திங்கள், டிசம்பர் 15, 2014

லிங்கா - கொட்டாவி

ரஜினி படம் என்றாலே, அவரின் பெயர் போடுகிறபோது கலக்கலான ஒரு இசை வரும், அந்த இசை லிங்காவில் இல்லை. அதுவே எனக்கு முதல்கொட்டாவி. 


பிறகு, அறிமுக பாடல், தேவாவிடம் கொடுத்திருந்தால் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார்.. நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்... வந்தேண்டா பால்காரன்... என்று உதாரணம் சொல்லலாம்.. பாடல்கள் தியேட்டரில் ஒலி/ளியேறுகிறபோதே விசில் பறக்கும்.. அது லிங்காவில் கிடைக்கவில்லை... நான்காவது கொட்டாவி ஆரம்பித்தது..


நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என்று சந்தானம் படுத்தும் பாடு,கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. அந்த காட்சிகளின் போது தொடர்ந்தது கொட்டாவி.

ரஜினியை மிக அருகாமையில் காண்பிக்கின்ற போது, `பாவம் சார் நீங்க, ஏன் உங்களை இந்தப் பாடு படுத்துகிறார்கள்.?’ என்று மனதிற்குள் முனக ஆரம்பித்தபோது பல கொட்டாவிகள் வந்தன..

`நிறுத்துங்க..நிறுத்துங்க..’ என்கிற வாசகத்தைக் கதாநாயகிகள் கூவுகிறபோது படத்தில் வசனத்திற்கு பஞ்சம் ஏற்பட்ட மாதிரியான ஓர் உணர்வு வந்தது.. கதாநாயகிகளைப் போட்டிருக்கவே வேண்டாம். அவர்கள் அங்கே ஒன்றுமே செய்யவில்லை..

ரஜினி பேசுகிற பஞ்ச் வசனங்களை ஏற்கனவே பல படங்களில் பலமுறை கேட்டுவிட்டதால், பஞ்ச் வருகிறபோது நாமும் தலையில் உள்ள முடியைப் பிடுங்க வேண்டிவருகிறது..(இப்படத்தில் யோசிக்கின்ற காட்சிகள் வருகின்ற போது ரஜினி இதைத்தான் செய்வார்.)

கே.விஸ்வநாத் - எப்பேர்பட்ட இயக்குனர்.. அவரின் வழிகாட்டல் இல்லாமலா இருந்திருக்கும்.!

போலிஸ் வேடத்தை விடவே மாட்டார் போலிருக்கு.. கே.எஸ்.ரவிக்குமார்.

ரவிக்கை அணியாமல் நடித்தால், அது ப்ளாஷ்பக் பெண்களின் ஆடையாம்/அடையாளமாம்.!

ராதாரவி என்ன செய்தார்.?
நிழல்கள் ரவி வந்தாரே..!?
நடிகர்கள் பட்டாளத்திற்குக் குறைவில்லை... இருந்தபோதிலும் படம் சோர்வாக இருந்தது.

ரஜினி படம் என்றால் மக்கள் ஒரு எதிர்ப்பார்ப்புடன் திரையரங்கம் செல்வார்கள் .. மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

அரங்கம் நிறைய கூட்டம் - ஒரு இடம் கூட காலி இல்லை. கைத்தட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்யாமல் அமைதியாகவே படம் பார்த்தார்கள். படத்தில் டுவிஸ்ட்டே இல்லை..

இடைவேளையின் போது பலர் அரங்கைவிட்டு வெளியேறியதை நான் பார்த்தேன். காரணம் நான் வெளியே நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்.. அரைமணி நேரமாக..
படம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடுது.. அதுவே மன உளைச்சல்

மனோ குரலில் ஒரு பாடல் - அதற்காகவே படம் பார்க்கலாம். அருமையான ரீங்காரம் அப்பாடல்.ஸ்டையிலான பாடல். அந்தப்பாடல் இல்லாமல் இருந்திருந்தால், நான் விட்ட கொட்டாவியில் கொறட்டை வரும் வரை தூங்கியிருப்பேன்

வியாழன், செப்டம்பர் 25, 2014

இதழோரம்

தம்பியும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கின்றோம். என் தம்பியின் மகனுக்கு ஐந்து வயது. சில வேளைகளில் என் வீட்டுக்கு வருவான். `அத்தே, என்ன செய்யுறீங்க.? அண்ணன் இல்லே. மாமா இன்னும் வரல.?’ என்கிற கேள்விகளோடு சமையல் அறையில் என்னிடம் பேச்சு கொடுப்பான்.

``நீ ஏன்யா, ஒண்டியா இருக்கே.? அண்ணன்கள் எல்லாம் எங்கே.? அம்மா எங்கே? அப்பா எங்கே.? ’’

``அப்பா இருக்கார். டீவி பார்க்கிறார். நான் இங்கே வந்தேன். ஹ்ம்ம்...’’ என்று முனகிக்கொண்டே, குளிர்ச்சாதணப்பெட்டியின் அருகில் செல்வான். நான் கண்டும் காணாததுபோல் இருப்பேன்.

என் வீட்டு குளிர்ச்சாதணப் பெட்டியில் எப்போதுமே தின்பண்டங்கள் குவிந்துகிடக்கும். சாக்லட், கேக், அல்வா, ஐஸ்கிரீம், மிட்டாய் என. என் வீட்டில் சாப்பிட ஆள் இருக்காது. எங்கிருந்தோ வருவதை அங்கே கடாசி வைத்திருப்பேன்.. யாராவது குழந்தைகள் வந்தால் கொடுப்பேன். பெரும்பாலும் அக்கா தம்பி பசங்க வந்தால் ஒரே மூச்சில் தின்று தீர்ப்பார்கள். குழந்தைகளுக்குக் கிடைக்காது.

குளிர்ச்சாதணப்பெட்டியைத் திறந்தான். நான் தெரியாததுபோல் இருந்தேன். மூடினான்.மீண்டும் திறந்தான்.

என்னய்யா?

``அத்தே,  அது என்னாது?’’ சாக்லட் பாக்கெட்’ஐ கையில் எடுத்துக் கொண்டு கேட்டான். நான் என் சமையல் வேலையில் மூழ்கினேன். அவனைக் கண்டு கொள்ளாதது போல் பாவனை செய்தேன். அதை என்னிடம் கொண்டு வந்து காட்டி..

``அத்தே, இது என்னாது?”

``தெரியலையே’ய்யா.!’’ பதில் சொன்னேன்.

``சாக்லெட் ஆ? ’’ மீண்டும் கேட்டான்.

``ஹ்ம்ம்.. ’’ என்றேன்.

``இப்படி கல்லு மாதிரி இருக்கு.! சாப்பிடலாமா.?’’ கேட்டான். அவன் கொஞ்ச நேரம் என்னிடம் பேசவேண்டும் என்பதற்காக, நான் வேலையில் மூழ்கியிருப்பதைப்போல் நடித்தேன். அவனின் செய்கையினைக்கூர்ந்து கவனித்த வண்ணம்.

``தெரியலையே சாப்பிடலாமான்னு.. சாக்லட்தானே அது.?’’ மிளகாய் நறுக்கிக்கொண்டே கேட்டேன்.

``அப்படித்தான் இருக்கு..!’’ சொல்லிக்கொண்டே பாக்கெட்’ஐ பிரித்தான்.
முகர்ந்து பார்த்தான். வாயில் வைத்துக்கடித்தான். கடிக்கமுடியவில்லை. பிரிட்ஜ் குள்ளேயே இருந்ததால், கட்டியாக இறுகி இருந்தது.

அசட்டுச் சிரிப்பு சிரித்தான். ``அத்தே பல் வலிக்கும்போலிருக்கு. கராஸா இருக்கு..’’ என்றான்.

வாங்கி உடைத்துக்கொடுத்தேன். அமைதியாகச் சாப்பிட்டான்.

ஒரு கையில் ஒரு பொம்மை.  வாயில் சாக்லெட்.சாமார்த்தியமாக என்னிடம் பேசி வாங்கிவிட்ட திமிர் தொனியில், கால்களை நீட்டி, அதை ஆட்டிக்கொண்டே, கடக் முடக் என்று சுவைத்துச் சாப்பிட்டான் அந்த சாக்லெட்’ஐ.

இதழோரம் எச்சிலும் சாக்லெட்டும் சேர்ந்தாட்போல் வடிந்தது...
இரசித்தேன் கள்ளங்கபடமில்லா குழந்தைத்தன்மையை,.....
கொஞ்ச நேரம் குழந்தையாக மாறி..


புதன், செப்டம்பர் 24, 2014

சுமங்கலி

குடும்பமாகப் பழகிய எனது பழைய நண்பர் ஒருவரின் அம்மா இறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அத்துயர சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார் என் நண்பர்.

``அடப்பாவி, ஏன் என்னிடம் சொல்லவில்லை.? அம்மா.. அடக்கடவுளே நல்ல மனுஷி அவங்க..அழகி, என்னாச்சு.? இளமையா இருப்பாங்களே.. ஏன் திடீர்ன்னு..?’’ என்று திட்டிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டேன்.

``அய்யோ அழாதிங்க விஜயா... சாரி சாரி.. நுரையீரல் கன்சர். வந்ததும் தெரியல, வீழ்ந்ததும் தெரியல.. எங்களாலே நம்ப முடியல.. சாரி..’’ என்று சமாதானம் சொன்னார்.

``என்னிடம் ஏன் சொல்லல.? பேராக்கில் இருந்தால் என்ன கெடாவில் இருந்தால் என்ன.! எப்படியாவது வந்திருப்பேனே..! கண்ணிலேயே இருக்காங்களே.. மங்களகரமான அழகி. அம்மா..’’ என்று கேவினேன்.

``இல்லை விஜயா.. நீங்க, பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா, விருந்து, மகளின் தேர்வு, என ஒரே மகிழ்வாக இருந்த காலகட்டம் அது.. இத்துயர சம்பவத்தைப் பகிர எனக்கு மனசு வரல..’’ என்றார்.

``இதெல்லாம் காரணமா..? ’’ அழுதுகொண்டே, என்னால் பேசமுடியவில்லை.

நான் முன்பு வேலை செய்த இடத்தில் என்னோடு வேலை செய்த நண்பர், பின்பு என் குடும்ப நண்பரானார். கணவருக்கு நண்பராகி. மனைவி என் தோழியாகி,  குழந்தைகளும் நண்பர்களாகி, என் மாமி மாமனாரும்நண்பர்கள் ஆனார்கள்.

ஒருமுறை பேராக்கில் நடைபெற்ற உறவுக்காரர் ஒருவரின் திருமண வைபவத்திற்குச் சென்றிருக்கையில், அங்கே இவர்களையும் சந்திக்க நேர்ந்தது.! யார், எப்படிப்பழக்கம்? என்று விசாரிக்கின்ற போது, ஒரு வகையில் தூரத்து உறவும் ஆனார்கள். அன்றிலிருந்து, நாங்கள் பேராக்கிற்குச் செல்கிறோம் என்றால், எங்களை வரவேற்க நண்பரின் அம்மாவும் அப்பாவும் காத்துக்கிடப்பார்கள். விதவிதமான சமையல்களைச் செய்து வைத்துக்கொண்டு. `கண்டிப்பாக வரணும்.இவ்வளவு தூரம் வந்துவிட்டு, இங்கே வரலன்னா, நான் கோவிச்சுக்குவேன்..’ என்று உத்தரவு போடுவார்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால்,  அவர்களின் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்துவிட்டார்கள். பெரிய பதவியில் உள்ளவர்கள் அவர்கள்.  கொஞ்சம் வசதியான குடும்பமும் கூட. கணவன் மனைவி இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒன்றாகச்சேர்ந்தே ஊர் உலகமெல்லாம் சுற்றுவார்கள். அடுப்படி வேலைகள் தொடங்கி எடுபிடி வேலைகள் வரை அனைத்தையும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே செய்வார்கள்.நான் கூட அடிக்கடி என் நண்பரிடம் சொல்வேன்.. `பாருங்க புதுப்பொண்ணு மாப்பிள்ளை மாதிரி ஜிம்முன்னு இருக்காங்க இன்னமும்,’ என்று.

கோலாலம்பூர் வரும்போதெல்லாம்.. நான் எப்படி இருக்கேன்? என்று தவறாமல் கேட்பாராம் அம்மா. நானும் தொலைப்பேசியில் அழைக்கின்ற போதெல்லாம், புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படி இருக்கின்றார்கள்? என்று தவறாமல் விசாரிப்பேன்.

அவரின் முகம் என் கண்முன்னே வந்து வந்து செல்கிறது. சோகம் கவ்வுகிறது. இருப்பினும் பிரார்த்தனை செய்து மனதை சாந்தப் படுத்தினேன்.

இதை யாரிடமாவது பகிர்ந்தால், மனதின் பாரம் குறையுமே என்று நினைத்து என் தோழிக்கு அழைத்தேன். அவளும் நானும் ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு மதிய உணவிற்குச் சென்றிருக்கையில் அம்மா இருந்தார். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் சாம்பார் என அவரின் சமையலை ஒரு பிடிபிடித்தோம் அப்பாதான் பரிமாறினார்.

அம்மா வந்துள்ளார், என்றால், அலுவலகத்திற்கு அழைப்பு வரும் மதிய உணவு நேரத்தின் போது. ``வரச்சொல் சாப்பிட, ’’ என்று உரிமையோடு அழைப்பார் அம்மா. அது ஒரு காலம்.

தோழியிடம் இத்துயரச் செய்தியினை பகிர்ந்தேன். அவளும் அதிர்ந்தாள். அதிர்ந்த அவள் ஒரு வார்த்தையை உதிர்த்தாள்.. நல்ல சாவு. சுமங்கலியாகச் சென்றுவிட்டார்.

இது எனக்கு இன்னும் வேதனையாக இருந்தது. சுமங்கலியாகச்செல்வது ரொம்ப முக்கியம் நம்மவர்களுக்கு .! இதுபோன்ற சிந்தனையில் இருந்து என்றுதான் விடுதலையோ.?

அம்மாவிற்குப்பிறகு அப்பா என்னசெய்வார்.? அம்மாதானே அவருக்கு உலகம்.! இன்னேரம் அப்பா என்ன செய்துகொண்டிருப்பார்.? தனியாக,?மருமகளுடன்? மகளுடன்? பேரப்பிள்ளைகளுடன்.? வெளிநாட்டில்? எங்கே இருப்பார். ? அவரை நினைக்க வேதனை இன்னும் கூடுகிறது.


சனி, செப்டம்பர் 13, 2014

reunion

ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது முன்பு நாங்கள் பணிபுரிந்த (PHILIPS AND JVC VIDEO COMPANY ) யின் பழைய ஊழியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று..  கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அதையொட்டிய ஆயத்தங்களைச் செய்தவண்ணமாக இருந்தோம்.

வட்சாப்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அங்கே ஒருவர் பின் ஒருவராக சேர்த்து. அங்கேயே ஏற்பாட்டுக்குழு, செயலவை உறுப்பினர்கள் என தேர்வு செய்து, பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு மாதகாலமாக இந்த வேலைகளில் மூழ்கியிருந்தோம். வட்சாப்பிலேயே எல்லா ஏற்பாடுகளையும் பகிர்ந்துகொண்டிருந்தோம்.


உணவு ஆடர்கொடுப்பது, பரிசுகளுக்கு ஏற்பாடு செய்வது. என்னென்ன விளையாட்டுகள் விளையாடலாம். கேக் வெட்டலாம். டோர் கிஃபிட் போன்றவவைகள் மகிழ்வுடன் பகிர்ந்து குதூகலித்தோம் 

PHILIPS AND JVC ஒரு பெரிய நிறுவனம். வீடியோ  கேமரா தயாரிக்கின்ற கம்பனி. கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஓர் நிறுவனம் இது.

நாங்கள் பணிபுரிந்த டிப்பார்மெண்ட் மிகப்பெரியது. pc board assemble செய்கிற இடம். அங்கேயே கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஊழியர்கள் பணிபுரிவார்கள். அங்கே அலுவலக ஊழியர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியர்கள் வரை எல்லோரும் ஒரு குடும்பமாகவே செயல் பட்டோம். மலாய்க்காரர்கள் சீனர்கள் பிறகு நம்மவர்கள்.

மலேசியாவில் நாம் இருந்தாலும், இனங்களுக்குள் பேணப்படுகிற சுமூக உறவுகளை நான் இங்கேதான் கற்றுக்கொண்டேன். மலாக்காரர்களின் நல்ல மனங்களை இங்கேதான் பார்த்தேன். அவர்களின் அன்பான பணிவான குணங்கள் எனக்குப் பாடம் போதித்தது இங்கேதான். வேலைகளைக் கற்றோம், சம்பாதித்தோம் என்பதையும் தாண்டி நண்பர்களைச் சேகரித்த இடமாக திகழ்ந்தது இந்த நிறுவனம்.  

நாங்கள் management staffs கிட்டத்தட்ட இருநூறு பேர் இருப்போம். நான் இவர்களுக்கெல்லாம் கிளார்க். அதாவது அட்மின். அனைத்து ஊழியர்களின் welfare’ரும் எனது பொறுப்பு.



வீடியோ மாறி குறுந்தட்டும் வந்து, ஸ்மார்ட் டீவியும் வந்து தொழில்நுற்பத்தின் அபரீதமான வளர்ச்சியில் இந்த வீடியோ தயாரிக்கின்ற துறை வீழ்ச்சி கண்டது. ஆறாயிரம் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து, குறைத்து குறைத்து இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் மட்டும் வேலை செய்கிற இடமாக அது மாறி இருக்கிறது. 

