ஞாயிறு, அக்டோபர் 14, 2012

அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய தினக்குரலில் வெளிவந்துள்ள எனது வாசகர் கடிதம் - அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய சூழலில், நவீன பாணியில் பல விதமான எழுத்துகள் சிறுகதைகள் போலவே வந்துவிட்டன. குறிப்பாக, அனுபவங்கள் பேசுகின்றன என்கிற பகுதியில் வாசகர்களின் கைவண்ணங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. போட்டிகளில் சேர்த்துக்கொள்கின்ற கதைகளை விட வாசகர்கள் தங்களது அனுபவங்களைக் கதைகளைப்போல அற்புதமாகச் சொல்லி வருவதைப் படிக்கின்றபோது வியப்பாகவே இருக்கின்றது. நல்ல முயற்சி. இது தொடரவேண்டும். ஐம்பது வெள்ளி சன்மானம் பெரிதேயல்ல. வாசகர்களின் எழுத்துப்பயிற்சியை ஊக்குவிக்கின்றது இப்பகுதி. இவைகளைக் குட்டிக்கதைகளாக்க் கூட தொகுக்கலாம், காரணம் அனைத்தும் உண்மை நிலவரங்களைச் சொல்லும் அற்புதக் கதைகள்.   

அப்பகுதியை விடாமல் வாசித்து வருகிறேன். ஆனந்தி ஆறுமுகம், ஆசுகவி கே.எஸ்.மணியம், நேசமணி, ஆர்.லோகநாதன், பாரதிசெல்லம்மா மற்றும் பலரின் அனுபவங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகள். எழுத்துகள், வர்ணனைகள் போன்றவைகள் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அவைகளை சாதரணமாக எடைபோட்டுவிடவே கூடாது. தற்போது உலக அளவில் பிரபலமாகப் பேசப்படும் சிறுகதைகள் அனைத்தும் இந்த வடிவில்தான் உள்ளன. பிரபல ஆங்கில எழுத்தார்கள் எழுதும் பாணி இது. நாம்தான் இக்கருவில் கூடுதல் வர்ணனைகளை நுழைத்து, நடப்பது, நிறபது, நகர்வது, ஊர்வது, பறப்பது, சுழல்வது என நீட்டிமுழக்கி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அப்படிச்சொன்னால்தான் அது சிறுகதை என்கிற வட்டத்திற்குள் நிற்கும் என நினைத்துக்கொண்டு, இதுபோன்ற வர்ணனைகளற்ற நிஜக் (சிறு) கதைகளை சிறுகதை பட்டியல்களில் சேர்த்துக்கொள்ளாமல் புறந்தள்ளுகிறோம்.

நவீன பாணி கதைகள் என்றால்; அது, இதுபோன்ற கதைகளே. வாழ்கிற வாழ்வை கூர்ந்து நோக்கினால், நிகழ்கின்ற அனைத்துச் சம்பவங்களும் சிறுகதைகளே. இனியும், இப்படித்தான் சிறுகதைகள் இருக்கவேண்டுமென்று யாருமே வரையறுக்கவேண்டியதில்லை. நம் கண்முன் நிகழ்வதை அப்படியே எழுதவேண்டியதுதான். தேவை மொழியாற்றல் மட்டுமே. அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நாம் எல்லோரும் எழுத்தாளர்களே. கதைகள் எதைப்பற்றி, எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கதைசொல்வது மட்டுமே கதையல்ல என்கிற புரிதல் அவசியம்.

சென்ற வாரம், போட்டிக்கதைகளின் வரிசையில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஜி.ஜான்சனின் `எதிர்வினை என்கிற சிறுகதையும் இதே பாணிதான். கதையில் கூடுதல் தகவல்களை வலுக்கட்டாயமாக நுழைக்கவேண்டுமென்றால், மருந்துகளின் பட்டியல்களையும், மருத்துவத்துறையின் சிக்கல்களையும், குவிகின்ற நோயாளிகளின் தன்மைகளையும் குணாதிசயங்களையும், கிளினிக் சூழலையும், தாதியர்களின் நிலைப்பாடுகளையும் சொல்லி நீட்டி முழக்கியிருக்கலாம். 

ஆனால், அக்கதை கணக்கச்சிதமாக மிக எளிமையாக மலர்ந்து, மருத்துவத்துறையில் ஏற்படுகிற சிறிய சிக்கலைக் களைத்து, வாசகர்களுக்கு தெளிவைக் கொடுத்துச்சென்றது. என்னைப்பொருத்தவரை இதுதான் எழுத்து. எளிமையான ஆரம்பம், அழகான நடை, ஒரு சின்ன திருப்பம், தெளிவான முடிவு. (மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், இதைப்பற்றிய அலசல்கள் ஆராய்ச்சிகள் இன்னும் தொடரலாம். ஆனால் சிறுகதைக்கு இந்த சின்ன `ட்டுவிஸ்ட்போதுமானது.)    

எனக்குத் தெரிந்தவரை, கடந்த பத்து ஆண்டுகாலமாக, நம்நாட்டு அனைத்து பத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகள், வாசக எழுத்தாளர்களின் எண்ண ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகள் என விடாமல் வாசித்து விமர்சனம் செய்பவர் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்கள் மட்டுமே. பெரிய எழுத்தாளர், மருத்துவர் என்கிற பேதமெதுவும் இல்லாமலும், நல்ல விமர்சகராகவும், யார் மனதையும் காயப்படுத்தாத அற்புத மனிதராகவும், நல்ல இலக்கிய ஆர்வலராகவும், அதேவேளையில் நல்ல இலக்கிய மருத்துவராகவும் (பல வருடங்களாக மருத்துவ கேள்வி பதில் அங்கத்தில் விளக்கம் சொல்பவர்) இளகிய மனம்படைத்தவராகவும், இரக்க்குணமுள்ளவராகவும், பல அறிஞ்ர்களின் (குன்றக்குடி அடிகளார்) நேரிடையாக ஆசி பெற்றவருமாகிய, பந்தாபகட்டு இல்லாத தன்னடக்கவாதியாகவும், திறந்த பன்மொழி வாசிப்பு பழக்கமுள்ளவராகவும், நாவலாசிரியராகவும், நல்ல வழிகாட்டியாகவும் எனக்கு நல்ல நண்பராகவும், குருவாகவும் நான் காண்கிறேன் அவரை. இதுவே அவரின் தனிச்சிறப்பும் கூட.

மருத்துவத்துறையின் மர்மங்களைச்சொல்லும் `உடல் உயிர் ஆத்மாஎன்கிற நாவல், மலேசிய மண்ணில் மட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் முத்திரை பதித்தவிட்ட அவ்வற்புத நாவலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் ஜி.ஜான்சன் தான். தொடரட்டும் எழுத்துப்பணி. இன்னும் அதிகம் படைக்கவேண்டுகிறேன்.

நன்றி தினக்குரல்..