வியாழன், ஜூலை 12, 2012

சித்தப்பா

காலையில் வேலைக்கு வந்தவுடன், ஒரு அழைப்பு.

``சிஸ்டர், நான் கோபால், உங்களைப் பார்த்துள்ளேன்..’’

`` அப்படிங்களா, சந்தோசம் பிரதர், சரி, என்ன விஷயம்?’’

`` 46’’ இஞ்ச் டீவி ஒண்ணு வாங்கணும், வெளியே விசாரித்தேன், விலை அதிகமா இருக்கு.! நீங்க அங்கே வேலை செய்வதால், கொஞ்சம் உதவி செய்து, உங்களின் விலைக்கு வாங்கித்தருகிறீர்களா?’’

``வெளியேவே வாங்கலாமே. விலையில் ஒண்ணும் பெரிய மாற்றங்கள் இருக்காதே பிரதர்..!’’

`` இல்லை சிஸ், நான் அன்று ஒரு நாள் உங்களைச் சந்தித்து, ஸ்டாஃவ் பிரைஸ் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதன் பிறகு வெளியே உங்களின் டீலர்களிடம் விசாரித்தேன், விலையின் அதிக மாற்றம் இருக்குங்க..’’

``ஓ, இப்படி வேறு செய்கிறீர்களா? இது போன்ற தகவல்கள் நாங்கள் உங்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோமென்று இங்கே உள்ள தலைகளுக்குத் தெரிந்ததென்று வையுங்கள்..!?அவ்வளவுதான், கதை கந்தல். மேலும் டீலருக்கு பொருட்களை அனுப்பி விட்டு, இங்கே நாங்களும் வியாபாரம் செய்தால், டீலரின் பிஸ்னஸ் பாதிக்கும். சூ பண்ணுவார்கள், பிரச்சனையாகும். இப்படி ஒரு தகவலை உங்களிடம் நான் எப்படி உலறினேன்!?’’

`` அப்படிங்களா சிஸ்..! அன்னிக்கு நான் வந்து உங்களைப்பார்த்தபோது நீங்களும் இதையே தான் சொன்னீங்க, நான் தான் கெஞ்சி கெஞ்சி அந்த விவரத்தை வாங்கிக்கொண்டேன், ஆனால் உங்களின் ஸ்டாஃவ் பிரைஸ் பற்றிய விவகாரத்தை நான் மூச்சே விடல சிஸ், கவலை வேண்டாம்.’’

``ஸ்டாஃவ் பிரைஸ், இங்கே வேலை செய்யும் ஸ்டாஃவ்’களுக்கு மட்டுமே, வேறு யாரும் வாங்க முடியாது, மேலும் என் பெயரில் அடிக்கடி பொருட்கள் வாங்கினால், மேலிடத்தில் புகார் போகும், என்னமோ நான் கடை திறந்து, திருட்டுத்தனமாக பொருட்களை வாங்கிக்கொண்டு போய் விற்கிறேன் என்று... இப்போ கெடுபிடிகள் ஜாஸ்தி, அதனால் முடியாதுங்க..!”

``என்ன சிஸ் இப்படிச் சொல்றீங்க? எனக்கு இரண்டு மகன்கள். இருவருமே ஊனம்.  ஒருவனுக்கு கைகால்கள் வராது, ஒருவன் ஊமை. எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டேன், இப்போதான் நல்லா இருக்கேன், ரிட்டயர் ஆகிட்டேன். கொஞ்சம் பணம் இருக்கு, நிம்மதியா இருக்கலாம்’னா.. எனக்கு பெரிய டீவி வாங்கிக்கொடுப்பா, நான் ஜாலியா உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து பந்து விளையாட்டு பார்ப்பேன் என்கிறான்...’’ தொடர்ந்தார், சரிப்பட்டு வராது காலையிலேயே சோகக்கதை என்பதால், ``சரிங்க வாங்க, வாங்கித்தருகிறேன்.’’ என அழைப்பைத்துண்டித்தேன்.

மதிய உணவிற்குப்பிறகு வந்தார், ஏற்கனவே பார்த்தது போல்தான் இருந்தது. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, எங்களின் ஆடர் டிப்பார்ட்மெண்டிற்கு   தொலைபேசியில் அழைத்து அப்பொருள் ஸ்டாக் இருக்கின்றதா என உறுதிப்படுத்திக்கொண்டேன். உடனே மறுமுனையில், ``ஏன் வாங்கப் போகிறாயா?, அவ்வளவு பெரிய டீவி!? உன்னிடம் தான் ஏற்கனவே இதைவிட பெரிய டீவி உள்ளதே!?’’ நல்லா கேட்பாளுங்க இதுபோன்ற கேள்விகளை வக்கனையா. ``அடியேய், எனக்கு இல்லை, என் அங்கிளுக்கு.!’’ உடனே அஃப்ரூவல் கிடைத்தது, காரணம் நானும் கடந்த ஆறு மாதங்களாக என்னுடைய ஸ்டாஃவ் பர்ச்சேஸ்’ஐ பயன்படுத்தாமல் இருந்ததால், உடனே எனது ஆடரைப் பதிவு செய்துகொண்டு, ஆடர் கோட் எண்களைக்கொடுத்தாள் ஆடர் டிப்பார்மெண்ட் கிளார்க்.

பதிவு எண்களைப்பெற்றுக்கொண்டு, பணத்தை வாங்கி அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்டில்  செலுத்திவிட்டு இறங்கினேன். நன்றி உணர்வோடு என்னை நோக்கினார் பிரதர்.

``நன்றியெல்லாம் இருக்கட்டுங்க, நான் உங்களை என் பெரியப்பா என்று சொல்லித்தான் வாங்கித்தருகிறேன். வேளியே யாரிடமும் சொல்லவேண்டாம். சர்வீஸ் செண்டரில் இரு்ந்து, சில மாதங்கள் கழித்து பொருட்கள் எப்படி? தரம் எப்படி? என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக தொலைபேசி அழைப்பு விடுப்பார்கள். பெரியப்பா என்றே சொல்லுங்கள்.. அப்படி ஒருகால் கேட்டால், ஒகே’ங்களா. !’’ என்று கூறி அவரை வே’ஹவுஸுக்கு அனுப்பினேன், பொருளைப் பெற்றுக்கொள்ள...!

``எஃக்ஸ்கியூஸ் மீ சிஸ்.. பெரியப்பா வேண்டாம், சித்தப்பா ஓகேங்களா!?’’

``சரி பிரதர்’’ ம்ம்ம்..பெரிசா வித்தியாசம் ஒண்ணுமில்லையே.. டவுட்டு.!!   

தவிடுபொடி

எனக்கும் கொஞ்சம்
உலக ஞானமிருக்கு.!

எனக்கும் கொஞ்சம்
விஷய ஞானமிருக்கு.!

எனக்கும் கொஞ்சம்
இலக்கிய ஞானமிருக்கு.!

நானும் தெளிந்த நீரோடைதான்..

இருப்பினும்
உன் `கடலை’ போடும்
கவிதைகள் எல்லாம்
எனக்கே என
நம்புகிறேன்..!