செவ்வாய், மே 27, 2014

கோச்சடையான்

தமிழ் சினிமா வரலாற்றில் வித்தியாசமான படமொன்றைப்பார்த்த திருப்தியில் திளைத்துள்ளேன்.

என்ன படம்.?  காத்து மாத்திரி நடக்கிறார்கள்.. பொம்மை மாதிரி நடிக்கின்றார்கள். நடையில் மாற்றம். உடையில் மாற்றம், நடிப்பில் மாற்றம். வாய் அசைவில் வசனங்கள் அமரவில்லை, உடல் அசைவுகளின் நடிப்பு சரியாகச் சேரவில்லை. கண்ணோடு கண்நோக்குதலில் சொதப்பல், தொடுதலில் அணைப்பில் உயிர்ப்பு இல்லை. புதிய பாணியில் படமெடுத்து சரியாக வரவில்லை. தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தேன், பாதியில் எழுந்து வந்துவிட்டேன்.. கார்ட்டூன் படம். குழந்தைகளுக்கான படம்.. என்கிற என் நண்பர்களின் புலம்பல்களைப் பொருட்படுத்தாமல் நான் இத்திரைப்படத்தை திரையரங்கில் சென்று கண்டேன்.

என்னை அதிகம் கவர்ந்த புதிய பாணி திரைப்படம்.. நன்றாக ரசித்துப்பார்த்தேன். வியந்துபோனேன்.

கதையை விடுங்கள். நடிகர்களை விடுங்கள். நடிப்பை விடுங்கள். மறைந்த மறவா கலைஞன் நாகேஷ் அவர்களும் நடித்திருக்கின்றார், அதையும் விடுங்கள். இசை அற்புதம், அதையும் விடுங்கள்.  ஆனால் அந்தப் படத்தின் பிரமாண்டம்  இருக்கிறதே.. ஆஹா.. அற்புதம்.. அப்படியே மனதில் அரியணை இட்டு அமர்ந்துகொள்கிறது.

என்ன கதை.? என்பதில் நான் கவனம் செலுத்தவே இல்லை. மீண்டுமொருமுறை இத்திரைப்படத்தைப்  பார்த்தால்தான் கதையைப் பற்றி என்னால் சொல்லமுடியும்.  காரணம் அரங்கில் கதையோடு நான் ஒன்றவில்லை.

காட்சியமைப்புகள். நாம் எப்போதும் கண்டு ரசிக்கின்ற நடிகர்களின் வித்தியாசமான முகபாவனைகள், மெழுகு பொம்மைகள் போன்ற உருவ அமைப்புகள், கோட்டைகளின் பிரமாண்டம், மிகப் பழமையான உணர்வை நமக்குக் கொடுக்கின்ற சுற்றுச்சூழல். செட் போடப்பட்டது போ்ன்ற தாக்கத்தை ஏற்படுத்தாத இயற்கைக் காட்சிகள், அற்புதமான நேர்த்தியான நடன அசைவுகள்.. ஆதிகால பாரம்பரியத்தைச் சொல்கிற ஆடைகள் அணிகலன்கள். மக்கள், மண், நிலம், புல், மரம், தென்றல், நீர், அலை, கடல், மன்னர்காலத்துக் குதிரைகள், தேர், போர்க்கப்பல்கள், போர்ப்படைகள் என அனைத்தும் அற்புதம். காட்சிகளை ஒன்றுவிடாமல் அணுவணுவாக இரசித்தேன். அற்புதமாக இத் திரைப்படத்தைத் தயாரித்து உள்ளனர். இதுபோன்ற படங்களை நான் இதுவரையில் கண்டு களித்ததில்லை.

கிழவனுக்கு மே ஆப்’களை அப்பி கோப்புகளை ஏந்திக்கொண்டு கல்லூரிகளுக்குச் சென்று பதினாறு வயது பெண் குழந்தையுடன் கட்டிப்புரல்வதைக் கண்டு நொந்துபோன நூற்றாண்டு சினிமா ரசிகப் பெருமக்களுக்கு நல்ல விருந்து. ரஜினிகாந்தை மிகவும் இளமையாக அழகாகக் காட்டியிருப்பது மனதிற்குத் தெம்பைத் தந்துள்ளது.

இதுபோன்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் உலக அளவில் அதிகமாக வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் நான் முதன்முதலில் கண்டு ரசித்த புதிய தொழில்நுற்பக் கலைப்படைப்பு என்றால் அது கோச்சடையான் தான். 

இது தமிழ்ச் சினிமா பரிணாமத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றுகின்ற ஓர் திரைப்படமே என்றாலும், வருங்கால நடிகை நடிகர்களுக்கும் ஒப்பனை மற்றும் ஆடை அணிகலன் கலைஞர்களுக்கும் பேராபத்தைத்  தருகிற  முயற்சியின்  தொடக்கமாகவே   ஆரம்பமாகியிருக்கிறது.  காரணம் இப்படத்தின் ஆடைகள் முக ஒப்பனைகள் அனைத்தும் கணினி இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகியிப்பது வெள்ளிடைமலை.

தொடர்ந்து இதுபோன்ற படங்கள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தால், மறைந்த மூத்த ஜாம்பவான்களான சிவாஜி ஜெமினி எம்.ஜி.ஆர் போன்ற பழம்பெரும் நடிகர்கள் தீபிகா படுக்கோன் போன்ற இளவட்டங்களோடு டூயட் பாடி நடித்துவிட்டுச் சென்று விடுவார்கள்.  வருங்காலத்தில் முதல்வருக்கு பஞ்சம் ஏற்படலாம்.! . :(

படம் அருமை. திரையில் கண்டு ரசியுங்கள்..

சௌந்தர்யா ரஜினிகாந்த சூப்பர்.  - Amazing

கே.எஸ்.ரவிக்குமார் சார்..  Rocking