1989யில் தொடங்கிய இந்நிறுவனத்தில் நான் 1991யில் நுழைந்து 2000 த்தில் விலகினேன். வேலைப்பளு, இரவு பகல் பாராமல் வேலை. பணியிடம் நம்முடைய நேரத்தை முழுமையாக விழுங்கிக்கொள்வதால், வீட்டில், குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போகவே நான் வேலையை ராஜீனாமா செய்தேன். அதன்பிறகு பிஸ்னஸ், இல்லத்தரசி என நகர்ந்து இப்போது SHARP யில், இன்றுவரை.


வேலை மாற்றலாகி பலர் பல்வேறு இடங்களுக்குச் செல்வது, திருமணம் செய்வது, வீடு மாறுவது, வெளிநாடுகளில் பணி செய்து அங்கே செட்டல் ஆவது என எல்லோரும் பிரிந்து போனோம். சமூகவலைத்தளங்களின் மூலம் சிலரை கண்டுகொண்டு அவர்களிடம் தொடர்பில் இருந்தோம். விடாமல் துரத்திப்பிடித்து நட்பு வைத்திருக்கும் ஒரு மலாய்தோழியும் (ரோஹானா) எப்போதும் என்னிடம் தொடர்பில் இருப்பாள். சாப்பிட்டாயா? தூங்கினாயா.? எங்கே போனாய்? என்ன செய்கிறாய்.? என அன்பாகக் கேட்டுக்கொண்டு.

திடீரென்று வட்சாப்பில் சந்தித்து, ஒன்று சேர, ஒருவர் பின் ஒருவராக வந்து, ஒரு மாதகாலத்திற்குள்  விட்ட குறை தொட்ட குறை என நிறைய பேர் ஒட்டிக்கொண்டார்கள்.

நேற்று (12/9/2014) ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வில் உண்டு களித்து கட்டித்தழுவி கண்ணீர்விட்டோம். சிரித்தோம் மகிழ்ந்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்பினோம். பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். அந்த நிறுவனத்திற்குப் பிறகு எங்கே சென்றார்கள். என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள். யாரெல்லாம் அங்குள்ள அனுவத்தை வைத்து மேலே வந்தார்கள். நிறுவனத்தில் வேலை செய்வதையே வெறுத்து பலர் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளார்கள் என பல நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

நிகழ்ச்சிக்கு முழுமூச்சாக உழைத்தது எனது மலாய்தோழி ரோஹானாதான். அவள் இல்லையென்றால் நாங்கள் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து ஒன்று கூடியிருப்போமா, என்பது சந்தேகம்தான். இடையில் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தாள். என்ன பொருளை பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தாள். எங்கே இந்நிகழ்வை வைக்கலாம் என இடத்தைப் பார்த்து பணம் செலுத்திவிட்டு வந்தாள். இன்னும் நிறைய பொறுப்புகளை தாமே ஏற்றுக்கொண்டு செய்து வந்தாள். நிகழ்வுகளின் செயல்பாடுகளை உடக்குடன் வட்சாப்பில் பகிர்ந்தாள். தாம் நடத்துகிற சாப்பாட்டுக்கடையை கால்லேஜ் செல்லவிருக்கும் மகனின் பொறுப்பில் விட்டுவிட்டு, இந்த நிகழ்விற்காக உழைத்தாள். மகன் இந்த மாதம் இறுதியில் கால்லேஜில் சேரவிருக்கின்றான்.



நிகழ்வை முடித்துக்கொண்டு, நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். புகைப்படங்கள் தெளிவாக இருக்கட்டும். நான் ப்ளாக் எழுதுவேன். அதில் மகிழ்வாகப் பகிரப்போகிறேன் என்று நானும். நான் முகநூலில் போடுவேன் என்று பலரும் சொல்லி அதிகமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். வீடு வந்துசேர்வதற்குள் புகைப்படங்கள் வட்சாப்பில் குபுகுபுவென புகுந்துக்கொண்டே இருந்தது. போடப்பட்ட புகைப்படங்களைப்பார்க்கமுடியாமல் வட்சாப் ஜேம் ஆகிவிட்டது. புகைப்படங்களை எல்லாம் பார்த்தே ஆகவேண்டும் என்பதற்காக, நள்ளிரவு இரண்டு மணிவரை கைப்பேசியை நோண்டிக்கொண்டே இருக்கையில்.. ... என் தோழி ரோஹானாவிடம் இருந்து இந்த அதிர்ச்சி செய்தி வந்தது.

‘ என் மகன் கார்விபத்தில் இறந்துவிட்டான், எனபதை நான் என் நண்பர்களிடம் மிகவும் வறுத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று.

எல்லோரும் அதிர்ந்தோம். என்னாச்சு? ஏன் இப்படி.? அல்லாஹ் கொடுத்தார் அவரே எடுத்துக்கொண்டார். ! கலங்காதே... என, தொலைப்பேசி அலறிய வண்ணமாக. சில நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் விடிய விடிய தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன். என்னால் நம்பமுடியவில்லை.

கனவு காண்பதைப்போலவே இருந்தது. காலையில் மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து, நிஜமாகவா? என உறுதிப்படுத்திக்கொண்டு, முதல் முறையாக முஸ்லீம்களின் இடுகாட்டிற்குச் சென்று அங்கே நிகழ்கின்ற நிகழ்வுகளை நேரில் கண்டு சோர்ந்துபோய் வீடு வந்தேன்.

இரவெல்லாம் தூக்கமில்லை. பகல் பொழுதில் கொஞ்ச நேரம் தலை சாய்த்தேன். என்னால் எழவே முடியவில்லை. கண்கள் திறந்துதான் இருக்கின்றன. ஆனால் எழமுடியவில்லை. யாரோ என்னை பலங்கொண்டு அழுத்துகிறமாதிரி ஓர் உணர்வு. என்னை எழவிடாமல் என் மார்பின் மேல் அமர்ந்துகொண்டு அழுத்துகிறார்கள். சண்டை இடுகிறேன். விடு விடு என கத்துகிறேன். ஆனால் அந்தச் சத்தம் யார் காதிலும் விழாததைப்போன்று வாயில் மூச்சு மட்டுமே வெளிப்படுகிறது. எனக்குள் எல்லா உணர்வும் இருந்தது. சுற்றி இருக்கின்ற அனைத்தும் தெரிகிறது ஆனால் எழமுடியவில்லை. எழாதே. படு.. படு.. படு.. என அழுத்தம். போராடி போரில் வென்று எழுந்துவந்ததைப்போல் இருக்கிறது உடலும் மனமும்....

தலைக்குக் குளித்து, பூஜை செய்தேன். கணவர் விபூதி வைத்துவிட்டார். மனதிற்கு ஆறுதலாய் உள்ளது...

இன்னமும் மனம் கனக்கிறது.






வியாழன், செப்டம்பர் 11, 2014

தமிழ் அனுபவம்

மேடான் சென்றிருந்தபோது, சில தமிழர்களைச் சந்தித்தேன். கோவிலில் ..ஹோட்டலில் சாப்பிடும்போது. மோட்டார் ரிஃக்‌ஷா எடுக்கச்சென்ற இடத்தில்.

அங்கே ஒரு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். உள்ளே விநாயகர் சதூர்த்தி நிகழ்வு பற்றிய அறிக்கையினை அச்சிட்டிருக்கின்ற காகிதத்தை எடுத்துப்பார்த்தேன். பாதி தமிழிலும் பாதி இந்தோனீசிய மொழியிலும் அச்சிட்டிருந்தார்கள்.

ஆஹா, தமிழ் தெரிகிற, பேசுகிற, படிக்கிறவர்கள் இருப்பார்கள் போலிருக்கு, என்று நினைத்து, போகிற வருகிறவர்களை எல்லாம் பார்த்து ஒரு புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவர்களும் புன்னகையைத் தந்தார்கள். ஆனால் யாரும் வாய்த்திறக்கவில்லை. பயபக்தியுடன் வழிப்பாட்டில் மூழ்கினார்கள்.

சீனர்களும் கோவிலில் விழுந்து விழுந்து வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள்..

பேச வாய்ப்பு இல்லயே என ஏங்கினேன். கோவில் பூசாரியும் முனகிக்கொண்டே பூஜை செய்தார். சத்தம் வெளியே வரவில்லை.

கோவில் கருவறையின் வெளியே, ` உள்ளே நுழையாதீர்கள்’ என்று இந்தோனீசிய (மலாய்) மொழியில் எழுதியிருந்தார்கள்.

என்ன? யாரிடம் பேசுவது,! என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள ஒருவரிடம், தமிழில், டாயிலட் எங்கே.? என்று கேட்டேன். அவருக்கு விளங்கிற்று. வாயால் பேசுவதைவிட, கைகளால்.. அதோ.. அங்கெ அங்கெ..பின்னாடி போங்கொ.. என்றார்.

பின்னால் சென்றேன். அங்கே ஒரு கூட்டம்.. பெண்கள் அமர்ந்து காய்கறிகளை வாளி வாளியாக நறுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் சென்று,  டாய்லட் எங்கே.? கேட்டேன்.

சிரித்த முகத்துடன் ஒரு பெண் கைகளை நீட்டி, தோ.. என்றார்.

டாய்லட் சென்று வந்தவுடன். அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

இவ்வளவு காய்கறிகளை நறுக்குகின்றீர்கள். என்ன விஷேசம். விநாயகர் சதூர்த்திதான் முடிந்துவிட்டதே..!? மெதுவாகப்பேச்சு கொடுத்தேன். அவர்களின் முகங்களை உற்று கவனித்தேன்.

ஓ.. இல்லெ. நாளிக்கு கல்யாணம். அதா. நீங்க எங்குள்ளவங்க? என்னிடம் கேட்டார் ஒரு பெண்மணி.

கோலாலம்பூர்..

ஓ.. நா வந்திரிக்கெ அங்கே..

அப்படியா.? தமிழர்கள்தானே..!  நான் தான் கேட்டேன்.

ஆமா..ஆமா.. தமில்தான். பதில் சொன்னார் அவர். கஷ்டப்பட்டு பேசுவதை உணர்ந்த நான் மேலும் தொடர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் நின்று அவர்களைக் கவனித்தேன். வேலைகளில் மூழ்கினார்கள். அவர்களுக்குள் பேசுகிறபோது இந்தோனீசிய பாஷயிலேயே பேசி சிரித்துக்கொள்கிறார்கள். என்னிடம் கஷ்டப்பட்டு தமிழ் பேசிய அவர்கள். அவர்களுக்குள் மிகச்சரளமாக இந்தோனீசிய மொழியில் உரையாடிக்கொள்கிறார்கள்.

கோவிலின் வெளியே காலணிகளைக் கலற்றி வைக்கின்ற இடத்தில் தந்தையும் மகளும், இந்தோனீசிய மொழியில் பேசிக்கொண்டிந்தார்கள்.

கோவிலுக்கு எதிர்ப்புறத்தில்  நினைவுச்சின்னங்கள் விற்கப்படுகிற கடை ஒன்றில் நுழைந்தேன். அங்குள்ள கடை அக்கா எங்களைக் கண்டவுடன் பதற்றமடைந்துவிட்டார். ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழில் பேசினேன். கஷ்டப்பட்டார். வேர்த்து விறுவிறுத்தது அவருக்கு. நா தஞ்சாவூர் போவே.. சாமா வாங்குவே.. என்றார். நான் இந்தியா அல்ல. மலேசியா, என்றேன். ஓ.. கோலாலபூர் போவே அடிக்கடி. ரொம்ப கூட்டாலி இருக்கெ.. என்றார். பதற்றமாகவே பேசினார். முடிந்தால் எங்களை கடையை விட்டு விரட்டியே விடுவார் போலிருக்கு..

அடுத்து, ஹோட்டலில் ஒருவரைச் சந்தித்தேன். உணவு சாப்பிடுகையில். தமிழரா.? கேட்டேன். அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு.. ஆமா.. நீங்க எங்கே உள்ளிவங்க? கேட்டார். மலேசியா. என்றேன்.
ஓ.. நான் டெஃக்டையிஸ் வைத்திருக்கேன். மலேசியால கடை இருக்கு. வருவேன். அடிக்கடி. என்றார். அவரும் விட்டால் போதும் என்கிற பாணியிலே பேசினார். துன்புறுத்த முயலவில்லை. பொழச்சுப்போ.. என்று விட்டுவிட்டேன்.

மோட்டார் ரிஃக்ஷா ஓட்டும் ஒரு வாலிபனைச் சந்தித்தோம். இன்னொரு ஓட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கையில் இவன் நுழைந்து இந்தோனீசிய பாஷயிலேயே `வராது அக்கா.. தூரம். ரேட் குறைவுதான், என்று அவர்களுக்குப் பரிந்து பேசினான். தமிழாய்யா? கேட்டோம். ஆம், என்றான். அபப்டினனா நீங்களே வாங்களேன். பேசிக்கிட்டே போகலாம். என்றோம்.

ஆ.. என்ன சொல்றீங்க? எனக்கு தமிழ் தெரியாது. என்று மலாய்மொழியில் அசடு வழிய சொல்லி, இடத்தைக் காலி செய்தான்..

இப்படியாக எங்களின் தமிழ் அனுபவம் அங்கே....

நல்லவேளை.. மலேசியாவில் தமிழ் கம்பீரமாக பீடு நடை போடுகிறது, என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொண்டோம்.


சனி, செப்டம்பர் 06, 2014

மேடான் பயணம் - லேக் தோபா..

மேடான் சென்று வந்தேன்.

தோழியின் வற்புறுத்தலின் பேரில் அவளோடு சென்றேன். விமான டிக்கட் பணம் மட்டும் கொடு, மற்றவையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அங்கே எல்லாம் மலிவுதான். பணம் அவ்வளவாக செலவாகாது. வீடு வேலை என மன உளைச்சலாக இருக்கிறது, வாங்களேன் என்னோடு.. நன்கு சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் தூக்கம் என ரிலஃக்ஸ் ஆக இருந்து விட்டு வரலாம்.. என்றார்.

மேடான் தானே, மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்றால் கிட்டத்தட்ட அரை மணிநேரத்தில் செல்லக்கூடிய ஒரு இடம். கலாச்சார சூழலில் மொழி பயன்பாட்டில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது, ஏறக்குறைய மலேசியா போல்தான் இருக்கும்/இருக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அரை மனதோடுதான் சென்றேன்.






ஏமார்ந்துபோனேன்.!

விமானம் தரையிறங்கி, அவன்ஸா காரில் ஏறி, பட்டணத்தைவிட்டு கிராமிய சூழலில் நுழையும்வரை மலேசியாவில் இருப்பதைப் போலவே இருந்தது. அதற்கு அப்பால் செல்லச்செல்ல வீடுகளின் அமைப்புகளில் மாற்றங்களைக் காணமுடிந்தது. நீர்க்கப்பல் போல் அழகிய சிறிய சிறிய வீடுகள். குடிசைகள் போல் தென்னை ஓலையில் கூறைகள் இட்டுக் கட்டிருப்பினும், அதன் அமைப்பின் வேலைப்பாட்டில் அழகிய ஓவியமாகவே எனக்குக் காட்சியளித்தது.

மொழியில், மலேசியரான எங்களுக்குப் பிரச்சனை இல்லை. அவர்களுக்கு வேறு வட்டாரமொழிகள் இருப்பினும் மலாய் மொழியில் நன்கு உரையாடுகிறார்கள். `மலேசியர்களின் பாணி இது, இதற்கு மலேசியர்கள் இப்படித்தான் சொல்வார்கள். இறுதியில் `லா..’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். நான் நீ என்பதை மட்டும் ஆங்கிலத்தில் யூ, மி என்று சொல்லிப் பேசுவார்கள்தானே.!?’ என்று கேட்டு கிண்டல் செய்துகொண்டே கலகலப்பாக பேசுகிறார்கள். அவர்கள் பேசுகையில் ஓரிரு வார்த்தைகள் புரியவில்லைதான். இருப்பினும் உரையினை நன்கு கூர்ந்து கேட்டோமென்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்துவிடுகிறது.

உணவும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் அவித்து, பொரித்து மஞ்சள் பொடி தூவி தேங்காய்ப்பாலை அதன் மேல் ஊற்றி பரிமாறிவிட்டு, பழுத்த பச்சை மிளகாய் மற்றும் ஊசிமிளகாய்களை பூண்டு இஞ்சி தக்காளி கொண்டு மசித்து தாளிக்காமல் சட்னிபோல் அப்படியே வைத்துவிடுகிறார்கள். மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் உணவு பெரும்பாலும் இப்படித்தான் என்றபோதிலும், மற்ற உணவுகள் அதேவேளையில் சரிக்குச்சமமாகக் கிடைக்கக்கூடிய பட்சத்தில், பெரும்பாலும் மலாய்க்காரர்களின் உணவுகளை நான் தவிர்த்துவிடுவேன்.

