வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

நிலநடுக்கம் Lombok'கில்

நாம் எவ்வளவு மனபலம் உள்ளவர்களாக இருந்திருந்தாலும், எதிர்ப்பாராமல் ஏற்படுகிற சில சம்பவங்களில் அல்லது சில சூழ்நிலைகளில் சிக்குகிறபோது நாம் நம்மை உற்று ஆராய்ந்தால் நம் பலகீனம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை நான் இங்கே உங்களிடம் பகிர்கிறேன்.
மிக அண்மையில் நானும் எனது ஐந்து தோழிகளும் இந்தோனீசியாவில் உள்ள லொம்போக் (Lombok) என்கிற அழகிய தீவிற்கு சுற்றுலா சென்று வந்தோம். நிஜமாலுமே அழகிய தீவுதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மலையில் ஏறி நுரைகக்கிய அழகிய கடல் சூழலைக் காண்கிற கண்கொள்ளாக் காட்சியினை நிச்சயமாக அனைவரும் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று.
நாங்கள் 26/7/2018ஆம் தேதி காலையில் புறப்பட்டோம். மூன்று மணிநேரத்தில் இந்தோனீசியா லொம்பொக் விமானநிலையை அடைந்தோம். அப்பொழுதே தொடங்கிற்று எங்களின் பயணம்.
இங்கிருந்தே ஆன்லைனில் மற்றொரு தோழியின் மூலமாக ஒரு வாகன ஓட்டுனரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சுற்றுலா பேரம் பேசிக்கொண்டு எங்களின் பயண ஏற்படுகளை செய்துகொண்டமையால், நாங்கள் விமானம் விட்டு இறங்குகிறபோதே அவன் அங்கே எங்களுக்காக காத்திருந்தான்.
டூர் பெக்கெஜ் என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிரபல சுற்றுலா தளங்களை ஆன்லைனின் மூலமாக குறித்துவைத்துக்கொண்டு அதை அவனிடம் காண்பிக்கின்றபொழுது, பயணத்தை எங்கிருந்து தொடங்கினால், செல்லுகிற வழியில் இருக்கிற சில இடங்களை ஒன்றின் பின் ஒன்றாக பார்த்துமுடித்து விட்டு மாலைவேளையில் தங்கும்விடுதிற்குச் சென்று விடலாம் என்கிற பட்டியலை அவன் எங்களிடம் கொடுத்தான். அப்படியே எங்களின் பயணம் தொடங்கிற்று.
முதல் பயணமாக சாசாக் என்கிற கிராமத்திற்குச் சென்று அங்கே அவர்களின் வாழ்க்கைச்சூழலை கண்டுகளித்தோம். தமிழர்களைப்போலவே வீட்டின் உள்ளே நுழைகிறபோது தலைகுணிந்து நுழையவேண்டும். கதவைத்திறந்து சட்டென்று உள்ளே நுழையக்கூடாது. ஒரு வாசகத்தைச் சொல்லி (அவன் சொல்லிக்கொடுத்தான், நான் மறந்துவிட்டேன்.) அவர்களை அழைக்கவேண்டும், அவர்கள் திறந்தால் மட்டுமே நுழையவேண்டும் இல்லையேல் அப்படியே ’கொஸ்தான்’ தான்.
கீராமிய வீட்டு வாசலில் சாணியை மொழுகிவைத்திருக்கிறார்கள். சாணிதான் எரிபொருள். அங்கே சாசாக் மக்கள்தான் 90%. அவர்கள் அவர்களின் மொழியைக் காக்கவில்லை ஆனாலும் கலாச்சாரத்தைக் காக்கின்றார்கள். அவர்களின் தாய் மொழியை ஆங்கில எழுத்துகளைக்கொண்டு ரொமனைஸ் செய்து வைத்துக்கொண்டுதான் வாசிக்கின்றார்கள். அந்தமொழிக்கு பள்ளி இல்லை. பழங்காலத்து மக்கள் சிலருக்கு வாசிக்கத்தெரிகிறது இக்காலத்து மக்கள் அந்தமொழியினைப்பேசுகிறார்கள் ஆனால் எழுத படிக்கத்தெரியவில்லை. இருப்பினும் எனது பெயரை (விஜயா) அந்த சாசாக் மொழியில் எழுதச்சொல்லி எழுதி வாங்கிக்கொண்டேன். அசப்பில் தமிழ் போலவே இருக்கிறது சாசாக் மொழி எழுத்துச் சுழிவுகள்.
