புதன், ஜூன் 20, 2012

விளையாடு

ஒரு துணியை எடு
இரண்டாக மடி
மனித உருவம் வரை
அதைக் கத்தரி
இரண்டு துண்டுகள் துணி கிடைக்கும்
சிறிய துவாரம் விட்டு
இரண்டையும் மனித உருவம் போல் தைத்துவிடு
தூவாரத்தினுள் பஞ்சுகளைப் புகுத்து
பிறகு அந்த துவாரத்தையும் தைத்துவிடு
இப்போ உன்னிடம் ஒரு பொம்மை
விளையாடு
என்னை விடு..

செவ்வாய், ஜூன் 19, 2012

மனநிலை குளறுபடி

நம் காதால் கேட்கின்ற, கண்ணால் காண்கின்ற சில விஷயங்களை, நாம் ஆராய்வோம் அல்லது யாரிடமாவது பகிர்வோம். இப்படி ஆராயும் போதும் பகிரும் போதும் அதையொட்டிய தகவல்கள் கூடுதலாகக் கிடைக்கபெறும்போது,  அது நமது விழிப்புணர்விற்கு உரமாக இருக்கலாம். அல்லது இதுபோன்ற தேடல்களால், நம் பகுத்தறிவிற்கும் தீனி கிடைக்கலாம்.

பொதுவாகச் சொன்னால், இந்த வழிமுறை என்பது மற்றவர்களின் குறைகளில் இருந்து நாம் பாடம் கற்பது போன்றதாகும். அதற்காக மற்றவார்களின் குறைகளையும் சதா ஆராய்வது நமக்கு இருக்கின்ற பெரிய குறையாகிவிடும், அதுவும் வில்லங்கம்தான்.

என்னைப்பொருத்தவரை எனக்கு எதேனும் வித்தியாசமான தகவல், இதுவரையில் நான் கேட்காத விவரங்களைக் கேட்க நேர்ந்தால், அதையொட்டிய ஆய்வில் இறங்கிவிடுவேன். அல்லது, அவர்களின் விவரங்களை வெளியிடாமல் (பெயர், ஊர், முகவரி ) பேஸ்புக், ப்ளாக், பத்திரிகை என எழுதி பொதுவில் வைப்பேன். எங்கேயாவது யாரவது ஒருவர் அதைப் படித்து விட்டு, தொலைபேசி வழியாகவோ, அல்லது எழுதியோ விளக்கங்கள் கொடுத்துவிடுவார்கள். எப்படியாகினும் தகவல் கிடைத்துவிடும். (சில கடுமையான விமர்சனங்களின் வழியும் இது நிகழும், நான் வாய் கூசாமல், பிறர் கதைகளைப் பேசுகிறேனென்றும் வசைபாடியுள்ளார்கள்.. யார் கதை? நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று கண்டுபிடிக்க முடியுமா உங்களால்!?, நானே சொன்னால்தான் உண்டு- சொல்வேனா!!? )

இரண்டு நாள்களுக்கு முன், என் தோழி என்னைத்தேடி வந்திருந்தாள். அவள் எல்லா விவரங்களையும் என்னோடு பகிர்பவள். வீட்டில் நடக்கும் விஷயங்களிலிருந்து, மாமியார் கணவர் பிரச்சனைகளிலிருந்து, குழந்தைகள் கல்வி விவரங்கள், அலுவலக பிரச்சனை வரை தொடரும் எங்களின் உரை தினமும்.

அவளின் பிரச்சனைகள் பல, பல வேளைகளின் தேவையே இல்லாத அலட்டலாகவே இருக்கும். என்னைப்பொருத்தவரை, பட்டென்று எல்லோரையும் மிக விரைவாக பகைத்துக் கொள்ளும் சுபாவமுள்ள நான், இவளின் விஷயத்தில் மட்டும் பரிதாபமே மிஞ்சுகிறது. திட்டுவதற்குக்கூட மனம் வரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருட கால தோழி அவள். இந்த இருபது வருடங்களிலும், நாள் தவறாமல் எனக்கு  தொலைபேசி அழைப்பு செய்துவிடுவாள். எல்லாவற்றையும் பகிர்வாள். இவளிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்கிற நிலை சிலவேளைகளில். என்னால் முடிந்த வரையில் அவளின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பேன். எம்மாதியான தீர்வுகளை வழங்கினாலும், அவளின் விஷயத்தில் மட்டும் அதே பிரச்சனை மீண்டும் மீண்டும் துளிர்விடும். எதோ ஒரு மனச்சிக்கல் இவளிடம் என்பதை மட்டும் புரிந்துகொண்ட நான், அவளின் நிலையைப் புரிந்து அனுசரித்து அதன் போல் நடந்துகொள்வேன், மனம்நோகாமல்.

மன்னிக்கவும், அவள் அறியாமையின் விளிம்பில் எதிர்நோக்கிய பல பிரசனைகளை நான் பட்டியலிடுகிறேன். இது காட்டிக்கொடுப்பதோ அல்லது கீழறுப்போ அல்ல. ஒரு பகிர்வு தான்.


  • கணவனோடு பிரச்சனை ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் வீடுதேடி என்னிடம் அடைக்கலம் கேட்டது.


  • முன்பு வேலை செய்த இடத்தில், கூடுதலாக வருமானம் வேண்டியபோது, `பிடிக்கவில்லை என்றால் வேலையில் இருந்து நின்றுகொள்.’ என்று முதலாளி சொன்ன மறுநொடி, வேலையை ராஜினாமா செய்து, அதிக மனவுளைச்சலில் உழன்ற நிகழ்வு. 


