புதன், பிப்ரவரி 27, 2013

ANTI-BULLYING DAY

இன்று பெஃப்ரவரி இருபத்தியேழு. உலக ANTI-BULLYING  தினம். காலையில் ஆங்கிலப் பத்திக்கையில் இதையொட்டி வந்த ஒரு கட்டுரையைப்படித்தவுடன், அடடா இப்படியெல்லாம் கொண்டாடுவதற்கு நாட்கள் இருக்கின்றனவே என்று அதிர்ந்த போதிலும், இது என் சிந்தனையை மேலும் தூண்டிய ஒரு விடயமே. காரணம் தற்கொலைகளுக்கும் மனவியாதிகளுக்கும் இந்த BULLYING கலாச்சாரம்தான் மூலக்காரணமாக இருந்து வந்துள்ளது என்பது அக்கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட விவரம்.  

BULLY என்கிற இந்த ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சரியான சொல் கிடைக்கவில்லை. தமிழில் கிடைத்த அத்தனை சொற்களும் இந்த BULLY என்கிற ஆங்கில சொல்லிற்கு ஈடாக அமையவில்லை. கொடுமை படுத்துதல், அடிமைப் படுத்துதல், சினங்கொண்டு ஆங்காரமாகப் பேசுதல், கீழறுப்புசெய்தல் என்று தான் எழுதியிருந்தார்கள் அகராதியில். ஆங்கிலத்தில் அதனின் அர்த்தம் மனதளவில் சரியாகப் புரியப்பட்டதுபோல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது அரியணையிட்டு அமரவில்லை.

BULLY என்கிற ஆங்கில சொல்லிற்கு தமிழில் குறிப்பிட்ட இச்சொற்கள் சரியான மாற்றுச்சொல்லாக அமையுமா என்பதில்  சந்தேகம்  ஏற்பட்டிருப்பினும்  தமிழில் குறிப்பிட்ட அத்தனை சொற்களில் இருக்கும் அர்த்தங்களையும் இந்த BULLY என்கிற ஒற்றை ஆங்கில சொல் உள்வாங்கிக்கொண்டது.  

BULLY என்கிற இந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே எல்லோருக்கும் எதாவதொரு வகையில் மற்றவர்களால் தாம் கொடுமை படுத்தப்பட்ட, தமது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறுமை படுத்தப்பட்ட,  கேவலப்படுத்தப்பட்ட , தனிமை படுத்தப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, பறிக்கப்பட்ட என இன்னும் நிறைய பட்ட.. பட்ட.. என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த BULLYING பல நிலைகளில் நம்மைத் துன்புறுத்தியிருக்கலாம்.  குடும்பத்தில், பள்ளியில், பல்கலைக்கழகங்களில், வேலை இடத்தில், பொது வாழ்வில், அரசியலில்.. என..! 

குடும்பத்தில் ஏற்படுகிற புல்லியிங்’கால் அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது என்றே நம்பலாம். ஏனென்றால் அங்கே நடக்கும் BULLYING ற்கு, அப்பா காரணமென்றால், அம்மாவின் ஆதரவும், அம்மா காரணமென்றால் அப்பாவின் ஆதரவும், சகோதர சகோதரிகள் என்றால் அப்பா அம்மாவின் ஆதரவும் என புல்லிங் கலாச்சாரத்திற்கு ஒரு விடிவு உண்டு. பள்ளியிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு விடிவு உண்டு என்றும் சொல்லலாம்; மாணவர்களில் சிலர் சக மாணவரிடம் இதை நிகழ்த்தும்போது ஆசிரியர்களும், ஆசிரியர்கள் சில மாணவனிடம் செய்யும்போது சக ஆசிரியர்களும் மாணவர்களும் உதவுகின்ற நிலை ஏற்பட்டு காப்பாற்றப்படலாம்!. புல்லிங் செய்து மரணம்வரை சென்றுள்ளதுவும் மறுக்கமுடியாது என்கிற போதிலும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும்.

கணவன் மனைவி என்கிற பந்தத்தில் உரிமை, அன்பு, சகிப்புத்தன்மை, கடமை, பொறுப்பு என்கிற பெயரில் எண்ணிலடங்கா கொடுமைகள் இந்த நவீன காலகட்ட்த்திலும் நிகழ்ந்தவண்ணமாகத்தான் இருக்கின்றது. அதையும் இந்த BULLYING கலாச்சாரத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனையோ மனைவிமார்கள் விடுதலை கிடக்கப்பெறாமல் தற்கொலை செய்துகொள்வதும், வீட்டை விட்டு ஓடுவதும், பெற்ற குழந்தைகளைக் கொடுமை செய்வதும்..  எத்தனையோ கணவன்மார்கள், தொல்லையே வேண்டாமென்று வெளியூர் வேலைகளுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு தனியாளாக குடும்பம் நடத்துவதும் துறவியாய்ப் போய்விடுவதும் என இன்னும் தொடர்ந்துகொண்டுத்தான் இருக்கிறது. சிலர் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன், குடும்ப கௌரவம் என ஒப்பிற்கு ஜடமாய் வாழ்ந்து மடிகிறார்கள். இதுவும் மறைமுக புல்லியிங் தான். சிலர், கணவரின் பெயரைக்கேட்டாலே வேர்த்துவிருவிருக்கின்றார்கள். சில கணவன் மார்கள் மனைவியின் குரலைக்கேட்டாலே நெஞ்சு வலிக்கிறது என்கிறார்கள்..! இதையும் ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.. பாவம் அவர்; குடும்பத்திற்காக உழைக்கின்றார். பாவம் அவள்; நம்மை விட்டால் கதி இல்லை, என்று நாடளடைவில் சிந்தனையை மாற்றிக்கொண்டு, அன்பொழுக வாழலாம், பிரச்சனையில்லை.   

ஆனால் ஓர் இடம் இருக்கிறது, தப்பிக்கவே முடியாமல் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, எதோ ஒன்றிற்காக நாய் போல் வால் ஆட்டிக்கொண்டு காலம் முழுக்க கழுதைபோல் கிடக்கும் அவல நிலை. அதுதான் வேலை இடம். பணம் கிடைக்கிறது, வேறு வேலை கிடைக்காது என்பதற்காக பலவிதமான கொடுமைகளை அனுபவித்துக்கொண்டும் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் பிணம்போல் வாழ்ந்துமடிபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

இந்த வேலையிடத்து BULLYING பற்றிக்கேட்கத்துவங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் ஒரே மாதிரி நிகழ்ந்திருக்கும். யாருமே தப்பித்திருக்கமுடியாது. அவ்வளவும் கசப்பான சம்பவங்கள்.

திறமையுள்ள புதிய ஆட்கள் தமது வேலையைப் பிடுங்கிக்கொள்வார்களோ, சில இடங்களில் சீனியர் ஜூனியர் போராட்டம்.. சிலரின் நடவடிக்கைகள் முற்றாக்க் கவராத நிலை.. நான் பெரியவன் என்கிற இறுமாப்பு.. அடக்க நினைக்கும் மனநோயாளிகள்.., அடுத்து காத்திருக்கும் உயர் பதவியைப் பிடுங்க வந்தவள்/ன் என்கிற மனமுதிர்வற்ற நிலை.. உயர் பதவியில் இருப்பவரின் அன்பை பெறுவதற்குப் போராடும் நிலை.., தம்மிடமே எல்லோரும் ஆலோசனைகள் கேட்கவேண்டும் என்கிற உலகமாகா புத்திசாலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

வீட்டில், பள்ளியில் கணவன் மனைவி உறவில் ஏற்படாத கசப்பான புல்லிங் கலாச்சாரம், வேலை இடத்தில் பலரை ஆட்டிவைக்கும் என்பதை யாரும் மறுக்கலாகாது. வேலை செய்பவர்களுக்கு இது தொடர்கதைதான்..

