ஞாயிறு, மே 25, 2014

சமையல் கலை

என் தோழி ஒருவர் எப்போது பார்த்தாலும் என்னை வெளியே ஷாப்பிங் மால் சுற்றுவதற்கு அழைத்த மேனியாக இருப்பார். 

ஹூஹும் முடியாது. சமைக்கணும் மார்கெட் போகனும்.. சாமான்கள் வாங்கணும்.. என்று தட்டிக்கழித்துக்கொண்டே இருப்பேன். கிடைக்கிற வார இறுதி ஓய்வில், அங்கேயும் இங்கேயும் சுற்றுவது கூடுதல் சோர்வு.. எனக்கு இஷடமில்லை. 

என்ன உங்களுக்கு எப்போதும் சாப்பாடு நினைவுதானா..? சாப்பாட்டை விட்டு வேறு சிந்தனையே வராதா? கேட்டாள், என் மனதைக் காயப்படுத்துகிற நோக்கில்.

கொஞ்சங்கூட அந்தச்சொல் என்னைப் புண்படுத்தவில்லை. நான் காயப்படவில்லை. சொல்கிறவர்கள் சொல்லட்டும். நம்முடைய கடமை நம்முடையது. செய்யாமல் ஒத்திவைக்கின்ற பொறுப்புகளை வெளியே இருந்து வந்து யாரும் செய்து தந்துவிடப்போவதில்லை. ஆக, அவரின் புண்படுத்துகிற சொல் என்னை எதுவும் செய்யவில்லை.

இருப்பினும் ஒரு பெண்ணிற்கு வீட்டு வேலைகளை விட சமையல் செய்வது அவசியமான ஒன்று.

பசி எடுக்கின்றபோது, காரை எடுத்துக்கொண்டு, எங்கே சாப்பிடுவது, என்று கடை கடையாக ரெஸ்டரண்ட் ரெஸ்டரண்டாக அலைந்தவர்களுக்கு இந்த சிக்கல் கண்டிப்பாகப் புரியும். அப்படியே நல்ல கடைகள் கிடைத்தாலும், சாப்பிட்ட பிறகு எதோ கோளாறான உணவை உள்ளே தள்ளிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்.. ஏந்தான் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டோமே, என்கிற சிந்தனை வேறு உருத்தும்.

அதோடு, பசிக்குது, வீட்டில் என்ன சமையல்? என்று பிள்ளைகளோ அல்லது கணவரோ கேட்கிறபோது, சமைக்கவில்லை வெளியே சாப்பிடுங்கள், என்று சொல்கிற நிலை வந்தால், என் மனம் குற்றவுணர்வில் அலைமோதும். ச்சே எதாவது கிண்டி வைத்துவிட்டிருக்கலாமே..! எங்கே போவார்கள் சாப்பிட.! எதைத் திண்ணுத் தொலைப்பார்களோ..!! என்கிற குறுகுறுப்பும் படபடப்பும் இல்லாமல் இல்லை.

அதற்காவே சனி ஞாயிறு என்றால், மற்ற நாட்களைவிட நல்லபடி எதையாவது கூடுதல் சுவையுடன் சமைக்கலாமே என்று முயல்வேன். வெளியே சென்று வந்தால், எல்லாம் பாழாகும்.. சமையல்தானே.. ஒரு நொடியில் செய்துவிடலாம் என்கிற வாசகம் எனக்குப் பிடிக்காத ஒன்று. சமையல் என்பது நேரமெடுத்து அக்கறையோடு தூய்மையாக சுவைபட சமைத்தல் வேண்டும். சமைப்பதை முடித்துவிடவும் வேண்டும்.