தெம்பே, புச்சோக் பாக்கு, கங்கொங், புச்சோக் உபி, கச்சாங்கோரிங் வித் பொடி நெத்திலி என எல்லா சாப்பாட்டுவேளையிலும் இதே வகை உணவுகளைப் பரிமாறுகிறார்கள். கூடுதலாக கோழி பொரியல் அல்லது மீன் பொரியல். இவைகளையெல்லாம் காரத்தோடு சாப்பிடவேண்டுமென்றால் அதை அந்த மிளகாய் சட்னியில் தொட்டுக்கொண்டு கைகளைக் கொண்டே சாப்பிடலாம். வாழை இலையின் மேல் வைத்துத்தான் கோழி மீன் போன்றவைகளை பரிமாறுகிறார்கள். கோழிக்குழம்பு ஒரு உணவகத்தில் கொடுத்தார்கள். மசாலா நிறத்தில், தேங்காய்ப்பாலில் மூழ்கிக்கொண்டு..!  திருப்பதிக்கே லட்டா.? என்று கலாய்த்துவிட்டு, கொஞ்சம் நக்கிப்பார்த்தோம். ஒகே..லா. நாட் பேட்.

அதிர்ஷ்டவசமாக சிலவேளைகளில் பரிமாறிய உணவு சுவையாகவும் அமைந்துவிடுகிறது, சாப்பிடலாம். பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் ஒரு `புல்மீல்’ இறங்கிய மறு நொடி வயிற்றைக் கலக்க ஆரம்பிக்கும். இங்கே அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை. நான்கு நாட்கள் சாப்பாடு குமட்டலும் இல்லை, வயிற்றுப்போக்கும் இல்லை.


ஷாப்பிங் செய்ய நல்ல இடம் என்கிறார்கள். நான் கணக்குப்போட்டுப் பார்த்ததில், ஏறக்குறைய மலேசிய விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகிறன. பாத்திக் துணிமணிகள் மலிவு. அதிகமான பாத்தேக் ஆடைகள் கடைத்தெரு முழுக்க குவிந்து கிடக்கின்றன. ஆடைகளின் வடிவமைப்புகள் கண்களைக் கவர்கின்றன. கலாச்சார ஆடைகளை விதவிதமான வடிவத்தில் தைத்து பொம்மையில் அணிந்து பார்வையாளர்களைக் கவர்கிறார்கள். நிஜமாலுமே அழகழகான ஆடை டிஸைன்’கள். மெலிந்து உயரமாக இருக்கின்ற மாடல் போன்ற பெண்கள் அணிந்து நடந்தால், அழகுப்பதுமைகள்தான். ஆடைகளைவிட மீட்டர் துணிகள்தான் ஜாஸ்தி.  வாங்கி வந்து சுடிதார் தைத்துப்போட்டால்.. ரொம்ப அழகாக இருக்கும். !

ஆண்களுக்கு ஜிப்பாவும் கிடைக்கின்றது. சூப்பரான காட்டன் துணியில். ஆனால் வெள்ளை வர்ணத்தில் மட்டும்தான் கண்டேன். மற்றவர்ணங்களின் காணோம். மலிவுதான்.

சந்தை

நான் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரின் பசாருக்குச் செல்வது எனக்குப்பிடித்தமான ஒன்று. கோயம்பேடு சென்னை.. வியட்நாம் சந்தை, சாயம் ரீப், என எங்கு சென்றாலும் எல்லாச் சந்தைகளுக்குள்ளும் நுழைந்துவிடுவேன். அது எனக்கு ஒரு ஹோபி. கோயம்பேடுதான் பெரிய சந்தை. அதைவிட கொஞ்சம் குறைவு மேடான் சந்தை. நெத்திலி கருவாடு, மீன், இறைச்சி, பன்றி, கோழி, காய்கறிகள் என தனித்தனியாக மிகப்பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு வியாபாரம் பரபரப்பாக நடைபெறுகிறது.

என்னுடன் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த என் பணிப்பெண்ணின் ஊர் அது. நாங்கள் அங்கு உள்ளோம் என்று சொன்னவுடன் ஓடோடி வந்துவிட்டாள். அவளுக்கு எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று தெரிந்திருந்ததால், சந்தைக்குள் நுழைந்தவுடன், நெத்திலி கருவாடு விற்பனை செய்கிற கூடாரத்திற்குள் அழைத்துச்சென்றுவிட்டாள். வியர்ந்து போனேன். அங்குள்ள விதவிதமான நெத்திலி மீன்களைப் பார்த்தவுடன், நெத்திலி வகைகள் இவ்வளவு உள்ளனவா.? என்று ஆச்சரியம் அடைந்தேன். நாற்றமில்லாமல் மிக நேர்த்தியாக தூய்மையாக இருந்தது அந்தச் சந்தை.

பொடி நெத்திலி இங்கே கிலோ ஐம்பது ரிங்கிட் என்றால், அங்கே வெறும் இருபத்து நான்கு ரிங்கிட்தான். காய்ந்த இரால் இங்கே கிலோ அறுபது ரிங்கிட் என்றால் அங்கே அதில் பாதிதான். சாமான்கள் புதிதுபுதிதாக இருந்தன. கேட்கிற விலைக்கு சாமான்களைக் கொடுத்துவிடுகிறார்கள். என் பணிப்பெண் எனக்காக பேரம் பேசி வாங்கித்ததாள். சுற்றுலாப் பயணிகள் என்றால் விலையில் கொஞ்சம் விளையாடுகிறார்கள். ஆட்கள் ஈ மாதிரி மொய்க்கின்றார்கள். `தோ வந்துட்டேன்’ என்று சொல்லி அடுத்த கடையில் விலை கேட்டுவிட்டு வருவதற்குள், இங்குள்ள சாமான் காலி. பரபரப்பாக வியாபராம் நடக்கின்ற ஒரு சந்தை. பொடி நெத்திலி காய்ந்த ஊடான், பெத்தாய் என ஒவ்வொரு கிலோ வாங்கினேன். வாங்கிய பிறகு சுமார் ஒரு மணிநேரம் அந்த சந்தையைச் சுற்றினோம்.

லேக் தோபா

மேடான் செல்கிறோம் என்றவுடன், ஏற்கனவே அங்கு சென்று வந்த தோழி சொன்னாள், ஒண்ணுமில்லை அங்கே. மலை மேடு காடு என ஒரே போர். என்றாள்.




ஆனால் நீங்கள் மேடான் என்று கூகுளில் தட்டினால் அங்கே நம் கண்களை அகல விரிய வைக்கவைப்பது  அங்குள்ள ஓர் அழகிய ஏரி. அதை அமுக்கிப் படித்தோமென்றால், அந்த ஏரியின் சிறப்பு என்ன என்பதனைச் சொல்லியிருப்பார்கள். LAKE TOBA என்ற பெயரைக்கொண்ட ஏரிதான் அது. கிழக்காசியாவிலேயே மிக நீளமான ஏரி. உலகத்திலேயே மிக ஆழமான ஏரியும் கூட. 100 கிலோ மீட்டர் நீளமும் 30 கிலோ மீட்டர் அகலமும்  கொண்ட மிக அழகிய ஏரி. நிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரி எழுபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்துச்சிதறிய எரிமலையின் எச்சம்.

PARAPAT வழியாகச் சென்று  லேக் தோபா அடைந்து, பின் அங்கிருந்து SAMOSIR தீவுக்குச்செல்லவேண்டும். பாராப்பாட் சாலை குறுகலானது. வளைந்து வளைந்து செல்கிறது. எங்களின் ஓட்டுனர் எங்கேயோ சொன்னார், நாம் பாராப்பாட் வந்துவிட்டோம் என்று, ஆனால் வளைந்து வளைந்து மேடு பள்ளம் என ஏறி இறங்கி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் பிடித்தது லேக் தோபா வந்தடைய.

விமானம் தரை இறங்கியது காலை மணி 8.30. அங்கிருந்தே தொடங்கிவிட்டது எங்களின் பயணம் லேக் தோபா நோக்கி. இடையே ஓர் இடத்தில் காலை உணவு எடுத்தோம். அதைத்தவிர வேறு எங்கும் நிற்கவில்லை. கார் நிற்காமல் பயணத்தை மேற்கொண்டது. வேகக் கட்டுப்பாடு 60km or 80km/per hour தான். இதைவிட வேகமாகச் சென்றதை நான் உணரவில்லை. அற்புதமான இயற்கைச் சூழலை நாங்கள் ரசித்து மகிழ அந்த வேகக் கட்டுப்பாடு எங்களுக்குப் பேருதவியாக இருந்தது.

காரின் சன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டு குளிர் காற்று, மலையின் மூலிகை வாசம். மலைவாசிகளின் வாழ்க்கைச் சூழல் என, வழி நெடூக ரசித்துக்கொண்டே சென்றேன்.

மலையில் கிடைக்கின்றன காப்பிக் கொட்டைகளை பதனப்படுத்துகிற காட்சிகள், சோளம் உலறப்போகிற காட்சிகள். கால் நடை வளர்ப்பு, மேய்த்தலுக்கு அழைத்துச்செல்லுதல்.. என எல்லாம் அற்புதமான கிராமிய சூழல்.

கொட்டிக்கிடக்கும் இயற்கைஅழகு

அவ்விடத்தை நேரில் சென்று கண்டபோது அதன் அழகை என்னால் உணரமுடிந்தது. வார்த்தைகள் இல்லை வர்ணிக்க. சில இடங்களில் ஏரியின் நீர் கரு நீலமாகவும், சில இடங்களில் லேசான நீலமாகவும், சில இடங்களில் பச்சை வர்ணமாகவும், பேர்ரி செல்லச்செல்ல நீர் கண்ணாடிப்போலவும், குளுகுளு என சொர்க்கத்தில் இருப்பதைப்போலவே இருந்தது. கானல் நீர் கண்முன்னே, காணும் இடமெல்லாம் பரந்துவிரிந்த நீர் தேக்கம். இடையிடையே பசுங்குன்றுகள். கார்பிட் புல் விரித்ததைப்போன்று மலையில் மேல் பஞ்சுபோன்ற புற்கள். அற்புதமான சூழல் அது. அனுபவித்த என்னால் அதை விவரிக்க முடியவில்லை. சொல்லவும் தெரியவில்லை. அழகு என்கிற ஒற்றை வார்த்தையில் அடக்கமுடியாத ஓர் அற்புத இயற்கைக் கொடை அது. கடவுளின் இல்லமாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட வந்தது எனக்கு. மனதிற்கு அவ்வளவு மகிழ்வைக்கொடுக்கின்ற சூழல். இங்கே நீ எவ்வளவு மகிழ்வாக இருக்கின்றாய்.? என்று யாராவது கேட்டால். சிறு குழந்தைபோல் `அவ்வ்வ்வ்ளோ’ என்று கைகளை மிக மிக அகலமாக நீட்டி குதூகலித்துச் சொல்வேன்.

புகைப்படங்கள் எடுப்பதற்குக்கூட மனமில்லை. புகைப்பட கருவியை இயக்குகிற வேளையில் பொழுது கழிந்துவிடுமோ, பேர்ரி நகர்கிறது, காட்சிகள் நகர்கின்றன என்கிற சிந்தனை மூளையைக் குடைகிறது. அந்த எழில் பொங்கும் இயற்கையில் அப்படியே லயித்துவிட்டேன். சுற்றி இருக்கின்ற மலைகள் சூரியனின் ஒளி பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்ணத்தில் காட்சி கொடுக்கின்றன.

ஓ மை காட்.. ஓ மை காட்..  அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகுஅழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு.. எந்த முக்கில் நின்று பார்த்தாலும் அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு.. எனக்கு வேறு வார்த்தையே சொல்லத்தெரியவில்லை.




லேக் தோபாவில் இருந்து பேர்ரி எடுத்து ஒரு மணிநேர பயணம் SAMOSIR ISLAND சென்றோம். அங்கே வாழ்ந்த பழங்குடியினரின் கல்லரை அதன் வரலாறு பற்றித்தெரிந்துகொண்டோம். அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சூழலை நேரில் காணலாம்.

இப்போது ஓரளவு கார் வீடு என வசதியாக வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் அவர்கள் மலைவாசிகளாக இருந்த அடையாளங்கள், இல்லங்கள், கலாச்சார ஆடை, உணவு, அரசியல் பின்னணி என இன்னமும் பின்பற்றி வருகிறார்கள் என்பது கண்கூடு. வாயில் வெத்தலையைக் குதப்பிக்கொண்டு மணக்கமணக்கப்பேசுகிறார்கள். சண்டைக்காரர்கள் போல் கத்திக் கத்திப்பேசுகிறார்கள். அதுதான் அவர்களின் பாணியாம்.! வித்தியாசமாக இருந்தது பார்ப்பதற்கு.



பலவிதமான கைவினைப்பொருட்களைச் செய்து சுற்றுலா பயணிகள் வருவார்களா என்று காத்திருந்து நம் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக அவைகளை வாங்கச்சொல்லி கெஞ்சுகிறார்கள். இதுபோன்ற இடங்களின் பொருட்களை வாங்கவேண்டுமென்றால் பாதிக்குப் பாதி விலையினைக் குறைத்து வாங்கவேண்டுமென்று அங்கே சென்று வந்தவர்கள் சொல்லியிருப்பினும், நமக்கு ஓரளவு தெரியும் அப்பொருளை நாம், நம்நாட்டில் எவ்வளவு விலைக்கு வாங்கலாம். அந்த பொருளின் தேவை என்ன. தரம் என்ன, எவ்வளவு குறைக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம் என்று.! சும்மானாலும் குறைக்கலாம் என்பதால் குரைத்துக்கொண்டிருப்பது அவமானம். நல்லா இருக்கு. நமக்குத்தேவை. பயன்படுத்தலாம் என்றால் வாங்கலாம். பேரம் பேசி நாம் `ச்சீச்சீ’ என, வியாபாரி `ச்சீச்சீ’ என, ஒருவித கலவர சூழலை உருவாக்குவது கலாச்சாரக் கேடு. எனக்கு இதெல்லாம் ஒத்துவராத ஒன்று. என்ன விலை.? இதுதான் விலை. சரி எவ்வளவிற்குக் கொடுப்பீர்கள்.? இவ்வளவிற்கு தரலாம், என்றால். வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். ஏழைகள் என்று தெரிந்தும் பேரம் பேசி வாங்கிக்கட்டிகொள்வது கொடுமை. அப்படி ஒரு சம்பவம் எங்களின் பயணத்தில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்டவர் என் தோழி. நான் இடத்தைக் காலி செய்து நகர்ந்துவிட்டேன்.

PARAPAT -

லேக்தோபாவில் இருந்து ப்ராப்பாட் செல்லும் வழி நெடூக லேக்தோபாவின் அழகிய காட்சிகளை ரசித்தவண்ணமாகச் செல்லலாம். மீன்பிடி கிராமத்தில் ஏரியின் ஓரமாக வாழும் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நீரின் மேல் வீசப்பட்ட வலைகள் காண்பதற்கு நீரில் ரங்கோலி கோலம் போட்டமாதிரியே இருந்தது.


லேக்தோபா ஏரியைக் காண்பதற்கே நாம் நீண்ட தூரம் மலையேற வேண்டும். அந்த ஏரி எவ்வளவு பெரியது என்பதனை ப்ராப்பாட் செல்லும் வழியில் நின்று பார்த்தோமென்றால் அதனின்  பரப்பளவை ஏறக்குறைய கணிக்கலாம். sky view என்பார்களே அது போல் உயரமான இடத்தில் இருந்து காண்கின்ற பிரமிப்பைக் கொடுக்கும்.  அப்படியென்றால் ப்ராப்பாட் செல்ல இன்னும் கூடுதல் மலைப்பிரயாணம் மேற்கொள்ளவேண்டும். உச்சியில் SIPISO PISO நீர்வீழ்ச்சியும் இருந்தது. அந்த நீர் வீழ்ச்சி காண்போரை அதிசயத்தில் ஆழ்த்தியது. நீர் மலையின் உச்சியில் இருந்து வரவில்லை. மலையடிவாரம் லேக்தோபா ஏரி. மலை உச்சியில் மலைவாழ் மக்களின் சாதாரண வாழ்க்கைச்சூழல். அப்படியென்றால் அந்த நீர் வீழ்ச்சி எங்கிருந்து வருகிறது? இரண்டிற்கும் நடுவில் எங்கிருந்தோ மலையினைப் பொத்துக்கொண்டு ஊற்றுவதைப்போல் இருந்தது.  அற்புதம்.




ப்ராப்பாட் தேனிலவு கொண்டாடுபவர்களின் சொர்க்க வாசல்...! PARAPAT என்கிற சொல்லின் அர்த்தமே, நெருக்கம். அதாவது, முன்பு ஒரு காலத்தில், காதலர்கள் இருவர் குளிர்தாளாமல் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்தவர்கள், இந்த இடத்திற்கு parapat என்று பெயர் வைத்துவிட்டார்களாம். அதிலிருந்து அதன் பெயர் அதுவாகவே மாறியுள்ளதாக பயணவழிகாட்டி பகிர்ந்துகொண்டார். அவ்விடம் அதிகமாக குளிர்ந்தது. இரவில் உடல்கள் நடுங்கின. பரிமாறிய உணவு உடனக்குடன் சில்லிட்டது.


மேடான் பட்டணம்

மேடான் பட்டணத்தில் ஒரு நாள் முழுக்க ஷாப்பிங். நாங்கள் மட்டும் தனியாகச் சென்றோம். கார் தேவையில்லை. காரை நிறுத்திவைத்திருக்கின்ற நேரம் அதன் கட்டணம் நட்டமாகும்.

