வியாழன், ஜூலை 11, 2013

வாகன நெரிசல்

உள்ளூரிலேயே சுற்றிக்கொண்டு, எப்படிச்செல்வதென்று பாதிவழியிலேயே நின்று பாதை கேட்ட ஆள் நான்.

இன்று காலையில் படுபயங்கர வாகன நெரிசல்.
எப்படி எங்கே நுழைந்தாலும் நெரிசல் நெரிசல் நெரிசல்தான்.

பத்து நிமிடத்தில் அலுவலகம் செல்கிற நான், இன்று காலை முக்கால் மணி நேரம் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே மாட்டிக்கொண்டேன்.

பல வாகனங்கள் ஒன்றாக வரிசையாக  எதோ ஒரு சாலைக்குள் நுழைவதைப்பார்த்த நானும், அவர்களின் பின்னால் நுழந்துவிட்டேன். நெடுதூரம் கார்கள் வரிசையாக சென்று நாளாபக்கமும் பிரியவே, நான் நடுரோட்டில் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு எங்கே செல்வதென்று எனக்குப் புலப்படவில்லை. அப்போது நான் எந்த இடத்தில் உள்ளேன்.! என் அலுவலகத்திற்கு எப்படிப்போவது.? என்றும் எனக்கே விளங்கவில்லை.

இது என்ன சாலை? எங்கே விளம்பரப்பலகை? என தேடவும் ஆரம்பித்தேன்.

சரி போவோம். எங்கேயாவது சயின்போர்ட் தெரிந்தால் அதன்படி செல்லலாமே, என்று மனம்போனபோக்கில் என் காரும் போனது.
ஒன்றும் புலப்படவில்லை. தூரத்துல் ஒரு பெரிய தண்ணி டாங்கி தென்படவே, அது என்ன தண்ணீ டாங்கி என்று கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்த்தேன்.

`பூச்சோங் பெர்மாய் தண்ணீர் தொட்டி’ என்று மலாய் மொழியில் எழுதியிருந்தது.

அங்கேயே ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, தம்பிக்கு அழைத்தேன். (கணவருக்கு வேண்டாம்- திட்டுவார்)

“டேய், நான் இங்கே பெர்மாய் தண்ணீ டாங்கி முன்னே நிற்கிறேன். எப்படி என் அலுவலகத்திற்குச்செல்வது?”

“அங்கே ஏன் போனே?”

“சரியான ஜேம்டா.. எங்கே போனாலும் நகரமுடியல..”

“இன்னிக்கு எல்லா இடத்திலேயும் ஜேம்தான். கூச்சாய்லாமாவில் பயங்கர கார்விபத்தாம்.! நீ ஏன் பெர்மாயில் போய் மாட்டிக்கிட்ட.? அங்கே இன்னும் அதிகமான ஜேம் ஆச்சே.”

“இல்லியே..கார்களே இல்லை.. நான் மட்டும்தான் இருக்கேன்.”

“அப்படியா, இன்னும் கொஞ்சதூரம் போ அப்புறம் தெரியும்.!! அப்படியே நேரா போ... ஒரு ஷாப்பிங் complex  வரும்.. அதைத்தாண்டி நேரா போ, நீ போர இடம் வந்திடும்.. அதுக்கப்புறம் உனக்கே தெரியும் எப்படிப்போகவேண்டுமென்று.. ஒகேவா?”

“ஹம்ம்ம், ஒகே.”

காரை செலுத்தினேன். கொஞ்சதூரம் சென்றவுடன் அங்கேயும் பயங்கர நெரிசல். கார்கள் நகரவேயில்லை. நத்தைபோல் ஊர்ந்தன. பெட்ரோல் எல்லாம் தீர்ந்துபோய் அதுவேறு சிக்னல் காட்டிக்கொண்டிருந்தது.

தம்பி சொன்ன ஷாப்ப்ங்க கம்லெஃக்ஸ் வந்தது.  அவன் `நேராக போ’ என்றான் ஆனால் பல கார்கள் வலது பக்கம் சென்று கொண்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் நானும் வலது பக்கம் செல்லத்துவங்கிவிட்டேன். கொஞ்சதூரம் சென்றவுடன் மீண்டும் குழப்பம். பாதை புரிபடவில்லை... எப்படி? 
அழைத்தேன் தம்பியை. எடுத்தான். விவரத்தைச்சொன்னேன்.