வாய் பேசா மௌனிகள் மாட்டிக்கொண்டால், வேலை இடத்தில் அவர்கள் படும் அவஸ்தை இருக்கே, அப்பப்பா சொல்லி மாளாது. இருவர் மூவரின் வேலையை ஒரே ஆள் செய்யவேண்டிய நிலை வரும்...  

சரி.. இப்போ கேள்வி இதுதான், இந்த புல்லிங் கலாச்சாரத்திலிருந்து எப்படி மீள்வது.? மீள்கிறேன் என்று அறிந்தும் அறியாமலும் நாம் யாரையாவது BULLY செய்துள்ளோமா? நாம் பலியாகியிருக்கின்றோம் என்றாலும் நம்மால் யாராவது பலியாகியுள்ளார்களா? அதை எப்படி நாம் நிவர்த்திசெய்துள்ளோம்..!!?

இதுவரையில் நம்மால் யாருக்கும் தீங்கில்லை, என்றால்.. நானும் நீங்களும் நண்பர்களே.

இன்று ANTI BULLYING தினம். இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். அடுத்தத் தலைமுறை நம் பிள்ளைகள்தான் பாட்டாளிகள்/தொழிலாளர்கள். இதற்குப் பலிகடா ஆவார்களோ.. !!          
  

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

பார்த்ததில் ரசித்தது

பென்சில்களால் பலவிதமான வேலைப்பாடுகள்..  வர்ணப்பென்சில்களால் காகிதம் வர்ணமாகும் ஆனால் இங்கே...!!!! பாருங்கள், அற்புதம் அற்புதம்.. பார்த்தவுடன் கவர்ந்துவிட்டது

http://avargal-unmaigal.blogspot.jp/2013/02/blog-post_1891.html

திங்கள், பிப்ரவரி 25, 2013

சுவாரஸ்யம்

எந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்தாலும், நான் உடனேயே அதை எழுத்தில் கொண்டு வந்துவிடுவேன். எழுதிவைக்கும்போது பலர் வாசிக்கின்ற வாய்ப்பு ஏற்படலாம், அவைகளை தமது அனுபவங்களோடு ஒப்பிட்டு, நிருத்துப்பார்க்கலாம், சில விஷயங்கள் நம்மூலமாக அவர்களும் அனுபவித்து தெரிந்துகொள்ளலாம். சில அனுபவங்கள் பாடமாகவும் அமையலாம், சில அனுபவங்கள் எச்சரிக்கை சமிக்ஞை, சில பகிர்வுகள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என.

நேற்று இரவும், இன்று காலையும் எனக்கு இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தேறின. நினைத்து நினைத்து மனம்விட்டுச் சிரித்தேன். சிரித்துக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் அழைக்க, நண்பரிடமும் சொல்லிச்சிரித்தேன்.

நான் ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை சம்பவமொன்றை உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று ஆரம்பிக்கும்போதே.. ம்ம்.. சொல்லுங்க, சொல்லுங்க நான் தயாரிவிட்டேன் சிரிப்பதற்கு என்றார். `என்ன கிண்டலா?’ என்று சிணுங்கவும்.. என்னடா இது அநியாயமா இருக்கு, சொல்கிற நகைச்சுவையைக் கேட்டுவிட்டுச் சிரிப்பதற்குத் தயாராவதுகூட பொல்லாப்பாப்போச்சு.. பெண் நட்பில் இதான் பிரச்சனை என்று அலுத்துக்கொண்டார்.

என் நண்பர் அலுத்துக்கொள்வதிலும் நியாயமிருக்கு.. காரணம், ஜோக் சொல்கிறேன் என்று சொல்லி மொக்கையாக எதையாவது உளறிவிட்டு வழிவதுதான் பெண்பாலின் பெருபாலான இயல்பு. சொல்லிமுடித்தும் கூட, .. ம்ம்.. என்னமோ ஜோக் சொல்கிறேன் என்றீர்களே அதை முதலில் சொல்லுங்கள், பிறகு சிரிங்க சாவகாசமாக என்பார். டென்ஷன்..ஊ.

அலுத்துக்கொண்டு கேட்டபோதிலும், மேலே நான் குறிப்பிட்ட அந்த சுவாரஸ்யமான விவரத்தைச் சொன்னபிறகு, அவருக்கே சிரிப்பு தாளவில்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், அந்த சுவாரஸ்யத்தின் மகிமையை. சொல்லும்போதே நான் சிரிக்க, சிரிக்கச்சொன்னேன்தானே!? என்று அவரை நான் மிரட்ட, மௌனமாகச் சிரிக்கிறேன் என்று பெருமூச்சு வர அவர் சிரிக்க, ஒரே ரகளைதான் போங்க.

இப்படிச் சுவாரஸ்யமான சம்பவமொன்றை எழுதமுடியாமல் போவதுதான் இங்கே வேதனை. சிலவேளைகளில் நமக்கு நிகழ்வது நடப்பது எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதே.!

சிலர், நாம் என்ன செய்கிறோம், என்ன எழுதுகிறோம், முகநூலில் என்ன பதிவேற்றுகிறோம், எங்கேயெல்லாம் நமது பின்னூட்டங்கள் இடம்பெறுகின்றன, யாரிடம் அதிகமாக பேசுகின்றோம், யாரிடம் மூக்கறுபடுகின்றோம்/மூக்கு உடைபடுகின்றோம் என, நமது அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் உளவுபேதாக்களாக நம் பின்னாலேயே உலவிக்கொண்டிருப்பார்கள்.

நாம் எழுதுகிற எழுத்தில், அவர்களின் பாத்திரத்தின் பங்கு குறித்து அறிந்துகொள்வதற்கு நம்மிடம் ஒர் அணுக்கத்தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டிருப்பார்கள். அறிந்தோ அறியாமலேயோ இதற்கு நாம்தான் மறைமுக காரணகர்த்தா என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கதை சொல்லில் இருவர் மற்றும் மேலும் ஆட்கள் இருப்பதுவே இதற்கு மூலக்காரணம். உண்மையை மறைக்கமுடியுமா என்ன..!?  

நாம் பகிரப்பட்ட விவரங்களை பிய்த்துமெய்ந்து, தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கிறேன் பேர்வழி என்று கூறி..;

`நான் எதற்காக அப்படிச் சொன்னேன் தெரியுமா..!? நாம் என்ன பேசினோம், நீ என்ன எழுதியிருக்கிறாய்? புரியாமல் எதையாவது எழுதி பெயர் வாங்க அலையாதே.. இதையெல்லமா வெளியே சொல்வாங்க..! எதை எதை எழுதனும்னு ஒரு வெவஸ்தையே இல்லையா..? இதெல்லாம் உனக்கு ஒரு விளையாட்டா...!! சின்னப்புள்ளத்தனமா இல்லே..! நல்லதுக்குக்காலமில்ல...  திருந்தாதஜென்மங்கள், விஷக்கிருமிகள்...  எஃக்சுவலி... பை ரைட்.. ஷோ.. பை தி வேய்..குட் பை...!! என்று சம்பந்தமே இல்லையென்றாலும் சம்பந்தபட்டது `நான்தான், நான்தான்’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொதப்பிவிடுவார்கள்.

எப்படித்தான் திரித்து மறைத்து எழுதினாலும், அந்தப் பாத்திரத்தில் தான்தான் கதாநாயகன் என்பதை மிகத்துல்லியமாகக் கண்டுகொண்டு பலவழிகளில் நம்மை டார்ச்சர் செய்வார்கள். தேவையற்ற கோபம், தேவையற்ற கீழறுப்பு, தேவையற்ற விளக்கவுரை, தேவையற்ற மனவுளைச்சல், தேவையற்ற புறம்பேச்சு, தேவையற்ற சாடல், தேவையற்ற உள்குத்து, தேவையற்ற அழைப்பு, தேவையற்ற குறுந்தகவல்,  என தொடர் அல்லல் அன்றாட பணிகளுக்கு ஊறு விளைவிக்கும்.

