாக அலங்கோலமாகவே வந்தது.

அடுத்து, மறுபடியும் அதே பென்சிலை இடது கால் விரல்களின் நுழைத்துக்கொண்டு எழுத முயன்றேன், அறவே முடியவில்லை, இன்னும் கூடுதலாகச் சிரமப்பட்டேன். வலது காலிலாவது ஒரு விரலில்தான் சுளுக்கிக்கொண்டது, இடது காலில் பெருவிரலும் சேர்ந்து இழுத்துக்கொண்டது. பொறுக்கமுடியாத வலியை அனுபவிக்க நேர்ந்தது.

நமக்கு வலது கைப்பழக்கம் எழுதுவதற்குச் சரளமாக இருந்து விட்டால், வலதுகாலால் கொஞ்சம் எழுத முடிகிறது. அதுவே இடது கால் என்று வருகிறபோது கால் சுழலும்போது உடம்பும் ஆடுகிறது, எழுத்துவருவதில் சிக்கல் ஏற்படுகிறது.  எனது கால்களைக்கொண்டு எழுதும் பயிற்சியில்  ஈடுபட்டபோது கண்ட ஆராய்ச்சி இது.

அடுத்து, வாயில் பேனாவை வைத்துக்கொண்டு எழுத முயற்சி செய்தேன்.. பேனா நீட்டமாக இருப்பதான் எழுத்து காகிதத்தில் சரியாக விழவில்லை. காகிதத்தில் எழுதுகிறபோது பேனா வாயிற்குள் நுழைந்து நுழைந்து, தொண்டையினை உராயும்போது, குமட்டல் வந்து எச்சில் ஒழுகுகிறது.

ஆக, பேனா சரிப்பட்டு வராது என்பதால், பென்சிலை சிரியதாகச் சீவி (குட்டையான பென்சில் என்றால் சுலபம்) வாயிற்கும் காகிதத்திற்கும் இரண்டு இஞ்ச், பென்சிலும் அதே அளவில் இருப்பதை உறுதி செய்துகொண்டு., எழுத ஆரம்பித்தேன்.

வாயில் கவ்விய அந்தச் சிறிய பென்சிலால் `அம்மா’ என்று எழுதிப்பார்த்தேன். அதை எழுதி முடிக்கவே அப்பப்ப்பா என்றிருந்தது. எவ்வளவு சிரமங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது தெரியுமா.!. 

`அ` என்கிற எழுத்தை எழுதும்போது தலையும் சேர்ந்து சுழல்கிறது. வாயில்  நுழைத்த பென்சில் வேறு நழுவிக்கொண்டே இருந்தது. பற்களால் கடித்துக்கொண்டும், உதட்டால் இறுக்கிக்கொண்டும்... பெரும்  பாடாகிவிட்டது நிலை.

அம்மா என்கிற மூன்றெழுத்தை எழுதிமுடிக்கவே சில நிமிடங்கள் ஆனது. பென்சில் அங்கும் இங்கும் வளைந்தது. வாயிலிருந்து எச்சில் வேறு வடிந்து காகிதத்தை நனைத்து நாசம் செய்தது. தலையும் ஆடுகிறது,  ஆடும்போது தலைவலியும் சேர்ந்து வருகிறது. மிகவும் சிரமப்பட்டேன். குனிந்து குனிந்து எழுதுகிறபோது முதுகு வளையும், அப்போது  இடுப்பும் சேர்ந்து வளைகிறதல்லவா, அத்தருணத்தில் பின்புறத்தின் நடுமுதுகுப் பகுதி வலிக்கும். கீழே அமர்ந்துகொண்டு இதைச் செய்யும்போது யோகாசனம் செய்வதுபோல் இருந்தது, நிச்சயம் கொஞ்சம் குண்டானவர்கள் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.

நான் வலது கைப்பழக்கம் உள்ளவள். எழுதுவது தொடங்கி எடுப்பது கொடுப்பது எல்லாமும் வலது கைதான். உதைப்பது, முதல் அடி எடுத்து வைப்பது, படியேறுவது என வலது காலும் எதற்கும் முதலாவதாகவே பயணிக்கும். பெரும்பாலும் பலருக்கு வலது கை வலது கால் பழக்கமாகத் தான் இருக்கும். யாரோ ஒரு சிலர் தான்  இடது கைப்பழக்கம், இடது கால்பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பத்தில் மூன்றுபேர் இடது கை கால் பழக்கமுள்ளவர்களை இப்போது அதிக அளவில் காணலாம்.

இடது கை கால் பழக்கமுள்ளவர்கள் அறிவாளிகள் என்று யாரோ ஒரு சிலர் பரவலாகக் கிளப்பிவிட்ட புரளியால், குழந்தைகளை குழந்தைப்பருவத்திலேயே இடது கைப்பழக்கம் வருவதைப்போன்று செயற்கையாகப் பழக்கப்படுத்தி விடுகின்ற பெற்றோர்களும் இருக்கவேதான் செய்கிறார்கள்.  நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது.
இடது கை கால் பழக்கமுள்ளவர்கள், இடது கையால் பூப்பந்து விளையாடுவார்கள், இடது காலால் உதைத்து காற்பந்து விளையாடுவார்கள்,  சிலர் உணவு கூட இடது கையால் எடுத்துச் சாப்பிடுவார்கள். எதை எடுத்தாலும் இடது கையையே பயன் படுத்துவார்கள். கோழி, இறைச்சி, மீன் போன்றவற்றை துண்டு போடும் போது கூட இடது கைதான், இதைப் பார்க்கும் நமக்கு வித்தியாசமாகவே தோன்றும்.