“ஏய்ய்ய்ய்ய்... (எரிச்சலுடன்) நான் உன்ன எந்த ரோட்டை எடுக்கச்சொன்னேன், எங்கே போனே நீ யீயீயீ? திரும்பு திரும்பு.. யூ டெர்ன் எடுத்து மீண்டும் அந்த ரவுண்டபோர்ட்டுக்கே வா. நான் சொன்னபாதையிலேயே போ.. காலையிலே உயிரை வாங்கிக்கிட்டு..!” முனகியபடி தொலைபேசியை வைத்தான். 

திரும்பி வந்து, அந்த சாலைவழியாக நுழைந்து, ஒன்பதுமுப்பதுக்குத்தான் ஆபிஸ் வந்தேன். 

இதிலிருந்து என்ன தெரிகிறது? 

புதிய தேவதையைவிட பழகிய பிசாசே மேல். 
 

என்ன எழவுடா இது.?

தேர்தல் முடிந்து இருமாதகாலம் ஆகப்போகிறது.

தேர்தல் குறித்த கணிப்பு, முடிவின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. தங்களைக்கவர்ந்த தலைவர்கள் பதவியில் இல்லாமல் போன ஆதங்கம்.! எலெக்‌ஷன் கமிஷன் செய்துள்ள துரோகம்.! சிலபலரை பதவியில் இருந்து இறக்கப்போடப்படும் கோஷம்.! மாபெரும் கூட்டனிக்கட்சியான ம.சீ.சா எந்த ஒரு பதிவியையும் ஏற்க மறுத்துள்ள அதிரடி நடவடிக்கை.! எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து சிறையில் அடைப்பது.! தேர்தலில் நடந்த மோசடிகளுக்கு ஆதாரங்களைத் திரட்டுவது.! தேர்தல் முடிவுகள் பிடிக்காமல் கோஷம் போடுபவர்கள், நாட்டை விட்டு ஓடுங்கள் என்கிற வெட்டி எச்சரிக்கை..! நாடு உங்கப்பனுடையதா? இல்லை, இருப்பினும் அது உங்கப்பனுடையதுமில்லை என்கிற காமடி கோஷங்கள்.!

பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுதிரட்டி பேதங்களற்ற ஒரே கட்சியாக நியமிக்க முயல்வது.! எங்களுக்கு இனக்கட்சியே வேண்டாம், ஒரே இனம் அதுதான் `பங்சா மலேசியா’ என்கிற அதிரடி முழக்கங்கள்!.  ஐம்பத்தாறு ஆண்டுகள் அடிமைப்பட்டது போதும், ஊழல் ஆட்சியினை வீழ்த்துவோம் என்கிற வீர வசனம்.!

நாட்டின் தொடர் மேம்பாட்டுத்திட்டதிற்கு, ஒரே ஆட்சியின் கீழ் செயல்படுவதுதான் சாலச்சிறந்தது. 2020 நோக்கிப்பயணிக்கும் நாம், ஏன் தீய சக்திகளின் தூண்டுதலில் சிக்கிக்கொள்ளுதல் வேண்டும்.!? வளர்ந்த நாடு என்கிற அங்கீகாரம் நம் நாட்டிற்குக் கிடைத்துவிட்டது அதைச் சீர்குலைக்கின்ற நோக்கத்தில் தீட்டப்படுகின்ற அனைத்துத் திட்டங்களுக்கும் சமாதி கட்டுவோம், என்கிற சூலுரை. இருபத்திரண்டு ஆண்டுகள் நாட்டை ஆண்ட, துன் டாக்டர் மஹாதீரே நாட்டையும் மக்களையும் கெடுத்த பாவி.! ஏழைகளுக்கு உதவுவதற்கு ஏன் ஒர் இனத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும் எல்லா இனத்திலுமே ஏழைகள் உள்ளனரே, அவர்களுக்கு இவ்வளவு நாளாக இந்த அரசாங்கம் என்ன செய்தது? கூட்டனிக்கட்சிகள் தொடைநடுங்கிகள், வாய் பேசாமௌனிகள்.! `சீனர்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட பத்திரிகையின் லைசன்ஸ் ஏன் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.?

தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டிய பத்திரிகைகளை ஏன் பறிமுதல் செய்தீர்கள்? சீன தமிழ் பள்ளியை மூடவேண்டுமென்று சொல்வது இனவாதமில்லையா? சீனர் ஒருவர் மைக் பிடித்து மேடையேறி தேர்தலின் மோசடிகளைப் பற்றிப் பேசினால் அது இனவாதமா? பொதுமேடையில் மைக் பிடித்து, இந்து மதத்தை இழிவு செய்தவன் இன்னும் உலவுகிறானே.!? அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்த கல்லூரி மாணவனை போலிஸ் பிடித்துச்செல்கிறது.! அமைதிப்பேரணியில் குண்டர்களின் அட்டகாசம், போலிஸ் வாளா இருந்தது.! பெண் வழக்குரைஞரின் வயிற்றில் உதைத்தான் போலிஸ்..! அமைதிப்பேரணியில் போலிஸ் அராஜகம்.! ம.இ.கா, எங்களின் முன்னோர்களை ஏமாற்றியதுபோதும், இனி நாங்கள் ஏமாறுவதாக இல்லை.! ம.சீ.சவிற்கு வேலை போய் பல ஆண்டுகள் ஆகின்றன இருப்பினும் அவர்கள் ஆள் இல்லா டீக் கடையில் தவ் ஃபூ பா செய்துகொண்டிருக்கின்றார்கள்.! அம்னோ என்கிற கட்சி அம்னோவாக மட்டுமே இருக்கட்டும், எதற்கு பாரிசான் என்கிற போர்வையில் கண்கட்டி வித்தை காட்டுகிறது.!? மலேசிய மக்கள் அதிக அரசியல் பேசுவதைத் தவிர்க்கவேண்டும், கடமைக்கு முன்னுரிமை கொடுங்கள் - பிரதமர் எச்சரிக்கை.!  இணையத்தலத்தில் வரும் அனைத்தும் உண்மையல்ல, அவைகளைச் சீர்தூக்கிப்பாருங்கள்.........

இப்படி இன்னும் பலவிதமான சாடல்கள், எச்சரிக்கைகள், அறைகூவல்கள், செய்திகள், குறுந்தகவல்கள் மின்மடல்கள் என எழுத்துவடிவில், மேடைகோஷங்களின் வழி, இணைத்தில் வழி, சமூகவலைத்தலங்களின் வழி, வானொலி தொலைக்காட்சி வழி தொடர்ந்து வந்தவண்ணமாகவே உள்ளன.

அரசியல் குறித்த கட்டுரைகள் எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பார்கள்.  அதற்கு பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அங்கே சொல்லப்பட்ட  செய்திகளை ஆதாரங்களாகத்திரட்டி, இங்கே இப்படி நடந்தது, அங்கே ஏற்கனவே அவர் அப்படிச்சொன்னார், நடந்தது ஒன்று மேடை முழக்கம் ஒன்று, வாக்குகள் காப்பாற்றப்படவில்லை, நடந்தது என்னன்னா? வரலாறு, பார்லிமெண்ட் பேச்சு..!!  போன்ற  தகவல்களையெல்லாம் ஆதாரமாகத்திரட்டி அல்லது இணையத்தலங்களை சாட்சியாகக்கொண்டு, அங்கே சென்று சில விவரங்களை வாசித்துச் செய்திகளைச்சேகரிப்பது, அல்லது பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கின்ற பழைய பத்திரிகைகள், இதழ்கள், சரித்திரப் புத்தகங்கள் என தகவல்களைத் திரட்டுவது, இதுவும் இல்லையென்றால் விவரம் தெரிந்தவர்களை தொலைபேசியின் வழி அழைத்து இது எதனால் நடந்தது.? அது எதனால் நடந்தது? போன்ற விவரங்களைக் கேட்டுவாங்கியாவது  அரசியல் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார் செய்துவிடுவார்கள்.

