செவ்வாய், அக்டோபர் 15, 2013

TAX

காலையிலே ஒரு கூத்து.

நான்கு நாட்களுக்கு முன் தமிழ்நாடு சென்று, இன்று காலையில்தான் ஊர் திரும்பினோம்.

திருச்சியிலே நான்கு நாள்கள். காலையில் கோவில் செல்வது, மூக்கப்பிடிக்க செட்டிநாட்டு உணவுகளை ஒரு கட்டு கட்டுவது, மாலைமுழுக்க ஷாப்பிங். வழி நெடூக பொறுக்கித்தின்பது. ஹோட்டல் வருவது, காப்பி டீ என ஆடர் கொடுத்து விலாசுவது. மீண்டும் இரவு ஷாப்பிங்....

ஷாப்பிங் என்றால் ஷாப்பிங் அப்படிப்பட்ட ஷாப்பிங். கவரின் நகைகள் தொடங்கி, சவரி கூந்தல் வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

நேற்றிரவு ஒவ்வொருவரின் லக்கேஜும் சும்மா டன் கணக்கில் ஆள் அடி உயரத்தில் நிற்கிறது.

அவரவர் அறைகளுக்குச் சென்று லக்கேஜ்’களைப் பார்த்துவிட்டு மிரண்டுபோனார் என் கணவர். ( `கூட்டத்தின்’ பாஸ்.)

பார்த்துக்கோங்க, ஒரு ஆளுக்கு இருபது கிலோ’தான். அதற்கு மேல் சென்றால் ஃபையின் கட்டவேண்டிவரும். அதுவும் தமிழ் நாட்டு கஸ்டம்ஸ்கள் கையில் மாட்டினால் கஸ்டம்தான். ஃபிளைட்டே பறந்துவிடுகிற அளவிற்கு யாரைப்பற்றியும் கவலையில்லாமல் லேட் ஆக்குவார்கள். மலேசியா என்றால், நமக்கு ஆள் இருக்கு. இங்கே யாரையும் தெரியாது.... அங்கே போ, இங்கே போ என்று ஆளாளுக்கு ஆடர் செய்வார்கள். கவனம். என்றவுடன், நிறுவையை வரவழைத்து, சரியாக நிறுத்து, எல்லோருக்கும் இருபது கிலோ வரும்படி சரி செய்துகொண்டார்கள். சாமார்த்தியமாக.!

திருச்சி ஏர்ப்போட்டில் தப்பித்தோம். யாருடைய லக்கேஜ்’யும் `திற, பார்க்கவேண்டும்’ என்று எந்த அதிகாரியும் சொல்லவில்லை. நிம்மதியுடன் விமானம் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம். இரவு ஏறி விடியற்காலையில் இறங்கினோம். இரண்டரை மணி நேர வித்தியாசத்தில் இருப்பினும், ஒரு நாள் இரவு முழுக்க ஏர்ப்போர்ட்டிலும், விமானத்திலும் ஆகாயத்திலும் கழிந்தது எங்களின் பொழுது.

விமானத்தில் எல்லோரும் தூங்கினாலும் எங்களுக்கு மட்டும் உறக்கமே வராது. பயம்..பயம்..பயம். கண்களை மூடினால், விமானம் தலைகீழாகப்பறப்பதைப்போன்ற பிரம்மை. இல்லாத கெட்ட கற்பனையெல்லாம் அப்போதுதான் வரும். வரணும், இல்லையேல் நாம் மனிதரல்ல.. :P