எங்குபார்த்தாலும் மோட்டார் ரிஃக்‌ஷா, குறைந்த விலையில் எடுத்துக்கொண்டு மூலை முடுக்கு எல்லாம் சுற்றிவரலாம். கார் எடுத்தால் பட்டணத்தில் பார்க்கிங் செலவு ஜாஸ்தி. அடிக்கடி சாலை நெரிசல் ஆகும். வீண் நேர பண விரையம், என்றார் எங்களின் வாகனமோட்டி.

பட்டணம் என்றாலே வழிபறிகொள்ளை, திருட்டு என களவானிகள் வதவத என்று இருப்பார்களே, எங்களின் உடமைகளின் பாதுகாப்பு எப்படி.? என்று நாங்கள் இருவரும் சேர்ந்தாற்போலவே கேட்கவே... அதற்கு அவர் கொடுத்த பதில் சுவாரஸ்யம்.

`இது ஒன்றும் கோலாலம்பூர் அல்ல. வழிபறி கொள்ளையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க. இது அதிக மக்கள் தொகை கொண்ட ஊர். எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம். ஒருவரின் கைப்பையை இழுத்துக்கொண்டு ஒரு களவானி எங்கும் ஓடி மறைய முடியாது. ஆட்கள் அவனைத் துரத்திப்பிடித்து அடித்துத்துவைத்து பாதியுயிரை எடுத்த பின்புதான் போலிஸில் ஒப்படைப்பார்கள். அதனால் இதுபோன்ற வேலைகளை இங்கே செய்வதற்கு தயங்குவார்கள். இருப்பினும் உங்களின் பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நேரம் சரியில்லை என்றால், புல் தடுக்கினாலும் பாதாளத்தில் விழவேண்டி சூழல் வரலாம்.. கவனம்.’ என்றார். உண்மைதான்.!


BATAK PEOPLE 

மேடான் சுற்றிப்பார்த்ததில் அதிக சுவாரஸ்யத்தை ஊட்டிய தகவல்கள், அங்கே வாழும் பாத்தாக் (batak) சமூகத்தின் கலாச்சார வாழ்க்கைச்சூழல்தான்.

இந்தோனீசியா உலகத்தில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இருப்பினும், மேடான் மலைப்பகுதிகளிலும் வளர்ச்சி காணாத தனிமை படுத்தப்பட்ட கிராமங்களில் வாழும்  தொண்ணூறு விழுக்காடு மக்கள்  இந்த பாத்தாக் சமூகத்தினர். கிருஸ்தவர்கள்.

லேக்தோபா, ப்ராப்பாட், ப்ராஸ்தாகி போன்ற இடங்களுக்குச்சென்றால் அங்கே வாழ்கின்ற அனைவரும் பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழிநெடூக அவர்களின் வாழ்க்கைச்சூழலை ரசித்துக்கொண்டே செல்லலாம்.

பாத்தாக் மக்கள் நல்ல கலாரசனை உள்ளவர்களாம். இசை பாடல் நடனம் என எப்போதும் கலையின் பால் ஈர்ப்பு கொண்டவர்களாகவே காணப்படுவார்களாம். அவர்களின் இசைக் கச்சேரிகள் உலக மக்களால் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளதாம். அண்மையில்  மலேசியா ஒரு கலாச்சார நடனத்தை தங்களுடையது என்று உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க, இந்தோனீசிய பாத்தாக் சமூகத்தினர் வெகுண்டெழுந்துள்ளார்கள். காரணம் அந்நடனம் அவர்களுடைது. அந்தப் பிரச்சனையால் பாத்தாக் சமூகத்தினர் இந்தோனீசிய அரசாங்கத்திடம்  முறையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி பல நாட்கள் போராட்டம் நடத்தினார்களாம். நட்பு நாடான மலேசியர்களிடம் சகோதரத்துவ நேயத்துடன் அப்பிரச்சனையை அந்நாட்டு பிரதமர் சுமூகமாகத் தீர்த்து வைத்தாராம். `எங்கள் பிரதமர் எப்போது இப்படித்தான். மலேசியா என்றால் மட்டும் அமைதியாக இருந்துவிடுவார். அவருக்கு மலேசியா செல்ல நாடு. நாம் எல்லோரும் ஒருவர். எதற்கு பிரச்சனை.? என்பாராம்.!’ பயண வழிகாட்டியிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வருகையில் அவர் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்களின் இதுவும் ஒன்று.

பாத்தாக் சமூகத்தினர் பெரும்பாலும் மீனவர்கள். விவசாயிகள். மண்ணின் ஆதிவாசிகளாக இருப்பதால், மிகப்பெரிய நிலங்கள் தமதாக்கிக்கொண்டு விட்டைச்சுற்றி காய்கறிகள் கிழங்குவகைகள் நெல் காப்பி சோளாம் போன்றவற்றைப் பயிர் செய்து, கோழி ஆடு, மாடு, பன்றி வாத்து, நாய் என கால்நடை வளர்ப்பிலும் அதிக ஈடுபாடு உள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். உணவிற்காக யாரிடமும் கையேந்தும் நிலை இல்லாத வசதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகவே வாழ்கிறார்கள். பணம் இல்லை ஆனால் பணக்காரர்கள்.

அவர்களின் வீடுகள் கப்பல் போன்று இரு முனைகளும் கூர்மையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவாசல் மிகவும் குறுகலானது. யாரும் நெஞ்சு நிமிர்த்தி ஒருவரின் வீட்டிற்குள் நுழைவது கூடாது என்பதால், அதனைச் சிறியதாகச் செய்து வைத்திருக்கின்றார்கள். நம் வீட்டின் சன்னல் அளவு கூட இல்லை அந்தக் கதவின் நீளம். கட்டைகள் ஊன்றி படிக்கட்டுகள் வைத்து சற்று உயரமாகக் கட்டி கொள்கிறார்கள் வீடுகளை. கீழே காலியாக இருக்கின்ற இடங்களின் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.




பாத்தாக் சமூகத்தின் ஸ்பெஷல் உணவு நாய்க்கறி மற்றும் பன்றிக்கறி. நாய் சமைக்கின்ற உணவுக்கடையை B1 என்கிறார்கள். காரணம் நாய் அவரிகளின் மொழியில் Biang. Biang'இல் ஒரு B இருப்பதால் அது B1 restaurant. B2 restaurant என்றால் அது பன்றி சமைக்கின்ற உணவகம். பன்றியை அவர்களின் மொழியில் Babi என்கிறார்கள். Babi'இல் இரண்டு B'க்கள் இருப்பதால் அது B2. கடைகள் பகல் பொழுதில் மூடியே கிடக்கின்றன. இரவில் வியாபாரம் தூள் பறக்குமாம். குறிப்பாக நாய்க்கறி. முன் கூட்டியே ஆடர் கொடுத்துத்துத்தான் வாங்கிச்செல்வார்களாம். இல்லையேல் கறி தீர்ந்துவிடும் என்கிறார் வாகனமோட்டி. காரில் செல்லுகையில் கால்நடை வளர்ப்புப் பிராணிகளான பன்றி, ஆடு, மாடுகளை லாரியில் ஏற்றிச்செல்வதைப்போல் நாய்களையும் ஏற்றிச்செல்கிறார்கள் இறைச்சியாக்கி சந்தையில் வியாபாரம் செய்ய.

ஒருமுறை ஆங்கிலேய பிரயாணிகளை ஏற்றிச்செல்லுகையில் எங்களிடம் சொன்ன இதே கதைகளைச் சொல்லி அவர்களை நாய் இறைச்சி கசாப்புக்கடைக்கு அழைத்துச்சென்றாராம் வாகனமோட்டி. (எங்களிடமும் கேட்டார். நாங்கள் நிராகரித்துவிட்டோம்.) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை கீழாக தோல் உறிக்கப்பட்ட நாய்களைக் கண்டு, அந்தக்குழுவில் இருந்த ஆங்கிலேயப்பெண்மணிகள் கதறிக் கதறி அழுதார்களாம். வாகனத்தில் வந்து அமர்ந்து பல கீலோமீட்டர்கள் சென்ற பிறகும் அழுகையை நிறுத்த முடியாமல் திண்டாடினார்களாம் அவர்களின் கணவன்மார்கள். அன்று முழுக்க அவர்கள் எதுவுமே சாப்பிடவில்லை என்றும் சொன்னார்.

அவர்கள் நாய் மட்டுமல்ல, நாலு கால் கொண்ட அனைத்து மிருகங்களையும் சாப்பிடுவார்களாம். மூசாங், பூனை, காட்டுமிருகங்கள் என எல்லாவற்றையும்.

பாத்தாக் சமூகத்தினர் மாய மந்திரத்தில் கெட்டிக்காரர்கள் என்று ஏறகனவே இங்கே பரவலாகப் பேசப்படும் ஆரூடம். இதை உறுபடுத்திக்கொள்ள நான் எங்களின் வகனமோட்டியிடம் கேட்டேன். அவரும் ஆமாம் உண்மைதான். மனித இரத்தம், மயிர், நகங்கள், தொப்புள்கொடி என உடலின் எதாவதொரு பொருள் கிடைத்தால் அதைக்கொண்டு எதாவது செய்து விரோதிகளைத் தீர்த்துக்கட்டப்பார்ப்பார்கள். இருப்பினும் அதெல்லாம் உண்மை என்று நம்பினால் பலிக்கும். இல்லை என்று அலட்சியம் செய்தால் எதுவும் நம்மை அண்டாது.’ என்றார்.

அவர்களின் நம்பிக்கைகளின் எனக்கு உதறல் எடுத்த விஷயம் இறப்புச் சடங்கு மற்றும் பிணத்தைக் கிடத்திவைக்கும் இடம்.

அச்சமூகத்தின் தலைவர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றோம். அவருக்கு ஒரே ஒரு மகனாம். அவன் பருவ வயதை நெருங்கும் தருவாயில் இருக்கின்றபோது மரணமுற்றுவிட்டான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அத்தலைவன் தமது ஒரே மகன் மறைந்ததை எண்ணி  சோகத்தில் மூழ்கி மகனை கல்லரையில் கிடத்தாமல், தமது வீட்டின் வாசலில் நிறுத்தியபடி வைத்துவிட்டார். (சோளக்காட்டு பொம்மையை வைப்பார்களே அதேபோல்.)

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பிணத்தை காண்கையில் தன் மகன் உயிரோடு இருப்பாதாகவே நினைத்துக் காலத்தைக் கழித்து வந்தாராம் அந்தத்  தலைவர். அதைக் காண்போருக்கும் தலைவரின் வாரிசு உயிரோடு உலவுவதாகவே எண்ணிக்கொண்டார்களாம். இதில் அதிசயம் என்ன தெரியுங்களா.? நள்ளிரவு வேளைகளின் அந்த மகன் தலைவரோடு உரையாடியதையும் பலர் பார்த்துள்ளார்களாம். அந்தப் பிணம் கைகளை நீட்டி நீட்டி பேசியதை பலர் பார்த்து அவனை ஒரு சிறுதெய்வமாகவே வழிப்பட்டு வந்துள்ளனர்.

இன்னமும் அவ்வீட்டின் முன் மரத்தால் ஆன உருவபொம்மை ஒன்று  இருப்பதை நாம் காணலாம். கைகால்கள் தலை போன்றவைகளை அசைவதைதைப்போலவே அந்த பொம்மையினை செய்து வைத்திருக்கின்றார்கள். கைகளைக் குலுக்கி நாமும் அதனிடம் பேசுவதைப்போல் பாவனை செய்துகொள்ளலாம்.

ராஜா பாதுகாத்து வைத்திருந்த மகனின் உருவம் இன்னமும் இருக்கின்றதாம் பாதுகாப்பாக.. இந்த வீட்டின் முன் அதே போன்ற பொம்மையை செய்து வைத்துவிட்டு, அசலை எடுத்துச்சென்று விட்டார்கள்.




அச்சமூகத்தின் வீட்டின் சுற்றுப்புறத்தில் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என சிறிய வீடுகளைக் கட்டி இருப்பார்கள். அதாவது அவர்கள் வீடு இருக்கின்ற இடத்தின் அருகிலேயே அந்த மூன்று இரண்டு அடுக்கு மாடி வீடுகளும் இருக்கும். என்ன வீடு அது இவ்வளவு சிறிதாக இருக்கிறதே.? என்று டிரைவரிடன் கேட்டபோது. அருமையான கேள்வி, என்று சொல்லி, பாத்தாக் சமூக சடங்குமுறைகளை விளக்க ஆரம்பித்தார்.

இவர்களின் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் குறைந்தது ஏழு நாள் அப்பிணத்தைக் கிடத்திவைத்து அழுதமேனியாக இருப்பார்களாம். அழுவார்களாம், சமைத்து  நன்கு சாப்பிட்டு, மீண்டும் அழுவார்களாம். இரவானால் எல்லோரும் ஒன்று கூடி அழுதுகொண்டே இருப்பார்களாம். உறவுகளை எல்லாம் வரவழைத்து ஒரு விழாபோல் நடத்துவார்களாம். எழு நாள் கழித்து, பிணத்தை வீட்டின் அருகில் கட்டியிருக்கின்ற இந்த சிறிய அடுக்கு மாடி விடுகளின் கீழ் அடுக்கில் கிடத்தி காற்று புழு பூச்சுகள் புகாதபடி வைத்து சிமெண்ட் செய்துவிடுவார்களாம். புதைக்கமாட்டார்கள். அப்படியே வைத்துவிடுவார்களாம்.

உயிரோடு இருக்கும்போதே கல்லரைகளைத் தயார் செய்துவிடுகிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து அந்த சிமண்டை உடைத்து அதில் உள்ள எலும்புக்கூடுகளை எடுத்து, ஆக உயரமான அடுக்கில் இருக்கின்ற சிறிய வீட்டுக்குள் வைத்துவிடுவார்களாம். இந்தப் பதினைந்து ஆண்டுகள் கழித்து உடைபடவிருக்கின்ற அந்தக் கல்லரை நாளை உறவுகளோடு கூடி சமைத்து சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வழிப்பாடு செய்து விழாபோல் கொண்டாடுவார்களாம்.

கீழ் அடுக்கில் அம்மா அப்பா தாத்தா பாட்டி. இரண்டாவது அடுக்கில் பிள்ளைகள். மூன்றாவது அடுக்கில் பதினைந்து ஆண்டுகள் கழித்து சேகரிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.

காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் எந்தச் சச்சரவுகளாலும் பிரிந்துவிடாமல் இருப்பதற்காகவே இது போன்ற சடங்குகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருதாகவும் சொல்லப்படுகிறதாம்.



என் பணிப்பெண் ஒரு பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவள்தான். அவர்கள் தாங்கள் பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளியே சொல்லிக்கொள்ளமாட்டார்களாம். என் பணிப்பெண்ணும் இதுவரையில் என்னிடம் இதுபற்றிச்சொன்னதே இல்லை. இவ்வளவு பழமையாக கலாச்சார பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னோடு இரண்டு வருடங்கள் இருந்துள்ளாள் என்பது எனக்குப்பெருமையே. இருப்பினும்  இது முன்னமே தெரிந்திருந்தால், நானே அவளிடம் இன்னும் நிறைய தகவல்களைச் சேகரித்திருப்பேன்.

ஒரு இந்தோனீசிய பெண் வேலைக்கு வந்துள்ளாள். அது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். மற்றபடி பூர்வீகம் பற்றியெல்லாம் பேசியதே இல்லை. மேடான் சென்றிருந்தபோது அவள் தங்கியிருக்கின்ற ஊரில் முகவரியைச் சொன்னவுடன், அவள் கண்டிப்பாக பாத்தாக் சமூக பெண்ணாகத்தான் இருப்பாள் என்று வாகனமோட்டி உறுதிபடுத்தினான். அவன் சொன்ன சில குணாதிசய அடையாளாங்களை நான் அசைப்போட்டுப்பார்க்கையில் அது என் பணிப்பெண்ணின் குணாதிசயங்களோடு ஒத்துப்போனது. சத்தமாகப்பேசுவாள், சண்டை போடுவதைப்போல் முகபாவனைகள் இருக்கும் இருப்பினும் அங்கே எந்த ஒரு கோப உணர்வும் வெளிப்படாது. எல்லா நேரத்திலும் எல்லோரிடமும் ஒத்து போகிற குணம் கொண்டவள் அவள். நோயிற்கு மருந்தே எடுக்க மாட்டாள். மூலிகை என்று நம்பும் இலைகளை மசித்து அதனின் சாரை மட்டும் பருகுவாள். இலைகளைக்கொண்டு பேய் ஓட்டுவாள். மந்திரங்கள் சொல்லி கரப்பான்பூச்சி, எலி போன்றவைகளை விரட்டுவாள். எல்லா தெய்வங்களையும் வணங்குவாள். விபூதி இட்டுக்கொள்வாள். யா அல்லாஹ் என அடிக்கடி முனகிக்கொள்வாள். நாங்கள் விரதமெடுத்தால், அவளும் விரதமெடுப்பாள். பொங்கல் கார்த்திகை என்றால், சேர்ந்தே அலங்கரிப்பாள், விளக்கேற்றுவாள்.

பாத்தாக் சமூகத்தின் சின்னம் மார்பு. எங்கேயாவது சிலைகள் எதேனும் செய்துவைத்திருந்தால், அதன் பக்கத்திலேயே பருத்த தாயின் மார்புகளையும் செய்து வைத்திருப்பார்கள்.

