செவ்வாய், ஜூலை 01, 2014

கணவன்

முன்பு என்னோடு வேலை செய்த நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று சந்தித்தேன்.

பணியிட நண்பர்தான். சொந்தத் தொழில் ஆரம்பித்தவுடன் பணியை ராஜினாமா செய்துவிட்டு மலாக்கா சென்றுவிட்டார்.

சீனர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது ஒரே இடத்தில் நீண்ட நாள் வேலை செய்யமாட்டார்கள். வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, வேறொரு அனுபவம் தேடி மற்றொரு துறை அல்லது அந்தவேலை சம்பந்தமாக இருக்கின்ற சொந்தவேலை எதேனும் செய்து குட்டி முதலாளியாகவாவது ஆகிவிடுவார்கள். எவ்வளவு பெரிய பதவியினை வகித்தாலும், சர்வசாதாரணமாக வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்து நகர்ந்து விடுவார்கள். பெரும்பாலும்...

அதே போல் என் நண்பனும் எங்களின் நிறுவனத்தில் வேலையினைக் கற்றுக்கொண்டு சொந்தமாகத்தொழில் தொடங்கி, கம்பனிக்கே supplier ஆக வந்துவிட்டார்.

நாங்கள் இருவரும் ஒரே floor யில் வேலை செய்து, அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வதால், நெருக்கமாக நண்பர்கள் ஆனோம். உணவை ஊட்டிக்கொள்வது. உடல் நலமில்லை என்றால் மருந்து வாங்கித்தருவது. எங்கேயாவது சென்றுவந்தால் எனக்காக எதையாவது வாங்கிவருவது என.. நானும்தான், வேலைக்கு எடுத்துச்செல்கிற உணவை அவனுக்கும் சேர்த்து எடுத்துச்செல்வது, நல்லநாள் பெருநாள் என்றால் எதாவது வாங்கித்தருவது என..

எப்போது கூடுதல் நெருக்கம் வந்தது என்றால், ஒரு நாள் எனக்கு கடுமையான காய்ச்சல் சளி இருமல். வேலைக்குச்சென்று  ஏர்கோண்ட் பட்டவுடன் குளிர்காய்ச்சலும் சேர்ந்து வரத்துவங்கிவிட்டது. மெடிகல் லீவு கிடைத்தபோதிலும் உடலெல்லாம் ஒரே வலி என்பதால், கார் ஓட்டி வீட்டிற்குச் செல்ல இஷ்டமில்லாமல் ஸ்டோர் அறையில் இருந்த ஒரு ஷோபாவில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

ஸ்டோர் உள்ளே, எதோ ஒரு பொருளை எடுக்க  நுழைந்த அவன், நான் குளிரில் நடுங்கி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து, என்னை எழுப்பாமல், அவனின் அலுவலக கோர்ட்’ஐ என்மேல் போர்த்திவிட்டுச் சென்றுள்ளான். மாலையில் எழுந்து பார்க்கின்றபோது என்மேல் ஒரு கோர்ட் போர்த்தப்பட்டிருந்தது. என்ன இது ? யாருடையது? என்று யோசிப்பதற்குள், அவனே வந்து நடந்தவற்றைக்கூறினான்.

அதுமட்டுமல்ல நான் தொடர்ந்து இரண்டு நாள் மெடிகல் லீவில் வீட்டில் இருந்தபோது, குறுந்தகவல் மூலம் நலம் விசாரித்தபடியே இருந்தான். அன்று தொடங்கி இன்றுவரை நல்ல நண்பர்கள் நாங்கள்.

அப்படியே நெருங்கிப்பழகப் பழக எங்களுக்குள் ஒளிவுமறைவு அற்ற நட்பு வளரத்துவங்கியது. சில ரகசியங்களை என்னோடு வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தான். அதாவது, அவனின் சிறுவயதுக் காதலி அவனைவிட்டு விலக நினைப்பது. யாரோ ஒருவனை நம்பி அவனுடன் ஓடிப்போன அவளை மனவுளைச்சலுடன் தேடிக் கண்டெடுத்து மீட்டு வந்தது. திருமணம் செய்கிறபோது பணநெருக்கடியில் சிக்கிக்கொண்டது. திருமணம் செய்தபின் வேலையை விட்டு சொந்த தொழில் ஆரம்பித்து நட்டத்தில் மாட்டிக்கொண்டது. மனைவிக்கும் இவனுக்கும் ஓயாமல்  சண்டை வருவது. போகும் இடமெல்லாம் திருமணம் ஆகி ஐந்துவருடங்கள் கழித்தும் இன்னும் குழந்தை இல்லையா ? உனக்குப் பிரச்சனையா? என உறவுகள் கேள்வி கேட்பது என இப்படியே தொடர் இடர்கள் அவனைத்தாக்கத்துவங்கியது.

மனம்விட்டுப்பேசுகிற சுபாவம் இருந்ததால் தப்பித்துக்கொண்டான். இல்லையேல் தற்கொலையே செய்துகொண்டிருப்பான்.

இப்போது ஓரளவு நன்றாக வந்துவிட்டான். மகிழ்ச்சி.

வேலை விஷயமாகக் கம்பனிக்கு வருகிற வேளை இருந்தால், தவராமல் எனக்குத் திண்பண்டங்களை வாங்கி வந்து குஷிபடுத்துவான். வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை.

நீண்ட நாள் கழித்து இன்று சந்தித்ததால், இருவரும் சாப்பிடச்சென்றோம்.

