திங்கள், மார்ச் 26, 2012

நான்கு சுவர் ரகசியம்தான்

இன்று கொஞ்சம் சோர்வாகவே உள்ளேன். உணவு எடுப்பதற்குக் கூட மூட் வரவில்லை. இருப்பினும் கடுமையான பசிதான். தாமதமாகவே மதிய உணவை எடுத்துமுடித்தேன்.

சரியான முறையில் காலை உணவும் எடுக்கவில்லை. உடம்பெல்லாம் அடித்துப்போட்டதைப் போன்ற வலி.

பேருக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு மட்டுமே விடுப்பு. வீட்டில் ஏது ஓய்வு.!? வார நாட்களில் தள்ளிப்போடப்பட்ட வேலைகளையெல்லாம் வார இறுதியில் முடித்தாக வேண்டும். இல்லையென்றால், தேங்கி நிற்கும் அனைத்து வேலைகளும் அப்படியே நின்றுபோகும். முடிவே இல்லாதது வீட்டு வேலைகள் தான். இரவு படுக்கைக்குப்போகும் வரை ஓயாது.

நேற்றைய பரபரப்பின் அழுத்தம் கூடுதலாக இருந்ததால், இன்றைய காலைப் பொழுதில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, அரக்கப்பறக்க வேலைக்கு வர நேர்ந்ததால் காலை உணவு எடுக்கவில்லை

முதல் நாள் சமைப்பதை,  காலைவேளைகளில் மீண்டும் சுடவைத்து அதை மதிய உணவிற்கு அலுவலகத்திற்குக் கொண்டுவந்துவிடுவது என் வழக்கம்.

நான் சமைப்பது சாதாரண அரிசி கிடையாது. பொன்னி அரிசி. அதனின் விலை இங்கே அதிகம். ஒரு கிலோ எட்டு ரிங்கிட் விகிதம் விற்கப்படுகிற அரிசி அது. இதன் காரணத்தாலே அதனின் ஒரு பருக்கைக்கூட விரையம் செய்ய எனக்கு மனம் வராது. விலை அதிகம் என்பதால் விரையம் செய்யமாட்டேன் என்பதல்ல, பொதுவாகவே உணவுகளை விரையம் செய்வது எனக்குப் பிடிக்காது.

உலகத்தில் பசி பட்டினியால் வாடித்துடிக்கின்ற மக்களை நினைக்கின்றபோது, உணவுகளை விரையமாக்க எனக்கு மனம் வராது என்கிற போலித்தனமான அனுதாபங்களையெல்லாம் வரவழைத்துக்கொண்டு, கேட்பவர்களின் மனதில் இடம்பிடித்து, தம்மை உலகமகா கருணையாளினியாகக் காட்டிக்கொள்வதற்கு எனக்கு இஷ்டமில்லை... !

நாம் எதற்காக உழைக்கின்றோம்? வாழ்வின் அத்தியாவசிய தேவையில் உணவுதான் முதல்நிலை. வயிறு மட்டும் இல்லையென்றால், நாம் எதற்காக ஒன்பது மணி நேரம் ஓடி  ஓடி வேலை செய்யப்போகின்றோம்.!?  இதன் தேவைக்காகத்தானே படாத பாடுபடுகிறோம்.! அதை ஏன் வீண் விரையமாக்குவானேன்.!

பொதுவாக விடுமுறையென்றால் ஒன்பது மணிக்குமேல் எழுவதுதான் வழக்கம். நேற்று கூடுதலாக அரை மணிநேரம் தூங்கிவிட்டேன். எழும்போது காலை மணி ஒன்பதரை. மாமியார் வேறு மருத்துவமனையில் இருப்பதால், எழுத்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பினார் கணவர்.

எதாவது சமைத்துக்கொடுக்கவா அம்மாவிற்கு? என்றவுடன், இல்லை நேரமாச்சு, வழிவழியப் பார்ப்பார் அம்மா, நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக் கிளம்பினார்.

