ஞாயிறு, மார்ச் 24, 2013

குழந்தை மனசு

பாலர் பள்ளி மாணவி ஒருவளிடம், அவளின் ஆசிரியர், happy family என்கிற தலைப்பைக்கொடுத்து படம் வரைந்து கொண்டுவரச் சொல்லியிருக்கின்றார். 

மாணவி வீட்டிற்கு வந்து, படம் வரைகிறார். கலர் அடிக்கிறார். குடும்பத்தில் அப்பா,அம்மா, அண்ணன் இவள் என நான்கு பேர்தான். ஆனால் அவள் ஐந்து பேரை வரைந்து கலர் அடிக்கின்றாள். 

அவளின் அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், மகளின் புத்தகத்தை வாங்கி பரிசோதிப்பார். இந்த happy family படத்தைப்பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சி.

“என்ன நீ, நாம் நான்குபேர் கொண்ட குடும்பத்தில், ஐந்து பேரை வரைந்திருக்கின்றாய்?” என்று சொல்லி, ஐந்து பேரில் ஒருவரை அழித்துள்ளார்.

குழந்தை ஹிஸ்தீரியா வந்ததுபோல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழ ஆரம்பிக்கிறது. புத்தகத்தையெல்லாம் விட்டு வீசுகிறது, நான் இனி பள்ளிக்குப் போகமாட்டேன். நீ ஏன் அந்த ஐந்தாவது நபரை அழித்தாய். வரை வரை மீண்டும் வரை என ஒரே கூச்சல்.

தாயிற்குக் குழப்பம்.! என்னாச்சு இவளுக்கு? யார் அந்த ஐந்தாவது நபர் என்று கேட்டதற்கு..

காக்கா, அவளும் நம் குடும்பம், அவர்தான் எனக்கு சோறு ஊட்டுகிறார். அவரையும் சேர்க்கவேண்டும் என அடம் பிடித்து, பழையபடி வரைந்து கொடுத்தவுடன்தான், குழந்தை அமைதியானாளாம்.

காக்கா - இந்தோனிசிய பணிப்பெண். (உண்மைக்கதை)