புதன், அக்டோபர் 04, 2017

கவனம் கவனம்

முகநூலில் ஒன்பது வருடம் கடந்துவிட்ட எனக்கு நேற்று ஏற்பட்ட சங்கடம் இது…
என் உறவுக்கார தங்கை ஒருவள் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாள். சமீபத்தில் நானும் அவளும் நண்பர்களானோம்.
ஆனால், நேற்று இரவு தீடீரென்று அவளிடமிருந்து மீண்டும் ஒரு நட்பு விண்ணப்பம் வந்திருந்தது. `இவள்தான் நம் நட்பு வட்டத்தில் இருக்கின்றாளே.! ஏன் மீண்டும் அனுப்புகிறாள், என்று யோசித்துக்கொண்டே, அவளின் நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அப்போது நான் இரவு உணவிற்காக வெளியே சென்றிருந்தேன். என் கைப்பேசியின் பேட்டரி வேறு முடியும் தருவாயில் அதன் விளக்கை மங்கச்செய்துகொண்டிருந்தது.
விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட மறு நொடி, மெசன்ஞர்’இல் வந்து அக்கா ஒரு உதவி, என்றாள். அவள் இதுவரையில் என்னிடம் எந்த ஒரு உதவியும் கேட்டதில்லை. இளவயதில் கணவனை இழந்தவள். அழகானவள். இருந்தபோதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்தக்காலில் கம்பீரமாக வாழ்ந்துவருபவள் அவள். அவளிடமிருந்து இப்படி உதவி என்று கேட்டு ஒரு கோரிக்கை வருகின்றபோது அதை என்னால் மறுக்க முடியவில்லை. சரி சொல்லு என்ன உதவி, என்றேன்.
என் கைப்பேசியில் உள்ள எண்கள் எல்லாமும் அழிந்துவிட்டன, என்னிடம் உங்களுடைய கைப்பேசி எண்ணைக்கொடுங்கள் என்றாள். நானும் கொடுத்தேன். இந்த உரையாடலின் போது, பேட்டரி இன்னமும் கரைந்துகொண்டிருந்தது.
என் எண்ணைக்கொடுத்த மறுகணம், அக்கா இப்போது உங்களின் கைப்பேசியில் நான்கு எண்கள் கொண்ட ஒரு `கோட்’ வரும் அதை என்னிடம் பகிருங்கள் என்றாள். அதைச்சொல்கிற போது அவள் அவசரத்தில் உள்ளதுபோல், விரைவாக விரைவாக என்று என்னிடம் மன்றாடினாள். நானும் கொடுத்தேன். எனது பேட்டரி மங்கிக்கொண்டே இருந்தது. மறுமொழி சொல்கிறபோது, எனது பேட்டரி எச்சரிக்கையினை அவளிடம் மெசஞ்சர் வழி சொன்னேன். அதைக்கேட்ட அவள், அக்கா ப்ளீஸ், கொஞ்ச நேரம், எனக்காக, ப்ளீஸ் என்று போராடுவதைப்போல் இருந்தது. முதலில் வந்த நான்கு எண்களைக்கொடுத்தவுடன், மீண்டும் ஒரு நான்கு எண்கள் வந்துள்ளது, அதையும் சொல்லுங்கள் என்றாள், அதையும் கொடுத்தேன். என்னமோ பிரச்சனை போலிருக்கிறது அக்கா, நான் உங்களிடம் பிறகு சொல்கிறேன், இன்னொரு நான்கு எண்கள் வந்துள்ளது அதையும் கொடுங்கள் என்றாள். கொடுத்தேன். இப்படியே நான்கு ஐந்து முறை இருக்கும். கொடுத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மனதிற்குள் ஒரு பொறி தட்டியது. மர்ம ஆசாமியிடம் சிக்கியதை உணர்ந்தேன். தம்பியை அழைத்து, அந்த உறவுக்கார தங்கையின் தொலைபேசி எண்களை வாங்கி அவளுக்கு அழைப்பு கொடுத்தேன். (அவளின் புதிய எண்கள் என்னிடம் இல்லை)
ஹாலோ யார் இது.? மறுமுனையில் அவள்தான். நான் தான் விஜயாக்கா, என்றேன். ஏன் திடீர் அழைப்பு.? இப்போதுதான் என் நினைப்பு வந்ததா.? என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. முகநூல் மெசஞ்சர் விஷயத்தை அவளிடம் விளக்கினேன். அரண்டுபோனாள். ஏன்க்கா இப்படி இருக்கீங்க.! என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக்கூடாதா.? என்று உரிமையுடன் திட்டினாள். பேசிக்கொண்டிருக்கின்றபோது பேட்டரி மடிந்துவிட்டது. கைப்பேசி அணைந்துவிட்டது. மண்டையில் நண்டு ஓட, உணவுக்கடையில் உணவைக்கூட சுவைத்து உண்ண முடியாமல், எதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக்கொண்ட சூழலில், சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீடு வந்து சேர்ந்தேன்.