  • ஷாப்பிங் சென்றால், தேவையா, தேவையில்லையா என்பதனை ஆராயாமல் கவர்கின்ற பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு, மறுநாள் அதை யாரிடமாவது விற்பதற்கு ஆள் தேடுவது.
  • குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவில்லையென்றால், மறுநாளே பல புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, பலரிடம் ஆலோசனைகள் கேட்பது, டியூசன் ஆசிரியர்களைத் தேடுவது, பொறுப்புள்ள தாயாக உடனே மாறுவது.
  • யாராவது அவளை, பருமனாக இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டால், உடனே அன்று தொடங்கி மாலை வக்கிங், காலை ஜோக்கிங் என கிளம்பிவிடுவது.


  • உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு, சோறு சாப்பிடக்கூடாது, பொரித்த உணவுவகைகளைச் சாப்பிடக்கூடாது, இனிப்பு கூடாது, காரம் கூடாது, உப்பு கூடாது என்று யாராவது ஆலோசனைகள் வழங்கிவிட்டால், உடனே அவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, வெறும் ஓட்ஸ் மட்டும் சாப்பிடத்துவங்கிவிடுவாள்.


  • எழுபத்தைத்து வயது மாமி, வீட்டு வேலையில் ஒத்தாசை  செய்யாமல்,  சீரியல் பார்க்கின்றார் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை,  பிள்ளைகளின் படிப்பைக் காரணம்  காட்டி  துண்டித்து விட்டிருக்கின்றாள்.


  • மெயிலில் சுவாரஸ்ய தகவல்கள் எதேனும் அனுப்பினால், எங்கேயாவது ஒரு மூலையில் இருந்து யாராவது பார்த்து விட்டால், வேலைக்கு ஆபத்து என நடுங்கத்துவங்குவாள்.


  • தன்னை ஒருவன் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான், அது காதலா?! என்கிற உறுத்தலோடு, படப்படப்படப்பாகி, அவனை அணுகி ஏமார்ந்து பின் அவனைத்தூற்றுவது. (இதுபோன்ற ஏமாளிகளை ஏமாற்றுகிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது.!?)


  • கணவனைக் காதலித்து, கடுமையான போராட்டத்திற்குப்பின் அவனைக் கரம்பிடித்து, தம்மை விட வயதில் குறைவான அவனை தம்மோடே தக்கவைத்துக் கொள்வதற்காகவேண்டி, அவனின் அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்றுவது. (oral sex and also anal sex sometimes). அப்போதுதான் அவன் தன்னை விட்டு எவ்வகையிலும் பிரிய மாட்டான் என்கிற நம்பிக்கையில் . ! இந்த வழிமுறைகள்தான் கணவனை நம் கைக்குள் போடும் யுக்தி என்று நமக்கும் போதிப்பது..


  • சுயலாபம் கருதி, ஒரு செய்கையை நியாயப்படுத்துவது.


  • ஒருவரின் முன்னே சிரித்து மழுப்பி பின் அவரை பின்னால் தூற்றுவது.


  • ஒரு விஷயத்தை ஒருவரிடமே விசாரித்து தீர்வு காணாமல், பலரிடம் விசாரித்து, இவர்கள் இதற்குத் தீர்வு இப்படிச்சொன்னார்களே, அவர்கள் அதற்குத்தீர்வு அப்படிச் சொன்னாகளே... என குழம்பி இறுதியில் தம்மையே நொந்துகொண்டு புலம்புவது.


  • தமது வேலையைத் தற்காக்க முதலாளியிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அவரிடம் காட்டிக்கொடுப்பது, மாட்டிவிடுவது.


  • நல்ல பெயர் வாங்கப்போராடுவது. யாரிடமும் கோபத்தைக்காட்டாமல் இருப்பது. சிரித்து மழுப்புவது.


  • செய்கிற எல்லாவற்றையும் சரியா தவறா என விசாரித்து விசாரித்து செயல்படுத்துவது. தவறு செய்ய பயப்படுவது.


  • தமக்கு என்னதான் வேண்டுமென்கிற தெளிவே இல்லாமல் எப்போதும் ஒருமாதிரியான போதை மனநிலையிலேயே இருப்பது.


  • புற அழகைக் கொண்டாடுவது, வெளித்தோற்றத்தை எள்ளி நகையாடுவது. அக அழகு என்பது எதுவென்ற தெளிவே இல்லாமல் இருப்பது.. (கடவுளே)


  • பிச்சைக்காரனுக்கு சோறு போட்டாலும் அதை டமார் அடிப்பது.


  • கஷ்டப்பட்டு தேடி வாங்கிய ஆடை அணிகலன்களை யாராவது ந்ன்றாக இல்லை என்று சொன்னால் உடனே அதை நிராகரிப்பது.


இப்படி இன்னும் அவளின் சில மனோபாவங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவிற்கும் மேல் எனக்கு அவளிடம் பிடித்த ஒரே ஒரு விஷயம், அவளின் ஆங்கில ஞானம். மிக சரளமாக விளையாடும் ஆங்கிலம். நுணிநாக்கில் ஆங்கிலம் பேசுவாள். ஆங்கிலத்தில் எனக்குத் தெரியாத சில விஷயங்களை அவளிடம் கேட்டால் உடனே அதை விளக்கிச் சொல்லிவிடுவாள். என்னிடம் இல்லாத ஒன்று அவளிடம் இருப்பது அது ஒன்றுதான். அவர்களின் தாய் மொழியே ஆங்கிலம்தான்.. போர்த்துகிஸ் பரம்பரையில் வந்தவர்கள். இடையில்  தமிழர்கள் சிலர் நுழைந்து விட்டதால் மிக அழகான தமிழர்களாகிப்போனவர்கள். அப்பாவிப்பெண் அவள்.