எழுத்திற்கு இருக்கும் மகிமையைப் பார்த்தீர்களா..!!?

ஆக, சில சுவாரஸ்யங்கள் நமக்கு நாமே  சிரித்துக்கொள்வதற்காக, வேண்டாம் விட்டிடுவோம்....

வியாழன், பிப்ரவரி 21, 2013

என்ன ஆளுங்க.. (சிறுகதை)

கையில் சிகரட்டை ஏந்திக்கொண்டு, புகையை சுகமாக உள்ளே இழுத்து இழுத்து வெளியே விட்டு, சிகரட் ஏந்தியிருக்கின்ற விரல்களை அங்கேயும் இங்கேயும் நீட்டியபடி எதோ ஒரு முக்கிய விவரத்தை சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள் இரு பெண்கள்.

அலுவலக வளாகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த இந்தக் காட்சியை ஆச்சிரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்கள் பொதுவில் புகைப்பது எனக்கு ஆச்சிரியமே.. அதுவும் நம்ம பெண் என்றால்.. ஆச்சிரியமோ ஆச்சிரியம்.. 

இதைக் கண்ணுற்ற நான், கையில் வைத்திருந்த பேனாவை, விரல் இடுக்கில் சிகரட் போல் பிடித்துக்கொண்டு, `ஸ்ஸ்ஸ் ஊஊ..’ என்று ஊதி புகைப்பதுபோல் பாவனை செய்து பார்த்தேன். சிரித்துக்கொண்டேன்.
அருகில் இருந்த கைப்பேசி சிணுங்கியது.

`ஹாலோ, சரஸ் சொல்லுங்க..’

`விஜி.. அந்தப் பொண்ணுக்கும் எம் மவனுக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லையாம்...! பரவாயில்லை வேண்டாம் விட்டிடுவோம், வேறு பொண்ணு எதும் இருந்தா சொல்லு சரியா?’

`ம்ம்..சரி.. ஒகே.. பார்ப்போம்.. ’ என்று சொல்லி, நான் என்ன ப்ரொக்கர் வேலையா செய்கிறேன், என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே தொலைப்பேசியை வைத்தேன்.

யாராவது நம்மிடம் வந்து, உங்களுக்குத்தெரிந்தவர் யாரேனும் பெண் பையனுக்கு வரன் தேடுகிறார்களா? இருந்தால் சொல்லுங்க.. என் வீட்டில் பொண்ணு இருக்கு, பைய்யன் இருக்கான் என்றால், அறிமுகம் செய்துவைக்கவே அலர்ஜியாக இருக்கிறது. அப்பப்பா எவ்வளவு இடைஞ்சல்கள் இடையூறுகள் நம்மவர்களுக்குள்.!

சரஸ், நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளை வியாபாரம் செய்வதோடல்லாமல் நன்றாக துணிமணிகளையும் தைப்பார். ரவிக்கைகள் தைப்பதென்றால் சரஸ் தைத்தால்தான் எனக்குப் பூர்ண திருப்தி. தமிழ்நாடுவரை சென்று ரவிக்கை தைத்துப்பார்த்துவிட்டேன் சரஸ் தைப்பதுபோல் வரவேவராது. இதைப்பற்றி நான் அவரிடம் அடிக்கடிப் புகழ, அவரும் உச்சுக்குளிர, அதனால் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் வந்தது. அப்படியே நட்பும் தொடர்ந்த்து.

சரஸ் துடிப்பு மிக்கவர். அழகாகவும், இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்.

ஒரு நாள் என்னை அழைத்து தாம் எதிர்நோக்கியுள்ள சில சிக்கல்களைச் சொல்லி தம் மகனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்துக்கொடுக்கும் படி சொன்னார்.
  
`எங்க வீட்டுக்காருக்கு ஸ்ட்ரொக் வந்து வேலை போனதிலிருந்து, எனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் போயிடுச்சு விஜி.. என் கால் சுண்டு விரல் அரிக்கிறதுன்னு சொரிஞ்சேன், திட்டிர்னு அங்கே ஒரு புண்ணு வந்திருச்சு.. டாக்டர்கிட்ட போய் செக் பண்ணினா, இனிப்பு நீர் என்கிறார். புண்ணு ஆறலன்னா காலையே எடுப்பார்களாம்..! துணிதைக்கிற வேலையெல்லாம் தூக்கிப்போட்டுட்டேன்’டா. ஆஸ்பித்திரியும் கையுமா அலையறேன். எனக்கு இல்லேன்னா அவருக்கு, அவருக்கு முடிந்தா எனக்கு’ன்னு நடையா நடக்கறேன். காலகாலமா கஷ்டப்பட்டு சேர்த்துவைச்ச பணமெல்லாம் இதுக்கே செலவாயிடும் போலிருக்கு.!
மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சிகொடுத்தாச்சு.. நிம்மதி. மகனுக்கு முப்பத்துமூன்று வயதாகிவிட்டது.. காதல் கீதல்’ன்னு எதும் இருந்தா பேசி கீசி முடிக்கலாம்.. ஒண்ணுமில்லை’ன்றான். உனக்குத் தெரிந்த நல்ல பெண், கொஞ்சம் அழகா... இருந்தா சொல்லேன். பேசிடலாம். இந்த நெலமையில் யாராவது ஒத்தாசையா இருந்தா மனதிற்குத் தெம்பா இருக்கும். இவனுக்குக் கல்யாணம் பண்ணிப்பார்க்காம செத்துபோயிடுவோமோ’ன்னு வேறு கவலையா இருக்கு, காசி ராமேஸ்வரம் என போயி எவ்வளவோ செலவு செஞ்சி திஷ்டி தோஷம் எல்லாம் கழித்தாச்சு, ஒரு நல்லது நடக்கமாட்டேன் என்கிறது..’ என்றார் சோகம் கலந்த மனவுளைச்சளோடு.

ஏற்கனவே எனக்குத் தெரிந்த தோழி ஒருவள், தமது மகளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தாள். படித்த பெண். மிகவும் அழகானவள். அரசு ஊழியர், நல்ல சம்பளம், தாதி தொழில் செய்பவர். தெய்வ பக்தி கொண்டவர்.. தேவாரம் திருமுறை என பல மேடைகளில் தோன்றி நிறைய பரிசுகளை சிறு வயதிலிருந்து வென்றுக்கொண்டிருப்பவள். அடக்கமானப் பெண். வீட்டு வேலைகளில் கெட்டி. பெரியவர் முன்னிலையில் மரியாதை, மென்மையான பேச்சு..

தோழியும் சில தினங்களுக்கு முன்புதான், தன் மகளுக்கு இருபத்தாறு வயதாகிவிட்டது, நல்ல வரன் கிடைத்தால் கல்யாணம் கட்டிவைத்துவிடலாம். யாராவது இருந்தால், கேட்டால் சொல். அவள் கல்யாணமே வேண்டாம் என்கிறாள், நாம் அவளை அப்படியே அவளின் போக்கிற்கே விட்டுவிட முடியுமா? காலாகாலத்திலேயே நல்லபடி எல்லாம் செய்து வைப்பதுதானே நம் கடமை. வீட்டுக்காரரும் அவளிடம் சேர்ந்துகொண்டு.. எதுக்கு இப்போ அவசரப்படற? விடு விடு என்கிறாராம்..! தாய் தமது கடமையை முடித்துவைக்கத் துடிக்கிறார்.