வந்தவுடன் முதல் வேலையாக கைப்பேசிக்கு உயிர்கொடுக்க சார்ஜரில் போட்டேன். சிலநிமிடம் கழித்து கைப்பேசி கண்விழித்தது. என்ன தான் நடந்தது என்று எல்லா குறுந்தகவல்களையும் படபடப்புடன் வாசித்தேன். அதில், use PIN code ____ to complete your payment. This key is valid for 30minutes. என்று வந்திருந்தது. DIGI ringtone புதுப்பிக்கின்ற குறுந்தகவல்கள் வருகின்ற எண்ணில் இந்த குறுந்தகவல்களும் வந்திருந்தன.
என்ன payment confirmation ஆக இருக்கும் என்கிற குழப்பத்தில், DIGI செண்டருக்கு அழைத்தேன். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு அவசர வேலைக்காக அழைத்தால், ஒன்ன அமுத்து, இதுக்காக.. ரெண்ட அமுத்து, அதுக்காக…. மூன அமுத்து, இதுக்காக….. நால அமுத்து அதுக்காக …’ன்னு பொறுமைக்கு சோதனை வரும். பலமுறை முயன்று, ஒருவர் அழைப்பை எடுத்தார். விவரத்தைச்சொன்னேன். அவர்.. ஐய்யோ, உங்களை யார் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கச்சொன்னது, உங்களின் இந்த மாத பில்’இல் இருந்து ரிங்கிட் மலேசியா முன்னூறு சற்றுமுன் தான் அந்த எண்ணிற்கு மற்றப்பட்டுவிட்டது. அதை நாங்கள் திருப்பிக்கொண்டு வர, நீங்கள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் காத்திருக்கவேண்டும். இருந்தபோதிலும் பயம் வேண்டாம், அதை நாங்கள் மீட்டுக்கொள்வோம். இப்படிப் பலமோசடிகள் ஆன்லைனில் நடந்துகொண்டு வருகிறது. நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கவலைவேண்டாம்.! வேறு எதாவது கேட்கவேண்டுமா.? என்று அழைப்பைத்துண்டிக்க நினைத்தார். அவரிடம் சிலகேள்விகள் கேட்டேன். எப்படி எங்களின் DIGI பில் பணத்தை பிறர் எடுத்துக்கொள்ள DIGI அனுமதிக்க முடியும்.! அதற்கு நீங்கள் செய்யவிருக்கின்ற பாதுகாப்பு அம்சங்கள் யாவை.? ஏன் இப்படி நடக்கிறது.? DIGI எடுக்கவிருக்கின்ற எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன.?
அவர் சொன்ன பதில், ஆன்லைனில் இப்படி பலவித மோசடிகள் நிகழ்கின்றன, நீங்கள்தான் உங்களின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். இனிமேல் யார் எதைக்கேட்டாலும் பகிராதீர்கள். எங்களின் நிறுவனம் இந்தச்சிக்கல்களை கூடிய விரைவில் சரி செய்யும். பொறுமை காக்க, என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தார்.
எச்சரிக்கை..எச்சரிக்கை. இப்படி என் பெயரில் யாரேனும் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க நேர்ந்தால், தயவு செய்து பகிராதீர்கள். Fraudகள் நிரைந்த உலகமைய்யா இது.
எல்லாம் முடிந்தபிறகு தங்கைக்கு அழைத்து விவரங்களைக் கேட்டேன். அவளின் முகநூலில் எந்தச்சிக்கலும் இல்லை. யாரும் `ஹெக்’ செய்யவில்லை. ஆனால் யாரோ ஒருவர், அவரின் புகைப்படங்களை எடுத்து/திருடி, பெயரில் சில மாற்றங்கள் (சட்டென்று கண்டு கொள்ளமுடியாத அளவிற்கு) செய்து, உதாரணத்திற்கு; அப்பா பெயர் Murthy என்றால் அதை Mutty என்று மாற்றி, அதை வைத்து ஒரு பேக் ஐடி செய்து, எல்லா உறவுகளுக்கும் நட்பு விண்ணப்பம் கொடுத்து, அவர்களிடம் அவரவர் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துவருவதாக சில உறவுக்கார நபர்கள் பகிர்ந்தார்கள். இந்த வகை திருட்டு, வட்சாப்பிலும் பரவலாக வந்துகொண்டிருக்கிறதாம். கவனம்.!!

