சனி, செப்டம்பர் 15, 2012

விக்டோரிய ஸ்டேஷன் (Victoria Station)

ரம்லான் பெருநாள் தொடங்கி ஒரு மாதகாலம் முடிவுக்கு வருவதால், அதைக்கொண்டாடும் இறுதிகட்ட விருந்துகள்  கடந்த ஒரு வாரகாலமாக ஓயவேயில்லை எங்களின் அலுவலகத்தில். மதிய உணவு கொண்டுவரவேண்டாம் எங்களின் டிப்பார்ட்மெண்டில் விருந்து, வந்து கலந்துக்கொள்ளுங்கள் என்கிற மின்னஞ்சல் வந்த வண்ணமாக இருந்தது.

தினமும் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்ற விருந்துகளை விட, நேற்று கலந்துக்கொண்ட விருந்து எனக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. எங்களின் டிப்பார்ட்மெண்ட் ஏற்பாடு.

விக்டோரிய ஸ்டேஷன் என்கிற ஐரோப்பிய ரெஸ்டரண்டில் இந்த மதிய வேளை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு ஐரோப்பிய வகை உணவுகள். ஓரளவுதான், நம்மவர்களின் உணவுபோல் இல்லை. எப்பேர்பட்ட தங்கத்தட்டில் சாப்பாடு கொடுத்தாலும் வாழையிலையில் சாப்பிடுவதைப்போல் வராது. அது வேறு விஷயம். இருப்பினும் விருந்து என்று வந்து விட்டால் எல்லாவகை உணவுகளையும் ருசி பார்த்து உண்பதென்பது ஒருவித அனுபவமே.

அங்கே பரிமாறிய உணவுவகைகள் - Lobsters, fish & chip, chicken chop, beef chop, baked patato, corn stick, baked prawn, escargots, butter & bread, coffee, fruits juice  என இப்படிப் பலதரப்பட்ட உணவு வகைகள். உணவுகளின் சிறப்பு என்னவென்றால், எதிலுமே காரமில்லை, புளிப்பு இல்லை, அதிக கரிப்பு இல்லை, அதிகமான இனிப்பும் இல்லை, சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை. (இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழனை சாப்பிட வைப்பதென்றால் சும்மாவா.!) அதனால் இவையெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. விடுங்க.

உணவு ஒரு பக்கமிருந்தாலும், அந்த உணவு விடுதியின் சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பழைய பாணி ரயில் வண்டியின் பெட்டியில் அமர்ந்துக்கொண்டு சாப்பிடுவதைப்போன்ற உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.எங்கு பார்த்தாலும் பழைமை மாறாத தோற்றங்கள்.

1800களில் தொடங்கப்பட்டு இன்னமும் அதே பரபரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகப் பிரசித்திப்பெற்ற லண்டன் விக்டோரிய ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்ப கால நிலையைப் பறைச்சாற்றுகின்ற சூழலாகவே இருந்தது அந்த ரெஸ்டரெண்ட்.

பழைய வானொலிப்பெட்டி, கடிகாரம், நீர் கோதிக்கவைக்கும் கேத்தல், தொலைக்காட்சிப்பெட்டி, திசைகாட்டும் கைவிளக்குகள், புகைவண்டி நிலையத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள் என எல்லாமே பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. சுற்றிலும் உள்ள பொருட்கள் மின்சாரம் இல்லாத பழைய காலத்தை நினைவுக்கூர்ந்தன.

ஆரம்பத்தில் எனக்குப்புரியவே இல்லை. ஏன் இந்த விக்டோரிய ஸ்டேஷன் ரெஸ்டரெண்ட் இப்படி வித்தியாசமாக இருக்கின்றதென்று.! எங்களின் குழுவில் உள்ள சக பணியாளர் ஒருவர், லண்டனுக்குச் சென்றிருக்கையில் இந்த ரயில்வே ஸ்டேஷனை நேரில் கண்டுள்ளதால், அங்கே உள்ள சூழல் பற்றி எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். கூடுதல் தகவல் பெற, விக்கிபிடியாவில் காணலாம்.

# பி.கு : உணவுகளின் விலையும் அதிகம் இங்கே - ஃபைவ் ஸ்டார் ரேஞ்சில்#


நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு மேஜையில் அமர்ந்துக்கொண்டோம்.. சாப்பிட்டுக் கிளம்பும்போது எடுத்த புகைப்படம் இது.

