வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.