புதன், டிசம்பர் 25, 2013

முரண்படுகிறேன்..

நிறைய படித்தவர்களை விட இலக்கியவாதிகள் உயர்ந்தவர்கள் என்று எப்படிச்சொல்கிறீர்கள் அம்மா.?.

எல்லா படித்தவர்களுக்கும் மனோத்தத்துவம் தெரியாது. ஆனால் இலக்கியவாதி என்பவர் உளவியல் அறிஞர். 

அப்படியென்றால் உங்களை நீங்கள் உளவியல் அறிஞர் என்கிறீர்களா அம்மா?

நான் இலக்கியவாதி இல்லையே..!

எழுதுகிறீர்கள்..?

எழுதுபவர்கள் எல்லோரும் இலக்கியவாதியா?

நீங்கள் சொல்வது அப்படித்தானே இருக்கு..!?

நான் சொல்வது உனக்கு விளங்கவேண்டுமென்றால், நீ ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருக்கவேண்டும்..!

அப்போ என்னிடம் ஆழ்ந்த வாசிப்பு இல்லையா? நான் ஒரு மருத்துவர்.

யாராக இருந்தாலும் இலக்கியவாதியிடம் நிறக முடியாது.

நீங்கள் முரண்படுகிறீர்கள் அம்மா.!

(உரைக்கு முற்றுப்புள்ளி...)

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மு.அன்புச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் எனக்கு ஏறக்குறைய இருபது ஆண்டு கால நண்பர்.

எழுத்துத்துறையில் அதிகமாக ஊக்கமூட்டியவர்.  பாராட்டிக்கொண்டே இருப்பார். `ஆஹா என்ன அற்புதமா எழுதறீங்க. பெரிய எழுத்தாளர் பாணிங்க இது. கலக்கறீங்க. உங்களின் படிவம் வந்தால் அதைத்தான் முதலில் வாசிப்பேன், தொடர்ந்து எழுதுங்க.. என்பார். (டூப்பு)

அன்று நான் எழுதிய பதிவுகளை இன்று வாசிக்க நேருகிறபோது, `ச்சே என்ன இப்படி இருந்திருக்கு நமது சிந்தனை.! இதுவா எழுத்து.? அப்படிப்பாராட்டினாரே ஆசிரியர் அன்புச்செல்வன்..’ என்றெல்லாம் யோசித்து உடனே அவரை அழைத்து `என்ன சார், இதுவா எழுத்து, அன்று ஒரேடியா ஐஸ் வைச்சீங்களே..?’ என்று கேட்கின்றபோது.. `ஹிஹிஹி’ என்று சிரிப்பார்.

எழுத்தில் ஆர்வம் இருக்கின்ற எந்த வாசகரையும் ஆசிரியர்கள் அவமதிக்கலாகாது. எழுத்து ஆர்வம் எல்லோருக்கும் வந்துவிடாது. எனக்குத்தெரிந்தது எழுத்து மட்டும்தான். இந்த எழுத்தும் வாசிப்பும் எனக்கு இல்லையென்றால் நான் என்றோ பைத்தியக்காரன் ஆகியிருப்பேன். எழுத்து என்னைக் குதூகலமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பழக்கம் பயிற்சி எல்லோருக்கும் வரவேண்டும் என்பதால்தான், எழுத நினைக்கின்ற அத்தனை வாசக எழுத்தாளர்களையும் நான் உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கின்றேன்.’ என்பார்.

எழுதுகிறவர்களின் எழுத்துப்பிழைகளையும் கருத்துப்பிழைகளையும் அழகாகத் திருத்தி பிரசுரிப்பார். சில படைப்புகளை அப்படியே மாற்றிவிடுவார். ஒரு காலகட்டம் வரை அவரின் திருத்தம் எனக்குத் திருப்தியளித்தது. அதன்பிறகு, நமது கருத்துகளின் அநாவசியமாக கைவைக்கின்றார், நம் படைப்பில் நாம் இல்லை அவர்தான் இருக்கின்றார், என்கிற நெருடல் என்னைக் குடையவே படைப்புகளை அவருக்குக்கொடுப்பதைக் குறைத்துக்கொண்டேன். (சரியாக எழுதவராது என்பது வேறு விஷயம்..!)

சில பத்திரிகைகள் அவரை  மாறி மாறி பந்தாடியபோது, அவர் வேலை இல்லாமல் இருந்தார். அந்த மனவுளைச்சல் அவரை நோயாளியாய் ஆக்கியது. அப்போது அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் வியாதி வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். TB யாக இருக்குமோ என்று கூட சோதனை செய்துகொண்டார்.

எப்போதும் சரளமாக தங்குதடையில்லாமல் உரையாடும் அவர் கொஞ்ச காலமாக பேசுவதற்குக்கூட முடியாமல் சதா இரும்பியவண்ணமாக இருந்தார். `போதுங்க செத்துவிடுவேன் போலிருக்கு.’ என்று சொல்லி, சிலவேளைகளில் அழைப்பை அவரே துண்டித்துவிடுவார். சரி, ஏன் தொந்தரவு செய்வானேன், என்று நினைத்து அழைக்காமல் விட்டு விட்டால், குறுந்தகவல் அனுப்பி கிண்டல் செய்வார்.. `விஜயா என்கிற தலைசிறந்த பெண் எழுத்தாளரைக் காணவில்லை, தேடிக்கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப்படும்.’ என்று எழுதி அனுப்பிவைப்பார்.

பழகுவதற்க்கு இனிமையானவர். பேசுகிறபோதெல்லாம்.. அடிக்கடி எழுதுங்கள்.. என்று, எழுத்தில் ஆர்வமூட்டிக்கொண்டே இருப்பார். எதையாவது எழுதுங்கள். எழுத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பார். படைப்புகளைக் கேட்டு வாங்குவார். என்னமோ நாம் பெரிய எழுத்தாளர் போல..!

அவரிடம் நான் இறுதியாகப் பேசிய (குறுந்தகவல் வழி) வார்த்தை - சென்ற ஞாயிறு மலரில் (15/12/2013) வெளியான `வேலி மனிதர்கள்’ என்கிற சிறுகதையைப் பற்றியதுதான். ஒரு அற்புதமான சிறுகதை அது. நல்ல தேர்வு. கதை தேர்வில் உங்களை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. என்கிற குறுஞ்செய்திதான் அது.

எப்போதும் குறுந்தகவல் அனுப்பினால், `இப்போதுதான் என் ஞாபகம் வந்ததா? இந்த விஜயா அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்..’ என்று கிண்டல் செய்கிற அன்புச்செல்வன், இந்த முறை என்னுடைய குறுந்தகவலுக்கு `tq' என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தார்.

அப்போது அவர் (19/12/2013) மருத்துவமனையில் இருந்துள்ளார் என்று, இன்று அவரின் மரணத்தின் போது (21/12/2013)  எனக்குத்தெரியவந்தது. முன்பெல்லாம் அடிக்கடி பேசுகிற நான், அன்றைய நாளில் ஒரு அழைப்பு கொடுத்துப்பார்த்திருக்கலாமே, என்று இறப்புச்செய்தி வந்தவுடன் மனங்கலங்கி வருந்தினேன்.

நிலையில்லா வாழ்வு, நம்மை மிகவிரைவாக நகர்த்திச்செல்கிறது. நேற்றுப்பார்த்தவர் இன்று இல்லை. நினைத்துப்பார்க்காததெல்லாம் நடக்கிறது. மேலும் அவருக்கு எழுபத்தொன்று வயது என்று இன்றைய பத்திரிகைகள் (22/12/2013) சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. குரலும் எழுத்தும்தான் அறிமுகம் அவருக்கு. இனிமயாகப் பேசுவதால் நாற்பது நாற்பத்தைந்து இருக்குமென்று நினைத்திருந்தேன். வயதைப்பற்றியெல்லாம் இருவரும் விசாரித்ததில்லை. அவரும் சொன்னதில்லை.

