புதன், டிசம்பர் 28, 2011

ஏன் பெற்றாய்?

ஏழெட்டு பிள்ளைகளை
ஏன் பெற்றாய்?

பரம ஏழை
இல்லை என்று தெரியும்
முடியாது என்று புரியும்
எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை
வருங்கால சேமிப்பும் இல்லை
ஓயாத கஷ்டமும்
பிச்சைக்கார புலம்பலும்..!!

ஏன் பெற்றாய்
வருடத்திற்கு ஒரு பிள்ளை?

பள்ளியில்
இலவச சத்துணவு உண்பதற்கும்
இலவச காலணிகளை வாங்குவதற்கும்
இலவச சீருடைகள் பெறுவதற்கும்
தீபாவளி பொங்கல்
இலவச பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கும்
ஏழை மாணவர்களின் வரிசையில்
முதலில் நாங்களும்..!

ஏன் பெற்றாய்
நிறைய குழந்தைகளை?

ஆசைப்பட்டது நிறைவேறாது
பலகாரங்களும் பதார்த்தங்களும்
பாதி பாதியாய், திருப்தியில்லாமல்..
பானையில் சோறு காலியென்றால்
பசியோடு படுக்க வேண்டியது தான்
கோபம் பீறிடும்..
உங்களுக்கு வந்து பிறந்தோமே
எங்களுக்குத் தலையெழுத்தா..!?

ஏன் பெற்றாய்
இத்தனைக் குழந்தைகளை?

சிறுவயதிலேயே
கனமான வீட்டு வேலைகள்
கஷ்டமான காட்டுவேலைகள்
புகையைக் கக்கும்
கண்களைக் கலங்க வைக்கும்
முகத்தைக் கறுமையாக்கும்
விறகடுப்பில் நித்தம்
போராட்டமே..!

ஏன் பெற்றாய்
வதவத என பிள்ளைகளை?

பைப் அடியில்
வெயிலில் காய்ந்து
நெஞ்சு எலும்பு தெரிய
தோம்பு தோம்பாக
தண்ணீர் நிறைப்பது
அன்றாட கடமை..
படிக்கக்கூட நேரமில்லாமல்
ஓய்ந்து களைத்து...

ஏன் பெற்றாய்
எங்களை?

ஏக்கமாக இருக்கும்..
பொறாமையாக இருக்கும்
தனியாக, செல்லமாக, சுத்தமாக, சுதந்திரமா..
செல்வச் செழிப்பில் வளரும்
குடும்பத்தின் ஒரே பிள்ளையைப் பார்க்க..

ஏன் பெற்றாய்
இந்த கொடுமைகளை நாங்கள் அனுபவிக்க...
என் தாயே!!!

கோபம் வந்தது அன்று..!!!

ஆனால் இன்று!

பிரச்சனையென்றால்
நானிருக்கேன், கவலைப்படாதேன்னு
ஓடோடி வரும் தம்பிகள்..

அய்யோ என்ன வாழ்க்கை!?
என அலுத்துக்கொள்ளும் போது
ஆறுதலாய் வருடி அரவணைக்க அக்காள்..

படித்ததைப் பகிர்ந்துக் கொள்ள
தமிழைத்திருத்திக் கற்றுத்தர
கலகலப்பூட்டி மகிழ்வைத்தர
தரமான தங்கைகள்!

சோர்வின் போது
கும்மாளமடித்து
குதூகலிக்க வைக்கும்
கடைக்குட்டி..!

இப்போதைக்கு
வாழ்வின் சுவாரிஸ்யமே
தோள் கொடுத்துத் தூக்கி விடும்
உடன் பிறப்புகள் தான்.!

தாயே..
இப்போது உன் மேல் கோபமில்லை
எவ்வளவு போராட்டங்களை
நீ சந்தித்திருந்தாலும்..
நோய் நொடியில்லாமல்
கண்டிப்புடன்
கண்ணின் இமைபோல்
எங்களைக் காத்து வளர்த்து
கரை சேர்த்து விட்டாயே.. !

