வியாழன், அக்டோபர் 04, 2012

நான் கர்ப்பமாக இருக்கின்றேன்

இன்று மதிய உணவுவேளைக்கு வெளியே  சாப்பிடச் செல்லவில்லை. சாப்பிட மூட்  இல்லை.

ட்ரொவரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மெஃகி மீ’யில் (நூடல்ஸ்) சூடுநீர் ஊற்றி, இதமாக வேகவைத்து, சுவைத்துக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் மெஃகியை சாப்பிடுகிறேன். அதற்குள் போவோர் வருவோர் எல்லாம், `இது உடம்பிற்குக்கெடுதல், அதிகமான அஜினாமோட்டோ, வயசாச்சு, இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து விடு,  சாப்பாட்டு நேரத்தில் இதை ஏன் சாப்பிடுகிறாய்? முடி உதிரும், சூடு, அந்த பேஸ்ட் கெடுதல்..’ அப்படி இப்படி  என  ஆலோசனைகள்  கூற  ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக்கொடுத்து விட்டு, எனது மெஃகி சூப்’ஐ சுவைத்துக்கொண்டு, ஒரு அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

எங்களின் அலுவலக கால் செண்டரில் ஒரு வேலை காலியாய் இருந்தது. அந்தக் கால் செண்டர் டிப்பார்ட்மெண்டில் ஏற்கனவே நிறைய மலாய்க்காரப் பெண்மணிகள் வேலையில் இருப்பதால், ஒரு தமிழ்ப்பெண்ணை வேலைக்கு நியமிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

இரண்டு வாரங்களாய் தேடியும், இந்த தேர்விற்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. தமிழ் பெண்கள் வந்தால், நன்கு படித்த பெண்களாக வருகிறார்கள், கேட்பதைவிட கூடுதல் தகுதியோடு வந்து, சாதாரண வேலையாக இந்தக் கால் செண்டருக்கு சரியில்லாத நபர்களாகி தேர்வாகாமல் போய்விடுகிறார்கள். அல்லது, அறவே தகுதி இல்லாமல், வேலை அனுபவமும் இல்லாமல், ஆங்கிலமும் சரியாக பேசதெரியாமல் வருகிறார்கள், அதுவுமில்லாமல் சிலர் அதிக அளவில் சம்பளம் எதிர்ப்பார்த்து, நேர்முகத் தேர்வின் போது  தோல்வியடைந்து விடுகிறார்கள்.

தமிழ்ப்பெண்களை வேலைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதனை இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். நிஜமாலுமே லேசில் சிக்க மாட்டேன் என்கிறார்கள். பெரிய கம்பனிகள், பெரிய பதவிகள் என ஒரு எதிர்ப்பார்ப்போடு வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான்கு பெண்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேயும் இங்கேயும் நண்பர்கள் தோழிகள் என சிலரிடம் சொல்லிவைத்து, வரவழைத்தேன். அதில் ஒரு தற்காலிக தமிழாசிரியயை தேர்வாகிவிட்டார். கேட்ட சம்பளத்திற்கே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். இவரிடம் வேலை அனுபவமும், திறமையான பேச்சாற்றலின் மூலம் நேர்முகத்தேர்வில் அசத்திவிட்டார் போலும். தேர்வு முடிந்த மறுநாளே, தொலைப்பேசியில் அழைத்து, வேலை கிடைத்து விட்டது என்கிற விவரத்தைச் சொல்லச்சொன்னார்கள்.