மறுநாள் 27/7/2018, இரவில் சந்திரகிரணம் தொடங்கவிருப்பதால், அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் சிறப்புப்பூஜை இருப்பதாகக்கேள்விப்பட்டு அங்கு சென்றோம். பூஜையில் கலந்துகொண்டு சூரியன் கடலில் மூழ்கி மறைகின்ற கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு ரசிப்பதற்கும் அக்கோவில் சிறந்த இடமாக இருந்தது. கோவிலுக்குள் நுழைகிறபோது, எங்களோடு வந்திருந்த பக்தியிலும் ஆன்மிகத்திலும் ஓரளவு அறிவுகொண்ட தோழி அதில் நுழைய மறுத்துவிட்டாள். என்ன காரணம் என்பதைப் பற்றி நாங்கள் ஆராயவில்லை. அது அவளின் விருப்பம். நெற்றியில் அரிசிபொட்டு வங்கிக்கொண்டு இரவானதால் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு தங்கும்விடுதிற்குச் சென்றுவிட்டோம்.
அங்கே பாட்டு கூத்து கச்சேரி மது மாமிசம் என மிக உல்லாசமாக இருந்தோம்.
28/7/2018 சந்திரகிரணம். காலை உணவிற்குப்பிறகு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அரைமணிநேர பயணத்தில் மற்றொரு தீவிற்குச் (Gili Trawangan) செல்லவேண்டும். அங்கு செல்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் எங்களோடு வந்திருந்த வாகனஓட்டி செய்யவில்லை காரணம் நாங்களே சொந்தமாக பெர்ரி டிக்கட்’களை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தபடியால், அவன் வாகனத்தை படகு துறைமுகம் வரை செலுத்திவிட்டு எங்களையும் இறக்கிவிட்டான். கிரணம் பிடிக்க உள்ளது அதனால் அந்த தீவிற்கு மட்டும் சென்றுவிட்டு ஓய்வு எடுங்கள் வேறு எந்த தீவிற்கும் செல்லவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான். Gili trawangan சென்றால் Gili air மற்றும் Gili Meno கண்டிப்பாகச் செல்வார்கள். காரணம் Lombok தீவின் மொத்த அழகும் அந்த இரண்டு தீவுகளில்தான் அதிகமாக உள்ளதாக வெப்சைட்டில் வாசித்திருந்தோம்.
கடலுக்குள் சென்று மீன்களின் விளையாட்டுகளைக் கண்டுகளிப்பதோடல்லாமல் கண்ணாடிபோன்ற கடல் நீரின் வழியாக உள்ளே அடி ஆழத்தில் இருக்கின்ற கடலின் அழகையும் ரசிப்பதற்கு அந்த தீவுகள் மிகவும் பிரசித்தி.
அவனின் பேச்சுக்கு செவிசாய்ப்பதைப்போல் தலையை ஆட்டிவிட்டு, ஸ்பீட்போர்ட் trawangan தீவை அடைந்தவுடன், மதிய நேரமானதால், நேராக மற்ற இரண்டு தீவுகளையும் சென்று காண்பதற்கு பெர்ரி டிக்களை அந்த துறைமுகத்து முகப்பிலேயே வங்கிக்கொண்டோம். ஹோட்டலில் செக்இன் செய்து விட்டு, பெர்ரி நிறுத்துமிடத்திற்கு வந்தோம்.
கிட்டத்தட்ட முப்பதிரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்ட பெர்ரி மெதுவாக அடுத்தடுத்த தீவுகளை நேக்கிப்ப்பயணித்தது. அந்த பெர்ரியில் அனைவரும் ஐரோப்பியர்கள் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியர்கள். பெர்ரி நாற்பத்தைந்து நிமிடங்கள் கடல் நீரைக்க்கிழித்து நகர்ந்துகொண்டிருந்தது. அதிகவேகமில்லாமலும், மிகமெதுவாகச் செல்லாமலும் நடுநிலையாக நகர்ந்தது. எங்களின் பார்வையில் கடல் கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளித்தது. அடுப்பில் வைக்கப்பட்ட நீர் எப்படி கொத்திக்குமோ அப்படி.!