இடது கை பழக்குமுள்ளவர்கள் எழுதுவதைப்பார்க்கும்போது எனக்கு படு குஷியாகிடும். எதோ நமக்கு இல்லாத ஒரு தனித் திறமை அவர்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு ஆர்வத்தில், அவர்கள் எழுதும் போது, வைத்தக்கண் வாங்காமல் அவர்கள் எழுதும் பாணியை ரசிப்பேன். எழுதுகிற எழுத்து அழகாக இருந்து விட்டால், ஒரே ஆச்சிரியம்.  

அதே மாதிரி நானும் எழுதிப்பார்ப்பேன். வலது கையால் எழுதும் போது, இடமிருந்து வலமாக எழுதுவோம்.இடது கை பழக்கமுள்ளவர்களும் அப்படியேதான் எழுதுவார்கள், ஆனால் நான், இடது கையால் எழுதிப்பழகும்போது, எழுத்து வலமிருந்து இடமாகச்செல்கிறது. எழுதியதை, கண்ணாடியின் முன் வைத்துப்பார்த்தால்தான், அந்த எழுத்தை சாரியாகப் வாசிக்க முடியும். இல்லையென்றால் அது தலைகீழாக இருக்கும்.

இவற்றையெல்லாம் ஏன் நான் பகிர்கிறேன் என்றால், எல்லாம் இருந்தும் நாம் ஊனமாகவே உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

இப்போது சொல்லுங்கள்.. யார் இங்கே ஊனம்?  
  

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

இறக்கி வைத்தேன்

நேரம் ஆக ஆக ஒரு வித பதற்றத்துடன் என் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.  பொழுதுவிடிந்தால் நான் வசிக்கும் இடத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் அப்பாலில் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செல்லவேண்டும். அதை நினைக்கும்போதே உடலும் மனமும் மிகவும் சோர்வாகவே இருந்தது.

நான் பணிபுரியும் கம்பனியின் நூறு ஆண்டு சாதனைக் கொண்டாட்ட விழா அங்கே வெகு விமர்சையாக நடைபெறவிருப்பதால் ஒவ்வொரு பணியாளர்களும் விசுவாச உணர்வோடு அதில் பங்குகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

முடிந்தவரையில் இதுபோன்ற நிகழ்வுகளை கொஞ்ச காலமாக தவிர்த்து வருகிறேன்.தவிர்ப்பதற்குக் காரணம், பெரும்பாலான வேளைகளில் வாகனமும் சாலையும், போக்குவரத்து நெரிசலுமாக அலைந்து அலைந்து பிரயாணமென்றால் பீதியைக்கிளப்புகிறது.

சொற்ப நேர பிரயாணமென்றால் பரவாயில்லை, இது குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணிநேரப் பிரயாணமாகும். அதுவும் சரியான சாலையமைப்பு இல்லாத காட்டுப்பாதையில் குறைந்தது ஒரு மணிநேரம் பிரயாணமாம். பஸ் பரதநாட்டியம் ஆடும் அந்த சாலையில் என ஆடிக்காட்டினான் என் சக ஊழியன்.

காலை ஒன்பது மணிக்கு பஸ் புறப்படும் என்று ஒலிப்பெருக்கியில் நான் தான் அறிவிப்பு செய்தேன். ஒன்பது என்றால் பத்து ஆகும் என்பது ஒருபக்கமிருந்தாலும், பஸ் புறப்பட்டுப் போய் சேர, மதியம் இரண்டாகும் என்கிறார்கள். சேர்ந்தவுடன் அங்கே எங்களுக்கென்றே தயாரித்து வைத்திருக்கின்ற மதிய உணவை எடுக்கவேண்டும். (உணவு என்ன லட்சணமாக இருக்குமோ என்பதை நினைத்தால், இப்போதே வயிற்றைப் பிரட்டுகிறது.)

அதன்பிறகு ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்ளவேண்டுமாம். அநாதைக்குழந்தைகளின் அவல நிலை, அவர்களைப் பராமறிக்கும் இல்லம் பற்றிய தகவல்கள், குழந்தை வளர்ப்பு, ஏன் குழந்தைகள் அநாதைகளாக் கப்படுகிறார்கள் போன்ற சிந்தனைத்தொகுப்பு.. தேநீர் விருந்தோடு. (எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுகிறது). கம்பனி பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை இது போன்ற நிகழ்வுகளில் பறைச்சாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் படங்கள் பத்திரிகைகளிலும் பரவலாக வரும், பணமும் கொடுப்பார்கள், நல்ல சேவைதான்.

செக் இன், ஹோட்டல் ரூம்மிற்கு. பெரிய கூட்டமாக இருப்பதால் அறையின் சாவி கிடைப்பதற்கு எப்படியும் மணி ஐந்து ஆகும். பிறகு அவரவர் அறைகளுக்குச்சென்று, குளித்து அலங்காரமெல்லாம் செய்துகொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் ballroom  ற்கு வந்துவிடவேண்டும். தாமதமானால், லக்கி ட்ரோ டிக்கட் கிழித்து போடப்படும் பெட்டியை மூடிவிடுவார்கள், இதனாலேயே சகஊழியர்கள் அடிபுடி என்று ஓடுவார்கள்.

விருந்து இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள். உணவு, சீன ரக உணவு. வேலை அனுபவத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ரக உணவைத்தின்னுத்தின்னு சலிப்பு வந்து விட்டது. அதுவும் ஒரு மேஜையில் பத்து பேர் அமரவேண்டும். அந்த பத்து பேரில் ஐவர் நன்கு சாப்பிடுகிறவர்கள் நம்மோடு அமர்ந்துவிட்டால், அவ்வளவுதான், மற்றவருக்கு உணவு கிடைக்காது. அதுவும் என்னைப்போன்றவர்கள், உணவு மிச்சம் இருந்தாலேயொழிய உணவில் கை வைப்பதில்லை. கரண்டியையும் முள்ளையும் டக்கு டொக்கு என்கிற சத்தத்துடன் உணவை உண்பார்கள்.. ஒரே டென்ஷனா இருக்கும்.