சென்ற வாரம், பணிபுரியும்  இடத்தில் அவள் மயங்கி விழுந்துள்ளாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, பரிசோத்தித்து உள்ளனர். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு எந்த நோயும் இல்லை. அவளின் வியாதி Panic Attack என்றும் அவள் நல்ல மனநல மருத்துவரைக் கண்டு கவுன்சிலிங் செய்துகொள்வதுதான் சிறப்பு என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவள், மறுநாள் என்னை அழைத்து `நான் பைத்தியமா?’ என்கிற கேள்விகளோடு என்னை துளைக்க ஆரம்பித்துள்ளாள்.

நான் இப்போதுதான் எனது தேடலைத் துவக்கியுள்ளேன். Panic Attack என்கிற வியாதியின் கூருகளையும் அவைகளைக் களையும் வழிமுறைகளையும் என்கிற தலைப்பில் கூகுளில் சென்று ஆராயத்துவங்கியுள்ளேன்.

தெரிந்தால் பகிருங்கள்.. நம்மைச்சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு உதவலாம்.





திங்கள், ஜூன் 18, 2012

ஓசை


உன் 
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்



சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும் 
ஓசையாக


ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக

வெள்ளி, ஜூன் 15, 2012

குறைதான்

விட்டுப்போனாலும்
விலகிச்சென்றாலும்
விட்ட குறை தொட்ட குறை
விடுமா என்னை!?

விம்மி அழுதாலும்
விசும்பலோடு நின்றாலும்
விதியே வலிமையல்லவா
விடுமா என்னை!?

விருப்பமில்லை
வழக்கு இல்லை
விலகவில்லை
வலியே நீ மட்டும் ஏன்? போ..

வியாழன், ஜூன் 14, 2012

பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள்

இந்துக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்க முறைகளைக் கடைப்பிடிப்பதென்பது, உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தவிக்க இயலாத ஒன்றுதான்.  பழமையில் பாரம்பரியத்தில் உள்ள எதைக் கட்டிக் காக்கின்றார்களோ இல்லையோ முக்கியமாக மூட நம்பிக்கை மூட பழக்கவழக்கங்களை விடாமல் தொன்று தொட்டு வழிவழியாக கட்டிக்காத்து தமது சந்ததிகளுக்கு விட்டுச் செல்கின்றனர். பல விஷயங்கள் பொக்கிஷமாக இருந்தாலும் சில விஷயங்கள் இன்னமும் தலைவலிதான்.

மூட நம்பிக்கை என்பதனை ஆய்வுகள் செய்துக்கொண்டே போனால், அதன் முடிவில் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்பெறலாம். உதாரணத்திற்கு; அசர, ஆலமரத்தைச் சுற்றினால் குழந்தை பாக்கியம், வேப்பமரத்தில் பேய், இரவில் உணவுகளை எடுத்துச்செல்லும் போது கரித்துண்டு வைப்பது, இரவில் நகங்களை வெட்டுவது, வீடு பெருக்குவது, தை மாதத்தில் விஷேசங்கள், ஆடியில் தள்ளிவைப்பது, சித்திரையில் குழந்தை வேண்டாம், இடது கையால் எதையும் கொடுக்காதே பெறாதே.. என இப்படி இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம். இவைகளை ஆராய்ந்தால், கண்கள் அகல விரிகின்ற அளவிற்கு அற்புதமான அறிவியல் விளக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நமது முன்னோர்கள்  மூடர்கள் அல்ல என்பதனை இதன் மூலமாகவும் அறிந்துக்கொள்ளலாம்.

இதையும் தாண்டி சில மூட வழக்கங்கள், பேச்சு வழக்கில் வழிவழியாக வந்து ஒட்டிக்கொண்டு, பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு இன்று இந்த நவநாகரீக காலத்திலும் தொடர்ந்து கடை பிடித்து, பிரபலமாகி நமக்கு நகைப்பை ஏற்படுத்திய வண்ணம்!.

இதற்கும் அர்த்தங்கள் உண்டு, உண்மை உண்டு என்று விளக்கங்கள் கொடுக்க நேரலாம், அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் அவை நகைப்புக்குரியதாகவே இருக்குமென்பது என் கணிப்பு.

அவற்றில் சிலவற்றை இங்கே நான் பட்டியலிட்டுள்ளேன். இது குறித்து என் தோழிகள் சிலரிடம் விசாரித்தேன். பலர், இரவில் நகம் வெட்டுவது, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பது, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புது வீட்டில் பூசணி, எழுமிச்சை கட்டுவது, இறப்பு நடந்துவிட்டால் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது, வேப்பமரத்தை சுற்றுவது, அரச மரத்தைச்சுற்றுவது போன்றவற்றைத்தான் உதாரணம் சொன்னார்களேயொழிய, நான் கேட்கவிருப்பதை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை. ஆக, நானே யோசித்து யோசித்து சிலவற்றை இங்கே.!


* கொள்ளு சாப்பிட்டால், குதிரை போல் வேகமாக ஓடலாம்.

* உடும்பு இறைச்சி, இடுப்பு வலிக்கு நல்லது.

* நண்டு சூப் குடித்தால், சளி பிடிக்காது

* பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பம் கலையும்

* அன்னாசிப்பழம் கர்ப்பவதிகள் சாப்பிடக்கூடாது

* பால் சுறா மீன் சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் சுறக்கும்.

