சனி, பிப்ரவரி 22, 2014

நாய்கள் விற்பனைக்கு

கூண்டுக்குள் விடப்பட்ட நாய்
வாலாட்டிக்கொண்டே இருந்தது
எஜமானனைக் கண்டுபிடிக்க..

வியாழன், பிப்ரவரி 20, 2014

நிழலாய்....

பிரமுகர் வருகை
பெரிய ஆட்களின் முற்றுகை
பார்வை பட முண்டியடிப்பு
புகைப்படக்கருவிகளின் மின்னல் கீற்று
அங்கே நானும் இருந்தேன்
கண்ணாடி நிழலில்... 

புதன், பிப்ரவரி 19, 2014

இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு

பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை என்கிற செய்தி கிடைத்த அன்றைய காலைவேளையை நினைத்துப்பார்க்கிறேன்.

காலைத் துயில் எழுந்தவுடன் தலையைச் சொரிந்துகொண்டு வானொலியை முடுக்கிவிடுவது அப்போதைய அன்றாட கடமைகளில் ஒன்று. 

அன்றைய காலை செய்தி, பாதிநேரம் அவரின் படுகொலை பற்றியதுதான். 

கணவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார். அவருக்கு செய்தி தெரியாது. தற்போதைய சூழல்போல் கைப்பேசி இருந்திருந்தால், அவரிடம் சொல்லி ஆறுதல் தேடியிருப்பேன். பேரதிர்ச்சியாக இருந்தது இச்செய்தி.. படுபாவிகளா.. அழகிய முகத்தை வெடிவைத்துவிட்டார்களே.. என்று வேதனையாக இருந்தது.

ஐய்யோ.. என்ன கொடுமை. என்கிற வேதனை முனகலோடு வாசலுக்கு விரைந்தேன். எதிர்விட்டு பெரியவர் அவரின் வீட்டுவாசலில், மண்வெட்டியால் நிலத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.

விடியலை நோக்கி காத்திருக்கும் இருட்டிய காலைப் பொழுது அது. சுறுட்டோ சிகரட்டோ தெரியவில்லை, புகைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக அவரின் பூந்தோட்டத்தில் என்னமோ செய்துகொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

`பெரியப்பா.. பெரியப்பா..’

`என்னம்மா.. காலையிலே..’

`ரஜீவ் காந்தியை குண்டு வைத்து கொலை செய்துவிட்டார்களாம்..’

`யாரவன்?’

` நேரு பேரன். இந்திராகாந்தி மகன். இந்தியாவோட பிரதமர்.’

`அய்யோ.. என்னமா சொல்றே? அவரா? என்னாச்சு? அய்யோ. நிஜமாவா? யம்ம புரளியா இருக்கப்போவுதும்மா.. நில்லு நில்லு நான் பேப்பர பார்த்துட்டுத்தான் சொல்லணும் .. நம்ப முடியல.. கடவுளே. என்ன அநியாயமா இருக்கு..’ என்று முனகிக்கொண்டே, மண்வெட்டியை கோபமாக கடாசி விட்டு உள்ளே போனார் வேகமாக..

நான், பக்கத்துவீட்டில் பூஜை செய்ய வெளியே வந்த ரோஷியின் அம்மாவிடம்.. இது குறித்து மேலும் தகவல் அறிய பேச்சுக்கொடுத்தேன்..

`ஆமாம் என் மகன் சொல்லிக்கொண்டிருந்தார்.. ச்சே.. குண்டு வெடித்தது, அதுவும் தமிழ்நாட்டிலாம் .. நம்மவர்கள் வைத்த குண்டாம். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. எதும் செய்தி கிடைத்தால்.. சொல்லு.. நானும் சொல்றேன். கவலைதான்.. போ, வேலைக்குக் கிளம்பு..’ என்று சொல்லி, மணியடித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

மறக்கமுடியாத நாள். அன்றுமுழுக்க மலேசிய மண்ணில் இந்தச் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு அது அப்படியே அமுங்கிப்போனது.