அவரின் மற்றொரு சிறப்பு, என்னுடைய எழுத்து இங்கே வந்துள்ளது.. அங்கே வந்துள்ளது. எனக்கு இந்த பட்டம் எல்லாம் கிடைத்துள்ளது, நான் இவ்வளவு எழுதியுள்ளேன், என் எழுத்தை வாசித்துப்பாருங்கள். நான் எழுதியதை வாசித்தீர்களா? என்று, இதுவரையிலும் கேட்டதில்லை. அவருடனேயான நட்பில் எனக்கு இதுதான் மிகப்பெரிய ஆச்சிரியம். எதை எழுதினாலும், என் படைப்பை வாசித்தீர்களா.? என்று கேட்டதே இல்லை. நாமே சொன்னாலும்.. ஹ்ம்ம் அது.. ஓ.. ஹ்ம்ம் என்று மழுப்பிவிடுவார்.

அவருடன் நட்பு பாரட்டுதலில், எனக்கு அவர் அனுப்பிய பரிசு, அவரின் மூன்று புத்தகங்கள். 1.விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்.(சிறுகதைகள்) 2. மு.அன்புச்செல்வனின் அரை நூற்றாண்டுச் சிறுகதைகள்.  3. திரைப்படங்களின் தாக்கங்கள். (கட்டுரைகள்)

இவைகளில் இரண்டு புத்தகங்களை முழுமையாக வாசித்துமுடித்துவிட்டு, சிறுகதைகளைப்பற்றிய எனது கருத்தினை அவரிடம் கூறுகையில். `பெரிய எழுத்தாளர் நீங்கள். என் புத்தகத்தை நீங்கள் தொட்டு வாசித்ததே நான் என் பிறப்புப் பலனை  அடைந்துவிட்டேன். கருத்துவேறு கூறுகின்றீர்களே, பயமாக இருக்கின்றது என்று கலாய்ப்பார். செம ரகளையாக இருக்கும்.

அன்றைய எனது எழுத்துகளை, நான் இப்போது வாசிக்கின்றபோது, அன்றைய என்னை இன்றைய நான் வெறுக்கிறேன். இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் வலிமையான வளமையான கருத்துக்களை நுழைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் வரும். அதனால் எனது எழுத்துகளை பாராட்டுகிறவர்களை விட, திட்டுகிறவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன், என்பார்.

நான் நடந்து வந்த எழுத்துலக பாதை சுவாரஸ்யமானது. ஆனால் எழுத்தில் நான் இன்னும் கத்துக்குட்டியே, என்பார். இதை நான் தன்னடக்கம் என்று சொல்லமாட்டேன். அதுதான் உண்மையும் கூட.

அவரிடம் நான் முரண்படுகிற கருத்து, இன்னமும் எழுத்து என்றால், மு.வ, ந.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், கல்கி, சாவி, சிவசங்கரி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன் போன்றோர்களின் எழுத்து பாணியைத்தான் எழுத்து என்பார். அவர்களைத்தவிர வேறு யாரையும் நான் வாசிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய நவீன எழுத்து நவீனத்துவம் என்பதெல்லாம் சும்மா எழுத்தை வைத்து விளையாடும் சித்து விளையாட்டேயன்றி வேறில்லை. பொழப்பில்லாதவனுங்க. எழுத்துலகத்தை நாசம் செய்யறானுங்க. இதையெல்லாம் நவீன் மற்றும் பாலமுருகனிடமோ சொல்லிவிடாதீர்கள். எழுதியே சாகடிச்சிபுடுவானுங்க. யம்மயம்மா இலக்கிய உலகைப் படுத்தறானுங்கய்யா... ரத்தக்கொதிப்பே வருது. நான் கொஞ்ச காலம் வாழணும். என்பார் நகைச்சுவையாக.

படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால், வசீகரமிக்க எழுத்தாற்றல் கொண்டவர். பஞ்ச பாண்டவர்களின் கதைகளையும் இராமாயணத்தையும் நன்கு உள்வாங்கிக் கரைத்துக்குடித்துவிட்டு அதிலிருந்து சில பகுதிகளை கதைகளில் சேர்ந்து, சொந்த கற்பனைகளையும் கலந்து கதை வடித்துக் கொடுப்பதில் கில்லாடி எழுத்தாளர்.  மிக மிக அழகாக சிறுகதைகளை எழுதுவார். சோர்வில்லாத வாசிப்பினை கொடுக்கின்ற ஆற்றல் அவரின் எழுத்திற்கு உண்டு. எல்லாக்கதைகளும் பழய பாணிக்கதைகள்தான். ஆழ்ந்த வாசிப்பில்லாமல் மேலோட்டமாக கண்களை மேயவிட்டாலே புரிந்துகொள்ளலாம். இருப்பினும் அழகிய கதைகள்தான் அனைத்தும்.

வா மரணமே என்கிற அவரின் சிறுகதையில் எமனோடு பேசுவதைப்போல் ஒரு உரை வரும். அதில் `நீ சொல்லும் மரணத்தை நான் எப்போதே சந்தித்துவிட்டேன். இப்போது வெறும் கட்டையாக இருப்பத்தைத்தான் உணர்கிறேன். எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த கலைஞர் என்றைக்கோ வசனம் பேசியிருக்கின்றார். கனவுகளற்ற தூக்கம் போன்றது மரணம் என்றால் அதற்காக நான் ஏன் பயப்படவேண்டும். மரணம் என்பது விழிப்பில்லாத ஒரு நெடிய தூக்கம். மீண்டும் கண்விழித்துப்பார்க்கமுடியாத ஒரு மயக்க நிலை...’

ஆம், மயக்க் நிலையில்தான் உள்ளார் மு.அன்புச்செல்வன். மரணம் தழுவிக்கொண்டது என்கிறோம்.

அவர் அடிக்கடி எனக்கு நினைவுறுத்தும் வாசகம்...

`எழுத்தாளர்கள் விமர்சனங்களுக்கு மனச்சஞ்சலம் கொள்தல் கூடாது. அது நல்லனவையாக இருக்கட்டும் அல்லது தூற்றுதலாகவோ இருக்கட்டும்.. எழுதிக்கொண்டே இருங்கள்.. நல்ல கருத்துக்களைக் கொடுக்கமுடியாதவன், பன்னி என்பான் நாய் என்பான்... அவனை சமூதாயம் அடயாளங்கண்டுகொள்ளும்.. பதில் கொடுத்து நம் முகத்தில் நாமே காறி உமிழ்தல் மட்டும் கூடாது.’ 

பக்குவப்பட்ட பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா என்ன.! இது ஒன்றே போதும். 


அவரின் மற்ற நூல்கள் -

ஒரு புதிய இலக்கை நோக்கி (செந்தூல் வரலாறு)
தவத்தின் வலிமை (சிறுகதைகள்)
தீபங்கள் (சிறுகதைகள்)
பிச்சைப் பாத்திரங்கள் (சிறுகதைகள்)
விலாங்குகள் (நாவல்)

எழுத்தாளருக்கு மரணமில்லை. அவர் என்றென்றும் அவரின் எழுத்தில் ஜீவித்திருப்பார். இருப்பினும் கடிதங்கள் மற்றும் படைப்புகளை அவருக்கு அனுப்புகின்றபோது இறுதியில் நான் அவருக்குச்சொல்லும் வாசகம். ..
``நன்றி சார்...’’

ஆனால் இன்று....  GOOD BYE சார். WILL MISS YOU FOREVER.



கண்களையாவது திறந்துவை..

ரிஷிமூலம் கதைக்கு - கதையை விட ஜெயகாந்தன் எழுதிய முன்னுரை இருக்கே.., ஒவ்வொரு வரியும் தத்துவம். எல்லாவற்றையும் எழுதவேண்டும்போல் தேன்றினாலும் சில இங்கே உங்களின் பார்வைக்கு.. :-

1965தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளான ரிஷிமூலத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய விளக்கம் இது. படித்துப்பாருங்கள். அற்புதம். நம்முடைய தற்போதைய நிலவரத்திற்கு பதில் சொல்வதைப்போல் உள்ளது.

1. இந்தக் கதையை எழுதியதின் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கின்றேன் என்பதைத்தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கெடுத்து விட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கம் எதுவும் கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்குக்கிடையாது. இந்தச் சமூதாயத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதர்களுக்கு என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு.

2. நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப் பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச்சொன்னதை நான் உலகத்திற்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன்.
அது அற்பமாக அசிங்கமாக கேவலமாக அல்லது அதுவே உயர்வாக உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்.?

3. நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக்கூட்டத்திற்கும் எப்போதும் தாலி கட்டிக்கொண்டதில்லை.

4. எத்தனையோ சமூதயப்பிரச்சனைகள் இருக்க, இதை ஏன் நீ எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள். நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள் நான் எழுதாததைப்பற்றி கேள்விகள் எழுப்புவது என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப்புரியவில்லை.

5. தங்கள் அரை வேக்காடு படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்யவேண்டுமென்று நினைக்கிறவரக்ள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழங்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே. ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர் கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.

6. நான் சமூதாயத்தை உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோஷலிஸமே எனது லட்சியம். புரட்சி ஓங்குக. தொழிலாளி வர்க்கம் ஜிந்தாபாத்.! நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்காகவே என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடை போட்டு வருவது என்னைப்பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே.

7. மனோதத்துவமும் இலக்கியம் அதிகத் தொடர்புடையன. பிராய்டும் கூடத் தன்னுடைய சில ஆராய்ச்சி முடிவுகளுக்கு அனுசரணையான சான்றுகளை இலக்கிய ஆசிரியரின் நூல்களிலிருந்தே எடுத்துக்காட்டுவான்.

8. சமூதாயம் என்னைத்தூக்கி எறிந்துவிடும் என்கிற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில் தூக்கி எறியப்படப்போகிற ஒரு சமுதாயத்தின் மூர்க்கமான அலறலையே நான் கேட்கிறேன்.

9. உண்மையாக இலக்கியம் படைக்கிற தகுதி உடைய எவனும் நான் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக எழுதுகிறேன் என்கிற வாக்குமூலத்துடன் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

10. பாலுணர்ச்சிப் பிரச்ச்னைகளை அடிபப்டையாகக் கொண்டு நான் கதை எழுதுகிறேன் என்பது இன்னொரு தாக்குதல். பாலுணர்ச்சி பிரச்சனை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சனை அல்ல. அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சனைதான்.

11. பாலுணர்வுப்பிரச்சனை என்பது ஏதோ பணக்கார வர்க்கத்துப்பிரச்னை என்று எண்ணுவது வடிகட்டிய பாமரத்தனம். பாலுறவு பற்றிய ஆரோக்கியமான கண்ணோட்டமில்லாத தனி மனிதன் வளர்ந்த மனிதனாக மாட்டான். அப்படிப்பட்ட சமுதாயம் வளார்ந்த சமுதாயம் ஆகாது.

12. ஒரு மனநோயாளியின் மன உணர்வுகளைத் தன்னிலையில் இருந்து எழுதுவதன் மூலம் விமர்சகர்களையே அதை என் நிலை என்று நான் எண்ண வைத்துவிட்டேன் என்றால் என் எழுத்தின் வலிமைக்காக நான் கர்வம் கொள்கிறேன்.

13. கதையின் நாயகன் ஒரு மன நோயாளி. ஒரு மனநோயாளியின் மனசுக்குள்ளே நிகழ்கின்ற சம்வாதங்கள் , தர்க்கங்கள், சுய மறுப்புகள் சுய தரிசனங்கள் எவ்வளவு அற்புதமாக நிகழ்கின்றன என்பதைக் காணும்போது இவன் இப்படி ஆனதிற்கு நாம் வருத்தம் கொள்ளுதல் வேண்டும். மூடத்தனமான சமூக குடும்பக் கட்டுகளும் தனக்குத்தானே போட்டுக்கொள்கிற கட்டுகளும் சமுதாயப் பிரச்சனை அல்லவா.?

14. இன்று நம் சமுதாயமே ஒரு மடமாகவும் ஒவ்வொரு தனிமனிதனும் பாதிச் சாமியாராகவும் வேஷம் போடுகிற பண்பாடு வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். எனவே இங்கே  SEX ஒரு பிரச்சனையாகிறது. இப்படிப்பட்ட கட்டுகளினாலும் இந்தச் சமுதாயத்தில் சிறந்த தனி மனிதர்கள் உருவாக முடிவதில்லை. கல்வியும் பொருளாதார அந்தஸ்தும் இருந்தும்கூட மனவளம் படைத்த மனிதர்கள் இங்கே உருவாவதற்குச் சிரமங்கள் உள்ளன.

15. சிறந்த தனி மனிதர்களை உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது. செக்கு மாடுகளை உற்பத்தி செய்யும் சமுதாயம் தேங்கி அழிகிற சமுதாயம்.

16. நான் உன்னில் ஓர் அங்கம்தான் ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம் அல்ல..

17. நீ என்னைத்தூக்கி எறிந்துவிடுவாய் என்ற அச்சுறுத்தலுக்கு நான் பயப்படமாட்டேன். என்னிடம் யாரும் சமுதாயப்பூச்சாண்டி காட்ட வேண்டாம்.

18. இந்தச் சமுதாயத்தை என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாகக் கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துகளைப் பாடப்புத்தமாக வைக்கச்சொல்லி நான் மனு போடவில்லை. எனது எழுத்துகளுக்கு அந்தத்தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிக்கு  அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை.

19. இங்கே தமிழில் படிப்பதற்கு ஒன்றுமில்லை. சாரமற்ற வம்புகளும் சத்தில்லாத பொழுதுபோக்குக் குப்பைகளும் மலிந்து வருகிறது.  இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்தில்  தான் கற்கவேண்டும். (அப்போ நீ ஏன் தமிழில் எழுதுகிறாய்? என்று கேட்டால் அதற்கும் அவர் பதில் கொடுக்கிறார்.)

20. அறிவை, மனசைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்களையாவது திறந்துவை. 

செவ்வாய், டிசம்பர் 10, 2013

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது..

நம் நாடு பத்திரிகை ஆசிரியர் வித்தியாசாகருக்கு

இந்தக் கடித்ததை எந்தப் பத்திரிகை ஆசிரியருக்கும் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. எழுதினால் உங்களுக்குத்தான் எழுத வேண்டும் என்கிற சிந்தனையில் உதித்த கடிதம் இது.

இளய தலைமுறை எழுத்தாளவர்க்கத்தினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும், திகழ்ந்து வரும் உங்களைப் பற்றி நன்கு அறிந்த வாசக எழுத்தாளர் என்கிற முறையில் இதை உங்களிடம் உரிமையுடன் பகிர்வதில் பேருவகை கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை நீங்களும் அறிவீர்கள். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.

ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.

பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது.? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசாலையல்ல.  அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்பில்லை.  

இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த அனுபவமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம், தமிழ், மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?

நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன், அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே.., ஒரு இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்காக செயல்படுவது.!

ஒரு இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகளோ வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்.!? சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் அணுகவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.

நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். பத்திரிகை ஆரிசிரியர் என்கிற முறையில் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். விமர்சனம் என்று வருகிறபோது மட்டும், வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்.? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று, இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டு விட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.  

எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் அதைச் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.

எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்தச் சமுதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சத்திரித்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.

வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்கு பணி இடைநீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம். பத்திரிகை ஆசிரியர்களே, உங்கள் கைகளில் செய்தி ஊடகம், இருப்பினும், இலக்கிய வளர்ச்சிக்கு உங்களின் பங்கும் அத்தியாவசிய ஒன்று. இலக்கியத்தின் நிலைமையைப் பார்த்தீர்களா? எழுத்தாளர்களின் நிலை பார்த்தீர்களா?

இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.  

இலக்கியம்போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.


ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் நல்ல படைப்புகளைக் கொடுக்கமுடியாது.


அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.


ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.


எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்


ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.


இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

படைப்பு விமர்சனத்திற்கு உற்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.

10/12/2013 - நம் நாடு - பத்திரிகையில் வந்த எனது ஆதங்கக் கட்டுரை.
நன்றி திரு வித்யாசாகர். ஆசிரியர் நம் நாடு.  

படித்ததில் பிடித்தது - பாண்டியன் அன்பழகனின் கட்டுரை.