* மாதவிடாய் சமையத்தில், பெண்கள் நாயிற்கு சோறு போட்டால் வயிறு அதிகமாக வலிக்கும்.

* புதிதாகக வயதுவந்த பெண்பிள்ளைகள் ஆண்களைப் பார்த்தால், முகப்பருக்கள் வரும்.

* கண்கள் துடித்தால், வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்

* மூக்கு அரித்தால், யாரோ நம்மை கோள் பேசுகிறார்கள்.

* புரை ஏறினால், யாரோ நம்மை நினைக்கின்றார்கள்.

* காக்கா வலிப்பு வந்தால் சாவி கொத்தைக் கொடுப்பது.

* தும்மல் வந்தால் ஆயுசு நூறு

* புதிய செருப்பை நமது பற்களால் முதலிலே கடித்து விட்டால், அது நம்மைக் கடிக்காது

* மருதாணி சிவந்தால், புருஷனுக்கு அன்பு அதிகம்

* சிகப்பு ஆடை அணிந்தால் மாடு முட்டும்

* வெற்றிலை போட்டு சிவந்தால் கோழி முட்டும்

* அரிசி சாப்பிட்டால் திருமண நாளில் மழை பெய்யும்

* பாம்பு படம் எடுக்கும்

* தலைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளையைத் தான் இடி மின்னல் தாக்கும்

* தவறு செய்துவிட்டால், துண்டு போட்டுத்தாண்டனும்

* போகும் போது, எங்கே போறீங்க? ன்னு கேட்கக்கூடாது

* சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் இளமைத்துள்ளலோடு வலம் வரலாம் (ப்பச்ச்... குருவி செத்துப்போகும்)

* கண்ணாடி உடைத்தால், சகுனம் சரியில்லை

* மலத்தில் காறி உமிழ்ந்தால் தொண்டை கட்டிக்கொள்ளும்

* மிளகை நெருப்பில் போட்டால், முகப்பருக்கள் உதிரும்

 * நாய் பூனை மலங்களை வாரி விசி சுத்தம் செவ்வோர் வைக்கும் குழம்பு மணக்கும்

* காய்ந்த மிளகாயில் திஷ்டி கழிப்பது

இன்னும் இருக்கலாம், கடல்தாண்டி வந்த எங்களுக்கே இவ்வளவு தெரிந்திருக்கும்போது,  அங்கேயே உள்ள (தமிழ் நாடு) உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கனும்.!!! தெரிந்தால் சொல்லுங்கள்/பகிருங்கள்.











புதன், ஜூன் 13, 2012

சில சேரிங்

நகவெட்டியை யாராவது இரவல் கேட்டால், உங்களுக்குக் கோபம் வருமா?
எனக்குக் கோபம் வரும்.

ஞாயிறு இரவன்று, என் மகனை, அவன் பயிலும் காலெஜில் விட்டு வரக் கிளம்பும் வழியில், ஒரு ரெஸ்டரண்டிற்குச் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

என் மகனுக்கு ஒரு பழக்கம் உண்டு, கரண்டியில் சாப்பிடமாட்டான். என்ன அற்புதமான வெஸ்டன் ஃபூட் உணவகத்திற்கு அழைத்துச் சென்றாலும், தமிழர்கள் பாணியில் கைகளைக் கொண்டு பிய்த்து எடுத்து உண்பதுதான் அவனின் வழக்கம். சரி அது அவன் பாணி. கொஞ்சம் நாகரீகமாகச் சாப்பிட மட்டும் கற்றுக்கொடுப்பேன் காரணம் பல இனங்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணும் இடங்களில், கைகளைக்கொண்டு பிய்த்து இழுத்துச் சாப்பிடுவதென்பது, கொஞ்சம் அநாகரீகமாகவே பார்க்கப்படுவதால், அதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ள ஆலோசனைகள் வழங்குவேன்.

எப்போதும் கைகளைப் பயன்படுத்திச் சாப்பிடுகிறவர்கள் தங்களின் கைகளைச் சுத்தமாகவும் நகங்கள் வெட்டப்பட்டுத் தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா.!?  இதனாலேயே, ஆளுக்கு ஒரு நகவெட்டியை ஹென்பேக் அல்லது கார் சாவிக்கொத்தில் எப்போதுமே மாட்டி வைத்திருப்பேன், அதோடு வீட்டிலும் ஸ்பெராக ஒரு நகவெட்டி எப்போதுமே இருக்கும்.  என்னைப்பொருத்தமட்டில் அது ஒரு அத்தியாவசிய ஆயுதம்.

அவன் சாப்பிடும் போது, அவனின் கைகளைப் பார்த்தால், நகங்கள் கொஞ்சம் நீளமாக வளர்ந்து அதன் உள்ளே அழுக்கு போல் கருப்பாகவும் தென்பட்டது.

`என்னது இது? நகம் வெட்டவில்லையா?’

`ஒ ஓ..மறந்துட்டேன்.’

`என்னது மறந்துட்டியா? பார்க்க அப்படி தெரியவில்லையே! நீண்ட நாட்கள் வெட்டாமல், அப்படியே விட்டது மாதிரி இருக்கே.!’

`ஆமாம், நக வெட்டி காணாமல் போய்விட்டது.’

`காணாமல் போனால் என்னிடம் சொல்லவேண்டியதுதானே. இப்படி அழுக்கேறிய நீண்ட நகங்களோடு சாப்பிடுவாயா?’

`ம்ம்ம்...’

`வேண்டாம்,  கைகளை பயன்படுத்தாதே, கரண்டியில் சாப்பிடு.!’