என்னைப்பொருத்தவரையில், அரசியலைப் பற்றித்  தெரிந்துகொள்வதற்கு  ஆய்வுகள் தேவையே இல்லை. நடப்புச்சூழல் என்ன சொல்கிறது? அந்த நடப்பு நமக்கு என்னமாதிரியான இன்னல்களையும் அசௌகரியங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குச்சம்பந்தப்பட்டவர் யார்? என்ன நடக்கிறது நாட்டில்.? போன்ற நடப்புச்சூழல்களில் தீர்க்கப்பார்வை இருந்துவிட்டால் அரசியல் சிந்தனை தானாக வந்துவிடும்.

இந்தத் தீர்க்கப்பார்வை அனைவருக்கும் வருமா? வராது. அதுவும் மலேசியத்தமிழ்ர்களிடத்தில் அதை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம். ஒரு காரியம் நடக்கிறதென்றால், அது ஏன் எதனால் நடக்கிறது என்கிற தெளிவே இல்லாமல், எருமை மாட்டின் மீது மழை பெய்வதைப்போல் தேமே’என்று இருக்கின்றார்கள். எங்கேயோ காத்தடிக்கிறது, எங்கேயோ மழை பெய்கிறது, நமக்கென்ன வந்தது என்கிற சிந்தனையிலே வாழ்ந்து, சுற்றியிருப்பவர்களை தினம் தினம் சாகடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நடப்பு நிகழ்விற்கு அதிக அளவில் மக்கள் அலையலையென திரள்கின்றனர் என்றால் அதில் எதோ ஒரு சிறப்பு இருந்திருக்கவேண்டும்தானே.! வேலைவெட்டியில்லாதவர்கள் ஒன்றுகூடி அராஜகம் செய்கிறார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி விட்டுச்சென்றால், என்ன சொல்ல.!

தனிமனிதனான ஒருவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, மாதம் முடிந்தவுடன் சம்பளம் வருகிறது. ஆக, அவன் ஒருவனின் வண்டி சரியாக ஓடுகிறதென்றால் அரசியல் நடப்புகள் பற்றி எனக்கு என்ன கவலை என்கிற அவனது மெத்தனப்போக்குச் சிந்தனை மாறவேண்டாமா.?

இரவும் பகலும் படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்ற உனது அப்பாவிப்பிளைகளுக்கு யூனிவர்சிட்டியில் இடம் கிடைக்காமல், கல்வியமைச்சு, அரசியல் தலைவர்களின் வீடு என்று அலைந்திருக்கின்றாயா?  நீ கேட்கிற கோஸ் ஒன்று அவர்களாக (அரசாங்கம்) நாயிற்கு எலும்புத்துண்டு போடுவதைப்போல் கொடுக்கின்ற கோஸ் ஒன்று என்று உன் மகனோ மகளோ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சந்தித்துள்ளீரா? ஏழையாக நாம் இருந்தாலும் நமக்கு வீடுகள் வாங்குவதற்கு சிறப்புச்சலுகை கிடைக்காமல் (bumiputra sahaja) வீடே வாங்க முடியாமல் காலம் முழுக்க புறம்போக்கு நிலத்திலேயே குடியிருந்த அனுபவம் இருந்திருக்கா உனக்கு? போலிஸ் தடுப்புக்காவலில் குற்றமென்று நிரூப்பிக்கும் முன்பே போலிஸ்காரகள் மூலமாக துன்புறுத்தப்பட்டு மரணதண்டனைக்குள்ளான உன் நண்பர், மகன், சகோதரன், உறவுகள் என யாரேனும் உனக்கு உள்ளனரா? பணக்கார மலாய் மாணவன் இலவச கல்வியில் உயர் படிப்பிற்குச்செல்லுகையில், அதைவிட அதிக மதிப்பெண் வாங்கிய ஏழைத்தமிழன் ஒருவனுக்கு எதுவுமே கிடைக்காமல் படித்தது போதுமென்றெண்ணி பாதியிலே வேலைக்குப்போன ஒருவனை நீ சந்தித்ததில்லை? வீட்டை விற்று, நகைகளை விற்று, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, ஒரு வேலைக்குப் பலவேலைகள் செய்து கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்கவைத்து, அவர்கள் படித்துமுடித்தபின் நிம்மத்திப்பெருமூச்சு விடுகிற தருணத்தின் போது, வெளிநாட்டில் இவர்கள் படித்த அந்தக் கல்லூரியை அரசாங்க அங்கிகாரத்திலிருந்து நீக்கிவிடுகிற நிலை வந்துள்ள உன் உறவுகளை சந்தித்திருக்கின்றாயா?

