புதன், மே 02, 2012

மல்டி லென்ஸ்

சில நாட்களாகவே தீராத தலைவலி. கண் பார்வை பிரச்சனையோடு, பழைய மூக்குக்கண்ணாடியும் கோளாறாகிப்போனதால் தொடர் சோர்வு தலைவலி என துன்புற்றேன். முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள கண் நிபுணர்களிடம் சென்றேன்.

``தலைவலிக்கு எனது மூக்குக்கண்ணாடிதான் பிரச்சனையானது. அதை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும். காரணம், ஒரே கண்ணாடியில் தூரம் மற்றும் கிட்டத்துப்பார்வைக்கான மூக்குக்கண்ணாடியை அணிவதென்பது எல்லோருக்கும் பொருந்தாத ஒன்று. மேலும் உனக்கு ஒரு கண் கிட்டப்பார்வையில் கோளாறு, ஒரு கண் தூரப்பார்வையில் கோளாறு. அப்படியிருக்கும்போது தூரம், கிட்டே என இரண்டுக்கும் உள்ள ஒரே மூக்குக்கண்ணாடியை அணிவது, பல பிரச்சனைகளைக் கொண்டுவரும். நீ கண்டிப்பாக தூரத்துப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும், கிட்டப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும் தனித்தனியாக அணிந்துகொள்வதுதான் சிறப்பு. மேலும் உன்னுடைய பழைய பவர் அதே நிலையில் இல்லை. அது இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகி இருக்கின்றது, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும்.’’ என்றார் கண் நிபுணர். தலைவலிக்கான காரணமும் தெரிந்துவிட்டது.

அவரின் அந்த முழு பரிசோதனைக்குப்பிறகு, அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு அங்கே மருத்துவமனையிலேயே இருக்கும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் கடையில் கண்ணாடி வாங்கச் செல்லவேண்டும்.

மூக்குக்கண்ணாடிகளை வெளியே செய்வதை விட, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலேயே செய்துகொள்வதென்பது செலவு மிச்சம். நான் ஏற்கனவே ஆடர் செய்து வாங்கிய ஒரு கண்ணாடியின் விலை வெளியே ரிங்கிட் அறுநூறு, ஆனால் இங்கே அதில் பாதிதான் அதனின் விலை. அதுவும் multi code and multi focus lens தான்.

ஆடர் கொடுத்த கண்ணாடியை ஒரு வாரம் கழித்து வந்து எடுத்துக்கொள்ளச்சொன்னார்கள்.

ஒருவாரம் கழித்து, இன்று, அக்கண்ணாடியை எடுக்கச்சென்றிருந்தேன். நிறையை பேர் காத்திருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக வரச்சொல்லி, அவர்களிடம் மூக்குக் கண்ணாடிகளைப்பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள், அக்கடையின் ஊழியர்கள். அவர்களும் மருத்துவமனை ஊழியர்களே. பயிற்சிப்பெற்ற தாதிகள்.(ஆண்கள்/பெண்கள்)

அவ்வரிசையில் நானும், என்னுடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும் உள்ளே சென்றோம். அவருக்கு ஒரு ஆள், எனக்கு ஒரு ஆள் என, கண்ணாடி ஃபிரெம்’களை தேர்ந்தெடுக்க உதவி செய்துகொண்டிருந்தார்கள் அங்குள்ள ஊழியர்கள். நேரமெடுத்து நம்மை கவனித்துக்கொண்டார்கள். ஜவுளிக் கடையில், புடவையை எடுத்துப்போடுவதைப்போல, கேட்கின்ற எல்லாக் கண்ணாடி ஃபிரெம்களையும் எடுத்துப் போட்டார்கள். நானும் ஒவ்வொன்றாக போட்டுப் போட்டு அழகு பார்த்து தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன்.  என்னுடன் உள்ள நுழைந்த அந்த அறுபது வயதுத்தக்க ஆடவரும் அதேபோல் தேர்ந்தெடுத்து அழகுபோட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். நானாவது பரவாயில்லை, தேர்தெடுத்து விட்டேன், ஆனால் அவர் செய்த கூத்து இருக்கே, இன்னமும் எனக்கு சிரிப்புத்தான்.

பலவிதமான கண்ணாடிகளை, அவர் கொஞ்சம் மாடர்ன் டைப் ஆள் போலிருக்கு, சும்மா அப்படித்தான் போட்டுப்போட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தார். மூக்கில் மாட்டினார், நீண்ட கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்தார், தலையை சாய்த்துப்பார்த்தார், முகத்தை கீழ் நோக்கிப்பார்த்தார், கண்களை மேல் நோக்கிப் பார்த்தார், கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பார்த்தார், ஒரு கையில் தலை முடியைக் கோதியவாறு பார்த்தார். சிரித்துப்பார்த்தார், திருப்தியில்லை போலும் மீண்டும் மாற்றி மாற்றி `அதை எடு, இதை எடு’ என, ஃபிரெம்களை போட்டிருக்கின்ற சட்டைக்கு தோதாகவும் தேடினார்.வயது அறுபது இருக்கும் ஆனால் சும்மா டாப்ப்பா ஜிம்முன்னு அழகாக இளமையாகவே இருந்தார்.

இறுதியாக ஃபிரெம்லெஸ் கண்ணாடி, மல்டி கோட், மல்டி ஃபோகஸ் மற்றும் மல்டி லென்ஸ். என தேர்ந்தெடுத்தார். . மல்டி லென்ஸ் என்றால், வெளிச்சத்தில் வெயிலில் செல்லும் போது, கண்ணாடி தன்னாலே கருப்பு, நீலம், சிவப்பு போன்ற வர்ணங்களில் கூளிங்க் கிளாஸாக மாறி கண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குகிற அதேவேளையில் ஒர் அழகான தோற்றத்தையும் தரவல்ல அற்புதமான மெஜிக் கண்ணாடி அது.

உள்ளபடியே சிறப்பான மூக்குக்கண்ணாடியின் ஃபிரெம்மை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அதன் விலையைக் கேட்டவுடன், அவருக்கு மயக்கமே வந்து விட்டது.

`என்ன இவ்வளவு விலையா?, வெளியே இதனின் விலை அதிகம் என்பதால்தான் நான் இங்கே வந்தேன், இங்கேயும் இவ்வளவு விலையா?” விலையைக்கேட்டு விட்டு மிரண்டு போனார்.

மருத்துவமனை ஊழியர்கள், அவர் எடுத்துவைத்திருந்த அந்தக் கண்ணாடியின் தரம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள். ``வேறு வேண்டுமானால் தருகிறோம் சார், கொஞ்சம் மலிவாக, ஆனால் இது முடியாது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபிரெம்மே அதிக விலையுள்ளது. விலையைக் குறைக்க முடியாது, அதனின் விலையே அவ்வளவுதான். நாங்கள் ஏற்கனவே அரசாங்க உத்தரவின்படி மலிவு விலையில் தான் விற்பனை செய்துகொண்டிருக்கின்றோம்,  இதில் ஏமாற்று வேலையெல்லாம் கிடையாது சார்’’ என்றார்கள்.

சுற்றும் முற்றும் பார்த்தார், என்னைப்பார்த்து ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தார். நான் இன்னமும் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன், காரணம் என்னுடைய கண்ணாடியை ஃபிரெம்மிற்கு சரியான அளவில், வெட்டி நுழைக்க உள்ளே எடுத்துச்சென்று விட்டார்கள். கொஞ்ச நேரம் காத்திருக்கவேண்டிய தருணத்தில் இந்த காட்சிகள்.

இறுதியாக அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.. `` நான் ஏழை, எனக்கு வயது அறுபதிற்கு மேல், ரிட்டையர் ஆகிவிட்டேன், வருமானம் இல்லை, வயதானவர்களுக்கு பாதி கழிவு கொடுப்பார்களே, அது இந்த மூக்குக்கண்ணாடி விஷயத்தில் இல்லையா?” என்றார்.

கண்ணத்தில் கை வைத்து, தலையை ஒரு பக்கம் சாய்த்தவாறு, அப்பெண் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள், என் கண்ணாடி தயாராகி வரவும், நான் வெளியே வந்து விட்டேன்.



பார்வை

என் பார்வையால்
உலகத்தைப் பார்க்க
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தவரை
நானும்
பார்த்தேன்
பார்க்காமல்

செவ்வாய், மே 01, 2012

தொழிலாளர் தின வாழ்த்துகள்


வளர்ந்து வரும் ஒரு வாசக எழுத்தாளரை, பள்ளியில் போதிக்கின்ற ஒரு ஆசிரியர் விமர்சிக்கின்றார் இப்படி!

உன் எழுத்தில் பிழை இருக்கு, உனக்கு இலக்கண அறிவு இல்லை. ஆராம்பப் பள்ளி மாணவன் எழுதுகிற தமிழின் நிலைமையை விட உனது தமிழ் மோசமானது, தமிழே சரியாக எழுதத் தெரியாத நிலையில், பேனா பிடிப்பதால், இந்த இலக்கிய சூழல் பாழாய்ப்போகும். அதை முதலில் வளர்த்துக்கொள், பிறகு எழுத்தாளராக வலம் வரலாம்.

பல மாணவர்களை வளர்த்து விடுகின்ற அரிய பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் பார்வையைப் பார்த்தீர்களா?  அவரிடம் பாடம் படிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்த்தீர்களா?
மனநோயாளிகளின் உற்பத்தித் தொழிற்சாலை எது என்று புரிகிறாதா? அவர்களை உருவாக்குகின்ற அரிய பங்கு யாருடையது, பார்த்தீர்களா?

நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அருகில் நின்றுக்கொண்டு, பல்லைக்காட்டி புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டுக்கொள்கிறார்கள்.... இவர்களால் அம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்களாம்.!? அதுவும் மலேசிய சூழலில்.!?

நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை பெற்றோர்கள்தான் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சுயமரியாதை, தன்னம்பிக்கை, பணிவு  போன்றவற்றை ஊட்டி வளார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அல்ல.!  மார்த்தட்டிக்கொள்கிறார்கள் வெட்கமில்லாமல்.