`அம்மா மானத்தை வாங்காதீர்கள், என்னால் கரண்டியைக்கொண்டு சாப்பிட முடியாது என்று உங்களுக்குத்தெரியும்தானே..’

`அய்யோடா, நகங்களை அழுக்காக வைத்துக்கொண்டு சோறு திங்கும் இவருக்கு மானமிருக்காமே.!!! அம்மாவுடைய நகவெட்டியைத்தறேன், எடுத்துச் சென்று நாளை மதியம் சாப்பிடுவதற்குள், ஒழுங்காக வெட்டிவிடு நகங்களை. ஒகே.’’

`வேண்டாம், நான் கூட்டாளியோட நகவெட்டியைக் கொண்டு வெட்டிக்கொள்கிறேன்.’’ .

`கூட்டாளியோட.. நகவெட்டியையா?? ’

`ஏன்மா கொலவெறி? வாங்கினா என்ன?’

`உள்ளாடைகளை இரவல் கேட்பதைப்போல், இந்த நகவெட்டியை இரவல் கேட்கும் செய்கை. உனக்கு வெட்கமா இல்லையா?. இதையெல்லாம் இரவல் வாங்குவது அநாகரீகம்.’

`நாங்க எங்க நண்பர்களுக்குள்ளே இதெல்லாம் சகஜம்’ம்மா...’ என்றான்

எனக்கென்னவோ, நகவெட்டியை இரவல் வாங்கி, நகங்களை வெட்டுவது அருவருப்பான செய்கையாகவே படுகிறது. நமது அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருள் எப்படி அடுத்தவர்களுக்கு இரவல் கொடுப்பது. அடுத்தவர்களின் அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருளை எப்படி நாம் பயன்படுத்துவது.!?

எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம். நகவெட்டியை பகிர்ந்து பயன்படுத்துவதால், இதன் வழி கூட  தொற்றுவியாதிகள்  தொற்றிக்கொள்கிற சாத்தியம் இருக்கின்றதாம். குறிப்பாக ஏயிட்ஸ். இதில் விழிப்புணர்வு அவசியமாகப் படுகிறதுதானே.!

இதுக்குத்தான் அந்தக்காலத்திலேயே  பெண்களை கல்விகற்க அனுப்பவில்லை போலும். எதையாவது படித்துத் தெரிந்து கொண்டால், அது மைண்ட்’யில் ஓடிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்தவண்ணமாக இருக்கும். இல்லையேல் இன்னமும், கணவன் பயன் படுத்தும் துண்டுகளையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் துலக்கும் பல் துலக்கியையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் சாப்பிட்டு வைத்த எச்சில் தட்டிலேயே இவர்களும் சாப்பிடுவார்கள். கணவன் கைகழுவச் செல்லுகையில், தமது புடவையில் துடைத்துக்கொள்ளுமாறு முந்தியை நீட்டுவார்கள். ஒரே சோப்பில் (நுரைக்கக்கி) குடும்பமே குளிப்பது.. என இன்னமும்  தொடர்ந்திருக்கும்,  நமது பாரம்பரியம்.

என்ன நாஞ்சொல்வது?

(“நீ வேண்ணா பாரு, கெழவியா ஆகி, எந்த முதியோர் இல்லத்தில், நாய் சாப்பிடும் தட்டில் உனக்கு சோறு கொடுக்கப் போகிறார்களோ  தெரியாது.’’)

இது போன்ற சாபங்கள் நான் பலமுறை வாங்கியிருப்பினும், தயவு செய்து அதுபோன்ற சாபங்களை வாசிப்போர் முனகாமல் இருப்பது நல்லது.! :P 

செவ்வாய், ஜூன் 12, 2012

அசம்பாவித வியூகங்கள்

நமக்கு நிகழ்கின்ற அல்லது நிகழ்ந்து விட்ட சில அசம்பாவித விடயங்களை அசை போட்டுப்பார்த்தோமேயானால், சில நிகழ்வுகளின் போது மயிரிழையில் உயிர் பிழைத்திருப்போம். அல்லது சில சம்பவங்கள், நிகழாமல் நமக்கு மிக நெருக்கமாக வந்து உராய்ந்து விட்டுச் சென்றிருக்கும்.

உதாரணத்திற்கு -  சாலைவிபத்துகள் (கார் ஓட்டுவதால், இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நேரும்), - நாம் செல்லவிருந்த விமானம் நடுவானில் வெடித்து நொறுங்குவது - நாம் நின்ற இடத்திலிருந்து ஒரு அடி நகரும் போது, அங்கே ஏதாவது ஒரு கனமான பொருள், நாம் நின்ற இடத்திற்கு நேராக கீழே விழுவது -  என இப்படி இன்னும் சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதுபோல் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். அதிர்ச்சியில், வார்த்தைளால் வெளிப்படுத்த முடியாமல், வாயடைத்து நின்றிருப்போம். நாம் மயிரிழையில் உயிர் தப்பிய அச்சம்பவங்களின் சாத்திய அசாத்திய கூருகளை நம்மைச்சுற்றி இருப்பவர்களிடத்தில் கூறுபோட்டு வியந்துகொண்டிருப்போம்.

