சனி, ஆகஸ்ட் 31, 2013

சுதந்திரதின வாழ்த்துகள்

மலேசியாவில் குண்டர்கும்பல் நிருவகிப்பில் தமிழர்கள் முதல் நிலை என்கிற செய்தி நாடுதழுவிய நிலையில் தீப்போல் பரவி வருகிறது. 

சொந்த வீட்டைப் புதுப்பிப்பதற்குக் கூட அவர்களுக்கு பணம் செல்லுத்தவேண்டிய துர்பாக்கியம் என்று சொல்கிறார்கள். 

இரவுவிடுதி, தனிநபர் காவல், கார் இழுப்பது, மதுபாணக்கடை, வட்டிமுதலைகளில் எடுபிடிகள், போலிஸ்காரர்களின் அடியாட்கள் என பட்டியல் நீள்கிறது. 

`கைகளை’ நன்கு பயன்படுத்திக்கொண்டு இப்போது போட்டுதள்ளுகிறார்கள். எங்குபார்த்தாலும் தமிழர்கள் குண்டர் கும்பல் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுகிறார்கள் இல்லையேல் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

நேற்றுவேலை முடிந்து வீடுதிரும்பிய நம்ம பையன் ஒருவனின் வேனை மடக்கி விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் போலிஸ்காரர்கள். சாலையில் பார்த்தேன்.

கைகளில் பச்சை குத்தி அந்த பச்சை துரதிஷ்டவசமாக போலிஸ் தேடுகிற குண்டர்கும்பலின் சின்னமாக இருந்துவிட்டால், நீங்கள் உள்ளே வைக்கப்படுவீர்கள் இல்லையே சுட்டுத்தள்ளப்படுவீர்கள். கவனம்.!

கவலையாகத்தான் இருக்கிறது. அலுவலகத்தில் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி பேசிக்கொள்கிறபோது மனது வேதனைப்படுகிறது.

முகமூடிபோட்டுக்கொண்டு பல நாசவேலைகளைச் செய்தவர்கள் எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற ஒரு நிலை உருவாகிவிட்டது.

தமிழர்களே தமிழர்களைப் பழித்துச் சொல்லுகையில் இன்னும் அதிக கோபம் வருகிறது எனக்கு.

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு தமிழர் மற்றொரு தமிழரை மலாய்க்காரகளின் மத்தியில் பழித்துக்கூறியதைக் கண்டு மனம் வெதும்பி, அவனை `நல்லா’ கேட்டேன்.

கஷ்டப்பட்டு உழைக்கின்றார்கள். உடல் கிண்ணென்று பலசாலிபோல் இருப்பான்கள். வீரன்போல் மீசையை முறுக்குவார்கள். அவர்களின் உழைப்பின் வேகம் உடம்பில் தெரியும். அவர்கள் எல்லோரும் குண்டர் கும்பலில் உள்ளவர்களாம். வாய்கூசாமல் சொல்கிறார்கள்.

இந்த நிலை யாரால்? குண்டர்கும்பலில் தமிழர்கள் அதிகம் ஈடுபடுவது எதனால்? ஏன் இந்த நிலை? என்ன இல்லை இங்கே? இப்படியெல்லாம் ஊடங்களில் கேட்டுவிட்டு, கேள்விகளோடு நிற்கிறது செய்தி..

ஐம்பத்தாறு ஆண்டுகள் சுதந்திரம் அடைந்துவிட்ட மலேசியாவில் நாங்கள்..

(தமிழர்கள்)

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

பேசலாம் இஷ்டம்போல்..

சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட.

உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் - அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, இதெல்லாம் தேவையற்ற ஒன்று.' என்கிற வாசகத்தை அடிக்கடி உச்சரிக்கின்றவர்களாக இருப்பவர்களேயானாலும் கூட, சில விஷயங்கள் மறைமுகமாக நிகழ்கின்ற போது, தமக்குச் சம்பந்தமில்லை என்கிற உணர்வு ஆழ்மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் கூட, அது என்ன ரகசியமாக இருக்குமென்கிற யோசனை தலைதூக்காமல் இருக்காது.

சிலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருப்பதற்குக்காரணம் அவர்களுக்கென்று இருக்கின்ற தனிப்பட்ட சுற்றம் நட்பு போன்ற வட்டத்திற்குள் சுவாரஸ்ய பேச்சுகள் அமையவேண்டும் என்பதற்காக சில சம்பவங்களில் கூடுதல் கவனமெடுத்து ஆராயத்துவங்கிவிடுவார்கள். இது ஒரு தவறாக செய்கை என்று சொல்வதற்கில்லை. காரணம் நல்ல சுற்றம் நல்ல நட்புவட்டம் என்று அமைகின்றபோது தைரியமாக சில கதைகள் (ஊர்கதையாக இருப்பினும்) பேசுவதில் எந்தப் பாதிப்புகளும் வராது என்று உறுதியாக நம்பலாம். அப்படி நம்புகிறபோது நமது பேச்சாகப் பட்டது பல கோணங்களில் நகரலாம்.  எடுத்துக்காட்டுக்கு;  எனது நட்புவட்டம் என்பது வேறு -  கணவரின் நட்புவட்டம், நண்பர்களின் நட்புவட்டம், சகோதரிகளின் நட்பு வட்டம், பிள்ளைகளின் நட்புவட்டம் என பலவட்டங்கள் தனித்தனியாக இயங்குகின்ற பட்சத்தில், ஒருவருக்குகொருவர் சந்தித்து உரையாடுகிற சமையத்தில், அவரவர் வட்டத்துப்பேச்சுகள் பற்றியும் சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறபோது அங்கே பலரின் கதைகள் பேசப்படுவது இயல்பான ஒன்று. தவிர்க்கமுடியாத ஒன்றும். சாடல் சொல்லாடல்களாகவும் அது விரியும்.

`எனக்கு யார்கதைகளைப் பற்றியும் பேசப்பிடிக்காது. நான் உண்டு என் வேலை உண்டு’ன்னு இருப்பேன்.’ என்று பீற்றிப் பிதற்றிக் கொள்பவர்களின் ஆழ்மனமாகப்பட்டது சுனாமி அடித்துக்கொண்டிருக்கும் கடல் என்றே உவமை கூறலாம்.  - நீங்கள் ஞானநிலையில் இருந்தால் - இந்த அற்ப சுகவாசியின் கருத்தை ஒரு பொருட்டாகக் கருதத்தேவையில்லை. நிஜமாலுமே நீங்கள் ஊர்கதைகள் பேசா கேளா ஆசாமிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவே நீங்கள் சாதாரண ஆள் என்றால், சராசரி நிலையில் உள்ள என்னோடு கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.  நாமெல்லாம் ஒரு ஆள்.