இன்று நம் நாடு நாளிதழில் தயாஜியின் சிறுகதை குறித்த எனது கண்ணோட்டம் வெளிவந்தது. நாளிதழ் வாசிக்காத நண்பர்களுக்காக அக்கட்டுரையை இங்கு பதிவேற்றம் செய்கிறேன். நன்றி: நம் நாடு.

கழிப்பறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ – தீர்ப்பு உங்கள் கையில்
அ.பாண்டியன்.

கடந்த மூன்று நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை மூடிக்கொண்டிருந்தோம் என்பதே இங்குள்ள இலக்கிய வெளிப்பாடாக இருக்கும் போது பலர் இக்கதையை பற்றி (நல்ல மாதிரியோ வேறு மாதிரியோ) எழுதிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று நாளிதழ்களிலும் அறிக்கைகள் வந்துள்ளதால் இச்சிறுகதை கூடிய விரைவில் ‘வெள்ளிவிழா’ கொண்டாடக் கூடும். அந்த அபூர்வத்தை நிகழ்த்தி காட்டிய அளவில் ‘கழிப்பறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ (க.ப.வ) வை மனதார பாரட்டலாம். அதோடு மலேசிய வாசகர்களை ஒரு வாரத்திற்கேனும் இலக்கியம் குறித்த தீவிர கலந்துரையாடலுக்குள் தள்ளிவிட்ட வல்லினத்திற்கும் நன்றி பாராட்டத்தான் வேண்டும்

இச்சிறுகதை குறித்த என் தனிப்பட்ட கருத்துகள் சில உள்ளன. ஆனால் அதற்கு முன் க.ப.வ மீது பல்வேறு சாடல்களை தொடுப்பவர்களின் கருத்தை மதித்து மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியம். அவர்களின் இலக்கிய ரசனை, எதிர்ப்பார்ப்பு, அவர்கள் வடித்துக்கொண்ட இலக்கிய நோக்கம் போன்ற பல்வேறு கூறுகளை இச்சிறுகதை களைத்துப் போட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழர் வாழ்வியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக உணரும் பலரின் ஆவேச குரலை நான் மதிக்கிறேன். அது அவர்களின் உரிமை. மலேசிய சூழலுக்கு இப்படிப்பட்ட கதை தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. நான் அணிந்திருக்கும் ஆடையை திடீரென உருவி என்னை கோவணாண்டியாக்கி விட்டு, பண்டை தமிழர் கோவணம் உடுத்தி வாழ்ந்தவர்களாவர் ஆகவே நான் அதை சினம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. நான் நிச்சயம் கோபப்படுவேன். அது தார்மீக கோபம்.

அந்த அன்பர்களுக்கு, வல்லினம் ஆசிரியர் என்ற நிலையில் நவீன் பொறுப்புடன் கொடுத்த நீண்ட விளக்கம் ஓரளவேணும் புரிதலை கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அந்த விளக்கமும் அவர்களுக்கு ஒம்பாமல் போகலாம். அதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் ஒரு இலக்கிய பிரதியின் தரத்தையும் தேவையையும் முடிவு செய்யக்கூடியவர்கள் உண்மையான வாசகர்கள்தான். வெளிச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரிக்க மாட்டான்.

அடுத்து இன்னொரு சாரார் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று தங்கள் பழிவாங்கும் அரசியலை நிறைவேற்ற இச்சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சைக்குள்ளாவதை காரணம் காட்டி இதுநாள் வரை வல்லினம் முன்னெடுத்த எல்லா போராட்டங்களையும் சிறுமைபடுத்தி ஒரு நாளிதழில் செய்தி போடும் ‘கோழை’ தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொதுவான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது வாயை மூடிக் கொண்டு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன; நமக்கு எல்லாரும் வேண்டும், என்று இருந்தவர்கள் இப்போது வல்லினத்தின் யோக்கியதையை பதம் பார்ப்பது கீழ்த்தரமான அரசியல் அன்றி வேறில்லை. நீண்ட காலமாக வல்லினத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த பலரின் குள்ளநரித்தனம் இப்போது வெளிப்படுவது ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இக்கதை குறித்த எந்த விளக்கமும் தேவை இல்லை. அவர்களிடம் நம் சொல் எடுபடாது. அதைவிட அவர்களுக்கு இலக்கியம் பற்றியோ சமுதாயம் பற்றியோ எந்த வித உண்மை அக்கரையும் இல்லை. அவர்களின் நோக்கம் வல்லினத்தையும் அதன் குழுவினரையும் சமுதாய அசிங்கங்களாக காட்டி தங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்வது மட்டும்தான். ஆகவே அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் ‘அப்படியே செய்க!’ என்று மட்டும்தான் கூற முடியும்.

சரி இனி க.ப.வ குறித்த எனது கருத்துகள். முதலாவதாக இது ஒரு பின்நவீனத்துவ கதை அன்று. நோன் லீனியராக கதை சொல்லும் உத்தியும் இல்லை. ஆக இது வழக்கமான நேர்கோட்டு எதார்த்தவியல் கதை. ஆனால் கதையில் களம் இல்லை. கதை முழுதும் ஓரங்கவுரை புலம்பலாக அமைந்துள்ளது. கதை எடுத்துக் கொண்ட கருவும் மிகவும் பழமையானது. செயலுக்கு ஏற்ற பலாபலன்களே நமக்கு கிட்டும் என்பதையே இக்கதையும் கூறுகிறது. அதாவது இருவிணை தத்துவத்தையே இக்கதையும் வழிமொழிகிறது.
அடுத்து, இக்கதை காமத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வது அடிப்படையிலேயே பிழையான கருத்து. உண்மையில் இக்கதை காமத்திற்கு எதிரானது. காம உணர்வை அருவருப்பானதாக காட்டும் பழம்போக்கை மீறாத பழமைவாத கதை. காமத்தை மலத்தோடு ஒப்பிடும் ‘சமண மத’ கொள்கையை வலியுறுத்தும் இக்கதை ‘மலரினும் மெலியது காமம்’ என்ற தமிழ் சூழலை புறக்கணிக்கிறது என்பதே உண்மை. காம வலையில் சிக்குதலும் கழிப்பறையில் சிக்குதலும் ஒன்றே என்னும் போதனையையே இக்கதை செய்கிறது. எளிமையாக சொல்வதென்றால் புகழ் பெற்ற பழைய ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்பட பாணியை ஒத்த கதையே இச்சிறுகதை. அப்படத்தை இக்கதையின் ‘தெளிந்த’ முன்மாதிரியாக கூறலாம். காமத்தின் தூண்டுதலால் முறையற்று செயல்பட்டவன் இறுதியில் “கொண்டவளைத் துறந்தேன்; கண்டவள் பின் சென்றேன்; இன்று கண்களையும் இழந்தேன்” என்று புலம்புவதன் நவீன விரிவாக்கமாகவே இக்கதை போக்கு உள்ளது. புலம்பலின் வெளிப்பாடே கழிப்பறையில் சிக்கியவனின் பேச்சும் செயலும். ஆக இது நிச்சயம் காமக் கதை அன்று.

இப்படி காமத்தை இழிவானதாக கூறும் இக்கதையை காமக் கதை என்று (தவறுதலாக) குற்றஞ்சாட்டி பலரும் கடுமையாக தாக்குவதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, அதன் விவரிப்பு மொழியும் கதை சொல்லும் பாங்குமே காரணம் என்று நாம் கண்டடைய முடியும். அதை தொட்டே வேறு பல சிக்கல்களும் பண்பாட்டு விழுமியங்களை உரசிப்பார்க்கும் தன்மையும் தெரிகிறது

முதலாவதாக, கதையின் காட்சி விவரிப்புகள் மிக அதிகம். வாசகனின் கற்பனைக்கு வேலை வைக்காமல் படைப்பாளனே வலிந்து சொல்லுதல் தேவை இல்லாதது. சொல்லியும் சொல்லாமலும் செல்லவேண்டிய பகுதிகள் இக்கதையில் நிறைய இருந்தும் படைப்பாளி எல்லாவற்றையும் தானே சொல்ல முன்வந்தது முதல் தவறு. வாசகனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் போக்கே இக்கதையில் குழப்பம் ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக கதைநாயகனின் பாலியல் மனப்பிறழ்வு தன் தாயின் மேல் காமம் கொள்ளச் செய்கிறது என்பதை வாசகர்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். தாய்மை புனிதமானது என்பது இக்கதையில் எந்த இடத்திலும் மீறப்படவில்லை. தன் மகனின் கண்ணில் விழுந்த தூசை பரிவுடன் நோக்கும் தாயின் அன்பே முதன்மையாகிறது. ஆனால் அதை மறக்கடிக்கும் படியாக நீலப்படம் குறித்த தெளிவான விவரிப்பு கதைக்கு சற்றும் தேவை இல்லாதது. இதை வெறும் ஆபாச திணிப்பு என்றுதான் வாசகர்கள் உணர்வார்கள்.