இடையிடையே அதிஷ்டக்குலுக்கலும் நடைபெறும். எல்லோருக்கும் விழும், நமக்கு மட்டும் விழாது. ஒரே ஒரு ஆண்டு, ஒரு ரேடியோ கிடைத்தது. அதோடு ஒன்றுமில்லை. வாய் பிளந்து கையில் வைத்திருக்கும் அழைப்பு அட்டையை உர்ரென்று பார்த்துக்கொண்டு, பரபரப்பாக நம் எண்கள் வருமா வருமா என காத்திருந்து பழகிப்போச்சு என்றே சொல்லலாம். பொறுமையைச் சோதிக்கும் அதிஷ்ட எண்கள் சொல்லும் பாணி வேறு படபடப்பை ஏற்படுத்தும்.

ஒருவகையாக டின்னரும் முடியும். பிறகு பார்ட்டி டைம்.. டிஸ்கோ ஆடுவார்கள், ஸ்லோ டான்ஸ் ஆடுவார்கள், நமக்கு அதில் ஆர்வமில்லைதான் இருந்தபோதிலும், நம்மோடு தங்கியிருக்கும் ரூம்மெட் கள் ஆடுவார்களே..!! அவர்களுக்காக சும்மானாலும் உட்கார்ந்துக்கொண்டு, நிகழ்வு களைகட்ட கைகளைத்தட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

நீண்ட நேர பஸ் பிரயாணம், சாப்பிட்டும் சாப்பிடாத நிலை, இரவு பன்னிரெண்டு மணி வரை தூங்காமல், கராமுரா என இரைச்சலான மேல்நாட்டு இசையில், கண்களைப்பறிக்கும் வர்ண விளக்குகள், மினுக் மினுக்கென்று மின்னும் லேசர் ஒளிகள் என படும் அவஸ்தைகள் ஒருவருடம் தாங்கும்.

அதன் பிறகு அறைக்கு வந்து, யாரோ படுத்துப்புறண்ட படுக்கையில் தலை வைக்கக்கூட ஒவ்வாமல் கொண்டு வந்த துண்டை போர்த்திக்கொண்டு படுத்துத் தூங்கவேண்டும்.

காலை ஏழு மணிக்கு பசியாறை. கொஞ்சம் தாமதமானால், வாட்டிய ரொட்டிதான் கிடைக்கும். (அனுபவம்) அதற்கும் தாடாபுடா என ஓடவேண்டும். சாப்பிடுவார்கள் சாப்பிடுவார்கள் உணவையே இதுவரையில் பார்த்திராதது போல் சாப்பிடுவார்கள். புஃவ்வே தான், இருப்பினும் மிக விரைவாக உணவுகள் அனைத்தும் தீர்ந்துபோகும். ஒரு பெரிய பட்டாளமே திரண்டிருந்தால் எப்படி சமாளிப்பார்கள்!? கஷ்டம்தான்.

காலை உணவு முடிந்தவுடன் திடலுக்குச் செல்லவேண்டும், டெலிமேட்ச்.. அங்கே காலில் பலூன் கட்டி வெடிக்கச் சொல்வார்கள், பந்து எடுத்துக் கொண்டு ஓடி மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டும், சாக்கிற்குள் நுழைந்துக்கொண்டு ஓடவேண்டும், காகிதத்தை மடித்து சிறிது சிறிதாக்கி, அதில் நிற்கவேண்டும், பாட்னரை தூக்கிக்கொண்டு... கலகலப்பு மூட்டுகிறார்களாம்..

மதிய உணவு வேளையும் வரும். மதிய உணவிற்குப் பிறகு படகு சவாரியாம்.! இது எனக்குப் பெரிய தலைவலி. பாதிவழியிலே கடலில் வாந்தி எடுத்துள்ளேன். மதிய உணவு எல்லாம் வந்தி வழியாக மீன்களுக்கு இரையாகக் கொடுப்பேன். கொடுமை படுத்துவார்கள். ஒதுங்கி நின்றால் எங்களின் அதிகாரிகள் வந்து வந்து பேசுவார்கள். அவர்களிடம் பேசுவதைவிட பேசாமல் இந்த கொடுமைகளை அனுபவித்து விடலாம்.!

ஓய்ந்து களைத்து, மீண்டும் ரூம்மிற்குள் பிரவேசம். அக்கம் பக்கம் கடற்கரையோறமாக இருப்பதால், மீனவர்கள் விற்கும் மீன் கருவாடு நெத்திலி (கிடைக்காத பொருள் போல்) வாங்குவதற்கு நடந்தே ஷாப்பிங் செல்லலாம் என்கிற அனுமதி கிடைக்கும். உடனே புறப்படுவாள்கள். நானும் அடிவாங்கிய நாய்போல், தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே சுற்றுவேன். கால்கள் பிண்ணும் இருப்பினும் காட்டிக்கொள்வதில்லை.  அவர்கள் சளைக்காமல் சுற்றுகிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமையோ..!

மீண்டும் இரவு உணவு. உறக்கம். மறுநாள் காலையில் ஒரு ஒன்றுகூடல் நிகழ்வும் உண்டு, நிகழ்வுகள் எப்படியிருந்தது என்கிற உணர்வுப் பரிமாற்றம். ஆஹா ஓஹோ என எல்லோரும் கூற நானும் ஒத்தூதுவேன். அவை முடிந்தபிறகுதான் பஸ் புறப்படும். வீடு வந்து சேர, ஞாயிறு இரவு ஆறு அல்லது ஏழு ஆகும். மறுநாள் வேலை..!!