மேலும் என் வீட்டில் எங்கே சென்று வந்தாலும், திருமண விருந்திற்குச் சென்று வந்தாலும், வீட்டில் வந்துதான் உண்பார்கள். அப்படி வீட்டில் உணவு இல்லையென்றால், ஃபாஸ்ஃபூட் ஆடர்கொடுத்து வரவழைத்து உண்பான் என் மகன். அது இன்னும் விரையம். எல்லாவிதத்திலும். இல்லையேல், பானை சட்டிகளை உருட்டி, மெஃக்கி செய்கிறேன் பேர்வழி என்று வீட்டில் உள்ள அனைத்துப் பத்துப்பாத்திரங்களையும் பயன்படுத்தி வெளியே தூக்கிப்போட்டுவைத்திருப்பார்கள். கழுவித்தான் வைப்பார்கள் . ஆனாலும் அதையெல்லாம் மீண்டும் நான் சுத்தம் செய்து அடுக்கவேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். இன்னும் அழுத்தமான சூழல் அது. அதற்காகவே சமையல் செய்யவேண்டும்.. மார்கெட் செல்லவேண்டும் என்று எனது நேரத்தை நான் எப்போதும் அதிலேயே கழிப்பேன்.

சரி எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கின்றாளே என்று, நேற்று நானும் அவளும் எங்கள் இருவருக்கும் பழக்கமாகியிருந்த மலாய்த் தோழியின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றோம். மதிய உணவு. நோன்பு நெருங்கிவிட்டதால், பல மலாய் அன்பர்கள் ஹும்ரா செல்வது வழக்கம். அதையொட்டி கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு செய்து நண்பர்களுக்கு விருந்துகொடுப்பார்கள்.

விதவிதமான உணவுவகைகளை வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் பசியை அதிகரிக்கின்ற உணவுகள் அனைத்தும்.

நான் வீட்டில் சமைத்து முடித்துவிட்டுத்தான் சென்றேன். காரணம் மலாய் அன்பர்கள் வீட்டின் சமையல்களை நம்மால் சாப்பிட்முடியாது. குருமாவிலும் சக்கரை சேர்ப்பார்கள். நமக்கு அந்த உணவுகள் ஒத்துவராது. எல்லாம் இனிப்பாக இருக்கும்..

நான், சூடாக இருந்த டீ’ஐ மட்டும் எடுத்து இரண்டு கேக் துண்டுகளைத் தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தேன். தோழி தமது ஏழு வயது மகனோடு தட்டைப் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டிருந்தாள். இது வேணும்.. அது வேணும்.. இது வேணாம்.. உங்கள யார் இதைப் போடச்சொன்னது? எடுங்க எடுங்க.. என்று அவளைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தான். ஜூஸ் வேணாம், மிலோ வேணும்.. என்றான். மிலோ இல்லை.. என்றாள் தோழி. இல்லை அந்த அண்டியைக் கேளுங்க.. கேளுங்க.. என்று ஒரே போராட்டம். தாயும் மகனும் ஆங்கிலத்தில் பேசுவதால், அதைப் புரிந்துகொண்ட எங்களின் மலாய்தோழி, மிலோ கலக்கி எடுத்து வந்தாள். மிலோவையும் குடித்தபாடில்லை. ஜூஸ் வேணும்.. என்றான். எடுத்து வந்தாள். நான் வைத்துள்ள கேக் வேண்டும் என்றான். தோழி சொன்னாள், நீ முதலில் சோறு சாப்பிடு, நான் உனக்குக் கேக் எடுத்துவருகிறேன் என்று.. என் தோழியை சாப்பிடவே விடவில்லை அந்தப் பையன்.

நன்றாக சுவைத்துச் சாப்பிட்டான். கீழேயும் மேலேயும் கொட்டிக்கொண்டு. சாப்பிட்டு முடித்தவுடன். நான் காலியாக்கி வைத்துவிட்ட என் தட்டைப் பார்த்து அவனுக்கு அவ்வளவு கோபம். எனக்கு கேக் வேண்டும்.. எனக்கு கேக் வேண்டும்.. என்று நச்சரிக்க ஆரம்பித்தான்..

அடிவாங்கப்போற நீ.. நிறைய ஆட்கள் இருகாங்க.சும்மா இருக்கமாட்டியா.? என்று தாய் போராடிக்கொண்டிருந்தாள். என்னிடம் வந்து, நீதானே கேக் எல்லாவற்றையும் முடித்தாய், போய் எடுத்திட்டு வா.. போ.. டோங்கி.., என்று எனது முதுகிலேயே குத்த ஆரம்பித்துவிட்டான். தர்மசங்கடமாகிவிட்டது அவளுக்கு... சரி கிளம்புவோம் என்று இருவரும் இடத்தைக் காலி செய்தோம்.