தமக்குக் குழந்தை பிறந்துவிட்ட இனிய செய்தியினை என்னோடு பகிர்ந்துகொண்டான். எப்படி என்று தொடங்கி, நீண்ட நெடிய கதையினைக் கூற ஆரம்பித்தான். வழக்கமான கதைகள்தான். மருத்துவ ஆலோசனை. கட்டுப்பாடு. ஒழுக்கம். மன அமைதி. ஒருமுக சிந்தனை. காலநேரத்தோடு அட்டவனைப்படி உடல்சேர்க்கை. புகைப்பதை நிறுத்துதல்,  என தொடர்ந்தான்.
சுவாரஸ்யம் எது தெரியுங்களா.? மனைவி கர்ப்பக்காலகட்டத்தின் இறுதி மாதத்தின் போது கடுமையான மறதி வியாதியால் அவதிப்பட்டதுதானாம். கணவனையே காலையில் எழுந்தவுடன், ஏன் நீ என்னோடு தூங்குகிறாய்.? யார் நீ ? என்று கேட்கிற அளவிற்கு மறதி வியாதி அவளை ஆட்கொண்டதாகக் கூறினான். ஆச்சரியம்தான் என்றான் நகைச்சுவையாக.. ஒரு நாள் அவள் வேலைக்குச் செல்கையில் தமது உள்ளாடைகளை அணிந்துகொள்ளாமல் கிளம்பி சென்று விட்டாளாம். ! பணியிடத்தில் பலர் அவளைப் பார்த்து இது பற்றிக்கேட்கையில் தான் அவளுக்கே ஞாபகத்திற்கே வந்ததாம். ! இவனை அழைத்து எனக்கு உடனே உள்ளாடைகளைக் கொண்டு வா.. பால் கசிந்து உடையெல்லாம் நனைகிறது, என்று விரட்டியிருக்கின்றாள். வேலையிடத்தில் இருக்கின்ற இவன் செய்வதறியாமல், அவசர அவசரமாக துணிக்கடைகளுக்கு விரைந்து அவளின் அளவு கூட என்னவென்று தெரியாமல், அவளுக்கு உள்ளாடைகளை வாங்கித் தந்தானாம். அதை இன்னமும் சொல்லிச்சொல்லி சிரிப்பாளாம் மனைவி.

குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அவன் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறான். குழந்தையோடு சேர்ந்து அவளும் அழுவாளாம். உடல் வலி, பால் கட்டிக்கொண்டு அவள் படும் அவஸ்தை என உறக்கமில்லாமல் பலநாள் அவதியுற்றதாகச் சொன்னான்.

நீ ஏன் அவஸ்தைப் பட்டாய்.? என்று கேட்டேன்.

மார்பு இரண்டும் வீங்கி வெட்டிப்பதைப்போல் இருக்கும். பரிதாபமாக இருந்தது. கோபிஸ் கீரையினை இலை இலையாக பிய்ந்து குளிர்ச்சாதணப்பெட்டிக்குள் வைத்துவிடுவேன். அதில் ஐஸ்பிடித்து கட்டியாக ஆனவுடன், அதை அப்படியே அவளின் மார்பில் வைத்து இரவெல்லாம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பேன். குழந்தைக்கு அந்த மார்பை எப்படிச் சூப்பிப் பால் பருகுவதென்று சொல்லிக்கொடுப்பேன். பம்ப் கொண்டு மார்பின் பாலை வெளியே எடுத்து, பாட்டலில் நிரப்பி பிரிட்ஜில் வைப்பேன். குழந்தை அழுகிறபோத அந்தப் பாட்டலை சுடுநீரில் வைத்து சூடு காட்டி குழந்தைக்குக் கொடுப்பேன்..

அய்ய்யோடா.... எப்பேர்ப்பட்ட கணவன் நீ... !! என்று அவனிடம் சொல்லி பெருமிதம் கொண்டேன். பாராட்டினேன். அத்தோடு நான் வாசித்த ஒரு விஷயத்தையும் அங்கே அவனோடு பகிர்ந்துகொண்டேன். அதாவது, எனக்குப்பிடித்த ஒரு எழுத்தாளர், அவர் மனைவியின் மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்பட்டபோது, அவரின் வாயால் அப்பாலை சலம் ரத்தத்தோடு உறிஞ்சு உறிஞ்சு வெளியே எடுத்துத் துப்பி மனைவியின் வலியினைக் குறைத்தார் என்று எழுதியிருந்தார். அதை நான் வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்தேன். அதுபோல்தான் இருக்கின்றது உன் கதையும் என்றேன். அதற்கு அவன், உன்னிடம் சொல்லவில்லை. வெட்கமாக இருந்தது. இருப்பினும் இப்போது சொல்கிறேன்.., நான் அந்த வேலையையும் செய்தேன். என்றான்.

ஆச்சிரியத்தில் என் கண்கள் அகல விரிந்தது. இப்படிப்பட்ட கணவன்மார்களை சினிமாவில்தான் நான் பார்த்துள்ளேன்.
நிஜவாழ்வில் `அய்யோ பாவம்.’ என்று உச் கொட்டிவிட்டு, இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம், அதான் உறவுகள் அருகிலேயே இருக்கின்றார்களே, அம்மா பார்த்துக்கொள்வார். மாமி பார்த்துக்கொள்வார்.. என்று விலகி நிற்கின்ற கணவன்மார்கள்தான் ஜாஸ்தி - நம்மவர்களில்...