புதன், மே 30, 2012

வாங்க பின்னாடி போவோம்

வாங்க ஒரு முப்பது வருடத்திற்குப் பின்னால் போவோம்.

அப்பொழுது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், வயது சரியாக ஞாபகத்தில் இல்லை இருப்பினும் அந்தக் காலக்கட்டத்தின் நிகழ்வுகள் அப்படியே மனதில் பதிந்து இருக்கின்றன.

கேஸ்சில்லோன் விளக்கு

அன்றைய காலகட்டத்தில் மின்சார வசதி எல்லா இடங்களிலும் இல்லை. பட்டணங்களில் மட்டுமே முழுமையான மின்சார உபயோகம் இருக்கும்.  கிராமம், எஸ்டேட், கம்பம் போன்ற இடங்களில் `கேஸ்சில்லோன்’  என்ற மண்ணெண்ணை விளக்கு தான் பெரிய அளவில் பயன் பாட்டில் இருந்தது

அந்த விளக்கை எரிய வைப்பதற்கு, அதில் நன்கு தேர்ச்சிப்பெற்றவர்கள் அதை ஏற்றி எரிய வைப்பார்கள். அதற்குச் சிறப்பான அணுகுமுறைகளைப்  பயன் படுத்துவார்கள். எங்களின் சித்தப்பா (நாங்கள் கூட்டுக் குடும்பவாசிகள்)  அந்த வேலையை நன்கு செய்வார். ஆனால், அதற்குள் அந்த விளக்கு எரிவதற்கு தேவைப்படுகின்ற அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைக்க வேண்டும்.


அதாவது, அந்த விளக்கை எரிய வைப்பதற்கு, துணி போன்ற ஒரு உரையைப் பயன்படுத்துவார்கள், அதை மெண்டல் என்று சொல்லுவார்கள். அதன் மேலே தொப்பிபோல் உள்ள அந்தக் கவசத்தை நீக்கிவிட்டு அதன் தலைப்பகுதியை வெளியே எடுத்தால், அந்த மெண்டல் துணி கட்டுவதற்கான இடம் இருக்கும். அந்த வெள்ளைத்துணியிலே சிறிய நூல் கேர்த்திருப்பார்கள், அந்த நூலை அதன் தலையில் லேசாகக் கட்டவேண்டும், கட்டியவுடன், அதனை ஸ்பிரிட் கொண்டு நனைத்து, அதன் கீழே சிறிய மூடி போன்ற வட்ட வடிவில் ஒரு தட்டு இருக்கும், அதில் கொஞ்சம் ஸ்பிரீட்டை ஊற்றி, (அந்த ஸ்பீரிட் ஊற்றிவைக்க ஒரு சிறிய குவளை  இருக்கும், அதுவும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்) அதை மூடிவிடவேண்டும். பிறகு கீழே குடம் போன்ற குடுவையில், மண்ணெண்ணையை ஊற்றி, இறுக்கமாக மூடியபிறகு, மூடி போன்ற இடத்தில் ஊற்றப்பட்ட ஸ்ப்ரீட் இல் தீக்குச்சியைப் பற்ற வைத்து உள்ளே விட்டால், அந்த மெண்டல் துணி பற்றிக்கொள்ளும். அது முழுமையாக பற்றி முடிந்த போது, அதன் கீழே உள்ள பம்ப்’ஐ அடிக்கவேண்டும். அடிக்கும் போது மிதமான மண்ணெண்ணை கீழிருந்து மேலே பாய்ச்சுவதால், அது, அந்த மெண்டலின் வழி இறங்கி, அந்த மெண்டலை எரித்து முட்டைப்போல் செய்து வெளிச்சம் கொடுக்கும். அந்த வெளிச்சத்தில் தான் பலரின் இருள் அகன்றது.

முட்டை போல் இருக்கும் அந்த மெண்டல், உடையும் வரை பயன் படுத்தலாம். ஒளி மங்கினால், விளக்கை கீழே இறக்கி, மீண்டும் பம்ப் செய்வார்கள். வெளிச்சம் பொளேர் என்று வரும். அந்த வெளிச்சத்தில் தான் நாங்கள் படித்தோம்.