தாங்கள் திருமணம் செய்துகொள்ளகூடிய பெண்ணிற்கு மார்புகள் பெரிதாக இருக்கின்றனவா என்று பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்வார்களாம் அச்சமூகத்தின் ஆண்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் - மார்பகங்கள் பெரிதாக உள்ள பெண் நிறைய குழந்தைகளைப் பெற்றுத்தருவாளாம். மற்றும் பசிக்கின்ற குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பால் கொடுப்பதற்கும் அவர்களால் முடியும் என்கிற நம்பிக்கையும் கூடவே.


ஒரு காலத்தில் மனிதர்களையும் சாப்பிட்டுள்ளார்களாம் இந்த பாத்தாக் சமூகத்தினர்.

இறுதியாக நான் ஒரு கேள்வி கேட்டேன் வாகனமோட்டியிடம்.

நீ ஒரு முஸ்லீம். உனக்கு பாத்தாக் சமூக பெண்ணின் மீது காதல் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளேன்..., அவளை நீ கல்யாணம் செய்து கொள்வாயா.?

அவர் பதில் சொன்னார். `ஏன் கூடாது.!? அவர்களும் மனிதர்கள்தானே. அங்கிருந்துதானே நாம் எல்லோரும் வந்துள்ளோம். கடந்த காலம் முக்கியம் அல்ல. மார்க்கத்தைக் கடைபிடி. மனிதனாக வாழ். அவ்வளவுதான். பிரச்சனை இல்லை அக்கா..’ என்றார்..

பேசிக்கொண்டே  எங்களின் வாகனம்   லேக் தோபா வந்துசேர்ந்துவிட்டது.

கருமேகங்கள் சூழ இருந்த வானம் மழை நீரைச் சுமந்து பிரசவத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அது மிக அழகிய காட்சியாக என் கண்களுக்குப் பட்டது.

அங்கே கடவுள் தெரிவதைப்போல் இருந்தது எனக்கு....  

        

  முற்றும்.....








ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

கலாச்சாரமாகவே...

(23/8)
என் மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டேன். அதிகமான மாணவமணிகள் இன்று பட்டம் பெற்றார்கள். 

இந்தியர்கள் அதிகமானோர்களைக் காணமுடிந்தது.. அடுத்த நிலையில் சீனர்கள் பிறகு பெல்டா உதவிநிதியில் அரசாங்கத்தின் மூலம் பயின்று பட்டம் பெற்ற மலாய்க்காரர்கள் கொஞ்சம். இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டும் இரண்டு டிக்கட்கள் வழங்கியிருந்தார்கள். அதாவது எனக்கும் என் கணவருக்கும் டிக்கட் இருந்தது. வெளியே பெரிய திரை ஒன்றின் மூலம், வருகிற உறவுகள் அமர்ந்து உள்ளே நடக்கின்ற காட்சிகளைக் காணும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். நன்கு வசதியுடன்.

நாங்கள் என் அக்கா மகனையும் என் மகளையும் அழைத்துச்சென்று விட்டோம். அவர்களை உள்ளே விடமாட்டார்கள் என்று  தெரிந்திருந்தும் அழைத்துச்சென்றோம், எப்படியாகினும் ஏமாற்றியாவது உள்ளே நுழைத்து விடலாம் என்கிற யோசனையில்..

கூட்டம் திருவிழா போன்று ஜெ ஜெ.. என்றிருந்தது. பட்டம் பெறுகிற மாணவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்த பிறகுதான் டிக்கட் உள்ள பெற்றோர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கும் என்று வெளியே பேசிக்கொண்டார்கள். நாங்கள் காலை எட்டு மணிக்கெல்லாம் அந்த வளாகத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய பூங்கொத்தோடு காத்திருந்தோம்.

ஒன்பது தொடங்கி பத்து மணிவரை பட்டம் பெறவிருக்கின்ற மாணவர்கள் நுழைகிறார்கள் நுழைகிறார்கள் நுழைந்துகொண்டே இருக்கின்றார்கள். எங்கிருந்து தான் வருகிறார்களோ தெரியவில்லை.. அவ்வளவு பேர் வரிசையாக வந்த மேனியாக... அதுவும் இது தனியார் பல்கலைக்கழகம். அரசாங்க பல்கலைக்கழமென்றால் மாணவர்கள் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாம்.! இவ்வளவு பட்டதாரிகளுக்கு நாட்டில் வேலை இருக்கா என்ன..!? என் மனதிற்குள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

பல்கலைகழகம் செல்வது சுலபமாகிவிட்டது இப்பொதெல்லாம். நாங்கள் பயில்கின்ற காலகட்டத்தில், பல்கலைகழகம் சென்றால் அது பெரிய விஷயம். இருந்தபோதிலும் அங்கே சென்று பயின்று வந்தவர்களுக்கு வேலை உறுதி என்றிருந்த காலகட்டம் அது.

மாணவர்கள் நுழைவதற்கு முன் வெளியே முட்டி மோதி நின்றிருந்த கூட்டத்தைக்கண்டவுன், உள்ளே சென்று இடம் பிடித்துவிடலாமா.!? என்று நினைத்து, உள்ளே நுழைய முயன்ற எங்களை அங்கே பணிபுரிந்த தற்காலிக மாணவப்பணியாளர் அனுமதிக்கவில்லை. ``கொஞ்ச நேரம் பொறுங்கள்’’, என்று மிகமரியாதையுடன் எச்சரித்து வெளியே காக்கவைத்தனர்.

மணவர்கள் அனைவரும் நுழைந்த பிறகு, பெற்றோர்கள் நுழைகிற தருணத்தில், என் புடவையே அவிழ்ந்து விழுந்துவிடும் அளவிற்கு தள்ளிக்கொண்டு `நான், நீ,’ என முண்டியடித்து உள்ளே நுழைய தயாராகிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வாசலிலேயே மாட்டிக்கொண்டோம். ஏய், ஏன் தள்ளுகிறீர்கள்.? இது என்ன மீன் மார்க்கெட்டா?.. என்று இழுத்துப்பிடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்..

மாணவப்பணியாளர்கள் நிறைய பேர் அங்கே பணிக்கு அமர்த்தியும் அவர்களையே தள்ளிவிட்டு குபுகுபுவென கூட்டம் நுழைந்துவிட்டது.
`டிக்கட்..டிக்கட்..டிக்கட்’ என்று மாணவப்பணியாளர்கள் கூச்சலிட்டும் ஹ்ம்ம்.. யாரும் சட்டை செய்யவில்ல.

டிக்கட் இல்லாதவர்கள் உள்ளே  நுழையக்கூடாது என்று சொல்லியும், கேட்ட பாடில்லை. பாட்டி தாத்தா.. என எல்லோரையும் அழைத்துக்கொண்டு நுழைந்துவிட்டார்கள்.

``கீழே மண்டபம் நிறைந்துவிட்டது. எல்லோரும் மேலே செல்லுங்கள்.’’ என்று, நீண்ட வரிசையாகக் கைகளைக் கோர்த்து, மண்டப நுழைவாசலை மறைத்துக்கொண்டு, ``மேலே செல்லுங்கள்.’’ என்று, அடுத்து வருபவர்களை பணித்தார்கள் மாணவப்பணியாளர்கள். நாங்களும் மேலே செல்கிற கூட்டத்தில் மாட்டிக்கொண்டோம். லிஃஃப்ட் இல்லை. மாடிப்படிகள் ஏறவேண்டும். ஏறி உள்ளே நுழைந்தால் அங்கும் இடமில்லை. மேலேயும் நிறைந்துவிட்டது. ஆட்கள் பின்னே நுழைந்தவண்ணமாக.. `உள்ளே செல்லுங்கள்.’ `உள்ளே செல்லுங்கள்.’ என்று எல்லோரையும் உள்ளே நுழைத்துக்கொண்டே இருந்தார்கள்.

உற்கார இடமில்லை. உள்ளே நுழைந்து, இடையிடையே இருக்கின்ற இடத்தில் அமர, அங்கே அமர்ந்திருப்பவர்களை, கொஞ்சம் நகருங்கள், என்றால், எதிலோ மழை பெய்வதைப்போல் அமைதியாக இருந்தார்கள்.

சரி உள்ளே நுழைந்து உற்காரலாம் என்றால்.. ஆள் இருக்கு, என்கிறார்கள்.

வேற வழி, நின்றே பார்க்கலாம் என்று ஒரு ஓரமாகச் சென்று கீழே மண்டபத்தைப்பார்த்தால், அங்கே.. வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், ஒரு நாற்காலியில் அவர்கள் அமர, ஒரு நாற்காலி வாங்கிவந்த பூங்கொத்து, அவரகளின் கைப்பைகள் வைக்க என சில வரிசைகளில் ஈவு இரக்கம் இல்லாமல்.. யாரைப்பற்றியும் பொருட்படுத்தாமல் நாற்காலிகளைப் பிடித்துவைத்துக்கொண்டு உற்கார்ந்திருக்கின்றார்கள்.

நாங்கள் நின்ற வரிசையில் நான்கு பேர் அமரும் இடத்தில் இரு பெண்கள் இடத்தைப்பிடித்துக்கொண்டு.. யாருடைய முகத்தையும் பார்க்காமல் தங்களின் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்...

பலரின் கைகளில் பூங்கொத்து. அதைக்கொஞ்சம் சாய்க்கின்ற போது அதன் அடியில்  உள்ள நீர் அங்கேயும் இங்கேயும் வடிந்து அதில் ஒரு சீன முதியவர் வழுக்கி விழப்பார்க்க..

அங்குள்ள வராண்டாவில் அந்தநீர் வடிந்து ஊற்றி, அங்கேயும் யாரும் அமரமுடியாமல்.. ஒரே அவதி தான் போங்க..!

சரி எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பது.. கீழே போய் மண்டபத்தின் வெளியே நிறைய மேஜை நாற்காலிகள் போடப்பட்டுள்ளது, அங்கேயே உற்காருவோம், என்று, அங்கிருந்து வெளியானபோது, ``வெளியே சென்றால், மீண்டும் உள்ளே வரமுடியாது.’’ என்று எச்சரித்தார்கள். பரவாயில்லை. நாங்கள் வெளியே அமர்ந்து, பெரிய திரையின் மூலம் விழாவைக் கண்டு ரசிக்கின்றோம், என்று சொல்லி வெளியான போது, வெளியே அறுசுவை உணவு தயாராகிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த கையோடு அனைவருக்கும் மதிய உணவு வழங்குவதற்கு தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

அங்கே நிறைய மேஜை நாட்காலிகள் காலியாகவே இருந்தன. ஆனாலும் அங்கேயும் ஒரு வட்டமேஜையில் பத்துபேர் அமரலாம் என்றால், இருவர் அமர்ந்துகொண்டு, விழா முடிந்து உள்ளிருந்து வெளியே வரும் உறவுகள் சொகுசாக அமர்ந்து உணவை உண்பதற்கு இடம்பிடித்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார்கள்.

நான் ஓர் இடத்தில் அமர, அங்குள்ள சீனப்பெண் ஒருவள், `ஆளிருக்கு’. என்று சொல்ல... ஊச்சுமண்டைக்கு மணியடிக்க... அதிருப்தி வசனங்களை உதிர்த்து, நாற்காலியை டர்ர்ர் என்று இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டேன்..

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

கருப்பு தினம்

22/8...

நாடு சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டோடு ஐம்பத்தேழு வருடங்கள். 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. 57ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 57 வருடங்கள் கடந்துவிட்டன.

எனக்கு எந்தப் பற்றும் இருக்காது. மதம்.மொழி, சமயம் இன்னபிற பற்றுகள் என எதுவும் என்னை நெருங்க முடியாது. ஆனால் எனக்கு நாட்டுப்பற்று அதிகம். எங்கு தேசியகீதம் ஒளித்தாலும் நான் எழுந்து நின்றுவிடுவேன். இதை யாரும் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. என் இரத்தத்தில் ஊறியது. அரசியல் தலைவர்கள் மேல் கோபம் இருக்கும்.. அரசாங்கத்தின் மீது கோபம் இருக்கும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அரசியல் கட்சிகள் மீது வரும்.. ஆனால் நாடு என்று வரும்போது.. எங்கள் நாடு எங்களின் சொத்து.

எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை நாடு சந்தித்திருப்பினும், கடந்த மாதம் நிகழ்ந்த ஒரு வரலாற்றுப்பிழையை எந்த பாவமும் அறியாத எம்மக்கள் எதிர்நோக்கி இருப்பது மனதிற்கு வேதனை. கனவுகளைச் சுமந்து ஆகாயத்தில்சிறகடிக்க எத்தனித்த எமது உறவுகளை சுட்டு வீழ்த்தி (MH17) தரைமட்டமாக்கி தவிக்கவிட்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் அதைப்பற்றிய தகவல்கள் ஊடகங்களை நிரப்பியவண்ணம். நாடே குழம்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக போராடி, நாளைதான் அந்த விபத்தில் சிக்குண்டவர்களின் பிரேதங்கள், யாரும் திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவிருக்கிறது.

நாடே சோகத்தில் மூழ்கும் நாள், நாளை.. (22/8) இன்றே அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவள் கண்ணீர் மல்க, ``நாளை கருப்பு ஆடைகள் அணிந்து வா.. ஒட்டுமொத்த மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாவ காரியத்தின் அடையாளங்களாக நமது சகோதர சகோதரிகள் இல்லம் திரும்புகிறார்கள். கனவுகளைச் சுமந்து மகிழ்வாகச்சென்று, சிதலமடைந்த நிலையில் தாய் மண்ணில் புதைபட புறப்பட்டுவிட்டார்கள்.. ஆகாயத்தில் ஆவிகள் உலவும் என்பார்கள்.. வெள்ளை மேகங்கள் பார்ப்பதற்கு சிலரின் உருவம்போலவே இருக்கும்.. நாளை வானத்தைப் பார்.. மேகங்கள் நமது உறவுகளின் தோற்றங்களை பிரதிபலிக்கின்றனவா என்று..’’ குமுறினாள்.. எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன..

இன்று ஒரு நாள், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கு கொள்வதற்காகவும், சவப்பெட்டிக்குள் அடைக்கலமாகி பறந்து வரவிருக்கின்ற நமது சகோதர சகோதரிகளுக்காகவும்.. ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நாட்டோடு நாமும் பங்குகொள்வோம். மரியாதை நிமித்தமாக...

புதன், ஆகஸ்ட் 20, 2014

பொய் கோபம்...



`ஹாலோ சாரி சாரி சாரி... எனக்குத்தெரியும் நீ கோபமாக இருப்பாய்.. சாரி லா.. ’ இன்று மதியம் தோழி என்னை அழைத்து சாரி புடவை என்று என்னமோ உளறிக்கொண்டிருந்தாள்..

என்னாச்சு.? கேட்டேன்.

இல்லெல்லா, சனிக்கிழம, சரியான மழ. எங்கும் வெளியாக முடியல. ப்ரொமீஸ் பண்ணிய மாதிரி அவரும் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரல.. சாரி லா.. கோவிசுக்காதே..!

என் மண்டையில் நண்டு ஓட ஆரம்பித்தது. என்ன இது, என்னமோ உளறுது.. என்ன சொல்ல வருது.. பேஸியல் போகலான்னு சொல்லியுருந்தோமே, அதுவா? இல்லே அன்று மார்கெட் போயிட்டு பசியாறிட்டு வரலாம்னு ஒரு அப்பாயின்மெண்ட் வைத்திருந்தோமே அதைச் சொல்றாளா?.. ஜிம் போகலாம்னு சொல்லிக்கொண்டு அலைந்தோமே.. அதைச் சொல்றாளா.! எனக்கு ஒண்ணும் புரியல. இருப்பினும் கேட்க மனமில்லை. அவளின் பரபரப்புப் பேச்சின் அலைவரிசையில் நானும் சுழல ஆரம்பித்தேன்..

அதுக்கென்ன.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்.! புரிந்ததுபோல் கலந்துகொண்டு பங்கிற்கு சில வரிகளை உதிர்த்து வைத்தேன்.

கேளு என்ன நடந்துச்சுன்னா.., என் நாத்தனா திடீர்ன்னு கூப்பிட்டு, நாட்டு வைத்தியர்கிட்ட போகணும், வா எனக்கு இடந்தெரியாதுன்னு சொல்ல, நான் காடிய எடுத்துட்டுக் கிளம்பும்போதா எங்க சின்னம்மா வரணும்.. குடும்பத்தோட வந்துட்டாங்க..’ தொடர்ந்தாள்..

ஐய்யோ அப்புறம்.? சுமந்த கேள்விக்கணைகளை மனதில் புதைத்துக்கொண்டு, ஆர்வமாகக் கேட்பதாக பேச்சில் புகுந்துகொண்டேன்.

அப்புறம் என்ன .. நாட்டு வைத்தியர பார்க்கமுடியாது, இன்னொரு நாளைக்குப் போகலாம்னு அவ கிட்ட சொல்லிட்டு, மார்கெட் ஓடி சாமான் எல்லாம் வாங்கி வந்து சமைச்சு முடிக்க மணி ஏழு.

ஐய்யோ...

அதான் நம்ம நிலம.. சரி நீ வேற இரண்டு வாரமா போன் பண்ணல, கோவிச்சுக்கிட்டியோன்னு நினைச்சு நானே கூப்பிட்டேன்..

நான் ஏன் கோவிச்சுக்கறேன்.. உன்னுடைய வேலை உனக்கு.. நினைச்ச நேரம் வா’ன்னு கூட்டிக்கிட்டு கிளம்பமுடியுமா.! இன்னும் சரியாக புரிபடாத மங்கிய நிலையிலேயே என் பேச்சு இருந்தது..