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

ஒரு புரிதலுக்காக

நம் எல்லோருக்கும் பள்ளிப்பருவத்தில், வருங்கால ஆசை, யாராக என்னவாக ஆக வேண்டும் என்கிற கனவு ஒன்று இருந்திருக்கும். மண்டையில் படிப்பே ஏறாத எனக்கு, மற்றவருக்குப் போதிக்கின்ற ஆசிரியை தொழிலில் அவ்வளவு ஈடுபாடு. அது எனது லட்சியமாகவும் இருந்தது. மலாய் மொழியில் கிரெடிட் பெற்றிருந்தாலேயொழிய அந்தத் தொழிலுக்குச் செல்வது முடியாத காரியமாகவே இருந்தது. இருப்பினும் முயன்று முயன்று தோற்றுப்போனவள் நான். அதேவேளையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகுந்த ஆர்வமுள்ள நான், அந்தப்பாடங்களை மாலை நேர வகுப்பின் மூலம் டியூஷன் சொல்லிக்கொடுத்து எனது ஆசிரியை தொழில் ஆர்வத்தைத் தீர்த்துக்கொண்டேன். நல்ல வழிகாட்டல், தொடர்ந்து படிக்க வசதிகுறைவு போன்ற காரணங்கள் இருந்தபோதிலும், பரீட்சை புத்தகம் போன்றவற்றின்பால் வெறுப்பு ஏற்பட்டதன் விளைவாகவும், ஒரு கம்பனியில் ரிமா390.00 சம்பளத்தில் வேலைக்குச்சேர்ந்தேன், (அப்போது 1980களில்- இது நல்ல சம்பளம்) ஆசிரியருக்கும் ஆரம்பச் சம்பளம் கூட அதேதான்  என்கிற மன ஆறுதலுடன் நான் எனது ஆசிரியை ஆகும் கனவை நிறுத்திக்கொண்டு, அட்மின் வேலையிலேயே எனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டு அந்தத் துறையிலேயே தொடர்ந்து படித்து எனது அலுவலக கணினி அறிவுகளை மேம்படுத்திக்கொண்டேன்.  