யாரிடமும் எதுவுமே பகிராமல் இருக்கின்ற ஆசாமிகளுக்குக் கதைகளே இருக்காது. கதைகளோ செய்திகளோ இல்லாத ஒரு ஆள் மனநோயாளி போல் நடந்துகொள்வான். இப்படி இருக்கின்றவன் யாரிடம் என்ன பேசுவான்? பழம்பெருமைதான் அவனின் கதைகளாக இருக்கும். பழம்பெருமை பேசி மகிழும் மனிதனிடம் நிகழ்காலச்சிறுமைகள் மளிந்து கிடக்குமென்று ஒரு வாசகம் படித்தேன் புத்தகத்தில். இது நிஜமும் கூட.  இன்றைய நவீன காலகட்டமென்பது முன்புபோல் அல்ல, கூட்டுக்குடும்பம், அண்டையையலார் என நல்லுரவு பேணி அளவளாவி மகிழ்வதற்கு.  நல்லது கெட்டது முன்பைவிட அதிக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காலகட்டமிது. கூடி பேசுவதற்கு ஆள் இல்லாமல், எல்லாவற்றையும் சல்லடை செய்து பேசி, தாம் பொதுவில் உயர்ந்த மனிதன் என்கிற பறைசாற்றலை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் தனிமையில் தனிமனிதன் மனநோயாளியாய் உழன்று தம்மைத்தாமே  தீர்த்துகட்டிக் கொள்வதற்கும் தயாராகி விடுகிறான்.

நான் மேல் நிலை மனிதன். மேல் தட்டு வாசி. உயர் பதவி வகிப்பவன் என்கிற நிலையிலும் சிந்தனைப்போக்கிலும் உலாவருபவர்கள் கூட, யாரிடமாவது தூது அனுப்பியாவது சில விவரங்களைச் சேகரித்து முழுகதைகளையும் அறிந்துவைத்திருப்பார்கள். நம்மைவிட இன்னும் அதிக அளவில் ஊர் உலக விவரங்கள் (பக்கத்துவீட்டுப் பெண்ணின் கள்ளக்காதல் முதற்கொண்டு)  தெரிந்திருக்கும் அவர்களுக்கு. மனித இயல்பு இதுதான். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது.!

எனக்குத்தெரிந்த உயர் பதவி அதிகாரி ஒருவருக்கு சினிமா கிசுகிசுக்கள் அத்துப்படி. இரண்டு எழுத்து சினிமா படத்தில் நடித்த முன்று எழுத்து நடிகையும், நான்கு எழுத்து நடிகரும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஆறு எழுத்து இயக்குனரின் சிபாரிசில், ஏழு செய்தார்கள்...என்று எழுதியிருந்தால், அதான்.. இது இது.. இவரு... இந்தக்கதைதான் என்று மிகச் சரியாகக் கண்டுபிடித்து சொல்லிவிடும் ஆற்றல் கொண்டவர் இவர். இதில் மட்டும் ஆற்றல் உள்ளவர் அல்லர், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டியிலும்  மிகக் கெட்டிக்காரத்தனமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடும் திறமையும்  கொண்டவர்தான் அவர்.. கவனித்தீர்களா, இதுபோன்ற தீர்க்கப்பார்வை உள்ளவர்கள் தெளிந்தநிலை அறிவாளிகளாகத் திகழ்கின்றார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சிலரை நாம் பார்த்தோமென்றால் நமக்குத்தேவையில்லாத காரியம் இது என்று சொல்லிவிட்டு, ஜாடை மாடையாக துருவித்துருவி சில விவரங்களை வாங்க சதா நமக்கு தொலைபேசி  அழைப்பு விடுத்தவண்ணமாக இருப்பார்கள். கதை அங்கேயும் இங்கேயும் அலைமோதினாலும் `ஆங்.. கேட்க மறந்துட்டேன்...’ என்கிற பீடிகையோடு அழைத்ததன் நோக்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். நாம்தான் உளறுவாயாச்சே, எதாவது சொல்லப்போக, விஷயங்களைத் திரட்டிய திருப்தியில், `தேவையா இது நமக்கு? ஊர் கதை எதுக்கு? வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்கிற காரியம் இவையெல்லாம்..’ என தம்மை விடுவித்துக்கொள்கிற எச்சரிக்கையில் விலகிச்செல்வதைப்போல், நழுவிவிடுவார்கள். இவர்களை அடையாளங்காண்பது மிகச்சுலபம். தொலைபேசியில் அழைக்கின்றபோது அதைத்துண்டித்துவிடுவதுதான் நாம் செய்கிற நல்ல செய்கை.

முகநூல் அரட்டைகள்கூட சிலரை அடையாளங்காட்டிவிடும். எழுத்துவடிவில் கருத்துப்பகிர்தல் நிகழ்ந்தாலும், அமைதியாய் சிலரின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிற கருவி இந்த முகநூல்.  என் தேடல் ஆர்வத்திற்கு வடிகாலாக முகநூல் அமைந்துவிட்டதால் நான் தினமும் செல்வேன் அங்கே. அங்கு நிகழ்கின்ற கூத்துகள் கொஞ்சநஞ்சமா.? சிலர் நான் முகநூல் வருவதில்லை. அங்கே நிகழும் வெட்டி அரட்டைகள் படு போர். தேவையா? தினமும் எதாவது எழுதிகொண்டு மொக்கை போடுகிறார்கள் அதற்கும் ஆயிரதெட்டு லைக்குகள் கமெண்டுகள்... என்று, அவைகள் பிடிக்காததுபோல் காட்டிக்கொண்டாலும், தினமும் அங்கே நடக்கின்ற அக்கப்போர்கள் அனைத்தையும். அக்கு அக்காகச் சொல்லி தமது மனப்புழுங்களை வெளிக்கொணர்வார்கள். நாமாவது கணினிமுன் இருக்கின்றபோது கொஞ்சம் ஈடுபாடு காட்டிவிட்டு, பிறகு அதை ஒருபொருட்டாகவே கருதாமல் நமது அன்றாட நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபடத்துவங்கிவிடுவோம். ஆனால் இவர்களோ, நான் போகவில்லை, நான் முகநூலை மூடிவிட்டேன், எல்லாம் போலி, யாருக்கும் ஒழுக்கமில்லை, நேர்மையில்லை.. ஆச்சா போச்சா.. என்று தாண்டுவார்கள், இருந்தபோதிலும் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். என்ன ஒரு வெக்ககேடு இது.!

அதற்கு எல்லாவற்றிலும் சமநிலைநோக்கோடு இருந்துவிட்டுப் போகலாம். வாழ்வாவது சுவாரஸ்யமாக இருந்து தொலைக்கும்.

