புதன், ஜூன் 19, 2013

முதுமை

உடலின் நடுக்கத்தில்
நடக்கமுடியாமல்...

உற்கார்ந்தால்
எழமுடியாமல்

உணவுகளை
விழுங்க முடியாமல்
ஜீரணிக்க முடியாமல்....

பார்வைகள்
மங்கிய நிலையில்..

மூத்திர மல நாற்றத்தை
தாமே சகிக்க முடியாமல்..

தமது தேவை என்ன?
தாமே யூகிக்கமுடியாமல்...

பெற்ற பிள்ளைகளை
வதைக்கின்றோமோ...!
என்கிற பரிதவிப்பு ஒருபுறம்

மூளை மட்டும்
தெளிவான நிலையில்
உதிர்த்தது ஒரு வாசகத்தை
திருவாசகமாய்...

இருபது வருடங்களுக்கு முன்
அவருக்க வந்த
மாரடைப்பே மேல்...!!

பாம்பு

நேற்று இரவு மூணாவது வீட்டில் பாம்பு புகுந்துவிட்டது. பெரிய பாம்பாம்.! இந்த விவரம் எனக்குத்தெரியாது. இன்று காலையில் கைப்பேசியில் என் அண்டைவீட்டுக்காரர் கொடுத்திருந்த ஆறு மிஸ்ட் கால்ஸ் பார்த்தவுடன், அவருக்கு அழைப்பு விடுத்தேன். என்ன கதை என்று கேட்டால், பாம்பு மூன்றாவது வீட்டின் குசினியில் புகுந்துள்ளது, அதைப் பிடித்து அடிக்கப்போராட்டம் நடத்துகிறபோது அது இரண்டாவது வீடான இவர்களின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கிக்கொண்டதாம்.! இதைக்கேள்விப்பட்ட என் அண்டைவீட்டுக்காரர், எனக்கும் அழைத்துள்ளார்.

“சரி, உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்பு பதுங்கிக்கொண்டது என்கிறீர்களே, பிறகு ஏன், தூங்கிக்கொண்டிருந்த என்னை அழைப்பானேன்.?”

“எனக்கு ஒரே பயம். தூக்கமே வரவில்லை. பெரிய பாம்புங்க.. நாகப்பாம்பாம். விஷப்பாம்பு. நான்வேறு சிறுகுழந்தையை வைத்திருக்கேன்.. பயமிருக்காதா?”

“ஓ..அதுசரி, அந்த இரவு நேரத்தில் என்னை ஏன் எழுப்பினீர்கள்?”

“வீட்டுக்காரர் வேறு வெளியூர் வேலைக்குச் சென்றுள்ளார்..”

“ஓ..ஒகே, என்னை ஏன் அழைப்பானேன்..?”

“அதோட வால் பகுதி, என் கட்டை விரல் தடி.. அப்போ பாம்பு எவ்வளவு பெரிதாக இருக்குமென்று யூகித்துக்கொள்ளுங்கள்..!”

“அதுசரி சுசி, என்னை எதற்கு அந்த இரவு வேளையில் எழுப்பினீர்கள்?”

“அக்கம் பக்கத்தில் ஒரே அமளியா இருந்தது. உங்களைக்காணோமே என்று..”

“சரி.. அதுக்கு என்னை அழைத்து..!!?”

“இல்லை நீங்களும் கொஞ்சம் ஜாக்ரதையாக இருங்கள் என்பதற்காகத்தான்..”

“உங்கள் வீட்டில் பாம்பு நுழைந்ததிற்கு நான் ஏன் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்..!?”

“இல்லை.. நாம் மட்டும் தூங்காமல் போராடும்போது, உங்களுக்கு என்ன தூக்கம்வேண்டிக்கிடக்கு, அதான்...!!”

“ம்ம்ம்..இந்த பதிலுக்குத்தான் நான் காத்திருந்தேன்.”

இதுதான் சராசரி இந்தியன் குணம்.