செவ்வாய், டிசம்பர் 10, 2013

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது..

நம் நாடு பத்திரிகை ஆசிரியர் வித்தியாசாகருக்கு

இந்தக் கடித்ததை எந்தப் பத்திரிகை ஆசிரியருக்கும் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. எழுதினால் உங்களுக்குத்தான் எழுத வேண்டும் என்கிற சிந்தனையில் உதித்த கடிதம் இது.

இளய தலைமுறை எழுத்தாளவர்க்கத்தினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும், திகழ்ந்து வரும் உங்களைப் பற்றி நன்கு அறிந்த வாசக எழுத்தாளர் என்கிற முறையில் இதை உங்களிடம் உரிமையுடன் பகிர்வதில் பேருவகை கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை நீங்களும் அறிவீர்கள். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.

ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.

பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது.? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசாலையல்ல.  அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்பில்லை.  

இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த அனுபவமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம், தமிழ், மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?

நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன், அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே.., ஒரு இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்காக செயல்படுவது.!

ஒரு இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகளோ வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்.!? சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் அணுகவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.

நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். பத்திரிகை ஆரிசிரியர் என்கிற முறையில் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். விமர்சனம் என்று வருகிறபோது மட்டும், வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்.? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று, இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டு விட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.  

எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் அதைச் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.

எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்தச் சமுதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சத்திரித்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.

வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்கு பணி இடைநீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம். பத்திரிகை ஆசிரியர்களே, உங்கள் கைகளில் செய்தி ஊடகம், இருப்பினும், இலக்கிய வளர்ச்சிக்கு உங்களின் பங்கும் அத்தியாவசிய ஒன்று. இலக்கியத்தின் நிலைமையைப் பார்த்தீர்களா? எழுத்தாளர்களின் நிலை பார்த்தீர்களா?

இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.  

இலக்கியம்போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.


ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் நல்ல படைப்புகளைக் கொடுக்கமுடியாது.


அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.


ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.


எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்


ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.


இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

படைப்பு விமர்சனத்திற்கு உற்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.

10/12/2013 - நம் நாடு - பத்திரிகையில் வந்த எனது ஆதங்கக் கட்டுரை.
நன்றி திரு வித்யாசாகர். ஆசிரியர் நம் நாடு.  

2 கருத்துகள்:

  1. படைப்பு விமர்சனத்திற்கு உற்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.

    -உண்மை அக்கா.

    பதிலளிநீக்கு
  2. நான் சிறு வயதில் தமிழக பிரபலப் பெண் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘அவன் கொடுத்த விலை’ என்ற நாவலை வாசித்தேன். அப்போது எனக்கு Teen Age-தான் என்றாலும் பல விபரங்கள் எனக்கு விளங்கவில்லை.

    மனைவி பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்த போது, கணவன் தன் காமத் தேவையை எவ்வளவோ அடக்கப் பார்க்கிறான். நண்பர்களின் ஆலோசனைகளால் மதி மங்கிப் போன அவன் சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போகிறான். ஆனால், அந்த சிவப்பு விளக்குப் பெண் ஒரு Black Mail பண்ணும் கும்பலால் இயக்கப்படுகிறாள்.

    அவனுடைய அந்தரங்க நடவடிக்கைகள் யாவும் படம் பிடிக்கப்பட்டு, அவனுடைய அலுவலக முகவரிக்கே அனுப்பப் படுகிறது. கதை முழுவதும் அவனுக்கு ஏற்பட்ட அவமானம், அச்சம், வாழ்க்கையின் மீது வெறுப்பு எல்லாம் மிகவும் நேர்த்தியாக விளக்கப்படுகிறது.

    கடிதம் வந்த சில நிமிடத்தில் ஓர் விநோத அழைப்பு..... அந்த விலைப் பெண் வக்கிரமாக சிரிக்கிறாள். அவனால் செலுத்தப்பட முடியாத பிணைப் பணத்தைக் கேட்கிறாள். கொடுக்க மறுத்தால் புகைப் படங்கள் பிரதி எடுக்கப்பட்டு அலுவலக ஊழியர்களுக்கும் மாமனார் வீட்டுக்கும் அனுப்பப்படும் என்று எச்சரிக்கிறாள்.

    தன் சேமிப்பில் உள்ள பணம் எல்லாம் கரைகிறது. போதாதற்கு மனைவி வீட்டில் விட்டுச் சென்ற நகைகளைப் பிணையாகக் கொடுக்கிறான். இப்படியாக குடும்பச் சொத்துகள் எல்லாம் களவாடப் படுகின்றன.

    ஒரு குற்றத்தால் மாட்டிக் கொண்ட அவன் இன்னொரு (திருட்டுக்) குற்றத்தாலும் சிக்கித் தவிக்கிறான். இதற்கிடையில் மனைவியின் பாசமும் புதிய குழந்தை பிறப்புச் செய்தியும் அறிவிக்கப்படுகிறது. சந்தோஷப்பட வேண்டிய அவன் மனதுக்குள் அழுது புழுங்குகிறான்.

    மனைவி வீட்டில் விட்டுச் சென்ற தங்க நகைகளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது, என்ற தவிப்பு வேறு அவனுக்கு.

    சில விஷயங்களை ஒரு (இலட்சணம் நிறைந்த) பெண் எழுத்தாளர் எழுதுவது கூடும் என்று தீர்மானித்து விடலாம். ஆனால், இந்தக் கதையில் ஓர் ஆணின் காமத் தவிப்பையும், சுகத்தை அடையும் விதத்தையும் மிகத் துள்ளியமாக எழுதியதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. எழுத்தாளர் சிவசங்கரியின் மீது மரியாதையைக் கூட்டிச் சேர்த்ததும் ஆணின் காம தாபங்களை விழா வாரியாக விளக்கியதுதான். (ஒரு பெண்ணின் காம தாபங்களை ஓர் ஆணால் விளக்க முடியுமா?)

    இப்போது சர்ச்சையைக் கிளப்பிய உள் நாட்டுச் சிறுகதையை ஆசிரியரின் நிலைமையைச் சிந்தித்துப் பார்க்கும் போது இந்த நாவல் நினைவுக்கு வந்தது.

    சமுதாயம் அவசரப்பட்டு அவரைத் தண்டித்து விடக் கூடாது என்பதுதான் என் விருப்பம்.

    பதிலளிநீக்கு