அப்பாடா, கோபம் இல்லியே. அது போதும்.. இருந்தாலும் மகள் பட்டமளிப்பு விழா விருந்து ரொம்ப முக்கியம். தேர்ந்தெடுத்த நட்புகளை மட்டுமே அழைக்கிறேன். மனதார வாழ்த்தும் நல்லுள்ளங்கள் கண்டிப்பாக வரவேண்டும். வாழ்வில் மறக்கமுடியாத நாள். நிச்சயமா வந்திடு. வரலன்னாத்தான் இருக்கு உனக்கு’ன்னு, வார்னிங் பண்ணின.. அதான் தயங்கி தயங்கி, எதிர்ப்பாத்திருப்பியே என்னிய....?  சாரிலா இன்னொரு நாளைக்கு நிச்சயம் வரேன்.. ‘ என்றாள், குலாவியவண்ணம்.

ஆஹா. அப்போதுதான் எனக்கே நினைவுக்கு வந்தது, அவள் அன்றைய விருந்துக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்று.. இருந்தாலும் என்னுடைய மெத்தனப்போக்கைக் காட்டிக்கொள்ளாமல்.. இறுதியில் கோபங்கொண்டதுபோல் நடித்துவிட்டுத்தான் தொலைபேசியை வைத்தேன்..

வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சைகோன் சிட்டி பயணம் - வியட்நாம் பயணக்கட்டுரை


வியட்நாம் சென்று வந்தோம். பக்கத்தில் இருக்கின்ற கோலாலம்பூருக்கு ஷாப்பிங் சென்று வந்தாலே, பயணக் கட்டுரை எழுதுகிற நான், ப்ளைட் ஏறி வெளியூர் பயணம் சென்று வந்தால், சும்மா விடுவேனா. !



அதுசரி, ஏன் வியட்நாம் நாட்டிற்கு பயணம் செல்ல ஆர்வம் வந்தது.? யாரும் அதிகம் செல்லாத ஒரு நாடு ஆச்சே அது. அங்கே ஏன் செல்லவேண்டும்.?

வாழும் காலத்தில் நம்முடன் நெருங்கிய,  நாம் கண்ட வரலாற்றுப்பின்னணியைப் பறைசாற்றுகிற நாடு அது என்பதால் அதைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வம், என்று எல்லாம் சொல்லி புருடா விடமாட்டேன்.

உண்மை என்னவென்றால், என் மகள் மருத்துவப்படிப்பின் இறுதிக்கட்ட தேர்வின் போது மிகுந்த மனவுளைச்சலில் சோர்வுடன் உழன்றுக்கொண்டிருந்தாள். தாம் மிகவும் வருத்தத்துடன் சோர்வாக உள்ளதாகவும், ஒவ்வொரு நொடியும் அதிக படபடப்புடன் பய உணர்வுடன்  நகர்வதாகவும், யாருமற்ற தனிமை தம்மைக் கொல்வதாகவும், ஆறுதல் சொல்ல பக்கத்தில் நாங்கள் யாரும் இல்லாததாகவும் புலம்பிக்கொண்டே இருந்தாள். வட்ஸாப்பில் தகவல் வருகின்ற போதெல்லாம், சிறுகுழந்தைக்கு மிட்டாய் கொடுத்து உற்சாகப் படுத்துவதைப்போல் மனங்கோணாமல் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம் நானும் என் கணவரும். அப்போது தற்செயலாக, `நீ சந்தோசமாக தேர்வெல்லாம் எழுதிவிட்டு வா, நாமெல்லாம் ஜாலியான வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்குச் சென்றுவரலாம்.’ என்று `ஓவர்’ உற்சாகமூட்ட வாக்கு கொடுத்துவிட்டார்.

அன்றிலிருந்து, எங்கே போகலாம்.? எங்கே போறோம்.? என்று சதா கேட்கத் துவங்கிவிட்டார்கள் பிள்ளைகள்.

தேர்ந்தெடுத்த நாட்டிற்குச் செல்லலாம் என்றால், நோன்பு விடுமுறையில் இரட்டிப்பு விலையில் கழுத்தில் கத்தி வைக்கின்றார்கள்.  ஏர் ஏசியாவில், சீனா, கம்போடியா, பாங்கொக், கொச்சின், ஸ்ரீலங்கா, ஆஸ்த்ரேலியா, லண்டன் என பல இடங்களுக்கு டிக்கட் போட்டு விலையினைக் கூட்டிப்பார்த்து அதிர்ந்து, ஏறக்குறைய எங்கும் பயணம் செல்லவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்ற வேளையில், எதோ ஒரு பட்டனில் சிகப்புச் சிக்னல் காட்டவே, அங்கே சென்று அமுக்கிப்பார்க்க, அது ஹொ சி மின் பண்டனத்தைக் காண்பித்தது. எல்லா ஊர்களையும்விட வியட்நாம் செல்வது செலவை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்  என்கிற யோசனையில், விட்டால் இதுவும் கிடைக்காது என்பதால், கண்களை மூடிக்கொண்டு டிக்கட்களை வாங்க ஆன் லைனில் பதிந்துவிட்டார் கணவர்.

வாங்கியபின் என்னிடம் ஆலோசனை கேட்க. `ஐய்யே அங்கே வா? வுவக், சாப்பாடு கிடைக்காதே.! பன்றி நாய் எல்லாம் சாப்பிடுவார்களே.. ! நாம் எப்படி அங்கே சாப்பிடுவது.?’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டேன். காரம் உப்பு புளி மசாலா என நாக்கைத்தீட்டி வைத்திருக்கின்ற எனக்கு சாப்பாடுதான் முக்கிய பிரச்சனையாக தலைதூக்க ஆரம்பித்தது.

`அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம், டிக்கட் போட்டாச்சு, ஆன்லைன்ல ஹோட்டல்கள் பாரு, த்ரீ ஸ்டார் போதும். அதிக விலையில் பார்க்காதே.!’ என்று தொடர் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

என்ன செய்யலாம் என்கிற சிந்தனையில், அலுவலகத்தில் உள்ள சில சீன தோழிகளிடம் வியட்நாம் பயணம் பற்றிப்பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். ஏறக்குறை எல்லா சீன நண்பர்களும் வியட்நாமிற்கு சென்றுவந்தவர்களாகவே இருந்தார்கள். அனைவரும் சொன்ன ஒரே விஷயம், `வியட்நாம் ஒரு உணவுச்சொர்க்க பூமி. அதாவது food paradise. அற்புதமான உணவுகளை அங்கே உண்டு ரசிக்கலாம். அழகான ஊர். நிச்சயம் உனக்குப்பிடிக்கும். நன்றாக மகிழ்வாக சுற்றிவிட்டு வா.’ என்று ஆர்வமூட்டிவிட்டார்கள்.

அதற்குப்பிறகு, இணையத்தில், அந்த நாட்டின் வளர்ச்சி, சிதோஷ்ணநிலை, உணவு, வரலாறு, பயண வழிக்காட்டி விளக்கங்கள் என ஆராய்ந்து வாசிக்கத்துவங்கினேன். ஆர்வத்தைக் கூட்டியது அந்த ஆராய்ச்சி.




பயணம்.

நான்கு இரவு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தோம். இங்கிருந்து தங்கும் விடுதியினை ஆன்லைனில் பதிவு செய்கிறபோது, டூர் செல்கிறீர்களா? அல்லது ஹொ சி மின் டவுனிலேயே ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா? என்று மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டார்கள். எதுவானாலும் சொல்லுங்கள் நாங்கள் ஹோட்டல் மூலமாகவே எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்கிறோம். உங்களின் திருப்திகர பயணத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம் என்று உறுதியளித்தார்கள்.

டூர் செல்லலாம்.; ஐந்து நாட்களும் ஷாப்பிங் செல்ல நாம் ஒண்ணும் பெரிய கோடிஸ்வரர்கள் அல்ல.’ என்று முடிவானபிறகு, டூர் செல்வதற்கான செலவுகளை அட்டவணையிட்டு மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிவைக்க அந்த பட்ஜெட் பாக்கெட் மணிக்கு தகுந்தபடி அமையவே, அதைத்தேர்வு செய்துகொண்டு பயணத்திற்கு தயார் ஆனோம்.

மலேசிய நேரப்படி இங்கே காலை மணி ஏழு என்றால், அங்கே காலை மணி ஆறு. ஒரு மணி நேரத்திற்கு பின்னே சென்றிருந்தது பொழுது. இருந்தபோதிலும் காலை ஆறுமணிக்கெல்லாம் இங்குள்ள நேரப்படி காலை எட்டு போல் விடிந்திருந்தது. ஆறு மணிக்கே சூரியன் உதிக்கத்துவங்கிவிட்டான். பிரயாணத்திற்கும் காலை ஆறு மணிக்கெல்லாம் தயார் நிலையில் இருந்துவிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊர் சுற்றிவிட்டு, விடுமுறை பொழுதைத் தூங்கிக்கழிக்கலாம் என்கிற கனவு பாழாகிப்போனது என்றுதான் சொல்லவேண்டும்.

சுற்றுலா ஏற்பாட்டின் படி ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் பேருந்தில் பிரயாணம் செய்தாகவேண்டிய கட்டாய நிலை. வெகுதூரம் செல்கிறார்கள் இடங்களைச் சுற்றிக் காண்பிக்க.

உலகச் சுற்றுலாப்பயணிகளை, பல ஹோட்டல்களில் இருந்து டாக்ஸி மூலமாக அழைத்துவந்து ஓர் இடத்தில் ஒன்று திரட்டி, பருகக் குளிர் பாணங்கள் கொடுத்து காத்திருக்கவைத்து, பின்பு எல்லோரையும் ஒரே பஸ்ஸில் ஏற்றிச் சுற்றுலா செல்ல ஆயத்தமாகிறார்கள்.

நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த பயண வழிகாட்டியும் நம்மோடு பயணிக்கின்றார். அவர் பஸ்ஸில் ஏறியவுடன் பஸ் கலைக்கட்ட ஆரம்பித்துவிடுகிறது.


வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, ஏழ்மை, உணவிற்குப்பஞ்சம், வெள்ளம், தற்போது நாம் செல்ல விருக்கின்ற சுற்றுலாத்தளம் என எல்லாவற்றையும் குறித்து விலாவரியாக விளக்கம் கொடுத்துக்கொண்டே வருகிறார். பஸ்ஸில் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியரகள் மற்ற அனைவரும் ஐரோப்பியர்கள். கிட்டத்தட்ட நாற்பது பயணிகளை ஏற்றிச்செல்கிற பஸ் அது.

பயண வழிகாட்டி தூய ஆங்கிலத்தில் ஐரோப்பியர்களின் பாணியில் உரையாடிக்கொண்டே வருவதால், அந்தப் பாணி புரிவதற்கு எனக்குக் கொஞ்சம் நேரமெடுத்தது. இடையிடையே உரையினை நிறுத்தி கேள்விகள் வேறு கேட்கிறார். நாங்கள் யோசிப்பதற்குள் அறிவுப்பூர்வ விளக்கங்களை ஐரோப்பியர்கள் கலகலவென பகிர்ந்துகொண்டே வந்தார்கள். நகைச்சுவையும் செய்தார்கள். உற்சாகப் பயணமாக அமைந்தது.

வரலாறு

வியட்நாமிய வரலாறு என்பது நமக்கு மிகவும் நெருங்கிய வரலாறு. வாழும் வரலாறு என்றும் சொல்வார்கள்.  70களில் ஓய்ந்த இந்த வியட்நாமியப்போர் எங்களின் காலகட்டமான 80கள் வரை அதன் தாக்கம், அது குறித்த பேச்சு என தொடந்துகொண்டிருந்தது.

முன்பெல்லாம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தால், என்ன இது ஓயாத வியாட்நாம் போராக இருக்கே.! என்று உவமை கூறுவார்கள். சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு என்கிற திரைப்படமும் இந்த சண்டையினை உதாரணமாகச் சொல்லித்தான்  தலைப்பிட்டு திரைக்காவியமாக வடித்திருந்தார்கள்.

யாரேனும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தால், இதென்ன வியட்நாம் அகதிகள் மாதிரி இருக்கே.! என்பார்கள். எங்கேயாவது விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ ரத்தக்களறியோடு காயம்பட்டு வந்திருந்த ஒருவரை, வியட்நாம் போரில் அகப்பட்ட அடிமை மாதிரி இருந்தது பார்ப்பதற்கு.! என்று எண்பதுகளிலும் பேச்சு வழக்கு இருந்ததை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது. அப்படி அந்தப்போரோடு உலக மக்கள் பின்னிப்பிணைந்திருந்தார்கள் அன்று..

அந்த வரலாறு நிகழ்ந்த இடங்களை நேரில் சென்று காண்கையில் மனம் கனக்கிறது. யூ.எஸ் இராணுவம் புரிந்த அராஜகங்களையும் மக்கள் பட்ட அவஸ்தைகளையும் ச்சூசி தன்னல் சென்றபோது விளக்கமளிக்கப்பட்டது.

வியட்நாம் மக்களும் அதன் இராணுவமும் பூமிக்கடியில் கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையினைத் தோண்டி, அதனுள் பதுங்கி அங்கேயே உணவு உறக்கம் என்று வாழ்ந்த வரலாறு குலைநடுங்க வைத்த அனுபவம்.

அந்தச் சுரங்கத்தினுக்குள் கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உள்ளே நுழைவது முடியாத காரியம். அப்படி நுழைய நினைத்த ஒரு ஐரோப்பியனுக்கு மூச்சுத்திணறலே வந்துவிட்டது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் வியட்நாமியர்களின் உடல் எவ்வளவு மெளிந்து காணப்பட்டிருக்கும் என்று. சுரங்கத்தின் உள்ளே வேகமாக நுழைந்து, பிட்டத்தாலும், முட்டிபோட்டுக்கொண்டு நகர்ந்தும் பல மைல்களுக்கு அப்பால் எவ்வளவு விரைவாக ஆற்றங்கரைக்குச் செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்று மெக்கோங் ஆற்றில் குதித்து அங்கிருந்து தப்பித்திருக்கின்றனர்.



அதுமட்டுமல்ல, அமெக்க இராணுவத்தை வெறிகொண்டு தாக்கியிருக்கின்றனர். இதற்கான யுக்திகள் காண்போரின் கைக்கால்களை நடுங்கச்செய்தன. பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை, அமெரிக்கா வியட்நாம் போரில் பறிகொடுத்திருப்பதாக வரலாறு காட்டுகிறது. ஒரு வித விஷ மரத்தைக்கண்டுகொண்டு அதனின் இலைகள் மற்றும் தண்டுகளை அரைத்து, வீசப்பட்ட குண்டுகளைப் பொருக்கி, வெட்டி கூர்மையாக்கி சொந்த தயாரிப்பில் உருவான ஆயுதங்களில் அந்தக் கலவையைப் பூசி மறைவான இடங்களில் அவைகளைப் பதுக்கி, தாக்கியிருக்கின்றனர். மாட்டிக்கொள்கிற அமெரிக்க இராணுவ வீரர்கள் தப்பிக்க இயலாதபடி மிக நுணுக்கமாகக் கட்டப்பட்ட/வெட்டப்பட்ட குழிகள் பார்வையாளர்களின் கண்களை ஆச்சிரியத்தில் அலக விரிய வைத்த்து. எவ்வளவு கோபம் இருந்தால் அவர்கள் இதுமாதிரி வெறித்தனமாகச் சிந்தித்து இருப்பார்கள். அனைத்து ஆவணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடி பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். எதிர்கால சந்ததியினருக்குப் பாடம் போதிக்க..



இருந்தபோதிலும் அந்தக்குழியில் இருந்து வெளியே சுவாசிக்க வியாட்நாமியர்கள் பூமியை நோக்கிப்போடப்பட்ட துளையின் வழியாக, அமெரிக்க இராணுவம் மோப்ப நாய்களைக்கொண்டு கண்டுபிடித்து, அதற்குள் ரசாயண விஷவாயுவை பாய்ச்சி பலாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளார். அந்த விஷவாயு காற்றில் கலந்து மிச்சசொச்ச மக்களின் நாசி வழி புகுந்து பலரை ஊனமாக்கியதோடல்லாமல் பல ஆண்டுகளுக்கு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கும் அது வழிவகுத்துவிட்டதாக ஆதாரங்கள் காட்டுகிறன.

இப்படி மாறி மாறி தாக்கிக்கொண்டே இருந்ததால், நாட்டில் பசி பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சி நாலா பக்கமும் சிதறி ஓடி ஆற்றின் வழி நீந்தியே தப்பித்து மெக்கோங் ஆற்றங்கரையோரம் நெடுதூரம் தங்களது வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரம் இட்டுக்கொண்டார்கள். சுற்றிலும் நீர். அந்தப்பக்கம் காடு. நகரங்களின் போர். நாடே சீர்குலைந்த நிலையில்.. உணவிற்குப் பஞ்சம். பசிக் கொடுமை என இந்தச் சிக்கல்கள் பல ஆண்டுகள் தொடந்துள்ளது. அன்று ஆரம்பித்ததுதான், உயிர்வாழ பலவிதமான உயிரினங்களைக் கொன்று உணவாக்கிருக்கின்றார்கள். பாம்பு, நாய், பூனை, சிலந்தி, தவளை, எலி, குரங்கு, புழுக்கள், பூச்சிவகைகள் என. இன்னமும் அவைகளை உண்கிறார்கள் சில இடங்களில். !