உன் பாதங்களை
முத்தமிடுகிறோம்

நன்றி அம்மா.!

(தமிழ் நேசன் 2007- அன்னையர் தின சிறப்பு இதழில் வந்தது)
நன்றி ப. சந்திரகாந்தம் - முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர்.






கொஞ்ச நேரம் நில்லு

(மார்ச் 2010) மக்கள் ஓசையில் பிரசுரமான குட்டிக்கதை
நன்றி மக்கள் ஓசை திரு. இராஜேந்திரன் -
ஞாயிறு பெறுப்பாசிரியர் - திரு. சின்னராசு


அலுவலகத்தில் - ஆங்கிலத்தில் ஓர் உரையை நிகழ்த்த எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோர்க்கலாமென்கிற அகப்பக்கத்தை, குகூளில் (கணினியில்) ஆரய்ந்துகொண்டு, அதனின் குறிப்புகளை ஒரு ஏட்டில் குறித்துக்கொண்டிருந்தாள் ரேணு. பக்கத்திலலுள்ள தொலைப்பேசி அலறியது..

“ஹாலோ! ” மறுமுனையில் வனிதா.

“ஹாலோ ரேணு, நான் தான் வனிதா!”

அறிமுகம் செய்துகொண்டாலும், அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருவரும் நல்ல தோழிகள். ஹாலோ என்றவுடன், வனிதாதான் அழைப்பில் என கண்டுப்பிடிக்கும் அளவிற்கு, வனிதாவில் குரல் ரேணுவிற்குப் பரிச்சயம்.

வனிதா, அடிக்கடி ரேணுவுடன் தொலைப்பேசியில் பேசுபவள். குடுமபப் பிரச்சனைகள், வாழ்வின் குறை நிறைகள் என எதையாவது பகிர்ந்த வண்ணமாகவே இருப்பாள் வனிதா.

சில வேளைகளில், ரேணுவிடன் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டாலும், இருவரும் இணைபிரியா தோழிகளே! பள்ளிப் பருவம் தொடங்கி இன்றுவரை நட்பு தொடர்வதால், உரிமையோடு கடித்துக்கொண்டாலும், ச்சீ என திட்டிக்கொண்டாலும் நட்பை முறித்துக்கொள்ளாமல் தொடர்ந்தார்கள் தோழிகள்.

“பிஸியா ரேணு?”

“ இல்லை வனிதா, போஸ் எல்லோரும் போர்ட் மீட்டிங்க் போயிட்டார்கள், கணினியில் கொஞ்ச........” என்று ரேணு சொல்லி முடிப்பதற்குள், வனிதாவின் அலுவலகத் தொலைப்பேசி ஒன்று அலறியது.

“நில்லு கொஞ்ச நேரம்..!”
என்று சொல்லி, வந்திருந்த அழைப்பை எடுத்துப்பேசலானாள். “ஆங்.. சொல்லுங்க..ம்....ம்.....ம்.....ம்ம் ஒகே  ஒகே” என்று கூறிவிட்டு, ரேணுவிடம் வந்தாள்..

“ ஒரே மயக்கமா இருக்குதுன்னு, டாக்டர்கிட்ட போனேன் ரேணு, அவர் முழுமெடிக்கல் செஃக் ஆஃப் செய்துவிட்டு, குண்டைத் தூக்கிப்போ.....” முடிப்பதற்குள், மீண்டும் தொலைப்பேசி அழைப்பு.

“நில்லு கொஞ்ச நேரம்..”

“ ஓ..சொல்லுங்கம்மா, இந்தச் சொந்தக்காரங்களே அப்படித்தான், சரிம்மா.. நான் மாமா கிட்டே பேசறேன், வருத்தப்படாதிங்க.., நான் அப்புறம் கூப்பிடறேன்..” என்று சொல்லி மீண்டும் ரேணுவிடம்..

