வியாழன், டிசம்பர் 29, 2011

குண்டுசட்டி நிருபர்கள்

தென்றலில் வந்த எனது கட்டுரை (வாசகர் கடிதம்) -2008

நமது நிருபர்களின் நிலையை நினைக்கின்ற போது, பயங்கர நகைச்சுவைதான் போங்க. !

இங்கே உள்ள நிருபர்களில் பெரும்பாலானோருக்கு ஆராயும் திறன் அறவே இல்லை என்கிற உண்மையை எவ்வளவு நாள் தான் மனதிலேயே பூட்டி வைப்பது? இவர்களின் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது என்பதை நான் சொல்லித்தான் பிறருக்குத்தெரிய வேண்டுமா என்ன!

கண்ணால் கண்டதையும் காதால் கேட்பதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியோ அல்லது அதில் கண், காது, மூக்கு வைத்து ஜோடித்துச் சொல்வதையோதான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சொல்லப்படுகிற தகவல்களில் ஓர் ஆழமான ஆராய்ச்சியோ அல்லது விசாலமான பார்வையோ இருப்பதில்லை. சராசரி வாசகனின் பார்வையை விட, மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பார்கள்.

அதைவிட அதிர்ச்சியூட்டும் விவரம் என்னவென்றால், ஒரு சில நிருபர்கள் (சிலர்தான்) உட்கார்ந்த இடத்திலேயே செய்திகளைச் சேகரித்து எழுதிவிடுகிறார்களாம். ஆச்சிரியமாக இருக்கின்றதல்லவா.! ஆனாலும் இது உண்மை.

சிலரின் செய்திகளால், தனி மனிதனின் தன்மான உணர்வு கூட பாதிக்கப்படுகிறதென்பதும், கேள்விப்பட்ட ஒன்று.

உதாரணத்திற்கு; தலையைச் சொரிந்தால் - பேண் தொல்லையால் திண்டாடுகிறார், என்றும், கொட்டாவி விட்டால் - கூட்டத்தில் குறட்டை விட்டு நன்கு தூங்கினார், என்றும், கண்களைத்துடைத்தால் - சோகம் தாளாமல் பொது நிகழ்வில் கண்ணீர் விட்டுக் கதறியழுதார், என்றும் பரபரப்பாக செய்திகள் எழுதிவிடுவார்களாம்.

பாருங்கள், எப்படியெல்லாம் ஒரு படி மேலே சென்று, அறிவுப்பூர்வமாக யோசித்து கதைகளைச் சேர்த்து செய்தி எழுதுகிறார்கள் என்று. !?

நிருபர்களின் கூர்மையான சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் கண்டு புல்லரித்த அனுபவமும் உண்டு.

‘புளிய மரத்தில் புள்ளையாருக்குப் பூஜை. அரசமரத்தில் ஆத்தாவிற்கு அருள் வந்தது. மாங்கா மரத்தில் மாரியம்மாளுக்கு மாலைகள் குவிகின்றன. ஆலமரத்தடி கணபதி பால் அருந்துகிறார். வேப்பமரத்தில் பேய், போன்ற விவரங்கள் அரசல்புரசலாக தெரியவந்தால் - பேனா என்கிற கூர் ஆயுதத்தையும், கேமரா என்கிற போர்வாளையும் தூக்கிக்கொண்டு தலைத்தெறிக்க அவ்விடம் நோக்கி ஓடி.. நான், நீ என முந்தி கொண்டு, அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கிப் பிரபலப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு அது அதிசயம் என்பதால் எழுதிப் பிரபலப்படுத்துகிறார்களா அல்லது உள்ளபடியே அவலம் என்கிற பார்வையில் பதியப்பட்டதா என்பது கூட நமக்குக் குழப்பமாக இருக்கும்.

இதைவிட இன்னொரு மிக மோசமானது - யாராவது ஒரு ஏழைப்பாட்டி, வயிற்றுப்பிழைப்புக்காக ‘கரிபஃப்’ செய்து பிழைப்பு நடத்துகையில், அவரின் செய்கிற வியாபார விளம்பரப் பலகையில் ‘கரிபஃப் விற்கப்படும்’ என்று எழுதிவிட்டால் போதுமே.. `தமிழ் கொலை செய்யும் வியாபாரிகள்’ என்கிற செய்தியோடு, பாட்டியின் புகைப்படமும், அந்த ஒட்டுக்கடையின் புகைப்படமும் ‘கரிபஃப்’பைத் தமிழில் எப்படிச்சொல்வார்கள் என்கிற விளக்கத்தோடு செய்தி ஒன்று வெளிவந்துவிடும். கேட்டால், சமூதாய அவலத்தைக் கண்டு வெகுண்டெழுகிறார்களாம்!

புகைப்பட கலைஞர்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் எல்லாப் புகைப்படங்களுமே, யாருக்காவது கூஜா தூக்குவதைப்போல் தான் இருக்கும். தமக்கு வேண்டப்பட்டவர்களென்றால், அவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து அழகாகக் காண்பிப்பார்கள். அரசியல் பிரமுகரென்றால், புகைப்படக் கலைஞருக்கு எல்லாமும் அவர்தான். மேலும் அந்தக் கேமரா கலைஞரை யாராவது ஓரிரு வரிகள் மேடையில் புகழ்ந்து பேசிவிட்டால் போதும். ஃக்ளோசப்பில் அவர்கள் தான், எல்லாக் கோணத்திலும் அவர்கள் இருப்பார்கள்.  அதிலேயே நமக்குத் தெரிந்துபோகும் அவர்களின் சீரிய சமுதாயப் பார்வையும் உள் நோக்கமும்.!

புதுமைச் செய்திகளால் கண்களை அகல விரியவைக்கும் ஆய்வுகள், புல்லரிக்கவைக்கும் புதிய தகவல்கள், உலகையே புரட்டிப்போடும் புகைப்படங்கள், மெய் சிலிர்க்கவைக்கும் கருத்துக்கணிப்புகள், அதிர்ச்சியும் ஆச்சிரியமும் நிறைந்த மர்ம புகைப்படங்கள், விசாலமான வித்தியாசமான பார்வை, அறிவியல் ஆராய்ச்சி, ஆதாரப்பூர்வமான உலகக் குறிப்புகள், விவேகமாக வேகமாக  சிந்திக்கும் திறன் என நித்தம் போராடிக்கொண்டிருக்கும் உலக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் எங்கே! குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் நமது நிருபர்கள் எங்கே?

(இதையொட்டி, மிக மோசமாக  என்னைத்திட்டித்தீர்த்த கடிதங்களையும் சேகரித்துள்ளேன்.  (விடுவார்களா பின்ன!?) அது வேண்டாம்) ..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக