புதன், டிசம்பர் 12, 2012

ரசித்த காட்சி



The Great Barrier Reef

The Great Barrier Reef is the world's largest coral reef system. It's located in the Coral Sea, off the coast of Queensland , Australia . It's so large, you can see it from outer space. The reef is a very popular destination for scuba divers and other tourists.

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

உருவாகிறாள் ஒரு திரேசா

வேலைக்காரியை வேலை வாங்கு என்கிறது ஒரு கூட்டம். 
வேலைக்காரியை வைக்கிற இடத்தில் வைக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரியின் மனசு கல்லால் செய்தது என்று நினைக்கிறது ஒரு கூட்டம்.
வேலைக்காரி என்று வந்து விட்டால், அவள் அவளின் உணர்வுகளை அடமானம் வைத்துவிடவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.
அவளுக்கென்று ஆசாபாசங்கள் கூடாது என்கிறது ஒரு கூட்டம்.
பிட்டத்தால் நகர்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் வேலைக்காரியென்றால் எளக்காரம்.
எதற்கெடுத்தாலும் நான் உனக்கு சம்பளம் தருகிறேன் என்று சொல்லி மிரட்டுகிறது ஒரு கூட்டம்..
திருடுவாள் என்கிறது ஒரு கூட்டம்
தின்னுபுட்டு தூங்குவாள் என்கிறது ஒரு கூட்டம்
இவர்களுக்கிடையில், யாரையும் உதாசினம் செய்யமனமில்லாமல், மௌனமாக உருவாகிக்கொண்டிருக்கின்றாள் ஒரு அன்னை திரேசா.

திங்கள், டிசம்பர் 03, 2012

உன் விரல்

நெற்றியில் விழும்
எனது ஒற்றை மூடி கூட
உன் விரலின்
ஸ்பரிசத்தைத்தான் வேண்டுகிறது

வியாழன், நவம்பர் 29, 2012

பார்த்ததில் ரசித்தவை

அழகான கைவேலைப்பாடு இந்த பொம்மைகள். பார்த்தும், எங்கள் நாட்டின் அடையாளத்தைப் (மூவிம்) பறைசாற்றுவதைப்போல் இருந்ததால்பகிர்ந்துகொண்டேன்.



 மலாய்க்கார யானை 
 இந்துக்களின் யானை
சீனர்களின் யானை
 டூரியான் பழம்
ஆரஞ்சுப்பழம்

புதன், நவம்பர் 28, 2012

மௌனம் போதிக்கப்படுகிறது

கற்க கற்க
மௌனம்
போதிக்கப்படுகிறது

%%%%%

வாங்கிய மூச்சு

கனவில் ஓட்டப்பந்தயம்
நான் முன்னே
நானே முன்னே
முதல் நிலையில் நானே
கனவில் மட்டுமே
இது சாத்தியம் மூச்சுவாங்காமல்..

%%%%%%

ஒப்பனை

வெள்ளையடித்து
வர்ண சாயம் பூசி
திஷ்டி பொட்டோடு
கிளம்பியாச்சு
பணிக்கு...

%%%%%%

ஞாயிறு

அமைதியான சூழல்
கடிகார முள் டிக் டிக் டிக்
தலையணையை தேடும் தலைகள்
அதற்குள் விடிந்துவிட்டதோ என
போர்வைக்குள்.. 
மீண்டும் புகுந்துக்கொள்கிறது
இந்த உடல்..

%%%%%%

வெட்டியாய்..

எதற்காக இந்த பரபரப்பு?
தெரியாமலேயே பல நாள்கள்
என்னை விட்டு ஓடி
மறைந்து கொண்டிருக்கிறது.

%%%%%%

கீச்சுக்குரல்

மாட்டிக்கொண்ட எலியும்
மரத்தில் உள்ள குருவியும்
ஒரே மாதிரி கீச்சிடும்

%%%%%%%%

கண்சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்ணடிப்பதற்காக..

சிறு வணிகம்....

சில்லறை வணிகர்கள் பற்றிய பதிவுகளை தற்போதைய நாட்டு நிலவரமாக ஆங்காங்கே (பேஸ்புக் மற்றும் ப்ளாக்) படிக்கநேர்ந்தது. அங்குள்ள (இந்தியா) நிலவரம் தான் இது. இதற்கு நான் சொல்கிற கருத்து பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்து விடாது என்பது தெரியும், இருப்பினும் ஒரு பகிர்தல்தான்.

அதாவது சில்லறை வணிகர்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக, பிரபல பேரங்காடிகளை நிறுவி, பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்போவதாக பரவலாகச் சொல்லப்பட்டு வருவதை, பலர் பலவாறான   சாதகபாதகங்களை  எடுத்தியம்பி தெளிவான ஆய்வுகளை மிகத்துல்லியமா பார்வைக்குக் கொண்டு வந்து,  அந்த முயற்சிக்கு எதிர்ப்புக்குரல் தெரிவித்து வருகின்றனர்.  அதிகமான ஏழைகள் வசிக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில், சிறுவணிகத்தின் மூலம் தம்மை குட்டித் தொழிலதிபர்களாக உருவாக்கிக்கொள்கிற இந்த அணுகுமுறை வரவேற்கக்கூடியதே.

இருப்பினும் அரசாங்கம் அமல் படுத்த விருக்கின்ற இம்முயற்சியை எதிக்கவேண்டுமென்று ஒரேடியாக புறக்கணிக்காமல், சில பாதகங்களையும் நினைவில் கொண்டு கருத்துக்களை சீர்தூக்கிப்பார்ப்பது நல்லதென்று படுகிறது.

அடியேனும் இந்த சிறு வணிகத்துறையில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டு நொந்துபோய், வியாபரத்துறையே வேண்டாமென்று வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவள். அந்த அளவிற்கு கீழறுப்புகள், பிக்கல் பிடுங்கல்கள் மலிந்த  துறை இது. சுதந்திர போக்குடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, கட்டுப்பாடற்ற நிலையில், நாம் வியாபாரம் செய்யும் பொருட்களையே மற்றவர்களும் செய்து. நாம் விற்கும் விலையை விட குறைத்து விற்று, கஸ்டமர்களை அவர்களின் பக்கம் இழுத்து, தொடர்ந்து அவர்களும் வியாபாரம் செய்யாமல், நம்மையும் நிம்மதியாய் விடாமல் அலைக்கழிக்கும் நிலை இந்த சிறு வணிகத்துறையில் அதிகமாக உள்ளதென்பதை எத்தைனை பேர் அறிவர்?

மேலும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்காங்கே அதிகரிக்கின்ற சில்லறை வணிக ஆசாமிகளால்தான் நாடும் நகரமும் தூய்மைக்கேட்டால் சீர்குலைகிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தெருவோரம் தின்பண்டங்களை வியாபாரம் செய்கிறவர்கள் செய்கிற அட்டூழியங்களால் நிறைகின்ற குப்பைகள் தூய்மைக்கேட்டினை விளைவித்து, சுற்றுவட்டார மக்களை, எலி, ஈக்கள், கொசு போன்றவற்றால் நோயுறச் செய்து விடுகிறது என்பதனையும் கவனத்தில் கொள்தல் அவசியம். யார் எவரால் இந்த தூய்மைக்கேடு நிகழ்கிறதென்று, சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரனைக்கு உட்படுத்தவும் முடியாமல், தள்ளுவண்டியில் நாடு நகரம் என இடங்களை மாற்றிக்கொண்டு, செல்கிற இடங்களையெல்லாம் குப்பைமேடுகளாக ஆக்கிவிடுகின்றனர் இந்த சில்லறை சிறு வணிகத்தினர்.

தூய்மைக்கேட்டிற்கு பொறுப்பு ஏற்கிற நிலை உருவாகின்ற போது, தனிமனித சில்லறை வியாபரம் சுமூகமாக நடைபெறலாம்.

எங்கள் ஊரின் (மலேசியா) நிலையும் இதுதான், ஆரம்பத்தில் சில்லறை வியாபாரிகளின் ராஜியத்தால் சாலை நெரிசல், தூய்மைக்கேடு, பெரிய முதலீட்டைக்கெடுக்கும் நிலை, செல்கிற இடங்களில் எல்லாம் வாக்குவாதம், ஒருவர் மற்றவர் வியாபாரத்தை கெடுக்கும் நிலை என ஒரே அராஜகம். இப்போது பெரிய பெரிய நகர்களில் இவர்களின் நடமாட்டத்திற்கு தடை வித்தித்து, சிறிய சிறிய கடை வசதிகளைச் செய்துகொடுத்து, அரசாங்கத்தின் மூலம் வியாபாரத்தையும் பதிவு செய்துகொண்டு (பிஸ்னஸ் ரெஜிஸ்டர்), நிகழ்கின்ற அத்துனை பின்விளைவுகளுக்கு அவர்களையே பொறுப்பு ஏற்கும்படி செய்துவிட்டார்கள். இதனால், பலவிதமான சிக்கல்கள் இடைஞ்சல்களில் உழன்று, மனவுளைச்சலுக்கு ஆளாகி வியாபர துறையே வேண்டாமென்று ஓடிவிட்டவர்கள் பலர். காரணம் பொறுப்புகளை ஏற்பதற்கு யாரும் இங்கே தயாராய் இல்லை என்பதுதான் நிதர்சனம்.   

ஞாயிறு, நவம்பர் 25, 2012

மொழி பிரச்சனை


மாமிக்கு யாராவது உடன் இருந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

இங்கே யாருக்கும் அதுக்கு நேரமில்லை. பெற்ற பிள்ளைகளே மிரள்கிறார்கள் பேசுவதற்கு, காரணம் பேச்சு தொண தொண என்று அப்படியே நீண்ட தூரம் செல்கிறது..

கொஞ்ச நேரம் யாரும் இல்லையென்றால் எதையோ பார்த்து பயப்படுவதைப்போல் நம்மை சதா அழைத்துக்கொண்டே இருக்கின்றார்.

நன்றாக இருக்கும் காலத்தில் வீடு வீடாக பஞ்சாயித்திற்கு இவர்தான் தலைவி. (தப்பில்லை)

சென்ற திங்கட்கிழமை, ஒருவரை உணவுக்கடையொன்றில் சந்தித்தோம். அப்போது, அவரும் மாமியைப் பற்றி விசாரித்தார். `ஒரு காலத்தில், எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்க மாமிதான் பஞ்சாயித்து போர்ட் தலைவி. கொடுக்கல் வாங்கல், அரிசி பருப்பு, காப்பி சக்கரையென எது கேட்டாலும் உடனே கொடுப்பார்..தங்கமான மனுஷி.. வரேன் வந்து பார்க்கிறேன்.’ என்றார்.

நல்ல விஷயம்தான் ஆனால் இப்போது? யாருக்குமே பேச நேரமில்லை பேசவும் விரும்பவில்லை.. ஆனால் மாமி மட்டும் அதே நிலையில்தான் இன்னமும்.

பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டால், என்ன ஒரே சத்தம்? என்கிறார்.
அக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாரேனும் அழும் சத்தம் கேட்டால், `அந்த பொம்பள என்ன பண்ணுகிறா? புள்ள அழுவுது.! என்கிறார்.

ஏன் இங்குள்ளவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? என்ன மனுஷாட்கள்?

அந்த மனுஷி நம்ம வீட்டிற்கு வர மாட்டாரா?

உங்கம்மா காலையிலே வரும்.. இன்னிக்கு ஏன் வரல.?

நீ மார்கெட் போயிட்டு ஏன் இவ்வளவு நேரங்கழித்து வர?