அதன்பிறகு, நான் தனிமையில்! எனது நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மெது மெதுவாக என் வார இறுதி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். வாசலைப் பெருக்கி, நன்கு தேய்த்துக் கழுவினேன். மேலும் கீழும் மோப், வஃக்யூம் செய்தேன். வாரம் ஒரு முறை செய்யும் வேலைகள் தான் இவை. இடையிடையே மற்ற மற்ற வேலைகளையும், மெத்தை தலையணைகள் உலர வைப்பது, துணிமணிகளைத்தேடி, துவைக்காத துணிகளை துவைக்கப்போடுவது என என் வேலைகள் தொடர்ந்தன. மணி பதினொன்றாகிவிட்டது.

காய்கறி சந்தைக்குக் கிளம்பினேன். தாமதம்தான் இருப்பினும் பொருட்களை மதியம்வரை விற்பனை செய்வார்கள்.

மார்கெட் சென்றுகொண்டிருக்கையில், ஒரு அழைப்பு வந்தது. கணவர்தான். அம்மாவிற்கு மருத்துவமனை உணவு அலுத்துவிட்டதாம், சுடச்சுட ரசம் வைத்து, கொழகொழன்னு சோறு ஆக்கியும் எடுத்து வரமுடியுமா, மதியம் ஒரு மணிக்குள்.? என்றார்.

அழைப்பு வரும் போது காலை மணி பதினொன்று முப்பது. நான் மார்கெட் சென்று சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்வதற்கு எப்படியும் பனிரெண்டு அல்லது பனிரெண்டு முப்பதாகும்.

சரி, மதியம் ஒரு மணிக்குள் சமைத்துவிடமுடியும்தான் இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் செல்லவேண்டும். தாடால் புடால் என்று அவசர அவசரமாக சமைத்து எடுத்துச்சென்றாலும், மதிய உணவுவேளை முடிந்த பிறகே சென்று சேர முடியும். நோயாளிகளின் மதியஉணவு நேரம் 11.30யில் இருந்து 12.30 வரைதான். மேலும் அங்கு மாமிபோன்ற நோயாளிகளுக்கு கஞ்சிதான் உணவு. கொடுக்கும் கஞ்சியில் உப்பு போடமாட்டார்கள், நாம் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனையில்லை.!

காலையிலே இப்படி வெறுப்பேற்றினால் கோபம் வருமா வராதா? எனக்குக் கோபம் வந்தது. எல்லாம் ரிமோர்ட் மாதிரி நடைபெற வேண்டுமென்றால் முடியுமா? மேலும் யாராவது என்னை இப்படி அவசரப்படுத்தினால், அது என்னைத் துன்புறுத்துவதற்குச் சமம். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத ஒன்று, அவசரப்படுத்துவது. நானும் யாரையும் அவசரப்படுத்த மாட்டேன், அதே போல், என்ன தலை போகிற காரியமாக இருந்தாலும், என்னையும் யாரும் அவசரப் படுத்தக்கூடாது. இதனாலேயே, ஆளாய்ப்பறக்கும் அவசர கூட்டங்களுக்கு நான் போகிறதே இல்லை. அவசரப்படுத்தும் பலரை நான் பாதியிலே கலற்றிவிட்டுள்ளேன். அவசர அவசரமாகக் கிடைக்கும் எதையுமே நான் எற்பதுமில்லை. இதுவே என் பாலிஷி.

என்னால் முடியாது. இப்பவே மணி 11.30ஆகிவிட்டது, இனிமேல் வந்து சமைத்து, ஜேம்மில் மாட்டிக்கொண்டு ஆஸ்பித்திரி வந்து சேர எப்படியும் மணி ரெண்டு மூணு ஆகும். அதனால், பக்கத்து ரெஸ்டரெட்ண்டுகளில்
கொஞ்சம் ரசம் வாங்கி, அங்கே கொடுக்கப்படும் கஞ்சியில் அதை ஊற்றி கலந்துகொடுங்கள், இரவு உணவிற்குப் பார்க்கலாம் என்றேன்..சொல்லி முடிப்பதற்குள் தொலைப்பேசி துண்டிக்கப் பட்டுவிட்டது. பேசுவதை நிதானமாகக் கேட்பதற்குக்கூட நேரமில்லாமல் எவ்வளவு அவசரம் பார்த்தீர்களா.!

வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளைத் தொடங்கினேன். திடீரென்று கேஸ் முடிந்து விட்டது. தொலைப்பேசியில் கேஸிற்குச் சொல்லிவிட்டு, வாங்கி வந்திருக்கும் ஞாயிறு பத்திரிகைகளைப் புரட்டினேன்.  பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பு வந்தது.

இங்கே, பத்திரிகைகளுக்கு எழுதும் சில வாசக எழுத்தாள நண்பர்கள் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு சில இலக்கிய விஷ்யங்கள் குறித்துப்பேசுவது வழக்கம். எல்லோரிடமும் இலக்கியம் குறித்து பேசமுடியாது. யாராவது ஒரு சிலர் அத்திப்பூத்தாட்போல் கிடைப்பார்கள். எதாவது சந்தேகம் என்றால் உடனே அழைப்பார்கள். எல்லோரையும் நண்பர்களாக வைத்துக்கொள்ளலாம், ஆனால் குழந்தை குணமுள்ள சிலரிடம் மட்டுமே தொலைபேசி வழியும் பேசுவேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாள வாசக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ஜெயகாந்தனின் கதை ஒன்றினைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். என்னிடம் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு எதுவுமில்லை. கூகுளில் தேடிப்பார்க்கிறேன் என்று சொல்லி, ஒரு கையில் தொலைபேசி மறுகையில் கூகுளில் தேடல். பேசிக்கொண்டே இருவரும்... அவர் சொல்ல நான் தேட, இடையிடையே நகைச்சுவையாக கிண்டல் வேறு. பேருக்குத்தான் எழுத்தாளர், ஆனால் யாருடைய கதைகளையும் வாசிப்பதில்லை, எல்லாவற்றிற்கும் இந்த விஜி ஒருவள் கிடைத்து விடுவாள், தொல்லை செய்ய..  சரியான போங்கு எழுத்தாளர்கள்,
என்று நையாண்டி செய்தேன்.. ஒரே சிரிப்பு.  கலகல சத்தத்துடன். சிரிப்பு, பிறகு உரையாடல் கதையைப்பற்றி சின்ன அறிமுகம் என தொடர்ந்தது எங்களின் பேச்சு. எப்போதுமே தொல்லை செய்பவரல்ல அவர், ஆதலால், கொஞ்ச நேரம் பேசினேன்.

தொலைப்பேசியை வைத்து விட்டு வெளியே வந்தேன், ஹாலில் கணவர். அவர் வந்து எவ்வளவு நேரமாகிவிட்டதென்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பேசியதைக் கேட்டிருப்பார். எனக்குத்தான் குசுகுசுவென பேசத்தெரியாதே. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.! கள்ளங்கபடமில்லா எனக்கு எந்த சங்கடமும் தோன்றவில்லை.

கோபக்கனல் அவரின் முகத்திலும் கண்களிலும்.

``சமையல் ஆச்சா?’’ குரலில் கொடூரம்.

``இல்லை, கேஸ் தீர்ந்துவிட்டது, ஆடர் கொடுத்தாச்சு, இன்னும் வரவில்லை, நீங்க போய் எடுத்து வரமுடியுமா?!’’ எப்போதும்போலவே நான்....

வாசகர்களை, எழுதுத்தாளர்கள் யோசிக்க வைக்க வேண்டுமல்லவா!? அதனால், அதன் பிறகு வந்த படுமோசமான வாசகங்களை, வாசர்களான நீங்களே கோர்த்துக்கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் கெட்டவார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். என்ன மாதிரியான கேவலமான வாசங்களையும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். அது உங்களின் சாமார்த்தியத்தையும், உங்கள் வளர்ப்பின் தராதரத்தையும் பொருத்தது.

நான்கு சுவருக்குள் நடப்பதை, ஒருவரிடம் மட்டும் பகிர்ந்தால் அது ரகசியமாக இருக்காது. பொதுவில் வைக்கும் போது பலரின் மனதில் அது ரகசியமாக பாதுகாப்பாக இருக்கும்.

சொல்லாமலும் இருக்க முடியாது, சொன்னால் பாரம் குறையும்.