புதன், மார்ச் 20, 2013

மஹடி

“ விஜி, மஹடி செத்துப்போயிட்டானாம்.! உனக்குத் தகவல் எதும் வந்ததா?”

“மஹடி? யாரு அது?”

“என்னடா இது, உன் கிட்டத்தானே வந்து பேசிக்கிட்டு இருப்பான் எப்போதும்..”

“நான் கம்பனியின் Front Desk Manager, என்னிடம் பலர் பேசுவது, நான் அவர்களிடம் பேசுவது எல்லாம் சகஜம், மஹடி யாரு’லா?”

“ஐயோ எப்படிச்சொல்வேன்!! ம்ம்ம்ம் சுபாங்ப்ரெட் ப்ரோமொட்டர்.”

“ஓ..ப்ரோமொட்டர்..!? சுத்தம் போ.. அறவே தெரியாது, மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வந்து, துபுதுபுன்னு நுழையுவானுங்க, மீட்டிங் முடிஞ்சவுடன்  ‘ஹை, பை’ சொல்லிட்டு கிளம்பிடுவானுங்க, எங்கே ஞாபகத்தில் இருக்கும்.!?”

“யா அல்லாஹ், அவன் நல்லா பேசுவான் உன்கிட்ட, பலமுறை பார்த்திருக்கேன்.. சரி சரி தெரியலன்னா விடு..” இடத்தைக் காலி செய்தான் ஷுல்.

இப்படி என்னைக் குழப்பிவிட்டுச் சென்றால் எப்படி..!? யாராக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தமுடியாமல், போவோர் வருவோரிடமெல்லாம் இதுபற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘ஆமாம் மஹடி செத்துட்டான்..! அடிக்கடி வருவான்... ! ஓ அவனா, ப்ரொமொட்டர்..! ம்ம் மீன் பிடிக்கப்போய் மூழ்கிட்டானாம்..! ஈப்போவிலேயே அடக்கம் பண்ணிட்டாங்களாம்..! அது நடந்து மூணு நாள் ஆச்சே, இப்போதான் தெரியுமா.? நல்ல பையன்.. இப்பதான் நிச்சயதார்த்தம் நடந்தது..! அவனுடைய அம்மா இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகலையே.. ! அழகா இருப்பான்... ! நல்ல எடுப்பான மூக்கு, மலாய்க்காரன் போலவே இருக்க மாட்டான்... ! மூக்கும் முழியுமா மாம்மா’க்காரன் போலவே இருப்பான்..!’ என, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிமுகத்தை வழங்கியபோதும், எனக்கு மட்டும் அவன் யாரென்றே தெரியவில்லை.

என்னிடமுள்ள பிரச்சனை இதுதான். போகிற போக்கில் ஒருவர் நட்பானால், அவரைப்பற்றிய விவரங்களைக் கேட்க மாட்டேன். பேசுவேன், அவர் யாரைப்பார்க்க வேண்டுகிறாரோ, அவரை வரவழைப்பேன். அந்த இடைவேளையின் போது, அன்று பத்திரிகையில் வந்துள்ள சில செய்திகளைப் பற்றியோ, பரபரப்பாகப் பேசப்படும் சில விவரங்களைப் பற்றியோ உரையாடுவோம்.. கொஞ்ச நேரம்.

சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு அது நீண்ட நாள் பழகிய நட்புபோல் தோன்றலாம். ஆனால், நான் அந்நபரை அப்போதுதான் சந்தித்திருப்பேன். பெயர் சொல்லியிருப்பான்/ள், கேட்ட மறுநொடியில் மறந்தேபோவேன். என்னுடைய பலவீனம் இது.

மீண்டும் சந்திக்கின்ற சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது, அவர் எந்த நபரை சந்திக்கவிருக்கிறார் என்பதனை அறிந்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை நேராகச் சென்று சந்திக்க அனுமதி வழங்கிவிடுவேன். அவ்வளவுதான் என்னுடைய உறவு சிலரிடம் இங்கே.. வழிப்போக்கன் போல்.

ஆனால் மஹடி..!?  ஒரு ப்ரொமொட்டர், ப்ரொமொட்டர் என்றால் எங்களின் கம்பனி பணியாளர்தான் ஆனால் அவர்களுக்கு இங்கே கம்பனியில் வேலையில்லை. ஒரு குழுவாக தனியாகப்பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு, எந்தெந்த பேரங்காடிகளில் எங்களின் நிறுவனப் பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். அவர்கள், அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பொருட்களைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்து, அவர்களிடம் அப்பொருட்களை அறிமுகம் செய்து விற்பனை செய்யவேண்டும். மாதச்சம்பளம் அலவன்ஸ் என்று ஒருபுறமிருந்தாலும், சுதந்திரமான வேலைச்சூழல், கூடுதல் கமிஷன், குறைந்தவிலையில் மின்சாரப்பொருட்கள் வாங்குவது, கஸ்டமர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச்சென்று குழந்தைகளை பள்ளியில் விடுவது, மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்துவருவது, மின்சார நீர் தொலைப்பேசி நெட் கட்டனம் போன்றவைகளை செலுத்துவது என..., வேலைகளுக்கிடையே சொந்த வேலைகளையும் செய்துகொள்கிற வசதிகளெல்லாம் இருப்பதால், இந்த ப்ரொமொட்டர் வேலை என்பது அவர்களுக்கு மிகவும் ஜாலியான வேலையாக அமைந்துவிடுகிறது.

