வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

கருப்பு தினம்

22/8...

நாடு சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டோடு ஐம்பத்தேழு வருடங்கள். 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. 57ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 57 வருடங்கள் கடந்துவிட்டன.

எனக்கு எந்தப் பற்றும் இருக்காது. மதம்.மொழி, சமயம் இன்னபிற பற்றுகள் என எதுவும் என்னை நெருங்க முடியாது. ஆனால் எனக்கு நாட்டுப்பற்று அதிகம். எங்கு தேசியகீதம் ஒளித்தாலும் நான் எழுந்து நின்றுவிடுவேன். இதை யாரும் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. என் இரத்தத்தில் ஊறியது. அரசியல் தலைவர்கள் மேல் கோபம் இருக்கும்.. அரசாங்கத்தின் மீது கோபம் இருக்கும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அரசியல் கட்சிகள் மீது வரும்.. ஆனால் நாடு என்று வரும்போது.. எங்கள் நாடு எங்களின் சொத்து.

எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை நாடு சந்தித்திருப்பினும், கடந்த மாதம் நிகழ்ந்த ஒரு வரலாற்றுப்பிழையை எந்த பாவமும் அறியாத எம்மக்கள் எதிர்நோக்கி இருப்பது மனதிற்கு வேதனை. கனவுகளைச் சுமந்து ஆகாயத்தில்சிறகடிக்க எத்தனித்த எமது உறவுகளை சுட்டு வீழ்த்தி (MH17) தரைமட்டமாக்கி தவிக்கவிட்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் அதைப்பற்றிய தகவல்கள் ஊடகங்களை நிரப்பியவண்ணம். நாடே குழம்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக போராடி, நாளைதான் அந்த விபத்தில் சிக்குண்டவர்களின் பிரேதங்கள், யாரும் திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவிருக்கிறது.

நாடே சோகத்தில் மூழ்கும் நாள், நாளை.. (22/8) இன்றே அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவள் கண்ணீர் மல்க, ``நாளை கருப்பு ஆடைகள் அணிந்து வா.. ஒட்டுமொத்த மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாவ காரியத்தின் அடையாளங்களாக நமது சகோதர சகோதரிகள் இல்லம் திரும்புகிறார்கள். கனவுகளைச் சுமந்து மகிழ்வாகச்சென்று, சிதலமடைந்த நிலையில் தாய் மண்ணில் புதைபட புறப்பட்டுவிட்டார்கள்.. ஆகாயத்தில் ஆவிகள் உலவும் என்பார்கள்.. வெள்ளை மேகங்கள் பார்ப்பதற்கு சிலரின் உருவம்போலவே இருக்கும்.. நாளை வானத்தைப் பார்.. மேகங்கள் நமது உறவுகளின் தோற்றங்களை பிரதிபலிக்கின்றனவா என்று..’’ குமுறினாள்.. எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன..

இன்று ஒரு நாள், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கு கொள்வதற்காகவும், சவப்பெட்டிக்குள் அடைக்கலமாகி பறந்து வரவிருக்கின்ற நமது சகோதர சகோதரிகளுக்காகவும்.. ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நாட்டோடு நாமும் பங்குகொள்வோம். மரியாதை நிமித்தமாக...