அவருக்கு பேசுவதற்கு ஆள் இருக்கவேண்டும் எப்போதும்.
அதற்காக எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இவரின் தங்கையை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து விடலாம், என்கிற முடிவுதான் அது.

கொஞ்சம் பணம் அனுப்பி பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கச்சொல்லி, தங்கையிடமும் ஆசை காட்டி விட்டாச்சு. எல்லாமும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில்,  ஒரு அரசல் புரசல் குடும்பத்தில்...

மாமியின் தங்கையின் வயதும் அறுபத்தைந்து, அவரின் உடல் மற்றும் மன நிலை எப்படியோ!? அவர் இங்கே வந்து, அவருக்கு எதும் பிரச்சனை என்றால், ஒருவருக்கு இருவரை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டி வருமே, அவர் யார் வீட்டில் இருப்பார்? எங்கு தங்குவார்? யார் இரு வயதானவர்களையும் பார்த்துக்கொள்வார்கள்.? புள்ளையார் பிடிக்க குரங்காகி விடும் போலிருக்கே. ! என்கிற சிந்தனை சென்ற தீபாவளியன்று உடன்பிறப்புகளின் மத்தியில் உலவ ஆரம்பித்தது. தெளிவாக சிந்திக்கின்றார்களாம்.. ம்ம்ம். சின்னம்மாவை அழைத்து வரும் யோசனையும் கைவிடப்பட்டது. கைவிடப்பட்டது என்பதைவிட ஒத்திப்போட்டார்கள் எனலாம், காரணம் நிச்சயம் அழைத்து வரவேண்டும், ஒரே ஒரு சின்னம்மா, சின்ன வயதில் ஊருக்குப்போனவர், அவருக்கும் ஆசையிருக்காதா, பிறந்த ஊரைப் பார்க்க (மலேசியா). ஆனால் இப்போது வேண்டாமென்று முடிவெடுத்து விட்டார்கள்.  

சரி, இந்த முடிவை அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா?  `இப்போது வேண்டாம், நாங்கள் பிறகு இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கிறோம், இங்கே நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது..’ என்று, அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா? ஹ்ம்ம்..

தன் உடன்பிறப்பையும், பலகாலம் பிரிந்த உறவுகளையும் பார்க்க, இதுவரையில் அந்த குக்கிராமத்தை விட்டு எங்குமே சென்றிராத அந்த மூதாட்டி வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். தன் அக்காள் மகன்கள் வந்து தம்மை அழைத்துச்சென்று விடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு..

ஆனால், நிலைமை இங்கே? அவர்களின் அழைப்பைக்கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள். மிஸ்ட் கால் வைத்து வைத்து ஓய்ந்தே விட்டார்கள், அங்குள்ள சுற்றங்கள்.

எனக்கு மட்டும் அவர்களின் மொழி தெரிந்தால்,அல்லது அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால், நானாவது அந்த அழைப்புகளை எடுத்து, `அத்தை, உங்களை இங்கே அழைத்து வரும் எண்ணம் யாருக்கும் இல்லை. காத்திருக்க வேண்டாம், வயலுக்குப்போய் பிழைப்பைப்பார்க்கவும்..’ என்று தெலுங்கில் செப்பியிருப்பேன்.

இதனால்தான் எனக்கு எப்போதும் கெட்டப்பெயர்..

வியாழன், நவம்பர் 22, 2012

சாருவை சந்தித்தேன்....


நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிட்டியது.  அங்கே தமிழ் நாட்டு பிரபல எழுத்தாளர் சாரு அவர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எழுதவேண்டுமென்று நினைத்திருந்தால் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, சாரு மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள் இலக்கியப்பகிர்வுகள் என அக்கு அக்காக எழுதிப் பகிரலாம்!. நான் நிகழ்காலத்தில் வாழ நினைப்பதால், அவரின் பேச்சுகளில் முழுமையாக ஒன்றிவிட எண்ணி, குறிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. குறிப்புகள் என்னை தடுமாற்றத்தில் ஆழ்த்தும். குறிப்பு எடுப்பதால் பேச்சுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமென்பதால் பெரும்பாலும் நான் குறிப்பு எடுப்பதை தவிர்த்து விடுவேன். நான், என் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுவிட்டு எழுதியதை, மாங்கு மாங்கு என்று குறிப்பு எடுத்து எழுதுபவர்கள் கூட பகிரமாட்டார்கள்.  என்ன, அவர்களிடம், சொற்பொழிவாளரின் பேச்சுகளின் போது பகிரப்பட்ட பெயர், ஊர், கதைகளின் தலைப்பு, இடப்பெற்ற சூழல் என அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல் வரும். என்னுடைய பகிர்வில் நான் உள்வாங்கிக்கொண்டது மட்டுமே வெளிப்படும்.

இருப்பினும், என் தம்பிகளான நவீன் மற்றும் தயாஜி இருவரும் சாரு அவர்களின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள் என்பதை நானறிவேன். அவர்களிடமிருந்து விலாவரியான தகவல்கள் வரலாம்.! ஆக, என்னுடைய இப்பகிர்வு மிக மேலோட்டமாகவே இருக்கும். அங்கே நிகழ்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்வுகளில் சாருவை நேரில் சந்தித்ததை மிக அற்புதத் தருணமாகவே கருதுகிறேன்.

பெரிய ஆள் சாரு. நிறைய விஷயங்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றன. நடமாடும் நூல்நிலையமாகவே திகழ்கின்றார். வாழ்க்கையையே வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அர்ப்பணித்தவர்.  இலக்கியத்தின் மேல் அலாதி பிரியம் கொண்டவர். பேச்சில் வசீகரிக்கின்றார். அறவே இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களையும் இலக்கியத்தின் பால் இழுக்கக்கூடிய ஆற்றல் அவரின் பேச்சிற்கு உண்டு. ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உரையாடுவதைப்போல் மிக எளிமையாக கலந்துரையாடினார் எங்களோடு.

அதிக அலட்டல் இல்லாமல் மிக மிக எளிமையாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிகழ்வு அது.  இலக்கிய ஆர்வலர்கள் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர் வருகை புரிந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அதிக விளம்பரம் இல்லாத, எளிய இலக்கிய நிகழ்விற்கு இந்த வருகையாளர் கூட்டம் பெரிய சாதனைதான். அதுவும் தயாஜியின் `புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர்கள் குழு’ என்கிற வட்டத்தின் கீழ் நடத்திய முதல் நிகழ்வு இது.  முதல் முயற்சியே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதே பெரிய வெற்றிதான்.

தொடர்ந்து அவரை வாசித்து (இணையப்பக்கம் மற்றும் அவரின் எட்டு புத்தகங்கள்) வருவதால், சாரு அவர்களின் எழுத்தில் இருக்கின்ற வீரம், கோபம், குளறுபடி, வெறுப்பு, நகைச்சுவை, கிண்டல் கேலி, உள்குத்து விவகாரம், மறைமுக தாக்குதல்கள் எல்லாம் பேச்சில் இல்லை. பேச்சு ஆன்மிகவாதியைப்போல் சாந்தமாகவே இருந்தது. கேள்விகள் கேட்கப்படும் போது, முக பாவனைகள் மாறுகின்றனவா.? என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்? நித்யானந்தா நல்லவரா கெட்டவரா? (நாயகன் பாணியில்). எனக்கு வாசிக்க நேரமேயிருப்பதில்லை, அப்படியே வாசிக்க விருப்பம் வந்தால், என்ன மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கலாம்.? பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும்? உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார்? (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை? பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம்? அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள்? போன்ற கேள்விகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் அவரின் பதில்கள் அனைத்தும் நிறைகுடமாய் நிதானமாகவே வந்தது. எல்லாவற்றிற்கும் உதாரணக்கதைகள் வேறு சொல்லப்பட்டன. அவை அங்கே வருகை புரிந்திருந்த வாசக எழுத்தாளர்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது என்றே சொல்லலாம்.    

உலக இலக்கியவாதிகளின் கதைகளைப் பற்றிப்பேசினார். அவர்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்கினார். தமிழ் இலக்கியம், சீனாவில் பிரபலமாகப்பேசப்பட்ட நாவல் , பிரெஞ்சு கதைகள் ஆங்கில நாவல்கள், ரஷ்ய இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா என பல சுவாரஸ்யமான விஷயங்களைத்தொட்டு மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.

எங்களின் நாட்டு நிலவரத்தைப் பற்றிய ஓர் உண்மையை ஒரே நாளில் கண்டு கொண்டு, போட்டு உடைத்தார். அதாவது, எங்களிடம் தாய் மொழியான தமிழ் உள்ளது, தேசிய மொழியான மலாய் உள்ளது, படித்தவர்களாகத்திகழ்கிறோம் ஆனாலும் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு மிக மிக கம்மியே.. இது ஒரு ஊனம்.  ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பெரிய இழப்பு. என்றார். நிஜமான குற்றச்சாட்டுதான் இது. இங்கே ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சியைப் பெறாமல் சுமாராக தேரியிருந்தாலே போதுமானது, தொடர்ந்து வாய்ப்புகள் வரும், பல்கலைக்கழகமும் செல்லலாம் ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை என்றால், நம்முடைய சான்றிதழ் குப்பைக்குப்போகும். அதற்காகவே மலாய்மொழியில் தீவிர கவனம் செலுத்திப்பயின்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டோம் என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த குறை எங்களுக்கும் தெரிவதால், இப்போதுதான் ஆங்கிலத்தைக் கற்று வருகிறோம், சொந்த முயற்சியில். நாங்கள் பள்ளியில் படிக்கின்ற காலகட்டத்தில் நிலைமை படு மோசமாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அலட்சியப்போக்கு அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலைமை மாறியிருக்கலாம். ! இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. !? நிஜமாலுமே பெரிய இழப்புதான். இது விழிப்புணர்வைக் கொடுக்கக்கூடிய பார்வையே. நன்றி சாரு.

இங்கே சீன உணவகத்தில் ஒரு அற்புதமான உணவைச் சுவைத்ததாகச் சொன்னார். அந்த உணவைப்பற்றி எழுதப்போவதாகவும் சொல்லி பீடிகை போட்டார். என்ன உணவாக இருக்குமென்று நானும் மிக ஆவலாய் காத்திருந்தேன்.!  உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா? சரி அந்த உணவைப் பற்றி அவர் எழுதுவார். அங்கேயே படித்துக்கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கி வேலையைச் செய்யமாட்டேன். சாரு இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வார்.  

தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் இங்கே ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, நான்கு ஐந்து மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன. இதைப்பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. விகடன் குமுதம் அங்கே என்ன விலை? இங்கே என்ன விலை? அதுபோல்தான், அங்குள்ள ரூபாய் விலையை இங்கே அதே போல் பின்பற்றலாகாது, அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். நிலைமை அங்கு வேறு இங்கு வேறு,என்றார். இருந்தபோதிலும் நான் வாங்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறையாவது தமிழ் நாடு சென்றுவருவதால், அங்கேயே எனக்குத் தேவையான அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிக்கொள்வேன்.  இருப்பினும், சாருவின் கையொப்பம் வேண்டி, அங்கே விற்கப்பட்ட அவரின் `தேகம்’ நாவலை வாங்கி, அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.

சந்திப்பில் என்னை பெயர் சொல்லியே அழைத்தார். முதலில் அடையாளங்காணவில்லை, பிறகு அறிமுகமானவுடன், பல நாள் பழகியதுபோல் மிக மரியாதையுடன் நட்பு பாராட்டினார். அருகில் அமரவைத்தார். நிறைய புகைப்படங்களை எடுக்க ஒத்துழைப்பு நல்கினார்.