இரண்டு கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் வர, அவனின் தொழில், குணம்,வயது மற்றும் தோற்றம், இவளின் தொழில், குணம்,வயது மற்றும் தோற்றம் போன்றவைகளை மனதில் நிறுத்தி இருவரையும் சேர்த்துப்பார்த்தேன்.. அழகாக அமோகமாக இருந்தது ஜோடிப்பொருத்தம். சொல்லிப்பார்க்கலாமே என்று ஆசை வந்தது, தோழியிடம் சொல்லி, பெண்ணிற்குக்கூட தெரியாமல் பெண்ணின் புகைப்படத்தை தோழியின் மூலம் பெற்றுக்கொண்டு, சரஸிடம் விவரத்தைச் சொன்னேன்..

`அப்படியா.. நர்ஸ்வேலை நல்லவேலைதான், பொண்ணும் அழகா இருக்கா மூக்கும் முழியுமா.. மகன் கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன். சரியா? ரொம்ப நன்றி விஜி...’ என்று சொல்லி புகைப்பட்த்தை வாங்கிக்கொண்டார் சரஸ்.

மறுநாள் அழைத்து, தயங்கித்தயங்கி ஒரு விஷயத்தைக்கேட்டார்.. `வந்து..அதுவந்து..தப்பா நினைக்காதே.. அவங்க என்ன ஆளு?’ அட்டா இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்லே நம்மவர்களிடம் ..`அட, மறந்துட்டேனே.. சரி கேட்டுட்டுச் சொல்றேன்.. ஒகே வா.!’ `ம்ம்..கேளு கேளு.. பார்த்து, உனக்குத்தான் தெரியுமே, எங்களுடையது கொஞ்சம் ஒசத்தி.. கால காலமாக பார்க்கிறார்கள்..! `அட ஏன் சரஸ் இன்னமும்..!! நல்ல பொண்ணு மாப்பிள்ளை கிடக்கவே கஷ்டமா இருக்கு, இதில் இதுவேறயா..!’ `எனக்குப் பிரச்சனை இல்லை விஜி.. எங்க மாமியார்தான்.... கொழுந்தனார் கொழுந்தன் பொண்டாட்டிமார்கள் என்னைப்பிச்சுப் பிடுங்கிவிடுவார்கள்..’ என எதையோ சொல்ல வந்தார். என்னடா இது, இப்படி மாட்டிக்கொண்டோமே என்று நினைத்து..! `சரி விடுங்க, விசாரிச்சுட்டா போச்சு..’ என்று சொல்லி தற்காலிகமாகத் தப்பித்தேன்.

எதாவது தகவல் வருமா என்று காத்திருந்த தோழியிடம் எப்படி சொல்வது என்று யோசித்து யோசித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. `சுகா.. என்னமோ ஆளு கீளுன்னு கேட்கறாங்க.. விடு வேண்டாம் அந்த சம்பந்தம்..’ என்று பட்டும்படாமல் விவரத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் ஆரம்பித்தேன். அவள் புரிந்துகொண்டாள். `ஆமா, பார்ப்பார்கள்.. நம்மவர்கள் கல்யாணம் என்றால்.. சாப்பாடு இருக்கோ இல்லையோ..இதில் குறைவிருக்காது. சொல்லு உண்மையை, நான் ஒரு ஆளு, என் கணவர் ஒரு ஆளு, என் மகள் ஒரு ஆளுன்னு, பயப்படவேண்டாம், எங்களை விட என் மகள் மிக உசத்தி.. ஜாதியில்.’ என்றாள். அப்போதுதான் எனக்கும் அந்த ரகசியம் தெரியவந்த்து. மகள் அவளின் சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்று.

தேவையா இது..! இதுவும் வேணும் இன்னமும் வேணுமென்று மனதில் அசைபோட்டுக்கொண்டே, சரஸிடம் விவரத்தைச் சொன்னேன்.. மென்று விழுங்கினாள்.. `எ..ன..க்...கு அ... தெ... ல்... லா.. ம் பெ...ரி...ய விஷயமேயில்லை.. எங்க மாமிதான் ஒரு பிசாசு.. கலப்படம்னு வேற சொல்றே, முக்கியமா பொண்ணு எங்க ஆளுங்க மாதிரிதான், உசத்திதான்.. இருந்தாலும், எல்லார் கிட்டேயும் கேட்டுக்கிட்டு சொல்றேன். ஜாதகமெல்லாம் வேறு பார்க்கணும்.. பொருத்தம் சரியா இருந்தால் முடிச்சிடலாம்.. எதுக்கு இந்த பாழாய்ப்போனதையெல்லாம் இன்னமும் கட்டிக்கிட்டு அழனும்..!!’ என்று `பரந்த’ மனம் கொண்டவள் போல் பாசாங்கு செய்து, தப்பிப்பதற்காக பிறரின்மேல்  பழியைப்போட்டுவிட்டு அசட்டுத்தனமாக சிரித்து, பார்ததுக்கொடுத்த என் மனம் வேதனைப் படக்கூடாது என்பதற்காக, முகத்தில் தோன்றிய கலவரத்தையும் மறைக்கமுயன்று, பதில் சொல்லி இடத்தைக் காலி செய்தார் சரஸ்.

இன்று சரஸிடமிருந்து வந்த அழைப்பில், பொருத்தம் சரியில்லை என்கிற பதில்.

இதுதான் நாம்..!!

இது மேலே உள்ள கதையோடு தொடர்பில்லை –

தோழி ஒருவளுக்கு குடும்பத்தில் பிரச்சனை. கணவன் வேலை முடிந்து சரியான நேரத்திற்கு வீடு திரும்புவதில்லை. சதா குடி குடி.. சில சமயங்களில் இரவு வீட்டிற்கே வருவதில்லை. விடிந்து மறுநாள் வேலைக்குச் சென்று மறுபடியும் இரவு குடித்துவிட்டு வீடு திரும்புகிறார். மனம் விட்டுப் பேசுவதற்குக்கூட வாய்ப்பில்லாமல் போவதுதான் தோழிக்கு ஆதங்கம்.

சந்தேகம் தலைவிரித்தாட, கணவரின் நண்பர் ஒருவருக்குத் தொலைப்பேசியின் வழி தொடர்பு கொண்டு, விவரத்தை அறிய முனைகிறாள் தோழி.

வீட்டிற்கு வராதா சமயங்களில் கணவர் எங்கு செல்கிறார் எங்கே தங்குகிறார் என்று கேட்டுள்ளாள் நண்பரிடம். இது தவறுதான்.  கணவனின் நண்பரிடம் இப்படிக் கேட்பது அசிங்கம் என்று பலமுறை சொல்லியும், சிதறுண்ட அவளின் மனம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், சிந்தனையும் ஒரே பக்கமாக அவளை அழுத்தியதால், தமது ஏமாற்றமே தமக்கு முதன்மைக் காரணமாகத் தோன்றவே, இக்காரியத்தில், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கிவிட்டாள்.

நண்பர்கள்தான் தெரியாதா..! இந்த ஆண் நண்பர்களே இப்படித்தான் போலும்.. நட்பிற்காக உயிரைக்கொடுக்கிறேன் இதைக்கொடுக்கிறேன் அதைக்கொடுக்கிறேன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, நண்பனைக் காப்பாற்றுவதற்க்காகவேண்டி, வீட்டிற்குத் திரும்பாத சமையத்தில் அவன் என் வீட்டில்தான் தங்கிக்கொள்வான் அங்கேயேதான் தூங்குவான். நீ ஒண்ணும் கவலைப் படாதேம்மா, அவனிடம் சொல்லிவைக்கிறேன், என்றிருக்கிறார்.

இதைப்பற்றி நண்பரிடம் மேலும் பேசி வம்பு வளர்க்க விருப்பமில்லாமல், நண்பரின் மனைவிக்கு அழைத்து, வாறுவாறு என்று வாறியிருக்கிறாள்...

