ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

தப்பித்தல்

புதிதாக அறிமுகமான தோழி ஒருவள், எனக்கு தினமும் தொ(ல்)லைபேசி அழைப்பு விடுத்து எதாவது பேசுவாள். எனக்குத் தொலைபேசியில் வளவள பேச்சுப் பிடிக்காது. சில சமையங்களில் அவளின் தொலைபேசியை எடுப்பது கூட இல்லை. அப்படி எடுத்தால் கலகலன்னு பேசுவேன், எவ்வளவு வேலையாக இருந்தாலும்.

சென்றவாரம் நானும் அவளும் வெளியே சென்றுவந்தோம். அப்படிச்செல்லுகையில், உணவருந்த ஒரு கடையில் அமர்ந்தோம். உணவு ஆடர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்து யார் என்று பார்த்தேன்.  ஒரு இலக்கிய நண்பர் அழைத்திருந்தார். இலக்கியம் பற்றிப்பேசுவதற்கு அது, அதுவும் அந்தத்தோழியின் முன் அங்கே பேசுவது சரியாகப் படவில்லையாதலால், அழைப்பை எடுக்காமல் அழைப்புமணி நிற்கும் வரை பார்த்துவிட்டு கைப்பேசியை அடைத்துவிட்டேன்.

இக்காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்ட தோழி,

`ஏன் விஜி இப்படிச் செய்கிறீர்கள்? பாவம் இல்லையா. எதோ முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது, பேசுங்களேன்’ என்றார்.

`முக்கியமெல்லாம் ஒன்றும் இருக்காது. வழக்கமாக பேசுகிற நண்பர்தான். பேசலாம் பிறகு. என்ன இப்போ.!’ என்று சொல்லி எங்களின் பேச்சுக்கு வந்தோம். அவரால் என்னோடு தொடர்ந்து பேச முடியவில்லை.

`ச்சே, எடுத்திட்டு, நான் வெளியே இருக்கேன், பிறகு அழைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே. நண்பர்களை அவமதிக்கின்றீர்களே..’ என்றாள் அலுத்துக்கொண்டு.

எப்படிச்சொல்லி புரியவைப்பது என்பதால், `சரி சரி.. பிறகு அழைப்பேன். விடுங்க விடுங்க ..’ என்று சொல்லி சாப்பிட்டுவிட்டு வீடு வந்துசேர்ந்தோம்.

அன்று சந்தித்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக அவளிடமிருந்து அழைப்பே வரவில்லை.

எனக்கு ஓரளவு புரிந்தபோதிலும், இன்று மதியம் அழைத்துக்கேட்டேன்,

`என்ன ஒருவாரமாக அழைக்கவில்லை.?’

அவளின் பதில், `நீங்க பிஸியாக இருப்பீங்கன்னுதான் அழைக்கவில்லை...’