வியாழன், ஆகஸ்ட் 08, 2013

புரியவில்லை

ஒரு சம்பவம் சொல்கிறேன்...

என் தோழியும் அவளின் தோழியும் வெளியே சென்றுள்ளனர். இவளின் ஐந்து வயது மகனையும் அழைத்துக்கொண்டு. மகன் (குண்டுப்பையன்) பிடிவாத குணம் கொண்டவன். மற்றவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்பவன்..

வழிநெடூக மகன் இருவரிடமும் வம்பு பண்ணிக்கொண்டே வந்துள்ளான். `அதுவேண்டும் இதுவேண்டும்’ என்று. அதை அவர்கள் வாங்கிக்கொடுக்காதபோது, மற்றவர்முன்னிலையில் அழுது கத்திப்புரண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றான்.

அவ்வேளையில் அவனுக்கு யாரேனும் எதாவது தொந்தரவு செய்தால், அவன் உடனே அவர்களைத் தாக்கத்துவங்கிவிடுவான்.. குண்டாக இருப்பதால் அடி இடி மாதிரி விழும். என் தோழி கூட பலநாள் அவனிடம் அடிவாங்கியுள்ளாள்.

இவனைச் சமாளிப்பதற்காக, கூட வந்திருந்த அவளின் தோழி அவனுக்கு ஒரு சாக்லட் வாங்கித்தந்துள்ளார். சாக்லட்’ஐ விரைவாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சாக்லட் வேண்டுமென்று கேட்க, சாக்லட் வாங்கித்தந்த தோழி அவனை திட்டியுள்ளார்.

`என்ன நீ இப்படி தொந்தரவு செய்யும் பையனாக இருக்கின்றாய்.? நல்லபடி இருந்தால், ஆண்டி மீண்டும் உனக்கு சாக்லட் வாங்கித்தருவேன்.’, என்றதும், அவனுக்குக் கோபம் வர, பொதுவில் பலர் முன்னிலையில் தோழியை பலங்கொண்டு தாக்கத்துவங்கிவிட்டான். தாயிற்கும் அடி உதை. இதை சற்றும் எதிர்ப்பாராத தாயும் தோழியும் அரண்டுபோய் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துவந்துள்ளனர்.

வரும் வழியில் வாங்கியப்பொருட்களை ஒவ்வொன்றாக காருக்குள் அங்கேயும் இங்கேயும் விட்டெரிந்து தொடர்ந்து ரகளை செய்து காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டே, போராடி வீடு வந்து சேர்ந்துள்ளார்கள்.

ஏன் இப்படி சில குழந்தைகள்.? என்ன பிரச்சனையாக இருக்கும்? தாயும் தகப்பனும் அற்புத மனிதர்கள்...