`அப்படி நிகழ்ந்திருந்தால்!!? நல்ல வேளை!! கொஞ்சம் தவறியிருந்தால்!! அப்போதுதான் அங்கிருந்து வந்தேன்..!! இந்நேரம்..!!’ என நாமாகவே சில சாத்தியங்களை யூகித்துக்கொண்டு, தப்பித்துப் பிழைத்ததை எண்ணி  மனம் நெகிழ்ந்து கொள்வோம்.  அத்தருணத்தில், நாம் வணங்கி வருகின்ற நமது காவல் தெய்வங்களுக்குக் கூடுதல் மரியாதை செலுத்தி, சில  விஷேச பூஜைகளைச் செய்து, நமது நன்றி விசுவாசத்தைப் பறை சாற்றிக்கொள்வோம்.

சிலவேளைகளில், நாம் முற்பிறவியில் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கவேண்டும், அதனால்தான் இன்று இந்த அசம்பாவித சம்பவம் என்னை ஒன்றும் செய்யவில்லை, என்றும், இல்லையேல், பெற்றவர்கள் செய்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றியது என்றும், இல்லையேல், நம் பெயர் கொண்ட யாரோ ஒருவரை, எங்கோ ஒரு மூலையில், எதோ ஒரு நல்ல காரியத்திற்காக, யாரோ ஒருவர் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடும் என்றும் நினத்து, வியந்து கொண்டு  மன ஆறுதல் அடைந்து, மனதிற்குள் முனகிக்கொண்டு, மார்பின் மீது கைவைத்து பெருமூச்சு விட்டுக்கொள்வோம். 
இதுபோன்ற நிகழ்வுகள் என் தோழிக்கு நிகழ்ந்ததைப்பற்றிப் பேசுகையில்,  நிகழ்வுகள் சுவாரஸ்யமாகச் செல்லவே, எனக்கும் நிகழ்ந்துவிட்ட சில சம்பவங்களை நினைவுகூரலாமே என, நானும் சில விஷயங்களைச் சொல்லி பதிவிடுகிறேன். -

1. குட்டையில்..

என் தம்பிகள், அவர்களின் நண்பர்கள் என, அவரவர் வீட்டைச் சுற்றும் சில சொரி நாய்களைக் குளிப்பாட்டுவதற்காக வீட்டின் அருகாமையில் இருக்கின்ற குட்டைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பள்ளிவிடுமுறை என்றால் பொழுதைக் கழிப்பதற்கு இப்படி எதாவதொரு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவது இவர்களின் பொழுதுபோக்கு.

பெற்றோர்கள் அனைவரும் இவன்களையெல்லாம் கடுமையாகக் கண்டித்து, அடித்து அடக்கிவைக்கப்பார்த்தும் இவன்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இளங்கன்று பயமறியாது என்பதைப்போல விடுமுறையென்றால் எதாவதொரு காரணத்தைக் காட்டி எங்கேயாவது விளையாடச்சென்று விடுவார்கள்.

அப்படி அவர்கள் அடிக்கடி விளையாடச்செல்லுமிடமான அந்தக் குட்டை மிகவும் ஆபத்தான இடம். மேலே நீர் தெளிவாக இருப்பதைப்போன்று இருந்தாலும், அதனின் அடி பாகம் சேறும் சகதியும் நிறைந்தது. நமது கால்களை நாம் உள்ளே வைத்தால், அது அதனின் வேலையைக் காட்டத்துவங்கிவிடும். படு வேகமாக நம்மை விழுங்கிக்கொ(ல்லு)ள்ளும்.

இதனின் அபாயத்தை பலமுறை எடுத்துச் சொல்லியும் இந்தப் பொடிப்பையன்களில் மத்தியில் எடுபடாமலேயே போனது. எப்படியாவது பெற்றோர்களுக்கு `டிமிக்கி’ கொடுத்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒருமுறை, அக்குட்டையில் மூழ்கி, இவர்களின் நண்பர்களில் மூவர் பலி. இதே நாய் குளிப்பாட்டும் வேளையின் போதுதான் இச்சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. மூழ்கியவர்கள் யார் யார் என்றால், என் தம்பிகளின் பெயர் இல்லை. பலியான இவர்களுடன் தம்பிகளும் சென்றுள்ளனர் நாய் குளிப்பாட்டுவதற்கு.

ஆனால் தம்பிகளைக்  காணவில்லை. வீட்டில் அப்பா எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தார்.. அம்மாவிற்கு அடிவிழாத குறையில் ஏச்சும் பேச்சும் சரமாரியாக விழுந்துகொண்டிருந்தது.

எங்களின் வீடு மட்டுமல்ல அந்த `ஏரியா’வே மரண ஓலத்தில் மூழ்கியிருந்தது.  ஒரே பரபரப்புச்சூழல். ஆட்கள் இங்கேயும் அங்கேயும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தனர், அலாரங்கள் ஒலிக்கும் போலிஸ் வாகனங்கள், அம்புலன்ஸ் என அமளியாய் அவ்விடம். மக்களின் கதறல் ஒருபுறம். மறக்கமுடியாத ஒரு சூழல் அது.

அப்பா இவன்களைத் தேடத்துவங்கி , கண்டுபிடித்து, அங்கேயே உள்ள செராக் கட்டையால் செம்மையாக விளாசியுள்ளார். வலிபொறுக்காமல் வீடோடி வந்த இவன்களை அம்மாவும் கோபத்தில் விளாசு விளாசு என விளாசினார்.. கோபம் விரக்தி படபடப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்துவந்த அவர்களின் உணர்வுகள் தம்பிகளை அடிப்பதில் வெளிப்பட்டது.
இரவுவேளையின் போது எல்லாம் ஓரளவு ஓய்ந்த பின்னர், தம்பிகளிடம் நடந்தனவற்றைப் பற்றி விசாரித்தோம். எங்கே போனீர்கள்? எப்படி உன் நண்பர்கள் மட்டும் குட்டையில் சிக்கிக்கொண்டார்கள்?  என கேட்டோம்.

