வியாழன், டிசம்பர் 15, 2011

கனவு காணுங்கள்

காலையிலே ஆபிஸ் வந்தவுடன், என் தொலைபேசிக்கு ஒரு மிஸ் கால். தங்கைதான்.

காப்பி கலக்கி வைத்துக்கொண்டு.. அழைத்தேன் அவளை..

“என்ன காலையிலே!?”

“அய்யோ ஒரு கனவு கண்டேன்.. தூக்கமெல்லாம் கலைந்து ஓடிவிட்டது.”

“ஓ...”

“என்ன ஓ? என்ன கனவுன்னு கேளு..”

“சரி, சொல்லு,”

“அம்மா செத்துப்போயிட்டாங்க, உறவுகள் நிறைய பேர் வீட்டில், இருப்பினும் நம்ம அத்தைகள் தான் பக்கத்தில்.. நாம் கத்திக் கதறுகிறோம்..பெட்டியை அடிக்கிறோம்..அவர்கள் ஆறுதல் கூறியவண்ணமாக இருக்கின்றார்கள்.., மாலை பூ என ஒரே மலர்க்குவியல்கள் பலவர்ணத்தில்.... மலர்களைக் கனவில் பார்த்தால் அபசகுணம் என்பார்கள்.... மனசு சரியில்லை காலையிலே..”

“ எல்லா நிகழ்வுகளுக்கும் நம்மவர்களுடன் உலா வரும் நறுமணம் மிக்கவல்ல நல்ல பொருள்தானே அது..! ஏன் குழப்பம் உனக்கு இப்போ!? நேற்று அம்மா வீட்டுக்குப்போனாயா?”

“ஆமாம்.. எப்படி கரெக்டா சொல்றே?”

“ஹூம்ம்ம்.. என் கனவில் வந்திச்சு..! இல்லே, நேற்று அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பாய், அன்று சின்னம்மா இறப்பிற்கு நீ போகவில்லை, கதை கேட்டிருப்பாய், அம்மா விலாவரியா சொல்லியிருப்பாங்க.. கதறியழுதல் மாலை, பூ, தேவாரம், சிவபுராணம்..என டீப்பா போயிருக்கும் கதை..அது உன் மனதில் நிழலாய் டீப்பா இறங்கியிருக்கும்.. கனவில் காட்சிகள் மீண்டும் நிழலாய் எட்டிப்பார்த்திருக்கும்.. அவ்வளவு தான். வேறொன்னுமில்லை.. சரியியியியி பல் வெலக்கிட்டியா?”

“இன்னுமில்ல, எழுந்தவுடன், உனக்குத்தான் போன்!”

கடி ஜோக் ஒன்று நினைவுக்கு..!!!

“அதான், நாற்றம் இது வரை வருகிறது. போ வேலையைப்பாரு!”

கலக்கிய காப்பியை எடுத்தேன் பருக.. ம்ம்ம் ஒரு மொடக்குதான் போயிருக்கும்.. மற்றொரு அழைப்பு.. என் அததை..

“ஏய், புள்ள.. மனசு சரியில்லை..!”

“ஏன்?”

“போன்ல காசு இல்லை, ஆபிஸில் இருந்து கூப்பிடு!”

பாருங்க, யார் யாரோ கதை போட ஆபிஸ் பணம் வீண் விரையம். அழைத்தேன். இல்லையென்றால், நாள் முழுக்க ஓயாது, இந்தக் கூப்பாடு.

“இன்ன்னா உனக்கு இப்போ காலையிலேயே?”

இல்ல என்கிற வார்த்தையோடு, புள்ள என்பதையும் சேர்த்துக்கொண்டு பேசுவதுதான் அத்தை அவர்கள் உரையாடுவது வழக்கம். புள்ள.. எங்களை அப்படித்தான் அழைப்பார். அப்பாவின் கடைசி தங்கை.

“இல்ல புள்ள, விடியற்காலையில் ஒரு கனவு.”

” ம்ம்ம் சொல்லு, இப்போதான் ஒரு கனவு மேட்டரைக்கேட்டேன்.. நீ என்ன குண்டு போடப்போற!?”..