கணவரையும் உடன் அழைத்துச்சென்றேன். பெரிய எழுத்தாளரெல்லாம் தமது மனைவியிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என நினைத்து கொஞ்சம் அரண்டுத்தான் போனார். வீட்டிற்கு வந்ததிலிருந்து சாருவின் புராணம் ஓயவில்லை. சாருவை பெரிய இலக்கிய ஜாம்பவான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது அவரைப் பற்றிய தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சாருவைப் பற்றிய தகவல்களை இணையத்தில் ஆராயத்துவங்கியுள்ளார். இணையத்தில்தான் தெரியாதா? நல்லனவைகளோடு மோசமானவைகள்தான் தங்கம்போல் மின்னும்.. அநேகமாக எதிர்மறை சிந்தனையையே பிடித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை காரணம் அவருக்கும் வதந்திகள் என்றால் அல்வா சாப்பிடுவதைப்போல்தான். மிகவும் விருப்பமான ஒன்று.

வாசித்து ஒரு எழுத்தாளரைப் புரிந்துகொள்வதை விடுத்து, வதந்திகளைப் பிடித்துக்கொண்டு நல்ல எழுத்தாளரைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாம் ஒண்ணும் செய்யமுடியாது. அது கணவனாகட்டும், சகோதரிகளாகட்டும், நண்பர்களாகட்டும்..! எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.




புதன், நவம்பர் 21, 2012

பிறந்தநாள் பரிசு

ஒரு வருடம்
புடவை

ஒரு வருடம்
ஐம்பொன் தங்கத்தில் சிறிய தோடு

ஒரு வருடம்
வளையல்

ஒரு வருடம்
கால் கொலுசு

ஒரு வருடம்
விநாயகர் படம்

ஒரு வருடம்
குட்டி முருகன் சிலை

ஒரு வருடம்
சுடிதார்

ஒரு வருடம்
மேஜை விரிப்பு

ஒரு வருடம்
முகக் கிரீம்

ஒரு வருடம்
உடம்புப்பிடி வைத்தியம்

ஒரு வருடம்
சிக்ரட் ரெஸிப்பி கேக்

ஒரு வருடம்
அதிசயமாக அலுவலகம் வந்த பூங்கொத்து

ஒரு வருடம்
கேண்டல் லைட் டின்னர்

ஒரு வருடம்
ஆங்கில சினிமா

ஒரு வருடம்
செக்ஸ் வர்க் ஸ்பெர் பார்ட்

பதினைந்து வருடங்கள்
வருடா வருடம் நீ எனக்களித்த பரிசுகளை
பன்னிரண்டு வருடமாக அசைப்போட்டு
கண்ணீர் விடுகிறேன்
உன்னைப்பிரிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது
இன்றும் நிச்சயமாக
எனக்காக ஒரு புதிய பரிசினை வாங்கி
வைத்துக்கொண்டு
கண் கலங்க முணகிக்கொண்டிருப்பாய்
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி என்று..
  

செவ்வாய், நவம்பர் 20, 2012

ஆண்டு விடுமுறை அர்ப்பணிப்பு

இருபத்திரண்டு நாடுகளைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், எங்களின் நாடான மலேசியா, வேலைக்குச் செல்லும் பணியாட்கள் வேலையே கதியாகக் (Workaholic) கிடக்கின்றார்கள் என்கிற பட்டியலில் நான்காவது இடத்தை வெற்றிகரமாகப் பிடித்துள்ளது.

உலக நாடுகளை வைத்துப்பார்க்கையில், மலேசியாவில்தான் பணியாளர்களுக்கு ஆண்டு விடுமுறைகள் (ANNUAL LEAVES) மிக மிக கம்மியாம். (இந்த தகவல் இப்போதுதான் எனக்கே தெரியவந்தது). மற்ற நாடுகளில் இருபத்திநான்கு முப்பத்திரண்டு என்று அதிகரித்துக்கொண்டே போகும்  பட்சத்தில் மலேசியாவில் மட்டும்தான் இன்னமும் சராசரி நிலையில் பதினான்கு நாட்கள் ஆண்டு விடுமுறைகள் கொடுக்கப்படுகிறன என்கிற உண்மையையும் அந்த ஆய்வு தாங்கி வந்திருந்தது.

இருந்தபோதிலும், அந்த பதினான்கு நாட்களையும் முழுமையாக எடுத்து முடிக்க முடியாமல், தொண்ணூறு விழுக்காடு பணியாளர்கள் வேலையிடமே கதியாகக்கிடக்கின்றார்கள் என்கிற சுவாரிஸ்யமும் அதிர்ச்சியும் கூடிய தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

இங்குள்ள தொழிலாளர்களின் மத்தியில் பதினைந்து விழுக்காட்டினர்களுக்கு, தாம் விடுப்பு எடுத்துக்கொள்வதால் மேலதிகாரிகள் மற்றும் சக தொழிலாளர்கள் தம்மீது எதிர்மறை சிந்தனைகளைக் கொண்டுவிடுவார்கள் என்கிற பய உணர்வில் அல்லல்பட்டு முடிந்தவரையில் வேலைக்கு விடுப்பே எடுக்காமல், தினமும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. இதனாலேயே நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார்களாம் மலேசியர்கள்.

இதில் இன்னொரு சிக்கலும் மறைமுகமாக உள்ளது. அதாவது போட்டிகள் மலிந்த சூழலில், வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருக்கும் பட்சத்தில், கிடைத்த வேலையை தக்கவைத்துக்கொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும்,  தொடர் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அலவன்ஸ் போன்றவைகள் தங்குதடையில்லாமல் கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் ஓய்வு உளைச்சல் இல்லாமல் வேலை இடங்களுக்கு தொடர்ந்து விஜயம் செய்து விடுகின்றார்கள் பணியாட்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதான்.

வருட விடுமுறைகளை முடிக்க முடிக்காமல், ஆண்டு இறுதி வரை வேலை செய்து, அந்த விடுமுறைகளை நிறுவனங்களுக்கே தானமாக (!)அர்பணிக்கின்ற அரிய வேலையை நானும் செய்துள்ளேன்.

இதில் உள்ள உளவியலை ஆராய்ந்தால், வேலைக்கு விடுப்பு எடுக்கின்ற சமயத்தில், நிச்சயமாக நமது வேலைகளை வேறொருவர் செய்கிற நிலை வரும், அப்போது, சம்பந்தப்பட்ட அந்த தற்காலிக ஊழியர், நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள குறைகள் குளறுபடிகள் போன்றவற்றைக் களைந்து, வேலையை இன்னும் மெருகேற்றி சிறப்பாகச் செய்து காட்டிவிட்டால், என்னாவது நம் பிழைப்பு? இப்படிச் செய்துகாட்டித்தான் முன்பு நான் வேலை செய்த ஒரு பெரிய நிறுவனத்தில், குமாஸ்தா பணியில் இருந்து அலுவலக அட்மின் அஸிஸ்டண்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றேன்.

என்னுடைய சீனியர், சவுதி அரபியாவிற்கு, ஒரு மாதகால ஆன்மிக பயணம் சென்றுவிட்டாள். நான் அவளுக்குக்கீழ் பணிசெய்த குமாஸ்தா. அவள் சென்றவுடன் அவளின் வேலைகள் அனைத்தும் என் பார்வைக்கு வந்து விட்டன. அப்போது நான் துடிப்புமிக்க வேகமான பணியாள். போட்டி உலகத்தில் என்னை நான் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு விரைவாக வேலைகளைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக, முறையாக அட்டவணையிட்டு, அன்றைய வேலைகளை அன்றே முடித்து, அதன் அறிக்கைகளை அதிகாரிகளின் மேஜையில் அன்றைய பொழுதிலேயே வைத்து விடுவேன். அவர்களுக்கு என்னுடைய இந்த பாணி மிகவும் பிடித்துப்போனது. அதிகாரிகள் மறுநாள் காலை சந்திக்கவிருக்கின்ற `மீட்டிங்க்’கிற்கு இது பேருதவியாக அமையவும், எனது சீனியர் வருவதற்குள், என்னை அப்பதவிற்கு நிரந்தரமாக நியமித்தும் விட்டார்கள். விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த அவள் அதிர்ந்து போனாள். அவளை வேறு துறைக்கு (டிப்பார்ட்மெண்ட்) மாற்றல் செய்தார்கள், அங்கேயும் முறையாக அட்டவணைப்படி வேலை செய்யமுடியாமல் திணறி வேலையை விட்டே நின்று விட்டாள்.

இன்று அவள் என்றால், நாளை நாம் அல்லவா? அதனால்தான் பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் விடுமுறைகளைக் கழிக்க விடுப்பு எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள் போலும்.! மேலும் இங்கே மூவினங்கள் ஒன்றாக வாழ்கிறோம். பேச்சுக்குச் சொல்லலாம், நாங்கள் ஒற்றுமை அப்படி இப்படி என்று. நிஜத்தில் எங்களுக்குள் ஒருவித மௌனப்போர் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். குறிப்பாக; பணியிடம், பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உன்னை நான் மிஞ்சுவேன், என்னை உன்னால் மிஞ்ச முடியுமா? என்கிற போட்டிகள்தான் இன்னமும்.

ஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டுமென்கிற வெறியில், உன்னைவிட நான் ஒசத்தி என்கிற போராட்டத்தில், வேட்டைக்காரர்கள் போல் செயல்படுவதால், விட்டுக்கொடுக்க மனமில்லாமல், இறுக்கிப்பிடித்துக்கொண்டு இறுக்கமாகவே வாழ்ந்து வருகிறோம். இதுதான் இந்த ஆய்வின் பின்னணி.   

வெள்ளி, நவம்பர் 09, 2012

வியாழன், நவம்பர் 08, 2012

ஆயுள் கைதி

சுற்றிலும் மாடமாளிகைகள்
சுதந்திர மனிதர்கள்
சுற்றுலா செல்லும் பயணிகள்
சுறுசுறுப்பாக இயங்கும் வாகனங்கள்
கேளிக்கை சுற்றுப்புறங்கள்
கூவி விற்கும் வியாபாரிகள்
சுவரெல்லாம் அழகழகான ஓவியங்கள்
சூழல்களில் பரபரப்பு
மையத்தில் பிரமாண்டமான சிறைச்சாலை
அங்குள்ள கைதிகளுக்கு மட்டும்
ஆயுள் தண்டனை

புதன், நவம்பர் 07, 2012

சாரு மலேசிய வருகை

சாருவின் எழுத்துகள் நம்மை மிக உயரே பறக்கவைக்கும். பறப்போம் ஆனால் பறப்பதற்கு காரணம் இரண்டு இறக்கைகள் கொண்ட வெள்ளை தேவதைகள் அல்ல. அது கழுகு. நம்மைக் கொத்திச்செல்கின்ற கழுகு. அந்தக் கழுகு எங்கே எப்போது நம்மைக் கடாசும் வீழ்த்துமென்று நமக்கே தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு மயக்குகின்ற மாய வித்தை அவரின் எழுத்துக்களில் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மண்ணைக்கவுகின்ற சமாச்சாரங்களும் இருக்கும்.

வசீகர எழுத்திற்குச் சொந்தக்காரர் சாரு. அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது நமது உள்ளுணர்வுகளுக்குத் திரைபோடாமல் வாசிக்கவேண்டும். அன்பு,காமம், ஆன்மிகம், காதல், பெண்ணியம், ஆணாதிக்கம் என எதுவாக இருப்பினும் அதே உணர்வில் தொடரவேண்டும். ஈகோவிற்கு காயங்கள் ஏற்படுகிற தருணத்தில் வாசகன் அவரை நிந்திப்பான். அந்த சந்தர்ப்பத்தில்தான் வசை பாடுகள் நிகழ்கின்றன. அது அவரது பலவீனமல்ல, நம்முடையதே.  