இதனால், இந்த வருட அன்னுவல் டின்னருக்குச் செல்லவேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். அதற்கான காரணம், மாமியார் கீழே விழுந்து மண்டையில் பலத்த அடி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

இப்போதுதான் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் அதன் ஏற்பாட்டுக்குழு தலைவருக்கு. பதிலும் வந்தது ``ok.take care'' என்று.
ஒரு பாரத்தை இறக்கிவைத்ததைப்போன்ற தெளிவு மனதில்.

பி.கு : மாமி உண்மையிலே கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். மண்டையில் அடி. ரத்தம் வழிகிறதாம். அழைப்பு வந்தது, மூத்தார் வீட்டில் இருந்து. 

வியாழன், ஏப்ரல் 12, 2012

வேதம் என்பது?

வேதங்கள் நான்கு..
அவை என்ன சொல்கின்றன?
யாரால் எழுதப்பட்ட்து?
யார் யாருக்கு கொடுக்கப்பட்ட்து?
வேத்த்தில் வர்க்கப்பிரிவுகள் உள்ளனவா?
வேதம் சமஸ்கிருத மொழியில் உள்ளனவா?
வேத்த்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
யாருக்குச்சொந்தம் அது?
ஏன் எல்லோருக்கும் வேதம் போதிக்கப்படவில்லை?
இறைவனால் அளிக்கப்பட்ட்து என்றால், ஏன் எல்லோருக்கும் வேதம் தெரியவில்லை?
ராமாயணம்ம் மஹாபாரதம் வேத்த்தின் ஒரு பிரிவா?
வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா?
வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்த்து, ஆரியர்களின் வருகையால், அது மற்றப்பட்டது என்பது சரியா?

வேதங்களைப்பற்றிய சந்தேகங்களை, எனது தமிழ்நாட்டு நண்பர் ஒருவருக்கு மெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அவரின் எளிய விளக்கம் என்னை அதிகம் கவர்ந்து விட்டதால்,  இதை இங்கேயும் பகிர அனுமதி கேட்டுக்கொண்டேன்.


வேதங்கள் யாராலும் எழுதப் படவில்லை.வாய் வழியாகவே குரு அவரின் சீடர்கள் என்று பரப்பபட்டவை. வேதங்களை  தொகுத்து கொடுத்தவர் வியாசர். வேதம் சமஸ்க்ரித மொழியில்தான் உள்ளது. ஒரு காலத்தில் அனைவரும் வேதம் சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். பின் அவற்றை விட்டுவிட்டனர். பிராமணர்களில் ஒரு சிலர்தான் வேதம் பயில்கின்றனர். ராமாயணம் ,மகாபாரதம் வேதத்தில் வராது . அவை புராணங்கள் .

முதலில் ஆரிய / திராவிட வாதமே தவறு. அப்படி எதுவும் இல்லை/ ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கைகியின் விளைவுதான் ஆரிய திராவிட வாதம். ஆரியப் படையெடுப்பு இதெல்லாம். அதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை குழப்ப உபயோகித்துக் கொள்கின்றனர்.

//வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா
?// இன்றைய கால கட்டத்தில் ஆமாம். ஆனால் முன்பு ரிஷிகளில் கூட பலர் பிராமணர் அல்ல.

வேதம் அனைவருக்குமே சொல்லித் தரப்பட்டது
, கால போக்கில் அனைவரும் விட்டுவிட்டனர் (ப்ராமானர்களையும் சேர்த்துதான்)

நான்கு வேதங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான விஷயங்களை சொல்கிறது. உதாரனத்திற்க்கு அதர்வண வேதம்
, விமானம் செய்வது /மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றை சொல்கிறது.

நன்றி: கார்த்திக்

புதன், ஏப்ரல் 11, 2012

எனக்கு எந்த வருத்தமும் இல்லை

எங்களின் ஊரில், எடிட்டர்கள் இல்லையென்றால் பலர் எழுத்தாளர்களே இல்லை. !?

அதனால்தான் இந்த கணினி யுகத்திலும் பல வாசக எழுத்தாளர்களுக்கு சமூகவளைத்தளங்கள், பேஸ்புக், வலைச்சரம் போன்ற மின் ஊடங்களைப்பற்றிய போதிய ஞானம் இல்லை. இன்னமும் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவை வருமா வராதா என்று வாரவாரம் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.


 

படைப்புகளுக்கு ஏற்ப தலைப்பைப் போடுவது, பத்திகள் பிரிப்பது, பிழைகளைத் திருத்தம்செய்வது, மோசமான கருத்துப்பிழைகளை கண்டறிவது, சுருக்குவது, நீட்டுவது, சரியான வார்த்தைகளைக்கொண்டு பத்திகளை நிறைவுசெய்வது, தேவையற்றதை நீக்குவது போன்றனவற்றில் விழிப்புணர்வு இல்லாத்தால், அவ்வரிய காரியத்தை பத்திரிகை எடிட்டர்கள் செய்து பல `எழுத்தாளர்களை’ எழுத்தாளர் அந்தஸ்திற்கு உருவாக்கி உயர்த்துள்ளனர்.


 

ஒரு முறை, பத்திரிக்கை அலுவலகமொன்றிற்குச் சென்றிருந்தேன். சொந்த பணியின் காரணமாக அப்பக்கம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், பத்திரிகை அலுவலகமும் செல்லும் வழியிலேயே இருந்துவிட்டதால், எனது சிறுகதை ஒன்றினை  அப்பத்திரிகை  ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடலாமே என்றெண்ணி அப்பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றேன்.   