“பாரு’லா, அம்மாவே கஷ்டப்ப்டறாங்க - அவங்க கிட்டப்போய், ‘மாமா செத்துட்டாரு, மச்சான் செத்துட்டாரு’, கருமாதி செய்யணும், முறை செய்யணும், பணம் சேர் பண்ணுன்னு தொல்லை பண்ணுகிறார்கள். சொந்தக்காறங்களே இப்படித்தான்.. சரி, நம்ம விஷயதிற்கு வருவோம், எனக்கு பிரஷர் அதிகமாயிடுச்சாம்! நூற்றுஎண்பதைக் காட்டுகிறதாம்.. சுகரும் எட்டு ஆயிடுச்சு’லா.... அதான் கொஞ்சம் நடந்தாலே இப்போதெல்லாம் அதிகமா மூச்சு...”

மீண்டும் ஒரு அழைப்பின் அலறல்...

“ கொஞ்ச நேரம் நில்லு..”

“ஹாலோ, ம்ம்ம்.. என்னது..இன்னும் போய் சேரலையா? போன வாரமே அனுப்பிய ஷிப்மெண்ட்!! லொஜிஸ்டிஃக்ல செஃக் பண்ணுங்க... ம்ம்ம்.. இருக்கும் இருக்கும், கஸ்டம்ஸ்ல ஏதும் பிரச்சனையோ? தொலைஞ்சோம்.. ம்ம்ம்.. ஐ வில் கால் யூ லெட்டர்..”

மீண்டும் ரேணுவிடம்.. “ஷிப்மெண்ட் பிரச்ச்னையெல்லாம் என் தலையில், கொடுப்பது ஒரு வேலை, தலையில் கட்டுவது பல வேலைகள்.. ஓயாது’லா இவனுங்களோட... ” என அலுத்துக்கொண்டு, “ஆமாம்,நான் எங்கு விட்டேன்?” தொடர்ந்தாள் வனிதா.

”ஆங்.. அதிகமா மூச்சு.. பிளட் செஃக் பண்ணி பார்த்துட்டு, கொலஸ்ட்ரோலும் 5.6 க்கு வந்திருச்சாம்.. சாப்பாடு கண்ட்ரோல் பண்ணச் சொன்னாரு டாக்டரு, முடிந்தால் இரவில் சாப்பிட வேண்டாம், ஓட்ஸ் மட்டும் எடுக்கச்சொன்னார். கண்ட்ரோலா இல்லேன்னா...” மீண்டும் அந்தப்பக்கம் தொலைப்பேசி அலறல்..

“நில்லு கொஞ்ச நேரம்..”

“என்ன கண்ட்ரி கோட் தவறா? ... 0043ன்னு தனே எழுதினேன். ம்ம். ம்ம். இல்லையா? ம்ம் ம்ம்.. ஓ அது ஆஸ்திரியாவுடையதா..!! அப்போ, அஸ்திரேலியா கண்ட்ரி கோட்..?  ம்ம்ம் ஒகே, 0..0..6..1 ஒகே நோட் பண்ணிக்கிட்டேன், மாத்தி எழுதிடறேன். தெங்க்ஸ்..”

மீண்டும் இந்தப்பக்கம் ரேணுவிடம் தொடர்கிறாள் வனிதா...

“கண்ட்ரோல் இல்லேன்னா ஸ்ட்ரோஃக் வந்திடுமாம்.. நம்ம இருவருக்கும் ஒரே வயது தானே, உனக்கு நிலவரம் எப்படி இருக்கு? மெடிக்கல் செஃக் ஆஃப் ஏதும் போனியா? போய்ப்ப் பார்ர்ரு’லா...” என்றவுடன் மறுமுனையில் மீண்டும் அழைப்பு... எதோ சொல்ல வந்த வனிதாவை இடைமறித்த ரேணு...