என்னைச்சுற்றி இருக்கின்ற தோழிகளுடன் பேசிவிட்டு வந்தால், அது சுவாரஸ்யமான பிறர்கதைகளே என்றாலும் அதில் குற்றவுணர்வு வராமல் பார்த்துக்கொள்வோம். தாம் செய்கிறதனைத்தும் யோக்கியம் அடுத்தவர் செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்கிற ரீதியில் நமது பேச்சு இல்லாமல், நாம் ஏற்கனவே செய்த குளறுபடிகளோடு சம்பவங்களை ஒப்பிட்டு கதைகளை நகர்த்துகின்றபோது அங்கே குற்றவுணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை. பக்குவப்பட்ட மனமுதிர்வு உரையாடலாக அது பதிவாகின்றபோது, `ஏய் எங்கேயும் உளறிவைக்காதே.. அவகிட்ட சொல்லிடாதே, போய் கேட்பியா? அம்மா சத்தியமா? சாமி சத்தியாமா? என்கிற எச்சரிகை வாசகங்களைத் தேவையில்லாமல்  உதிர்க்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

இரண்டு நிகழ்வுகள் - இரண்டும் பொடிவைத்துப் பேசப்பட்ட பேச்சாகவே இருந்தன.

என் மலாய் தோழி ஒருவளிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது - அவள் சொன்னாள், `நேரமிருந்தால் இந்தப்பக்கம் வாயேன். நோன்புப்பெருநாள் பலகாரங்கள் எல்லாம் உன் வருகைக்காகக் காத்திருக்கிறது.’, என்றாள்.

நான் உடனே, `இன்று முடியாது நானும் என் இன்னொரு தோழியும் வெளியே செல்கிறோம், வேறுநாள் பார்க்கிறேன்.’ என்றேன்.

`அடூய்ய் உனக்கு வயசாச்சுதானே? தோழிகளோடு ஊர் சுற்றுவதை இன்னும் விடலையா? நீயும் எங்கம்மாவும் ஒண்ணு. அவர் அவரின் கணவனோடு வெளியே கிளம்பும்போது பார்க்கணுமே  உடுத்தலை..!’ என்றாள்.
நான் மௌனமானேன். அம்மாவின் கணவன் என்றால் அவளுக்கு அப்பாதானே.? ஏன் இவள் அப்பா என்று சொல்லாமல் அம்மாவின் கணவன் என்கிறாள்..! யோசித்தேன், இருப்பினும் காட்டிக்கொள்ளவில்லை. குடும்ப விவகாரம். கேட்டால் எதாவது வில்லங்கமாகுமே என்று, `ஹ..ஹ’ என்கிற சத்தத்தத்தோடு முடித்துக்கொண்டேன். இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு, என்றாவது ஒருநாள் நிச்சயம் கேட்பேன்.

இன்னொரு சம்பவம் - கம்பனியில் வேலை செய்கிற ஒருவளோடு இங்கே அண்மையில் கெந்திங் மலையில் நடந்த மிகமோசமான சாலை விபத்தொன்றைப் பற்றிப்பேசுகையில், அவள் சொன்னாள், `என் முன்னால் கணவன், என்னை அடிக்கடி இந்த மலைப் பிரதேசத்திற்குத்தான் அழைத்துச்செல்வான். எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, கெந்திங் என்றால் என் அம்மா விடவே மாட்டார். இதனாலேயே எனக்கும் அவருக்கும் பிரச்சனை வரும்..’ என்றாள்.  ஆ.. இன்னும் கல்யாணம் ஆகாத பெண் இவள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன இப்படியொரு கதையைச் சொல்கிறாளே.! ` உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’ கேட்டேன். `நிச்சயதார்த்தம் ஆகி பாதியிலேயே நின்றுபோனது என் திருமணம்.’ என்றாள்.

நாம் பேசுகிற எல்லாக் கதைகளிலும் யாராவது இருப்பார்கள். அது நல்லதோ கெட்டதோ நிச்சயம் மூன்றாவது மனிதர் சூட்சமாக நம் அருகில் இருப்பார்.  ஆலோசனை என்கிற பெயரில் சில விஷயங்கள் வருகிறபோது சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவது நல்லது. காரணம் மனித உறவு என்பது, இன்றைய பகைவன் நாளைய நண்பன்,என்கிற ரீதியின் மிக விரைவாகப் பயணிக்கத்துவங்கிவிடும். நாமும் ஒரே மாதிரியாக பல ஆண்டுகள் சிந்திக்கப்போவதில்லை.

 ஆக, நல்லதை மட்டும் பேசுகிறேன் என்று ஒரு வித போலி உரையாடல் உள்ளபடியே சுவாரஸ்யமற்றது. மனமுழுக்க குப்பைகளை சுமந்துகொண்டு நாவில் மட்டும் தேன் தடவி பேசிக்கொண்டிருப்பவர்கள்தான் குள்ளநரிகள்.

அவர்களை மட்டும் அடையாளாங்கண்டு விலக்கிவிட்டால், பிரச்சனைகள் வராது. நாம் என்னவேண்டுமானாலும் பேசலாம் இஷ்டம்போல்....

        

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

தப்பித்தல்

புதிதாக அறிமுகமான தோழி ஒருவள், எனக்கு தினமும் தொ(ல்)லைபேசி அழைப்பு விடுத்து எதாவது பேசுவாள். எனக்குத் தொலைபேசியில் வளவள பேச்சுப் பிடிக்காது. சில சமையங்களில் அவளின் தொலைபேசியை எடுப்பது கூட இல்லை. அப்படி எடுத்தால் கலகலன்னு பேசுவேன், எவ்வளவு வேலையாக இருந்தாலும்.

சென்றவாரம் நானும் அவளும் வெளியே சென்றுவந்தோம். அப்படிச்செல்லுகையில், உணவருந்த ஒரு கடையில் அமர்ந்தோம். உணவு ஆடர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்து யார் என்று பார்த்தேன்.  ஒரு இலக்கிய நண்பர் அழைத்திருந்தார். இலக்கியம் பற்றிப்பேசுவதற்கு அது, அதுவும் அந்தத்தோழியின் முன் அங்கே பேசுவது சரியாகப் படவில்லையாதலால், அழைப்பை எடுக்காமல் அழைப்புமணி நிற்கும் வரை பார்த்துவிட்டு கைப்பேசியை அடைத்துவிட்டேன்.

இக்காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்ட தோழி,

`ஏன் விஜி இப்படிச் செய்கிறீர்கள்? பாவம் இல்லையா. எதோ முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது, பேசுங்களேன்’ என்றார்.

`முக்கியமெல்லாம் ஒன்றும் இருக்காது. வழக்கமாக பேசுகிற நண்பர்தான். பேசலாம் பிறகு. என்ன இப்போ.!’ என்று சொல்லி எங்களின் பேச்சுக்கு வந்தோம். அவரால் என்னோடு தொடர்ந்து பேச முடியவில்லை.

`ச்சே, எடுத்திட்டு, நான் வெளியே இருக்கேன், பிறகு அழைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே. நண்பர்களை அவமதிக்கின்றீர்களே..’ என்றாள் அலுத்துக்கொண்டு.

எப்படிச்சொல்லி புரியவைப்பது என்பதால், `சரி சரி.. பிறகு அழைப்பேன். விடுங்க விடுங்க ..’ என்று சொல்லி சாப்பிட்டுவிட்டு வீடு வந்துசேர்ந்தோம்.