எழுத்தில், அவலமென்பதை அவர் எங்குமே போதிக்கமாட்டார். நம் நிலையிலேயே நாம் அவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். வாசிப்பு அனுபவத்தில்  மனம் பேசுகின்ற மனசாட்சி வாசகங்களை அசைப் போட்டுப்பார்த்துக்கொண்டு, பின்நோக்கிப் பின்நோக்கிப் பயணித்தால், அங்கே இருப்பது எழுத்தாளரான சாரு அல்ல, நாம்தான். இதை ஏற்றுக்கொள்ளாத வாசகன் சாருவை புறக்கணிக்கின்றான். ஏற்றுக்கொண்டவன் அவரைக் குருவாகப் பூஜிக்கின்றான்.

சிலர் சாருவை, அவர்களின் எண்ணங்களைக்கொண்டு மிக மோசமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வடிவத்திற்குள் நுழைந்துக்கொண்டு, `அவர் அப்படித்தான்’ என முடிவெடுத்து, அவரை வாசிக்காமல் இருப்பது, பேரிழப்பு என்றே சொல்வேன். அவரின் நாற்பது புத்தகங்களில், `காமரூப கதைகள்’ என்கிற ஒரு நாவலையாவது முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அல்லது அவரின் அகப்பக்கத்தை http://charuonline.com/blog/ வலம் வரலாம்.

உலக இலக்கியம் விரல் நுணியில். நல்ல வழிகாட்டி. வாசிப்பும் எழுத்துமே அவரின் வாழ்க்கை. அவரைப்பின் தொடர்பவர்கள் பெண்களாக இருந்தால் ஆண்களையும், ஆண்களாக இருந்தால் பெண்களையும் மதிக்கக்கற்றுக்கொள்வார்கள். சுயமரியாதை சுடர்விடும். எல்லாவற்றிலும் வழிகாட்டுவார். எல்லாமும் மக்கள் நலம் பெற சொல்லப்படுகின்ற கருத்துகள்தாம். நம்மை நாமே திருத்திக்கொள்கிற போதனைகளற்ற எழுத்து அவருடையது. அது ஒரு நுண்ணுணர்வு, அதைப்பற்றி அதிகமாகச் சொல்ல இயலாது

அவரைச் சந்திக்கின்ற இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அதே போல் அவரைச் சரியாக வாசிக்காமல் அவரைப் பற்றிய கேள்விகள் எதும் இருந்தால் கேட்டுவிடாதீர்கள்.. அவருக்கு எப்போதுமே சமூதாயத்தின் மீது ஒரு சீற்றம் இருக்கின்றது, அது எத்தகையது என்றால், எதையுமே சரியாகக் கற்காமல் கருத்து என்கிற பெயரில்  எதையாவது உளறிக்கொண்டிருப்பது. இதை அவர் முற்றாக நிராகரிக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரைத் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டதால், சாதரண வாசகியான அடியேனின் சின்ன  நினைவுறுத்தல் இது.

வருகை சிறப்பாக அமைய என் பிராத்தனைகள். எங்களின் நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. மகிழ்ச்சியாக வாருங்கள் சாரு. அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் விஜி.




செவ்வாய், நவம்பர் 06, 2012

லட்சியம்

ஒவ்வொரு வினாடியும்
அலட்சியமாய் நகர்கிறது
எனக்குள் எழும் போராட்டங்களை
லட்சியம் செய்யாமல்...

ஞாயிறு, நவம்பர் 04, 2012

மாவில் பெயர்


இன்று, குடும்ப சகிதம் முறுக்கு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். நான் அடுப்படியில்.. மகளும் அவரும் பிழிவார்கள். மகன் அடுப்படியில் வெந்துக்கொண்டிருக்கும்  என்னிடம் தட்டில் பேப்பரில் பிழிந்து அடுக்கியுள்ளவைகளைக்  கொண்டுவந்து கொடுப்பார், பல வருடங்களாக இதுதான் ரூட்டின்.

மாவு முடியும் தருவாயில், கடைசி மாவில் அவனின் பெயரைப் பிழிந்து எழுதி, அதைப் பொரிச்சு கொடுக்கச்சொல்லி அடம் பிடிப்பான். இது வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு..

அவர்களின் வேலையை விரைவாக முடித்து, எல்லாவற்றையும் பிழிந்து கொடுத்துவிட்டு, டி.வி முன் சென்று சாய்ந்துக்கொண்டார்கள் மூவரும். நான் அடுப்படியில் இன்னமும்..... பொரித்துக்கொண்டே வரும்போது, பிழிந்து வைத்திருந்த மாவுகளின் வரிசையில் இந்த வருடமும் SU இருக்கு. அவனின் பெயரில் முதல் எழுத்து. வயது பதினெட்டு...இன்னமுமா?  

வியாழன், நவம்பர் 01, 2012

சகலகலாவள்ளி உமாவுடன் ஒரு நேர்காணல்

வேதனைகள் சோதனைகளை எல்லாம் களைந்து சாதனை செய்தவர்களை   நேர்காணல் செய்வதுதான் பேட்டி.  ஆனால் இங்கே நான் எடுத்துள்ள  இந்த நேர்காணல் சற்று வித்தியாசமானது சுவாரஸ்யமானதும் கூட. 

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது. நான் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில், பலவேலைகளுக்கு மத்தியில், தீபாவளி பலகாரங்கள் செய்கிற வேலைகளையெல்லாம் தள்ளிப்போட்டுவிட்டு, எனக்காக இந்த பேட்டியை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய திருமதி உமாசெபஸ்தியன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியினை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

இவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளம், முடிந்த வரையில் கிளறியுள்ளேன். ஞாபகப்படுத்தி யோசித்து யோசித்து, நினைவுக்கு வந்ததையெல்லாம் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துள்ளேன் என்பதைவிட, மக்கள் புரிந்துகொள்கிற அளவிற்கு இதனின் உள்ளடக்கத்தில்  போதிய தகவல்கள் உள்ளன என்பதில் எனக்கு வெற்றியே.

எல்லா சாதனைகளிலும், வெற்றிகளிலும், முயற்சிகளிலும் வலிகள் வேதனைகள் நிறைந்திருப்பது சகஜம்தான். அதுவும் இவரின் வெற்றி என்பது பொது ஊடகங்களில் (பத்திரிகை, வானொலி,  தொலைக்காட்சி)  உடனே விளம்பரத்திற்குள்ளாகி அறிமுகப்படுத்தப்படும் என்பதால், இவர் பலரின் வெறுப்பான குத்தலான சூடான தாக்குதலுக்கு இரையாகின்ற நிலை ஏற்பட்டிருப்பினும், எல்லாவற்றையும் ஜாலியாக அலட்சியம் செய்து விட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகல பேர்வழி. நல்ல தோழி. இனிமையாகப் பாடுவார், நடனமாடுவார், ஒப்பனைக்கலையில் கைத்தேர்ந்தவர், பின்னல் தையல் கைவினைப்பொருட்கள் என பின்னி எடுப்பது, ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், வீட்டு அலங்கரிப்பில் கைத்தேர்ந்தவர், வித்தியாசமாக சமைப்பதில் வல்லவர், பலகுரலில் பேசுவார், நாய், பூனை, வாத்து, கோழி போல் சத்தங்களை எழுப்புவார், சரி வாருங்கள் இனியும் அறிமுகம் என்கிற பேரில் நீட்டி முழங்காமல், அவரின் சாதனை எனன என்பதனை அறிந்துகொள்வோம்.

*வணக்கம் உமா, உங்களைப்பற்றி சொல்லுங்கள். பெயர் ஊர், அம்மா அப்பா, திருமணம், குழந்தை..இப்படி?
என் பெயர் உமாபதி செபஸ்தியன் ராஜ்.  அம்மா திருமதி பூபதி நடராஜ். அப்பா இல்லை. ஒரு மகன். அவனின் வயது நான்கு.

*உங்களிடமுள்ள தனித்திறமைகள் பற்றி..., மக்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே.., பலகுரல், பிரபல பாடகிகள் போல் பாடுவது.. கண்டசால குரல்.. என் இன்னும்?
பாடுவது எனக்குப்பிடித்தமான ஒன்று. மேலும் மற்றவர்களை சிரிக்க வைப்பதும் எனக்குப்பிடித்தமானது. குரலை மாற்றி மாற்றிப்பாடுவேன். உங்களிடம் கூட பல முறை சீனர் போலும், பஞ்சாபி போலும், மலாய்க்கார பெண்மணி போலவும், வயதான பாட்டி போலவும் பேசியுள்ளேன். நீங்கள் கண்டு பிடிக்கவே இல்லை. ஒரு முறை போனில் உங்களைத் திட்டியுள்ளேன், நீங்கள் அரண்டு போனீர்கள்.. நானே சிரித்துக் காட்டிக்கொடுத்தாலொழிய உங்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை பல வேளைகளில் கண்டுள்ளேன். கண்டுகொண்ட பிறகு இருவரும் சிரிப்போம். அதுதான் என் நோக்கம். எல்லோரும் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும்.  பலகுரல்களில் பேசி பாடி பயிற்சி எடுத்து, முயன்று பார்ப்பேன். குழந்தைகள்போல் பேசுவேன். நாய் பூனை போல் கத்துவேன். டோனல்ட் டக் போல் பேசுவேன். கண்டசாலா குரலில் பாடுவேன். வாழ்க்கையை எப்போதும் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே என் பாலிஷி..  

*உமாசெபஸ்தியன் – மெரு கிள்ளான் என்றாலே, வானொலி தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒலிக்கும் ஒரு பெயர் அல்லவா.! உள்ளூர் தமிழ் வானொலி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்களின் முகமும் குரலும் பரிச்சயம். எப்படியென்று நீங்களே சொல்லுங்கள்.?
பெரிய பிரபலமெல்லாம் கிடையாது’க்கா. வானொலியும் தொலைக்காட்சியும் எனது உற்ற நண்பர்கள். தொலைக்காட்சியை விட வானொலி என் வாழ்க்கை. எங்கு சென்றாலும் காதில் `வர்க்மேன் பூட்டியிருப்பேன். வானொலி மட்டும், இரவு பகல் பாராமல் என்னுடனேயே இருக்கும். நான் வானொலியின் பரம ரசிகை என்றுகூட சொல்லலாம். பழைய புதிய ஹிந்தி தமிழ் பாடல்களைக் கேட்பதோடல்லாமல், அங்கே ஒலிபரப்பாகும் நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை இணைத்துக்கொள்வேன். கருத்துப்பகிர்தல், பலவிதமான போட்டி நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கெடுத்துள்ளேன். அற்புதமான பரிசுகளையெல்லாம் அதிகமாக வென்றுள்ளேன். பரிசுகள் ரொக்கமாகவும், விலையுயர்ந்த ஆபரணங்களாகவும், பொருட்களாகவும், பட்டுப்புடவைகளாகவும், லப்டாப், ஐபோட், கைப்பேசி என பலவடிவங்களில் என்னை நோக்கி வந்துள்ளன.  பலவற்றை முதல் நிலையிலேயே வென்றுள்ளேன். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரிசு நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிவிடுவேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கிறது. கவலைகள் வீட்டுப்பிரச்சனைகள் என எதுவும் என்னை அலைக்கழிக்காது. தொடந்து முயல்வேன், வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும்.. கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். இதன் மூலமும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இது எனக்குள் ஒரு வேகமான விவேகமான தேடலை விதைத்துச்செல்கிறது .    

