சனி, மார்ச் 23, 2013

மார்பகப்புற்று


நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வேலைக்குச் செல்லும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆண் பெண் பேதமின்றி இந்த சலுகையை எங்களின் அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது. வவுச்சர் வடிவில். ஐநூறு ரிங்கிட் பெருமானமுள்ள வவுச்சர் அது.

இன்று நான் சென்று வந்தேன். ப்பெஸ்மியர், மெமொஃக்ரம், இரத்தப்பரிசோதனை என அரை நாள் அதிலேயே கழிந்தது என் பொழுது.

பெயரில்லாமல் வந்த அந்த வவுச்சரை யாருக்காவது கொடுத்து விடலாம் என்றிருந்தேன், காரணம், நம் உடலை நம்மால் படிக்கமுடிந்தால், நோய் குறித்த அச்சம் தேவையில்லை என்றே தோன்றியது.. என் உடல் ஆரோக்கியம் குறித்த அபார நம்பிக்கையில் நான் எப்போதும்.

அந்த வவுச்சரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பையிலேயே வைத்திருந்தேன். யாருக்குக்கொடுக்கலாம் என்கிற யோசனையில்..!!

இரண்டு நாட்களுக்கு முன், என் சக ஊழியரின் தாய் இறந்து விட்டார். தெரியும் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று, இருப்பினும் நோய் என்ன என்பது பற்றித்தெரியாது. எதோ கேஸ்ட்ர்க் வலியின் முற்றிய நிலை என்றார் தோழி. நிலைமை படு மோசமாகவே, அரசாங்க மருத்துவமனைக்குக் அழைத்துச்சென்றுள்ளார்கள். அங்கே கண்டுபிடிக்கப்பட்டது பிரச்சனை என்னவென்று.!

இறப்பிற்குச்சென்றேன்.. பிரச்சனை என்னவென்றால் மார்பகப்புற்றுநோய். நோய்க்கிருமிகள் மூளைக்குப்பரவி விட்டது. மோசமான நிலையில் உள்ளார் நோயாளி என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.

நோயாளி, பல கிளினிக் வாசல்கள் ஏறி இறங்கிய நிலையில், இதை ஏன் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை?

சாதாரண சுகாதாரப் பரிசோதனையால் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கமுடியாது. முறையான பரிசோதனைக்குச்செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, இடித்துபோய் விட்டார் தோழியின் அப்பா. மரணமடைந்த மாதுவின் கணவர். தப்பு பண்ணிவிட்டேனே என வேதனையடைந்தார். கதறினார். (குடும்ப நண்பர்தான்)

இந்த செய்தி என்னை உறுத்தவே, கையில் உள்ள வவுச்சரை எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன்.

தோழிகளே, ஒரு முறையாவது MAMMOGRAM பரிசோதனைக்குச்செல்லுங்கள். தோழிகளின் கணவன்மார்களே, மனைவிமார்களை அழைத்துச்சென்று முறையான பரிசோதனை செய்ய ஆவன செய்யுங்கள்.

ஆரோக்கியமே வளம்.