இருந்தபோதினிலும், என் குழந்தைகள் மூலமாக, எனது கனவிற்கு தீனிபோட ஆரம்பித்தேன். என் மகள் ஆரம்பத் தமிழ் பள்ளியில் பயின்றபோது, ஆசிரியை ஆகும் கனவை வைத்திருந்தாள். ஆசிரியர் போல் பாவனை செய்து, கையில் பிரம்பை ஏந்திக்கொண்டு தனக்குக்கீழ் உள்ள பலகீனமான தனது தம்பியை அடிப்பது, மிரட்டுவது, தண்டனை கொடுப்பது என ராஜ்ஜியம் செய்துகொண்டிருப்பாள். படி, இது என்ன.?, அது என்ன.? என்பாள். பிறகு நான்காம் வகுப்பில் அடியெடுத்து வைக்கின்றபோது ஆரிசியை கனவில் இருந்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற கனவிற்குள் நுழைந்திருந்தாள்.  அப்துல் கலாம் மற்றும் கல்பனா போன்றவர்களின் தாக்கத்தால் இந்த முடிவு. பிறகு இடைநிலை பள்ளிக்குச்சென்றவுடன், பல கனவுகளைச் சுமந்த பலவிதமான மாணவர்களின் சகவாசம் கிடைத்தபொழுது, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறபொழுது, கனவுளே இல்லாமல், இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு தேறினாலே போதும் என்கிற மனநிலையில் பயணித்துக்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. இருப்பினும் லட்சியம் இல்லாமல் வாழ்வில்லை, விஞ்ஞானி என்கிற லட்சியத்திலேயே இரு, என்று நான் எச்சரிக்கை விடுத்தபோது, `உங்க தாத்தாதானே, வா கொடுக்கறேன் என்பதற்கு,’ என்று போதனாமுறையின் பால் உள்ள அழுத்தத்தினால் விரக்தியாக உதிர்த்த வார்த்தைகளில் மிரண்டு போயிருந்தேன். கனவுகள் இல்லாமல் லட்சியமில்லை. லட்சியமில்லாத கல்வி எதற்கு, என்கிற எச்சரிக்கையினை அடிக்கடி கூறிய வண்ணமாகவே இருப்பேன்.

அதன்பிறகு நாலாபக்கமும் தோல்வி, விரக்தி, விழுந்து எழுந்து, அழுது புரண்டு, இரவுபகல் பாராமல் படித்து இப்போது மருத்துவர். அதுவும் சிறைச்சலையில். தூக்கு போடவிருக்கின்ற கைதியை நன்கு பரிசோதித்துவிட்டு, இவருக்கு உடல்நிலை சரியாக உள்ளது, தூக்கு போடலாம், என்று சொல்கிற வேலை. சில அனுபவங்கள் பதைபதைக்கவைக்கும். சில அனுபவங்கள் கண்ணீரை வரவழைக்கும். இன்னமும் படித்தவண்ணமாக அவளின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

என் மகன், படிக்கமாட்டான். படிப்பு என்றாலே வேப்பங்காயைய் கடித்ததுபோல் கசக்கும் அவனுக்கு. வீட்டுப்பாடம் இருக்கிறாதா.? என்று கேட்டாலே, நான் செய்துவிட்டேன் என்று பொய்களைச் சொல்லி கார்ட்டூன் பார்ப்பான். கார்ட்டூன் படங்கள் என்றால் அவ்வளவு பிரியம். பார்ப்பதோடல்லாமல் அங்கே அவனை பரவசமூட்டுகிற பாத்திரங்களை வீட்டுச்சுவரில் வரைபடமாக வரைந்து வரைந்து பார்த்து மகிழ்ந்துகொள்வான். அடேயப்பா எவ்வளவு பாத்திரப்படைப்புகளை அவன் வரைந்துள்ளான். கைதேர்ந்த ஓவியர்போல் மிக அழகாக வரைவான். அந்த ஆர்வத்தைக் குழிதோண்டிப்புதைத்தது தாயான நான் தான். சுவர் அசிங்கமாகிறது, உறவுகள் வந்தால் முகஞ்சுழிப்பார்கள், விலையுள்ள சாயம் வீணாய்ப்போகிறது என்று பாடாய் படுத்தி துன்புறுத்தி படிப்பில் கவனத்தைத் திருப்பப்போராடினேன். நான் மட்டுமல்ல கணவரும்தான். என்னுடைய கனவு ஆசியர்தான். கணவருடைய கனவு என்பது பல் மருத்துவர். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தும், ஆரசாங்கத்தையே நம்பியிருந்ததால், இரண்டுமுறை சிபாரிசுமூலம் இண்டர்வியூ சென்று தோற்றுப்போய் சோர்வாகி அந்தக்கனவை நினைவாக்கும் முயற்சியினைக் கைவிட்டார். பணம் இருந்திருந்தால், தனியார் கல்லூரிக்குச்சென்று கல்வி தொடர்ந்திருக்கலாம். அதற்கும் வழியில்லை. காலமும் கடந்துவிட்டது.

