வியாழன், அக்டோபர் 25, 2012

பத்திய விடுதி

இன்று மதியம் வித்தியாசமான தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகப்பெரிய எண்ணிக்கையில் மின்சாரப்பொருட்களை வாங்க எங்களின் கம்பனி ப்ரொஜெக்ட் ஜெனரல் மானேஜரை சந்திக்க வந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வுயரதிகாரி உணவருந்திவிட்டு திரும்புவதற்கு வெகுநேரமானதால், என்னிடம் சில விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

கம்பனியின் உற்பத்திப்பொருட்களின் தரம் பற்றியும், எங்களின் கம்பனிப்பொருட்களை அவர் இதுவரையில் பயன்படுத்தியதில்லை என்றும், பொருட்களில் பிரச்சனை என்று வரும்போது, விரைவு சேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும், அதனின் உபரி பொருட்களின் விலை பற்றியும் அவைகள் சுலபமாக எங்கும் கிடைக்குமா என்பதையும், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது அதனின் கழிவு எத்தனை விழுக்காடு  வரை குறையும் என்பதனைப்பற்றியும் ஓர் அறிமுக உரையாடல் நிகழ்ந்ததுக்கொண்டிருந்தது எங்களுக்குள்.

நம்மவர் என்பதால் எனக்குத்தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொண்டிருந்தேன்.பேச்சுவாக்கில் கேட்டேன் `எதற்கு சார், இவ்வளவு ஏர்கோண்ட், டீவி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் (air purifier)  கருவிகள், புதிதாக ஹோட்டல் எதும் திறக்கவிருக்கின்றீர்களா?’.  ஒவ்வொன்றிலும் எண்ணிக்கை தலா அறுபது வரை ஆடர் செய்ய, பட்டியலை கையோடு தயார் செய்து வைத்திருந்தார்..

`CONFINEMENT CENTRE ஆரம்பிக்கவுள்ளோம். முதலில் வீட்டில்தான் சிறிய அளவில் செய்து வந்தோம், இப்போது பிஸ்னஸ் வளர்ச்சியடைந்து விட்டது, வீடு கொள்ளவில்லை. நிறைய பேருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது, ஆறு மில்லியன் செலவில் இந்த  CONFINEMENT CENTRE கட்ட ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாடி கடைவீடுகளைச் சேர்த்து வாங்கி முழுமையாக இதற்கே பயன்படுத்தி  அதைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றோம். கீழே முப்பது அறைகள், மேல் மாடியில் முப்பது அறைகள். எல்லா அறைகளிலும் ஏசி, டீவி, air purifier என பொருத்த உள்ளோம். கட்டும்போதே முழுமையாக இவற்றையெல்லாம் செய்துவிட்டால், பிரச்சனை குறையும், இல்லையென்றால் அதற்கென்று வரும் செலவு சங்கடம் இன்னும் அதிகமாகும்..’ என்றார்.



எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  `CONFINEMENT CENTRE?? அப்படின்னா என்ன சார்?’ கேட்டேன்.

`ஆமாம், இங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க, அதுவும் அநேகமா தமிழர்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். காரணம், இது சீனர்கள் மற்றும் மேலை நாட்டவர்களின் கலாச்சாரம். நமது அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்த செண்டர் பிரபலம். சீனாவிலும் பரபரப்பாக இயங்கிவருகிறது. இங்கே நம் நாட்டை எடுத்துக்கொண்டால், நான் தான் முதல் முதலில் பெரிய அளவில் ஆரம்பிக்கவுள்ளேன். சிலர் தங்கியிருக்கின்ற வீட்டை விரிவுபடுத்தி லைசன்ஸ் எதுவுமில்லாமல் பணம் சம்பாதிக்க இந்த சேவையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கேள்விப்பட்டவரை பெரிய அளவில் செண்டர் திறப்பது நானாகத்தான் இருக்கனும். என் மனைவியின் (சீனப்பெண்) அம்மா சீன நாட்டுவைத்தியத்துறையில் கைத்தேர்ந்தவர். அதுவும் அத்துறையில் அவர் தேர்ச்சிப்பெற்றவர் என்கிற சான்றிதழ் எல்லாம் கைவசம் வைத்திருக்கிறார். வீடுவீடாகச் சென்று, பிரசவித்த பெண்மணிகளுக்கு சீன மூலிகை உணவுகளைத் தயார் செய்வது, பிறந்த குழந்தைகளைப் பராமறிப்பது, மகப்பேறு காலத்தில் தாய் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் களைவது, தாயயையும் சேயையும் பாதுகாத்துக்கொள்வது, போன்ற பல வேலைகளை பல வருடங்களாகச் செய்து வந்துள்ளார். என் மனைவி நவீன மருத்துவத் தாதி. பல மருத்துவர்களிடமும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இது அரிய வாய்ப்பாகவே பட்டதால் இந்த செண்டரை ஆரம்பிக்க நானும் துணிந்து விட்டேன். முக்கால்வாசி வேலைகள் முடியும் தருவாயில், கூடிய விரைவில் திறப்புவிழா நடைபெறும் கலந்துக்கொள்ளுங்கள்..’ என, அவரின் பெயர் அட்டையை என்னிடம் வழங்கினார்.