`உனக்கு அறிவில்லையா? ஒரு கல்யாணம் பண்ணிய ஆம்பள, குடிச்சுப்புட்டு உன் வீட்டில் படுத்துக்கிடக்கறான்.. அவனுக்குக் குடும்பம் இருக்கு, பொண்டாட்டி இருக்கு அவனை வீட்டிற்கு விரட்டவேண்டியதுதானே..! அவனை வீட்டில் படுக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறீயா? ரெண்டுபேரும் குடிச்சிட்டு படுத்துக்கிடப்பானுங்க, நீ போய் யார்கிட்ட படுப்ப.. ? என் குடும்பமே சின்னாப்பின்னமாய் கிடக்கு, என் புருஷனை உன் வீட்டில் படுக்கவைச்சுக்கிட்டு கும்மாளாம் போடுகிறீர்களா..? என் வீட்டில் இதுவரைக்கும் நான் எந்த ஆம்பளகளையும் தங்க விட்ட்தில்லை.. குடிக்க வந்தா, வெளியே குடிச்சிட்டு அப்படியே கிளம்புவானுங்க...வீட்டுக்குள்ளே நுழையக்கூடாதுன்னு சொல்லி மிரட்டிவச்சுருக்கேன் என் வீட்டுக்காரனை. உன்னால அப்படிச் சொல்லமுடியாதா? வளர்ர பிள்ளைகளை வைச்சுக்கிட்டு குடிகாரர்களை வீட்டுக்குள் விடறீயே, நீயெல்லாம் பொம்பளையா....!!!! என்று கண்ணாபிண்ணான்னு சத்தம் போட்டு திட்டியிருக்கிறாள்.. சில கெட்டவார்த்தைகளையும் கூடவே சேர்த்து... 

அவளுக்கு பயங்கர கோபம் வர, அவளின் கணவன் மூலம் அவளுக்குத்தெரிந்த இவளின் கணவன் செய்யும் மைனர் திருட்டுவேலைகளையும் மாற்றான் தோட்டத்து மல்லிகை ரகசியங்களையும் இவளிடம் சொல்லி இவளையும் தாறுமாறாகத்திட்டி தொலைப்பேசியை துண்டித்துள்ளாள்.

பிறகென்ன – “ஆமா, நான் வைச்சுருக்கேன்..’’என்று அவர் சொல்ல, கதைகந்தலாகி, விவரம் விவாகரத்தில் நிற்கிறது. தினமும் தொலைப்பேசியில் அழுகிறாள்.. வேலை செய்யவே மூட் இல்லை என்று புலம்புகிறாள். பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று அழுகிறாள்.

எவ்வளவுதான் சமாதானம் சொல்வது.. சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
         

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வாழ்வா இது...?

மலாய் பத்திரிகையில் படித்த செய்தி...

பன்னிரண்டு வயதே நிரம்பிய ஒரு பெண் குழந்தை, தமது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். 

விவரம் குடும்பதிற்குத்தெரியவே, காதலனுடன் ஓட்டம். காதலன், மற்ற நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து அவளை நாசம் செய்துவிட்டு, தொழிலுக்கு வாடிக்கையாளர்களை பார்த்துக்கொடுத்துள்ளார். 

நல்ல முறையில் தொழில் நடந்தேறியுள்ளது.. மாதம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வருமானம். 
உலகமுழுக்க வாடிக்கையாளர்கள் - ஜப்பான்,கொரியா, தைவான் என.. 

பதினைந்து வயதில் இரண்டு முறை கருக்கலைப்பு.

பதினாறு வயதில்.. கர்பப்பை புற்றுநோயோடு எச்.ஐ.வி’யும் கண்டுள்ளது.

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

எலிஸ்பெர்த் (மாமிகதை)

மாமிகதை - 

மாமி எங்கள் வீட்டில் இருப்பதால், வார இறுதியில் உறவுகளின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது.. ஒரு கூட்டம் வந்தது..

`அய்யோ அத்த.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க. நீங்க நடந்துபோன எலிஸ்பெர்த் மஹாராணி போல் இருக்கும். ஊரே வேடிக்கைப்பார்க்கும். அவ்வளவு அழகு எங்கத்த. இப்போ பாருங்க காதுல கழுத்துல ஒண்ணுமே இல்ல.. ச்சே பார்க்கவே நல்லா இல்லெ. நகையெல்லாம் போட்டுட்டு எங்கத்த நடந்தா சாட்சாத் அம்மனை நேரில் பார்த்த மாதிரியே இருக்கும்...’

அத்த எங்கே பதில் சொல்வது.. அங்க ஒண்ணுமே முடியலையே.. இப்போதெல்லாம் ஒரே அமைதி. என்னான்னு தெரியல. பேசுவது கூட குறைந்துவிட்டது. பார்வை சரியாகத்தெரியவில்லை.. நாங்களே கொடுத்தால்தான் உண்டு. எதுவும் வாய்திறந்து கேட்பதில்லை.

மௌனமாக சிரித்துக்கொண்டே.. `இனி என்ன இருக்கு.. செத்தா எடுத்துப்போட்டிடுங்க...’ என்றார் மாமி.

`பின்னே..எடுத்துப்போடாம, வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவதாம்.. ஹிஹிஹி அத்த அத்த...’

ஜோக் அடிக்கறாங்களாம்.. வெறி வரல. யார் அழுதா இவர்களெல்லாம் வரவில்லை என்று..!!!

யாரும் வரவேண்டாமென்று சொன்னால் கேட்கிறாரா? அம்மாவைப் பார்க்க அவர்களுக்கு ஆசை யிருக்காதா? அம்மா மேல் பாசம் அவர்களுக்கெல்லாம்.. நல்லா வாழ்ந்தவங்க.

இப்போ அவருக்குத்தேவை பாசமா???? அது நாங்க கொடுப்போம்.. வராமல் இருந்தாலே கோடி புண்ணியம்.
சிலர் வந்துவிட்டு போனாலே.. கெட்ட வைஃப்ரேஷன் நீண்ட நேரம் சுற்றுகிறது வீட்டில்... என்னமோ மாதிரி இருக்கும்... உடலில் ஹூமோகுளோபின் குறைந்தது போல்..!

WARTS


ஃபேஷியலுக்குச் (முக ஒப்பனை) சென்றேன். வழக்கமாகச் செல்லும் இடத்திற்குச்செல்லாமல், இந்த முறை, முக ஒப்பனைக்கலையில் பட்டம் வைத்திருக்கும் நம்ம பெண் ஒருவரிடம் (மகள் மாதிரி) சென்றேன். தோழியின் மகள் அவள். தோழியைச் சந்திக்கும் போதெல்லாம், `ஒரு முறை அவளிடம் சென்று ஃபேஷியல் செய்துபார்.. உனக்கு நிச்சயம் பிடிக்கும் என்பாள்’. அதனால் இம்முறை அங்கே...

வேறொரு துறையில் படித்துப் பட்டம் வாங்கிய அவள், வேலை வேலை என்று அலையாமல், இந்த கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு குடும்பத்தின் உதவியோடு சொந்தமாக ப்யூட்டி பார்லர் ஒன்றைத் திறந்து, சிலரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு, முழுநேரத்தொழிலாகச் செய்துவருகிறார் அப்பெண்.

வென்மையான ஆடையில் ஒரு மருத்துவரைப்போன்ற தோற்றத்தில் காட்சி கொடுத்தார் அப்பெண். ரொம்ப அழகு.

என் முகத்தில் கை வைத்தவுடன் சொல்லிவிட்டார், முகத்தில் நிறைய மருக்கள் இருக்கின்றன என்று.! என் கண்களுக்குத்தெரியாத அம் மருக்கள் அவர் கண்களுக்கு மட்டும் எப்படித்தெரிகிறதென்று கேட்டேன்.