அன்று சந்தித்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக அவளிடமிருந்து அழைப்பே வரவில்லை.

எனக்கு ஓரளவு புரிந்தபோதிலும், இன்று மதியம் அழைத்துக்கேட்டேன்,

`என்ன ஒருவாரமாக அழைக்கவில்லை.?’

அவளின் பதில், `நீங்க பிஸியாக இருப்பீங்கன்னுதான் அழைக்கவில்லை...’  

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

மண்மண(ன)ம்

மண்மணம் கமழ்கின்ற எழுத்தே  படைப்பாளி கொடுக்கின்ற சிறந்த எழுத்தாகப்பார்க்கப் படுகிறதாம்.!!

தமிழ்நாட்டில் வட்டாரவழக்கு மொழியினை தமது கதையினில் நுழைத்து மண்மணம் கமழ படைத்து வெற்றி வாகை சூடிவிடுகிறார்கள்.

எங்களின் சூழல்? மண்மணம், முன்பு வாழ்ந்த எஸ்டேட் வாழ்க்கைதான். அது இப்போது இல்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக எஸ்டேட் சூழலை நுழைத்து மண்மணம் கமழ கதை எழுதுகிறேன் என்று கற்பனைப் புனைவுகளை படைக்கின்றார்களே. சரியா?

வட்டாரவழக்கு என்கிறபோது நாங்கள் மலாய் ஆங்கில மொழியினை பேச்சுவழக்கில் கலந்துபேசுவதான ஒரு நிலையில் கதைதனை வடித்தால், அக்கதை தேர்வாகமலேயே போய்விடலாம் - காரணம் இங்கே தமிழ் மொழியில் கலப்பு என்பது அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதற்காக - மலேசியாவில் இருக்கின்ற நாங்கள் தமிழ்நாட்டு சூழலை கற்பனை செய்து வைத்துக்கொண்டு, மண்மணம் கமழ கதை எழுதினால் அது பதினாறு வயதினிலே என்கிற சினிமா சூழலை கண்முன் நிழலாட வைத்துவிடுமே. அந்தத் தோரணையில் வந்த கதைகளை நான் படித்ததுண்டு.

நாட்டின் தற்போதைய மண்மணமாகப்பட்டது - தினசரி நடக்கின்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வே.
அதை நம் கதைகளில் நாம் வடிக்கின்றபோது, அது பலநாடுகளில் அன்றாடம் நடக்கின்ற பொது நிகழ்வாகிப்போகிறது. அங்கே மண்மணம் தெரிய வாய்ப்பில்லை.

ஆக, மண்மணம் கமழ்கின்ற கதைகள்தான் சிறந்த கதை என்கிற கருத்து புலம்பெயர்ந்து வாழ்கிற உலக தமிழர்களுக்கு பொருந்துமா?  

பலநாடுகளின் மண்மணம் - நாகரீகம் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லாமும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பட்சத்தில்.. மண்மண கதைகளை இன்னமும் எதிர்ப்பார்ப்பது சரியா? 

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அறிவுப்பூர்வ அறிக்கை

நண்பர்களே இன்றைய தினகுரல் பக்கம் 5-ல் வந்திருக்கும் 'மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுச் சிறுகதைத் தேர்வு நிறுத்தப்படுகிறது' என்ற கட்டுரையை யாரெல்லாம் படித்துவிட்டீர்கள். அது குறித்து என நினைக்கிறீர்கள்...? Taya G Vellairoja

// பிரச்சனை என்னவென்றால் - பெண்படைப்பாளிகள் தங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவரை `சொற்பொழிவு’ ஆற்ற அழைத்துள்ளார்கள். இது நடந்தது சென்ற மாதம் பன்னிரண்டாம் தேதி.
தலைவரின் சொற்பொழிவின் போது, பெண்களைப் பற்றிய கருத்து ஒன்றினை தவறுதலாக உளறிவிட்டார். மைக் கையில் கிடைத்துவிட்டால் உளறல் எல்லாம் சாதாரணம் இங்கே. அதாவது பெண் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குவது ஆண் படைப்பாளிகளின் பெருந்தன்மையையே காட்டுகிறது, என்று. இது தவறுதானே.? மன்னிப்பு கேட்டிருந்தால்,பிரச்சனையில்லாமல் போயிருக்கும். மன்னிப்பு கேட்கவில்லை. இது இளம் எழுத்தாள வாசகர் மத்தியில் கடுங்கண்டனத்திற்கு உள்ளானது.முகநூலிலும் விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.
வாசகர்களான நாங்கள் இதையொட்டிய கண்டனக்கடிதங்களை வல்லினம் இணைய இதழில் பகிர்ந்திருந்தோம்.
நேற்று 15/8/2013 கிட்டத்தட்ட ஒருமாத காலங்கழித்து, எங்களின் எந்தக் கண்டனக் கடிதங்களுக்கும் பதிலடி கொடுக்கமுடியாத பட்சத்தில், தயாஜி என்கிற வாசகரின் கடித்தத்தில் இருக்கின்ற ஓரிரு வரிகளை மட்டும் எடுத்து (எழுத்தாளர்களைக் கேட்காமல் அவர்களின் கதைகளை புத்தகங்களாகப் போட்டு, விற்பனை செய்கின்றீர்களே. எழுத்தாளர்களின் ராயல்ட்டி எங்கே?).. அவர் இப்படிச்சொன்னதால் நாங்கள் எங்களின் எல்லா எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளையும் நிறுத்தப்போகின்றோம் என்று அறைகூவல் விட்டிருக்கின்றனர் ம.த.எ.சங்கம். நேற்றைய தினக்குரலில் ஐந்தாம் பக்கத்தில் வந்திருந்த அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்கநேர்ந்தால் - அறவே இலக்கியச் சார்பில்லாத சாதாரண மனிதனும் சிரிப்பான்.
யாராவது உன்னைச் சப்பானின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறை. என்பதைப்போல பக்கா பாமரத்தனமாகவே இருக்கின்றது அந்தக் கட்டுரை. //



இது ஒரு சிறுபிள்ளைத்தனமான மிரட்டல் என்று பத்திரிகைப் பதிவினைப் படித்தவுடன் புரிந்துகொண்டேன். 

இவர்கள் இவ்வளவு மோசமான அறிக்கை மன்னர்களாக இருப்பார்கள் என்று நான் கடுகளவும் யோசிக்கவில்லை. ம.த.எ.ச பெரிய ஜாம்பவான்களின் குகை என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.

தனி நபர் ஒருவரின் சாடலைக் காரணங்காட்டி ஒட்டுமொத்த சங்க நடவடிக்கைகளையும் முடக்கநினைக்கின்ற இவர்களின் வீரம் நிஜமாலுமே மெய்சிலிர்க்கவைக்கிறது.

இது இணைய இதழ் வல்லினத்திற்கு எதிராக ஆட்களைத் (எழுத்தாளர்களை) திரட்டி, சென்றமுறை வந்துள்ள எங்களின் கட்டுரைகளுக்கு எதிர்வினையினை ஆற்றத்தூண்டும் ஒரு யுக்தி என்றே எமக்குப் படுகிறது.