முன்பு பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சிகள் கொண்டுவரும் செய்திதான்.. அதுகூட, இந்தியாவில் எப்படித்திரித்து செய்தி பகிரப் படுகிறதோ, அதே மாதிரிதான் இங்கேயும் வரும். கூட்டிக்குறைத்து எல்லாம் இருக்காது. ஒட்டுமொத்த அவலத்திற்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று செய்திகள் பரவலாக வந்துகொண்டிருந்தன. பிரபாகரன், நளினி போன்றோர்களின் பெயர் புகைப்படங்கள் அதிகமாக வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. நாங்களும் நம்பினோம். காரணம் உண்மைச் செய்திகளைவிட, பரபரப்புச்செய்திகள்தான் அதிகம்.

தமிழ்நாட்டில் அப்போது ஜெயா ஆட்சி என்றுதான் நினைக்கிறேன். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

அப்போது என்மகளுக்கு இரண்டுவயது. இருபத்திமூன்றுவருடங்கள் கடந்துவிட்டன.

மூவருக்கு விடுதலை. இருபத்துமூன்று வருட சிறைவாசத்திற்குப்பிறகு...

வாழ்த்துகள்..

திங்கள், பிப்ரவரி 17, 2014

காதலுக்கு எதிர்ப்பு

பெண்ணிற்கு நீ சரியான ஜோடிதான்
குடும்ப உறுப்பினர்கள்..
உன்னை மருமகனே என்பதற்கு
உன்னை மாமா என்பதற்கு
உன்னை சித்தப்பா என்பதற்கு
உன்னை பெரியப்பா என்பதற்கு
உன்னை மச்சான் என்பதற்கு
உன்னை மகனே என்பதற்கு
உன்னை பேரா என்பதற்கு
உன்னை கொழுந்தனே என்பதற்கு
உன்னை அண்ணா என்பதற்கு
நீ சரியான ஆளா?
ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள்
ஜாதி பார்க்கவில்லை
காதலுக்கு எதிரியும் அல்ல
ஆனாலும் திருமணம்  நடக்காமல் போகலாம்..

புதன், பிப்ரவரி 12, 2014

கவிதை, கேள்வி. விளக்கம்..

புரிகின்ற கவிதைகளை எல்லாம் நல்ல கவிதைகள் என்று யாரும் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் புரியாத கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல என்கிற அறியாமை வட்டத்திற்குள் புகுந்துகொள்வதும் சரியில்லை.

எழுத்துவடிவில் சொல்லப்பட்ட புரியாத சில விஷயங்களில் எனது புரிதல் குறித்து, `என்னமோ சொல்லவருகிறார்களே, நமக்குத்தான் புரியவில்லை போலும்..’ என்று பலமுறை அதை மீள்வாசிப்பு செய்து, புரிய முயன்று தோற்று,எனது புரிதல் அறிவை நானே நொந்துகொண்ட அனுபவமும் உண்டு. கவனிக்க *மழுங்கிய நிலையிலான எனது புரிதல் அறிவு..*

கவிதை குறித்து எந்த முன்முடிவும் எடுக்காமல், நமது புரிதல் அறிவை நாமே ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டினால், எனக்குப் புரியாதது மற்றவர்களுக்கும் புரியாது, அல்லது, நான் புரிந்துகொண்டதுதான் மற்றவர்களுக்கும் புரியும் என்கிற நிருபர் கண்ணோட்டப் புரிதல் விலகும்.

செய்தி சேகரித்து, அதை அப்படியே எழுதி மக்களுக்கு விளங்க வைப்பதும், ஆழ்ந்த வாசிப்பில், சிக்கலான வாழ்க்கைச்சூழலில் சிக்குண்ட மனம் உதிக்கின்ற கவிதை அல்லது இலக்கியப் படைப்பு என்பதும் முற்றிலும் வேறானது. கடினமான படைப்பிலக்கிய வாசிப்பு என்று தனியொரு வாசகன் முயலாதவரை,அதுமாதிரியான முயற்சிகள் மேலும் தொடராதவரை, நவீன எழுத்து கவிதை குறித்த நாலாந்தர விமர்சனங்கள் நம் இலக்கியச்சூழலில் `எழுத்தாளர்கள்’ என்கிற முகமூடிகளால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற கெடுபிடிகள் இலக்கிய உலகிற்கு அவசியம் என்றே தோன்றுகிறது. காரணம், இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றபோதுதானே, இவ்வளவு அழகான தெளிவான கலைப்படைப்புகள் உங்களின் (நவீன் மற்றும் வல்லின குழு) மூலமாக உயிர்ப்பெற்று ஜனிக்கிறது.