பழைய பாணி ரயில் பெட்டியின் அருகில் நானும் என் சக பணியாளரும்.


நாங்கள் சாப்பிட்ட உணவுகளின் வகைகள். முதல் முதலில் இருப்பது ஒருவகை நத்தை. 


அந்த ரெஸ்டரெண்டின் உள்ளே உள்ள சில காட்சிகள். 

ஒரு கதை ஒரு விளக்கம்

அற்புதமான சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ளேன், நம் நாட்டிலும் பின்நவீனத்துவம் வளர்ந்துள்ளது என்பதனைப் பறைச்சாற்றும் ஓர் கதை இது, வாசித்துப்பாருங்கள், உங்களின் கருத்து எனக்குத்தேவை. என, எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவரும் இலக்கியத்துறையில் உள்ளவர்தான். அந்த சிறுகதையும் என் கைவசம் உள்ளது. இருப்பினும் அது வேண்டாம். தனி நபர் தாக்குதல் போலாகிவிடும்.

படித்துப்பார்த்தேன், என்னைக்கவரவேயில்லை அச்சிறுகதை. அழகான நடை, அற்புதமான தமிழ்.. அறவே ஆங்கிலக்கலப்படமில்லாத ஒரு கதைதான். இருப்பினும் அதில் ஒன்றுமேயில்லை.

முன்று பகுதிகளாகப்பிரித்து, அங்கேயும் இங்கேயும் தாவி, வாசகர்களை குழப்பி, முடிவு தெளிவில்லாமலும், கதையை எந்த கோணத்தில் வாசித்தாலும் கருவே தென்படாமலும் முடித்திருக்கின்றார் எழுத்தாளர். குழப்புவதுதான் பின்நவீனத்துவமா?, என்கிற என் கருத்தை, வழக்கம்போல் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நம்மவர்களுக்குத்தான் வெளிப்படை என்றால் பாகற்காய் போல் கசக்குமே.! முகஸ்துதியைத்தானே பெரும்பாலும் பால்பாயசம்போல் விரும்புவார்கள்.

`நான் நிறைய வாசிக்கின்றேன், என்னையே அவமதிப்பதைப்போல் உள்ளதே உன் கருத்து. அப்போ நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா(ளா)? இவ்வளவு காலம் எழுதுகிறேன் வாசிக்கின்றேன், எனக்குத் தெரியாதா, எது நல்ல கதை என்று..! ’ அப்படி மனதில் நினைத்திருக்ககூடும். ஆனாலும் சொல்லவில்லை. இருப்பினும், என்னிடம் மிக நாகரீகமாக ஒரு கோரிக்கையை வைத்தார்.

நீங்கள் எப்போது பார்த்தாலும் எல்லா சிறுகதைகளையும் நன்றாக இல்லை, அப்படி.. இப்படி என ஏதாவது குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்களே, உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த, ஒரு சிறுகதையைச் சொல்லமுடியுமா? காட்டமுடியுமா? அது எப்படி இருக்கு என்றும், என்னைக் கவர்கிறதா என்றும் பார்க்கப்போகிறேன், என்றார்.

நமக்குத்தான் அழியாச்சுடர்கள் கைவசமிருக்கே.. அங்கே நிறைய அற்புதமான சிறுகதைகளை அவ்வப்போது வாசித்துவருகிறேன். பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அற்புதமானவை. எதாவதொரு வகையில் நமக்குப் பாடம் புகட்டிக்கொண்டிருக்கும்.

அங்கே சென்றேன், சாரு எழுதிய முள் என்கிற சிறுகதையை எடுத்தேன், அந்த நபருக்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, லிங்க் அனுப்பினேன். இதைப் படித்து விட்டு கருத்து பகிருங்கள் என்று. ஒரு நாள் முழுக்க மூச்சு பேச்சே இல்லை.

மறுநாள், மெயில் வந்தது.. அந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே.! மீன்பிடித்தொழிலைப் பற்றி சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர், அதோடு அற்புதமான காதலையும் அங்கே இழையோடவிட்டிருக்கின்றார் அவ்வளவுதான், மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லையே, என்றார் பாருங்களேன், எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. என் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது.

எது காதல் என்பது கூட சரியாகத் தெரியாதவர்களுக்கு, அந்த சிறுகதையைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதினாலும், விளங்கிடும் பாருங்க...!

சரி, அது அவரின் புரிதல். அதை அப்படியே விட்டிடவேண்டியதுதான். நமக்கென்ன வந்தது.