கதையின் பல்வேறு இடங்களில் கதையின் முக்கியத்துவத்தை சிதைக்கும் காட்சி விவரிப்புகளால் இக்கதை நிரம்பி இருக்கிறது. காட்சி விவரிப்புகள் கூடும் போது தேவையற்ற பாலியல் காட்சிகள் தவிர்க்க முடியாமல் போயிருப்பதை உணரமுடிகிறது
இறுதியாக, கதையின் முடிவும் கதை போக்கை சிதைத்து விடுகிறது. சிறு வயது முதல் பல்வேறு காம அவலங்களில் கழித்திருந்த ஒருவன் தன் இறுதி நாளில் (தன் செயலால்) மனம் வருந்தி அரற்றுவதாகவே கதையை தயாஜி வடிவமைத்து இருக்கிறார். அந்த அரற்றலின் உச்சம்தான் தன் இஷ்ட தெய்வம் காளியிடம் முறையிடுதல். காளியை தன் காதலியாக கதைநாயகன் நோக்குவது இந்து ஞான மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. கடவுளை குருவாக, தந்தையாக, தாயாக, நண்பனாக, காதலி அல்லது காதலனாக நேசிக்கும் மாண்பை இந்து ஞானம் போதிக்கிறது. ஆகவே இக்கதைநாயகனின் போக்கு விந்தையானது அல்ல. ஆனால் காளியை காதலியாக கண்டவன் அவளுடன் ஐக்கியமாதலை முதன்மையாக கொள்வதை (சரணாகதி நிலையை) படைப்பாளரால் தெளிவாக கொடுக்க முடியவில்லை என்பதே என் கருத்து. மேலும் ஆரம்பம் முதல் தன் காமத்தை வெறுத்து இம்மை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டும் என்று புலம்பியவன் இறுதியில் காளியிடம் ‘காதலை உயர்த்திப்பிடி, காமத்தை விதைப்போம்’ என்று கூறுவது மிகப்பெரிய முரண். இந்த முரணே தெய்வ அவமதிப்பாக தோற்றம் தருகிறது. மொத்த கதையும் இவ்விடத்தில் தான் திசை மாறிப் போவதாக நான் கருதுகிறேன்.

ஆகவே தயாஜியின் க.ப.வ வை சாடுவதும் பாராட்டுவதும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்ட நிலை. ஆனால் சாடுவதாக இருந்தாலும் பாராட்டுவதாக இருந்தாலும் – மற்றவர்கள் சொல்கிறார்களே என்று செயல்படாமல் - இக்கதையின் உட்கிடங்கை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சரியான புரிதலின் வழி மட்டுமே சரியான தீர்ப்பை உங்களால் வழங்க முடியும். நன்றி.

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

படைப்புலகில் சோதனை

இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.

ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.

அதற்காக http://vallinam.com.my/version2/?p=789 தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்’ என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.

இருந்தபோதிலும் படைப்பு மண்டையைக் குடையவே ஆரம்பித்தது.நவீன் சொல்லியிருக்கின்ற கருத்துக்களை அனைத்தும் அருமை. அப்படிப்பார்க்கையில் ஒரு படைப்பாளியாகப்பட்டவன், நவீன் சொல்லியிருக்கின்ற அனைத்து இலக்கியங்களையும் வாசித்தாலேயொழிய தெரிந்திருந்தாலேயொழிய இக்கருத்தையொட்டிய செம்மையான படைப்பினை சீர்த்தூக்கிப் பார்த்து வழங்க இயலாது என்று சொன்னால் அது மிகையல்ல.

அப்படி எந்த ஒரு பரந்த வாசிப்பு அனுபவமும் இல்லாமல் இதுபோன்றதொரு கருவைத்தொட்டு படைப்பினைப் படைக்கப்படுகிறபோது அது வெறும் வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே பரிணமிக்குமே தவிர நுண்ணறிவு சமாச்சாரங்கள் அங்கே ஒருபோதும் இருக்காது. இக்கதையில் வரும் சில இடங்களின் சம்பவங்களில் எனது வாசிப்பு அனுபவமும் அப்படித்தான் இருந்தது.

ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.

எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்…

ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

காலையிலிருந்து ஒரு விஷயம் என்னை நெருடிக்கொண்டே இருந்தது.

கீரை ஆய்கிறேன். மனம் லயிக்கவில்லை. மீன்களைக் கழுவி சுத்தம் செய்தேன் மனம் லய்க்கவில்லை. என்ன என்று சரியாகப் புரிபடவில்லை.

வாஷிங் மிஷின் அருகில் கொஞ்ச நேரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். உள்ளே வந்தேன், அடுக்கி வைத்துள்ள மங்கு பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முகர்ந்துபார்த்தேன். அதில் ஒரே ஒரு மங்கு சரியாகக் கழுவாமல் இருந்ததால் ஒருவித முட்டை  வாடை வீசியது. அதை மீண்டும் எடுத்து அந்த நாற்றம் போகும் வரை கழுவினேன். ஓ இதுதான் அந்த நெருடல் போலிருக்கு என்று மீண்டும் வேலைகளில் மூழ்க எத்தனித்தேன்.

நெருடல் தொடர்ந்தது. ஒருவேளை உப்பு ஜாடியில் உப்பு முடிந்துவிட்டதால்தான் இந்த நெருடலோ, என ஏற்கனவே அலமாரியில்  வாங்கி வைத்திருந்த உப்பு பொட்டலத்தைப்பிரித்து ஜாடியை நிரப்பினேன்.

வேலைகள் தொடர்ந்தன. மீண்டும் என்னமோ நினைவுக்கு வர, குளிர்சாதன பெட்டியின் அருகில் சென்று அதைக்கொஞ்ச நேரம் முறைத்துப்பார்த்தேன். அங்கே வைக்கப்பட்டிருந்த காய்கறிகளின் பெட்டகத்தைச் சுத்தம் செய்தேன். வாங்கிய பச்சை மிளகாய்கள் காம்பு எடுக்காமல் அப்படியே வைக்கப்பட்டதால் காம்பு உள்ள சில மிளகாய்கள் அழுகி இருந்தது.  காய்கறிகள் அனைத்தையும் உள்ளிருந்து வெளியே எடுத்து மீண்டும் தூய்மைப் படுத்தி புதிய காகிதம் மாற்றி அவைகளை அடுக்கி வைத்தேன்.

சமையல் வேலைகள் தொடர்ந்தன. நெருடலும் தொடர்ந்தது. ச்சே என்ன இது..? தொலைப்பேசியை எடுத்தேன், தங்கையை அழைத்தேன், ``இன்னிக்கு மாயாஸ் போவியா, அரிசி வாங்கணும், போகும்போது சொல்லு நானும் வரேன்.”

நெருடலைப் பொருட்படுத்தாமல் சமையலில் மூழ்கினேன். வசிங் மிஷின் ஒரு பக்கம் `லொட..லொட..லொட’ என்கிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது.

லப் டாப்’ஐ முடக்கி நாதஸ்வர இசையைத் தட்டிவிட்டேன். அவ்விசை கோவிலில் திருமண மண்டபத்தில் இருப்பதைப்போன்றதொரு சூழலைக்கொடுத்தது. நெருடல் விலகியிருந்தது. கொஞ்ச நேரம்தான் மீண்டும் மீண்டும் என்னமோ என்னை நெருட ஆரம்பித்தது.