வல்லினத்தில் வந்துள்ள எதிர்வினைகளுக்கு எந்த எழுத்தாளரும் தமது கருத்தினை வைக்கவில்லை என்கிற மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதங்கத்தில் - பழிவாங்க எங்களோடு இணையுங்கள் என்கிற கூக்குரல் சத்தம் மட்டும்தான் கேட்கிறது.

ஏறக்குறைய ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை, எவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்கின்றதென்று உலகமறிய .. Navin Manogaran இதை அப்படியே வல்லினத்தில் பதிவேற்றம் செய்யவும்.

என்னைப் பொருத்தவரையில், தவறோ சரியோ - சரியான பதிலடி என்பது எதிரியைக்கூட மௌனங்காக்கவைக்கும். ஆனால் இதுபோன்ற கட்டுரையை எழுதி, `இனி நீங்களெல்லாம் பேனா பிடித்து எங்களை மிரட்டுவீர்கள்..? ம்ம்ம் ஜாக்கிரதை, நாங்களும் தாதா..’ என்பதைப்போல் உள்ளது.

இலக்கிய உலகில் நடக்கின்ற மற்றுமொரு வெட்கக்கேடான செய்கை இது.

புதன், ஆகஸ்ட் 14, 2013

இரண்டு

எனக்குள் இருக்கின்ற
இரண்டு முகங்கள்
என்னை வருடிக்கொண்டும்
திட்டிக்கொண்டும் இருக்கின்றன...

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

எனக்கு ஒரு கண் என்றால்....!!!?

பக்கத்துவீட்டுப் பூச்செடி எங்களின் வீட்டில் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நான் பூரித்துபோனதுண்டு பலமுறை.
நல்ல நறுமணத்தை வீசிக்கொண்டு அதுகொடுக்கின்ற மலர்.. மனதிற்கு அவ்வளவு இதம்.

அது அவர்களின் மரம்தான். கொடிபோல் எங்களின் வீட்டிலும் படர்ந்து அழகிய தோற்றத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது.

இந்த செடியால் உங்களுக்குத் தொந்தரவா? இலை கொட்டுகிறது.. பூ கொட்டுகிறது.. கட்டெறும்பு வருகிறது.. கேட்டார் பக்கத்துவீட்டுக்கார பெண்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தப் பூமரம் என் பொழுதை இனிமையாக்குகிறது. எவ்வளவு அழகு. என்ன மணம். இரவில் கொஞ்சநேரம் இங்கே உற்கார்ந்திருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்வு தெரியுமா. என்றேன்.

இல்லை இல்லை என் கணவர் திட்டுகிறார். உங்களின் வீட்டை நாசம் செய்கிறதாம் இந்தச்செடி.. வெட்டப்போகிறாராம்.

தோ..பாருங்க. எனக்குப் பிரச்சனையில்லை. எனக்குப்பிடித்திருக்கிறது. அப்படியே விடுங்கள். என் வீட்டுப்பக்கம் நான் தூய்மை படுத்திக்கொள்கிறேன். கவலை வேண்டாம். என்றேன்.

இல்லை சிஸ்,அவருக்கு அக்கம் பக்கத்தில் பிரச்சனை என்றால் பிடிக்காது. வெட்டுவேன் என்கிறார்.

அட பிரச்சனை வராது. விடுங்க. தரை அசிங்கமாவது பெரியவிஷயமேயில்லை. மனதை இதமாக்குகிறது இந்தச்செடி.. அதுதான் முக்கியம்.. எவ்வளவோ சொன்னேன்.

சென்ற வாரம், அந்த ஆள் பெரிய கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு அவர்களின் இடத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று என்னன்னமோ செய்துகொண்டிருந்தார்.
பார்த்தால், அங்கிருந்து இந்தப்பக்கம் படர்ந்திருக்கின்ற கொடிகளையெல்லாம் கத்தரி செய்துள்ளார். இந்தப்பக்கம் உள்ள அனைத்தும் காய்ந்து குச்சிகளாக தொங்கிக்கொண்டிருந்தன. அழைத்துக்கேட்டேன்.

என்ன இப்படி?

இல்லை, அவருக்கு மற்றவர்களுக்கு தொந்தரவு என்றால் பிடிக்காது.. அதனால்தான் கத்தரித்துவிட்டார். என்றார் அப்பாவிபோல்.!

எனக்குக் கோபம் வந்தது. நான் தொந்தரவு என்றேனா? எவ்வளவோ சொன்னேன்.. என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்று எரிச்சலுடன் சொல்லி, எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு தூய்மை செய்து, பூவைக் கொடுக்காத நீங்கள் குச்சியையும் காய்ந்த இலைகளையும் கொடுக்கலாமா? வெட்டுகிறபோது எல்லாவற்றையும் தூய்மைப் படுத்தவேண்டுமா இல்லையா? உங்களின் செடிதானே.. !கேட்டேன். மேலும்.. இனி இந்தச்செடி இப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்று முகத்தை உர்ர் என்று வைத்துக்கொண்டு சொல்லியே விட்டேன்.

இனி நட்பு விளங்கும் நல்லா.

என்னால் யாரிடமும் ஒத்துப்போகமுடியவில்லை. எப்படியாவது பிரச்சனை வந்துவிடுகிறது...

எப்படி சிலர் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குகிறார்கள்..?
 — 

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

புரியவில்லை

ஒரு சம்பவம் சொல்கிறேன்...

என் தோழியும் அவளின் தோழியும் வெளியே சென்றுள்ளனர். இவளின் ஐந்து வயது மகனையும் அழைத்துக்கொண்டு. மகன் (குண்டுப்பையன்) பிடிவாத குணம் கொண்டவன். மற்றவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்பவன்..

வழிநெடூக மகன் இருவரிடமும் வம்பு பண்ணிக்கொண்டே வந்துள்ளான். `அதுவேண்டும் இதுவேண்டும்’ என்று. அதை அவர்கள் வாங்கிக்கொடுக்காதபோது, மற்றவர்முன்னிலையில் அழுது கத்திப்புரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றான்.

அவ்வேளையில் அவனுக்கு யாரேனும் எதாவது தொந்தரவு செய்தால், அவன் உடனே அவர்களைத் தாக்கத்துவங்கிவிடுவான்.. குண்டாக இருப்பதால் அடி இடி மாதிரி விழும். என் தோழி கூட பலநாள் அவனிடம் அடிவாங்கியுள்ளாள்.

இவனைச் சமாளிப்பதற்காக, கூட வந்திருந்த அவளின் தோழி அவனுக்கு ஒரு சாக்லட் வாங்கித்தந்துள்ளார். சாக்லட்’ஐ விரைவாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சாக்லட் வேண்டுமென்று கேட்க, சாக்லட் வாங்கித்தந்த தோழி அவனை திட்டியுள்ளார்.