நடுகடலில் நாங்கள்; அப்போது எங்களின் பெர்ரியின் மீது மிகவேகமாக ஒரு அலை வந்து மோதியது. பெர்ரி அதிவேகமாக வலது இடது புறமாக ஆடி குழுங்கிவிட்டு மீண்டும் நகர்ந்தது. நாங்கள் பதறிப்போனோம். உள்ளே இருந்த அனைவரும் அலறினார்கள். நாங்கள் கூடுதலாக அம்மா அப்பா என்று கத்தினோம். அதன் பிறகு பெர்ரி பல இடங்களில் கவிழ்கிற நிலையிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. எங்களுக்கு நடுக்கம். ஐரோப்பியர்களைப் பார்த்தோம். நிதானமாகவே இருந்தார்கள். பெர்ரியை செலுத்துகிறவர்கள் அங்கும் இங்கும் நகர்ந்து சில முன் ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ஆனால் நான் அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தேன். எதோ ஒரு அவசர நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இருந்தபோதிலும் அதை அவரகள் பயணிகளுக்குத் தெரிவுபடுத்தாமலேயே செய்துகொண்டிருந்தார்கள்.
பெர்ரி ஓர் இடத்தில் நின்றது அனைவரும் நீச்சல் குளத்தில் குதிப்பதைப்போல் படாரென்று கடலில் குதித்தார்கள். நாங்கள் ஆறுபேர்மட்டும் பரிதாபமாக பெர்ரியிலேயே அமர்ந்திருந்தோம்.
வயிற்றில் ஒருவித இரசாயண கலவை சுரந்துகொண்டிருந்தது. பயம் கவ்வியது. சற்றுமுன் படகு ஏன் இப்படி ஆடியது.! அலை எப்போதும் இப்படித்தான் வருமா.? நமக்குவேறு நீச்ச்சல் தெரியாதே.! நாம் ஏன் இங்குவந்தோம்.! இப்படி படகிலேயே உற்கார்ந்திருப்பதற்காகவா.! கரைக்கு படகு செல்லுமா செல்லாதா.? மீண்டும் அந்தப்பக்கம் செல்லவேண்டுமே, மறுபடியும் அலை வேகமாக வருமா.! மலேசியா சேர்வோமா.! கிரணம் அன்று கடல் மற்றும் மலை பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்பது நமக்குத் தெரிந்ததுதானே. பின் ஏன் வந்தோம்.! முன்னமே வாகன ஓட்டி எச்சரித்தானே, கேட்டோமா.! உன்னால்தான்… உன்னால்தான்… உன்னால்தான்…. என மாறி மாறி ஒருமேல் ஒருவர் பழிபோட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் கலவரமாக இருந்தோம்.
ஒரே இடத்தில் அரை மணி நேரமாக அலையில் மோதியபடி படகு ஆடிக்கொண்டிருப்பதால் எங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது, குறிப்பாக எனக்கு வாந்திமயக்கமாக இருந்தது . கரைக்குச்செல்லாமல் இப்படியே நான்கு இடங்களில் பெர்ரியை நிறுத்தி நீரினில் மூழ்கி snookerling செய்து மகிழ்ந்தார்கள் ஆங்கிலேயர்கள். நீச்சல் தெரியாதவர்கள் இறங்கவேண்டாம் காரணம் கடல் இங்கு மிக ஆழமானது என்று எச்சரித்தபடியால், இந்திய பெண்கள் நாங்கள் பரிதாபமாக விழிகள் பிதுங்க படகிலேயே அமர்ந்திருந்தோம் நீச்சல் ஆடையுடன்.
மாலை நேரத்தில் சுமார் மூன்று மணிக்கு மீண்டும் இந்தப்பக்கம் திரும்புவதற்கு பெர்ரி தயாரானது. அம்மா, தாயே காளியாத்தா, மாரியாத்தா, மேரிமாதா, ஏசப்பா சிவபெருமானே முருகா அல்லா என்று பல ஆண்பெண் தெய்வங்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டோம்.