இக்கட்டுரையின் மூல சாரத்தை வெட்டியோ அல்லது இதில் குறைபாடுகள் உள்ளது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோ தர்க்கம் செய்ய யாராவது முன்வருவார்களா? வரத்தான் முடியுமா? (முடியும், வெட்டியாக மொண்ணையான கருத்துகளை முகநூலில் பதிவேற்றி, அதை விவாதிக்க `ஆமாம் சாமி’ போடுகிற கூட்டத்தைத் திரட்டி, தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள்.) `கடவுளின் மலம்’ என்கிற கவிதை நாறவில்லை. ஆனால், அக்கவிதை குறித்த விமர்சன எழுத்துக்களின் கீழ் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலில், உலகிற்கே படம்பிடித்துக்காட்டினார்கள்.. அவரவர் அறியாமையின் உச்சநிலையின் அடையாளங்களை..) என்னக் கொடுமை.!

நவீன கவிதை ஒன்றினை வாசிக்கின்றீர்கள். புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்.? நான் இப்படிச் செய்து புரிந்துகொள்ள முயல்வேன்.

நம்மைச்சுற்றி நடந்த, நடக்கின்ற, மனதை உலுக்கிய அல்லது பாதித்த அரசியல் நிகழ்வையோ, அல்லது சமுதாய சீர்க்கேட்டு நிகழ்வையோ அல்லது எதாவதொரு அவலத்தையோ மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.. கவிதையில் வருகிற வரிகளை அதே அர்த்தத்தில் தட்டையாக வாசித்து புரிந்துகொள்ளாமல், நடந்த அவலங்களோடு கொஞ்சம் மெனக்கெட்டு ஒப்பிட்டுப் பார்த்து உள்வாங்கி, பிறகு இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி வாசித்து,கவிதையின் உள்ளர்த்தக் கருத்துகளை விளங்கிக்கொள்ள முயல்வேன்.

புரிந்தபின் அதனின் மூலக்காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லது நடந்த குறிப்பிட்ட நிகழ்வாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிதல் என்பது அங்கே ஒரே மாதிரியாகத்தான் நிகழும். இது வயப்பட, நாம், நம்மைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை சுரணை உணர்வுடன் விழிப்புநிலையில் அணுக பழகிக்கொள்ளவேண்டும். இவ்வுணர்வு வருவதற்கு,பரவலான வாசிப்பு அனுபவமும் அவசியம் தேவைப்படுகிறது. இது என்னைப்போன்ற பாமரனுக்கும் சாத்தியம். ஆனால் நடப்பது என்னவென்றால்; இங்கே, நமது வாசிப்பின் விழிப்பு மற்றும் சுரணை உணர்வு என்பது, உள்ளூர் பத்திரிகை வாசிகள் ஜீரணிக்கமுடியாமல் வாந்தி எடுக்கின்ற உணர்ச்சிப்பூர்வ செய்திகளாலே தூண்டப்பட்டுகிறது. அதன்பின் நடப்பது என்ன? `நான் ச்சீ, நீ ச்சீ’ என நம்மை நாமே தூற்றிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதுதான். நண்டுகதை என்பார்களே அதுபோல்.

# பி.கு- மறைமுகமாக அவலத்தைச்சொல்லுகின்ற கவிதைகளில் - எனது வாசிப்பு பெரும்பாலும்.. #

திங்கள், பிப்ரவரி 10, 2014

பண்ணையாரும் பத்மினியும்

நகைச்சுவைத் ததும்பும் வசனங்கள். சிரிப்புக்கு பஞ்சமில்லை. சோகமுமில்லை. எல்லோரிடமும் எதார்த்தமான நடிப்பு.