`என்ன நீ இப்படி தொந்தரவு செய்யும் பையனாக இருக்கின்றாய்.? நல்லபடி இருந்தால், ஆண்டி மீண்டும் உனக்கு சாக்லட் வாங்கித்தருவேன்.’, என்றதும், அவனுக்குக் கோபம் வர, பொதுவில் பலர் முன்னிலையில் தோழியை பலங்கொண்டு தாக்கத்துவங்கிவிட்டான். தாயிற்கும் அடி உதை. இதை சற்றும் எதிர்ப்பாராத தாயும் தோழியும் அரண்டுபோய் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துவந்துள்ளனர்.

வரும் வழியில் வாங்கியப்பொருட்களை ஒவ்வொன்றாக காருக்குள் அங்கேயும் இங்கேயும் விட்டெரிந்து தொடர்ந்து ரகளை செய்து காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டே, போராடி வீடு வந்து சேர்ந்துள்ளார்கள்.

ஏன் இப்படி சில குழந்தைகள்.? என்ன பிரச்சனையாக இருக்கும்? தாயும் தகப்பனும் அற்புத மனிதர்கள்...

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

இடுக்கண் வருங்கால் ந(சுக்)குக

நடக்கின்ற அனைத்திற்கும் நாம்தான் காரணம். நாம் அனுமதிக்காமல் யாரும் நம்மை நோகடித்துவிட முடியாது. ஒரு செயல் பிறர் மூலமாக வருகிறபோது அது நம்மை துளியும் பாதிக்காதவகையில் நம்மை நாம் பக்குவப்படுத்தி பாதுகாத்துக்கொள்வது அவசியம், நம்மை மீறி யாரும் நம் உணர்ச்சியைத் தூண்டி விட முடியாது அல்லது காயப்படுத்திவிடவும் முடியாது, .... என்கிற சில வாசகங்களை யோசிக்காமலேயே உணரப்படாமலேயே `காப்பி பேஸ்ட்’ தத்துவங்களாக போகிற போக்கில் சிலர் நம்மிடம் இறக்கிவைத்துவிட்டுச் செல்வார்கள்.

இதே அடிப்படையிலான தத்துவங்கள் நம்மிடம் அதிகம்தான். புத்தர் சொன்னார், விவேகானந்தர் சொன்னார், கன்பூஸியஸ் சொன்னார், காந்தி சொன்னார், வள்ளுவர் சொன்னார் என பலவாறாக தன்னம்பிக்கையை வளர்க்கின்ற வாசகங்களை சிலர் விடாப்பிடியாக பிடித்துவைத்துக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும், என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையிலும், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கிற பழமொழியின் அடிப்படையிலும்  புத்தி மழுங்கிய நிலையிலேயே சிலவிஷயங்களைத் தட்டிக்கேட்கத் தயங்கி அமைதிகாத்துவிடுகிறோம். இது நல்ல வழிமுறையேயானாலும் அநாகரீக செயல்பாடுகளுக்கு உடனே பதிலடி கொடுப்பதன்பது சில இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள அது பாலமாக அமையலாம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..

எனது நோக்கம், கத்திக்குக் கத்தி ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல. நாம் அகிம்சாவாதிகள்தாம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக கோழைத்தனம் இயலாமை எல்லாம் அகிம்சை என்கிற முகமுடியில் பதுங்குவதைத்தான் சகிக்கமுடியவில்லை என்கிறேன்.

பெண்ணிற்கு உடனே தட்டிக்கேட்கிற குணம் இயற்கையாகவே அமையப்பெற்ற ஒன்று. சே குவரா போன்ற வீரர்களுக்கு நிறைய காதலிகள் இருப்பதற்குக் காரணமே பெண்கள் வீரத்தை விரும்புகிறவர்கள் என்பதால்தான். தப்பு நடக்கின்ற போது, எது நியாயம் என்பதை பட்டென்று சொல்லிவிடுவாள் பெண். இதனால்தான் புராணக்காலங்கள் தொடங்கி இன்றுவரை பெண்களுக்கு வாயாடி, பின்புத்தி, சகுனி, கூனி, இராச்சசி என்கிற பட்டப்பெயரெல்லாம் சூட்டி அழைத்துவந்திருக்கின்றனர்.  
 .
வீண்வம்பு வெட்டிச்சண்டை என்பதைவிட, வேண்டுமென்றே எரிச்சலூட்டப்படுகிற, நம் நிலையறியாமல் நம்மை நோகடிக்கப்படுகின்ற சூழல் நமக்கு வாய்க்கின்றபோது - அங்கே அக்காரியத்தைச் செய்பவனுக்கு பதிலடி அவசியம் கொடுக்கப்படவேண்டும். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பதைப்போல் எதாவது ஒன்று நிகழ்கின்றபோது, ஒன்று சம்பந்தப்பட்டவன் திருந்தவேண்டும், இல்லையேல் நமக்கு பாடம் ஒன்று இலவசமாகக் கிடைக்கவேண்டும். அவ்வளவே.

எல்லோரையும் நம் வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில், சிலரில் செயல்பாடுகள் நமக்குள் கெட்ட அதிர்வுகளை விளைவிக்கின்ற போது, குறைந்தபட்சம் கோபத்தின் மூலமாக நம் உணர்வை நாம் வெளிப்படுத்துவதென்பது  எந்த விதத்தில் குற்றமாகும்.? அதுவும் நம்மவர்கள் சிலரின் attitude இருக்கே, எந்த வகை சோப்புகளைக் கொண்டு கழுவினாலும் போகாது.

சிலரின் மனோபாவம் மாறவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை இங்கு சொல்லவருகிறேன். உலகமே மாறினாலும் நம்மவர்களில் சிலர் மாறுவதாக இல்லை.

சில உதாரண சம்பவங்களைச் சொல்கிறேன் :-

சிலர் சில விஷயங்களை மறைத்துச்செய்கிற பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு புகைப்பழக்கம். புகைப்பிடிப்பதை யாரிடமும் காட்டுவதையோ அல்லது பொதுவில் புகைப்பிடிப்பதையோ அவர்கள் விரும்பமாட்டார்கள். மறைவாகச்சென்று புகையை இழுத்துவிட்டு, அதனின் வாடையைப்போக்க மிட்டாய் எதேனும் வாயில் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள். அதைப் பார்த்துவிடுகின்ற நம்மவர்களில் சிலர் நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என சம்பந்தப்பட்டவர் கூனிக்குறுகுகிற அளவிற்கு பொதுவில் அதை அம்பலப்படுத்திவிடுவார்கள். கேட்டால் நகைச்சுவை செய்தேன் என்பார்கள். `அவர் பணம் அவர் புகைக்கின்றார் குடிக்கின்றார், அதை ஏன் மறைத்துவைத்துக்கொண்டு செய்வானேன்..’ என்று தாம் அம்பலப்படுத்திய அக்காரியத்திற்கு நியாயம் வேறு கற்பித்து வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பார்கள். இதையும் சிலர் `ஆமாம்..ஆமாம்’ என்பதைப்போல ஒத்தூதுவார்கள். பிறரின் உணர்வுகளுக்கு நாம் என்றுமே மதிப்பளிக்க விரும்புவதில்லை என்பதுதானே இங்கே வெட்டவெளிச்சம்.!