*உங்களால் மறக்க முடியாத சவால் நிறைந்த ஒரு போட்டி என்றால்?
பாபாஸ் (பிரபல மசாலா நிறுவனம்) நடத்திய BABA's & U என்ற வரிகளை வித்தியாசமாக வரைந்து அனுப்பும் போட்டி.  இதில் நான் முதல் பரிசை வென்றேன். ரொக்கம் ரிங்கிட் மலேசியா ஆயிரம். பலர் கலந்துகொண்ட இந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது பெரிய அங்கீகாரமாக கருதினேன். தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் எனது புகைப்படம் வந்தது. பலருக்கு அறிமுகமானேன். உறவுகள் பலர் என்னைப் பாராட்டினார்கள். நண்பர்கள் உற்சாகமூட்டினார்கள்.

*அதிக பணம் அல்லது விலையுயர்ந்த பரிசுகளை வென்ற போட்டிகள் எது?
ஆஸ்ட்ரோ வானவில்  நடத்திய வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமே. அந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். வாரம் ஒரு கேள்வி என மொத்தம் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தப் போட்டிகளிலும் நான் பங்கெடுத்தேன். அதாவது நான், என் அண்ணன், கணவர் என மூவரின் பெயரிலும் நானே பங்கெடுத்தேன். அடித்தது யோகம், முதல் மூன்று நிலை பரிசுகளை நாங்கள் மூவரும் பெற்றுவிட்டோம். grand prizes எங்களின் மூவரின் பெயரில்தான் வந்துகொண்டிருந்தது. என்னால் இன்னமும் அந்த மகிழ்வான பரவசநிலையை மறக்கவே முடியாது. அனைத்துமே அற்புதமான பரிசுகள்.. முதல் பரிசு, இரண்டாவது பரிசு - 1800 ரிங்கிட் பெருமானமுள்ள கைக்கடிகாரம். மூன்றாவது பரிசு - 1300 ரிங்கிட் பெருமானமுள்ள ciacomo dinner set, 108pcs. எல்லாமும் எனக்கே என்றாலும் அண்ணனின் பெயரைப் பயன்படுத்தி எழுதிப்போட்டதால்கைகடிகாரம் ஒன்றை அவருக்கே பரிசாகக் கொடுத்து விட்டேன்.  

*நீங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி இல்லை, பணி செய்யும் பெண்மணி. இருப்பினும் உங்களால் எப்படி இது போன்ற   போட்டிகளுக்கு நேரத்தை ஒதுக்க முடிகிறது?
என்னிடமுள்ள திறமைகளை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும். மனிதனாகப்பிறந்து விட்டால் எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் தனித்திறமைகள் இருக்கும். அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மனதிற்கு உற்சாகத்தைக்கொடுக்கிறது. அற்புதமான பரிசுகளும் கிடைக்கிறன. வருட முழுக்க வேலை செய்தாலும் சில விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு நாம் பலமுறை யோசிப்போம், இப்படி கலந்துகொண்டு, அவைகள் நமக்கு பரிசாகக் கிடைக்கபெறும் போது, அது நல்ல யோகமே. பெரும்பாலும் நம் இனப் பெண்கள் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதற்குத் தயங்குகின்றார்கள். நான் கலந்துகொண்ட பல நிகழ்வுகளில், தமிழ் பகுதிபோல் மலாய், சீன, ஆங்கில பிரிவுகளில் அந்தந்த இனப் பெண்களின் பங்கேற்பு வியப்பை ஊட்டுகிறது. அதிகமானோர் பங்கு பெறுகிறார்கள். நம் பெண்களுக்கு தோல்வியைத்தாங்கிக்கொள்கிற சக்தியில்லையோ அல்லது போட்டி என்கிற விளம்பரத்தைப் பார்த்தவுடன், `ஆமாம்..கொடுப்பானுங்க இவ்வளவு காசு...., இவ்வளவு விலையுயர்ந்த பொருளை அப்படியே கொடுப்பார்கள் பாரு..என்கிற அலட்சியம் வேறு. இப்படிச்சொல்லியே நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் போனவர்களில் நீங்களும் ஒருவர்தானே அக்கா!?. பரிசு கிடைத்து விட்டது என்றவுன்.. ``அப்படியாஆஆ?’ என்று வாய்பிளப்பது.  இதுதானே நம் பெண்களின் நிலை.! சம்பந்தப்பட்ட நிறுவனம்அவர்களின் பொருட்களை விளம்பரம் செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். அதில் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான பரிசுகளை நாம் தட்டிச்செல்வதால்   நமக்கு என்ன கௌரவக்குறைச்சல் வந்து விடப்போகிறது. மெககெட்டு முயலணும், இதுவும் ஒரு சிலருக்குப்பிடிப்பதில்லை. எல்லாமும் சுலபமாக வந்துவிடும்மா என்ன..!!

*இந்த விளையாட்டுகளில், உங்களோடு போட்டியிட்டு தோற்றுப்போனவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? நல்ல திறமைசாலியான உங்களின் இந்த சிறப்புப்பங்கேற்பு சில வேளைகளின் பலரின் எதிர்ப்புக்குரலுக்கு ஆளாக நேரிடுகிறதே, அவற்றை எப்படி சமாளிக்கின்றீர்கள்?  
எனக்கு அறிமுகமான, தெரிந்த அன்பர்கள் வெற்றி பெற்றால் மனதார வாழ்த்துவேன், பாராட்டுவேன். ஆனால் எனக்கு என்று வரும்போது இந்த தாராள மனதைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது. `ஏன் நீயே பரிசு வெல்கிறாய்அடுத்தவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கலாமே? உனக்கு வேற வேலையே இல்லையா? இதே பொழப்புன்னு அலையுதுங்க..! என்று சொல்லி மனதைப் புண்படுத்துவார்கள். சில நட்புகள், எனது இந்த தொடர் வெற்றிகளைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் என்னிடம் பேச்சு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டு போய்விட்டவர்களும் உண்டுதான். போட்டி என்பது அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றிபெறுவது. பங்கேற்பது மட்டுமே நம் கையில், பரிசு வழங்குவது எல்லாம் தேர்ந்தெடுப்பவர்களின் கையிலேயே உள்ளது. என்னை யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்கள் என்னைத்தேர்தெடுக்கின்றார்கள் என்றால் என்னிடமுள்ள திறமைதானே முக்கியக் காரணம். இதற்காக பொறாமை கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.!எதைப்பற்றியும் கவலையில்லை. நம்மைக்கண்டு பொறாமைப்படுகிறவர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போறதில்லை. நம் வழியை நாம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

*கணவரின் ஒத்துழைப்பு பற்றி சொல்ல முடியுமா, அவரின் பெயரில் கூட பல போட்டிகளின் பங்கெடுத்துள்ளீர்களே..?
ஆமாம், பலபோட்டிகளில் அவர் பெயரில் நான் பரிசை வென்றுள்ளேன். ஆனாலும் அவர்தான் மேடையேறி பரிசைப்பெறுவார். அப்போது அங்கே கேட்கப்படும் கேள்விகளின் போது திருதிருவென விழிப்பார்.. நான் சிரிப்பேன். அவருக்கும் இப்படி பங்கேற்று பரிசை வெல்வது பிடிக்கின்றது. பலரை ஆர்வமூட்டுவார், கலந்துகொள்ளச்சொல்லி அலோசனை வழங்குவார். அவரின் மூலமாகக் கூட சிலர் என்னை அழைத்து, `இதில் பங்கேற்க வேண்டும், அதில் பங்கேற்க வேண்டும், வழிகாட்டுங்கள் உதவி செய்யுங்கள்என கேட்டுள்ளனர். நானும் உதவுவேன்.


*தமிழ் பள்ளிக்குச் செல்லாத உஙகளை தமிழின் பக்கம் இழுத்த்து எது, யார் என்று சொல்லமுடியுமா?
தமிழராய் பிறந்து விட்டு தமிழ் படிக்காமல் போனதே அவமானமான ஒரு செயல். தமிழ் பள்ளியில் அப்பா என்னைச் சேர்க்கவில்லை, அதற்காக அவரும் பலமுறை வருத்தப்பட்டுள்ளார். அப்பாவின் தூண்டுதலின் பேரில் மலாய் பள்ளியில் பயின்றுக்கொண்டே, தமிழ் வகுப்பிற்கு தவறாமல் செல்வேன். எனக்குக் கிடைத்த தமிழாசிரியர் திரு.பத்மநாதன் மிகவும் சுவாரிஸ்யமானவர். அவர் தினமும் எங்களுக்குக் கதைகள் சொல்வது வழக்கம். பெரும்பாலும் திகில் கதைகள்தாம். கதைகளை முடிக்கும்போது மர்மம் தொற்றிக்கொண்டிருப்பதைப்போல் முடிப்பார். கதையைத் தொடர்ந்து கேட்க வேண்டுமா? நாளையும் தமிழ் வகுப்பிற்கு வாருங்கள் என்று சொல்லி, எங்களை தொடந்து வகுப்பிற்கு வரவழைப்பார். அவரின் தூண்டுதலிலும், சொந்த முயற்சியிலும் நிறைய கற்றுக்கொண்டேன். அப்பா வாங்கி வரும் தமிழ் தினசரிகளை நாள் தவறாமல் படிப்பேன். அப்படியே வந்ததுதான் தமிழ் பற்று. மேலும் உங்களைப்போன்ற தமிழ் பற்றுள்ள நண்பர்கள் என்னைச்சுற்றி இருப்பதும், தமிழைத்தொடந்து கற்பதற்கு உந்துதலாக அமைந்து விட்டதும் வரப்பிரசாதமே.  
                             
*எழுத்துத்துறையிலும் கால் பதித்துவிட்டீர்களே அதைப்பற்றி..?
அதுவும் ஒரு விபத்துபோல் நிகழ்ந்து விட்டது. போட்டி நிகழ்ச்சி என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன், தமிழ் படிக்காத நான், என்னுடைய முழுமுயற்சியில் முதல் முதலாக ஒரு சிறுகதை எழுதினேன். முற்றிலும் அறிமுகமில்லாத புதிய எழுத்தாளர்கள் பங்குபெறுகிற ஒரு போட்டி என்றவுடன், உத்வேகம் மனதைக்குடைந்தது. பெரிய எழுத்தாளர்களிடம் போட்டி போடமுடியுமா என்ன? ஆக, முயன்றுதான் பார்ப்போமே என்று எழுதிப்போட்டேன். பிரசுரம் ஆனது, இரண்டாவது பரிசும் கிடைத்தது. 500ரிங்கிட், சுற்றுலா செலவிற்கான பற்றுச்சீட்டு அது. நானும் கணவரும் மீண்டும் ஒரு ஹனிமூன் சென்றுவந்தோம்.  அந்த சிறுகதையை எழுதுகிறபோது..  இதுக்கு எந்த `றர, ழளல, நனண, போடுவது? ச்ப்த்க்வருமா? என சதா அழைத்து உங்களை துன்புறுத்தியுள்ளேன் என்பதையும் மறக்கவேண்டாம். இவ்வேளையில் பத்திரிகை ஆசிரியர்களை நினைக்கும் போதும் பெருமையாகவே இருக்கின்றது. யாருடைய எழுத்துக்களையும் புறகணிக்காத ஒரு அற்புத ஆசிரியர்களை நாம் பெற்றுள்ளோம். எப்படி எழுதினாலும் திருத்திப்போட்டு பிரசுரித்து அங்கீகரிக்கின்றார்கள். எல்லோரும் எழுதவேண்டுமென்று மறைமுகமாக உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. இதை ஒவ்வொரு வாசகரும் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இப்போது எனக்கு எழுத்திலும் ஆர்வம் வந்துவிட்டது.