விலைவாசி ஏற்றத்தின் காரணமாக நாலாயிரத்தி ஐந்நூறு நிங்கிட் சம்பளம் வாங்குபவனே முப்பத்தாறு ரிங்கிட்தான் சேமிக்க முடியுமென்கிற ஆய்வு ஒன்றினை எதிர்க்கட்சி தமது இணைய ஏட்டில் இணைத்துள்ளதே, வாசித்தாயா அதை? தமிழ் பள்ளி தமிழ் பள்ளி என ஓயாமல் போராடிக் கொண்டிருக்கின்றார்களே, தமிழ்ப்பள்ளியில் படித்து முடித்தபின்பு அடுத்தகட்ட நகர்தலுக்கு அந்தத் தமிழ் தேர்ச்சி உதவி செய்யவில்லையே, அது குறித்த புரிதல் இருக்கா உனக்கு? தமிழிலேயே கற்று பல்கலைக்கழகம் வரை சென்றாலும் அந்தப்படிப்பிற்கு வேலைவாய்ப்புகள் என்பது குதிரைக்கொம்பு என்பது அறிந்ததில்லையா நீ?  இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தமிழர்களையும் ஜாதிவாரியாக, இனவாரியாகப் பிரித்து (மலையாளி/தெலுங்கு/கன்னடர்) அவர்களின் சங்கங்களுக்கும் தலைமை தாங்கி உரமிடும் அரசியல் தலைவர்களைச் சந்தித்ததேயில்லையா நீ?  நாம் நமது ஊதியத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, ஆனால் வருடம் தவறாமல் வருமானவரி செலுத்துகின்றோமே, அந்த வரியில் எத்தனை பிரமாண்டமான சொத்துகளை வாங்கிக்குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் தலைவர்களைப் பற்றி இதுவரையிலும் கேள்விப்பட்டதில்லையா?  சுங்கைத்துறை அதிகாரிகளால் விசாரிக்க அழைக்கப்பட்ட ஒர் எதிர்க்கட்சி உறுப்பினரை அக்கட்டத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்தபோது அவரின் மனைவி, ஒரு மாத கர்ப்பிணி. உனக்கு இதுபோன்ற சூழல் வந்திருந்தால்? இலக்கியம் என்கிற பெயரில் அரசியல் தலைவர்களை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் கொட்டமடிப்பதை உணர்வுப்பூர்வமாக யோசித்ததுண்டா?......

இன்னும் இருக்கின்றது, இதற்கு மேலும் யோசித்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும். அரசியல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு இந்த சான்றுகள் போதுமென்று நினைக்கின்றேன்..

ஓட்டுரிமை என்றால் என்னவென்று தெரியாமல் கூட பல தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது இன்னுமொரு வேதனை.

ஒரு சம்பவம், வாக்களித்த மறுநாள் வேலை. சில இடங்களில் பொதுவிடுமுறையேயானாலும் எங்களுக்கு வேலை. வேலைக்கு வந்த நான் பல சம்பவங்களால் அதிர்ந்துபோனேன்.

பலர் ஓயாமல் தேர்தல் முடிவுகள் பற்றிய ஆதங்கத்திலேயே மூழ்கியிருந்தார்கள். வருகிற கஸ்டமர்களும் தேர்தல் முடிவில் திருப்தியில்லை என்றே புலம்பிக்கொண்டிருந்தார்கள். சீனர்கள் சிலர் ஆவேச அரசியல் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.  நம்மவர்களும் சிலர் சேவை மையங்களைத் திறக்கவிருப்பதாகக் கூறி, இதை கொஞ்சம் டைப் செய்துகொடு, அதை கொஞ்சம் எடிட் செய்துகொடு என, என்னை வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள். இனி எங்களுக்கு நடப்பு அரசாங்க உதவிகள் தேவையில்லை. நாங்களே ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்யப்போகிறோம் என்கிற ஆர்வக்கோளாறு `பொறம்போக்கு’ வசனங்கள் ஒருபுறமென ஒரே அலப்பரைதான்.