நாம் நினைப்பதைப்போல் அங்கே எதுவும் நிகழவில்லை.
திருப்புமுனை வரும் என்று ஏமாறுகிறோம்.

நான் இறந்தால்? என்கிற வசனம் வரும்போது, இசை பேசுகிறது. இறுதிவரை ஒண்ணும் நடக்கவில்லை.

வில்லியான மகளால் வில்லங்கம் வரும் என்றால், அதுவும் இல்லை.

வில்லன் உண்டு, சண்டையே போடவில்லை.

வளைந்து நெளிந்து வேகமாக ஓடும் பஸ் - என்னாகும் என்கிற நெருடல்.. திக் திக் என்கிறது.. ஒன்றும் நடக்கவில்லை.

அசம்பாவிதம் நடக்குமோ என்றால்..ஹுஹும் இல்லை.

காதல் கைகூடாதோ.. அப்படி எதுவும் இல்லை.

காருக்கு எதும் ஆபத்து..? இல்லையே..

அப்பாவி பண்ணையார்.. அவருக்கு என்னாகும்? ஒண்ணும் நடக்கவில்லை.

இறுதியில் குடும்பத்துடன் பயணம் - அப்போதும் இப்பாவிமனம் நினைக்கிறது..கூண்டோடு கைலாசமா? அதுவும் இல்லை.

இப்படி ஏமாற்றியபடியே நகர்கிறது `பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற திரைப்படம்.

இருப்பினும் சன்ஸ்பன்ஸ் இறுதிவரை தொடர்கிறது.

கடைசியாக ஒன்றுமட்டும் புரிகிறது. அடுத்தவனுக்கு எதாவது ஏடாகூடமாக நிகழவேண்டுமென்று நினைக்கின்ற நமது மனம், நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கிறது..

திரையறங்கைவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.

மனம் மட்டும் கிசுகிசுக்கிறது.. நல்ல படம்.

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

நான் உள்ளே வரவா?

மாமிகதை :

மாமி படுக்கின்ற படுக்கையில் கரப்பான்பூச்சியைப் பார்த்துவிட்டாள் பணிப்பெண்.

காலையிலேயே படுக்கை, தலையணை, ரப்பர் விரிப்பு என எல்லாவற்றையும் உலர போட்டாள்.

மெத்தை தலையணை உலர்வதைக் கண்ட மாமி, `நான் தூங்கப்போகிறேன். இரவெல்லாம் உறக்கம் இல்லை. உடம்பில் அரிப்பு, இடுப்பு வலி, முதுகு வலி..’ என புலம்பிக்கொண்டே இருந்தார்.

நான் காலையில் கீழே இறங்கி வருகிறபோது.. `யம்மா, இவ அட்டகாசம் செய்கிறா.  எனக்குத்தூக்கம் வருது.’ என்றார்.
பணிப்பெண்ணிடம் `என்ன ஆச்சு.? மெத்தையைப்போடு, தூங்கட்டும்.’ என்றேன். அவள்.. `இப்போதுதான் வெயில் எட்டிப்பார்க்கிறது. கொஞ்ச நேரமாவது வெயில் படட்டுமே, தூங்குவதற்கு நன்றாக இருக்கும்.’ என்றாள். நியாயமாகவே பட்டது.

`சரி, அப்படியென்றால், இங்கே ஷோபாவில் படுத்துத்தூங்குங்கள்’ என்றேன். `ஈஸி சேரில்’ இருந்து சோபாவிற்கு அழைத்துச்சென்று படுக்கவைத்தோம்.
ஈஸி சேரில், இடுப்பு வலிக்கிறது. சோபாவில் சாய்ந்தால், முதுகு வலிக்கிறது. மீண்டும் புலம்பல். மணி காலை10.15. ஒன்பது மணிக்கு மெத்தை தலையணைகளைக் காயப்போட்டுள்ளாள் பணிப்பெண். ஏறக்குறைய ஒரு மணிநேரம்தான் ஆகிறது.