*அழகு போட்டியில் கூட பங்கேற்று `டாப் 10 ஆக வலம் வந்த்தைப்பற்றி.....
அக்கா என்ன வச்சு காமடி கீமடி எதும்...!!!! வம்பில் மாட்டி விட்டுடாதிங்க.. அது அழகு போட்டி இல்லை, சேலை அழகு ராணி போட்டி. அழகான சேலைக்காக கிடைத்த பரிசு அது. நான் அழகி என்றால் ஐஸ்வரியாராய் யாராக்கும்..!? நல்லா கிளப்பறாங்கய்ய்யா புரளிய.....

*மிக அண்மையில் கலந்துகொண்டு பரிசை வென்ற நிகழ்ச்சி எதும்?
டி.எச்.ஆர் வானொலியில் `தலதளபதிஎன்கிற போட்டியில் பங்கேற்று ரிங்கிட் மலேசியா ஐநூறை வென்றேன். அதனைத்தொடந்து `tesco தீபாவளி வாங்க பாடலாம்என்கிற போட்டியிலும் ரொக்கம் வென்றுள்ளேன். தீபாவளிக்கு செலவுகளுக்கு கூடுதல் வருமானமாக உதவுகிறது.  

*தீபாவளி வருகிறதே.. பல விளம்பரங்கள் போட்டிகளாக அறிமுகப்படுத்துவார்களே, கலந்துக்கொள்வீர்களா?
நிச்சயமாக. என்னால் முடியுமென்றால், வாய்ப்புகிடைத்தால் பங்கெடுத்துக்கொள்வேன்.

*இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது உங்களின் மனநிலை என்ன?
வெற்றி பெறும் போதும், எனது பெயர், குரல் ஊடகங்களை அலங்கரிக்கும், அப்போது நானும் பொதுவில் அங்கீகரிக்கப்படுகிறேன் என்கிற எண்ணம், உள்ளொளி சுடரைத்தூண்டும். இது அவசியமென்றே படுகிறது மனசிற்கு. மனசு மகிழ்ச்சியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*தொடர்ந்து முயற்சி செய்யவேண்டுமென்றால், பலரின் உதவி உங்களுக்கு அவசியமே. அந்த வகையில் யாரெல்லாம் உதவுவார்கள்? இந்த பயணத்தில் நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர்கள்?
நான் மலாய் பள்ளியில் பயின்றதால், தமிழை பிழையில்லாமல் எழுத வராது. சில போட்டிகளில் பங்கேற்பதற்கு தூய தமிழ் பயன்படுத்தவேண்டும். அப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உதவி புரிவார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்- ஷா ஆலம் விஜயா (ஸ்ரீவிஜி), கஸ்தூரி கிள்ளான். அக்காவின் மகள் திரேசா. தம்பி மனைவி புஷ்பவாணி, மைத்துனர் சேவியர் போன்றோர்கள் எனக்கு பெரிதும் உதவிய நபர்கள். அதுவும் கணவரின் தம்பி சேவியரோடு  சேர்ந்து பல முயற்சிகள் செய்து பரிசுகளை வென்றுள்ளேன். 

*இறுதியாக, இதுவரை நீங்கள் வென்ற பரிசுகளைப் பற்றிய பட்டியலை பகிரமுடியுமா..ஆட்சேபனை இல்லையென்றால்....?
நிறைய உள்ளனவே. நினைவுக்கு வந்தவரை பகிர்கிறேன். டர்பல் வெர்திக்க அன்றும் இன்றும் - 100ரிங்கிட். ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே - 50ரிங்கிட். சிலிமிட்டா டீ- இரண்டு இலவச பக்கெட் டீ பக்ஸ் மற்றும் ஒரு டிவிடி பிளேயரும் பிரஷர் கூக்கரும். ப்ரூ உங்கள் சாயிஸ் - 50ரிங்கிட். உன்னிமேனன் மேடை நிகழ்ச்சிக்கு - இரண்டு டிக்கட். சங்கீதா சலங்கை ஒலி. கிளாசிக் நிகழ்விற்கு டிக்கட் வென்றுள்ளேன். ஹெர்பல் டானிக் - 100ரிங்கிட்.  நூறுவெள்ளி காயத்திரி பட்டுமாளிகையின் சேலை. நூறுவெள்ளி ஸ்ரீகுமரன் பட்டு மாளிகையில் சேலை. வித்யா ஹேர் ஆயில் 100ரிங்கிட். பாபாஸ் சமையலுக்கு ஒரு சவால் - 3900ரிங்கிட்.  டீன் ஜூவலர்ஸ் - 250ரிங்கிட் பற்றுச்சீட்டு. திருச்சி மசாலா - 50ரிங்கிட் பற்றுச்சீட்டு. QBB நெய் 100ரிங்கிட். தெலிகோம் அழைப்பு போட்டி 50ரிங்கிட் டாப் ஆப்.  ஃபேர் க்ளோ- 100ரிங்கிட் பெருமானமுள்ள முக ஒப்பனை பற்றுச்சீட்டு. எவரிடே பால்மாவு 100ரிங்கிட். கண்டுபிடிச்சா காசு - 1000ரிங்கிட்.  பணம் பணம் பணம் போட்டி - 2000ரிங்கிட். (கணவர்தங்கைதம்பி) என எல்லோரையும் பங்கு கொள்ளச்செய்து வென்றேன். பாபாஸ் & யூ -100ரிங்கிட். அலாம் ப்ளோரா 100ரிங்கிட்.  ஐஸோடோனிக் டிரிங்ஸ் - 200ரிங்கிட். மெக்னம் டி.எச்.ஆர் - 100ரிங்கிட். மெக்னம் அறிவிப்பாளர்களுடன் விருந்து நிகழ்ச்சி போட்டி. தலதளபதி - 500ரிங்கிட்.  ஆஸ்ட்ரோ தங்கத்திரை - 1800ரிங்கிட் பெருமானமுள்ள ipad2. எம்.பி.லிங்கம் & சன்ஸ் - 100ரிங்கிட் அவர்களின் பொருள்களுக்கான பற்றுச்சீட்டு. டிரிங்ஹோ படம் வரையும் போட்டி - KFC கூப்பன். மிஸ்.நிஹார் - grand winner......... ம்ம்ம் இவ்வளவுதான் நினைவில்.

*வாசகர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கின்றீர்களா?
நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுவே உங்களின் அடையாளம்.
 

மிக்க நன்றி உமா.




   
   

செவ்வாய், அக்டோபர் 30, 2012

முடிச்சு

``ஹேய் லதா இன்னிக்கு நான் புது டிரஸ் போட்டிட்டு வேலைக்கு வந்திருக்கேன்’’

``என்ன தீபாவளி டிரஸ்’ஆ?, வாங்கியவுடன் போட்டிடணும் இல்லேன்னா தல வெடிச்சிரும் உனக்கு..!”

``அடிப்பாவி என்ன ஒரு வில்லத்தனம் உனக்கு..  சனிக்கிழமை தீபாவளி ஷாப்பிங் போனேன். எனக்கு டிரஸ் வாங்கணும்னு நினைக்கல, ஆனால் நீண்ட நாளாக நான் தேடிய ஒரு டிரஸ் கண்ணில் பட்டது. எப்போதுமே மற்றவர்களுக்கு ஷாப்பிங் செய்வேன். இந்த முறைதான் எனக்காகச் சென்றேன். பார்த்தவுடன் அந்த டிரஸ் மனதைக் கவரவும் உடனே வாங்கினேன்..  செம விலைதான். அழகா இருந்தது. போட்டுக்கொள்ளணும் போல் தோணுச்சு, போட்டுக்கிட்டேன். வாழ்க்கையில் என்ன இருக்கு? நினைத்ததை நிறைவேற்ற முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.!’’ இன்று காலையில் நிகழ்ந்த ஒரு பிரச்சனையைச் சொல்வதற்காக எனது உற்றதோழி லதாவை அழைத்திருந்தேன். அழைப்பை எடுத்தவுடன் பிரச்சனையைப்பற்றி பேசாமல், ஆடை வாங்கினேன், தீபாவளி ஷாப்பிங் போணேன் என, நீட்டி முழக்கினேன்.

`` சரி சரி..எஞ்ஜாய் பண்ணுப்பா..!” என்ன கலரு என்ன மாதிரியான ஆடை என்கிற கூடுதல் தகவல்களைப் பரிமாறிய பிறகு விஷயத்திற்கு வந்தேன்.

``காலையிலே ஒரு பிரச்சனை..லதா?’’

``என்னாலா, என்னாச்சு.. பெரியண்ணன் பொண்டாட்டி மீண்டும் வம்பிற்கு வறாளா?”

``அய்யே..குடும்பப்பிரச்சனை இல்லை.. ஆபிஸில்..’’

`` என்ன, கோழ் சொல்லி போட்டுக்கொடுத்துட்டாளா?..” வழக்கமான பிரச்சனைகளையே கிளறினாள் லதா.

``அதுவும் இல்லை லதா.. சரி யூகிக்காதே, நானே சொல்கிறேன்.. புதிய துணிகளை வாங்கியதும், பழய துணிகள் அலமாரியை அடைத்துக்கொண்டிருந்தது. நேற்று எல்லாவற்றையும் கழித்து, அலமாரியைத் தூய்மைப்படுத்தினேன். அப்போது சேராத பல நல்ல துணிமணிகளை ஒரு பையில் கட்டி ஆபிஸுக்குக் கொண்டு வந்தேன், கிளினிங் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிடலாமே என்று. பை பெரிதாக இருக்கவும், என்னால் தூக்க முடியல. சரி, அந்த கிளினரிடமே கார் கீ’யை கொடுத்து, காரில் இருந்து எடுத்துக்கொள்ளச்சொல்லலாமே என அவளைத் தேடினேன்..”

``அவளைக் காலையிலே தேடினால் கிடைப்பாளா..? அங்கேயும் இங்கேயும் போய் ஊர்கத பேசறவளாச்சே அவ.”

லதாவிற்கு இங்குள்ள நிலவரங்கள் பற்றி நன்கு தெரியும். ஏற்கனவே இங்கே வேலை செய்தவள் லதா. லண்டனில் இருக்கும் அம்மா நோய்வாய்ப்பட்டபோது, அங்கு சென்று அவரைக் கவனித்துக்கொள்வதற்கு, தொடர்ந்து சில மாதங்கள் விடுப்பு கேட்கவும், இதுபோன்ற நீண்ட விடுமுறைகளுக்காகான சட்டத்திட்டங்கள் இங்கே இல்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டதால், வேறு வழியில்லாமல்  அரை மனதோடு வேலை விட்டுச்சென்று விட்டாள். அவள் இங்கே வேலை செய்த போது நாங்கள் இருவரும் இணைபிரியா தோழிகள். ஆக, சில விஷயங்களைச்  சொன்னவுடன் புரிந்துகொள்வாள் என்பது கூடுதல் தகுதி. மேலும் எனது சில நடவடிக்கைகளில் ஏற்கனவே தொடர்பு இருப்பதால், மீண்டும் `தாத்தா பாட்டி’ கதைகள் எல்லாம் சொல்லி ஆவியை வீணடிக்கின்ற வேலையெல்லாம் இருக்காது. சம்பந்தமே இல்லாத சிலரிடம் சொல்லுகிற போது, அவர் யார்? இவர் யாரு? இது எப்போ நடந்தது? அது எப்போ நடந்தது? மொதல்லே இருந்து சொல்லு, புரியல... விளங்கல.. என வாட்டி எடுப்பார்கள். அதனால் நம்மோடு சில செயல்களில் கூடவே இருப்பவர்களிடம் தான் பிரச்சனைகளைப் பகிரவேண்டும். எல்லோரிடமும் என்றால், சக்தி விரையமாகும். உதாரணம் : இலக்கியம் பற்றி அறவே வாசிப்பு பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது போல்..!  ஒருவர் கிடைத்தாலே போதும். ஆனால் அந்த ஒருவர் கிடைப்பதுதான் அபூர்வம். அதுவே சிக்கல்.