மாலைவேளையில் கடலின் நீர்மட்ட நிலை மிக அதிகமாக இருப்பதை அனைவரும் உணர்ந்துகொண்டோம். கொந்தளிப்பு இன்னும் கூடுதலாகவும் படகின் அசைவு அபாயகர நிலையிலும் இருந்தது. பலமுறை அபாயகரமாக அசைந்து அசைந்து திசை திரும்பிய பெர்ரியை கட்டுக்குள் கொண்டுவர படகு செலுத்துநர்கள் போராடினார்கள். இம்முறை ஆங்கிலேய பெண்மணிகள் சிலரும் எங்களோடு சேர்ந்து அலறினார்கள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாலை நான்கு மணிக்கு பெர்ரி துறைமுகம் வந்து சேர்ந்தது, படகு செலுத்துநர்கள் எங்களை மிகவிரைவாக படகைவிட்டு வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். வரிசையாக நால்வர் கரைவரை நின்றுகொண்டு, ஒருவர் பின் ஒருவராக பயணிகளின் கைகளைப் பிடித்து இழுத்து வேகவேகமாக கரைக்குக் கொண்டுவிட்டார்கள். அத்தோடு படகு சவாரிகள் அங்கு மூடப்பட்டு விட்டதாக கரையில் குதிரைசவாரியின் போது குதிரை ஓட்டுனர் தெரிவுபடுத்தினார். 28/7/2018 இரவு அங்கேயே தங்கினோம்.
கிரணத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க உணவு நீர் படுக்கை என எல்லா இடங்களிலேயும் இங்கிருந்து கொண்டுசென்ற தர்ப்பைப்புல்லை போட்டுக்கொண்டோம். தர்ப்பை கிரண பாதிப்புகளுக்கு நிவாரணம் என தோழி ஒருவள் முன்னெச்சரிகையாக கொண்டுவந்திருந்தாள்
29/7/2018 காலை உணவை முடித்துக்கொண்டு உடனே gili trawangan’ஐ விட்டு வெளியேறினோம். கரைக்குச் சென்றவுடன் எங்களின் வாகன ஓட்டுனரிடம் மூன்று தீவுகளுக்குச் செல்லுகையில் ஏற்பட்ட கசப்பான கடல் அனுபவங்களைப் பகிர்ந்தோம். அமைதியாகக் கேட்டுவிட்டு, நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை காரணம் நீங்கள் டூர்பேக்கெஜ் எங்களின் கம்பனியில் எடுக்கவில்லை, ஏதேனும் ஆகியிருந்தால் நாங்கள் பொறுப்பை ஏற்கமுடியாது, உங்களுக்கு இங்கே இன்சுரன்ஸ் கூட இல்லை. கவனம் என்றார்.(அவருக்கு அவர் பிரச்சனை.) அதான் ஒன்னும் ஆகவில்லையே, என்று தெனாவெட்டாக வாகனத்தில் ஏறினோம். நேராக நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம்.
Rinjani மலையின் அடிவாரத்தில் senaru waterfall உள்ளது. நீர்வீழ்ச்சி இருப்பது மலையின் அடிவாரம் என்கிறார்கள் இருப்பினும் வாகனம் மலையில் மேல் வெகுதூரம் அசைந்து அசைந்து ஏறியது. லொம்போக் இன்னும் வளர்ச்சி காணாத சிறிய தீவாக இருப்பதால், சாலைகளின் நிலை, வாகனம் குதிரை வண்டிபோல் குதித்து குதித்துச் சென்றது. ஒரே பாதையில்தான் செல்வதும் திரும்புவதும். முன்னே எதேனும் வாகனம் வரநேர்ந்தால், எதிரே வரும் வாகனம் நின்று வழிவிட்டுத்தான் செல்லவேண்டும்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்தது நீர்வீழ்ச்சி நுழைவாயிலை அடைய. வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து நின்றுகொண்டு கீழே பார்க்கின்றபோதுதான் தெரிந்தது நாம் வந்திருக்கிற இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றது என்பதை. அங்கு நாம் பார்க்கின்ற காட்சியானது கண்களுக்கு விருந்து. வரிசையாக சிறிய சிறிய கோடுகளாக நட்டுவைக்கப்பட்டிருக்கின்ற பயிர் மற்றும் காய்கறி நெல் நிலங்கள் கொள்ளை அழகு. குளுகுளு காற்றை சுவாசித்துக்கொண்டு மிக தூய்மையாக தோற்றமளித்த அந்த சூழல் மனதிற்கு இதமளித்தது. நீர்வீழ்ச்சியின் சத்தம் காதுகளில் கேட்டுக்கொண்டிருப்பினும் உள்ளே காட்டுவழி பாதையில் நீர்வீழ்ச்சியை அடைய கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். அதன் அழகை மனதில் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள பழங்குடி இளைஞன் ஒருவனிடம் பணம் செலுத்தி எங்களை காட்டுவழி வழிநடத்த அழைத்துக்கொண்டு கிளம்பினோம். (வாகன ஓட்டுனர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.)