நான் தான் அழைத்துச் சொன்னேன். பேசும்போது, நல்ல அரசாங்க வேலையான ஆசிரியர் வேலையை விட்டுட்டு எப்படி இந்த பிரைவர்ட் கம்பனி வேலைக்கு.!? கேட்டேன். அந்த வேலை நிரந்தரம் இல்லை. தற்காலிகம்தான். மேலும் இப்போது ஆசிரியர் வேலைக்கும் கெடுபிடிகள் ஜாஸ்தி. தொடர்ந்து பேர்போடமுடியுமா, என்பது தெரியாததால் வேலையை விட்டுட்டேன். இப்போது தமிழர் ஒருவரின் செகரட்டரியா வேலை செய்கிறேன். தனி ஆளாய் நான் மட்டும்தான் அங்கே வேலையில், அவசரத்திற்கு லீவு எடுக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது மெம். அதான் வேறு வேலை தேடினேன், உங்கள் மூலமாகக் கிடைத்தும் விட்டது. முதல் வேலையாய், அந்த செகரட்டரி வேலையை ராஜினாமா செய்யவேண்டும், என்கிற உற்சாக குரலோடு விடைபெற்றார்.

அடுத்தவாரம் அவர் வேலைக்குச் சேர வேண்டும், அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும் தயாராகிவிட்டது, இப்போது செய்கிற வேலையையும் தூக்கிப்போட்டுவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன், மயக்கமாகவும் வாந்தி வருவதைப்போல் இருக்கவும், கிளினிக் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், நான்கு வார கர்ப்பம் என்றிருக்கின்றார். மகிழ்ச்சியான செய்திதான்,  இருப்பினும், புதிய வேலையில் சேர இது தடையாக இருக்காதா?, என்கிற ஒரு நெருடல் அவருக்குள். என்னை அழைத்தார்.

``மெம்..நான் அடுத்த வாரம் வேலைக்குச்சேர வேண்டும்..’’

``ஆமாம்..’’

`` ஒரு பிரச்சனை..ம்ம்’’

``என்ன பிரச்சனை?’’

``நான் நாலு வாரம் கர்ப்பம் மெம்..’’

``ஓ..’’

``என்ன செய்யலாம்.? இப்போ செய்கிற வேலையை வேறு ராஜினாமா செய்துவிட்டேன்.!’’

`` நீங்க முதலில் வேலையில் சேருங்கள், பிறகு அதைப்பற்றி பேசலாம்..’’

``தெரிந்தால் பிரச்சனையாகாதா மெம்?’’

``சொன்னால்தானே தெரியும், ஏன் சொல்லனும்..!?’’

``ம்ம்ம்ம்.....’’

`` வேலைக்குச் சேருங்கள். நீங்கள் இருக்கிற சைஸ்சுக்கு, இந்த கர்ப்பம் வெளியே தெரிய கொஞ்ச நாள் ஆகும், அப்போது சொல்லிக்கலாம். சரியா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. ’’ என்றேன்

``சரி, மெம்’’ என்கிற சிறு சிரிப்பொலியோடு தொலைப்பேசியை வைத்தார்.

இன்று காலையிலேயே, எங்களின் அட்மினில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வேலை இன்னமும் காலியாகவே உள்ளது. ஆள் பார்,என. எனக்கு அதிர்ச்சி. ஏன் என்னாச்சு என்று விசாரித்தால். அவர் கர்ப்பம் என்பதை, அந்த நேர்முகத்தேர்வு அதிகாரியிடம் சொல்லி விளக்கம் கேட்டுள்ளார்.! அதற்கு அந்த அதிகாரி, அப்படியென்றால் நீ இப்போது வேலைக்குச் சேரவேண்டாம், குழந்தை பிறந்து, உடல் நலம் தேறிய பிறகு வா, என்றிருக்கின்றார்.

தேவையா இது?  காலையிலிருந்து தொலைப்பேசி ஓயவேயில்லை. நான் தான் சொன்னேனே.. அதற்குள் என்ன அவசரம், இப்போ என்ன செய்ய முடியும்?