எனக்கு `கேஸ்ட்ரிக்’ பிரச்சனை வந்ததிலிருந்து, இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவேண்டும். வயிறுகாலியாக இருந்தால் பிரச்சனை மோசமாகும் என மருத்துவர்கள் நண்பர்கள் ஆலோசனைகள் வழங்க, இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் நோயிற்கு நிவாரணம் - இருப்பினும், உடல் பூதாகரமானது.

இது சரிப்பட்டு வராது என்பதால், நானே நெட்டில் இதற்குத்தீர்வுகளைத் தேடி, யூ.எஸ் மருத்துவ ஆலோசனையின் படி, 10 Billion CFU probiotics  என்கிற வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கி வந்தால், இதற்கு முழுநிவாரணம் கிடைக்கப்பெறலாம் என்கிற ஆலோசனை அங்கே வழங்கியிருந்ததால், அவ்வைட்டமின் மாத்திரையை மருந்தகத்தில் சொல்லி, அதை வாங்கி தினமும் விழுங்கிவருகிறேன். சதா உணவு உற்கொள்ளும் கொடிய நிலையில் இருந்து விடுதலையும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே முறையான உணவுப்பழக்கம் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தலைதூக்கி இருக்காது. நாம்தான் உடல் உறுப்புகள் கெடும்வரை சில நல்ல விஷயங்களைக் கடைபிடிக்கமாட்டோமே.

காலைமுதல் மாலைவரை எந்த உணவையும் உட்கொள்ளாமல், கடுமையான பசியோடு பட்டென்று காரம் புளிப்பு மசாலா என கலந்து ஒருகட்டு கட்டி உள்ளே தள்ளுகிறபோது, நாளடைவில் இதுபோன்ற பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும், பின்விளைவுகளைக் கொடுக்கும் என்பதனை என் அனுபவமாக நான் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஆக, அந்த மாத்திரை ஒன்றினை தினமும் விழுங்குவேன். இன்று அதை விழுங்குகிறபோது இங்குள்ள நம்மவர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டார். மாத்திரை கொஞ்சம் நீளமாக இருக்கின்ற பட்சத்தில் அதை விழுங்குகிறபோது குமட்டல் வரும். நீரைப்பருகி குமட்டலைச் சரிசெய்கிறபோதா அவர் என்னைப் பார்க்கவேண்டும்.! `என்ன மசக்கையா?’ முதல் கேள்வி. அமைதியாக இருந்தேன். `கேட்கறந்தானே.?’ இரண்டாவது கேள்வி. நாம் நன்றாக பேசுகிறோம் என்பதற்காக இப்படியா அநாகரீகமான கேள்விகளைக் கேட்பது.? ஒருமுடக்கு நீரைப் பருகி, தொண்டைவரை வந்த கடுஞ்சொற்களையும் சேர்த்து விழுங்கி, அவரைப் பார்த்தேன்.

இல்லை.. சொன்னால் புரியாது என்பதால், கேஸ்ட்ரிக் மாத்திரை என கேள்விக்கு முற்றுப்புள்ளிவைக்க நினைத்தேன். `நல்லாதானே சாப்பிடுவிங்க, எப்படி கேஸ்ட்ரிக் வருது.? சும்மா கண்ட கண்ட மாத்திரைகளையெல்லாம் சாப்பிடாதிங்க. உடம்பிற்குக்கெடுதல். இப்படித்தான் எங்க உறவுக்காரர் ஒருவர்............. என்று ஒரு கதையையே சொல்ல ஆரம்பித்துவிட்டார். அக்கறையின் பேரில் சொல்வதைப்போல் அறிவுரைகளாக நீண்டது பேச்சு. இதுபோன்ற கதைகளையெல்லாம் கேட்கக்கூடாது என்பதற்காவே வைட்டமின் மாத்திரைகளையும் வயக்கரா மாத்திரையை மறைத்துவைத்து உண்பதைப்போல் உண்ணவேண்டும் போலிருக்கு.

மற்றொரு சம்பவம். புதிரான புதிய கைப்பேசி ஒன்று தற்போது என்னிடம் உள்ளது. எல்லோரும் வைத்திருக்கின்றார்களே என, என் மகன் எனக்காக பணம் சேகரித்து வாங்கிக்கொடுத்த அன்புப் பரிசு. பேசுவது காதுகொடுத்து கேட்டால் போதாதா, எதற்கு இதுபோன்ற `ஹைடெக்’ தொலைபேசிகள் என அலுத்துக்கொண்ட போதிலும், மனமுவந்து அன்புப் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் வேறுவழியில்லாமல் பயன்படுத்திவருகிறேன்.

இது ஒரு  `டச் ஸ்கிரீன்’ கைப்பேசி. நம் விரல் அதன்மீது பட்டாலே எண்கள் போகத்துவங்கிவிடுகிறது.

சும்மானாலுமே விரல் பட்டுப்பட்டு அழைப்புபோகத்துவங்கி, மறுமுனையில், யார்? என்று கேட்க, அதை அங்கேயும் இங்கேயும் நோண்டி, யாருக்குப்போட்டோமென்று ஆராய்ந்து, தவறுதலாக அழைத்துவிட்டேன், மன்னிக்கவும் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது டாப் ஆப் காலியாகிவிடும். இப்படிச் செய்து செய்தே எனது டாப் ஆப் முழுமையாகக் கரைந்தது, போன மாதம்.