வாழ்க்கைச்சூழல்

அங்குள்ள மக்களின் வாழ்க்கைச்சூழல் மகிழ்ச்சியாகவே கழிகிறது. மக்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்றார்கள். சோம்பித்திரிகிற மக்களைக்காணவே முடியவில்லை. (சத்தியமான வாக்கு இது..)

பரபரப்பாகவே காணப்படுகிறார்கள். நாட்டை மேம்படுத்த தாமும் வளமுடன் வாழ அவர்களின் பங்களிப்பை  எறும்புபோன்ற சுறுசுறுப்பில் காணமுடிகிறது. ஒவ்வொருவரும் எதாவதொரு வியாபாரத்தில் தம்மை  ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.  தங்களின் தோப்பில் விளைகிற பழங்கள். தாங்கள் வளர்க்கின்ற கால்நடைகள். தாங்கள் நட்டுவைத்த காய்கறிகள். தாமே தயாரிக்கின்ற கைவினைப்பொருட்கள், பலகாரங்கள். திண்பண்டங்கள் என வழிநெடூக வியாபாரிகள் எதையாவது விற்றுக்கொண்டு தங்களின் உழைப்பைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.







வாகனங்கள்

தொண்ணூறுகளின் இறுதிவரை சைக்கிள் மற்றும் ரிக்‌ஷாதான் முதன்மை வாகனமாகப் பார்க்கமுடியுமாம். ஆனால் இப்போது எங்கே பார்த்தாலும் மோட்டார் வாகனம்தான் பிரபலம். தேன்கூட்டைச் சீண்டிவிட்டால், எப்படி தேனீக்கள் குபுகுபுவென வருமோ அதேபோல் மோட்டார் வானகமோட்டிகளின் படையெடுப்பு வேர்த்துவிறுவிறுக்கச்செய்கிறது.  பாதசாரிகள் சாலையைக் கடக்கமுடியாத அளவிற்கு மோட்டார் ஓட்டிகளின் இராஜ்ஜியம் நிலைகுலையச்செய்கிறது. எங்குபார்த்தாலும்  மோட்டர்கள்தான்.

கார்கள் குறைவு. கேட்டதற்கு, கார்களின் விலை மலேசியாவைவிட மூன்று மடங்கு அதிகமாம். கார் வாங்குவதற்கு அரசாங்கம் கூடுதல் கெடுபிடிகளை வைத்திருப்பதால் மக்கள் கார்கள் வாங்க அஞ்சுகின்றார்களாம். மேலும் சாலைகள் இன்னும் விரிவு படுத்தப்படாமல் இருப்பதால் கார்கள் வாங்குவதற்கு மறைமுக தடைகள் அங்கே அதிகம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

செல்வதற்கும் வருவதற்கு இரண்டு சாலைகள். பேருக்குத்தான் நடுவில் வெள்ளைக்கோடுகளை இட்டிருக்கின்றார்கள், இருந்தபோதிலும் சாலை குறுகலாகவே இருக்கின்றது. பஸ்ஸில் பிரயாணம் செய்கிற நாங்கள் மோட்டார் ஓட்டிகள் நுழைவதைப் பார்க்கையில் உச்சந்தலையே கூசுகிறது. அதிகமான மோட்டார் வாகனங்கள். நெடுஞ்சாலைகளில் கார் பஸ்களுக்கு நடுவில் மோட்டார் வாகனங்களைக் காணமுடியாத நாடான நம் நாட்டில் இருந்துவிட்டு அங்கே சென்றபோது `ஐய்யோ.. பார்த்து.. ஆ.. மோட்டரு..’ என்கிற முனகலை தற்காப்புக்கவசமாக கிசுகிசுத்துக்கொண்டோம்.


வணிகம்

நகரங்களில் நடைபழகச் சென்றபோது வியாபாரம் செய்கிற இடங்களில் உணவுப்பொருட்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கின்றார்கள். இரவுச்சந்தைகளில் விற்கப்படும் உணவுகள் வாயில் எச்சிலை வரவழைக்கின்றன. வர்ண வர்ண அரிசியில் அவிக்கப்பட்ட சோறுவகைகளின்  (புழூர்) நறுமணம் மூக்கைத்துளைத்தது. கைகளில் பிளாஸ்டிக் உரைகளை அணிந்துகொண்டு உணவுகளைப் பரிமாறுகிறார்கள். சுடச்சுட செய்து விற்பனை செய்கிறார்கள்.  என்ன வேண்டும்.? இந்தா பிடி. காசு கொடு. மொழி தெரியவில்லை என்றால் எழுதி காண்பிக்கின்றார்கள்.  பேரம்பேசினால். பொருட்களை எடுத்து வைத்து விட்டு அவர்களின் வேலைகளில் மும்முறமாக ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள். நாம் மீண்டும் அவர்களிடம் பேச எத்தனித்தால், நமக்கு நா வறண்டு விடுகிறது காரணம் அவர்களுக்கு ஆங்கில அறவே விளங்கமாட்டேங்கிறது. பெரிய சிக்கல் இதுதான். மொழிப்பிரச்சனை.


ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் தெரியாமல் பயணிகள் சகஜமாக வந்துபோகிற இடங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.

மொத்த வியாபரக் கடைகளில் கரைகண்ட வியாபாரிகள், பயணிகளைக் கண்டால் சூழ்ந்துகொண்டு, கைகளைப்பிடித்துக்கொண்டு அவர்கள் விற்பனை செய்கிற பொருட்களை வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிக லாபத்திற்கு அவர்களின் பொருட்களை நமது தலையில் கட்டப்பார்க்கின்றார்கள். . ஆனால் சிறுதொழில் அங்காடிகள், யாரையும் சட்டை செய்வதில்லை. வாங்கு, இல்லையேல் இடத்தைக்காலி செய், என்பதைப்போல் இருந்தது அவர்களின் முக பாவனைகள்.

dong

வியட்நாம் dong ஐ ஆயிரம் தடவைகள் என் பிள்ளைகளும் கணவரும் எனக்கு விளக்கம் கொடுத்து புரியவைக்க முயன்றிருப்பார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கோடிகோடியாய் கொடுத்து பொருட்களை வாங்க மனம் பதறுகிறது.

உடைகள் தைக்க அழகான துணி ஒன்றினைத்தேர்ந்து எடுத்தேன்.  விலை 1, 400,000 dong. ஐய்யோ கடவுளே. என்ன கணக்கு இது? என்று கணவரைத்தேடினால் . ஆள் நைசாக நழுவி விட்டார். பக்கத்தில் இருந்த மகளை அழைத்து கணக்குக்கேட்டால், பதிநாலுல பாதி, ஏழு. ஏழில் ஒன்று கூட்டினால் எட்டு. எட்டை இரண்டால் பெருக்கினால் பதினாறு. பதினாறுல பத்தைக்கூட்டுங்க.. இருபத்தி ஆறு. இருபத்தாறுபத்து? என்றாள்,  எனக்கு தலை சுற்றலே வந்துவிட்டது. பிறகு வியாபாரியே மலாய் மொழியில் பேச ஆரம்பித்தாள். ஆறுதலாக இருந்தது. கணக்குப் போட்டுப்பார்த்து, விலையை பாதிக்குப்பாதி குறைந்து பேரம் பேசி வாங்கினோம். விலையை அப்படித்தான் குறைத்து வாங்கவேண்டுமென்று எங்களின் பயணவழிகாட்டில் பஸ்ஸை விட்டு இறங்குகிறபோதே அறிவித்துவிட்டார்.

மெக்கொங் ஆறு

மெக்கோங் ஆற்றில் பேர்ரி சவாரி. ஆற்றைச்சுற்றிப்பார்த்தல். ஏன் ஆறு அங்கே அவ்வளவு பிரபலம். ஒரு காலத்தில் வணிகம் செய்ய உலக வணிகர்கள் ஆற்றைத்தான் முதன்மை போக்குவரத்து சாதணமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆற்றின் மூலம் பொருட்களையும் நாட்டின் வளங்களையும் சைகோன் சிட்டி (ஹோ சி மின்’இன் பழைய பெயர்.) நகரத்திலிருந்து தத்தம் ஊர்களுக்கு கொள்ளையடித்துச்சென்றுள்ளார்கள்.







கப்பல் போக்குவரத்திற்கும் வனிகத்திற்கும் மிக வசதியாக நாட்டின் மையப்பகுதியில்  அமைந்துவிட்டதால் ஒரு காலத்தில் சைகோன் நகரம் பரபரப்பு மிகுந்த நகரமாக காட்சியளித்துள்ளது.

இயற்கை எழில்

வியட்நாம் நீர் வளம் கொழிக்கும் ஓர் அற்புத நாடு. ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான செல்வம் நீர். அதற்கு அங்கே பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் ஆறுகள் ஆறுகள் ஆறுகள். வழியெல்லாம் பாலங்கள். பாலங்கள் கட்டியே நாடு ஏழையாகிவிடும் போலிருக்கு.! காணும் இடமெல்லாம் பாலங்கள். ஆற்றைக்கடக்க முன்பு படகுசவாரிதான் முதன்மை போக்குவரத்து. இன்றும் சில இடங்களில் படகுதான் போக்குவரத்து வாகனம்.

நாடு வளரவளர மக்கள் வாழ்வாதாரங்களைத்தேடி நாடு நகரம் உலகம் என  நாலாப்பக்கமும் சென்றுவிட்ட காலகட்டத்தில் இருக்கின்ற பட்சத்தில் படகுகளைச் செலுத்துவது குறைந்த வருமானம் தரும் தொழிலாகப் பார்க்கப்படுவதால், மேலும் அது பழய காலத்துப் பாணியாக கருதப்படுவதால், படகுகளைச் செலுத்துவதற்கு ஆட்கள் குறைந்து காணப்படுகிறார்கள். மேலும் தற்போது மோட்டார் வாகனங்கள் மக்களின் தேர்வாக இருந்தபடியால், இக்கரையில் இருந்து அக்கரைக்குச்செல்ல பல இடங்களில் பாலங்கள் வேறு கட்டப்பட்டுவிட்டன. நவீன வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய பெரிய பாலங்கள் தொடங்கி, தென்னை மரங்களால் ஆன மிகச் சிறிய பாலங்கள் வரை.. எங்குபார்த்தாலும் பாலங்கள். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லவேண்டுமென்றால் ஆற்றைக்கடக்கவேண்டும். பாலம் இல்லாத இடங்களில் ஏழ்மை நிலையில் உள்ள படகோட்டிகள் தங்களின் குலத்தொழிலான படகோட்டித்தொழிலை இன்னமும் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். பஸ் நிறுத்தும் இடங்களைப்போல் படகு நிறுத்திவைக்கப்பட்டு பிரயாணிகளுக்காக அது மிதந்துகொண்டிருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.


நீர் வளம் மிகுந்த நாடு என்றால் சொல்லவே வேண்டாம்... கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று பயிர்கள். நெல்வயல்கள். மரங்கள். பழங்கள். செடிகொடிகள் என கணகளுக்கு விருந்தளிக்கின்ற காட்சிகள் மனதை அள்ளிச்செல்கின்றன. இந்தச்சூழல் தூய்மையான காற்றைக்கொடுப்பதால் மனம் லேசாகிப்போகிறது. கடுமையான வெப்பத்தில் சிக்குண்ட நாடான மலேசியாவில் இருந்து சென்றதால், அங்குள்ள சிதோஷ்ண நிலை மனதை ரம்மியமாக்கிக்கொண்டே இருந்தது. மாலைப்பொழுதானால் கருமேகங்கள் சூழ்ந்து லேசான தூரலை நம்மீது தெளிக்கின்ற போது ஏற்படும் பரவச உணர்வு சொர்க்கம். 

காலைப்பொழுதுகளில் சாலையெல்லாம் பனியினால்  நனைந்திருப்பது, மர இலைகளில் இருந்து பனி சொட்டுவதும், பூக்களின் மேல், புல் நுணியின் மேல் பனி போன்ற காட்சிகள் தற்போதைய சூழலில் அபூர்வம்.  இதை அங்கு காண்கையில் அது நம்மை எங்கேயே இட்டுச்செல்கிறது. இயற்கையை நேசிக்கின்ற  என்னைப்போன்ற ஜீவராசிகளுக்கு இக்காட்சிகள் வரப்பிரசாதம்.

ஒரு காலத்தில் எங்களின் நாடும் இதே சூழலில்தான் இருந்தது. இன்று ஏன்அப்படி இல்லை.?

சுவைதரும் பழங்கள்

பழங்களுக்குள் கற்கண்டைக் காய்ச்சி ஊற்றியிருப்பதைப்போல் பழங்களின் சுவை தித்திப்பு.

அங்குள்ள உணவு மனநிறைவைத்தராததால் உணவுவேளைகளின் போது பலவிதமான பழங்கள் எங்களின் பசியினைப்போக்கியது. பழங்களை நிறைய வாங்கி வழிநெடூக சாப்பிட்டுக்கொண்டே சென்றோம். அற்புதமான ஆசியன் பழங்கள் அவையனைத்தும்.

கையிற்கெட்டிய தூரம் பழமரங்களில் இருந்து பழங்களைத் தாமாகவே பறித்து உண்ணலாம். அவ்வளவு பழங்கள் வழியெங்கும். யாரும் எதுவும் கேட்கவில்லை. சுற்றுலா பயணிகளான நாங்கள் வேண்டிய மட்டும் longgan மற்றும் கொய்யாப்பழங்களைப் பறித்து உண்டோம். எட்டாத மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்கள். ரசித்து மகிழ்ந்தோம்.

காண்கிற இடமெல்லாம் நன்கு செழிப்பாக வளர்ந்து நிற்கின்ற பழமரங்கள். ஆற்றோரங்களில் sea coconut க்குப் பஞ்சமேயில்லை. sea coconut மலேசியாவில் பிரபலம். நோன்புக் காலங்களில் நோன்புச்சந்தைகளில் பானங்களாகச் செய்து வியாபாரம் செய்வார்கள். வியாபாரம் தூள்பறக்கும்.



டிரஃக்கன் ஃப்ரூட் மிகப்பிரலம். சாலையில் செல்லுகையில் லாரி லாரியாக அப்பழங்களை ஏற்றிச்செல்வதைப் பார்க்கலாம். அங்கு செல்ல நினைப்பவர்கள் அங்குள்ள பழங்களைச் சுவைக்காமல் வராதீர்கள். கூடுதல் சுவையுடன் கிடைக்கின்ற அற்புத பழவகைகளை தவறவிடாதீர்கள்.


கைவினைப்பொருட்கள்

முட்டை ஓட்டினை வைத்துக்கொண்டு அற்புதமான கலைப்படைப்புகளை செய்து வியாபாரம் செய்கிறார்கள். போரில் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இத் தொழில்பட்டறை ஆரம்பிக்கப்பட்டதாக சுற்றுலா வழிகாட்டி அறிமுகப்படுத்தினார். இன்று அது மிகப்பெரிய தொழிலாக பரிணமித்திருப்பதைப் பல இடங்களில் பார்க்க ஆச்சிரியமாகவே இருந்தது. உடற்பேறு குறைந்தவர்கள்தான்  அக்கலையினில் கைத்தேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இன்னமும் அங்கே உடல் ஊனமுற்றவரகள் பணிபுரிவதைப் பார்க்கலாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கருப்பு அட்டையினில் வெள்ளையாக வரையப்பட்ட அற்புத ஓவியத்தில் தூளாக்கி வைத்திருக்கின்ற முட்டை ஓடுகளைத் தூவி அதை அழகுபடுத்தி பிரமாண்ட கலைப்படைப்பாக மாற்றுகிறார்கள். கண்கவர் படைப்புகள் அனைத்தும். இருப்பினும் வாங்குவதற்குத்தான் இயலவில்லை. காரணம் அதிகமான விலை.  பூ வைக்கின்ற சிறிய கூஜா கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்.

அந்நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுவருவதால் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். எங்களின் குழுவில் வந்த எவரும் அங்கே பொருட்களை வாங்கியதை நான் பார்க்கவில்லை.





தென்னை ஓலையில் பலவிதமான கைவினைப்பொருட்களை உடனுக்குடன் தயார் செய்தும் தருகிறார்கள். தொப்பி. கூடை. கைப்பை. முறம் என நிறைய.. . பயண வழிகாட்டிக்கூட அப்பொருட்களைச் செய்வதில் கைத்தேர்ந்தவராகவே திகழ்ந்தார். மட்டையைக் கிழித்து கண்மூடிக் கண் திறப்பதற்குள்  தோடு, கைசெயின், சங்கிலி, நெற்றியில் கட்டுகிற பட்டை, பெல்ட், தட்டான், வெட்டுக்கிளி என தயாரித்துவிட்டார். இன்றைய காலகட்டத்து இளஞர்களுக்கு அது அதிசயம். கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் எனக்கோ இது பழைய பாணி காரணம் நாங்கள் முன்பு விளையாடியதே இதுபோன்ற கைவினைப்பொருட்களைத் சொந்தமாகத்தயாரித்துத்தான். தென்னை மட்டையை மூன்று அல்லது இரண்டு பாகமாகப்பிரித்து சடைபோல் பின்னத்தெரிந்தால் போதுமே, எல்லாமும் அதற்குள் அடக்கம்தான்.