எல்லோரும் ஒன்றாகத்தான் நாய்களைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றார்களாம். போகும் வழியில், சீனன் ஒருவன் வைத்திருக்கும் பன்றிக்கொட்டகையில் புதிதாக நிறைய பன்றிகள் வந்து இறங்கவும் அவைகளைக் காண அங்கேயே அமர்ந்துகொண்டார்களாம். பற்றிகளை, ரப்பர் குழாயை, நீர்க்குழாயில் பொருத்தி, நீரைப் பாய்ச்சியவண்ணம் அவைகளைக் குளிப்பாட்டுவதைப் பார்ப்பதற்கு பரவசமாய் இருந்ததாம். அதனால் அங்கேயே இருந்துகொண்டார்களாம். பொறுமை இழந்த நாய் அவ்விடத்தை விட்டு ஓடிவிடவும், அன்று குட்டைக்குச்செல்லாமல் தப்பித்துள்ளனர்.

ஒருஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அம்மா, பெருமூச்சுடன்....
`இறைவன், வராக அவதாரம் எடுத்து பசங்களைக் காப்பாற்றியுள்ளார்.’ என்று, கைகளைக்குவித்து இறைவனை வணங்கினார்.


2. கேஸ்.

ஒருமுறை, இரவில் வைத்த முட்டைக்குழம்பை காலையில் சூடுகாட்டுவதற்காக கேஸ் அடுப்பை மூட்டி, குழம்புப் பானையை அதன் மேல் வைத்துவிட்டு, மறந்தாட்போல் வேலைக்கு வந்துவிட்டேன். அப்போதெல்லாம் காலைவேளையிலே  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய பரபரப்பில் சில விஷயங்கள் மறந்தே போகும்.

இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டதை, கொஞ்சங்கூட நினைவில் வைத்துக்கொள்ளாமல், வேலைக்குச் சென்றுவிட்டேன்.

வேலை முடிந்து வீடு திரும்புகையில், பக்கத்து வீட்டு மலாய்க்கார அண்ணன், உங்களின் வீட்டில் ஏதோ தீஞ்ச வாடை வந்தது, ஏன் காலையிலே எதாவது தீயவைத்து விட்டாயா? என்று கேட்டார். அப்போதுதான் அச்சம்பவம் என் நினைவிற்கு வர, அரக்கப்பறக்க அடுப்பங்கரைக்கு ஓடிச்சென்று பார்த்தால், பானையில் உள்ள குழம்புமுட்டைகள் அனைத்தும் வெடித்துச்சிதறி, குழம்பு கருகி.. பானையே கரிக்கட்டையாகி விட்டிருந்தது...

ஏன் தீப்பிடிக்கவில்லை? என்றால், கேஸ் முடியும் தருவாயில் இருந்ததால், பாதியிலே தீ அணைந்து, தீப்பிடிக்காமல் சூழலைக்காப்பாற்றியது.

என் நல்ல நேரந்தான் போங்க. இல்லையேல், முன்பு நாங்கள் இருந்த வீடு தீயில் கருகிச் சாம்பலாகியிருக்கும். எங்களின் வீடு மட்டுமல்ல, அந்த வரிசை வீடுகளே தீயிற்கு இரையாகியிருக்கும். அக்கம் பக்கத்து மலாய்க்காரர்கள் என்னை சபித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள். நினைத்துப்பார்க்கும் போது, எதோ ஒரு சக்திதான், அன்று என்னைக் காப்பாற்றியிருக்கக்கூடும்.!


3. கரையான்

முன்பு, நாங்கள் வசித்த வீட்டில், தாங்க முடியாத அளவிற்கு கரையான் தொல்லை. வீட்டின் முன், மரமாக வளந்திருந்த முருங்கை வேப்ப மரங்களையே அடியோடு சாய்க்கின்ற அளவிற்குக் கரையானின் ராஜ்ஜியம்.

அதன் தலையீடு வீட்டின் உள்ளேயும் மிகக்கொடுமையாகவே காணப்பட்டது. மேலே, பலகை தூண்களையெல்லாம் ஏறக்குறைய விழுங்கியவண்ணம். மழைக்காலமென்றால் ஈசலின் கொடுமை அளவுக்கு அதிகமாக இருந்த போது, ஒரு கட்டுமானப் பணியாளரை அழைத்து, மேலே ஏறி கண்காணிக்கச் சொன்னபோதுதான், அவன் சில சட்டங்களை மாற்றியாகவேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றான். நாம்தான் தமிழர்களாச்சே, அசம்பாவிதங்கள் நடக்கும் வரை அஜாக்கிரதையாகத்தானே இருப்போம்.

எங்களின் அத்தை வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். என் மகன், சிறு குழந்தையாக இருந்த போது, அவனை கவனித்துக்கொள்கின்ற பொறுப்பை கொஞ்ச காலம் ஏற்றுக்கொண்டதால், என் மகன் அவரை விடமாட்டான். வார வாரம் அழைப்பான், வரச்சொல்லி. அவர் வந்தால், உள்ளே இருக்கின்ற மெத்தையை மெனக்கட்டு வெளியே இழுத்து வந்து, ஹாலில் போட்டுக்கொண்டு, டீவி பார்த்துக்கொண்டே, பேசிக்கொண்டே படுத்துத்தூங்குவார்கள் இருவரும். இது வாரந்தவராமல் நடைபெறும்.