“அடிங்ங்ங்..உங்கப்பம்மவளே.. கேளுடி”

“ம்ம்ம், சொல்லு சொல்லு”

“ ஒரு பழைய பலகை வீடு.. முன்பு நாம கூட்டுக்குடும்பமா இருந்தோமே, அந்த வீடு. அங்கு எல்லோரும் வந்திருக்கோம். அப்பா, தாத்தா (இருவரும் இறந்து இருபது வருடங்களாச்சு) எல்லோரும் இருக்கிறோம். அப்போ, எதோ ஒரு நிகழ்வு நடக்கவிருக்கிறது. அது என்ன நிகழ்வுன்னு சரியா தெரியல. வீடு அமைதியா இருக்கு, நான் மட்டும் பச்சை இலைகளை கிரைண்டரில் அரைத்துக்கொண்டிடுக்கிறேன்.. அந்த கிரைண்டர் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் என் காதுகளில் கேட்கவே இல்லை. இருப்பினும் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்..! அப்போது தான் நீ வர, ஆனால் உள்ளே நுழையவில்லை. ஒரு சிரிப்போடு வெளியவே நிக்கிற.. பார்ப்பதற்கு ஒரு சாமியாரினிபோல்.. மொட்டையடிச்சிருக்க.. ஆனால் குடுமி இருக்கு, கையில் ஒரு புக், .. எல்லோரும் உன்னை வேடிக்கைப்பார்க்கிறார்கள், நான் மட்டும் உன்னை உள்ளுக்கு வரச் சொல்லி கூப்பிடறேன். அப்போ, என்னமோ பேச வாய் எடுக்கற.. கனவு கலைஞ்சிருச்சு..!”

“ம்ம்ம், அப்பறம், கிளம்பி வேலைக்கு வந்திட்ட தானே..இன்னும் என்னவாம்!?”

“அய்யோ இல்ல புள்ள, இந்த மாதிரி பச்சை இலைகளைக் கனவில் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதுவும் உன்னை வேறு அப்படிப்பார்த்தேனா, அதான் மனசு ஒன்னும்..!”

“நான் நல்லாதான் இருக்கேன், அதெல்லாம் ஒண்ணும் வராது.. போனமுறை நீ வந்த போது, நான் புக்கும் கையுமா உன்னிடம் சரியா கூட பேசல, அதன் எதிரொலியா இருக்கும். கவலை வேண்டாம்.. வேலையப்பாரு.”

அவரிடம் அப்படித்தான் மனம் கோணாமல் பேசுவோம். எங்களுடனே வளர்ந்தவர். திருமணமாகி ஐந்தே நாளில் விதவைக் கோலம் பூண்ட பரிதாபத்துகுரிய பெண் அவர். அவரைச் சுற்றி எது நடந்தாலும் எங்களின் நினவுதான் வருமாம்.

சரி, காப்பியைக்குடிக்கலாம் என காப்பி கப்பைக் கையில் எடுத்தேன்.. மீண்டுமொரு அழைப்பு...

“ஹாலோ..” நான் தான்

“ஹால்லோ..!” மறுமுனையில் வனிதா சோகமாக. என்ன கதையோ முருகா!!

“சொல்லுங்க வனிதா.”

”என் கூட்டாலி காலையிலே போன் பண்ணினாள்..”

“ம்ம்ம்”

“இறந்துபோன என் மகள், அவளின் கனவில் போய்..ஆண்டி ஆண்டி என தேம்பித்தேம்பி அழுதாளாம்..”

“ம்ம்ம்”

“எங்கம்மா.. எனக்கு சுடிதாரே வாங்கி வைக்கிறார், எனக்குச் சுடிதார் வேண்டாம், முடிந்த தீபாவளிக்குக் கூட மெரூன் சுடிதார் வாங்கிவைத்தார்.. என்னிடம் நிறைய சுடிதார் இருக்கு, எனக்கு கவுன் அதுவும் வெள்ளைக்கலர் கவுன் வேணும்னாளாம்... என்ன குறை வைத்தேன்? அவளின்  கனவில் போய் புலம்பியிருக்கின்றாள்..” அழுகிறாள்

சிறுகுறிப்பு: பத்தொன்பதாண்டுகளுக்கு முன்.. அவளின் மகள் வயிற்றிலேயே இறந்து பிறந்தது. சடங்கு சம்பிரதாயங்களுக்கு பேர் போன வம்சத்தில் பிறந்த மேல்தட்டு வர்க்கவாசிகள் அவர்கள். அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டிய பிறகுதான் புதைத்துள்ளார்கள். வருடா வருடம் வயதிற்கு ஏற்றாட்போல் உடைகள் பலகாரங்கள் என செய்து, படைத்து, பூஜை செய்வது வழக்கம். வேறு குழந்தையும் இல்லை அவளுக்கு.. அதனால்தான் இவ்வளவு பலகீனம். மன அழுத்தமும் கூட. அக் குழந்தையின் பெயரைச் சொல்லித்தான் கதைகளையே ஆரம்பிப்பாள்.