திங்கள், ஏப்ரல் 30, 2012

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஷா ஆலம் விஜயாவுடன் ஒர் நேர்காணல் –

கேள்வி: வாசகர்களால் அடிக்கடி காயப்படுகிறீர்களே, எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?
 எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார், எழுதுவதற்கு ஏழ்மை நிலையும் கோபமும் அவசியம் வேண்டுமென்று. நாமெல்லம் ஏழைகளே அல்ல, மூன்றுவேளை மூக்கப்பிடிக்க சாப்பிட்டு விட்டு, குளுகுளு அறையிலேயே பெரும்பாலும் வாழ்கிறோம். ஆகவே பண்பட்ட எழுத்து வருவதற்கு வாய்ப்பில்லைதான் ஆனால் கோபம்? அது எல்லோருக்கும் வரும். அதுவும் எழுத்தாளர்களின் நியாயமான கோபம் எழுத்து வடிவம் பெறுகிறபோது, அது அற்புதமான இலக்கியமாகிறது. இது பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் தெரிந்து விடுவதால் சில வாசகர்கள் வாசக நிலையிலேயே தேங்கிவிடாமல், அவர்களை அடுத்தக்கட்ட நிலைக்குக் கொண்டு செல்லத் தூண்டுவதே இந்த சர்ச்சை சமாச்சாரங்கள்.  மேலும், சிலரைத்தான் இதுபோன்ற சர்ச்சைகளில் மாட்டிவிடுவார்கள், எல்லோரையும் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று, அதாவது.. காயமே இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்பவன், எதுவுமே செய்யாதவன் என்று அர்த்தம். புண்பட்டவன் பண்படுகிறான். மிதிக்கப்பட்டவன் குடமாகிறான், குத்தப்பட்டவன் சிலையாகிறான், அடிக்கப்பட்டவன் தங்க ஆபரணமாகிறான். ஆக, காயமெல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை. வாசிப்பில் ஒரு படி மேலே வளர அது உரமிட்டிருக்கு. பேட்டி எடுக்க, என்னை நீஙகள் தேர்ந்தெடுக்க இவையும் காரணம்தானே.! பெரிய விஷயமில்லையா இது.! கொஞ்சம் வலி இருக்கும், இரண்டு மூன்று நாள்கள் கழித்து அற்புதமான விவாதக் கட்டுரை தயாராகும். அவ்வளவே.

கேள்வி : வாசகர் தளத்தில் ஏற்படும் சர்ச்சைகளால் எழுதுகோல் சோர்ந்துபோன நிகழ்வுகள் உண்டா?
இல்லைஎழுதுகோலின் இதயத்துடிப்பு அதிகரித்து, அது இன்னும் அதிவேகமாகக் கிறுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளை காகிதத்தை கருப்பு எழுத்துகளால்.!

கேள்வி : வாசகர்களின் தாக்குதல்களுக்கு இரையாகும்போது, அதை எவ்வாறு மத்திப்பீடு செய்கிறார் உங்களின் கணவர்?
அவரின் வாசிப்பு எல்லாம் அரசியல் சம்பந்தபட்டது. இங்கே நாம் உளறிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒரு பொருட்டாக அவர் வாசிக்கமாட்டார். ஆரம்பத்தில் அவரும் எழுத்துலகில் இருந்ததால், இவையெல்லாம் ஒரு விஷயமாகக் கருதி மூக்கை நுழைக்கமாட்டார். (அப்பாடா தப்பித்தேன்)

கேள்வி : வலைப்பூ, முகநூல் மற்றும் இணையங்களில் மிகுதியாக முகங்காட்டுவதால், வாசிப்பின் பரப்பளவு சுறுங்கிவிட்டதாக உரைக்கப்படுகிறதே, இதை மீட்டெடுக்க முடியுமா?
முகநூல் உலகிற்கு அறிமுகமாகி ஏறக்குறைய ஏழு வருடங்கள் தான் ஆகின்றன.! இதற்கு முன் நாம் புத்தகமும் கையுமாக இருந்தோமா என்ன? எனக்கென்னவோ, தமிழ் நாட்டுத் தொடர்களின் ஆதிக்கம் நம் தொலைக்காட்சியை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் நாம் நமது வாசிப்புப் பழக்கத்திற்கு முழுக்கு போட்டுவிட்டோமென்று தாரளமாகச் சொல்வேன்.  புத்தக வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்கள் இன்னமும் தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எந்த இணையச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரையில், முகநூல் சகவாசமே என்னை அதிகமாக வாசிக்கத்தூண்டியது என்பேன். வலைப்பூவில் கால் பதிக்கவும் இந்த மூகநூல் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளதை இங்கே நான் கண்டிப்பாக சொல்லியாகவேண்டும் .
சமூக வலைத்தளங்களில், முகநூல் மிகப்பிரபலம், அதில் தம்மை இணைத்துக்கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு குறுகிய காலகட்டத்திலேயே உலகம் முழுக்க தமது அசுர ஆதிக்கத்தைச் செலுத்திய ஒர் தொடர்புச்சாதனம் இந்த முகநூல்.. இதில் நண்பர்களின் வெட்டி அரட்டைகள் வீன் வம்புப்பேச்சுகள் ஒரு புறமிருந்தாலும், கற்பதற்கு அரிய விஷயங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. என் விஷயத்தில், எல்லோரும் நுழைகின்றார்களே என்று சும்மானாலும் நுழைந்து பார்த்தேன், அதன் பிறகுதான் தமிழ் நாட்டின் அற்புதமான இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அற்புதமான வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த அறிமுகம் இலக்கிய உலகின் மேல் மரியாதை வருவதற்குக் காரணமாக அமைந்தது. கவிதைகளை அதிகமாக வாசிக்கக் கற்றுகொண்டேன். (கவிதைகள் எழுதுவது ஒரு புறமிருக்க, அவைகளை வாசித்து உள்வாங்கி மறைந்து கிடக்கின்ற கருபொருளைப் புரிந்துகொள்வது,  விடுகதைகளுக்கு விடை தேடுவதைப்போல் சுவாரஸ்யமான ஒன்று.) கவிதை மொழி, கவிதை உணர்வு, கவிதைக்கரு என மேலும் உள்வாங்கப் பழகிக்கொண்டேன். சமூதாயத்தில் எழுத்தாளார்களின் பங்கு பற்றிய தெளிவு வந்தது, இலக்கு நோக்கி எழுதப்படுவதுதான் இலக்கியம் என்கிற புரிந்துணர்வு புத்தியில் புகுத்தப்பட்டது. பட்டைதீட்டிய மறுவாழ்வு கிடைக்கப்பெற்றதுபோன்ற தெளிவு எட்டிப்பார்த்தது . அவற்றை நமது படைப்பு இலக்கியத்தில் எப்படிப்புகுத்துவதென்பது யோசிக்கப்பட்டது.. அதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் முத்திரை பதிப்பதென்பது அவ்வளவு எளிதல்லவே.! காலம் வரட்டும். பார்ப்போம்.