நேரமாச்சு, சமையல் முடிந்ததா? ஒரு குரல் வந்தது. தோ ஆய்கிட்டே இருக்கு, என்று பதில் கொடுத்துவிட்டு சமையலை முடிக்கின்ற வேலைகளில் மும்முறமானேன்.

சமையல் முடியவும் மிஷினில் போட்ட துணிமணிகள் துவைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது. துணிகளை உலரவைக்க எடுத்தேன். நெருடல் குடையல் தொடர்ந்தது.

என்ன இன்று ஒரு மாதிரியாகவே இருக்கின்றதே. என்ன பிரச்சனை.? எல்லா வேலைகளையும் தூய்மையாக முடித்துவிட்டேனே.!? என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே துணிகளை உலர வைத்தேன். உலரவைத்த துணி ட்ரொலியை இழுத்து வெளியே வெயிலில் வைக்கின்ற தருணத்தில்போது எனது நெருடலுக்கு பதில் கிடைத்தது.

எனது ரோஜா செடி இருக்கின்ற இடத்தின் அருகில் ஒரு பூனை மலம் போயிருந்தது. அந்த மலம் இருக்கின்ற இடத்திற்கு நேராக எனது ரோஜா செடியின் அழகிய பூ ஒன்று விரிந்து வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது.

நேற்று மாலைமுடிந்து இரவு சந்திக்கின்ற வேளையில் எனது காரை எடுக்கின்றபோது அக்காட்சியினைப் பார்த்தேன். இருளாகிவிட்டது, நாளைக் காலை விடிந்தவுடன் இதை நான் சுத்தப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனையில் உறங்கச்சென்றதை மறந்தேபோனேன்..

யோசிக்க அவகாசம் கொடுக்காமல் உடனே அதைத்தூய்மை படுத்தி, அவ்விடத்தைக் கழுவி சுத்தம் செய்தபின்புதான் நெருடல் குடைச்சல் என்னை விட்டு அகன்றது.

அசிங்கத்தை நினைக்கவே வேண்டாம். அது இருந்தாலே போதும்... நெருடல் வரும்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

வெள்ளி, டிசம்பர் 06, 2013

என்னாச்சி.


உலகம் எங்கே செல்கிறது? என்னாச்சு நம்ம குழந்தைகளுக்கு.! எதுவும் சொல்லமுடியவில்லை. பதின்மவயதுப்பிள்ளைகளை (teenage) வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களின் புலம்பலும் ஒரே மாதியாகவே இருக்கின்றதே. எதில் குறை? எங்கே இந்த அவலங்கள் ஆரம்பிக்கப்பட்டது.? உழைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவமானப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. யார் என்ன சொன்னாலும் முகத்தில் அறைந்தாட்போல் பதில் சொல்கிறார்கள். அதிகாலை துயில் எழல் இல்லாமல் போய்விட்டது. முடியைப் பரட்டையாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். உடம்போடு இறுக்கமாக ஒட்டிய ஆடைகளைப்போட்டுக்கொள்கிறார்கள். கிழிந்த கால்சட்டை பேஷன் என்கிறார்கள்.. கணினி கைப்பேசி கேம் விளையாட்டில் மணிகணக்காக பொழுதைக் கழிக்கின்றார்கள்.. என்ன நடக்கிறது இந்த உலகத்தில்!? எங்கே போகப்போகிறார்கள் இவர்கள் அனைவரும்? ஓரளவு சொருசு வாழ்வு வாழ்ந்து வந்த நாமே, தர்மசங்கடத்தின் போது ஆடிப்போகின்ற நிலை வருகிறபோது, முற்றிலும் சொருசாக வளரும் இன்றை குழந்தைகளின் நாளைய நிலை..? என்னாகும்?.

என்ன திடீரென்று இப்படி ஒரு அரட்டல் என்று கேட்கின்றீர்களா?
அனுபவத்தில் காண்கிற பதின்மவயதுப்பிள்ளைகளின் நிலையையும், பத்திரிகைகளில் வரும் தினசரி செய்திகளாலும்தாம் இப்படிப் பலவாறாக என்னை யோசிக்கவைக்கிறது. தினமும் பதின்ம வயதுப் பிள்ளைகளைப்பற்றிய அவலச் செய்திகள் எங்கேயாவது ஒரு மூளையில் நிகழ்ந்தவண்ணமாகத்தான் இருக்கின்றது. பத்திரிகைகளைப் புரட்டினால், இன்றாவது இவர்களைப் பற்றிய செய்திகள் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென்று ஏங்குகிறது மனம்.

பிரசுரமாகுகின்ற செய்திகள் ஒருபுறமிருந்தாலும் பிரசுரமாகாமல் அப்படியே மூடிமறைக்கப்படுகின்ற செய்திகள் இன்னும் அதிகம்தான். பிள்ளைகள் கொஞ்சம் தலையெடுக்கத்துவங்கிவுடன், பெற்றோர்கள், வயதில் மூத்தவர்கள், அனுபவப்பட்ட பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களின் ஆலோசனைகள் அனைத்தும் அவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கத் துவங்கிவிடுகிறது.

என்ன சொன்னாலும் எப்படிச்சொன்னாலும் அவை வில்லங்கத்தில் போய் முடிவதைத்தான் பரவலாகப்பார்க்கலாம் இப்போது. அது செய்தியாகட்டும் அல்லது கேள்விப்படுகிற விவரமாகட்டும்.

சில சம்பவங்கள் பெற்றோர்களைப் பழிவாங்கும் படலமாக மாறி நிகழ்வதைக் காண்கையில் நெஞ்சு பதைபதைக்கிறது.

தெரிந்த ஒருவரின் மகள் திடிரென்று தற்கொலை செய்துகொண்டாள். பதினேழு வயது பருவப்பெண். அழகி என்றால் அப்பேர்பட்ட அழகி. படிப்பில் கெட்டிக்காரி. மருத்துவம் பயிலவேண்டும் என்கிற லட்சியம் உள்ளவள். தொடர் தேர்விலும் நல்லப் புள்ளிகள். மருத்துவப்படிப்பிற்கு எல்லாதகுதிகளும் அமையப்பெற்ற ஒர் அதிர்ஷ்ட தேவதையாகவே காட்சியளித்தாள் அப்பெண். பரீட்சை எழுதி, தேர்வுக்காகக் காத்திருக்கின்ற  சமையத்தில் இப்படி ஒரு செய்தி வந்து நட்பு வட்டத்திற்குள் உள்ள பலரை நிலைகுலையச்செய்தது. என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஆனது என்று விசாரிக்கின்றபோது, அப்பெண் தன் தாயைப் பழிவாங்குவதற்கென்றே இப்படிச் செய்துள்ளாள் என்று தெரியவந்தபோது, தாயிற்காக அழுதவதா அல்லது பழிவாங்க நினைத்து இப்படி ஒரு பெரிய காயத்தை பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுச்சென்ற மகளைத்திட்டுவதா, என்று தெரியாமல் உறவுகள் நட்புகள் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு இறப்புவீட்டில் நின்றிருந்த காட்சி இன்னமும் நெஞசைப் பிளக்கிறது.

தேர்வு முடிந்த நாட்களில், அந்தச் சந்தோசத்தைக்கொண்டாடுவதற்காக ஒரு நாளை தேர்வுசெய்து, நண்பர்கள் தோழிகள் என ஒன்றாகச் சேர்ந்துகொண்டாடி, இரவுமுழுக்க ஊர்சுற்றிவிட்டு நள்ளிரவுதாண்டி வீடு திரும்பிய மகளைத் திட்டிய தாய், அவளின் எதிர்ப்பேச்சுகளில் எரிச்சல் கொண்டு ஒரு அறை விட்டுள்ளார். `என்னை அறைந்துவிட்டாய், என்னை நம்பவில்லையா? உன்னைப் பழிவாங்குகிறேன் பார்..’ என்று கூறி, அறையின் கதவை தாழிட்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டாள் அப்பெண். என்ன கொடுமை இது.! நினைக்கின்றபோதே நெஞ்சு பதறுகிறது. இதைத் தட்டச்சு செய்கின்ற போதே, விரல்கள் நடுங்குகின்றன. இப்படியா ஒரு தாயை பழிவாங்குவது.!? மூன்று பிள்ளைகளில் ஒரே ஒரு செல்ல மகளை இழந்த துயரத்தை யார் என்ன ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி போக்கமுடியும்.? இந்த இழப்பை ஈடு செய்யமுடியுமா? அந்தத் தாயால் அழக்கூட முடியவில்லை. பைத்தியம்போல் அமர்ந்திருந்தார். இறந்து ஆண்டுகள் சில ஆனாலும், அவரால் இன்னமும் நிம்மதியாய் ஒருவேளை சோறு சாப்பிடமுடியாத மனநோயாளியாய் உலவுகிறார்.