நம் குழந்தைகளை நாம் அப்படி விடமுடியாதல்லவா.! எப்பேர்பட்டாவது அவர்களுக்கு ஒரு கனவை உருவாக்கவேண்டும் அதை நிறைவேற்ற பாடுபடவேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம், நாங்கள். எங்களுக்குக் கிடைக்காததையெல்லாம் அவர்களுக்குக்கொடுக்கவேண்டும் என்கிற வெறியுடன் பணம் சேர்க்க ஆரம்பித்தோம்.

இருந்தபோதிலும், மகனுக்கு ஆரம்பப்பள்ளியில் (தமிழ்) படிப்பில் இருந்த ஆர்வம் இடைநிலை பள்ளியில் கணிசமாகக் குறைந்து போனது. முக்கியப்பாடமான மலாய் மொழியில் தேர்ச்சி பெற படாதபாடு பட்டான். வாசிப்புப் பழக்கம் இருந்தாலேயொழிய மொழிப்பாடத்திலும் வரலாறு போன்ற பாடங்களிலும் தேர்வது சிரமம்தான் என்கிறபோது வாசிப்பில் கவனத்தைத் திசை திருப்ப முயற்சி எடுத்தோம். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. வாசிக்கச்சொல்லி போராடினார் கணவர். புத்தகக் கடைகளுக்கு அழைத்துச்சென்றால், கார்ட்டூன்ஸ் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆர்வப்படுவான். எதையாவது வாசிக்கட்டும், வாசிப்பு பழக்கமிருந்தாலே போதும் என்று போராடுவதை நிறுத்தினோம்.

அதேவேளையில், கல்வியில் கவனமில்லாமல் இருக்கின்றானே என்கிற வருத்தம் வாட்டி எடுத்தது. மூன்றாம் படிவ தேர்வில் பின்தங்கி இருந்தான். இருந்தபோதிலும் எஸ்.பி.எம்’இல் அறிவியல்துறை மாணவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆறுதலைக்கொடுத்தது. அந்தத் தேர்வின் முடிவை அவமானமாகக் கருதி உறவுகளிடம் எதையும் பகிராமல், அவனை, மனதளவில் நோகடித்து துன்புறுத்தினேன். படிப்பு ஏறவில்லை, புண்ணியமில்லை, எதற்கும் லாயக்கு இல்லை, சாவு, செத்துத்தொலை என்றெல்லாம் திட்டியிருக்கின்றேன்.

எஸ்.பி.எம் பரீட்சை வந்தது. எஸ்.பி.எம் என்பது மாணவப்பருவ வாழ்வை புறட்டிப்போடுகிற முக்கிய காலகட்டம் என்பதால், படி.. படி.. படி.. தம்பி.. என்று கோரஸ் ஆக பாட்டுப்பாடினோம். இரவு பகல் பாராமல் டியூஷன் வகுப்பிற்கு அனுப்பிவைத்து படி..படி.. படி என்று அவனுக்கு அழுத்தம் கொடுத்து நாங்களும் மனதளவில் நிம்மதியில்லாமல் இருந்தோம்.

தேர்வும் வந்தது, நினைத்ததைவிட நல்ல நிலையிலேயே தேர்வாகி இருந்தான். கணிதம் அறிவியலில் சிறப்புத்தேர்வு பெற்றிருந்தான். முக்கிய நான்கு பாடங்களில் A+ B+ என்று தேர்வாகி மனதில் பாலைவார்த்தான். உறவுகளோடு மகிழ்வாக பகிர்ந்தோம்.