மிதக்கும் சந்தை










வியட்நாம் பயணமென்றாலே மிதக்கும் சந்தைதான் பலரின் சிந்தனைக்குள்  மின்னி மறையும். இன்றுகூட வியட்நாம் என்று இணையத்தில் தட்டினால், மிதக்கும் சந்தையினைப் படமாகப்போட்டுத்தான் அறிமுகம் செய்துவைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அச் சந்தை அங்கே மிகவும் பிரபலம்.

ஐநூறு ஆயிரம் ஆண்டு காலமாக எங்கெங்கோ இருக்கின்ற விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை வியாபாரம் செய்ய அதைப் படகில் ஏற்றிக்கொண்டு வழிநெடுக வசிக்கின்ற மக்களுக்கு வியாபாரம் செய்துவந்திருக்கின்றார்கள். படகில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்து சூழ்ந்துகொள்கிறார்கள். பஸ்போன்ற பேர்ரி மக்களை ஏற்றிக்கொண்டு வந்து அங்கே நிறுத்துகிறது. அந்த பேர்ரியில் அமர்ந்தபடியே, அங்கே வட்டமடிக்கின்ற சரக்குப் படகுகளை அழைத்து பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். படகு, மோட்டார் போட், பேர்ரி ஜெனரேட்டர் சத்தம், மக்கள் கூவும் சத்தம் என்று பேரிரைச்சலாக இருப்பதால், சரக்கை ஏற்றிக்கொண்டு வரும் வியாபாரிகள், படகின் நடுவில் ஒரு நீண்ட குச்சியினை ஊன்றி, அதில் அவர்கள் என்னென்ன காய்கறி பழங்களை வியாபாரம் செய்கிறார்கள் என்பதை உதாரணமாகக் காட்டி வரிசையாகக் கட்டி வைத்திருப்பார்கள். வாங்குபவர்கள் தங்களின் கைகளைப் பயன்படுத்திக்  எத்தனையாவது எண்ணில் உள்ள பொருளை வாங்க நினைக்கின்றார்கள் என்பதனை விரல்களின் மூலம் காட்டினால், வியாபாரிகள் பேர்ரியின் அருகிலேயே கொண்டுவந்து கொடுத்து பேரம்பேசி விற்பனை செய்கிறார்கள்.

பூக்கள் தொடங்கி இறைச்சி மீன் வகைகள், காய்கறிகள் என தொடர்ந்து உணவு காப்பிப் பலகாரங்கள் என சூடுபறக்க பிஸ்னஸ் பரபரப்பாக நடைபெறுகிறது. படகில் ஆவி பறந்தால் சூப் செய்கிறார்கள் அல்லது காப்பி கலக்குகிறார்கள் என்று அர்த்தம். நாம் அவர்களைக் கொஞ்ச நேரம் உற்று நோக்கினால் துடுப்பைக்கொண்டு படகை நகர்த்தி நம்மிடம் வந்து ஆவி பறக்கின்ற காப்பியை கைகளிலேயே கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். வாங்குவதற்கு ஆசையாக இருந்தபோதிலும், பயணவழிகாட்டி, பேர்ரியில் ஏறும்போதே சொல்லிவிட்டார்.. ஆற்றின் நீர் அசுத்தம் நிறைந்தது.  இவர்களால் ஆறு மாசுபட்டுக்கிடக்கிறது. அந்த நீரிலேயே அனைத்து வேலைகளையும் காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, அதைக்கொண்டே காப்பி தேநீர் பலகாரங்கள் சூப் போன்றவைகளையும் செய்வார்கள். வாங்கிச்ச்சாப்பிட்டுவிட்டு உற்சாகப் பயணத்தை பாழ்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று எச்சரித்துவிட்டதால், பார்வையாளராக மட்டும் நாங்கள் இருந்தோம்.

காணக்கிடைக்காத அற்புத காட்சி அது. சிலர் காலத்திற்கேற்ப மாறாமல் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக நிலத்தில் வீடுகளைக் கட்டாமல் படகிலேயே அப்படியே மிதந்தமேனியாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள் என்கிற ஆச்சரியமூட்டும் தகவலையும் பகிர்ந்துகொண்டார் பயண வழிகட்டி. கல்யாணம். குழந்தைப்பிறப்பு. குடும்பம் நடத்துதல் என எந்த ஒரு பிக்கல் பிடுங்கள் இல்லாமல் பேராசையற்ற மக்களாக நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று சொன்னபோது, வீடுபோல் கூடாரம் அமைத்திருந்த ஒரு படகிற்குள் நடப்பவற்றில் என் கவனம் சென்றது.

துணிமணிகளை பெண்பிள்ளை  உலரப்போடுகிறாள். தாயோ பாட்டியோ தெரியவில்லை மீன்களை ஆய்ந்துகொண்டிருந்தார். பின் பக்கம் ஒரு பையன் வாளியின் மூலமாக படகின் உள்ளே புகுந்த நீரை வெளியே வாரி வாரி இரைத்துக்கொண்டிருந்தான். இதை ஓவியமாகத்தீட்டினால் அழகான கலைப்படைப்பு ஒன்று உருவாகியிருக்கும். கேமராவோ மகனிடம். கைப்பேசியோ கணவனிடம். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண வாழ்க்கைச்சூழல். ஆனால் எனக்கோ அது கலை. ஜென். கண்களால் சிந்தைக்குள் க்ளிக் செய்துகொண்டேன். சுவாரஸ்யமான அனுபவம். காணக்கிடைக்கா காட்சிகள் அவை. எப்படியெல்லாம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது புது அனுபவமாகவே இருந்தது எனக்கு.

தொண்ணூறுகள் வரை பரபரப்பாக இருந்த இந்த மிதக்கும் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகக் கூறி குறைபட்டுக்கொண்டார் பயணவழிகாட்டி. நாடு வளர வளர், நாலாபக்கமும் நவீன பாலங்கள் கட்டப்பட்டவுடன், மக்கள் ஆற்றோரங்களுக்கு வருகை புரிவதைக் குறைத்துக்கொண்டு வண்டி வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருட்களை தங்களின் அன்றாடத்தேவைகளுக்கு வாங்கிக்கொள்கின்றார்களாம்.  அலைச்சல் குறைவு நேராக வீட்டின் வாசலிலேயே விற்பனைக்குக் கொண்டுவந்தும் கொடுக்கின்றார்களாம். இதனால் வருங்காலத்தில் நாட்டின் அடையாளமாகத்திகழும் மிதக்கும் சந்தை இல்லாமலும் போகலாம் என்கிறார் பெருமூச்சுடன்.

உணவு..

இதுதான் பெரும்பிரச்சனை நமக்கு. நமக்கு என்றால் இந்துக்களுக்கு. நாம் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களாக இருப்போம். இல்லையேல் நடப்பது ஊர்வது பெரியது எல்லாம் சாப்பிட மாட்டோம். கோழி இல்லையேல் மீன் தான். ஆனால் அங்கே தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உணவில் பன்றி இறைச்சியினைச் சேர்த்துக்கொள்கிறார்கள். சைவசாப்பாடு கிடைப்பது குதிரைக்கொம்பு. சைகோன் ஹாலால் உணவகங்களில் கிடைக்கலாம் ஆனால் அதைத்தேடி நாம் போகவேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் கிடைக்கும் மற்றபடி உணவிற்கு நாயாய் அலைய வேண்டி வரும்.


மீன் உணவை உண்ணலாம் என்றால், மீனைப்பிடித்து நேராக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுத்து பரிமாறிவிடுவார்கள் போலிருக்கு. ஒரு வித கவுச்சி வாடை குமட்டுகிறது. கொஞ்சங்கூட வாசனையே இல்லை சமையல்களில்.

காய்கறிகளை சமைக்காமலேயே வைத்துவிடுகிறார்கள். பொரித்த மீன் அருகில் எழுமிச்சையை துண்டாக வெட்டி வைத்துவிடுகிறார்கள். அரிசி மாவில் செய்யப்பட்ட  அப்பம், காகிதம் போல் மெலிதாக உள்ளது அதையும் கூடவே வைத்துவிடுகிறார்கள். இது எதுக்கு? என்றால், பதில் பேசமலேயே மீனைப் பிய்த்துகாகிதம்போன்ற அப்பத்தில் வைத்து பச்சையாக உள்ள காய்கறி கீரைவகைகளை அதில் வைத்து, இடியப்பம்போன்ற ஈரமான நூடூலையும் அதில் அடுக்கி, அதன் மேல் எழுமிச்சஞ்சாற்றைப் பிழித்து அதைச் சுருட்டி நம்மிடம் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அதுதான் சாப்பாடாம். ! அதன் பிறகு சூப். கொஞ்சம் சோறு. வாட்டிய இரால். வாட்டிய பன்றி இறைச்சி.

மேஜை நிறைய உணவு ஆனால் என் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். கணவர் நல்லாருக்கு நல்லாருக்கு என்று போலியாய் சுவைத்துக்கொடிருந்தார். மகள் கடமைக்கு சூப்’ஐ கொஞ்சம் சுவைத்தாள். செய்துவைத்த சுருள் அப்பத்தை நான் கஷ்டப்பட்டு விழுங்கினேன்.

சாப்பாடு நமக்கு ஒத்துவராது. நாம் அதற்குச் சரிபட்டுவர மாட்டோம்.

காப்பி ஆஹா அற்புதம். ப்ளாக் காப்பி குடி, பிரமாதமென்று என் சீனத்தோழிகள் என்னிடம் கூறி அனுப்பினார்கள். முடிந்தால் காப்பி வாங்கிவா. வியட்நாம் காப்பி ஆஹா ஓஹோ அருமை. என்றார்கள். நிஜமாலுமே காப்பி பிரமாதம். செல்லும் இடமெல்லாம் காப்பியை கலக்கிக்கொடுக்கச்சொல்லி உணவிற்கு பதில் இரவுபகல் பாராமல் காப்பியை அருந்தி அகமகிழ்ந்தேன்.
எப்படியாவது காப்பி வாங்கவேண்டுமென்றும் காத்திருந்தேன்.

பயணவழிக்காட்டியும், இங்கே வந்தவர்களின் கவனத்தை காப்பி அதிகம் கவரும். ஆக, காப்பிப்பருக மறக்கவேண்டாம், என்று சொல்லி எங்களையெல்லாம் ஒரு பிரமாண்ட காப்பிக்கடைக்கும் அழைத்துச்சென்றார்.

அங்கே பயணிகளுக்கு இலவசமாகக் காப்பியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் மட்டுமல்ல நிறைய பயணிகள் அங்கே. நெரிசலில் முட்டிமோதிக்கொண்டிருந்ததால் ஒரு வரவேற்பு அறையில் சிலரை கொஞ்சநேரம் அமரவைத்தார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.

அங்கே தொலைக்காட்சியில் சிறந்த காப்பி எப்படித்தயாரிப்பார்கள் என்பதை அக்குஅக்காகக் காண்பித்தார்கள்.

கூண்டில் அடைக்கப்பட்ட பல மூசாங் பூனைகளிடம் பழுத்த காப்பிப்பழங்களைக் கொட்டுகிறார்கள். அப்பழங்களை அவைகள் தேர்ந்தெடுத்து உண்கின்றன. உண்டபிறகு மலம் கழிக்கின்றன. புழுக்கைகளாக `நாய் பீ’ மாதிரியான வடிவத்தில் அங்கே கிடத்தியிருக்கின்ற தட்டில் விழுகிறது அவைகளின் மலம். மறுநாள் அதைச்சேகரித்து சிறந்த காப்பித்தூளாக மாற்றுகிறார்கள்.


இதைப்பார்த்தபிறகும் நான் காப்பிக்குடிப்பேனா.?

`யம்மா, மலத்தையும் விட்டுவைக்கலையா இவர்கள்.? என்று மகள் முனகிக்கொண்டே பஸ் ஏறினாள்.

மதமற்றவர்கள்.

“வியட்நாமில் மதம் இல்லை. எங்களுக்கு மதம் எப்போது உதவும் தெரியுங்களா.? அரசாங்க வேலை வாய்ப்பின்போதுதான். அங்கேதான், ` நீ என்ன மதம்?’ என்று பூர்த்தி செய்கிற பாரத்தில் கேட்டிருப்பார்கள். அவ்விடத்தை எதையாவது கொண்டு நிரப்பவேண்டும் என்பதற்காக வழிவழியாக கடைபிடித்துவந்த மதம் என்ற ஒன்றினைப் பயன்படுத்திக்கொள்வோம். மற்றபடி மதம் எங்களுக்கு எதற்கும் உதவுவது கிடையாது. பொதுவாகவே நாங்கள் மதமற்றவர்கள். அதனால்தான் இங்கே கோவில்கள் குறைவு.”

பயணவழிகாட்டி பகிர்ந்துகொண்ட தகவல்..




கசப்பான அனுபவம் -

மொத்த வியாபாரக்கடையில் துணியெடுக்கச்சொல்லி அந்த கடை முதலாளி எங்களை வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.

கைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தாள். ஏழை வறுமை ப்ளீஸ், என்று மன்றாடினாள். தப்பிக்கமுடியாத அளவிற்கு எங்களைப் பிடித்துவைத்துக்கொண்டாள். கேட்டவிலையில் இருந்து பாதிக்கும் மேல் குறைத்துக் கேட்டும் முடியாது என்று சொல்லி, இறுதியாக சரி என்று அதே விலைக்கும் வந்தாள். அதாவது ஆடை தைக்கின்ற  தையற்கூலியுடன். மூன்று மணிநேரத்திற்குள் தைத்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தாள்.  இரவு பத்துமணிக்குள் ஹோட்டல் அறைக்கே கொண்டுவந்து கொடுக்கின்றோம் என்று வாக்கு கொடுத்தாள். சரியென வியட்நாம் சுடிதார்.. (பார்க்க அப்படித்தான் இருக்கும் அவர்களின் பாரம்பரிய உடை) ஒன்றை மகளின் அளவிற்கு தைக்கக்கொடுத்து, தங்கும் அறையின் எண், தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் கொடுத்து, பணத்தையும் முழுமையாகச் செலுத்திவிட்டு, பத்து கிலோமீட்டருக்கு அப்பாலில் உள்ள ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

இரவு பதினொன்றாகியும் ஆடை வரவில்லை. ரிஷப்பஷனில் கேட்டபோது, ஏமாற்றமாட்டார்கள் வரும். கவலைவேண்டாமென்று ஹோட்டல் ஊழியர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். அழைப்பு வந்தது. ஆடை வந்துவிட்டது என்று சொன்னார்கள். கீழே இறங்கி அறைக்குக் கொண்டுவந்து எடுத்துப்பார்த்தால், ஒரு ஜோடியாக இல்லாமல் அந்தக் கலாச்சார உடையின் சட்டை மட்டுமே இருந்தது அதில்.

நான் அவளின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்திருந்ததால், அந்த இரவே அவளுக்குத் தொலைபேசி அழைப்பு கொடுத்து கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

காலையில் நன்கு அங்கிலம் மலாய் என்று பேசியவள் இரவில் மொழி தெரியாததுபோல் நாடகமாடினாள். சோர்ந்துபோனேன். ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கிற உளைச்சலில் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தேன்.


உடம்புப்பிடி/மெனிக்ஃயோ./பெடிக்ஃயோ

தயவுசெய்து செல்லாதீர்கள். அதிகவிலை. குறைந்தவிலை என்று சொல்லி உள்ளே அழைத்துச்சென்று டிப்ஸ் என்கிற பெயரில் இன்னும் இவ்வளவு கொடுங்கள், என்று கேட்டு வாங்குவார்கள். எங்கள் விஷயத்தில் எங்களை உடம்புப்பிடி பார்லரில் விட்டுவிட்டு பாருக்குச்சென்றுவிட்டார் கணவர். எல்லாம் முடிந்தபிறகு இன்னும் இவ்வளவு கொடுங்கள் என்று கேட்கத்துவங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி, கால்பிடித்துவிட ஒரு ஆள். உடம்பு பிடித்துவிட ஒரு ஆள் ஆக மொத்தம் இரண்டுபேருக்கு இவ்வளவு டிப்ஸ் என்று கேட்டு வாங்குகிறார்கள். எங்களிடம் பணமில்லை என்றால் கணவரை வரச்சொல்லுங்கள் என்கிறார்கள். அவர் வந்து ஏற்கனவே ஆறாவது மாடியில் பணம் செலுத்திவிட்டோம் இன்னும் என்ன இங்கே? என்று கேட்டதிற்கு, அங்கே மசஜுக்குப் பணம். அது முதலாளிக்கு. டிப்ஸ் எங்களுக்கு. என்றார்கள். அதுவும் கசப்பான அனுபவமே.



 நடக்கவேண்டும்..

பயணங்களில் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நல்ல காலணிகளைப் பயன்படுத்துங்கள். இல்லையேல் பயணம் பாழாகும். சைக்கிள் சவாரியெல்லாம் செய்யச்சொல்வார்கள் கிராமங்களைச் சுற்றிப்பார்க்க. ஆக தோதான ஆடைகளையும் அணிந்து செல்லுங்கள். புடவை, வேட்டி எல்லாம் வேண்டாம்.  

அப்படி இப்படி சில மைனஸ்கள் இருப்பினும், வியட்நாம் பயணம் சிறப்பான பயணமாகவே எங்களுக்கு அமைந்தது. விட்டுவர மனமில்லை அந்த ரம்மியமான சூழலை. மீண்டும் செல்வேன் வாய்ப்புக்கிடைத்தால்...