புதன், மார்ச் 12, 2014

ஆஸ்பித்திரி

 “ அவங்க ஆஸ்பத்திரியில் இருக்காங்க, போய் பார்த்தியா?” என்கிற கேள்விக்கணை என்னை நோக்கி வருவது எனக்குப்பிடிக்கவில்லை.

எதுக்குங்க.??

அங்கேயாச்சும் அவங்க நிம்மதியா ஏர்காண்ட்ல தூங்கி எழட்டுமே. அங்கேயும் சென்று ஆறுதல் என்கிற பெயரில் எதுக்கு உயிரை வாங்குவானேன்.!?

`அதாங்க, நீங்க உப்ப குறைச்சிருக்கணும். அதாங்க, நீங்க சீனியைக் குறைச்சிருக்கணும். அதாங்க, நான் அப்பவே சொன்னேங்க வெத்தல பாக்கு நல்லதில்லன்னு.. கொறைச்சிருக்கணும்..’ என்று சொல்லி, ஓய்வாக இருப்பவர்களை எழுப்பி `குரைத்து’விட்டு வருவதில் எனக்கு உடன் பாடில்லை.

ஆஸ்பித்திரி என்றவுடன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது அண்மையில் மாமியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வந்தோம். விடியற்காலை மூன்று மணிக்கு மூச்சுத்திணறல். `ஐய்யோ அம்மா, குய்யோ முய்யோ’ எனக் கதறல்.

அம்புலன்ஸ் அழைக்கவா? என்றால், வேணாம். ஒய்..ஒய்..ஒய் என்கிற ஓசையுடன் வரும். விடிந்தவுடன் அக்கம் பக்கத்தில் பதில் சொல்லமுடியாது. வா, நாமே அழைத்துச்செல்லலாம், என்று, நான், கணவர், வேலைக்காரி என மூவரும் கிளம்பினோம்.

மருத்துவமனைக்கு காலை மூன்று பதினைந்துக்கெல்லாம் சேர்த்துவிட்டோம். சாலையில் வாகனங்கள் இல்லை. அதனால் சுலபமாக இருந்தது. விரைவாகச் சென்று சேர்ந்தோம்.

`என்ன பிரச்ச்சனை?’ மெடிகல் அஷிஸ்டண்ட் கேட்டார்.

`மூச்சுத்திணறல்.’

`இல்லையே, நல்லா இருக்கு, இப்போ.?’

`இல்லை, விடிய விடிய தூங்கவில்லை.. மூச்சுத்திணறல் என்று புலம்புகிறார்.’ கணவன் சொன்னார்.

`எத்தனை நாளா இந்த மூச்சுத்திணறல்.?’

`மூணு.’  நான்தான் சொன்னேன்

`இன்னிக்குத்தான் ஆரம்பம்.’ கணவன்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். மெடிக்கல் அஷிஸ்டண்ட் இருவரையும் பார்த்தார். அதாவது, இரண்டு நாள்கள் மூச்சுத்திணறல் என்றால் ஏன் இந்த அர்த்தராத்திரியில் எமர்ஜென்ஷி வாட்டிற்கு கொண்டுவருவானேன்.! காலையில் சாதாரண டிஸ்பன்சரிக்குக் கொண்டு சென்று மருந்து எடுக்கலாமே. என்பார்கள். அதனால் இன்று, இப்போதுதான் ஆரம்பித்தது, என்று சொன்னால்தான், உடனே அட்மிட் செய்துகொள்வார்கள்.

எங்கே அட்மிட் செய்தார்கள்.!? கதையைக் கேளுங்கள்..

மாமியை உள்ளே அழைத்துச்சென்றார்கள். நீங்கள் இங்கே நில்லுங்கள். என்று சொல்லி, கணவரை அழைத்து, மாமியின் உடல்நிலை குறித்த பழைய ரிப்போர்ட்’களைக்கேட்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

மணி நான்கு. நான் கொட்டாவி விட்டுக்கொண்டு உற்கார்ந்திருந்தேன். எமர்ஜென்ஷி என்பதால், ஓயாத விபத்துச் சம்பவங்கள் வந்து குவிந்தவண்ணமாக இருந்தன.. ஆட்கள் கதறி அழுதவண்ணமாக. காண்பதற்கே கலவரமாக இருந்தது அச்சூழல். எனக்கு மயக்கம் வருவதைப்போல் இருந்தது.  அப்போது என்னுடைய பள்ளித்தோழன் ஒருவர் அங்கே வந்ததைக் கவனித்துவிட்டேன்.

`என்ன லோகா, இந்த நேரத்தில்?’

`அம்மாவ நேத்துதான் பெயர் வெட்டி அழைத்துச்சென்றோம். மீண்டும் அதே பிரச்சனை. மூச்சுத்திணறல். அதான் கொண்டு வந்தோம். நீ ஏன் இங்கே?’ கேட்டார். மாமிகதையைச் சொன்னேன்.

`அப்படியா? வயதானவர்களை வைத்துக்கொண்டு பிரச்சனைதான் விஜி. பாவம் அவர்கள்.’ என்றார். அவருக்கும் கண்கள் எல்லாம் சிவந்து, மிகவும் சோர்வாகவே தென்பட்டார்.

`எத்தனை மணிக்கு வந்தே, லோகா.?’

`இரவு எட்டு இருக்கும்.!’

`ஐய்யோ, இன்னும் இங்கேவா வைச்சிருக்காங்க? வீட்டுக்குப்போகலையா நீ?’

`இல்லை விஜி. இன்னும் பெட் காலியாகலையாம். மணி எத்தனையாகுமென்று தெரியல.. ஹெம்ம்ம்..’ என்றார் சோர்வாக.