கம்பனிக்கு மாதம் ஒருமுறைதான் வருவார்கள். சேல்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்காகவும், மாதச்சம்பள ஸ்லீப் பெற்றுக்கொள்வதற்காகவும்.

அப்படிக்குழுவாக வரும் கூட்டத்தில் யாரைக்கண்டேன் நான்.!? வரும் அனைவரும் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவார்கள்/பேசுவார்கள்.  ‘அக்கா, அக்கா’ என்றும், ‘விஜி, விஜி’ என்றும்..

சிலவேளைகளில் ஜோக் எல்லாம் சொல்வார்கள், இடிஇடியென சிரிப்புச்சத்தம் கட்டடத்தையே உலுக்கும். நானும் சிரிப்பேன், வேறுவழி.!?

இதையெல்லாம் காண்பவர்கள், நான் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இருப்பினும்,  எனக்கும் அவர்களுக்குமான தொடர்பு, தாமரை இலையின் தண்ணீர்தான்.

இப்படியெல்லாம் இருந்தபோதிலும், நம்மிடம் சிரித்து சிரித்துப் பேசிப்பழகிய ஒருவர், இறந்துவிட்டார் என்கிறபோது, அவர் யாராக இருக்குமென்று தெரிந்துகொள்கிற ஆர்வம் மண்டையைக் குடைந்தவண்ணமாகவே இருந்தது.

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை, அவர் நமது நெருங்கிய நட்பாக இல்லாதபட்சத்தில், அவர் யார்? எவர்? என்று அறிந்துகொள்கிற ஆர்வம் எனக்கு எப்போதுமே வராது. பேசினால் பேசுவேன். ‘ஹலோ.. ஹை.. பை’.. அவ்வளவுதான்.

வேலையிடத்தில் அதிகமானோர்களை தினமும் சந்திக்கின்ற நிர்பந்தம். என் வேலை அப்படி. என்ன செய்ய.!? சிலர் நம்மை மறவாமல், பல வருடங்கள் கழித்தும்,  ‘ஹாய் விஜி, இன்னும் இங்கேதான் இருக்கீங்களா.!?’ என்று உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து, நலம் விசாரிப்பார்கள். நமக்கு எத்தனைப்பிள்ளைகள், என்ன படிக்கின்றார்கள், கணவர் எங்கே வேலை செய்கிறார், போன்ற விவரங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு அக்கறையோடு விசாரிப்பார்கள். 

எனக்கு அவமானமாக இருக்கும். என் பெயரையும் சுற்றத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, இவ்வளவு உரிமையோடு இவர்கள் நம்மை அழைக்கின்ற போது, நாம் மட்டும் ஏன் அவர்களின் பெயர்களையும் இதர நிகழ்வுகளையும்  நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. !?

‘ஹாய்.. ஊய்.. ஓய்.. ’ என அவர்களின் தொனிக்கு ஈடுகொடுத்து, உரிமையோடு கைக்குலுக்கி, ‘உங்களின் முகம் மனதில் அப்படியே பதிந்திருக்கு, மன்னிக்கவும், உங்கள் பெயர்?’ என அசடுவழிய கேட்பேன்.. இதுதான் என் நிலை. முகம் நினைவில் இருக்கும். பெயர் கொஞ்சங்கூட நினைவிலேயே இருக்காது.

இந்த இக்கட்டுச்சூழல்தான் மஹடி செத்துப்போயிட்டான் என்கிற விவரத்திலும்.

யார் இந்த மஹடி? எப்படி இருப்பான்? இவனா இருக்குமா.!? அவனா இருக்குமா..!?, என்னிடம் பேசுவானா? என்ன பேசுவான்? குரல் எப்படி இருக்கும்? கூட்டமாக வருவார்கள், நுழைந்தவுடன் கூச்சல் போடுவார்கள், சட்டாம்பிள்ளை, மாணவர்களை மிரட்டுவதைப்போல், மிரட்டுவேன். கைகளைக்கொண்டு வாய்களைப்பொத்திக்கொண்டு, சரி டீச்சர் என்று நக்கல் அடிப்பார்கள்.

அதில் யார் மஹடி? மாம்மா’க்காரன் (தமிழ் முஸ்லீம்களை அப்படித்தான் அழைப்பார்கள் இங்கே..) போல் யார் இருப்பா? குழப்பிக்கொண்டு எப்படிஎப்படியோ யோசிக்கின்றேன், யார் என்றே தெரியவேயில்லை. 

தெரியாமலேயே போகட்டுமே. தெரிந்தால், கூடுதல் கவலை வரும். அவன் என்னிடம் பேசியதெல்லாம் நினைத்துப்பார்த்து வருத்தம் கொள்வேன்.
யாராவது அவனின் புகைப்படத்தைக் காண்பித்தாலொழிய தெரிய வாய்ப்பு ஏற்படப்போவதில்லை. இதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்.

வருத்தப்படுவது தள்ளிப்போடப்பட்டாலும், என்றாவது ஒரு நாள் தெரியவரும்.. அப்போது என் மனம்..

“ஆ..அவனா..!” என்று துடிக்கலாம்.
“ஓ.. இவனா.!” என்று லேசான ஆச்சிரியதோடும் நிறுத்திக்கொள்ளலாம். பார்ப்போம்.!!