புதன், நவம்பர் 07, 2012

சாரு மலேசிய வருகை

சாருவின் எழுத்துகள் நம்மை மிக உயரே பறக்கவைக்கும். பறப்போம் ஆனால் பறப்பதற்கு காரணம் இரண்டு இறக்கைகள் கொண்ட வெள்ளை தேவதைகள் அல்ல. அது கழுகு. நம்மைக் கொத்திச்செல்கின்ற கழுகு. அந்தக் கழுகு எங்கே எப்போது நம்மைக் கடாசும் வீழ்த்துமென்று நமக்கே தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு மயக்குகின்ற மாய வித்தை அவரின் எழுத்துக்களில் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மண்ணைக்கவுகின்ற சமாச்சாரங்களும் இருக்கும்.

வசீகர எழுத்திற்குச் சொந்தக்காரர் சாரு. அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது நமது உள்ளுணர்வுகளுக்குத் திரைபோடாமல் வாசிக்கவேண்டும். அன்பு,காமம், ஆன்மிகம், காதல், பெண்ணியம், ஆணாதிக்கம் என எதுவாக இருப்பினும் அதே உணர்வில் தொடரவேண்டும். ஈகோவிற்கு காயங்கள் ஏற்படுகிற தருணத்தில் வாசகன் அவரை நிந்திப்பான். அந்த சந்தர்ப்பத்தில்தான் வசை பாடுகள் நிகழ்கின்றன. அது அவரது பலவீனமல்ல, நம்முடையதே.  

எழுத்தில், அவலமென்பதை அவர் எங்குமே போதிக்கமாட்டார். நம் நிலையிலேயே நாம் அவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். வாசிப்பு அனுபவத்தில்  மனம் பேசுகின்ற மனசாட்சி வாசகங்களை அசைப் போட்டுப்பார்த்துக்கொண்டு, பின்நோக்கிப் பின்நோக்கிப் பயணித்தால், அங்கே இருப்பது எழுத்தாளரான சாரு அல்ல, நாம்தான். இதை ஏற்றுக்கொள்ளாத வாசகன் சாருவை புறக்கணிக்கின்றான். ஏற்றுக்கொண்டவன் அவரைக் குருவாகப் பூஜிக்கின்றான்.

சிலர் சாருவை, அவர்களின் எண்ணங்களைக்கொண்டு மிக மோசமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வடிவத்திற்குள் நுழைந்துக்கொண்டு, `அவர் அப்படித்தான்’ என முடிவெடுத்து, அவரை வாசிக்காமல் இருப்பது, பேரிழப்பு என்றே சொல்வேன். அவரின் நாற்பது புத்தகங்களில், `காமரூப கதைகள்’ என்கிற ஒரு நாவலையாவது முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அல்லது அவரின் அகப்பக்கத்தை http://charuonline.com/blog/ வலம் வரலாம்.

உலக இலக்கியம் விரல் நுணியில். நல்ல வழிகாட்டி. வாசிப்பும் எழுத்துமே அவரின் வாழ்க்கை. அவரைப்பின் தொடர்பவர்கள் பெண்களாக இருந்தால் ஆண்களையும், ஆண்களாக இருந்தால் பெண்களையும் மதிக்கக்கற்றுக்கொள்வார்கள். சுயமரியாதை சுடர்விடும். எல்லாவற்றிலும் வழிகாட்டுவார். எல்லாமும் மக்கள் நலம் பெற சொல்லப்படுகின்ற கருத்துகள்தாம். நம்மை நாமே திருத்திக்கொள்கிற போதனைகளற்ற எழுத்து அவருடையது. அது ஒரு நுண்ணுணர்வு, அதைப்பற்றி அதிகமாகச் சொல்ல இயலாது

அவரைச் சந்திக்கின்ற இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அதே போல் அவரைச் சரியாக வாசிக்காமல் அவரைப் பற்றிய கேள்விகள் எதும் இருந்தால் கேட்டுவிடாதீர்கள்.. அவருக்கு எப்போதுமே சமூதாயத்தின் மீது ஒரு சீற்றம் இருக்கின்றது, அது எத்தகையது என்றால், எதையுமே சரியாகக் கற்காமல் கருத்து என்கிற பெயரில்  எதையாவது உளறிக்கொண்டிருப்பது. இதை அவர் முற்றாக நிராகரிக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரைத் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டதால், சாதரண வாசகியான அடியேனின் சின்ன  நினைவுறுத்தல் இது.

வருகை சிறப்பாக அமைய என் பிராத்தனைகள். எங்களின் நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. மகிழ்ச்சியாக வாருங்கள் சாரு. அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் விஜி.