பெரிய கண்ணாடியை முகத்திற்கு நேராகக் காட்டி, மருக்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று காட்டினார். அதிர்ந்துதான் போனேன்..!! அதிகமான மருக்கள். எப்படி இவ்வளவு மருக்கள் எனக்கே தெரியாமல்.. !? சிலதுகள் பெரிதாகியிருந்தன.. சிலதுகள் சிறிது சிறிதாய்..

பெரிதாய் வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது... கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி போன்றோர்களுக்கு உள்ள அழகு மச்சம் போலவே இருந்தன. எனக்கும் அழகு மச்சங்கள் உள்ளன என்றே பெருமிதம் கொண்டிருந்தேன் இவ்வளவு நாளாக.... பார்த்தால்... மருவாம்..!!

ட்ரீட்மெண்ட் கொடுக்கவா ஆண்டி? கேட்டார்.

எப்படிம்மா, வலிக்காதா?

வலிக்காது, எறும்புக்கடிபோல் சுறுக் என்றுதான் இருக்கும்.. கொஞ்சம் பணம் செலவாகும், ஆனால் இனி அங்கே அந்த மரு வரவே வராது. என்றார்.

அழகாய் மிளிர வேண்டுமென்றால் - வலியையும் விலையையும் பார்க்கமுடியுமா?  சரி என்றேன்.

கண்களை மூடிவிட்டு, ஒரு கருவியின் உதவியோடு, எல்லாவற்றையும் சுட்டு எடுத்தார்.. முடி பொசுங்குவதைபோன்ற வாசனை வந்தது. வலிதான் - பொறுத்துக்கொண்டேன்.

மூன்று நாள்கள் கழித்து முகம் பளிச் என்று அழகாக இருந்தது. கரும்புள்ளிகள் இல்லை.. ஸ்மூத் ஆக இருந்தது.

முகத்தில் இருந்த  மருக்களை எடுத்ததிலிருந்து, யாராவது மருக்களோடு இருந்தால் - ஆலோசனை வழங்கலாம் போல் தோன்றுகிறது. மருக்களை எடுத்துவிட்டால், உங்களின் முகமும் பொலிவுடன் பளிச்சென்று இருக்குமே, முயலலாமே..! என்று சொல்லவேண்டும்போல் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் கேட்டேன், ஏன் இப்படி மருக்கள் என்றுமில்லாத அளவிற்கு அதிகமாகக் காணப்படுகிறது திடீரென்று..?

அவள் சொன்னாள்.. அதற்கு நிறைய ரீஸன் இருக்கிறது ஆண்டி. அதில் ஒன்று, வயது.!

“எனக்கொன்றும் அவ்வளவு வயதாகவிடவில்லை’’ - நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.

அவளுக்கு நான் ஆண்டிதானே..!!
 

வெள்ளி, பிப்ரவரி 15, 2013

கஞ்சி (மாமி கதை)

`கஞ்சியே கொடுக்கறீங்களே.. நான் என்னாவேனோ, முருகா.! என்னால் கஞ்சி சாப்பிடமுடியவில்லை.’
வேலை முடிந்து வந்தவுடன் புகார்.

`உங்களுக்கு அதுதானே நல்லது. அரிசி சோறு இறைச்சி மீன் உங்களால் விழுங்க முடியவில்லை... கஞ்சியில் எல்லாமும் போட்டுத்தான் சமைக்கிறேன். மேலும் இருதயம் வீக்’ஆ இருக்கு..எண்ணெயில் பொரித்த சாப்பாடுகள் சரிப்பட்டுவராது. கவிச்சி சாப்பிடுவதால் உடமெல்லாம் அரிப்பு, இரவெல்லாம் தூங்காமல் அவதி படறீங்க...
மசால கொடுத்தால், வயிறு வலி.. அன்னிக்கு வந்ததுதானே வலி..!!?’

`எனக்கு அதெல்லாம் வராது..., எனக்கு ஒரு வியாதியும் இல்லே.. அள்ளிவிடாதே..’

`ஆமாமாம்..அள்ளிவிடறேன். சைவம் செய்தால் தொடமாட்டேன் என்கிறீர்கள்.. தயிர் சாதம் செய்தேன் தொடவேயில்லை... சாம்பார் சாதம் சாப்பிடும்போது, வாந்தி வருவதைப்போல் செய்தீர்களாம்..அவ சொன்னா.!!

`ம்ம் அவ சொல்லுவா.. எனக்கு சீனக்குத்தியோவ் வேணும்..’

`முடியாது.. அதில் ப்ளாச்சான் போடுவானுங்க.நல்லா இருக்கிற உடம்பு மீண்டும் அரிக்கும்.. தூங்காம அவதிப்படுவீங்க...’

`எனக்கு ஒண்ணும் வேணாம். பட்னியா படுத்துக்கறேன்..’

`கஞ்சிய முடுல்ங்கு முடுல்ங்கு பாட்டி.. ’ என்கிற குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது... வேலைக்காரி சாப்பாடு கொடுக்கிறாள் போலும்...
அவள் வேறு தமிழ் கற்றுக்கொண்டு வருகிறாள்...

என்ன செய்யலாம்???? மிடியல.....

புதன், பிப்ரவரி 13, 2013

இலையடி (மாமி கதை)

இது உண்மை -

மாமிக்கு, மோசமான மூச்சுத்திணறல் வந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோ என்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, வேலைக்காரி ஒரு ஐடியா கொடுத்தாள்.. 

மூன்று விதமான பச்சை இலைகளைக் கொண்டு, உடம்பில் அடித்தால் திணறல் நின்றுவிடும், பற்றிக்கொண்டிருக்கும் `சைத்தான்’ ஓடிவிடும் என்று. 

ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்கிறவர்களுக்கு... 

`இனி அடிக்கடி இப்படியாகும், இருதயமும் கிட்னியும் செயலிழக்கும் அறிகுறிகள் தெரிகிறது, பிள்ளைகள் பக்கத்தில் இருந்து அன்பாக அரவணித்துக்கொள்ளுங்கள், கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுத்துவாருங்கள்...’ என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்.

அதன் படியே நானும் அவளும் மாமியின் அருகில் இருந்து போராடிக்கொண்டிருந்த போது அவள் இவ்வாலோசனையை வழங்கினாள்.

வெளியே சென்று வேப்பிலையை உடைத்தேன்.. மூன்று இலைகள் வேண்டாம், இந்த ஒரு இலை தான் எங்களின் தெய்வம் என்று சொல்லி கொண்டு உடைத்துவந்து..

`அம்மா, ஆத்தா வந்திட்டா.. இனி எல்லாம் சரியாயிடும் என்று சொல்லி, வேப்பிலையை உடல் முழுக்க அடித்தேன்.. அடித்தேன்.. பேய் ஓட்டுவதைப்போல்.....

என்ன ஆச்சிரியம், அப்படியே அமைதியானது மூச்சு.. சத்தமில்லாமல் சாதாரணமாக வந்தது... கைகளைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டார்.. `அம்மா, ஆத்தா மாரி மகமாயி என்னை காப்பாற்றிவிட்டாய் என்று...’

வேலைக்காரிக்கும் சந்தோசம்.. பாத்தியா நான் சொன்னேன் இல்லெ, அது சைத்தான்..எமன், உயிரை எடுக்கவந்திருக்கு, இலைகளைக்கொண்டு அடித்தால், ஓடிவிடும்..’ என்று பெருமைபொங்க மார்தட்டிக்கொண்டாள்.. 