``ஆமாம் லதா. கண்டீனில் அங்கே உள்ள வர்க்க்ஸிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள். நான் நுழைந்தவுடன் அந்த கண்டீன் காரி வாளுவாளுன்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டாள். என்ன கதை என்றால், இந்த கிளினர் அடிக்கடி அங்கே போய் கதை பேசுவதால், அங்கே வேலை செய்பவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் சாப்பாட்டில் உப்பு புளி மிளகாய் அதிகமாகப்போட்டு விடுகிறார்களாம். மெனெஜ்மெண்டில் அதிக கம்ப்ளெயின் போகிறது என என்னிடம் சொல்லி சத்தம் போட்டாள்.”

``அடியே கோவில்பட்டி வீரலட்சுமி சாரி விஜயலக்ஷ்மி, உடனே நீ என்ன பண்ணினாய்..!?”

``நான் என்ன பண்ணுவேன், எதையும் காது கொடுத்துக்கேட்காமல், பேசிக்கொண்டிருந்த கிளினரை அழைத்து, கார் கீ’யை அவளிடம் கொடுத்து, `காரில் துணிமணிகள் இருக்கு, போய் எடுத்துக்கோ’ என்று சொல்லி, அந்த கண்டீன்காரி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததை அவளிடம் சொல்லி, `இனி அங்கே போகாதே, பிரச்சனை வரும்’ன்னு மட்டும்தான் சொன்னேன். அவ்வளவுதான் என் பங்கு. அதற்கப்புறம் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ எனக்குத்தெரியாது. அந்த பொம்பள வரிஞ்சி கட்டிக்கொண்டு வந்துட்டா சண்டைக்கு காலையிலே... `ஏய், நான் என்ன சொன்னேன், நீ என்ன வத்தி வச்சே.. இங்கேயும் அங்கேயும் சொல்றதுதான் உன் வேலையா? அவ வந்து அங்கே கத்தறா. எங்க ஆயி ஆத்தா வரைக்கும் இழுக்கறா..ஆச்ச போச்சா’ன்னு சத்தம் போடறா அந்த மனுசி.”

``ம்ம்ம்..தேவதான்..அப்புறம்?”

`` நான் பொறுமையா.. `நடந்தது என்னன்னு நிதானமா கேளு.. சத்தம் போடாதே. போஸ் வந்திடப்போறாரு. பிரச்சனையாகும், இது வீடு இல்லே’ன்னு நிதானமா சொல்றேன் கேட்க மாட்டேன் என்கிறாள். இஷடத்திற்கு வாயிற்கு வந்தபடி கத்துகிறாள்.., சமாதனப்படுத்திப்பார்த்தேன், பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லோரும் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு என்னமோ ஒண்ணு மண்டைக்கு மணியடிக்க.. பொறுமையை எழந்துட்டேன் `ஏய், உனக்கு என்ன கீலாவா, சொல்றதைக்கேட்க மாட்டே, அவ வெளியூர்காரி எதாவது உளறுவாள், உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இப்போ, ஏன் என்னிடம் வந்து கத்துகிறாய்? உங்க போஸை அழைக்கவா? ஸ்டூப்பிட் இடியட், அறிவிருக்கா, இது என்ன உன் வீடா?, சண்டைப்போட ஆசையா இருந்தா, தெருவுக்க்ப்போ, உனக்கு மட்டும்தான் கத்த முடியும்னு நெனைக்கிறியா? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உம்மனசுல, நீ சொன்னதைத்தானே நான் சொன்னேன், வேறு எதாவது புதிதாக உளறினேனா?  தைரியம் இருந்தா பின்னாடி பேசாதே, போய் அவளுக்கு நேராக பேசு.. கூப்பிடு அவளை. நான் என்ன சொன்னேன் என்று அவளே சொல்லுவாள். லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு பவ்யமா வேலைக்கு வருவதால், என்னை என்ன லூசுன்னு நெனைச்சியா? பக்கா லொக்கலு நானு, இறங்கினேன்.. நாறிடும் பிஞ்சிடும் ஜாக்ரதை..’ன்னு கத்திட்டேன். ஆபிஸே குழாயடி மாதிரியாயிடுச்சு.., நான் என்னமோ அந்த பொம்பலைய அடிக்கப்போறதா எல்லோரும் நினைச்சுக்கிட்டு, என்னை இறுக்கிப்பிடிச்சுக்கிட்டாங்க.. `வேணாம் மேடம் விடுங்க விடுங்க’ன்னு.. கொடுமை’லா படு டென்ஷன்..”

``அய்யையோ.. அப்புறம்?” லதா ஆர்வமாக கதை கேட்டாள்.

`` ஆடிப்போயிட்டா அவ.. குரல் தாழ்த்தி, `இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க மேடம்’ன்னு முகமெல்லாம் வெளிறி பயந்துட்டா. இந்த பவ்யம் மொதல்லே இருந்திருக்கணுமா இல்லையா? வெட்கம் நம்மவர்களோட.. ச்சே.”

``கடைசியா என்னதான் ஆச்சு..?”

``ம்ம்ம்.. அந்த பொம்பளையோட போஸ் போன் பண்ணினான். நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். மன்னிப்பு கேட்டான். அவள திட்டியிருப்பான் போலிருக்கு.. காப்பி கலக்கி எடுத்துக்கொண்டு வந்து, `குடி குடி.. சாரி கீரி’ன்னு காலில் விழாத கொறையா மன்னிப்பு கேட்டா.. காப்பியும் வேணா ஒண்ணும் வேணா போயிக்கோ’ன்னு முகத்தைத்திருப்பிக்கொண்டேன். அழுதாள்.. எல்லாம் சரியாயிட்ட மாதிரி ஒரு தோற்றம் வந்தது. ஆனாலும் எனக்கும் ஒரு ` வார்னிங் மெமோ’ வந்தது .. ஆபிஸில் ரௌடித்தனம் செய்கிறேன் என்று..தேவையா இதெல்லாம் எனக்கு.. !!?”

`` விஜி, எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா திட்டுவ...!” பீடிகை போட்டாள் லதா.

``என்ன?”

``நீ போட்டிருக்கிற புதிய டிரஸ் உனக்கு ராசி இல்லை. சிகப்பு கலர் அசம்பாவித கலர். டேஞ்சர் கலர். இனிமே சிகப்பு கலர் டிரஸ் வாங்காதே.. நான் சொன்னா நீ நம்பமாட்டே. ஆனால் அதுதான் உண்மை. ப்ளீஸ் இனிமே அந்த டிரஸைப் போடாதே...’’

``நல்லா போடு முடிச்சு.. நீயும் உன் ஐதீகமும்.. லூசு..” முணகிக்கொண்டே போனை வைத்தேன்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

எல்லாமே தலைகீழ்



தீபாவளிக்கு curtain ஆடர் செய்து தைக்கக்கொடுத்திருந்தேன். பெரிய பிரபல  பேரங்காடியில் துணி வாங்கி அங்கேயே professional curtain  tailors களிடம் தைக்கக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்  எல்லாம் ரெடி என அழைப்பு வரவும், வேலை முடிந்தவுடன்  அவசர அவசரமாகச் சென்று எடுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு விட்டேன், நம்பிக்கைதான்.

இன்று நேரமிருக்கவும் அதை எடுத்துப்பார்த்தால், எல்லாம் தலைகீழ். தையல் சரியாக இல்லை..மேலும் கீழுமாகத் தைத்து, அலங்கோலமாக இருந்தது பார்ப்பதற்கு. கோபம், கோபம்.. காரணம் விலை மலிவு அல்லவே...

அழைத்தேன் அந்த கம்பனிக்கு. ஒரு மலாய் பெண்மணி அழைப்பை எடுத்தாள். பேசுகிற நான் தமிழ்பெண் என்று தெரிந்தவுடன் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் அழைப்பைக்கொடுத்தாள்.

தமிழ்ப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை எடுத்துக்கொண்டு வாருங்கள், சூப்பர்வைசர் இருப்பார், அவர் செட்டல் செய்வார் கவலை வேண்டாம், என்றார். எல்லம் சரியே, ஆனால் தையல்காரி யார்? என்று கேட்டபோது, `ஒரு நாட்டுக்காரிதான்’ என்றார் பாருங்கள். எனக்கு கடுமையான எரிச்சல். அவள் நாட்டுக்காரி என்றால் நீ யார்?  அவர்களை (மலாய்க்காரர்களை) சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்வதுதான் எங்க ஊரில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். பேசிக்கொண்டிருந்த விவரத்தை விட, இது இன்னும் கூடுதல் கடுப்பேற்றியது என்னை. நம்ம பெண்ணை கொஞ்சம் கண்டித்து, இனி மேல் அவள் நாட்டுக்காரி, இவன் நாட்டுக்காரன், என்கிற அடையாள அடைமொழி எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் வந்தேறிகள்தான். இப்போது இது நம் நாடு. அது எல்லோருக்கும் சொந்தம், என எச்சரித்து விட்டு,  தொலைப்பேசியை வைத்தேன்.

அதற்குள் என் மகன்.. `ஏம்மா எல்லார் கிட்டேயும் சண்டை போடறீங்க?’ என்றான். அவனும் என் கணவரும் ஒன்று. எதையும் தட்டிக்கேட்கக்கூடாது. பொருள்களில் சேதமென்றால், பரவாயில்லை பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமென்றே செய்தார்களா, எதோ தவறு நடந்திருக்கும் .. நாம் என்ன பர்ஃபெக்ட்’ஆ? என்கிற தத்துவமெல்லாம் பேசி, புதிதாக வாங்குவார்களேயொழிய ஒரு போதும் நியாயம் கேட்க படையெடுக்கமாட்டார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஆண்கள் இப்படித்தானா?

வியாழன், அக்டோபர் 25, 2012

பத்திய விடுதி

இன்று மதியம் வித்தியாசமான தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகப்பெரிய எண்ணிக்கையில் மின்சாரப்பொருட்களை வாங்க எங்களின் கம்பனி ப்ரொஜெக்ட் ஜெனரல் மானேஜரை சந்திக்க வந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வுயரதிகாரி உணவருந்திவிட்டு திரும்புவதற்கு வெகுநேரமானதால், என்னிடம் சில விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

கம்பனியின் உற்பத்திப்பொருட்களின் தரம் பற்றியும், எங்களின் கம்பனிப்பொருட்களை அவர் இதுவரையில் பயன்படுத்தியதில்லை என்றும், பொருட்களில் பிரச்சனை என்று வரும்போது, விரைவு சேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும், அதனின் உபரி பொருட்களின் விலை பற்றியும் அவைகள் சுலபமாக எங்கும் கிடைக்குமா என்பதையும், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது அதனின் கழிவு எத்தனை விழுக்காடு  வரை குறையும் என்பதனைப்பற்றியும் ஓர் அறிமுக உரையாடல் நிகழ்ந்ததுக்கொண்டிருந்தது எங்களுக்குள்.

