செவ்வாய், நவம்பர் 20, 2012

ஆண்டு விடுமுறை அர்ப்பணிப்பு

இருபத்திரண்டு நாடுகளைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், எங்களின் நாடான மலேசியா, வேலைக்குச் செல்லும் பணியாட்கள் வேலையே கதியாகக் (Workaholic) கிடக்கின்றார்கள் என்கிற பட்டியலில் நான்காவது இடத்தை வெற்றிகரமாகப் பிடித்துள்ளது.

உலக நாடுகளை வைத்துப்பார்க்கையில், மலேசியாவில்தான் பணியாளர்களுக்கு ஆண்டு விடுமுறைகள் (ANNUAL LEAVES) மிக மிக கம்மியாம். (இந்த தகவல் இப்போதுதான் எனக்கே தெரியவந்தது). மற்ற நாடுகளில் இருபத்திநான்கு முப்பத்திரண்டு என்று அதிகரித்துக்கொண்டே போகும்  பட்சத்தில் மலேசியாவில் மட்டும்தான் இன்னமும் சராசரி நிலையில் பதினான்கு நாட்கள் ஆண்டு விடுமுறைகள் கொடுக்கப்படுகிறன என்கிற உண்மையையும் அந்த ஆய்வு தாங்கி வந்திருந்தது.

இருந்தபோதிலும், அந்த பதினான்கு நாட்களையும் முழுமையாக எடுத்து முடிக்க முடியாமல், தொண்ணூறு விழுக்காடு பணியாளர்கள் வேலையிடமே கதியாகக்கிடக்கின்றார்கள் என்கிற சுவாரிஸ்யமும் அதிர்ச்சியும் கூடிய தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

இங்குள்ள தொழிலாளர்களின் மத்தியில் பதினைந்து விழுக்காட்டினர்களுக்கு, தாம் விடுப்பு எடுத்துக்கொள்வதால் மேலதிகாரிகள் மற்றும் சக தொழிலாளர்கள் தம்மீது எதிர்மறை சிந்தனைகளைக் கொண்டுவிடுவார்கள் என்கிற பய உணர்வில் அல்லல்பட்டு முடிந்தவரையில் வேலைக்கு விடுப்பே எடுக்காமல், தினமும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. இதனாலேயே நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார்களாம் மலேசியர்கள்.

இதில் இன்னொரு சிக்கலும் மறைமுகமாக உள்ளது. அதாவது போட்டிகள் மலிந்த சூழலில், வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருக்கும் பட்சத்தில், கிடைத்த வேலையை தக்கவைத்துக்கொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும்,  தொடர் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அலவன்ஸ் போன்றவைகள் தங்குதடையில்லாமல் கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் ஓய்வு உளைச்சல் இல்லாமல் வேலை இடங்களுக்கு தொடர்ந்து விஜயம் செய்து விடுகின்றார்கள் பணியாட்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதான்.

வருட விடுமுறைகளை முடிக்க முடிக்காமல், ஆண்டு இறுதி வரை வேலை செய்து, அந்த விடுமுறைகளை நிறுவனங்களுக்கே தானமாக (!)அர்பணிக்கின்ற அரிய வேலையை நானும் செய்துள்ளேன்.

இதில் உள்ள உளவியலை ஆராய்ந்தால், வேலைக்கு விடுப்பு எடுக்கின்ற சமயத்தில், நிச்சயமாக நமது வேலைகளை வேறொருவர் செய்கிற நிலை வரும், அப்போது, சம்பந்தப்பட்ட அந்த தற்காலிக ஊழியர், நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள குறைகள் குளறுபடிகள் போன்றவற்றைக் களைந்து, வேலையை இன்னும் மெருகேற்றி சிறப்பாகச் செய்து காட்டிவிட்டால், என்னாவது நம் பிழைப்பு? இப்படிச் செய்துகாட்டித்தான் முன்பு நான் வேலை செய்த ஒரு பெரிய நிறுவனத்தில், குமாஸ்தா பணியில் இருந்து அலுவலக அட்மின் அஸிஸ்டண்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றேன்.

என்னுடைய சீனியர், சவுதி அரபியாவிற்கு, ஒரு மாதகால ஆன்மிக பயணம் சென்றுவிட்டாள். நான் அவளுக்குக்கீழ் பணிசெய்த குமாஸ்தா. அவள் சென்றவுடன் அவளின் வேலைகள் அனைத்தும் என் பார்வைக்கு வந்து விட்டன. அப்போது நான் துடிப்புமிக்க வேகமான பணியாள். போட்டி உலகத்தில் என்னை நான் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு விரைவாக வேலைகளைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக, முறையாக அட்டவணையிட்டு, அன்றைய வேலைகளை அன்றே முடித்து, அதன் அறிக்கைகளை அதிகாரிகளின் மேஜையில் அன்றைய பொழுதிலேயே வைத்து விடுவேன். அவர்களுக்கு என்னுடைய இந்த பாணி மிகவும் பிடித்துப்போனது. அதிகாரிகள் மறுநாள் காலை சந்திக்கவிருக்கின்ற `மீட்டிங்க்’கிற்கு இது பேருதவியாக அமையவும், எனது சீனியர் வருவதற்குள், என்னை அப்பதவிற்கு நிரந்தரமாக நியமித்தும் விட்டார்கள். விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த அவள் அதிர்ந்து போனாள். அவளை வேறு துறைக்கு (டிப்பார்ட்மெண்ட்) மாற்றல் செய்தார்கள், அங்கேயும் முறையாக அட்டவணைப்படி வேலை செய்யமுடியாமல் திணறி வேலையை விட்டே நின்று விட்டாள்.

இன்று அவள் என்றால், நாளை நாம் அல்லவா? அதனால்தான் பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் விடுமுறைகளைக் கழிக்க விடுப்பு எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள் போலும்.! மேலும் இங்கே மூவினங்கள் ஒன்றாக வாழ்கிறோம். பேச்சுக்குச் சொல்லலாம், நாங்கள் ஒற்றுமை அப்படி இப்படி என்று. நிஜத்தில் எங்களுக்குள் ஒருவித மௌனப்போர் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். குறிப்பாக; பணியிடம், பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உன்னை நான் மிஞ்சுவேன், என்னை உன்னால் மிஞ்ச முடியுமா? என்கிற போட்டிகள்தான் இன்னமும்.

ஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டுமென்கிற வெறியில், உன்னைவிட நான் ஒசத்தி என்கிற போராட்டத்தில், வேட்டைக்காரர்கள் போல் செயல்படுவதால், விட்டுக்கொடுக்க மனமில்லாமல், இறுக்கிப்பிடித்துக்கொண்டு இறுக்கமாகவே வாழ்ந்து வருகிறோம். இதுதான் இந்த ஆய்வின் பின்னணி.