தூக்கக்களைப்பில் கோலாலம்பூர் ஏர்ப்போட்டில் இறங்கியவுடன், மழை வேறு கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. அங்கேயும் இங்கேயும் ஓடி, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடந்து, லக்கேஜ் எடுத்துக்கொண்டு கிளம்புகிறபோது, எங்களின் கஸ்டம்ஸ் ஆபிஸர்கள், எங்கள் அனைவரையும் ஒரு ஓரமாக வரச்சொல்லி, பேக்’கில் என்ன உள்ளது? என்ன வாங்கினீர்கள்? பில் இருக்கா? காட்டுங்கள்... என்று டார்ச்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்கம்மா ஒரு புறம், மலாயும் தமிழுமாக கலந்துகட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். எங்க வீட்டுக்காரர் ஒரு புறம் விளக்கம் கொடுத்துக்கொண்டு.! என் தங்கை, இந்த ஆபிஸர் தெரியுமா? எங்க மாமா. அந்த ஆபிஸர் தெரியுமா? எங்க உறவு. இவரைத் தெரியுமா? எங்க நண்பர்.. என கபடி விளையாடிக்கொண்டிருந்தாள். எனக்கோ.. வீட்டிற்குச்சென்று தூங்கலாம் என்கிற சிந்தனையில் மண் விழுந்துவிட்டதே.. என்கிற ஆதங்கம்.

தூக்கக்கலக்கத்தில் இருந்து பாருங்களேன். தூக்கத்தைத்தவிர வேறு எந்த சிந்தனையும் வராது.

என்னன்னவோ சொல்லிப்பார்த்தோம் அசரவில்லை ஆபிஸர்கள். அங்கேயும் இங்கேயும் அழைத்துப்பார்த்தோம். காலைவேளை, பொதுவிடுமுறை வேறா.! நண்பர்கள் உறவுகள் அனைவரும் தூக்கத்தில், தொலைபேசியை எடுக்கவேயில்லை.

பெரிய ஆபிஸரை அழையுங்கள் பேசவேண்டும் என்று கணவர் கூற, பெரிய ஆபிஸரும் வர. தர்க்கம் தொடர்ந்தது.. தமிழர்கள் என்றால் இளக்காரமா? எல்லோரையும் அனுப்பிவிட்டு எங்களை மட்டும் ஏன் நிறுத்திவைத்துள்ளீர்கள்?  நாங்கள் முதல் முறை செல்லவில்லையே.! பலமுறை சென்று வந்துள்ளோம். இப்போதுமட்டும் எதுக்கு டக்ஸ்.?, அதுவும் வாங்கிய பொருட்களின் விலையில் இருந்து முப்பது விழுக்காடு? மிக மிக அதிகம். குறையுங்கள். பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. என்று சொல்ல.. (பணிவான தொனியுடன்). பேசி கீசி, ஆக குறந்த அளவில் டாக்ஸ் பெற்றுக்கொண்டு, இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் விட்டார்கள் எங்களை.

எங்கம்மா - குழாயடி சண்டைக்காரியைப் போல், புடவையை வரிந்துகட்டுக்கொண்டு.. குரலை உயர்த்தி....!!!!! ம்ம்ம்ம், ஆபிஸர்களிடம் இதெல்லாம் செல்லுபடியாகுமா? அம்மாவின் அண்ணன் கூட கஸ்டம்ஸ் ஆபிஸர்தான். பதினைந்து வருடங்களுக்கு முன்.!  அவரே ஒரு ஹிட்லர். அவரிடம் சொல்லிவிடுவாராம்..அம்மா. அவருக்கு விவரம் சென்றிருந்தால், அனைவருக்கும் செம டோஸ் கிடைத்திருக்கும். காரணம் அவர் ஒரு ரூல்ஸ் மாஸ்டர்.

சரி அப்படி இப்படி பேசி கட்டணம் செலுத்தி வெளியே வருகிறபோது, என் தங்கை, எங்களிடம் வரி வசூல் செய்த அதிகாரியின் அருகில் சென்று, `உங்க பேர் என்ன?’ என்று கேட்க. அவர், இந்தா பார்த்துக்கோ, பெயரை விட, டாக் நம்பர் முக்கியம். எடுத்து  மேலிடத்தில் புகார் செய்யவும் என்றார். மூடிக்கிட்டு விட்டா போதும்னு வந்திட்டோம்...