வெள்ளி, மார்ச் 16, 2012

எழுத்து

ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம். அது நாம் நினைக்கின்ற, செய்துகொண்டிருக்கின்ற அத்தனை விடங்களையும் நியாயப்படுத்திக்கொண்டே வருகிறது. நாம் மேலே ஆகாயத்தில் பறக்கின்றோம். சொல்ல முடியாத பரவசத்தில் சிறகடிக்கின்றோம். பாதியிலே நிறுத்தி, சில நண்பர்களிடமும் இப்புத்தகத்தைப்பற்றிச் சொல்லி பூரித்துப்போகின்றோம்.

தொடர்ந்து வாசிக்கின்றோம். திடீரென்று, ஒரு திருப்புமுனை,  நம்மையறியாமலேயே  ஒரு இருள் சூழ்கிறது, நெஞ்சில் லேசான வலி ஆரம்பமாகிறது, நிற்கவைத்து சாட்டையால் யாரோ நம்மை விடாமல் அடிப்பதைபோன்ற ஒரு உணர்வு வருகிறது. அதை குற்றவுணர்வாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.  அழுகிறோம், யாருக்கும் தெரியாமல். மனம் கனக்கிறது. வாழ்வை  திரும்பிப்பார்க்கின்றோம்,  புத்தகத்தையும் புரட்டிப்பார்க்கின்றோம். எடுகள் காற்றில் பறக்கின்றன. பேய் பிசாசுகள் நம்மை அமுக்குகின்றன. மூச்சு திணறுகிறது...

சரியென்று நினைத்த அனைத்தும் தலைகீழாய் புரள்கிறது. நாம் செய்து வந்த அனைத்துச்செய்களும் அருவருப்பாகிறது. இன்னும் மனிதனாக வாழ ஆரம்பிக்கவில்லையோ, என்கிற சிந்தனை  எட்டிப்பார்க்கத் துவங்குகிறது. தலைசுற்றுகிறது.

யோசிக்கின்றேன்... எப்படி, இப்படி மனித மனங்களில் நுழைத்து மனிதர்களைப் படிக்கின்றார்கள் இந்த இலக்கியவாதிகள்.!? என்கிற சந்தேகம் எழுகிறது. நாம் செய்து விட்ட, செய்கின்ற, செய்யத்துடிக்கின்ற சாட்சிகளற்ற அனைத்திற்கும் சாட்சிகள் யார் மூலமாகவோ எங்கேயோ இருக்கின்ற ஒருவருக்குச் சென்றுள்ளது. யார் அவர்? அட்டமா சித்திகள் கைவரப்பெற்றவரோ!? மந்திரவாதியோ? தெய்வத்தன்மை நிறைந்தவரோ.!? அப்படியே பிட்டுப்பிட்டு வைக்கின்றாரே நம் மனதில் உள்ளவைகளை.!

என் கூடவே இருக்கின்ற மனசாட்சியாக ஒலிக்கும் இந்த குரல் யாருடையது? எப்படித் தகவல் அங்கே சென்றிருக்கும்.? மறைவில் ஒளித்து, மனதில் மறைத்து, நினைத்து நினைத்து செய்யப்பட்ட அனைத்தும் வெட்டவெளிச்சமாக, யாரோ ஒருவரின் எழுத்து வடிவில்.! எப்படி? இதுதான் இலக்கியமா?

படைப்பாளிக்கு; படைப்பாளி என்று எப்படிப் பெயர் வந்தது?  இறைவனின் குணமிருப்பதாலோ? அடபோங்க, இறைவன் எங்கு இருக்கிறார்? ஒரு படைப்பை உருவாக்கி,  மனிதனாக வாழாத மனிதனின் மனிதத் தன்மையை மீட்டெடுக்கும் படைப்பாளி தான் இறைவன். படைப்பாளிதான் குரு, படைப்பாளிதான் ஞானி, படைப்பாளிதான் தந்தை, படைப்பாளிதான் காதலன் (காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி - சைவ சித்தாந்தம் சொல்லும் காதல் இது).

புறையோடிக்கிடப்பதெல்லாம் புல்லட்’ஆல் சுடப்பட்டு, கீறி கிழித்துக்கொண்டு வெளியே வருகிறது!  சரியென்று நாம் செய்ததையெல்லாம் சரியல்ல என்கிற போது, மனம் எதையோ தேடுகிறது. அது தூக்குக் கயிறாகவும் இருக்கலாம் அல்லது கடிவாளமாகவும் மாறலாம்.  செய்கின்ற தவற்றைப்பொருத்து அல்ல, புரிந்துகொள்கின்ற மனப்பக்குவத்தைப் பொருத்தது அது. அந்த ஆயுதமும் வேறுபடலாம்  மாறுபடலாம்.   புரிந்துகொள்வோம்,  நம்மை நாமே குற்றவாளிக் கூண்டில் நிற்கவைப்போம்..! நாமே குற்றவாளி, நாமே நீதிபதி.

இலக்கியமே இறைவன் - இதுவே இறுதியான உறுதியான புரிதல்