இதைப் பயன்படுத்தி, சில கட்டுக்கதைகளைச் சொல்லி, சிலர் அவளை, மந்திரவாதி, சாமியாடி, தோஷம், கழிப்பு, செய்வினை, மாந்த்ரீகம் என அழைத்துச் சென்று சுயலாபம் தேடப்பார்ப்பார்கள்.  பாவம் அவள்! பலஹீனமானவர்களைக் குழப்புவதில் நம்ம வர்கள் கில்லாடிகளாச்சே.

நான் இதுவரையில், அவளின் இதுபோன்ற செய்கைளுக்கு ஒத்தூதாமலும் நிராகரிக்காமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் அமைதிக்காப்பதால், அவளுக்கு நான் நல்ல தோழியானேன்.

பலரை பாதியிலே கலற்றி விடுவாள். ஆனால் என்னைப்பொருத்தவரையில், நானே போகிறேன் என்றாலும் விடமாட்டாள். அப்படி அவள்  ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு விஷேச தன்மைகளும் என்னிடம் இல்லை. சிலவேளைகளில் நானும் அவளின் அறியாமைகளைக் கண்டு, ஜாடைமாடையாகத் திட்டியுள்ளேன்.

இன்றும் திட்ட வேண்டும்போல் இருந்தது.. காலை நேரம், மூக்கைச்சிந்துகிறாள்.. என்னால் ஒண்ணுமே சொல்லமுடியவிலை..

“ஓ.. ம்ம்ம்”..

“ லஞ்ச் டைம்மிற்கு கொஞ்ச நேரம் வறீயா.. பூசாட் பஃக்கையான் ஹாரி ஹாரிக்குப் போய் வரலாம்” . அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்தாள். அவளுக்குக் கார் ஓட்டத்தெரியாது. மேலும் துணையில்லாமல் வெளியே சுற்றுகிறவள் அல்ல.

“சரி, நிலைமையைப் பார்த்திட்டு.. பிறகு கூப்பிடறேன்..” என்று சொல்லி தொலைப்பேசியை வைத்தேன்.

சுடு காப்பி, ஐஸ் காப்பியானது.. கீழே ஊற்றிவிட்டு, மீண்டும் கலக்கிவந்தேன். காலை மணி பத்து. மெயில் பாஃக்சைத் திறந்தேன்.. மெயில்களில் மூழ்கினேன்.

அதோடு வேறெந்த கைத்தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. நான் வேலை செய்கிறேன் என்பதே சிலருக்கு மறந்துப்போனது. (அடிங்ங்)

நாம் எல்லோரும் கனவுலகிலேயே வாழ்கிறோமென்பது உண்மைதான்  போலும். ஒண்ணு விழித்துகொண்டு, இல்லையேல் உறங்கும்போது..

கனவு காண்கிறோம்..




கள்ளப் பொழுதுகள்

அயர்ன் பெட்டி திறந்திருக்கா?
அடுப்பு மூடியிருக்கா?
விளக்கு எரியுதா?
வீடு பூட்டியாச்சா?
கார் கதவு திறந்தேயிருக்குமோ!?
உடையின் பட்டன்/ஸிப் சரியா இருக்கா?
தலை கலைந்திருக்கா?
பொட்டு இருக்கா?
தாலி போட்டாச்சா?

இப்படிச் சரி பார்க்கும்
பொழுதுகளில்..
முந்தைய இரவின் நாயகனாய்
நீ தான் இருந்திருப்பாய்
இன்றைய தினத்தையும்
முழுமையாக களவாடிக்கொண்டு...!

புணர்வு

நான் பார்த்தவரை....

நாய், பூனை,
ஆடு. மாடு
குரங்கு, குதிரை
கழுதை, யானை,
சேவல்,வாத்து

என எதுவுமே
தம்மைவிட
உருவில் சிறியதாய் உள்ள

குட்டிகளையும்
குஞ்சுகளையும்
குழந்தைகளையும்
புணர்ந்ததில்லை..

மனிதனைத்தவிர..!