சரிசெய்யப்படாத ஒத்தையடி பாதை. வலது புறம் பாறைகளோடு வளர்ந்த மரங்கள் செடிகொடிகள். இடதுபுறம் படுபயங்கர பாதாளம். தவறுதலாக காலை எங்கேனும் வைக்கநேர்ந்தால் மரணம்தான். உடனே காப்பாற்ற வருவதற்கு யாருமே இல்லாத இருளும் அமைதியும் கூடிய இடம் அது. குரங்குகள் வேறு அங்கும் இங்கும் தாவி நம் கைகளில் உள்ள பைகளைப் பிடுங்குவதற்கு அலைமோதுகிறது. அவைகளுக்கு பயந்து அசையமுடியாத நிலையில் உடலை விரைத்துக்கொண்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடைபயணம் செய்தோம்.
நீர்வீழ்ச்சியின் அழகையும் அங்கு உடலில் ஏற்பட்ட புத்துணர்ச்சியையும் தெளிவான தூய்மையான குளிர் நீரின் சுவையையும் உணர்ந்தாலேயொழிய வர்ணனை எழுத்துக்களால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
உள்ளே சென்றவுடன் வெளியே வருவதற்கு மனமில்லை. குளித்தோம் நீரில் படுத்தோம், பாறைகளில் அமர்ந்து தியானம் செய்தோம். மூழ்கினோம் விளையாடினோம். பசி எடுக்க ஆரம்பித்தவுடன், வெளியே வந்து உணவருந்திவிட்டு மீண்டும் உள்ளே சென்று குளியலைத் தொடரலாம் என்கிற திட்டம் வேறு போட்டிருந்தோம். அது பாழாய்போனது காரணம் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு மேலே ஏறுகையில் எங்களின் தோழி ஒருவள் பாறையில் தடுக்கிவிழுத்து முட்டியில் அடிபட்டுவிட்டது. கொஞ்சநேரம், நடக்க சிரமப்பட்டாள். அத்தோடு அத்திட்டத்தை கைவிட்டு, காட்டில் இருந்து வெளியே வந்து, உணவருந்தி ஓய்வெடுத்து மாலை நான்கு மணிவாக்கில் Rinjani மலைக்கு பிரியாவிடை கொடுத்தோம். ஆபத்துகளோடு கூடிய அழகிய இடம் அது.
இரவானது ஹோட்டல் வந்து சேர. அன்றைய ஹோட்டல் கொஞ்சம் வித்தியாசமான ஹோட்டல். தோழியின் முதலாளி மூலமாக அந்த ஹோட்டல் எங்களுக்கு அறிமுகம் ஆனது. பாழடைந்த பேய் பங்களா போல் இருந்தது. Senggigi beach’யின் அழகை அந்த பங்களாவில் இருந்து முழுமையாக தெளிவாக ரசிக்கும் மிக உயரமான மலையில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவை இரண்டு நாள் எடுத்துக்கொண்டோம். அங்கு வேறு வீடுகள் இல்லை. இந்த ஒரே ஒரு பங்களாதான் ஆக உச்சியில். மூன்று அறைகள் நீச்சல் குளம், ஓய்வு நாற்காலிகள், ஜஃக்குஸ்ஸி, காற்றுவாங்க இடம் என எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு ஆங்கிலேயரின் அழகிய அற்புத வீடு அது. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் இல்லாத சமயத்தில் நாகேஷ் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பாரே அதுபோல் என்று நினைக்கிறேன். காரணம் வாகனம் எங்களை இறங்கிவிட்டுச்செல்லுகையில் உள்ளிருந்து ஒரு வயோதிகர் வந்து, பங்களா வீட்டின் வாடகை கட்டணத்தை வாங்கிக்கொண்டார். பிறகு புல் வெட்டுதல், பெருக்குதல், பொருட்களை அடுக்குதல் என அவர் வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். வீட்டின் காவல்காரரும் அவர்தான். காற்று சற்று பலமாக வீசினால் கீழே விழுந்துவிடுவது போல் மெலிந்து லேசாக உடல் கூன் வளைந்து இருந்தது அவருக்கு. யாரிடமும் பேசவில்லை. நாங்களே எங்களின் பெட்டிகளை சாமான்களை எடுத்து அறையில் வைத்துக்கொண்டோம்.