 

படைப்புகளை நேராக வந்தும் கொடுக்கலாம், அதில் ஒரு பிரச்சனையும் இல்லை  என்று அப்பத்திரிகை ஆசிரியரே ஒப்புதல் வழங்கியதால்தான் படைப்பை கையுடன் எடுத்துச் சென்றேன். 

 

நான் அங்கு சென்று சேர்ந்தபோது, அந்த ஆசிரியர் அவசர அவசரமாக ஒரு வேலையில் மிக மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு படைப்பை பக்கம் பக்கமாக திருத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். என்னதாக இருக்குமென்று எட்டிப் பார்த்தால், ஒரு `பிரபல’ எழுத்தாளரின் படைப்பு அது. தலையே சுற்றியது எனக்கு. பல ஆண்டுகளாக பத்திரிகைகளிலும் இதழ்களிலும் விடாமல் எழுதிக்கொண்டிருப்பவரான அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு மோசமான எழுத்துப்பிழைகளோடு வந்திருப்பது எனக்குப் பெரும் அதிர்ச்சி.! ஆசிரியர் சிகப்புப் பேனாவால்  பிழைத்திருத்தங்களை செய்துகொண்டிருந்ததால்,  பளிச்சென்று கண்களுக்குத்தென்பட்டன அங்கே அவர் திருத்தம் செய்திருந்த பிழைகள்.  

 

எதற்காகப் போடவேண்டும்? முயன்று, வாசிப்பில் கவனம் செலுத்தி நன்றாக எழுதவரும்போது அவைகளை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே, என்றதிற்கு, பாவம், எழுத்தில் அதிக ஆர்வமிருக்கிறது, மேலும் தமிழில் எழுதுபவர்கள் வேறு குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்நிலையில் ஆர்வம் உள்ளவர்களை எங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் வளர்த்துவிடவேண்டும். பிறகு பய்யப்பய்ய எழுத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்கிறார்..!

 

எப்போது? எத்தனை ஆண்டுகளாக இந்நிலை..?


 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறுகதை கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிற்பதற்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில், பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் பத்து கதைகளை சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அந்த ஆய்வுகளை அக்கருத்தரங்கில் வாசித்து விமர்சனம் செய்தார்கள். விமர்சனங்கள் அனைத்தும் அற்புதம். செய்தவர் ஒரு முனைவர் என்பதால் நிகழ்வு சோர்வாக இல்லாமல் சுவரஸ்யமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. அனைத்தும் அற்புதமான கதைகள்.

 

ஒவ்வொன்றாக விமர்சனம் செய்துகொண்டே வரும்போது, ஒரு கதையின் விமர்சனம் எனக்குள் சிறு நெருடலை உண்டு பண்ணியது. அக்கதை அப்பட்டமான காப்பி.  சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் ஒன்றான பின்நோக்கிச் சென்று வள்ளுவரையும் சித்தர்களையும் சந்தித்துவிட்ட பிறகு முன்நோக்கிச்செல்வதைப்போன்ற ஓர் அற்புதக்கதை அது. அதை அப்படியே நகல் எடுத்து தமது பெயரை போட்டுக்கொண்டு போட்டிக்கு அனுப்பியுள்ளார் ஒருவர். அச்சமயத்தில் நான் மிக அண்மையில் படித்த கதை அது என்பதால், அக்கதை அப்படியே மனதில் பதிந்துபோயிருந்தது. 

 

தவறு, எழுதியவரின் மேல் இல்லை. எழுதுபவர்கள் இப்படித்தான் எதையாவது செய்து தம்மை நிலைநிறுத்தப்பார்ப்பார்கள். கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அக்கதைகளை ஆய்வு செய்பவர்களுக்கும் எங்கே போனது சுரணையை உணர்வு? அவர்களின் வாசிப்பின் பரப்பளவு என்ன? புதிதாக எழுதுகிற ஒருவர், எழுதிய உடனேயே மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாணி தெரிகின்ற போதே, அவைகளை ஆராயவேண்டாமா..!? 

 

நிகழ்வில் ஓய்வு நேரம் வழங்கப்பட்டது. அப்போது, கதைகளை ஆய்வுசெய்திருந்த முனைவர் ஐய்யா அவர்களை தனிப்பட்டமுறையில் சந்தித்து, கதைகளில் ஒன்று அப்பட்டமான காப்பி என்றும், எனக்குத்தெரிந்த ஒன்று காப்பி என்பதால் மற்றவைகளையும் கொஞ்சம் ஆராய்வதுதான் சிறப்பு என்பதனை தயங்கித்தயங்கியே சொன்னேன். 

 

கண்களை அகல விரித்து ஆச்சிரியமாகப் பார்த்தார் என்னை. அப்படியா? அதுமாதிரியே எழுதியிருக்கலாமல்லவா.!? என்றார் படபடப்பை மறைத்தவண்ணம்.  எனக்கும் இச்சூழல்  தர்மசங்கடத்தை  ஏற்படுத்தியதால், அமைதியாக வந்துவிட்டேன். இதுபோல் இன்னும் எத்தனை காப்பிக் கதைகளை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ..  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

 

இதையொட்டி, அந்நிகழ்வை எடுத்து நடத்திய பத்திரிகைக்கும் தகுந்த ஆதாரத்தோடு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.. அதையும் மூடுமந்திரம் செய்தார்கள்.


 

தமிழ் நாட்டு மோகத்தில் ஆட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பவர்களின் படைப்புகள் கூட அச்சு அசப்பில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சாயல் உள்ளதுவே.