கேள்வி : புனைவிலக்கியம், பத்தி, கவிதை, இவற்றில் தீவிர கவனம் செலுத்துவது எதில்?
தீவிர கவனம் செலுத்துவதால் இலக்கியம் வந்துவிடாது. அது ஒரு நிகழ்வு, காதல் போல்.! ஓஷோ சொல்கிறார், ‘மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது நேர்மையுடன்.’  82வயது மூதாட்டியின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது பாணியிலேயே எழுதப்பட்டுதமிழ் நாட்டில் சிறந்த இலக்கியமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதாக, அண்மையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.  மனதில் உதிப்பதை நமது பாணியில் இஷ்டம் போல் கிறுக்கி வைக்கவேண்டியதுதான். கட்டுரையாக வந்தால், அது கட்டுரை.! கதைபோல் வந்தால், அது கதை.! கவிதைபோல் இருந்தால், கவிதை. எல்லாமே இலக்கியம்தான். சிலது நம்மை என்னவோ செய்த இலக்கியம். சிலது நம்மை ஒன்றுமே செய்யாத இலக்கியம். அவ்வளவுதான்.! எனக்கு எல்லாமும் வரும் இலக்கண எழுத்துப் பிழைகளோடு. அவைகளை பொறுமையாகத் திருத்தி வெளியிட்டு, தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இவ்வேளையில் எனது மனப்பூர்வ நன்றி.

கேள்வி : உங்கள் எழுத்துக்களை ஆவணப்படுத்தியுள்ளீர்களா?
ஒரே ஒரு சிறுகதை, எண்பதுகளில், ஒரு வருட தைபூச வெளியீடாக வந்திருந்தது. அந்தச் சிறுகதையின் பெயர் பூஜைக்கு வந்த மலர்’. என் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பும். நம் நாட்டின் பிரபல எழுத்தாளர் கா.இளமணியின் அறிமுக முன்னுரையால் அன்று எழுத்துலகில் கால் பதிக்க நினைத்த முற்றிலும் புதிய வாசகர்களை உற்சாகமூட்டும் வகையில் மலர்ந்து பலரைச் சென்றடைந்தது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லைதான். பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது அனைத்து எழுத்துப்படிவங்களையும் வெட்டிச் சேகரித்து வைத்துள்ளேன். இப்போது அவைகளைக் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கின்றேன். உலகமுழுக்கப் போகின்றன. எனது வலைப்பூவை அதிகமாக வாசிப்பவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். (யூ.எஸ்). தமிழ் நாட்டு இணைய இதழிலும் எனது கவிதைகள் கட்டுரைகள் அவ்வப்போது இடம்பெற்று உட்சாகமூட்டிய வண்ணமாகத்தான் இருக்கின்றன.

கேள்வி : வெற்றிகரமாக பெண் இலக்கியவாதிகள் தங்களின் ஆய்வுக்களத்தை நகர்த்தியிருக்கின்றார்களே!
ஆமாம், கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்