“அம்மா தாயே கருணை காட்டு, புண்ணியவதி..  நீ, கொஞ்ச நேரம் நில்லு.. கொஞ்ச நேரம் நில்லு’ன்னு அரை மணி நேரமா புலம்பறீயே, ஏதாச்சும் உருப்படியா பேசினாயா? ஒரே ஆள் கூட நின்னு நிதானமா அமைதியா பேசிப்பழகி, மனதை ஒரு நிலையில் வைச்சுக்கப்பாரு.. சுகரும் வராது, பிரஷரும் ஏறாது, எந்தக் கருமமும் வராது.

இங்கே கொஞ்ச நேரம், அங்கே கொஞ்ச நேரம் பேசி, என் தலை 360டிகிரி சுத்திப்போச்சு.! ஓய்வா இருக்கும் போது கூப்பிடு, பேசலாம், இப்போது போன வை.! எனக்கு பிரஷர் வந்து ஸ்ட்ரோஃக் வர மாதிரி இருக்கு..!” என்றுச் சொல்லி, வனிதாவின் தொலைப்பேசி அழைப்பைத்துண்டித்தாள் ரேணு. !









கோபம் இருக்கு

எனக்கும் கோபம் வரும்...

குதூகலித்து மகிழ்ச்சியாக
இருக்கும்
பக்கத்து வீட்டுக்காரர்
மீதும்..

என்னைப் பற்றி
இல்லாது பொல்லாதெல்லாம் பேசும்
மாமியார் நாத்தனார்
மீதும்..

புதுப்புடவை நகைகள்
வாங்கும்
கொழுந்தன் பொண்டாட்டி
மீதும்..

வைர மூக்குத்தி
வாங்கித்தர தாமதிக்கும்
கணவன் மீதும்..

சீரியலில் வரும்
கதாநாயகியைச் சூழ்ந்து
கொட்டமடிக்கும் வில்லிகளின்
மீதும்..

எனது அறிவுரைகளைக்
கேட்டுப் பின்பற்றாத
நண்பர்கள் மீதும்..

முகத்தைக் கருமையாக்கி
சுட்டெரிக்கும் சூரியன்
மீதும்..

ஷாப்பிங் செல்ல இயலாமல்
விடாது பெய்யும்
மழையின் மீதும்..

முகச் சுருக்கங்களையும்
நரைமுடியையும்
வெட்ட வெளிச்சமாகக் காட்டும்
என் கண்ணாடி
மீதும்..

என் வருகையின் போது
உடனே சிகப்பாகும்
சமிஃக்ஞை விளக்கின் (traffc lights)
மீதும்..

தெருவில் அசிங்கமாக
உலாவும் சொரிநாய்
மீதும்..

தலைக்கு மேல்
சதா கரையும் காகங்களின்
மீதும்..

போகிற போக்கில்
என் காலை மோதுகிற
மேஜை நாட்காலி
மீதும்..

தொலைப்பேசி அழைப்பில்
சொல்லப்படும் எண்களைக்
குறிந்து வைக்க
பேனா காகிதம் கிடைக்காத போது
உலகத்தின் மீதும்..

இயலாமையை மறைக்க
வார்த்தைகளைத் தேடி
தினறும் போது
தாய் மொழியின் மீதும்..

என்னை மட்டும்
வாழ்வைக்காமல்
சதா சோதிக்கும்
இறைவன் மீதும்..

உங்களின் ஆதரவு வேண்டி
நான் போடும் பதிவுகளை
கண்டுங்காணாமல் போகும்
உங்களின் மீதும்..

கடுங்கோபம் வரும்
எனக்கும்.....!!!!

நானும் எழுதலாம்..
படைப்பாளியாகலாம்..
எழுத்தாளர்களுக்குக் கோபம்
அவசியமென்கிறார் சுஜாதா.

(எழுதுவதற்குக் கோபம் வேண்டும், என்கிற சுஜாதவின் வரியைப் படித்தவுடன், நான் பட்டியலிட்ட எனது கோபங்கள் இவை..)