 

இங்குள்ள மற்றவர்களுக்கு இதுபுரியாமல் இருக்கலாம் ஆனால் நான் தினமும் இரண்டு தமிழ்நாட்டு சிறுகதைகளையாவது படித்துவிடுபவள். இந்தச் சாயல் மோகம் தப்பு என்று சொல்லவில்லை, நல்ல விஷயம் தான். பெரிய வளர்ச்சி. அவர்கள் போல் கதை எழுதுவது சாமானியமான ஒன்றா!? ஒரு முதிர்ந்த நிலை பார்வையில் கதைகளைப் புனைவது பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். 


இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒருவர் என்னைக் கேட்டார், மலேசிய இலக்கியத்திற்கு உனது உழைப்பு என்ன?


எனது பதில்: குப்பைகளை எழுதிக் குவிப்பதுதான் உழைப்பு என்றால் - எனது உழைப்பு ஒன்றுமேயில்லைதான். நான் ஒரு சாதாரண வாசகி. 


என்னைப்போல் இலக்கியங்களை விமர்சனம் செய்ய முடியுமா உன்னால்!!? என்றால்...


 

எனது பதில்: என்னால் முடியாதுதான், நான் ``நல்லாருக்கு, நல்லாலை’’ என்கிற வார்த்தையோடு முடித்துக்கொள்வேன். தேவையில்லாமல் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் எழுத்தாளர்களின் மனதை இரணமாக்க நான் தயாராக இல்லை. அவரவரின் பார்வையில், படைப்புகளின் தன்மை வேறுபடலாம். ஏன் நன்றாக இல்லை என்பதற்கு, நான் 100 காரணங்களை வைத்தால், ஏன் நன்றாக இருக்கு என்பதற்கு அவர்கள் 200 காரணங்களைக் கொடுக்கமுடியும். இதில் யாருக்கு என்ன லாபம்?

 

எது சரியான படைப்பு என்பது படிப்பவரின் பக்குவத்தைப் பொருத்தது. ஒருவர் மனது அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எழுதியது எழுதியதுதான். நான் ஒருவள் தனிப்பட்ட முறையில் `ஆஹா.. ஓஹோ’ என்பதாலும் அல்லது, இது எழுத்து அல்ல குப்பை என்பதாலும் , எழுதியவரின் வங்கித்தொகையில் கூடுதல் ஆயிரம் ரிங்கிட் கூட்டியோ குறைந்தோ போவதில்லை.  


 

எழுத்துக்களின் மூலம், அவரவர் பார்வையில் அவலம் என்பதை அவரவர் பாணியில் பிரித்துப் பகுத்துச் சொல்ல வருகிறார்கள், அவற்றில் அங்கீகாரம் தேடுகிறார்கள், புகழ் சேர்க்கப் பார்க்கிறார்கள், தம்மை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோசம். கிடைக்காவிட்டால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 


 

மிகப் பிரபலமாக பேசப்பட்ட, பல புகழ்பெற்ற எழுத்தாளர்களே, இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை (தமிழில்). நமக்குள் ஏன் பிரியோஜனமேயில்லாத வாக்கு வாதம்.!? 


 

தயவு செய்து தமிழ் நாட்டு இலக்கியவாதிகளின் சர்ச்சைகளில் இதில் சேர்க்கவேண்டாம். அவர்களுக்கு எழுத்து முழுநேரத் தொழில், இங்கே நாம், பொழுதுபோக்கு எழுத்தாளர்கள். லட்சியமில்லாத எழுத்து பலருக்கு. எழுத்தால் என்ன மறுமலர்ச்சி புரட்சி வந்தது என்று யாராவது கேட்டால், எனக்குத்தெரியாது, தெரிந்தால் பகிருங்கள். கோபமில்லாமல். நான் கேள்விப்பட்டதில்லை (பத்திரிகை நிருபர்களின் எழுத்தைத் தவிர, பத்திரிக்கை நிருபர்கள் எழுத்தாளர்கள் அல்ல - அதுவும் அவர்களின் பிழைப்பு) 


 

அரசியல் தலைவர்களை மட்டம் தட்டி, அரசியல் சூழலை மையமாக வைத்து சில தகிடதத்தோம் எழுத்துகளை எழுதிவிட்டால், அது அதிரடி அரசியல்    எழுத்தாகிவிடுமா?  அதனால் வந்த மாற்றம் என்ன என்பது தான் இங்கே கேள்வி. மாற்றமே வராது, ஆனால் ``நான் எருமை வாங்கினால் உன் தோட்டதில்தான் மேயவிடுவேன்’’ என்கிற கதையில், நடக்காத விஷயத்திற்காக வரும் சண்டையிடும் நிலைதான் இங்கு  இலக்கிய வட்டத்தில் அவ்வப்போது நடக்கும் கூத்து.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

புரட்சியாளர்கள்

கையில் `ரிமோர்ட்’
ஓயாத புலம்பல்
ஒலி(ளி)பரப்பு சரியில்லை
பொதுநல புரட்சியாளர்கள்

`ரிமோர்ட்’ என்பது
தமிழ் அல்ல
தமிழ் கொலை செய்யாதீர்கள்
தமிழ் புரட்சியாளர்கள்

புரட்சி என்பதே
தமிழ் அல்ல
சம்ஸ்கிருதம்
சமஸ்கிருத மறுப்பாளர்களின்
புரட்சி.

நோக்கமே புரட்சியானால்
புரட்சியில்
ஒரு வெங்காயமும் இல்லை


திங்கள், ஏப்ரல் 09, 2012

தொட்டுக்க புளிச்சக்கீரை....

