வெள்ளி, ஜூலை 01, 2011

இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே


டந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.
எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.
ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.


இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.
அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.
பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை
இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர்ஆய்வாளர்பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.
அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார்மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.
பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.
பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.
ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாகமாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.

(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும்திறந்து பார்க்கும்ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம்உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம்உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.
அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

நன்றி
திருத்தமிழ்

நன்றி 
வேணுகோபால்  

வெள்ளி, ஜூன் 03, 2011

சைவம்



சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.




விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.

நன்றி
வேணுகோபால்