ஆகையால் இப்போது யாருக்காவது அழைப்புவிடுக்கவேண்டுமென்றால், கைப்பேசியை கவனமாகக் கையாள்வதைக் கற்றுவருகிறேன். இருப்பினும் இன்று ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். கிரேடிக் மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில், அழைப்பு போனவுடன், மறுமுனையில் பட்டென்று `ஹலோ’ என்கிற குரல். டப்பு டுப்புன்னு மூடுவதற்குள், குரல், `ஹாலோ ஹாலோ’ என வேகமாக வந்தவண்ணமாகவே இருந்தது. தெரிந்தவர்தான். `சாரி, போனைவையுங்கள், உங்களின் எண்களை தெரியாமல் அமுக்கிவிட்டேன். காசு முழுங்குகிறது..’ என்று கூச்சல் போட்டேன், கேட்டபாடில்லை. `ஹலோ..ஹலோ..’ என மீண்டும் மீண்டும் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது மறுமுனையில்.  அங்கேயும் இங்கேயும் தட்டி, சிகப்பு பட்டனை அழுத்தியவுடன் தான், அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்தக் கைப்பேசி எப்படித்தெரியுங்களா.? நாம் ஒருவரின் எண்களைத்தேடுகிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அழைப்பு வரிசையில் உள்ள எண்களை விரல்களைக்கொண்டு அலச ஆரம்பிக்கின்றோம். அப்படி அலசுகையில் அங்குள்ள எதாவதொரு எண்களில் விரல் தவறுதலாகப் பட்டுவிடுகிறது. டச் ஸ்கிரீன் ஆச்சே, பட்டவுடம் அழைப்பு செல்லத்துவங்கிவிடும். தவறுதலாக அழுத்திவிட்டோமே என்று, எஸ்கேப் பட்டனை (கணினி பயன்பாட்டால் வந்தவினை) அழுத்திவிடுகிறோம். எஸ்கேப் பட்டனை அழுத்தியவுடன், ஸ்கிரீன் ஹோம்மிற்கு வந்துவிடுகிறது. ஹோமில் அழைப்பில் ஆள் இருப்பது தெரியும். இருப்பினும் எனக்கு அதெல்லாம் பார்க்கத்தெரியாது. நாம் தவறுதலாக அழைத்த அந்த நபர் `ஹலோ ஹலோ ..’என்று கத்திக்கொண்டு அங்கேயே நிற்பார். பணம் விரையமாகிக்கொண்டிருக்கும். மீண்டும் பழையபடி dial number சென்று, அதே சிகப்பு கைப்பேசி சின்னம் பட்டனை அமுக்குகின்றபோதுதான் அந்த அழைப்பாகப் பட்டது துண்டிக்கப்படும். அதுவரையில் மறுமுனையில் அந்தநபர் கைப்பேசியை ஆஃப் செய்யாதவரை நம்முடைய பணம் காலி.

மூன்றுமுறை ஹலோ சொல்லியபின் அழைப்பின் மறுமுனையில் பதில் வரவில்லை என்றால் அந்த அழைப்பை உடனே துண்டிக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.?

மன்னிக்கவேண்டும். யாருக்கோ அழைக்கநினைத்து உங்களுக்கு அழைத்துவிட்டேன், என்று சொன்னபோது. `ம்ம்ம் யாருக்கு காலையிலே போன்?’ என்றார் தோழி. என்னுடைய பணிப்பெண் அழைத்திருந்தாள், அவளை அழைக்கத்தான்.. `பணிப்பெண்? ஏன்? இப்போ அவங்க உங்க வீட்டில் இல்லையா, எங்கே? எப்போ போனாங்க? எப்போ வருவாங்க? என்ன விஷயம்?’ போன்ற கேள்விகளைக்கேட்கத்துவங்கி விட்டார் தோழி.
ஒரு தவறுதலான அழைப்பிற்கு ஆயிரம் குடும்பகக் காரணங்களைப் பகிரவேண்டுமா என்ன ..! இதுதான் attitude problem.

முகநூல் அனுபவம் ஒன்று. அங்கே நாம் பலவற்றை மிகஜாலியாக பகிர்கின்றோம். அதில் சமையல் செய்கிற பதார்த்தங்களும் ஒன்று. பெண்களான எங்களுக்கு நன்கு சமையல் செய்கிற சில நட்புகள், சமையல் வீட்டுக்குறிப்புகள் கொண்ட சில குழுக்கள், என்றிருப்பவர்களுடன் அணுக்கத்தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வோம்.அப்படியிருக்கையில் அவர்கள் செய்கின்ற சமையலை நாமும் செய்துபார்த்து, உங்களின் மூலமாக நாங்களும் இதைக்கற்று செய்தோமென்று, செய்த சமையலை புகைப்படம் எடுத்து அதை முகநூல் சுவரில் பதிவேற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதென்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.

அப்படிப் பதிவேற்றிய எனது முதல் பிரியாணி அனுபத்தை எல்லோரும் பாராட்டியும் திட்டியும் கிண்டலடித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கும் வேளையில், அழையா விருந்தாளியாக ஒருவர் நுழைந்து.. `இதென்ன பிரியாணியா? ரயில்பெட்டியின் கக்கூஸில் கிடப்பதுபோல் இருக்கிறதே, பார்ப்பதற்கே வாந்திவருகிறது.. சைய் என் வாழ்வில் இனி நான் பிரியாணியை நினைக்க முடியாத அளவிற்கு இருக்கின்றது உங்களின் பிரியாணி.’ என்கிற அநாகரீகமான கருத்து ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். எது நகைச்சுவை எது அவமதிப்பு என்பது பற்றிய அறிவு கூட இல்லாமலா இருப்பேன் நான்.!

மௌனமாகக் கண்ணுற்றேன். ஜீரணிக்கமுடியாத செய்கை இது. சில நொடிகள் அக்கருத்து அங்கே பின்னூட்டமாகவே இருந்தது. இருக்கட்டும் சிலர் பார்த்து அவரின் லட்சணத்தை அறிந்துகொள்ளட்டும் என்று காத்திருந்து, பதிலடி கொடுத்து, அவரையும் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கினேன்.

உணவிற்கு மரியாதை செலுத்தவேண்டும் என்கிற அறிவு கூட இல்லாமலா இருப்பார்கள்..! பஞ்சம் பசியால் வாடுபவர்களை கொஞ்சம் நினைத்துப்பார்க்கவேண்டும் இல்லையா. காலநேரம் பார்க்காமல் எதற்காக நாம் உழைக்கின்றோம்.!? ஒருவேளை என்றாலும் நல்ல உணவு சாப்பிட வெண்டும் என்பதற்காகத்தானே.!  உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்கிறார்களே. எது உயிரை வளர்க்கிறது? உடலை எது வளர்க்கிறதோ அதுவே உயிரையும் வளர்க்கிறது. அப்போ அங்கே பூஜிக்கப்படுவது என்ன? உணவுதானே. உணவே மருந்து மருந்தே உணவு என்கிற வாசகமும் நம்மவர்களுக்குள் மிகப்பிரபலம் என்பதனையும் நாம் மறக்கலாகாது.

இறைவனின் படத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் கிண்டலடியுங்கள், ஆனால் என்னைப்பொருத்தவரையில் உணவு என்பது இறைவனுக்கும் மேலானது.  பசியால் வாடுபவர்களைக் கேட்டுப்பாருங்கள், உங்களின் கடவுள் யார் என்று.? பிறகு தெரியும் எது கடவுள் என்று.!

இதுபோன்ற மனோவியாதி கொண்டவர்களின் மத்தியில்தான் நாம் தினம் தினம் நம் பொழுதினை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம். இதனால் அனுபவங்கள் பல என்றாலும், நமது நல்ல பொழுதுகள் சில தரங்கெட்ட மனித ஜென்மங்களால் பாழ்படுகிறதென்பதும் மறுக்க இயலாத ஒன்றே.

ஆக, அவசியம் ஏற்படுகிறபோது தட்டிக்கேட்பது அவசியம் என்றே படுகிறது. இடுக்கண் வருங்கால் நகுக என்பது நல்ல தாரக மந்திரமே என்றாலும் நகுக என்பதை நசுக்குக என்று சில இடங்களின் நாம் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம்.