மண்ணெண்ணை, அதை ஊற்றும் புனல், ஸ்பிரீட் குவளை, கேஸ்சில்லோன் விளக்கில் உள்ள வட்டமான கண்ணாடி (அதையும் ஸ்பிரீட் ஊற்றி  தினமும் துடைக்கவேண்டும், சுத்தமாக) தீப்பெட்டி, பழைய துணி, மெண்டல் போன்ற எல்லாமும் சரியாக இருந்தால் தான், சித்தப்பா விளக்கின் அருகில் உற்காருவார், இல்லையேல், அன்றைய டூட்டி யாருடையது என்று கேட்டு, அடி விழும்.

அந்த பம்ப’ஐ சரியாக அடிக்காமல், அலட்சியமாக இருந்தாலும், விளக்கு வெடித்துவிடும். இதனால் பல வீடுகள் தீப்பிடித்துக் கருகிய நிகழ்வுகளும் உண்டு. கவனமாகக் கையாளவேண்டும்.!


இது வரவேற்ப்பு அறைக்கு மட்டும் தான். சமையலறை, படுக்கையறை,குளியலறை போன்றவற்றிற்கு மற்றொரு விளக்கு பயன் படுத்துவார்கள். அதுவும் மண்ணெண்ணை விளக்குதான். திரி பாதி வெளியே இருக்கும் மீதி மண்ணெண்ணையில் நனைந்து கொண்டிருக்கும்- அப்போதுதான் அந்த விளக்கு எரியும். இந்த விளக்கும் கடைகளில் வரிசையாக அடுக்கப்பட்டு பலவித வடிவங்களில் விற்பனை செய்வார்கள். இதற்கெல்லாம் முன்பு கிராக்கிதான்.

இப்போது, இது போன்ற விளக்குகளை எல்லாம், மியூசியத்தில் தான் பார்க்கலாம். யார் வீட்டிலும் இல்லை. நாடு வளர்ந்து விட்டது.

புடவை

எங்கு பார்த்தாலும், குத்துவிளக்கு புடவை பிரபலம். எங்களின் வீட்டிலும், எங்க அம்மா சின்னம்மா மார்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குத்துவிளக்கு சேலை வைத்திருப்பார்கள். சேலையின் எல்லாப் பகுதியிலும் குத்துவிளக்கு சின்னம் இருக்கும். `நானும் குத்துவிளக்கு சேலை வைத்திருக்கிறேன்’ என்பது முன்பு பெருமை போலிருக்கிறது!.

காதணிகள் கூட, தங்கக் குமிழ் தோடுதான் மிக மிக பிரபலம். அந்த தோடுகளை கூட்டு பிடித்து, நான் நீ, உனக்கு எனக்கு என்று வாங்கி வைத்திருப்பார்க்ள். திருவிழா, தீபாவளி என்றால், அந்தத் தோடுகளைப் போடாத நடுத்தர வர்க்கமே இல்லை என்பதைப்போல் எல்லோருமே அதை அணிந்திருப்பார்கள்.


டீவி, ரேடியோ

முன்பெல்லாம் டீவி ரேடியொவிற்கு லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். பணம் கொடுத்து அவைகளை புதுப்பித்து வைத்திருக்கவேண்டும். இது அரசாங்க உத்தரவு. எப்படியெல்லாம் வசூலித்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா!? திடீரென்று அவைகளைப் பரிசோதிக்க சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு கணமான புத்தகத்தைக் கையில் ஏந்திகொண்டு ஒருவர் வருவார் வீடுவீடாக.


அவர் வருகிறார் என்பது தெரிந்துவிட்டால் (பொதுவாக, தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்கு, தமிழர்தான் வருவார்) வீட்டில் இருக்கும் டீவி ரேடியோ’களை தாய்மார்கள் தடால்புடால் என்று எங்கேயாவது ஒரு மூலையில் பதுக்கிவைப்பார்கள்- காமடியாக இருக்கும் அதைப்பார்க்க.. அப்போது நான்  சின்னப்பொண்ணுதான் இருந்தாலும் கெக்கபெக்க’ன்னு சிரிப்பேன்.

ஆமை காடி

வாகனங்கள் அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. சாலைகளில் பார்த்தால் லாரி, பஸ் மற்றும் சில வாகனங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் சாலைகள் அமைதியாகவே காணப்படும். மோட்டார்கள் கூட குறைவுதான். எங்கோ ஒன்று இரண்டு காணலாம். இப்போது நிகழ்வது போன்ற சாலை விபத்துக்கள் அரிது, ஏன் இருக்கவே இருக்காது என்றும் சொல்லலாம்..