நான் கணவரை அழைத்து, ரொம்ப லேட் ஆகும் போலிருக்கு.! கேளுங்க நர்ஸிடம். என்று கூறினேன். அவர் நர்ஸிடம் எதோ பேசிவிட்டு, எங்களிடம் வந்து, கிளம்புங்கள், நான் உங்களை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன். லேட் ஆகுமாம்.! செஃக் செய்கிறார்கள். என்று சொல்லி எங்களைக் கிளப்பினார்.

நாங்கள் வீடு வந்து சேர காலை நான்கு முப்பது. கொஞ்ச நேரம் படுத்து எழுந்து, காலையில் வேலைக்குக் கிளம்பிவிட்டேன்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்தவண்ணமாகவே இருந்தேன். ஒவ்வொரு முறை அழைக்கின்றபோது, இன்னும் வாட் கிடைக்கவில்லை. இன்னும் வாட் கிடைக்கவில்லை. இதுதான் பதில். சரி, இரவு முழுக்கத்தூங்கவில்லை. வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு, பிறகு செல்லலாமே. என்று ஆலோசனை வழங்கினேன்.

அவர் வீட்டுக்குவந்து குளித்துவிட்டு தலை சாய்க்க, நான் வேலை முடிந்து வீட்டுக்கு வர, நேரம் சரியாக இருந்தது. மீண்டும் கிளம்பினோம், மருத்துவமனைக்கு.

நீ போய், வாட்டுக்குக் கொண்டு சென்று விட்டார்களா, என்று கேட்டுவிட்டு, எனக்கு ஒரு SMS அனுப்பு. நான் கார் பார்க்கிங்கில் காத்திருக்கிறேன், என்றார்.

மணி ஏழு. நானும் என் பணிப்பெண்ணும், எமர்ஜென்ஷி வாட்டில் மாமி இருந்த அறைக்குச்சென்றோம். அங்கே அவர் இல்லை. பதிவு செய்கிற நர்ஸிடம் சென்று, மாமியின் பெயரைச்சொல்லி கேட்டேன். Trauma வாட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். அங்கே சென்று கேளுங்கள், என்றார். Trauma வாட்டிற்குச் சென்றோம். அங்கே கையை விரித்து, உள்ளே சென்று கேளுங்கள், என்றார்கள். உள்ளே சென்று, அங்கே வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு நர்ஸிடம் விசாரித்தேன்.

`ஓ, அவரா? Menara Timor க்குக் கொண்டு சென்றுவிட்டார்களே.’ என்றார்.
அப்படியா? வாட் நம்பர் எனன? என்று கேட்டு தகவல் பெற்றுக்கொண்டு, கணவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறபோது, கணவர் என்பின்னே நிற்கிறார். என்னாச்சு? என்கிற கேள்வியுடன். பொறுமை இழந்த நிலையில்.

விவரம் சொல்லி, Menara Timor க்குச் சென்றோம். அதே எமர்ஜென்ஷி வாட்டின் வழி, கண்டீனைக் கடந்து மெனரா நோக்கிச்சென்று, லிஃப்டில் ஏறுகிறபோது, அது Menara Timor அல்ல, Menara utama. அப்போ மெனர தீமோர் எங்கே? என்று தேடுகிறபோது, அங்கே எழுதியிருந்த குறியீட்டு வழிகாட்டியினை நோக்கி நடந்தோம். நடந்தோம்.. நடந்துகொண்டே இருந்தோம் .. புரியல.. கடைசி கதவு வரை வந்துவிட்டோம். எங்கே செல்வதென்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், அதுவும் இல்லை. கால்கள் போன போக்கில் நடக்கிறார் கணவர். நானும் என் பணிப்பெண்ணும் அவர் பின்னால். சோர்ந்துபோனோம்.

ஒரு இடத்திற்கு வந்து மீண்டும் யூ டெர்ன் எடுக்க ஆரம்பித்தார். என்னால் பொறுக்கமுடியவில்லை. `நில்லுங்கள். நிறுத்துங்கள்..’. என்று சொல்லி, அங்குள்ள காவலாளி ஒருவரிடம் விசாரித்தேன். Menara Timor எங்கே இருக்கு? அவர் அழகாக வழியினைக் காட்டி, பக்கத்தில் இருக்கின்ற லிஃப்டில் ஏறி செல்லச்சொன்னார்.

வேகவேகமாக ஏறிச்சென்று மாமியின் அறையில் நுழைகிறபோது, விஸிட்டிங் ஹவர் முடிகிற நிலையில்...! பக்கத்து பெட்’யில் மற்றநோயாளிகள் தூங்கவேண்டும். அங்கே நாம் நின்று பேசுவது சரியல்ல. தொந்தரவு. கொஞ்ச நேரம் முகம் காட்டிவிட்டு, மீண்டும் இறங்கினோம்.
இறங்கி வந்த வழியிலேயே சென்று, ஒரு சுற்று சுற்றி கார் பாக்கிங் சென்று சேர்ந்தோம். என் பணிப்பெண்ணிற்கு கால்வலியே வந்துவிட்டது. கார் பார்க்கிங் சென்று சேர்ந்தபோது தான் தெரிகிறது, மெனார திமோர் வாசற்கதவருகேதான் கார் பார்க்கிங். ஆனால் நாங்களோ, சுற்றிச்சுற்றி, வந்த வழியிலேயே வந்து சேர்ந்தோம்... !!!

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாம் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், மருத்துவமனை சூழல் நம்மைத்தாக்கிவிட்டால், நாமும் மனநிலை பாதித்தநிலையில் உலவத் துவங்கிவிடுகிறோம்.

ஆகவே மருத்துவமனைக்குச் செல்வதென்றால், எனக்கு அலர்ஜிதான்..