கேள்வி: ஆண் இலக்கியவாதிகளுக்கு நிகராக பெண் இலக்கியவாதிகளும் இப்பரப்பில் உழுது வந்திருப்பதானது தித்திப்பான விஷயம் தானே!!
இன்னும் சரியாக வெளியே வரவில்லை என்றுதான் சொல்வேன். பொதுவாழ்க்கை கொடுக்கின்ற காயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது பெண்கள் இன்னமும்  இந்திய சமூகக் கலாச்சாரப் பின்னணியில் பிண்ணிப் பிணைந்திருப்பதால்ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனையிலே முடக்கப்பட்டு விடுகின்றனர். பெண்கள் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து, படப்பிலக்கியத்தில் வலம்வர ஆரம்பித்தால்ஆண்களையே மிஞ்சி விடுவார்கள் என்று நம்பலாம். பெண்கள் சிறந்த படைப்பாளிகள். சமூதாய அவலங்களை அழுத்தமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெண்களிடம் உண்டு. தேவதாசி பரம்பரைக்கு மீண்டும் உயிரூட்ட நினைத்த ஒரு பிராமணரின் முகத்திரையைக் கிழித்தவர் முத்துலட்சுமி என்கிற பெண் தான். பாரதியார் சொல்லியிருப்பார், பெரியார் சொல்லியிருப்பார், மகாத்மா காந்தி சொல்லியிருப்பார் பெண்ணுரிமையைப் பற்றி ஆனால் தனிப்பட்ட பெண் ஒருவளுக்கு அவளின் உரிமை பற்றியும் சுத்தந்திரம் பற்றியும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். திட்டுகிற கணவனை உடனே விவாகரத்து செய்வது தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்ற ஊனத்தனமான சிந்தனை எங்கிருந்து வந்ததென்பதுதான் புரியவில்லை.!?

கேள்வி : இன்று புதுக்கவிதையிலும் சுரத்து குறைந்து இருப்பதாக குற்றச்சாட்டு பதிவாகிறதே! (உங்களையும் என்னையும்)
அப்படியில்லையே.. புதுக்கவிதைகள்தாம் அற்புதமான விவரங்களை இரண்டு மூன்று வரிகளிலேயே மிக எளிமையாக எடுத்தியம்புகின்றனவே.

உதாரணம் சில  

காவடி

மயில்கள் வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும்
முருகனுக்காக..

தேங்காய்கள்
பற்றாக்குறை
தெருவில் உடைக்க
பக்தர்கள் கோஷம்
தைபூசத்திருநாள்

எளிய வழி
இலக்கியத்தில்
எல்லாமும் உண்டு
இறைவனையே
நாடுகிறார்கள்

இவைகளின் சுரத்தில் என்ன குறை? (நான் எழுதியவை)

யாருக்கு எது பிடிக்கிறதோ அதைப் பிடித்துக்கொள்ளவேண்டியது தான். பிரம்பால் அடித்தாலும் வராத விஷயத்தில் மூக்கை நுழைக்க எனக்கு எப்போதுமே விருப்பமில்லை.

கேள்வி : வாசிக்க நேரத்தை எவ்வாறு ஒழுங்குப்படுத்துகிறீர்கள்?
தொலைக்காட்சி பக்கமே போக மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன் ஆங்கிலம் மலாய் என எதுவாக இருந்தாலும். கையடக்க இதழ்தென்றல் எப்போதும் இருக்கும் என்னோடு.

கேள்வி:  உங்களின் எழுத்துப் பணிக்கு கணவரின் பங்களிப்புப் பற்றி கூற இயலுமா?
தொல்லை கொடுக்காமல் சும்ம இருப்பதுவே.

கேள்வி : தாங்களின் அன்புக் கணவர், மழலைச் செல்வங்கள் ஆகியோருக்கு முகங்காட்டி வளர்த்தெடுத்தது செம்மொழி தமிழா?
ஆம்

கேள்வி : வாசகர் தளத்தில் முன் மொழிய ஏதேனும் விருப்பம் உண்டா?
நீ கற்பதை நிறுத்தினாலும், வாழ்க்கை உனக்குப் போதிப்பதை நிறுத்தாது. தெரியாத்தை தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருங்கள். கற்றவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கற்றுக்கொடுக்க.!

தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்.

கேள்விகள் அனைத்தும் அற்புதம் ஐயா. உள்ளபடியே யோசிக்க வைத்தன. நன்றி.

(இன்று, தென்றல் வார இதழில் வந்த எனது நேர்காணல்)

வியாழன், ஏப்ரல் 26, 2012

இயந்திர வாழ்வின் ஆரம்பம்

இப்போதெல்லாம் நான் தினமும் காலையிலே, எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் மகளை ஏற்றிக்கொண்டுதான் வேலைக்கு வந்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக.! அவள் பள்ளி விடுமுறையில் பக்கத்துக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். பதினேழு வயது பெண் தான். பள்ளி மாணவிபோல், அமைதியாகவே இருப்பாள். சிரிப்பதுகூட தவணை முறையில்தான். யோசித்து சிரிப்பாள். அவளை அழைத்துக்கொண்டு வருவதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பினும், அவர்களுக்கு வேறு வழியில்லை. நானும் உதவுகிறேன்.

உங்கள் ஏரியா உள்ளே நுழைய முடியவில்லை, வாகன நெரிசல், வெளியே எப்படியாவது வந்துவிடு, என்றேன். அவளும் இப்போது வெளியே ரோட்டோரமாகத்தான் நிற்கிறாள். மேட்டில் ரோடு என்றால், கீழே சாலையோறமாக அவளின் அம்மாவும், நான் வரும் வரை அங்கேயே காத்திருப்பார். இதுவரையில் அவள் தாமதமா வந்ததேயில்லை. நான் எவ்வளவு விரைவாகச் சென்றாலும், அவள் அங்கே அந்த பேருந்து நிலையத்தில் காத்திருப்பாள். 