அவளைப் பேசி விட்ட என் தோழி வேறு, `பாவம், எப்படியாச்சும் சொல்லி, கேட்டுப்பார்..’, என, தொலைப்பேசியில் கெஞ்சியவண்ணமாக இருந்தார்.. எப்படிக் கேட்டாலும் முடியாது. பெண்களின், அதுவும் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தில் எங்களின் அதிகாரி கூடுதல் கவனம் செலுத்துபவர். எப்படி நான் பேச முடியும்.!? எல்லாம் நன்மைக்கே, என ஆறுதல் சொல்லி, வளவளா பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

தொலைப்பேசி மணி அடித்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த மெஃகி கப்பை கீழே வைத்து விட்டு, தொலைப்பேசியை எடுத்தேன்.

``வேலை காலி என்றீர்களாமே.. எப்போது இண்டர்வியூ?’’ மறுமுனையில் ஒரு பெண் குரல்.



செவ்வாய், அக்டோபர் 02, 2012

பின்நவீனத்துவமும் கற்பனைக்குதிரை ஓட்டிகளும்

எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு இலக்கிய வியாதி அதி வேகமாகப்பரவி வருகிறது. அது என்னவென்றால், ஒரு பிரபலமான எழுத்தாளரின் படைப்பு, அதை வாசிக்கின்ற மற்றொரு எழுத்தாளருக்குப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி, எதோ ஒரு பரவச நிலையைக் கொடுத்து விட்டால், எழுதப்பட்ட அதனின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல், இப்படிப் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் போலும் என தவறாகப் புரிந்துக்கொண்டு,  தாமும் அதேபோல் புரியாமல் எதையாவது எழுதி, தனக்கும் பின்நவீனத்துவ பாணி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிற  நிலை இப்போது தொற்றுவியாதியைப் போல் துரத்தி வருகிறது இலக்கிய உலகை.

கதை எழுதுபவர்களை என் பார்வையில், (கவனத்தில் கொள்ளவும் `என் பார்வையில்') இரண்டு விதமாகப்பிரித்துள்ளேன். ஒன்று; முதல்நிலை. அதாவது, நடைமுறை வாழ்வியலை அழகாகவும், அவலம் என்பதை மறைமுகமாகவும், எங்குமே போதனைகளை நுழைக்காமல்,  ஒரு கருப்  பொருளை அடையாளமாகக் காட்டி  அதில் இரண்டு அல்லது அதற்கும் மேலான புரிதல்களை மறைமுகமாகப் புகுத்தி, வாசிப்பவர்களை அவர்களின் போக்கிலேயே யோசிக்கவைத்து, வாசிப்பனுபவத்தில் பரவச நிலையைக்கொடுக்கின்ற அற்புதப் படைப்பாக மலர்ந்து, வாசகர்களுக்குப் புதிய புதிய அனுபவங்களைக் அடையாளங்காட்டி பிரமிக்க வைக்கும் படைப்பாளிகள் இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்.