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் என்றால், சமையல்  தடபுடலாக இருக்கும். கோழி, இரால், நண்டு, இறைச்சி என நன்றாகச்சமைப்பேன். ஆனால் நேற்று, நோயாளியான மாமியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதால், அவரின் நாவிற்கு என்ன கேட்கிறதோ அதையே கூடுதலாக எல்லோருக்கும் சமைத்தேன்.

‘புளிப்பாக எதையாவது சமைம்மா, நாக்கு செத்துப்போச்சு..’ என்றார். சரி என்ன வேணும்னு சொல்லுங்க!? கேட்டேன். ``நல்லா காரமாக புள்ளிச்சைக்கீரையும், புளிப்பாக மாங்காய் துவையலும் செய்..’’ என்றார். இரண்டுமே புளிப்பு சம்பந்தப்பட்டதாகக் கேட்கிறார் என்றால், மருத்துவமனையில் அவர் சாப்பிட்ட உணவின் கொடுமையை நினைக்கும் போது, பரிதாபமாகத்தான் இருந்தது.

`கேட்பதைச் செய்துக்கொடு’, என்பதுதான் கட்டளை, இருப்பினும் கேட்பதையெல்லாம் செய்துக்கொடுக்க முடியுமா என்ன!? அததற்கு எது எது தோதாக இருக்குமோ, அதைத்தானே செய்ய வேண்டும்.!

புளிச்சக்கீரையை வாங்கி, நிறைய சிறிய வெங்காயங்களைச் சேர்த்து, எண்ணெய் கீரையாகக் கடைந்து, வவ்வாள் மீனை, எண்ணெய் இல்லாமல், எழுமிச்சஞ்சாறு பிழிந்து, பொன்நிறமாக வாட்டிக் கொடுத்தேன். வாட்டிய மீனைத் தொடவேயில்லை, புள்ளிச்சைக்கீரையை நக்கிக்கொண்டே, கஞ்சியைக் குடித்தார்.

``ரொம்ப நாளுக்குப்பிறகு சுறுக்’னு சாப்பிட்டேன்ம்மா’’ என்றார். என்ன சாப்பாடு போங்க, இரெண்டு மொடக்கு கஞ்சிதான், அதோடு போதும், வாந்தி வரமாதிரி இருக்கிறது என்கிறார். நோயாளியல்லவா..!

காலையில் எழுந்தவுடன், பசியாறுகிறாரோ இல்லையோ, ஆனால் நேரம் தவறாமல் மருந்து மாத்திரைகளை விழுங்கியாக வேண்டும்.   அம்மருந்து மாத்திரைகளைப் பார்க்க நமக்கு மளைப்பாக இருக்கும். அவ்வளவு மாத்திரைகள், விதவிதமான வடிவத்தில், பல நிறங்களில். கொடுத்தே ஆக வேண்டும், இல்லையேல் இனிப்பின் அளவு ஏழுலிருந்து இரண்டிற்கும், இரண்டிலிருந்து இருபதிற்கும் மாறிமாறி நோயாளியை இம்சை படுத்தும். அது பேராபத்து, நோயாளியை ஸ்ட்ரோக் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள். அவஸ்தைதான்.!

வந்த முதல் நாளிலேயே, மாத்திரைகளைப் பற்றி, மாமி வாய் திறக்கவில்லை. அவருக்கு மருந்து எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை என்பதை உணர்ந்துக்கொண்ட நான், மாத்திரைகளை எடுப்பதற்கு அவரை வற்புறுத்தவில்லை. கணவர் வந்தவுடன், மாத்திரைகளைக் கொடுத்தாயா? என்பார். இருவரும் விழிப்போம்!. வசை எனக்குத்தான். என்ன செய்வது, வயதானவர்கள் குழந்தைகளாகிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளையும் பிடிவாதங்களையும் ரசிக்கலாம் சகித்துக்கொள்ளலாம், ஆனால் வயதானவர்களின் நச்சரிப்பும் புலம்பலும் பெரும் எரிச்சலைத்தான் கொடுக்கிறது. அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதில் அவர்களுக்கே தெளிவு இருப்பதில்லை. சிறுபிள்ளைகளைப்போல் அது வேண்டும், இது வேண்டுமென்று நச்சரிப்பார்கள், ஆனால் கொடுத்தால் வேண்டாம் என்பார்கள்.

இப்படித்தான் ஒரு நாள், பால் வேண்டுமென்றார், பால்மாவு உள்ளது, பால் கலக்கிக்கொடுக்கவா? என்றேன்.  வேண்டாம் ஃப்ரெஷ் மில்க் வேண்டும் என்றார். உடனே, கடைக்குச்சென்று ப்ரெஷ் மில்க் வாங்கி வந்தேன். பாலைக் காய்ச்சி, நன்கு ஆறவைத்து டம்லரில் ஊற்றிக் கொண்டுவந்தால், வேண்டாம், குடலைப்பிரட்டுகிறது என்று சொல்லி படுத்துக்கொண்டார். சரி, காய்ச்ச பாலை விணாக்கவேண்டாமே என்று, அதில் கொஞ்சம் காப்பியைக் கலந்து, நான் குடித்துவிட்டேன். மகன் வந்தவுடன், புகார் செய்கிறார்,  பால் கேட்டேன், கொடுக்கவில்லை. என்று..!? திட்டவும்  முடியாமல், கோபித்துக்கொள்ளவும் முடியாமல்.. என்ன செய்வது!?