இரவு உணவிற்கு வரும் வழியிலேயே பழங்கள், அங்குள்ள கப்மெஃகீ என வாங்கிவந்துவிட்டோம். அந்த மக்களின் உணவுப்பழக்கம் எங்களுக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. மீன் கோழிகளை எந்த ஒரு மசாலா பொடியையும் சேர்க்காமல் அப்படியே வாட்டி, சுட்டு, அவித்து வைத்துக்கொண்டு இடித்தமிளகாய் சாந்துடன் ஊறுகாய்போல் தொட்டுத்தொட்டு சாப்பிடுகிறார்கள். எங்கள் குழுவில் பலருக்கு அந்த உணவின் கவிச்சி வாடையினை ஜீரணிக்கமுடியவில்லை. அதனால் அன்றிரவு மெஃகீ வாங்கிவந்து சாப்பிட்டோம்.
இரவு அதிக நேரம் அரட்டை அடித்தோம். பாடல்களைப்போட்டு டான்ஸ் ஆடினோம். karaoke பாட்டு பாடினோம். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. மிகமகிழ்வாக கழிந்தது.
அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும், நானும் எனது தோழியும் உறங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், நாங்கள் படுத்திருக்கின்ற கட்டிலை இருவர் சேர்ந்து தூக்கி வலது இடது புறமாக ஊஞ்சல் போன்று வேகமாக அசைக்கின்ற உணர்வு வந்தது. நான் விடுக்கென்று எழுந்துவிட்டேன். தோழியின் பாதி உடல் கட்டிலிலும் பாதி உடல் தரையிலும் கிடந்தது. கிட்டத்தட்ட கீழே விழுந்த நிலையில் அவள் கிடந்தாள். அவளை படாரென்று ஒரு அடி கொடுத்து, கழிப்பறை சென்று வந்தால், இப்படித்தான் எருமை மாடு போல் கட்டிலில் விழுவாய்.! நாயே, பேயே என்று திட்டிவிட்டு, தூக்கம் கலைந்துவிட்ட கடுப்பில் மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். ’ம்ம்..நான் என்ன செஞ்சேன், என்னிய ஏன் இப்படி ஏசறீங்க, நான் டாய்லெட்டுக்கே போகல, எப்படி இப்படி கீழே பாதி மேலே பாதி கிடக்குறேன்னு எனக்கே தெரியல,’ என்று முணகிய படி அவளும் மேலே ஏறி சரியாக படுத்துக்கொண்டாள்.
பொழுது நன்கு புலர்ந்தது, சூரியனை தரிசிக்க நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்துகொண்டு கடல் அலையின் அழகினை ரசித்துக்கொண்டிருக்கையில், லேசாக மயக்கம் வருவதைப்போன்ற ஒரு அசைவினை உணர்ந்தேன். இருப்பினும் சுதாகரித்துக்கொண்டு, சூடான காப்பியினை ரசித்துக்கொண்டே கடலின் அழகில் மூழ்கினேன்.
தோழிகள் ஒருவர் பின் ஒருவராக எழுத்து காலைக்கடன்களை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வருகையில், அனைவரின் பேச்சிலும் அதிகாலையில் கட்டில் ஆடியது குறித்ததாகவே இருந்தது. எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்ன நடந்தது என்பதனை சரியாக யூகிக்கமுடியவில்லை. வாசலை பெருக்கிக்கொண்டிருந்த முதியவரை அணுகி, நடந்ததைக் கூறினோம், அவர், ஆமாம், நேற்று நிலநடக்கம் வந்தது, அது இன்னமும் தொடர்கிறது என்று சொல்லி எந்த ஒரு சலனமும் இல்லாமல் இடத்தைக் காலி செய்தார்.
ஆ.. நில நடுக்கமா.! ஐய்யோ நில நடுக்கமா.! என்னது நில நடுக்கமா.! என எல்லோரும் ஒன்றுசேர எங்களின் பீதிகளை வெளிப்படுத்தினோம்.
எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த காலை உணவைக்கூட சுவைக்கமுடியாத குழப்பத்தில் இருந்தோம்.
