ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

நர்சிங் ஹோம்

நேற்று ஒருவரைச் சந்திக்க அவரின் நர்சிங் ஹோமிற்குச்சென்றேன். அந்த நர்சிங் ஹோமின் முதலாளி அவர். அதை ஹோம் என்பதைவிட, முதியோர் இல்லம் என்று சொல்லலாம். 

சொல்லலாமா? என்று அவரிடமே கேட்டேன். ஹம் சொல்லலாம், ஆனாலும் இது முதியோர் இல்லமல்ல. நர்சிங் ஹோம்தான். என்றார்.

சரி வாங்க, நான் உங்களின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறேன் என்று கூறி, என்னை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சுற்றிக்காட்டினார். விளக்கமும் அளித்துக்கொண்டே.

இவர் இன்னார். இவரின் பெயர் இது. இவரின் நிலை என்ன. ஏன் இங்கே உள்ளார். இவர் ஒரு பிரபல மருத்துவர். இவர் ஒரு டத்தோ. இவர் கம்பனி முதலாளி... என, எல்லோரின் அறிமுகத்தையும் வழங்கியபடி நகர்ந்துகொண்டிருந்தார்.

அனைவரும் முதியவர்கள். ஒருவரைத் தவிர. அவர் கார் விபத்தில் உடல் செயலிழந்து சக்கரநார்க்காலியில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்தார். யாரையும் கண்டுகொள்ளாமல்...

முதலாளியே தொடர்ந்தார். நார்சிங் ஹோமிற்கும் முதியோர் இல்லத்திற்கும் உள்ள வித்தியாசம். நர்சிங் ஹோம் என்றால், மருத்துவமனைக்கு அடுத்த நிலை. மருத்துவமனை என்றால், வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி போகும் நிலை வரும். ஆனால் இங்கே அப்படி அல்ல. வருகிறவர்கள் சாகும் வரை இங்கேயே இருப்பார்கள். இங்கே மருத்துவர்கள் வருவார்கள். இங்கே உள்ள பணியாளர்களில் பெரும்பாலானோர் முறையான தாதிப்பயிற்சி பெற்றவர்கள். மருத்துவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்கள். எங்களிடம் மருந்தகமும் உண்டு. அனைத்து சேவைகளையும் எங்களின் பணியாட்களே அவர்களுக்குச் செய்து தருவார்கள். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இவர்களின் பிள்ளைகள் எங்களுக்குப் பணம் அனுப்பிவிடுவார்கள்.

நான் நோட்டமிட்டுக்கொண்டே, வலம் வந்தேன். இரவு நேரமாகிவிட்டதால், அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள். நாங்கள் ஒவ்வொரு அறையாக நுழைகின்றபோது, விழித்திருப்பவர்களிடம், ஒரு, ஹை, நலமா? குட் நைட்.. என்கிற வாசகத்தைச் சொல்லிவிட்டு, அடுத்தடுத்த அறைகளுக்குள் நுழைந்தோம். மிகவும் தூய்மையாக, ஒரு வித நறுமணத்துடன், ஜிலுஜிலு ஏர்காண்ட் வசதியுடன், சிறப்பாக அழகாக அமைக்கப்பட்ட அறைகள் அனைத்தும். அது ஒரு பிரமாண்டமான பங்களாவீடு.

பெரும்பாலும் சீனர்கள்தான் அங்கே.

பார்த்துக்கொண்டே வருகிறபோது, இறுதியாக, ஒரு தனியறையினுக்குள் நுழைந்தோம். அங்கே மூச்சுவாங்க ஒரு மூதாட்டி உறங்கிக்கொண்டிருந்தார். உறங்கிக்கொண்டிருந்தார் என்பதைவிட, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் உள்ளாராம். படுத்தப்படுக்கையாக. மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராம் அந்த மூதாட்டி.

அவரின் அருகில் சென்றேன். அங்குள்ள மேஜை ஒன்றில் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட ஒரு குழந்தை பொம்மை. அந்த பொம்மையின் வாயில் பால்புட்டி. அதினின் கைகளைத் தொட்டால், மிருதுவான குழந்தையின் தோல்போலவே இருந்தது. நிஜமான குழந்தைதான் தொடுவதற்கு, இருப்பினும் அது பொம்மை.

எதுக்கு சார், இந்த பொம்மை இங்கே. ? கேட்டேன்.

சிலநேரங்களில் அந்த மூதாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் கசியுமாம், அப்போது இந்தக்குழந்தை பொம்மையை அவரின் கைகளில் திணித்துவிட்டால், கண்ணீர் நின்றுவிடுமாம்..

எனக்குக் கசிய ஆரம்பித்தது.... கண்ணீர்.