மகள் இறங்கிவந்தாள். மாமி தன் பேத்தியிடமும் அதே புலம்பல். பணிப்பெண்ணிற்கு கோபம் வந்தது. `பதினொரு மணிக்கு சாப்பாடு கேட்பாய் பாட்டி, கொஞ்ச நேரம் இரு.. எல்லோரிடமும் சொல்லாதே.’ என்று அதட்டினாள்.

நான் சமையல் வேலையை ஆரம்பித்தேன், பணிப்பெண் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

கணவர் இறங்கிவந்தார். கணவரைக் கண்டவுடன். மீண்டும் புலம்பல். `எனக்கு உட்கார முடியல, நடக்க முடியல, எழுந்திரிக்க முடியல, அங்கே வலி, இங்கே வலி.. நான் தூங்கணும். படுக்கையெல்லாம் வெயிலில் வெளியே கிடக்கு.. வேலைக்காரி ரொம்ப மோசம்.’ என்று ஆரம்பித்துவிட்டார்.

கணவர் வெளியே கிடந்த மெத்தையை உள்ளே எடுத்துவந்து கட்டிலில் போட்டார். படார் என்று சத்தம். என்ன சத்தம் என்று எட்டிப்பார்த்தால், அவரே, அவரின் அம்மாவிற்கு படுக்கையை தயார் செய்கிறாராம். எப்படி? பணிப்பெண் தூங்குகிற மெத்தையை இழுத்துவந்து அம்மாவின் கட்டிலில் கிடத்தி, அலமாரியில் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து விரித்து மெனகட்டுக்கொண்டிருந்தார்...

பணிப்பெண் ஓடிவந்து, `அது என்னுடையது, பரவாயில்லை விடுங்கள், நான் போடுகிறேன்..’ என்று சொல்லி, மெத்தையைத்தட்டி, வாசனைப் பூச்சித்திரவம் அடித்து, பேன்;ஐ முடுக்கி விட்டு, மாமியை உள்ளே அழைத்துச்சென்றாள்.
உள்ளே படுக்கவைத்த சில நொடியில், மீண்டும் அழைத்தார் மாமி..

`நான் கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?’

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், வயதானவர்களின் psychology’ஐ நாம் அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் வயதானவர்களின் மேல் வெறுப்பே மிஞ்சும். கோபம் வரும்..

புரிந்துகொள்வோம் என்பதற்காகவேதான்...

என் தோழி, வயதான அவளின் அம்மாவை வைத்துப்பார்த்துக்கொண்டாள். சக்கரை வியாதின் காரணமாக அம்மாவிற்கு ஒரு கால் இல்லை. பணம், நகை வீடு எல்லாம் மகன்களுக்குக் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட ஒன்றுமில்லா நிலையில் தமது ஒரே மகளின் வீட்டில் தங்கியிருப்பதற்கு தாயிற்கு அவ்வளவாக இஷ்டமில்லை. இருப்பினும் வேறு வழியில்லை. மருமகள்களின் நிராகரிப்பு.

வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம், கால் இல்லாத குறையைச் சொல்லிச்சொல்லி அலுத்துக்கொண்டார்கள். ஒருமுறை அந்தம்மா சொல்லியுள்ளார். எனக்கு ஏன் கால் இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள்.? கால் இருக்கே. வலி என்பதால் அதை உள்ளே மடக்கி மறைத்து வைத்திருக்கிறேன், என்றார். அதற்கு மகள், `நல்லா துணியைத் தூக்கிட்டுப் பார், உள்ளே ஒன்றரை கால் தான் இருக்கு.’ என்றவுடன்.. அந்தத்தாயின் முகம் மாறியதை என்னால் இன்னமும் மறக்கமுடியாது.

புரிந்துகொள்ள கஷ்டம்தான். கோபம் வரும். கோபப்படலாம். அதேவேளையில் புரிந்துகொள்ளவும் வேண்டும்.