எங்களின் வாகனம் வந்தது, அன்றைய நாள் 29/7/2018 இறுதிநாள் எங்களின் பிரயாணம், மறுநாள் 30/7/2018 மலேசியா கிளம்ப ஆயத்தமாகிவிடுவோம். அதனால் மேலும் சில இடங்களைச் சுற்றிபார்த்துவிட்டு அங்கு விற்கப்படும் சில பொருட்களை ஞாபகச்சின்னமாக வாங்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தது.
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் முதல் வேளையாக, நிலநடுக்கமா இங்கே.! என்று கேட்டோம். ஆமாம், முதல்முறையாக மிகமோசமான நிலநடுக்கம் வந்ததுள்ளது. நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன் trawangan தீவிற்குச் சென்றீர்களே, அங்கே mini tsunami ஏற்பட்டது, இந்த ஊர்காரர் ஒருவர் மரணம். பிறகு, நீர்வீழ்ச்சிக்குச் சென்று திரும்பிய அதே நேரத்தில் அங்கு நிலநடுக்கம் வந்து, நீங்கள் நடந்து சென்ற பாதை இடிந்து விழுந்துள்ளது, எத்தனைபேர் மாட்டிக்கொண்டார்கள், யார் மரணம் என்கிற விவரமெல்லாம் சரியாகக் கிடைக்கவில்லை. செய்தித்தாள் பார்த்தால்தான் தெரியும், என்று சொல்லி மழுப்பிவிட்டார்.
பிறகு நாங்கள் செல்கிற இடமெல்லாம் ஆள்நடமாட்டம் அதிகமில்லாமல் பயணிகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கடலுக்குப் பூட்டுபோட்டு வைத்துவிட்டார்கள். கப்பல்கள், படகுகள், பெர்ரி என துறைமுகத்தில் அதிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கடலில் யாரும் பயணிக்கவில்லை. மீன்பிடி வேலைகள் நடைபெறவில்லை. அலைகள், பாறைகளையும் கரையையும் பேரிரைச்சலாக மோதிக்கொண்டிருந்தது.
நாங்கள் மேலும் சில இடங்களை, பழங்குடிவாசிகளின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, அவர்களின் பள்ளிக்கூடம், ஷாப்பிங், கடற்க்கரைக்காற்று மீண்டும் கோவில் என சுற்றிவிட்டு, மாலை வீடு திரும்புகையில், நெட் கிடைத்தது. கிடைத்த மறுநொடி எங்களின் கைப்பேசியில் வட்சாப் மற்றும் குறுஞ்செய்திகள் குவியத்துவங்கிற்று. அம்மா எங்கே,? எங்கே இருக்கின்றாய்.? உங்களுக்கு ஒன்னும் ஆகலையே, இங்கே செய்திகள் தெறிக்கின்றன, என்ன ஆச்சு.? நீங்கள் சென்ற இடத்தில்தான் நில நடுக்கமும் மினிசுனாமியும் வந்ததாக சொல்லப்படுகிறதே, நிலைமை எப்படி இருக்கு அங்கே.? எங்கேயும் போகவேண்டாம், உடனே ஊர் திரும்புங்கள்.! முடிந்தால் இன்றே கிளம்புங்கள். கிட்டத்தட்ட 500 வெளியூர்பயணிகள் Rinjani மலையில் மாட்டிக்கொண்டதாக தகவல் வருகிறது. உண்மையா.? இப்போ நீங்களெல்லாம் எங்கே இருக்கின்றீர்கள்.? இதுவரை 66முறை நேற்றும் இன்றும் நிலநடுங்கள் ஏற்பட்டிருந்தனவாம்.! கவனம் கவனம். வீடு திரும்புங்கள், போன்ற செய்திகள் கேள்விகள் அடங்கிய குறுந்தகவல்கள் நூற்றுக்கும் மேலாக வந்து குவிந்திருந்தன. எங்களுக்கு அப்போதுதான் அதன் பேராபத்தை சரியாக உணரமுடிந்தது. இவ்வளவு நடந்துள்ளது, ஆனால் இங்கே உள்ள நமக்கு எதுவும் தெரியாமலேயே நாம் சுற்றுலா என்கிற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கின்றோமே, என்று பதற ஆரம்பித்தோம்.
பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கும், நாம் யாரிடமாவது பேசி தகவல் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதுவோ ஒரு பங்களா, அங்குள்ள முதியவர் யாரிடமும் பேச்சுகொடுப்பவராகத் தெரியவில்லை. எங்களின் வாகனமோட்டியோ, உண்மை நிலவரத்தை மறைந்தே கூறிவருகிறான்.
வெப்சைட் சென்று என்ன நடக்கிறது என்று அனைவரும் ஒன்றுசேர செய்திகளை வாசித்தோம், நிலவரங்களை பதிவுசெய்திருந்த youtube காட்சிகளைப் பார்த்து திடுக்கிட்டோம், காரணம் நேற்று நாங்கள் சென்ற நீர்வீழ்ச்சிப் பாதைகள் இடிந்து விழுந்திருந்தது, அங்கே ஹெலிக்கப்டர் மூலம் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவி செய்துகொண்டிருப்பதைக் கண்டோம்.. மலேசியர் ஒருவர் பலி என்கிற செய்தியையும் வாசித்தோம். எல்லோர் முகத்திலும் கலவரம் தெரிந்தது. அதே வேளையில் எதோ ஒரு சக்தி நம்மை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது என்கிற ஆறுதலும் இதமளித்தது.
இரவு உணவிற்கு முன் அனைவரும் வட்டமாக அமர்ந்து, பிரார்த்தனை செய்தோம். அமைதியாக இருந்தோம். இன்னும் ஒரு பொழுது, ஊருக்கு ஓடிவிடலாம் என்கிற சிந்தனை வார்த்தை வடிவமாக எல்லோர் வாயிலிருந்தும் வந்துகொண்டே இருந்தது
இரவு தூக்கம் வரவில்லை. கட்டிலில் கண்விழித்துக்கிடந்தோம். என் அருகில் படுத்திருந்த தோழி அதிகம் புலம்பியவளாக இருப்பினும் விரைவாகவே கண்யர்ந்தாள்.
நானும் எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை.
தீடீரென்று ஒரு அலறல் சத்தம், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழி, சாமி வந்ததைப்போல் ஸ்ஸ்ஸ்ஸ் ஷூஷூஷூ….. ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆ ஐயோ… ஐயோ… என்று அலறினாள். தடாரென்று எழுந்து, ஏய் என்னாச்சு.? என்று கேட்டேன். சத்தம் அடங்கவில்லை. அவளின் பெயரைச்சொல்லி அழைத்தேன். அமைதியாக இருந்தாள். பக்கத்து அறையில் இருந்த தோழிகளும் ஓடிவந்து, என்ன சத்தம்., யாரு சத்தம் போட்டா.? என்று கேட்டுக்கொண்டே கதவைத்தட்டினார்கள். மணி அதிகாலை 2.00. சத்தம் போட்ட தோழி தனது போர்வையை இழுத்து நெடுமுக்காடு போட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
மீண்டும் பிரார்த்தனை செய்தோம். ஜபம் செய்தாள் மற்றொரு தோழி. கொஞ்ச நேரம் என் அறையில் இருந்தார்கள். பிறகு அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டர்கள்.
நான் தைரியசாலிதான் இருப்பினும் அன்று மிகவும் பலகீனமானவளாக மாறிப்போயிருந்தேன். நெஞ்சு கனத்தது. இருதயத்தின் படபடப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னால் அந்த அறையில் தொடர்ந்து தலை சாய்க்கமுடியவில்லை. எந்த லாஜிக்’கும் எனக்கு வேலைசெய்யவில்லை. எந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகொடுக்கவில்லை.
அவளைப்பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். மீண்டும் அலற ஆரம்பித்தாள், இந்தமுறை பேசினாள், என் கழுத்தை யாரோ பிடித்து நெருக்குகிறார்கள். ஆ... ஐய்யோ, வலி வலி விடுங்கள் விடுங்கள்… என்று, அதற்கு மேல் நான் நிற்கவில்லை, அங்கிருந்து ஓட்டம் பிடித்து பக்கத்து அறையின் தோழிகளோடு படுத்துக்கொண்டேன்.
விடிந்ததும் முதல்நாள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியவே இல்லை நினைவிலும் இல்லை. நாங்களும் அதிகமாக அதைப்பற்றி பேசிக்கொள்ளவும் இல்லை.
பாதுகாப்பாக ஊர் திரும்பினோம்.
இப்போது, ’ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போல்’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம் திகிலாக...