இங்கே வேலை செய்கிற நம்மவர் ஒருவர் என்னிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். அவரின் பேச்சு என்னை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பேச்சு இதுதான்..

`என்னங்க ஓட்டு ஓட்டு.. எல்லாம் திருட்டு. இந்த ஆளுங்கட்சி எப்படி ஜெய்க்கிறாங்க தெரியுமா? ம.இ.கா உதவியுடன்தான். ஏன்னா ம.இ.கா ஒரு கேங்ஸ்டர் அரசியல் கட்சி. அந்த கேங்ஸ்டர் அரசியல் கட்சியால் மக்களை உருட்டி மிரட்டி பாரிசானுக்கு ஓட்டுப்போடவைத்து விடுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். நாம் எப்படி தலைகீழாக நின்றாலும் பாரிசான்தான் ஜெய்க்கும். எங்களுக்கு தெரியும், அவர்கள் நிறைய இடத்தில் கேங்ஸ்டர்களை இறக்கி ரெடியாக வைத்துவிட்டார்கள்.  தோற்றுப்போயிருந்தால், ம.இ.காவுடன் சேர்ந்து ரௌடித்தனம் செய்து சீனர்களைக் கொன்றிருப்பார்கள். இதுதான் உண்மை..’ என்றான்.

“அடேய் மக்கு சாம்பராணி, அறிவிருக்காடா உனக்கு.!?” என கத்தவேண்டும்போல் இருந்தது எனக்கு. இருப்பினும் இவன்போன்ற அறிவிலிகளிடம் பேசுவது பெருத்த அவமானம் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு,  `ஓ.. ’, என வேண்டாவெறுப்பிற்குக் குரல்கொடுத்துவிட்டு,  “நேற்றுதான் ஓட்டுப்போடப்போனோம், ஆனால் இன்று உங்களின் விரலில் உள்ள மை அழிந்துள்ளதே எப்படி?”  என்றேன்.

“எனக்குச் சலிச்சுப்போச்சுங்க.. ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு.. (இருபத்தெட்டு வயதுதான் இருக்கும் - என்னத்த சலிச்சுப்போச்சோ..!? )  என்னத்தக்கண்டோம்.!? எப்படிப் போட்டாலும் அவர்கள்தான் (ஆளுங்கட்சி)  ஜெய்ப்பார்கள். ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்ட அவர்களை விரட்ட முடியுமா? அதான் நான் இந்த முறை ஓட்டுப்போட போகல..”  என்றான்.

எனக்கு வந்த கோபம், சொல்லி மாளாது. அறைவிடவேண்டும்போல் இருந்தது. பேசிப் பிரியோஜனமில்லை என்பதால், பைத்தியம் போல் பேசிக்கொண்டிருந்த அவனை நான் சட்டை செய்யவேயில்லை.

இன்னொரு கூத்து. முடிக்கும்போது சிரிக்கவேண்டுமல்லவா.! 

இங்குள்ள பல தமிழர்களுக்கு, தமிழக/இந்திய அரசியலில் இருக்கின்ற ஈடுபாடும் அறிவும் ஞானமும்  நம் நாட்டு அரசியலில் அறவே இல்லை என்பதனை இந்த உரையாடல் சொல்லும்.

கண்டீனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தர்மேந்திராவை போலிஸ்காரர்கள் கொடூரமான முறையில் அடித்துக்கொன்றுள்ளார்கள்,  என்றேன். அதற்கு என்னுடன் உணவருந்திய அந்த ஆள் சொன்ன அடுத்தத் தகவலில் நான் மூர்ச்சையானேன்.

“ஆமாம், அவன் பம்பாய் குண்டு வெடிப்பின் தீவிரவாதி, சாகட்டும். அவனால் எத்தனை ஸ்கூல் பஸ்கள் குண்டுவெட்டிப்புக்குள்ளாயிருந்தன தெரியுமா?” என்றார்.

என்ன எழவுடா இது..!!?

ஜூலை மாத வல்லின இணைய இதழில் வெளிவந்துள்ள எனது அரசியல் கட்டுரை.