நம்மவர் என்பதால் எனக்குத்தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொண்டிருந்தேன்.பேச்சுவாக்கில் கேட்டேன் `எதற்கு சார், இவ்வளவு ஏர்கோண்ட், டீவி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் (air purifier)  கருவிகள், புதிதாக ஹோட்டல் எதும் திறக்கவிருக்கின்றீர்களா?’.  ஒவ்வொன்றிலும் எண்ணிக்கை தலா அறுபது வரை ஆடர் செய்ய, பட்டியலை கையோடு தயார் செய்து வைத்திருந்தார்..

`CONFINEMENT CENTRE ஆரம்பிக்கவுள்ளோம். முதலில் வீட்டில்தான் சிறிய அளவில் செய்து வந்தோம், இப்போது பிஸ்னஸ் வளர்ச்சியடைந்து விட்டது, வீடு கொள்ளவில்லை. நிறைய பேருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது, ஆறு மில்லியன் செலவில் இந்த  CONFINEMENT CENTRE கட்ட ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாடி கடைவீடுகளைச் சேர்த்து வாங்கி முழுமையாக இதற்கே பயன்படுத்தி  அதைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றோம். கீழே முப்பது அறைகள், மேல் மாடியில் முப்பது அறைகள். எல்லா அறைகளிலும் ஏசி, டீவி, air purifier என பொருத்த உள்ளோம். கட்டும்போதே முழுமையாக இவற்றையெல்லாம் செய்துவிட்டால், பிரச்சனை குறையும், இல்லையென்றால் அதற்கென்று வரும் செலவு சங்கடம் இன்னும் அதிகமாகும்..’ என்றார்.



எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  `CONFINEMENT CENTRE?? அப்படின்னா என்ன சார்?’ கேட்டேன்.

`ஆமாம், இங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க, அதுவும் அநேகமா தமிழர்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். காரணம், இது சீனர்கள் மற்றும் மேலை நாட்டவர்களின் கலாச்சாரம். நமது அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்த செண்டர் பிரபலம். சீனாவிலும் பரபரப்பாக இயங்கிவருகிறது. இங்கே நம் நாட்டை எடுத்துக்கொண்டால், நான் தான் முதல் முதலில் பெரிய அளவில் ஆரம்பிக்கவுள்ளேன். சிலர் தங்கியிருக்கின்ற வீட்டை விரிவுபடுத்தி லைசன்ஸ் எதுவுமில்லாமல் பணம் சம்பாதிக்க இந்த சேவையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கேள்விப்பட்டவரை பெரிய அளவில் செண்டர் திறப்பது நானாகத்தான் இருக்கனும். என் மனைவியின் (சீனப்பெண்) அம்மா சீன நாட்டுவைத்தியத்துறையில் கைத்தேர்ந்தவர். அதுவும் அத்துறையில் அவர் தேர்ச்சிப்பெற்றவர் என்கிற சான்றிதழ் எல்லாம் கைவசம் வைத்திருக்கிறார். வீடுவீடாகச் சென்று, பிரசவித்த பெண்மணிகளுக்கு சீன மூலிகை உணவுகளைத் தயார் செய்வது, பிறந்த குழந்தைகளைப் பராமறிப்பது, மகப்பேறு காலத்தில் தாய் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் களைவது, தாயயையும் சேயையும் பாதுகாத்துக்கொள்வது, போன்ற பல வேலைகளை பல வருடங்களாகச் செய்து வந்துள்ளார். என் மனைவி நவீன மருத்துவத் தாதி. பல மருத்துவர்களிடமும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இது அரிய வாய்ப்பாகவே பட்டதால் இந்த செண்டரை ஆரம்பிக்க நானும் துணிந்து விட்டேன். முக்கால்வாசி வேலைகள் முடியும் தருவாயில், கூடிய விரைவில் திறப்புவிழா நடைபெறும் கலந்துக்கொள்ளுங்கள்..’ என, அவரின் பெயர் அட்டையை என்னிடம் வழங்கினார்.

இத்துறை எனக்குப் புதுமையாகவும் சுவாரிஸ்யமாகவும் இருந்ததால் மேலும் தகவலறிய.. `ஓ, குழந்தை பிறந்தவுடன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பத்தியமாக இருப்பார்களே, அந்த காலகட்டத்தில் தாய் சேய் போன்றவர்களைக் கவனித்துக்கொள்கிற நர்சிங் ஹோம் மாதிரியா? ’

`ம்ம்..ஏறக்குறைய அதுபோல்தான்..’

`அப்படியென்றால் நிறைய ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டுமே.!, அது என்ன லேசுபட்ட வேலையா? அந்த துறையில் கைத்தேர்ந்தவர்களை தேடி எடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டுமே.. கஷடம் இல்லெ..ம்ம்.!!’

`அப்படியெல்லாம் இல்லிங்க, அவங்க அம்மா இருக்காங்க, அந்த கால ஆயம்மா. என் மனைவி இருக்காங்க இந்த கால நர்ஸ், அதற்கு மேலே, பொதுவான உதவியாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பிரச்சனையில்லை. மெயின் வேலைகளை அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள், மற்ற மற்ற  உதவிகளை சாதரண வேலையாட்கள் செய்வார்கள்.’ 

மேலும் விவரமறிய..`எப்படிங்க, அங்கே வந்து பிரசவித்துக்கொள்வார்களா? ’

`அடடா, அது பிசவ செண்டர் இல்லிங்க. எப்படின்னா.. ஆஸ்பித்திரியில் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சில தாய்மார்களுக்கு பணம் இருக்கும், ஆனால் முறையாக பாதுகாப்பு வழங்குகிற உறவுகள் இருக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, குழந்தை பெற்றபின் எவ்வளவு வேதனைகளை ஒரு தாய் அனுபவிக்கின்றாள் என்று..! குழந்தையைத் தூக்கி பால் கொடுக்கக்கூட முடியாமல் சிரமப்படும் பெண்கள், ஆப்ரேஷன் மூலமாக குழந்தையைப் பிரசவித்த பெண்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவது, பிரசவம் முடிந்தவுடம் கடுமையான காய்ச்சல், பால்கட்டிக்கொண்டு வலி, பயங்கர முதுகுவலி, நரம்பு வலி, அடிபாதம் வலி போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. சில பெண்கள் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடுமென்று அமைதியாய் இருந்து விடுவார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் இவற்றிற்கெல்லாம் நாங்கள் நல்ல தீர்வு வழங்குவோம். வீட்டில் உள்ள யாவருக்கும் தொல்லை கொடுக்காமல், பெரிசுகளையும் துன்புறுத்தாமல், எங்களின் செண்டரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்..’

`நீங்கள் சொல்கிற தீர்வு என்பது?’ இன்னும் அதிகாரி வரவில்லை..பேச்சைத்தொடர்ந்தேன்.

`தாயிற்கு, நேராநேரத்திற்கு பத்திய உணவு சமைத்துக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியம் பேணுவது, நல்ல முறையில் குளிப்பாட்டுவது, சருமங்களைப் பாதுகாப்பது, உடம்பு பிடித்து விடுவது, நன்கு உறக்கம் கொள்ளவைப்பது. அதாவது குழந்தைகளை அவர்களின் அருகில் விடாமல் அவர்களை ஓய்வெடுக்கவைப்பது. சமசீர் உணவு வழங்குவது, அழுக்குத்துணிகளை துவைப்பது, மெல்லிசையில் தாலாட்டுவது, மூலிகை மருந்தளிப்பது போன்ற பராமறிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறும். குழைந்தகளுக்கும் அதே போன்ற சேவைகளை வழங்குவோம், தாயிடம் தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு பயிற்சி அளிப்பது, அமைதியாகத் தூங்கும் முறைகளைப் பழக்குவது, வேளாவேளைக்கு பால் அருந்தக்கொடுப்பது, நோய் வராமல் பார்த்துக்கொள்வது, முறையாகக் குளிப்பாட்டுவது, என அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வோம்...’ சொல்லிமுடித்தார், அவர் யாருக்காக காத்திருந்தாரோ அந்த அதிகாரியும் வந்துவிட்டார்.  இருவரும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தார்கள்.

எனக்கு ஆச்சிரியமாகவே இருந்தது. என்னன்னமோ சேவைகள். அந்த சேவைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடின.

குழந்தை பிறந்த மறுகணம் எவ்வளவு அவஸ்தைகள். அம்மா பாட்டிமார்கள் பார்க்கிறேன் என இன்னும் கூடுதல் கொடுமைகளையல்லவா கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நம்மை நிம்மதியாகவே விடமாட்டார்களே.!

``நாங்களெல்லாம் அந்த காலத்திலே..எ.. எ.. எ.. வேலைக்குப்போய் வந்து வீட்டிலே பெத்துபோட்டோம். காலையிலே பெத்துட்டு, மாலையிலே காண்டா போட்டு வாளியில் தண்ணி தூக்கியிருக்கோம். பத்தியமெல்லாம் கிடையாது, வெந்தத சாப்பிட்டு விதியேன்னு கிடப்போம்.. ஆத்துல போய் துணிதுவச்சு கொண்டுவரணும். பதினாறு இருபது பேருக்கு மூணு வேளையும் சமைச்சுப்போடணும், புட்டி பால் எல்லாம் கிடையாது, மார்ல சொறக்கிற பாலத்தான் ஆறு வயசு வரைக்கும் குடுப்போம்.. ம்ம்ம், இப்போ என்னாடான்னா, பார்க்க ஆளு இருக்கு, ஆனாக்கா வீட்டுல வேலை செய்யவே நோவுது இதுகளுக்கு.. அங்க வலி இங்க வலின்னு கத்தறாளுங்க.. தொட்டா குத்தங்கிறாளுங்க. பெத்த புள்ளய தூக்கமாட்டேகிறாளுங்க.. நடக்க முடியலங்கிறாளுங்க, ஒரு புள்ள பெத்துட்டு இப்படி பெருத்து கிடக்கறாளுங்க, கண்டதெல்லாம் திங்கணுங்கிறாளுங்க, எண்ணெயில பொரிச்சதெல்லாம் விலாசறாளுங்க, வாயக்கட்டமாட்டேங்கிறாளுங்க, நொறுக்குத்தீனி திங்கறாளுங்க... எஹேம்ம்ம்.. !!!’’ இப்படி அலுத்துக்கொண்ட பெருசுகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க தம்கட்டி வலிகளைப்பொருத்துக்கொண்டு மனவுளைச்சலில் உழன்று அமைதி காத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு செண்டர் அப்பவே இருந்திருந்தால், உடலை நன்கு தேற்றியிருக்கலாம்.. நினைவுகளை அசைப்போட்ட வண்ணம் கண்கள் எதையோ கணினியில் தேட, ஒரு மணி நேரங்கழித்து..

 `சரிங்க பேசியாச்சு..quotation கொடுக்கறேன் என்றிருக்கார். பார்ப்போம்.. அப்ப நான் கிளம்பறேன். எதுவொண்ணுன்னா கூப்பிடுங்க.. யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணுங்க, என்னுடைய பெயர் அட்டையை கூடுதலாக கொடுக்கிறேன், விசாரிப்பவர்களுக்கு கொடுங்கள், சரியா..!’ என்று சொல்லி விடைப்பெற்றவரை அழைத்து..

` பீஸ் எவ்வளவு வருங்க ஒரு மாசத்திற்கு?’

`நம்ம பணம் நாலாயிரத்தி எண்ணூறு (RM4,800) வெள்ளிங்க.. !’

@#$%^&

நல்லவேளை.. அம்மாவிற்கு நான் வெறும் நூற்றைம்பது வெள்ளிதான் கொடுத்தேன்.. என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி விட்ட  பாட்டிக்கு ஒரு புதுப் புடவை மட்டுமே..