இக்கதையை - வேடிக்கைபோல் நான் எழுதினாலும் அத்தருணத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.! காரணம், மரண பயம் ஒருவரிடம் குடிகொள்ளும்போது, சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகள் மிகக்கொடூரமாக மாறுகிறது.. நாக்கு வெளியே தள்ளும், கண்விழிகள் பிதுங்கும், குமட்டல் வரும், கை கால்கள் விரைக்கும், வேர்க்கும், நகங்கள் நீலமாகும், முகம் வெளுக்கும், எப்படி செய்தாலும் திருப்தியடையாத நிலையே வரும் அவர்களுக்கு... ஐய்யோ நான் சாகப்போறேனா என்கிற முணகல் வரும்.. பேசவேண்டும் போல் இருக்கும் ஆனால் அவர்களால் பேசமுடியாது... நம்மை தெய்வமாகப் பார்ப்பார்கள். என்னைக்காப்பாற்று என்பதைப்போல் இருக்கும் அவர்களின் பார்வை. நீ மனது வைத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்... நீயே தெய்வம் என்பதைப்போல் நம் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொள்வார்கள். பரிதாபமான நிலை இது. தேவையா. !!!

உடல் தேறி, இப்போது கொஞ்சம் சுமார். இருப்பினும் அந்த மூச்சுத்திணறல் மீண்டும் வந்துவிடப்போகிறது என்கிற பயத்தில், எல்லாமும் முடித்து, குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து அறையில் தூங்க வைத்துள்ளோம்.. அறையில் அவர் தூங்கினாலும் சமையலறை ஜன்னலில் இருந்து நிலைமை எப்படி இருக்கிறது.., மூச்சுவாங்குகிறதா.. உயிர் இருக்கா, நிம்மதியாக தூங்குகிறாரா.. என எட்டி எட்டி நானும் என் வேலைக்காரியும் ஒருவர் மாற்றி ஒருவர் கண்காணித்து வருகிறோம்... 

`ச்ச்சே என்ன பழக்கம் இது? படுத்துத்தூங்குகிற என்னைய எட்டி எட்டிப்பார்க்கறது..! இங்கே என்ன அவுத்துப்போட்டுக்கிட்டு ஆடறாங்களாக்கும்.. கெட்ட பழக்கம் இப்படி எட்டி எட்டிப்பார்க்கறது.. நினைக்கிறீங்களா நான் தூங்கறேன்னு, எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. அவ (வேலைக்காரியை) என் கையால் அடி வாங்காமல் போகமாட்டாள்.. அதோட அவ இந்த வீட்ட விட்டு ஓடணும்.. நீயும் போடு ஜால்ரா.’ 

வேலைக்காரி கேட்டாள், அக்கா என்ன கோவமா யாரையோ திட்டுகிறார் பாட்டி.. என்ன கதை?
அப்படியே மொழிப்பெயர்த்தேன் இதை..

இருவரும் சத்தம் போட்டுச்சிரித்தோம். மாமிக்கு எரிச்சல் கூடிவிட்டது...

`இரு எம்மவன் வரட்டும்..’

ஹஹஹஹஹஹஹஹஹஹஹ...





சனி, பிப்ரவரி 09, 2013

ஆதாம்டீஸ்ட்


தமது ஐந்து வயது மகன் படிக்கும் பாலர் பள்ளிக்குக் காலையிலிருந்து அலைந்துகொண்டிருக்கும் தோழி, இப்போதுதான் அழைத்திருந்தாள். (படம் பார்க்கப்போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோம் - இந்த பிரச்சனையால் அது நடக்கவில்லை..)

பள்ளியில் மகனுக்கும் (40கிலோ இருப்பான் - obesity child)  மற்றொரு மாணவிக்கும் சண்டையாம். இவரின் மகன் கோபத்தில் அந்தப் பெண் குழந்தையை எட்டி உதைத்து மிதித்துள்ளான்.

பெண் குழந்தை டீச்சரிடம் சொல்லி பிறகு தமது பெற்றோர்களிடமும் முறையிட்டுள்ளாள். நேற்றுநடந்த சம்பவம் இது. டீச்சர் அந்தப்பையனை கூப்பிட்டு மிரட்டி, ரோத்தான் அடி கொடுத்து கண்டித்துள்ளார். பையனின் பெற்றோரான என் தோழிக்கும் அவரின் கணவனுக்கும் தொலைப்பேசியின் மூலம் அழைத்துத் தகவல் சொல்லி கண்டிக்கச்சொல்லியுள்ளார்.

முடிந்துவிட்டது என்று நினைத்தால், இன்று காலையில் மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து டீச்சரை வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறார்கள். (சொற்போர்தான்..) போலிஸ் ரிப்போர்ட் அப்படி இப்படி என பயமுறுத்தியுள்ளார்கள்.

கலவரமடைந்த ஆசிரியை, என் தோழியையும் அவரது கணவரையும் அழைத்து பெற்றோர்கள் இருவரையும் பேசவைத்துள்ளார். குழந்தையின் அம்மா வேதனையில், `பையனைக் கண்டியுங்கள் இல்லையேல் விபரீத முடிவு எடுக்கவரும்..’ என்று எச்சரித்து திட்டியிருக்கிறார்... டீச்சரும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார் இருவீட்டாரையும்.. (செய்யத்தான் வேண்டும்..பாலர் பள்ளிகளின் கட்டணம் அப்படி இங்கே.. பல்கலைக்கழகமாவது பரவாயில்லை)

கதை இதுதான்..!!

ஆனால் என் தோழி என்னிடம் இச்சம்பவதைச் சொல்லும்போது, தன் மகன் செய்தது நியாயம் என்பதைப்போல் சொன்னாள்.

`அந்தப் பெண் குழந்தை அவனை எப்போதும்  ஆதாம்டீஸ்ட் செய்கிறாள்.. குண்டு குண்டு.. மொட்டை மொட்டை என்றும்..’

`பெத்தவங்களுக்கு அறிவு இல்லையா? இத போய் பெரிசு படுத்திக்கொண்டு..!!!’

`அந்த அம்மாகாரி டீச்சரையே வார்னிங் செய்கிறாள்..திமிறு...’

`எங்க வீட்டுக்காரருக்கு பயங்கர கோபம்.. செய்வதற்கு எவ்வளவோ வேலை இருக்கு.. இது ஒரு பிரச்சனையா? அறிவு கெட்ட ஜென்மங்கள் (அந்த பெண்குழ்ந்தையின் தாய் தந்தையர்களை)..

`சும்மா சும்மா அவனை குண்டு குண்டு என்றால், அவனுக்குக் கோபம் வராதா?..’

`இனிமேல் எதும் பிரச்சனையென்றால்.. விவரம் பெற்றோர்களுக்குப் போகாமல் டீச்சரே செட்டல் செய்யட்டும்.. அதான் பணம் வாங்குகிறார்களே.. அது கூட செய்யமுடியாதா?’

`மிதிக்கட்டும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. (சிரிக்கிறார்)..

இதுக்கு மேல் என்னால் தாங்கமுடியாது. எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

அடி வாங்கியது உன் பிள்ளை என்றால் அதன் வேதனை தெரிந்திருக்கும் உனக்கு!. சின்ன வயதிலேயே உம்மவனுக்கு இவ்வளவு கோபம் வருதா? நாளை ஆண்பிள்ளைகளிடம் உன் மகன் கைவரிசையைக்காட்டும் போது, எல்லோரும் சேர்ந்து மிதி மிதி என்று மிதிப்பான்கள்..அப்போது சொல்லு, பள்ளி விவரம் எனக்கு வரவேண்டாம் டீச்சர் நீயே செட்டல் பண்ணுங்க என்று..ஒகே வா? கண்டித்துவை.. சின்னப்புள்ள கணக்கா உளறாதே என்றேன்...