சனிக்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லை. கணவர் ஒரு ஒன்றுகூடல் நிகழ்விற்குச் சென்றுவிட்டார். நானும் வருடா வருடம் இந்நிகழ்விற்கு அவருடன் செல்வேன் . இந்த வருடம் கலந்துகொள்ள முடியாமல் போனது. சென்ற ஆண்டின் போது நான் தான் பேச்சாளர். சும்மா நமக்குத்தெரிந்த சில விவரங்களைப் பற்றி பேசலாம். வள்ளலார் பற்றிப்பேசினேன். மிக மகிழ்வாக இருந்தது, நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.  இவ்வருடம் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

மாமியால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லைதான்.  உணவு கொடுத்து விட்டால், அமைதியாக உறங்குவார். ஆனாலும் எங்களுக்கு மனசு கேட்கவில்லை.  அவரை தனிமையில் விட்டு விட்டு எப்படி நிகழ்விற்குச் செல்வது? அதனால் இவ்வருட நிகழ்விற்குச் செல்ல எனக்குத்தடை. அந்நிகழ்வு, தமிழ் பள்ளி மாணவர்களின் உயர்விற்காக, கணவர் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சேவை அன்பளிப்பு நிகழ்வு.

இரவு வெகுநேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். மாமிக்கு இப்போதெல்லாம் தூக்கமே வருவதில்லையாம். விடிய விடிய தூங்காமல் விழித்திருப்பாராம். ஏன் இந்த மாதிரியான சிக்கலில் இறைவன் தம்மை  தவிக்கவிடுகிறான், என என்னிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களையும், அங்கிருந்து வந்தவுடன், மூத்த மகனின் வீட்டில் நடந்தவைகளையும், மகள் வீட்டீற்குச் சென்றிருந்த போது  பேரன்கள் பொழிந்த பாச மழை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாமி மீது வைத்திருக்கும்  அக்கறை, என,  எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருந்தார். நானும் கணினியில், முகநூலில் வலம் வந்துக்கொண்டே, `உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

பேச்சுவாக்கில் அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ள, `அந்த’ பழக்கத்தைப்பற்றியும் கூறினார். அதிகமாகக் குளிரும் போது ஒரு `பேக்’ போட்டுக்கொள்வாராம்.! மகன்கள் பேரன்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டு, ஊர் திரும்புகையில்,  நிச்சயம் பாட்டிக்கென்று வெளிநாட்டு மதுபானங்களை ஒன்று அல்லது இரண்டு பாட்டல்களை  வாங்கி வந்துவிடுவார்கள்.  இது எனக்குத் தெரிந்த ஒன்றுதான்.  இருப்பினும், மருந்து, ட்ரீப்ஸ், ஊசி, மூத்திரப்பிரச்சனை, மலச்சிக்கல், தோள் அரிப்பு, கால்களில் புண், கண் பார்வையில் பிரச்சனை, ஜீரணக்கோளாறு, வாயு கோளாறு என அத்தனை கோளாறுகளால் அவதியுறும் இந்த சூழலில், எப்படிக்கொடுப்பது?

கொஞ்சம் குடித்தால் இந்தக் குளிருக்கு இதமாக இருக்குமென்றார். எனக்கு, திக் என்றது. எப்படிக்கொடுப்பது?? யோசித்தேன்,  கொஞ்சமாக ஊற்றி, சுடுநீர் கலந்து, நானும் மாமியும் சீயர்ஸ் செய்துக் குடித்தோம். யாருக்கும்  தெரியாது.

நாம் செய்கிற செயல் நமக்குச் சரியென்று பட்டுவிட்டால், யாரிடமும் ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ கேட்கவே கூடாது என்பார்களே, அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அன்றிரவு அறிந்துகொண்டேன்.!

இரவு கணவர் வீடு திரும்பியதும், ஜாடை மாடையாக, இது பற்றி ஒன்றுமறியாதது போல் வினா எழுப்பினேன்.

``குளிர் அதிகம், உடலெல்லாம் நடுங்குகிறதென்று அம்மா புலம்புகிறார்களே, கொஞ்சம் விஸ்கி,ப்ராண்டி கொடுத்துப்பார்த்தால்..!?”

``ஐயோ, அந்த மாதிரி முட்டாள் தனமாக எதுவும் செய்துவிடாதே.! வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைப்போல் ஆகிவிடும். கை கால் இழுத்துக்கொள்ளும். உடம்பில் ஏற்றியிருக்கும் அனைத்து மருந்துகளும் பாழாகி பிரிரோஜனமில்லாமல் போய்விடும். ஜாக்ரதை.!!” என்றார்.

எனக்கு அடிவயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. எதோ தவறு நிகழ்த்திவிட்டதைப்போல் மனம் பதைபதைத்தது. இந்த விவரகாரம் வெளியே தெரிந்தால், நான் தான் மாட்டிக்கொள்வேன். படித்திருந்தும் புத்தியில்லாமல் காரியம் ஆற்றிவிட்டேனென்று பல திசைகளில் இருந்து எதிர்ப்புக்குக் குரல்கள் கிளம்பலாம்.! மாமியின் காதிலும் லேசாக ஓதிவிட்டேன். அவரும் மௌனம் காத்தார். (குடிகாரிகள்)

காலையில், வேலைக்கு வந்தவுடன், முதல் வேலையாக என் மருத்துவ நண்பருக்கு தொலைப்பேசியில் அழைத்து,  இந்த விவரத்தைச் சொன்னேன்.

``அதில் தப்பே இல்லை. இனி என்ன? என்ன கேட்டாலும் கொடுங்கள், சந்தோசமாக இருந்து விட்டுப்போகட்டும். மது கூட மருந்துதான் சீரான ரத்த ஓட்டதிற்கு. அதிகமானால் எல்லாமே விஷம், உணவும் கூட. ”

நிம்மதிப்பெருமூச்சு வந்தது..