அவனுக்கு நான் ஒரு லட்சியக் கனவை வளர்த்துவிட்டிருந்தேன். அதாவது விமானி ஆவது. (Pilot). ஆரம்பப்பள்ளி முதலாம் ஆண்டு படிக்கின்றபோது, நீ வருங்காலத்தில் என்னவாகப்போகிறாய்.? என்று கேட்டதிற்கு. `எனக்கு எங்க சார, ரொம்ப பிடிக்கும், நான் டீச்சர் ஆகப்போகிறேன்.’, என்றான். பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் ஹீரோ அவர்களைக் கவர்ந்த ஆசிரியர்தான். அதுவே அவர்களின் கனவாகியும் போகிறது. பிறகு கால ஓட்டத்தில் அது மாறிவிடுகிறது.

அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளரோட பேசிக்கொண்டிருந்தேன். அங்கு நடந்த ஒரு உரையாடலை இங்கே பகிர்கிறேன்.
அவர் சொன்னார், ஆண்கள், ஆசிரியர் வேலைக்கு வருவது அதிகமாகக் குறைந்து வருகிறது. அதனால் தேவைக்கேற்ப பள்ளித்தகுதியோடு எந்த ஆண் மாணவன் ஆசிரியர் பயிற்ச்சிக்கு மனு செய்திருந்தால், எந்த ஒரு தடையும் இல்லாமல் அவனை அப்பயிற்ச்சிக்கு உடனே எடுத்துக்கொள்வோம், என்கிறார். இருப்பினும், அந்த பயிற்ச்சிக்கு வந்திருந்த ஆண் மாணவர்கள் பெண்பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் கால் வாசி கூட இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய், அம்மா அடித்து விரட்டியதுபோல் சோகமாய் உற்கார்ந்திருந்தார்கள் அவர்கள். உற்சாகமாய் பெண்பிள்ளைகள். இதிலிருந்து ஆண்களுக்கு ஆசிரியர் ஆவதற்கு ஆர்வமில்லை என்று புரிந்துகொள்ளலாம்.

ஆக, நான், என் மகனுக்கென்று தேர்ந்து எடுத்த கனவு, பைலட். அறிவியல் துறை மாணவனான என் மகனுக்கு, பைலட் கல்லூரியில் நுழைவதற்கு எந்த தடையும் இக்காது என்று நம்பி சில முயற்சியிகளில் இறங்கினேன். மலேசியன் எர்லைன்ஸ் (MAS) கல்லூரியில் விசாரித்தபோது, 10ஏக்களுக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே அவர்கள் கொடுக்கவிருக்கின்ற தேர்வில் அமர வாய்ப்பு உள்ளதாக அனுபவப்பட்டவர்கள் சொல்லக்கேட்டு, மகனிடமும் கூறினேன். அதற்கு அவன், அப்படியென்றால் அங்கே நுழைவது அவ்வளவு சுலபமல்ல போலிருக்கிறது, நான் விமானம் பழுதுபார்க்கின்ற என்ஜினரிங் துறையில் படித்து, சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு பைலட் வேலைக்கு முயல்கிறேன், என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

அந்தத் துறையில் படிக்க அரசாங்கத்தில் மனு போட்டான். கிடைத்தது மெக்கனிக்கல் என்ஜினரிங். அது வேண்டாம் என்று முடிவெடுத்து, தனியார் கல்லூரியில் ஏர்கிராஃப்ட் என்ஜினரிங் பயிற்சியில் சேர்ந்தான். படித்தான். டிப்ளோமா முடித்தவுடன். அந்தத்துறையில் மேலும் தொடர்ந்து படிக்கவேண்டுமென்றால், வேலை அனுபவம் மட்டுமே உதவக்கூடும் என்பதுதான் விதி. வேலைக்கு மனு செய்தான். ஏர் எசியாவில் ஆறு மாதம், மாஸ்’யில் ஆறு மாதம், SAE’யில் ஒரு வருடம் என அனுபவங்களைத் தேடிக்கொண்டான். இடையிடையே பைலட் வேலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் காத்திருந்தான்.