இத்துறை எனக்குப் புதுமையாகவும் சுவாரிஸ்யமாகவும் இருந்ததால் மேலும் தகவலறிய.. `ஓ, குழந்தை பிறந்தவுடன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பத்தியமாக இருப்பார்களே, அந்த காலகட்டத்தில் தாய் சேய் போன்றவர்களைக் கவனித்துக்கொள்கிற நர்சிங் ஹோம் மாதிரியா? ’

`ம்ம்..ஏறக்குறைய அதுபோல்தான்..’

`அப்படியென்றால் நிறைய ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டுமே.!, அது என்ன லேசுபட்ட வேலையா? அந்த துறையில் கைத்தேர்ந்தவர்களை தேடி எடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டுமே.. கஷடம் இல்லெ..ம்ம்.!!’

`அப்படியெல்லாம் இல்லிங்க, அவங்க அம்மா இருக்காங்க, அந்த கால ஆயம்மா. என் மனைவி இருக்காங்க இந்த கால நர்ஸ், அதற்கு மேலே, பொதுவான உதவியாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பிரச்சனையில்லை. மெயின் வேலைகளை அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள், மற்ற மற்ற  உதவிகளை சாதரண வேலையாட்கள் செய்வார்கள்.’ 

மேலும் விவரமறிய..`எப்படிங்க, அங்கே வந்து பிரசவித்துக்கொள்வார்களா? ’

`அடடா, அது பிசவ செண்டர் இல்லிங்க. எப்படின்னா.. ஆஸ்பித்திரியில் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சில தாய்மார்களுக்கு பணம் இருக்கும், ஆனால் முறையாக பாதுகாப்பு வழங்குகிற உறவுகள் இருக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, குழந்தை பெற்றபின் எவ்வளவு வேதனைகளை ஒரு தாய் அனுபவிக்கின்றாள் என்று..! குழந்தையைத் தூக்கி பால் கொடுக்கக்கூட முடியாமல் சிரமப்படும் பெண்கள், ஆப்ரேஷன் மூலமாக குழந்தையைப் பிரசவித்த பெண்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவது, பிரசவம் முடிந்தவுடம் கடுமையான காய்ச்சல், பால்கட்டிக்கொண்டு வலி, பயங்கர முதுகுவலி, நரம்பு வலி, அடிபாதம் வலி போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. சில பெண்கள் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடுமென்று அமைதியாய் இருந்து விடுவார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் இவற்றிற்கெல்லாம் நாங்கள் நல்ல தீர்வு வழங்குவோம். வீட்டில் உள்ள யாவருக்கும் தொல்லை கொடுக்காமல், பெரிசுகளையும் துன்புறுத்தாமல், எங்களின் செண்டரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்..’

`நீங்கள் சொல்கிற தீர்வு என்பது?’ இன்னும் அதிகாரி வரவில்லை..பேச்சைத்தொடர்ந்தேன்.

`தாயிற்கு, நேராநேரத்திற்கு பத்திய உணவு சமைத்துக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியம் பேணுவது, நல்ல முறையில் குளிப்பாட்டுவது, சருமங்களைப் பாதுகாப்பது, உடம்பு பிடித்து விடுவது, நன்கு உறக்கம் கொள்ளவைப்பது. அதாவது குழந்தைகளை அவர்களின் அருகில் விடாமல் அவர்களை ஓய்வெடுக்கவைப்பது. சமசீர் உணவு வழங்குவது, அழுக்குத்துணிகளை துவைப்பது, மெல்லிசையில் தாலாட்டுவது, மூலிகை மருந்தளிப்பது போன்ற பராமறிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறும். குழைந்தகளுக்கும் அதே போன்ற சேவைகளை வழங்குவோம், தாயிடம் தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு பயிற்சி அளிப்பது, அமைதியாகத் தூங்கும் முறைகளைப் பழக்குவது, வேளாவேளைக்கு பால் அருந்தக்கொடுப்பது, நோய் வராமல் பார்த்துக்கொள்வது, முறையாகக் குளிப்பாட்டுவது, என அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வோம்...’ சொல்லிமுடித்தார், அவர் யாருக்காக காத்திருந்தாரோ அந்த அதிகாரியும் வந்துவிட்டார்.  இருவரும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தார்கள்.