வெளியே நிற்கச்சொல்லியும், அவளுக்கு நான் கொடுக்கும் கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. உதவுதல் என்றால் சும்மாவா! என் வசதிக்கேற்ப, இங்கே நிற்கவேண்டாம், காரை இந்த இடத்தில் நிறுத்த முடியாது, அதனால் அங்கே நில், என்றேன். அவளும் மறு நாள் அதே போல். அங்கே நின்றாள். அங்கே நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் பொறுமையை இழந்து ஹாரன் செய்யும் போது, எனக்கு தர்மசங்கடமாக இருந்ததால், இங்கே வேண்டாம், கொஞ்சம் தள்ளி அந்தப்பக்கம் நில் என்றேன், அவளும் அதுபோலவே.. இருப்பினும் என்க்கு அங்கு நிறுத்தி அவளை ஏற்றுவதும் கடினமாகவே இருந்தது. காரணம் அந்த சாலை ஒரு ஹைவே. கார்களின் வேகம் பற்றிச்  சொல்லவே வேண்டாம்.! அங்கும் நினைத்த நேரத்தில் இஷ்டம்போல் கார்களை நிறுத்தவே முடியாது . பின்னாலிலிருந்து அடித்துப்போட்டு விட்டுச்செல்லுகிற வாய்ப்பு உண்டு. அது ஆபத்து.

ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கும், அதற்கு முன்னால் ஒரு நீளமான மேம்பாலம் இருக்கும், அங்கே நிறுத்தலாம் ஏற்றலாம். காரணம் அந்தப்பக்கம் ஒரு பள்ளி இருப்பதால், வரும் கார்களின் வாகனம் கொஞ்சம் மெதுவாகவே இருக்கும், அதனால் அங்கு பயமில்லை. அங்கே நிற்கமுடியுமா? என்றேன். அமைதியானாள், காரணம் அவர்களின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் வரவேண்டும். நடந்து வரவேண்டுமென்றால் நேரமெடுக்கும், கண்டிப்பாக காரிலோ மோட்டாரிலோ தான் கொண்டுவந்து விடவேண்டும். பெற்றவர்கள் தான் செய்யவேண்டும். கடமையல்லவா! என்ன செய்வது, எல்லோருக்கும் தான் பிரச்சனை. ஒன்றும் பேசவில்லை அவரின் அம்மா, சரி செய்கிறேன் என்றார்.

மழையோ வெய்யிலோ.. அவர்கள் அங்கே இருப்பார்கள் இல்லையேல் நான் கிளம்பி விடுவேன். இப்படியே போராடி போராடி ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது.

இந்த ஒரு மாத காலத்தில், அவள் பண்ணிய ஒரே ஒரு கூத்து என்னெவென்றால்.. !! அன்று ஒரு நாள், வேலை முடிந்து, நான் வெளியே காத்திருந்தேன். முன்பெல்லாம் வேலை முடிந்தவுடன்,  தோழியைப் பார்க்கச்செல்வேன், மார்க்கெட் செல்வேன், நானும் தோழியும், அன்னா கடை ரொட்டி சானாய்’யும் ப்ரூ காப்பியும் குடிக்கச்செல்வோம், அந்த ஏரியா பக்கம், வியாழன் அன்று போடப்படும் இரவு சந்தைக்கு, இங்கே வேலை செய்யும்  தோழிகளோடு உலா செல்வேன். அங்கே விற்கப்படும் அப்பம்பாலிக் ரொம்ப ஸ்பெஷல். எங்குமே அந்த சுவை  கிடைக்காது. மேலும் அங்கே செய்கிற அப்பம்பாலிக் வெறும் கச்சான் மட்டும் போடப்பட்டு செய்யப்படுகிற அப்பம்பாலிக்காக  இருக்காது, அவை பலவித சுவைகளில் கிடைக்கும். வேறு எங்குமே அம்மாதிரியான அப்பம் பாலிக் நான் பார்த்ததில்லை. வாழப்பழ அப்பம்பாலிக், டுரியான் அப்பம்பாலிக், பலா அப்பம்பாலிக், சோள அப்பம்பாலிக், சாக்லெட் அப்பம் பலிக், ரொட்டிதூள் அப்பம்பாலிக் ச்சீஸ் அப்பம்பாலிக் என வித விதமாகக் கிடைக்கும். அதை வாங்குவதற்கென்றே செல்வோம்.

இந்த பெண்னை, நான் ஏற்றிச்செல்கிற கடமை வந்ததிலிருந்து, இந்த வேலையெல்லாம் இல்லாமல், வேலை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பி விடுவேன்.  (சோகமாக). அவளையும் அழைத்துக்கொண்டு சுற்றச்  செல்லலாம் தான், பாவம் அவளின் அம்மா, ரோட்டோறமாக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்.!? இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும் என, எனது சுற்றும் வேலைகளையெல்லாம் ஒத்திப்போட்டேன்.

வேலை முடிந்து விட்டது, நான் வெளியே காத்திருக்கிறேன். மணி  ஐந்தரை  ஆகி, ஆறாகிவிட்டது, போன் செய்கிறேன் வாயிஸ் மெசிஜ் போகிறது. அவங்க அம்மாவிற்கு அழைத்துச்சொன்னேன், அவரும் இதே பதில் தான், அழைப்பு போகவில்லை என. சரி கிளம்பிம்புவோம் என கிளம்பினேன் மனசு வரவில்லை. காத்திருந்தேன்.