நாட்கள் நகர்ந்தன. விமானப்பழுது பார்க்கின்ற பணியிலேயே தொடர்ந்தான். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவன் அனுப்பிய வேலை மனுவிற்கு பதில்கொடுத்து பணிக்கு அழைத்திருந்தது. அங்கு சென்று வேலை பார்ப்பது அவனின் அப்போதைய கனவாக இருந்தபோதிலும், அடி ஆழ்மனதில் பைலட் என்கிற கனவு தணலாக இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறது என்பதை, ஏர் ஏசியாவின் ஃகெடேட் பைலட்’க்கு மாணவர்களை எடுக்கின்ற விண்ணப்பம் வந்தவுடன், அதற்கு தாவியபோது எனக்குத் தெரியவந்தது.

கட்டங்கட்டமாக ஆறு படிநிலையில் தேர்வு நடத்தப்பட்டபோது, பலர், முதல் படிநிலையிலேயே தோல்வியுற்று திரும்பியிருக்கையில், என் மகன் நான்கு படிநிலை தாண்டி தேர்வாகி, கிட்டத்தட்ட அந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கின்ற நிலையில் முழுநம்பிக்கையுடன் இருந்தபோது, அந்தக் கனவு தரைமட்டமாகச் சரிந்தது. நல்ல உயரம், அழகிய முகவெட்டு, ஆரோக்கிய உடல்வாகு, மாநிறம், அழகிய பெரிய கண்கள், கிட்டத்தட்ட ஹீரோ மாதிரியான லூக் (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு) கொண்ட அவனுக்கு நிச்சயம் இந்த பயிற்ச்சியில் இடமுண்டு என்றிருக்கையில். இப்படி ஒரு இடி.

இறுதி படிநிலை அந்தத்தேர்விற்கு, மருத்துவப்பரிசோதனைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நிலை (first class) மருத்துவப்பரிசோதனை செய்யவேண்டும். உடலைப்பெருத்தவரையில், முதல்நிலை மருத்துவப்பரிசோதனையில் தேர்வாகி இருந்தான். ஆனால், கண்பரிசோதனை என்று வருகிறபோது முதல்நிலை கிடைக்கவில்லை. இரண்டாம் நிலைதான் கிடைத்தது. இரண்டாம் நிலை என்பது ஃகெடேட்பைலட்’ பயிற்ச்சியிற்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது என்கிற முடிவு தெளிவாகத் தெரிந்தாகிவிட்டது. அதன் பிறகு என்ன.!!? மனம் உடைந்து குளிர்காய்ச்சலே வந்து விட்டது என் மகனுக்கு. கனவுக்கோட்டை சரிந்தால் எப்படி இருக்கும் மனநிலை என்பதனை, இதயம் சுக்குநூறாக வெடிக்க என் மகனின் சோர்வில் பங்குகொண்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினேன். எல்லோரும் சொல்வதைப்போல்தான். `இது எதோ நல்லதிற்குத்தான். இவ்வளவு தூரம் அனுப்பிவைத்த இறைவன், இந்த ஒரு நிலையினைக் கடக்கச்செய்யாமல் விட்டிருப்பானா.! இந்த வேலை உனக்குத் தேவையில்லை என்பதனை இறைவனே எடுத்த முடிவாக நினைத்துக்கொள். இல்லையேல், இப்படி உன் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பானா.? பணமில்லை, தேர்வில் தோல்வி என்றிருந்திருந்தால், எப்படியாவது அடுத்தமுறை முயன்றிருக்கலாம் அல்லது பார்க்கலாம் என்று நம்மைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால்,. இது, இப்போதுதான் தெரியவந்த ஒரு பிரச்சனை. இதற்குத்தீர்வு இல்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று மருத்துவர்கள் முடிவு செய்தபிறகு, முடிவு நம் கையில் இல்லை. என்ன செய்வது.! அப்படியே நகர்ந்துசெல்லவேண்டியதுதான் என்கிற ஆறுதலை நான் அவனுக்குக் கொடுத்தபோது என மனமும் சுக்குநூறாக சிதறிப்போனதை என்னால் உணர முடிந்தது. ஊன் உறக்கமில்லமல் நாட்கள் நகர்ந்து மூன்று வாரங்களுக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்துவிட்டதை கொஞ்சம் உணர முடிகிறது.