படம் பார்க்க என்னோடு வரமாட்டாள் - அநேகமாக. நட்பை முறித்துக் கொண்டாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை.

வியாழன், பிப்ரவரி 07, 2013

வால் பகுதி

`விரால் சூப் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது, வாங்கிட்டு வாம்மா.’ என்றார் மாமி. கேட்டு இரண்டு வாரமாகிவிட்டது.

இன்று அலுவலக அருகில் இரவுச் சந்தை. இந்த விரால் விவரம் சட்டென்று ஞாபகத்திற்கு வரவே, வரும் வழியில் அச்சந்தைக்குச் சென்றேன். அங்கே நம்மவர் ஒருவர், இதுபோன்ற ஆற்று சேற்று மீன்களை கணிசமான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் உள்ள மீன்கள் அனைத்தும் உயிருடனேயே இருக்கும்.

பெரிய வாளியில் இருந்த விரால் ஒன்றினைக்காட்டி நிருத்துபபார்க்கச் சொன்னேன்... ஒன்றரை கிலோ வந்தது. கிட்டத்தட்ட நாற்பது ரிங்கிட். நிருவையில் நிற்கவேயில்லை அந்த விரால். இங்கேயும் அங்கேயும் குதித்தது.

கையில் வைத்திருந்த ஒரு இரும்புத்தடியினால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். சாகவில்லை. வாய் பகுதியை ஒரே வெட்டு வெட்டினார். துடித்தது. செவுல் செதில்கள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்தார். கழுவினார். துண்டு போட ஆரம்பித்தார். முதலில் வால் பகுதியில் ஒரு துண்டு.. பிறகு தொடர்ந்து ஒவ்வொரு துண்டாகப்போட்டார் .... பையில் போட்டுக்கட்டும் வரை வால் துண்டின் அதிர்வு நிற்கவேயில்லை. துடித்துக்கொண்டே இருந்தது அந்த வால்.

வீட்டிற்கு வந்தவுடன்..

`அம்மா, விரால் வாங்கிவந்துள்ளேன், சூப் செய்யவா? சொல்லிக்கொடுங்க, எனக்குத்தெரியாது..’ என்றேன்.

வேலைக்காரி மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்..

`அப்ப நி நாங்கிஸ்?’

`காக்கா.. நென்னே, டாரி தாடி லெமாஸ், தாங்கான் காக்கி செமுவா கெபாஸ்.. சயா தக்கூட்..’

`யா கா..! அப்ப ஜடி?’

`தாக் தாவ்வு க்கா.. பாடன் டியா புன் டிங்கின் சாங்ஙாட்.’

`ஓ..ஒகே ஒகே, ஜங்கான் நாங்ஙிஸ்...’

அறைக்குள் நுழைந்தேன்..

`யம்மா, என்னாச்சு?’

`காலையிலிருந்து ஒருத்தி வந்து என்னிய கூப்படறாம்மா.. உயரமா இருக்கா.. என்னுடைய துணியெல்லாம் துவைக்கறா... நான் வரலே’ன்னு சொல்லிட்டேன்..’

`அப்படியா, யார் அது?’

`பைடுதல்லி மாதிரி இருக்கு..’

`ஓ..’

`வீடெல்லாம் நல்லா சுத்தமா கூட்டி, மேக் ஆப் போடும்மா..!’

`ஏன்?’

`ச்ச்சே, நாளைக்கு எல்லோரும் வருவாங்கதானே.. நல்லாவா இருக்கும்..!’

`ஏன் வரணும்? யாரும் வரமாட்டாங்க...’

`ஓ..ஓவ்வ்வ்.. ஒவ்வ் எவ்வ்வ்..ல்ல்ல்ல்ல்...லலால்லா.’ என்னமோ சொல்ல வாய் எடுத்தார்.. கண்கள் சொரூகின, கைகள் நடுங்கின, அப்போது அவரின் நாக்கு .. துடித்தது.

அது, துண்டு போடப்பட்ட மீனின் வால் பகுதி துடித்ததை எனக்கு ஞாபகப்படுத்தியது..

நல்லவேளை, அம்மாவை முதியோர் இல்லத்தில் விடவில்லை. அங்கே இருந்திருந்தால், இதுபோன்ற நிலையில் யார் பேச்சுத்துணைக்கு ஆதரவாய் இருந்திருப்பார்கள்..!! பிள்ளைகள் போல் வருமா?

புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை ( சிரி சிரி)

`இது யார் வீடு?’


`இது நம்ம வீடு.’


`ஓ..அம்மா வீடா?’


`ஆமாம்...’


`நீ இங்கேயே தூங்கும்மா.. நேரமாச்சு எப்படி வீட்டுக்குப்போவ?’


`சரி தூங்கறேன்..’


`உம் புருஷன் பேர் என்னா?’


`நட்ஷணா..’


`ஓ..நட்ஷணா பொண்டாட்டியா நீ..’

`ம்ம்..’

`எங்கே அவன்?’

`தோ, இப்பதானே மேலே போனார்..’

`ஓ, நட்ஷணா, வீடு வாங்கிட்டானா?’

`ம்ம், வாங்கிட்டார்..’

`நல்லா இருப்பானம்மா, எவ்ளோ கஷடப்பட்டான்.., இவ்வளவு பெரிய வீடு இருக்குமா, அவன் வீடு..?

`ஆங்..இவ்வளவு பெரிய வீடுதான்’

`அவனையும் இங்கேயே தூங்கச்சொல்லு..’

`சரி தூங்கச்சொல்றேன்..’

வேலைக்காரியைப்பார்த்து..`அப்போ இவ எங்கே தூங்குவா?’

`அவளும் .. இங்கேயே..’

`அவ..அங்க அங்க மூத்திரம் அடிக்கறாம்மா.. ஒரே நாத்தம்.. வுவக் வாந்தி வருது..’

வாய்விட்டு சிரித்துவிட்டேன்..`ஹஹஹ..அப்படியா?’

`சிரி, நல்லா சிரி.. கிட்டவா ஒரு விஷயம்.. மனசிலேயே வைச்சுக்க....
வீட்டுக்கு யாரோ வந்தாங்க.. அவகூட ரொம்ப நேரம் பேசினா.. இரெண்டுபேரும் நல்லா படுத்து தூங்கினாங்க.. நான் கூப்பிடறது கூட கேட்கல..’

மாமி கதை (கண்ணு தெரியல)

`கண்ணு தெரியமாட்டேங்கிறது’ ம்ம்மா’

`அதான் கண்ணாடி புல்லி அனுப்பிடுச்சு இல்லே.. போட்டுக்கவேண்டியதுதானே..!’

`அத போட்டாலும் தெரியமாட்டேங்கிறது..’

`அதுக்கு, நான் என்ன செய்ய.. ?’

`ஆஸ்பித்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போம்மா.. செஃக் பண்ணீட்டு, கண்ணு உரிப்பாங்க..’

`ம்ம்..சரி சரி.. சீனப்பெருநாள் லாங் லீவு வருதில்லே, அப்போ பார்க்கலாம்..ஹ்ம்ம்’

`ஹ்ம்ம்.. ’

டீவி பார்க்கிறார்...பழைய பாடல்கள் ஓடுகின்றன..

`அது யாரு சில்க்’ஆ..? முத்துராமன் மகன் அப்படியே இருக்கான்(ர்).. ! பிகராஷ் அப்பா.. பேரு என்னாம்ம்மா...?

`ம்ம்..தியாகராஜன்..’

`ஓ.. சேகரும் இருக்கான்(ர்) ..’

`ம்ம்ம்ம்... கண்ணுதான் நல்லா தெரியுதே..!!’

`ஆஸ்பித்திரிக்கு போனாத்தான், இன்னும் நல்லா தெரியும்..!’

`எது? சினிமா நடிக நடிகர்களையா? ஹிஹி’