மெதுவாக வந்தாள், எனக்கோ.. பயங்கர கோபம். ``ஏன் இவ்வளவு நேரம், எனக்கு என்ன, வேறு வேலை வெட்டி இல்லியா!? போன் அடிச்சாலும் கிடக்கல, என்ன விவரம்னு சொல்லிட்டா நானும் கொஞ்ச நேரம் ஆபிஸிலே உட்கார்ந்திருப்பேன்ல.. கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல், நான் என்ன நீங்க வைச்ச டிரைவரா, இஷ்டத்திற்கு ஆட்டிக்கிட்டு வறீங்க ஆ!?’’  கொஞ்சம் கடுமையாகவே திட்டி விட்டேன்.

மிகுந்த களைப்புடன்  சோர்வாக தென்பட்டாள்,  அமைதியாக பதில் வந்தது, `` சாரி அண்டி, திடீரென்று ஒரு வேலை, ஜாப் ஷிட் தயார் செய்யச் சொல்லி கடைசி நேரத்தில் பாஸ் கொண்டுவந்து கொடுத்தார். அவ்வேலையில் எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் சீனியர் வீட்டிற்குக் கிளம்பிட்டாங்க, அதனால நான் ஒண்டியா அந்த ஜாப் ஷிட் செய்யனும், முதல் முறையா தனியா அதை செய்வதால் கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது,  பிழை வேறு வந்துவிட்டது, பாஸ்  பக்கத்திலே இருந்தார், திட்டினார், ஒரு மாதமா செய்யற, இன்னும் நீ பிழை செய்வாயா’ன்னு. பதற்றத்தில் லேட் ஆயிடுச்சு. ஹேன்போன் பேட்டரி வீக், பாஸ் வேறு கோபமா இருந்ததால, ஆபிஸ் போன் பயன் படுத்த பயமா இருந்தது.. அதான்..”  என்றாள் தாழ்ந்த குரலில்.

யாரோ என் கன்னத்தில் பளாரென்று அரைந்தாட்போல இருந்தது. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. ச்ச்சே பாவம்...,  புதிதாக வேலைக்குச் சேர்ந்துக் கொள்பவர்கள்,  இது போன்ற சங்கடமெல்லாம் சந்தித்துத்தானே ஆகனும். அதுவும் இவள் வேலை அனுபவமே இல்லாத பள்ளி மாணவி, வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. இவளின் தாயும் ஒரு கிணற்றுத்தவளை, தந்தையும் படிப்பறிவு இல்லாதவர். நிலைமை புரியாமல் நான் தான் கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டேனோ!?  மனசு கிடந்து அடித்துக் கொண்டது. இருப்பினும் ஈகோவை விட்டுக்கொடுக்காமல்.. ``ம்ம்,சரி சரி பரவாயில்லை, இனி எதாவதென்றால் சொல்லிவிடு, நான் என் ஆபிஸிலே, கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேனே.. இப்படி சும்மா காரில் உட்கார்ந்திருப்பதை விட..’’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, மன்னிப்பு கூட கேட்காமல், காரை செலுத்தினேன். ஆனாலும் மனதிற்குள் லேசான வலி.

இருவரும் அமைதியாக சென்றோம். கொஞ்சம் தாமதமாகச் சென்றால் சாலை நெரிசலில் மாட்டிக்கொள்வது என்பது இங்கே வழக்கமானதுதான். அன்றும் சாலை நெரிசல்.  மழைவேறு, எப்படி இவளை மழையில் ரோட்டோறம் இறக்கிவிடுவது!? திட்டிவிட்டதால் குற்றவுணர்வில் வேறு குறுகுறுத்துக் கொண்டிருந்தேன்.

`சரி இன்னிக்கு அண்டி, வீட்டிலே கொண்டு இறக்கிவிடுகிறேன், அம்மாவை வரவேண்டாமென்று சொல்..’’ என்றேன். பதிலே இல்லை..  ஓ, போனில் சார்ஜ் இல்லையென்றாளே, சரி என, எனது போனை எடுத்து அவள் பக்கம், அவளைப் பார்க்காமலே கொடுத்து,  ``இந்தா அம்மாவிடம் சொல்’’, என்றேன். அதை அவள் வாங்கவில்லை.. என்ன என்று பார்த்தால், அசதியில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்தாள், வெளியே மழைவேறு..!

நானே அவளின் அம்மாவிற்கு அழைத்து, நேரமாச்சு, மழை, நீங்கள் வரவேண்டாம், நானே கொண்டுவந்து வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி, அவளை வீட்டிலே கொண்டு விட்டு வந்தேன்.

அன்றிலிருந்து, தினமும் சரியான நேரத்தில் வந்துவிடுவாள். இப்போதெல்லாம் அவரின் அம்மா எனக்கும் மதிய உணவு, காலை பசியாற என தினமும் எதாவது. சில நேரம் வேண்டாம் என்றாலும் பெரும்பாலும் வாங்கிக்கொள்வேன். அறுசுவை உணவாக இருக்கும்.