சம்பவம் நிகழ்ந்த  அந்த வாரம், இருவருக்குள் எதோ பூசல் ஏற்பட்டு, ஊடல் வந்து, மெத்தையை நீ இழுத்துக்கொண்டு வா, என போட்டாபோட்டியோடு போராட்டம். இதனால் அத்தை பொய்க்கோபங் கொண்டு அறைக்குள் படுத்துக்கொள்ள, அவனும் வழக்கம்போல் என்னருகில் படுத்துக்கொண்டான். 

காலை மணி மூன்று இருக்கும், நடு ஹாலில் படாரென்று படுபயங்கரமான ஒரு சத்தம். எல்லோர் தூக்கமும் கலைந்து விட்டது. என்ன சத்தமென்று வெளியே வந்து பார்த்தால், அவர்கள் எப்போதும் படுக்கும் அந்த இடத்திற்கு நேராக மேலே சுழலும் சீலிங்க் ஃபேன் கீழே விழுந்துக்கிடந்தது. ஃபேன் மாட்டியிருந்த தூணை கரையான் முழுமையாக தின்றுத்தீர்த்து விட்டதால், அந்த ஃபேன்’ஐ தாங்கிப் பிடிக்கின்ற சட்டம் உடைந்து விட்டது, பாரம் தாளாமல். மின்விசிறி விழுந்த இடத்தில், மார்பல் கல்லே விரிசல் கண்டிருந்ததென்றால், மனிதர்கள் நிலை என்னவாகியிருக்கும்.!? என்னுள் இருந்த தெய்வபக்தி சுடர்விட ஆரம்பித்தது.


4. மண்சரிவு

என் கணவர், ஆரம்பத்தில் கோலாலம்பூர் வந்து  வேலை செய்தபோது, ஒரு வீட்டின் அறையொன்றில் வாடைகைக்குத் தங்கிக்கொண்டார். தெரிந்த ஒருவரின் வீடுதான். ஆற்றோர வீடு அது. மாதம் ஒரு முறை ஊருக்குச்சென்று அம்மாவைச் சந்தித்து, சம்பாதிக்கின்ற பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவது அவரின் வழக்கம். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் லவ். இரு குடும்பங்களுக்கும் லடாய். (தமிழர்களாச்சே விடுவார்களா!?)

மாதம் ஒரு முறை அவர் ஊருக்குக் கிளம்புகையில், எனக்கு தனிமை மிகவும் கொடுமையாக இருக்கும். போக வேண்டாமென்று தடுப்பேன். அதை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார். அம்மாவைப் பார்க்க ஓடிவிடுவார்.

ஒரு முறை அவர் அப்படிச்செல்லுகையில், இங்கே கடுமையான மழை, வெள்ளம். பக்கத்தில் உள்ள ஆறு, அணைதிரண்டு மண்சரிவை ஏற்படுத்தி, அங்குள்ள வீடுகளையெல்லாம் மண்ணில் புதைத்துக்கொண்டது. இரவு வேளை, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தவியாய்த்தவித்தனர். எல்லோர் வீடுகளையும் விட என் கணவர்(காதலன்) தங்கியிருந்த குடும்பத்தின் வீடு அதிக சேதத்துக்குள்ளாகியிருந்தது. அதிலும் அவர் தங்கியிருந்த அறை முழுவதுமாக மண்ணில் புதையுண்டது. எதுவுமே கையில் கிடைக்காதவண்ணம் எல்லாமும் மண்ணின் சிக்கிக்கொண்டது. அன்று மட்டும் அவர் என் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே  தங்கியிருந்திருந்தால்..!!!??  அம்மாவின் பிரார்த்தனைதான் அன்று அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடும்.


அண்மையில், ஒரு யாக பூஜையில் கலந்துகொள்ளுகிற வாய்ப்புக்கிடைத்தது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு நல்ல மனிதர், தாம் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை, இது போன்ற அறப்பணிகளில் செலவழித்து மக்கள் நலம் பேண, வருடத்திற்கு ஒரு முறை இந்த யாக பூஜை செய்வது வழக்கம். பத்து நாள்கள் அந்த `தாமானே’ கலைக்கட்டுகிற அளவிற்கு, கோவில் நிகழ்வு கோலாகலமாக  நடைப்பெற்றது.

இளஞர்கள் முதியோர்கள், கன்னிப்பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக இணைந்து சேவை செய்கிற அந்தக் காட்சிகள், கண்கொள்ளா அழகியக் காட்சிகளே.

கணவர் தினமும் சென்றார். நான் வார இறுதியில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த பத்து நாட்களின் பூஜையில் எந்த பங்கமும் ஏற்படாமல் பூஜை மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது. பதினோராவது நாள், அதாவது அந்த விஷேச நாட்கள் எல்லாம் முடிந்த மறுநாள், விடியற்காலையில், ஏற்கனவே நோயில் அவதியுற்றிருந்த அந்த சேவை மனப்பான்மைக் கொண்ட மனிதரின் தாய் இறைவனடி சேர்ந்தார். முதல் நாள் கோவிலில் பார்த்தேன் அவரை. ஒரு தடியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக நவக்கிரகங்களை வழிபாடு செய்துகொண்டிருந்தார். இது எதிர்ப்பார்த்த மரணமேயானாலும், அந்த பத்து நாட்களில் எதாவதொரு நாளில் இந்த இறப்பு நடந்திருந்தால்..!!? பூஜை வழக்கம்போல் நடந்திருக்கும், ஆனால் தலைவர் வீட்டில் துக்கமென்றால், பலருக்கு அது தர்மசங்கடமே.!


என்னமோ சொல்லனும்’னு தோன்றுகிறது.... ஹ்ம்ம் தெரியவில்லை.