எனக்கு ஆச்சிரியமாகவே இருந்தது. என்னன்னமோ சேவைகள். அந்த சேவைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடின.

குழந்தை பிறந்த மறுகணம் எவ்வளவு அவஸ்தைகள். அம்மா பாட்டிமார்கள் பார்க்கிறேன் என இன்னும் கூடுதல் கொடுமைகளையல்லவா கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நம்மை நிம்மதியாகவே விடமாட்டார்களே.!

``நாங்களெல்லாம் அந்த காலத்திலே..எ.. எ.. எ.. வேலைக்குப்போய் வந்து வீட்டிலே பெத்துபோட்டோம். காலையிலே பெத்துட்டு, மாலையிலே காண்டா போட்டு வாளியில் தண்ணி தூக்கியிருக்கோம். பத்தியமெல்லாம் கிடையாது, வெந்தத சாப்பிட்டு விதியேன்னு கிடப்போம்.. ஆத்துல போய் துணிதுவச்சு கொண்டுவரணும். பதினாறு இருபது பேருக்கு மூணு வேளையும் சமைச்சுப்போடணும், புட்டி பால் எல்லாம் கிடையாது, மார்ல சொறக்கிற பாலத்தான் ஆறு வயசு வரைக்கும் குடுப்போம்.. ம்ம்ம், இப்போ என்னாடான்னா, பார்க்க ஆளு இருக்கு, ஆனாக்கா வீட்டுல வேலை செய்யவே நோவுது இதுகளுக்கு.. அங்க வலி இங்க வலின்னு கத்தறாளுங்க.. தொட்டா குத்தங்கிறாளுங்க. பெத்த புள்ளய தூக்கமாட்டேகிறாளுங்க.. நடக்க முடியலங்கிறாளுங்க, ஒரு புள்ள பெத்துட்டு இப்படி பெருத்து கிடக்கறாளுங்க, கண்டதெல்லாம் திங்கணுங்கிறாளுங்க, எண்ணெயில பொரிச்சதெல்லாம் விலாசறாளுங்க, வாயக்கட்டமாட்டேங்கிறாளுங்க, நொறுக்குத்தீனி திங்கறாளுங்க... எஹேம்ம்ம்.. !!!’’ இப்படி அலுத்துக்கொண்ட பெருசுகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க தம்கட்டி வலிகளைப்பொருத்துக்கொண்டு மனவுளைச்சலில் உழன்று அமைதி காத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு செண்டர் அப்பவே இருந்திருந்தால், உடலை நன்கு தேற்றியிருக்கலாம்.. நினைவுகளை அசைப்போட்ட வண்ணம் கண்கள் எதையோ கணினியில் தேட, ஒரு மணி நேரங்கழித்து..

 `சரிங்க பேசியாச்சு..quotation கொடுக்கறேன் என்றிருக்கார். பார்ப்போம்.. அப்ப நான் கிளம்பறேன். எதுவொண்ணுன்னா கூப்பிடுங்க.. யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணுங்க, என்னுடைய பெயர் அட்டையை கூடுதலாக கொடுக்கிறேன், விசாரிப்பவர்களுக்கு கொடுங்கள், சரியா..!’ என்று சொல்லி விடைப்பெற்றவரை அழைத்து..

` பீஸ் எவ்வளவு வருங்க ஒரு மாசத்திற்கு?’

`நம்ம பணம் நாலாயிரத்தி எண்ணூறு (RM4,800) வெள்ளிங்க.. !’

@#$%^&

நல்லவேளை.. அம்மாவிற்கு நான் வெறும் நூற்றைம்பது வெள்ளிதான் கொடுத்தேன்.. என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி விட்ட  பாட்டிக்கு ஒரு புதுப் புடவை மட்டுமே..