எங்களின் பதின்ம வயதில் நாங்கள் படாத அவமானமா.? வெளியே நிற்க வைத்து விளக்குமாறு செருப்பு போன்றவற்றாலே அடிப்பார் அம்மா. காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தபோது, சம்மதம் கிடைக்கவில்லை. எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுவேனோ என்று அவராகவே ஒரு யூகத்தை ஏற்படுத்திக்கொண்டு, என் காலில் சுடுநீரை ஊற்றி ரணமாக்கினார். தேங்காய்த்திருகியை என் மேல் வீசி, கல்யாணம் ஆகும்வரை அந்த ஒரு கால் வீங்கியே இருந்த்து. இப்படியெல்லாம் செய்கிற போது..`சாவு, சாவு.. செத்துத்தொலை, பூமிக்கு பாரம்..’ என்றெல்லாம் வசைமொழிகள் வேறுவரும். இப்படித் துன்பம் அனுபவிக்கின்ற நிலையிலும் கூட, எதோ ஒன்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்ததேயொழிய தற்கொலை செய்துகொண்டு பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் எந்த காலத்திலும் வந்ததே இல்லை.  அந்தச் சவால் ஏன் இன்றைய பெரும்பாலான பிள்ளைகளிடம் இருப்பதில்லை.! இத்தனைக்கும் அன்றைய நிலை சொகுசற்ற வாழ்வு. இருபதுவயதை நெருங்கியபோதுதான் வீட்டில் கொஞ்சம் வசதி எட்டிப்பார்க்கத் துவங்கியது. மின் விசிறி, தொலைக்காட்சிப்பெட்டி, தொலைப்பேசி, கிரைண்டர் என, அதுவரை அனைத்திற்கு அல்லல்தான். இருப்பினும் வாழ்வேண்டும் என்கிற சிந்தனை விடாமல் துரத்தியதே. இன்று எல்லாமும் கிடைத்தும், அதை ஏற்படுத்திக்கொடுத்த பெற்றோர்களை அல்லவா பழிவாங்குகின்றார்கள்.!? 

பதினைந்து வயதே ஆன பெண் ஒருவள், முகநூல் நண்பனைத்தேடி அவளின் வீடு சென்றுள்ளாள். அங்கே கூட்டமாக இருந்த பதின்ம வயது ஆண் பிள்ளைகள் அவளை மாறி மாறி அனுபவித்துள்ளார்கள்.. பெண்ணின் பெற்றோர்கள் போலிஸில் புகார் கொடுக்க, அனைவரையும் போலிஸ் பிடித்துச்சென்றுள்ளது. அவர்களின் எதிர்காலமே பாழ்.கற்பழிப்பு வழக்கில் சிறையில் உள்ளார்கள்.! என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.? எது இவர்களை இப்படியெல்லாம் செய்யவைக்கிறது.? முன்பைவிட இன்றுதான் தவறு செய்பவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கப்பெறும் என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தமது விளங்களைப் பக்கம் பக்கமாக எழுதி பொதுவில் வைக்கின்றார்களே, படித்த பிள்ளைகள்தானே.! அதன் பின்விளைவுகள் பற்றித் தெரியாமல் போய்விடுமா என்ன.!?

படித்து முடித்துவிட்ட ஒரு பையனை அவனின் அப்பா திட்டியுள்ளார். `உன் வயதில் நான் மூட்டைத்தூக்கினேன், நெற்றியில் விளக்கைக் கட்டிக்கொண்டு பால்மரம் சீவினேன். தினக்கூலிக்கு வேலைக்குச்சென்றேன். நீ என்னடான்னா, படித்த படிப்புக்குத்தான் வேலை வேண்டுமென்று சும்மானாலும் சுத்தற. கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். கிடைத்தவேலையைச் செய்வதைவிட்டு இப்படியா தண்டமாய் இருப்பாய்.! ஒரு காலகட்டம் வரைதான் நாங்க சோறு போடுவோம் அதற்கப்புறம் உங்களின் செலவுகளை நீங்களே பார்த்துக்கொள்வதற்காவது வேலைக்குச் செல்லவேண்டாமா?’ என்று கொஞ்சம் கடுமையாகத்திட்டியுள்ளார். மறுநாள் பையன் கோபப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறிவிட்டான் சிங்கப்பூருக்கு. அப்பாவைத் தண்டிக்கின்றானாம்.!

போகட்டும் கழுதை. குளத்திடம் கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போறது யாருக்கு நட்டம். குண்டி காய்ந்தால் தானாய் வருவான் என்று அலட்சியம் செய்துவிட்டார் அப்பா. என்னதான் அலட்சியம் செய்தாலும், இப்படியா கோபத்தில் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுவது.? நண்பர்களுத்தெரிகிறது, எங்கே சென்றான் என்று, ஆனால் பெற்றவர்களிடம் சொல்லவில்லை.
முன்பெல்லாம் பசங்களை பெற்றோர்கள் தெருவில் ஆட்களைப் பார்க்கவைத்து அடித்து அவமானப்படுத்துவார்கள். இப்போது அப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை. ஆசிரியர்கள் கூட தண்டிப்பதை நிறுத்திவிட்டார்கள். வாயால் திட்டுவதற்குக்கூட பயப்படுகிறார்கள். அந்த அளவிற்குச் செல்கிறது நிலை. ஏன் இப்படி?

முகநூலில் புகைப்படங்களைப்போடுகிறார்கள். கல்லூரியில் பயில்கிற பசங்களை கட்டியணைத்துக்கொண்டும் கைகளைக்கோர்த்துக்கொண்டும், கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டும்.. இப்படியா பெண்பிள்ளைகள் பொதுவில் அசிங்கப்படுவது. மேல் நாட்டுக்கலாச்சாரம் என்றாலும் அவர்கள் கூட இவ்வளவு மோசமாக் நடந்துகொள்ளமாட்டார்கள் போலிருக்கிறதே. நம்ம பிள்ளைகள் செய்கிற கூத்துகள் இருக்கே.!

இப்படித்தான் தெரிந்த ஒருவரின் டீன் எஜ் பெண் முகநூலில் செய்த அக்கப்போர்களை சகிக்க இயலாமல், என் தோழியான (தூரத்துச்சொந்தமும் கூட) அவளின் அம்மாவிடம் கேட்டுவிட்டேன். `என்னதான் படித்திருந்தாலும் பையனைப் பிடித்திருந்தாலும், இப்படியா பொதுவில் இடுப்பில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்ப்டங்களை முகநூலில் பதிவேற்றுவார்கள்.!? பார்க்கிறவர்கள் ஒரு மாதிரியாகப்பேச மாட்டார்களா.! இந்த உறவு கல்யாணம் கச்சேரிவரை சென்றால் பரவாயில்லை. நாளையே அவர்களுக்குள் பிரிவு என்று வந்துவிட்டால், அவளையோ அல்லது அவனையோ வேறு யாராவது கல்யாணம் செய்துகொள்கிற நிலை வந்தால், இதுபோன்ற புகைப்படங்கள் இடைஞ்சல் இல்லையா..!?என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். என்ன செய்வது நமது கலாச்சாரம் அப்படி. நாகரீகம் வளர்ந்துவிட்டது என்றாலும், ADULTERY’ யை வெள்ளைக்காரனும் சகித்துக்கொள்வது கிடையாது. கொலை தற்கொலைகள் பெரும்பாலும் தகாத உறவு முறைகளினால்தானே ஏற்படுகிறது.