இன்று காலையிலே ஒரு சம்பவம். வழக்கம்போல் அவளை ஏற்றுவதற்கு அந்த மேம்பாலத்தின் அருகே சென்றேன். நான் வருவதைக் கண்டவுடன், வேகமாக எழுந்து காருக்கருகில் வந்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில்தான் ஒரு அஃக்‌ஷிடண்ட் நடந்திருந்தது. இரண்டு மோட்டார்கள் மோதிக்கொண்டன. இருவர் சாலையில் கிடந்தனர். கார்கள் அதற்குள் அங்கே வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன. மோட்டாரில் செல்பவர்கள் கீழே இறங்கி உதவ முன்வந்துக்கொண்டிருந்தனர். ஒரு மோட்டாரில் ஒரு வயதானவர், இன்னொரு மோட்டாரில் ஒரு இளஞர் மற்றும் அவரின் மகள், பாலர் பள்ளிச் சீருடையுடன் நான்கு வயது பெண்குழந்தை. குழந்தை அழுதுக்கொண்டும். அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டும், கீழே விழுந்த மூதியவரை ஒரு கையில் பிடிக்க முயன்றுக்கொண்டும், அதற்குள் ஆட்கள் வரவே, எல்லோரும் சேர்ந்து இருவருக்கும் உதவிக்கொண்டும் ஒரே பரபரப்பாக இருந்தது அவ்விடம்.

நான் அங்கே செல்வதற்கு சில வினாடிகள் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். யாருக்கும் அடி அவ்வளவாக இல்லை. குழந்தைதான் பயத்தில் தனது அப்பாவை இறுக்கிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தது.

காருக்குள் வந்து அமர்ந்த இவளிடம், ``எப்படி நடந்தது இந்த விபத்து?’’ என்றேன். ``எங்கே..எங்கே??” என்று தேடினாள். ``அடக் கடவுளே!, தோ, நீ உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் தானே நடந்தது இச்சம்பவம்,  நீ பார்க்கவில்லையா?” என்றேன்.

`` இல்லையே,  நீங்கள் வரும் திசை நோக்கியே என் சிந்தனை..” என்றாள். தொடர்ந்து..``ஐயோ பிள்ளை ஏன் அழறது, ரொம்ப அடியா இருக்குமோ?”  என்று கேட்டுக்கொண்டே, திரும்பி அச்சம்பவத்தை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தாள்.

என்னன்னு சொல்வதுங்க..!!? மனிதன், இயந்திர வாழ்விற்குள் நுழைகின்ற ஆரம்ப காலகட்டம் எதுவென்பதை, ஆராய்ச்சி செய்யாமலேயே புரிந்து போனது எனக்கு.!!!!!
  

புதன், ஏப்ரல் 25, 2012

தலைவலி போ(பே)ய்

தலைவலி தலைவலி
தினமும் தலைவலி
தலையில் எந்த பக்கம் வலி
என்பது கூட தெரியாமல்
ஒருபக்கம் இல்லையேல்
இருபக்கமும் வலி
நடுமண்டையிலும்..வலி

எட்டு என்ன, ஒன்பது மணிநேரம்
தூங்கிப்பார்த்தேன்
தலைவலி விட்டபாடில்லை

சும்மா கணினியை விரைக்காதே
அறிவுரை வழங்கப்பட்டது
ஒரு நாள் முழுக்க
கணினியையும் தொலைக்காட்சியையும் கூட
பார்க்கவேயில்லை
தலைவலி தலைவலி

பளிச் விளக்கு வெளிச்சம் கூட
தலைவலிதான்
ஆலோசனைகள் குவிந்தன
இருட்டில் கிடந்துப்பார்த்தேன்
குறைந்தபாடில்லை

அதிக உஷ்ணமும் ஒரு காரணம்
வெயில் படாமல் உள்ளே இருந்துப்பார்த்தேன்
தலைவலி விடவில்லை

குளிரால் கூட இருக்கலாம்
ஏர்கோண்ட் பயன்பாட்டைத் தவிர்த்தேன்
தலைவலி காலையிலும் மாலையிலும்
தொடர்ந்தபடியாக

காப்பி.. டீ.. மசாலா,காரம்
தூரவிலகினேன்
அப்பவும் தலைவலிதான்

இரைச்சல் கூட தலைவலியாம்
சத்தமில்லாத இடத்திலும்
பதுங்கிப்பார்த்தேன்
ம்ஹும் விட்டபாடில்லை

இரத்த கொதிப்பின் ஆரம்பமோ!?
உடனே முழுபரிசோதனைக்கு
சென்று வந்தேன்
எல்லாமே நார்மல்தான்.
தலைவலி மட்டும் அப்நார்மலாக..

இப்போ மூக்கின் மேல் ஒரு கண்ணாடி
தூரப்பார்வைக்கும்
கிட்டப்பார்வைக்கும் ஒரே லென்ஸில்

தலைவலி போய்
புருவத்தில் வலி
இமைகள் வலி
கண்ணின் கருவிழி வலி
கடவாய்ப்பல் வலி
கண்ணாடி அழுத்துகிற மூக்கில்
ஒருவித நெருடல் வலி
கண்ணாடியை பிடித்துக்கொள்கிற
காதுமடல்களின் பின்புறம் வலி
நெற்றிப்பொட்டில்
அருவருக்கும் ஒருவித வலி
பிடரியில் வலி
நடுமுதுகில் ஒருவித வலி
வாந்தி வருவதைப் போல்
வயிற்றிலும் வலி
நெஞ்சுவலி என
பலவித வலிகள்

இயற்கையே தேவலாம்...
தலைவலிபோல்