இப்போதுதான் நான் இந்தக் கட்டுரையினை எழுதியதற்கான முக்கியக் காரணத்திற்கே வருகிறேன். சரி என் மகனின் பிரச்சனை என்னவென்றால்… அவனுக்கு பிறவியிலேயே மிகமெல்லிய யாரும் கண்டுகொள்ளமுடியாத அளவிற்கு Diplopia என்கிற பிரச்சனை இருந்துள்ளது. அது என்ன Diplopia.? என்கிறீர்களா.? இரண்டு கண்களும் ஒரு பொருளை இரண்டு கோணத்தில் காண்பது. அது மிக மோசமாக இருந்தால், பார்ப்பதற்கு மாறுகண் போல் தெரியும் ஆனால் என் மகனுக்கோ, கண் விழிகளை முழுமையாக மேலே உயர்த்தி (விழிகளை மட்டும்- தலையை ஆட்டக்கூடாது) அப்படியே வலது பக்கம் முழுமையாகக் கொண்டுவந்து (விழிகளை மட்டும்-தலையினை ஆட்டக்கூடாது) ஒரு பொருளைப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்க்கின்றபோது, அந்தப்பொருள் அவனுக்கு இரண்டாகத்தென்படுகிறது. இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்று இப்போதுதான் அவனுக்கே தெரிய வந்துள்ளது. காரணம், நாம் எப்போதுமே விழிகளை ஆக மேலே உயர்த்தி, ஆக வலதுபக்கம் திருப்பி ஒரு பொருளைப் பார்க்கப்போவதில்லை, தலையினைத் திருப்பி தலையினை ஆட்டி அங்கும் இங்கும் பார்த்துவிடுவோம். ஆனால், மருத்துவ முதல்நிலை பரிசோதனை என்று வருகிறபோது, இப்படித்தான் பரிசோதிப்பார்கள் கண் மருத்துவர்கள்.

எனக்கு என்ன மன உளைச்சல் என்றால், சிறுவயதில் ஒருமுறை அவன் என்னிடம் சொல்லியுள்ளான், அதாவது, அம்மா, நான் கண்களை பக்கவாட்டில் நகர்த்தி ஜாடைப்பார்வை பார்க்கின்றபோது, என் கண்கள் மங்களாகத் தெரிகிறது, என்பான். உடனே நான், மூக்குக் கண்ணாடிக்கு அடிபோடுகிறான் போல என்று நினைத்து அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை, குழந்தைகள் குணம்தான் தெரியுமே, நண்பன் யாராவது, கண்கண்ணாடி அணிந்திருந்தால், அதே போல் தாமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொய் சொல்வதற்குத் தயங்க மாட்டார்கள். உடனே தாயான நான், இதென்ன?, அதென்ன?, இந்த நம்பர் என்ன?, அந்த நம்பர் என்ன? என்று கேள்விகளைக் கேட்டு, எல்லாம் சரியாகத்தான் உள்ளது. சும்மா இரு, என்று சொல்லி, அவனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

பைலட் ஆக முடியவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது வேறு. ஆனால் ஏன் தாயான, கூடுதல் நேரம் என்னோடு இருந்த என் மகனுடைய இந்தப்பிரச்சனையை என்னால் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்பதுதான் என்னுடைய முக்கியப் பிரச்சனை. அன்றே கண்டு பிடித்திருந்தால், ஏழுவயதிற்குள் அறுவைசிகிட்சையின் மூலம் இதை சரி செய்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இருந்தபோதிலும் இப்போது இது ஒரு பிரச்ச்னையே இல்லை பைலட் ஆகமுடியாது. அது மட்டும்தாம். மற்றபடி எல்லாம் நார்மல்தான். என்கிறார்கள்.  
என்னுடைய இந்த விழிப்புணர்வு கனவுக்கட்டுரை பிறந்ததிற்கான காரணம் புரிகிறதா.?