அப்போது இந்த ஆமைகாடி தான் பிரபலம். ஆரம்ப கால வோல்க்ஸ்வேகன் கார் இது. ஆமை போல் இருப்பதால், ஆமை காடி என்போம்.

மண்ணில் அ.ஆ.இ.ஈ

எங்களை, எங்களின் அப்பா ஒரு பாலர்பள்ளியில் சேர்த்து விட்டார். பணம் வாங்காமல், சேவை மையமாகத்திகழ்ந்த ஒர் பாலர் பள்ளி அது.  தரையில் உட்கார வைத்து, நம் முன்னே மண்ணைக்கொட்டி, பிஞ்சு ஆட்காட்டி விரலை ஒரு ஆள் அழுத்திப் பிடித்து, அம்மண்ணில் எழுதவைப்பார். `அ ஆ.. ஆஆஆ..’ வலிக்கும், இருப்பினும் சத்தம் போட்டுச்சொல்லவேண்டும். அப்படிச்சத்தம் போடும் போது, அவர்கள் நினைத்துக்கொள்வார்கள் நாங்கள் அ ஆ நன்கு படிக்கின்றோமென்று. ஆனால் கை விரல்கள் ரணமாய் வலிப்பதால் வரும் கதறல்தான் அது. மண் அங்கேயும் இங்கேயும் பரவி, உட்காரும் இடமெல்லாம் மண்ணாக இருக்கும்.. முட்டிகூட போடமுடியாத நிலையில் மண் முள்ளாய் குத்தும். அப்படியே நெளிவோம், அடிப்பாரு அந்த ஆளு.. (வாத்தியாராம்).  சரியாக எழுதவில்லையென்றால் கற்கள் கொண்ட மண்ணிலேயே முட்டி போடவேண்டும். கொடுமைதான்.

சாம்பல்

முன்பு வீடுகளில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அதில் தேங்கியிருக்கும் சாம்பலை அள்ளி வைத்துக்கொண்டு, அலுமினிய பாத்திரங்கள் தேய்ப்பார்கள் பாருங்க.. அப்படியே பளப்பள’ன்னு ஜொலிக்கும். யார் விட்டில் உள்ள பாத்திரங்கள் அதிகமாக மினுமினுக்கும் என்கிற போட்டி வைத்தால், நம்மவர்கள்தான் முதல் பரிசைத் தட்டிச்செல்வார்கள். எல்லோர் வீட்டிலும்  இதே யுக்திதான். அலுமினிய பாத்திரங்களில் கொஞ்சம் கரி ஒட்டி அசுத்தமாக இருந்தால் போதும், இது என்ன, ஆஷோ (சீனர்கள்)  வீட்டுப்பாத்திரம் மாதிரி இருக்கே என கிண்டலும் செய்வார்கள்.

காட்டுப்பண்டி(பன்றி,பன்னி)

மேல் வீட்டு கவுண்டர் தாத்தா, வாரம் ஒரு முறை, வேட்டைக்குச்செல்வார். அவர் வேட்டைக்குச்சென்றுவந்தால், எங்கள் வீட்டிற்கு காட்டுப்பன்றியின் தொடை ஒன்று வந்துவிடும். அப்படியே கருகரு உரோமங்களோடு இரத்தம் வடிய வடிய கொண்டுவந்து போடுவார்கள்.. இதனாலேயே அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டே, சண்டையாக இருக்கும். அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. அப்பாவிற்கு இவைகள்தான் இஷடம்.. ! சமைத்துக்கொடுக்காவிட்டால் அடி. (தண்ணியைப்போட்டு விட்டுதான், இல்லேன்னா ஏது வீரம்!?)

மற்றொரு மீன் வகையும் அம்மாவிற்குப்பிடிக்காது, ஆனால் அதுவும் அப்பாவின் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆற்றில் வாழும் அழுக்குக் கருப்புகெண்டையாம் (சாரி, சரியாகச்சொல்லவில்லை என்றால்)

இன்னும் இருந்தால் பகிர்வேன். இப்போதைக்கு இவ்வளவே. இதற்கும் அப்பால் சென்றால் இன்னும் சுவாரஸ்யமான விவரங்கள் கிடைக்கலாம். நான் சொல்வது இறுதி எழுபது மற்றும் ஆரம்ப எண்பது..

ஐம்பது அறுபது களுக்குசென்றால் சுவாரிஸ்யம் கூடலாம்...
யாராவது பகிருங்கள், எனக்கு மிகவும் விருப்பம் இது போல் பின்னோக்கிச்செல்வது.