நான் சொன்னதை அவரின் அம்மா அப்படியே பிள்ளைகளிடம் சொல்லி கண்டித்துள்ளார். முகநூல் விஷயம் வீட்டு வாசல்வரை வந்துவிட்டதென, என்னை முகநூலில் இருந்து ப்ளாக் செய்துவிட்டு, தாயிடம் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடி கதையையே திருப்பிவிட்டார்கள் கண்மணிகள். அப்பெண்ணின் அம்மா என்னை அழைத்து.. `இல்லெ, அண்ணனாம்.. நல்ல பையனாம்.. உதவி செய்வானாம்.. தெரியாத்தைச் சொல்லிக்கொடுப்பானாம்... அவர்களின் வீட்டுக்கெல்லாம் போவார்களாம்...என இழுத்து இழுத்து கதை சொல்லி, பாதுகாப்புக்கருதி விவரத்தைச் சொன்ன நான், பகையாளியான துர்ப்பாக்க்கியம்தான் நிகழ்ந்தது.

சரி, முடிந்தது முடிந்து விட்டது, பெரியவர்கள் நன்மை கருதி சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைத்து அதை அத்தோடு விடாமல், பொதுவில் என்னைக் காண்கிற போதெல்லாம், ஒரு வெட்டு, ஒரு திருப்பு, ஒரு குலுக்கு என திருப்பிக்கொண்டு போகிறாள்கள். என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.?

பெற்றவர்களை மிரட்டி வைக்கின்றார்கள் பிள்ளைகள். எல்லா இனத்திலேயும் இதே நிலைதான். எல்லா அம்மாக்களும் ஒன்று சேர்ந்தால், என் வீட்டின் அவலம் உன் வீட்டின் அவலம்போலவே உள்ளது என்றுதான் பேசிக்கொள்வோம். பிள்ளைகளிடம் பேசமுடியவில்லை. எது சொன்னாலும் கோபம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகிவிடுகிறார்கள். காலம் முன்புபோல் இல்லை. என்னாச்சு? என்றுதான் புலம்புகிறார்கள்.

பரீட்சையில் தேறவில்லை என்று பன்னிரெண்டு வயது மாணவி தற்கொலை செய்துகொள்கிறாள். கொடுமை இல்லையா? பன்னிரெண்டு வயதில் நான் என்ன படித்தேன், எதில் பாஸ் பண்ணினேன், பரீட்சை முக்கியமான ஒன்றாக இருந்ததா, என்றெல்லாம் யோசிக்கின்ற போது, பள்ளிக்கூடம் போனது மட்டுமே பசுமையான நினைவாக இருக்கின்றது. மற்றது எதுவுமே நினைவில் இல்லை. சரி தேறவேயில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன். ஏன் நான் வாழவில்லையா? நிறைய ஏ’க்கள் எடுத்த என் சக தோழிகளைவிட நல்ல நிலையில், தெளிந்த நிலையில் வாழ்கிறேனே. 

இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்?

முக்கியமாக நம் சமூகத்தில் நல்ல வழிக்காட்டி இல்லாமையே இதற்கு முதன்மைக்காரணம் என்றும் சொல்கிறார்கள். நல்ல வழிகாட்டி யார்? சமய குரு நல்ல வழிகாட்டியாகத்திகழலாம் என்றால் அவர்களுக்கே நன்நெறிபோதனைகள் தேவைப்படுகிறது இன்றைய காலகட்டத்தில். அப்படியே சமய குரு வழிகாட்டியாக இருக்கின்றார் என்று வைத்துக்கொண்டால், எடுத்ததிற்கெல்லாம் அவரிடமே ஆலோசனைகள் கேட்டு குடும்பம் நட்த்தத்துவங்கிவிடுகிறார்கள் சில பெற்றோர்கள். வீட்டில் என்ன செடி நட்டுவைக்கலாம், என்ன செடி நட்டுவைக்கக்கூடாது என்பனவற்றையெல்லாம் கூட குருவின் ஆலோசனையின் பேரிலேயே நடக்கின்றது சிலரின் இல்லத்தில். சுவரில் விருப்பப்பட்டு வாங்கிய படங்களை மாட்டுவதற்குக்கூட, சாமி வந்து சொல்வார் என்கிறார்கள். என்ன சொல்ல?

நன்நெறி போதனைகளை விட சகல சடங்கு சம்பிரதாயங்களைப்போதித்து மூடப்பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதிலேயே குறியாக இருந்து மனிதர்களைக் கோழைகளாக்கி வாழ்வை நரகமாக்குகின்றார்கள் சில குருமார்கள்.

வைச்சா குடுமி அடிச்சா மொட்டை என்கிற ரீதியில் சிலரின் வாழ்க்கைப் பயணம்.

எதுவும் சரிப்பட்டு வரவில்லை. பிறகு?

என்னாச்சு? என்னாகும்? 

( நவம்பர் வல்லினத்தில் வந்த எனது கட்டுரை. - நன்றி நவீன். )  

புதன், டிசம்பர் 04, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு

இரண்டு நாட்களாக இங்கே ஒரு பிரச்சனை மிக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இங்குள்ள இந்துக்களுக்கு இப்படி ஏடாகூடமாக எதாவது என்றாவது ஒருநாள் நடக்குமென்று ஏற்கனவே தெரியும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே.. அதுபோல் பிரச்சனை வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றது அரசாங்கம்.

உலகம் இந்நிகழ்வை எப்படிப் பார்க்கின்றதென்று பல ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் எழுதி உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரச்சனை இதுதான்-

பூஜாங் பள்ளத்தாக்கு என்கிற ஒரு இடம் கெடா மாநிலத்தில் உள்ளது. அங்கே என்ன சிறப்பு.? அது சோழ பல்லவமன்னர்கள் வந்து தங்கி வாழ்ந்த ஆதாரங்களைத் தாங்கி நிற்கும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப்பின்னணியைச் சொல்லும் அற்புத ஊர்.

UNESCO அறிவித்திருக்கும் உலகப்பாரம்பரியச் சின்னங்களான ஜக்கார்த்தா - போரோபோடர் மற்றும் சயாம் - அங்கோர்வாட் போன்ற இடத்திற்கு சரி நிகராக வைக்கப்படவேண்டிய பூஜாங் பள்ளத்தாக்கு, கட்டுமான நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டதால், இன்று அவர்கள் அதை புல்டோசர் ஏற்றி தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

தரைமட்டமான பிறகு.. ``நீ, நான், உன்னால் பிரச்சனை , நான் அல்ல, எனக்குத்தெரியாது, முந்தய அரசாங்கம், முன்னால் மந்திரி..’’ என ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


உலக வரலாற்றுச்சின்னம் நாட்டில் இருப்பதற்கு நாடு பாக்கியம் செய்திருக்கவேண்டும். அதுவும் எம் முன்னோர்களால் இந்தச் சிறப்பு என்கிறபோது - பெருமைதான்.

உலகமே நம்மை நோக்குவதற்கு இந்தச்சின்னம் ஒர் அரிய பொக்கிஷம் அல்லவா.!

மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒன்றாக வைத்துப்பார்த்து, அவ்விடத்தில் வரலாறு, இந்து பௌத்த மதத்தைப் பறைசாற்றுகிறது என்பதற்காக இக்கோவிலை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல் நாடகத்தை நினைத்து மனம் வேதனைப் படுகிறது.

இப்போது இந்த Candi Lembah Bujang சில இடங்கள் உடைபட்ட நிலையில் இருக்கின்றதே, இது அவமானம் இல்லையா?

சில தமிழர்கள் அழுகிறார்கள் - இந்த அவல நிலையை நினைத்து.

பத்திரிகைகள் அரசாங்கத்தைச் சாடுகிறது, ஏன் இந்த அவலம்? என்று.

ஆய்வாளர்கள் விரைகிறார்கள் அங்கே.. நிலவரத்தை அறிந்து அதை மீண்டும் எப்படி உருவாக்குவது என்று கலந்தாலோசிப்பதற்காக...

ஆட்சிதான் உங்களின் கைகளில் உள்ளதே. வரலாறு எதைச்சொன்னால் என்ன? ஏன் இந்த மூடுமந்திரம்.!?

வெட்கம்...

மேல் விவரம் அறிய - LEMBAH BUJANG TEMPLE என்று கூகுளில் தேடி வாசிக்கவும்.