வாசகர்களை எழுத்தால் கட்டிப்போட்டு வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர்களுக்கு இந்த பாணி சரளமாக வந்துவிடும். தமிழ்நாட்டு எழுத்துகள் பல இந்த வடிவில் இருப்பது கண்கூடு. சாரு, அசோகமித்திரன்,  நகுலன், விமலாதித்த மாமல்லன், பிரேமிள், சுப்ரபாரதிமணியன், இ.பா, சுஜாதா, சுரெஸ்குமார் இந்திரஜித், ஆதவன், தி.ஜா, பிரபஞ்சன்,  என இன்னும் பலரின்  படைப்புகளைப் படித்து விட்டு அப்படியே பிரமித்துப் போயியுள்ளேன்.  இவர்களின் எழுத்துகளை வாசித்து முடித்த பின்பும் அதனின் எதிரொலி இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ரீங்காரமிட்ட வண்ணமாகவே இருக்கும். யோசிக்க யோசிக்க விடுகதைகளின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதைப் போன்ற பரவச நிலையில் இவர்களின் எழுத்து ஓலமிட்டுக்கொண்டே இருக்கும். எப்படி இவர்களுக்கு இப்பேர்ப்பட்ட  அற்புத எழுத்தாற்றல் கைவசம், என, பலமுறை  அதிர்ந்துள்ளேன். இங்கே மலேசியசூழலில், நான் படித்தவரையில், வல்லின இணைய இதழ் ஆசிரியர் மா.நவீன் இதில் கைத்தேர்ந்தவராகத் திகழ்கின்றார்.  இவர்  இலக்கிய உலகில் பேர் சொல்லும் பிள்ளையாக முத்திரை பதிப்பார் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது நிலை என்பது,  நேரிடையாக விஷயத்திற்கு வந்து, அழகான புரிதல்களைக்கொடுத்து விட்டு, அற்புதமான நடையில், இடையிடையே போதனைகளையும் நுழைத்து, இறுதியில் ஒரு சின்ன  திருப்பத்தைத்தந்து,  அழகான சுபம் அல்லது மனதை வருடும்  சோகம் அல்லது ஒரு கேள்விக்குறியோடு கதைகளை முடிக்கும் எழுத்தாளர்கள். இதுபோல் எழுதுபவர்கள் இங்கே மலேசிய இலக்கியச்சூழலில் அதிகம்தான். ஏன், நான் கூட இதே பாணியில்தான் எழுதுவேன். இதில் கைத்தேர்ந்த எழுத்தாளர்கள் எண்ணில் அடங்கா. இவர்கள் வழக்கம்போல், பல அரிய விவரங்களை; படித்தது, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது என,  சாதாரண நடையிலேயே மிக எளிமையாக பலருக்குப் புரியும்படி, அழகான தமிழில் எழுதிக்குவித்து, நிறைய படைப்புகளைக் கொடுத்து,  எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து பெயர் போட்டு வருகின்றனர்.  இதில்  தப்பேதும் இல்லை. இந்த பாணிதான் இன்னமும் பலரை எழுத்தாளர் என அடையாளங்காட்டி வருகிறது. எழுத்துக் கலையை வளர்த்துக்கொள்ள  இது ஒரு நல்ல அணுகுமுறை.

இதையும் தாண்டி இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு நிலையிலும் இல்லாமல், தம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக பறைசாற்ற வேண்டும் என்பதற்காக, இரண்டாவது நிலையை விட ஒரு படி மேலே நின்று, முதல் நிலைக்கும் போக முடியாமல், இரண்டாவது நிலைக்கும் வர மனமில்லாமலும், பின்நவீனத்துவ புயலாய் மாறி, நேற்றைய மழையில் பூத்த காளான்களாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது இவர்களுக்கே புரியுமா என்பதுதான் இங்கே புரியாத புதிர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிக்கொள்ளும் என்பதைப்போல், அங்கேயும் இங்கேயும் தாவி, சிறுபிள்ளைத்தனமாகக் கிறுக்கி, படைப்புகளைத் தாறுமாறாகக் குழப்பி, அகராதியைக் கொண்டு யாருமே இதுவரையில் பயன்படுத்திராத சில தமிழ் சொற்களையோ அல்லது சமஸ்கிருத வாசகங்களையோ  நுழைத்து, படைப்பை வெற்றிகரமாக முடித்திருப்பார்கள்.

இவர்கள், இவர்களின் கதைகளைத் தேர்தெடுக்கின்ற பத்திரிகை ஆசிரியர்களையும் அந்த படைப்புகளை வாசிக்கின்ற வாசகர்களையும் வார்த்தை ஜாலங்களைக்கொண்டும், அழகிய தமிழ்ச்சொற்களாலும், புதுமையான வர்ணனைகளாலும், ஒண்ணுமே இல்லாத மர்ம முடிச்சுகளாலும் தலைசுற்றலை ஏற்படுத்தி, படைப்பை நிலை நிறுத்தப் போராடியிருக்கின்ற யுக்தியை வெகு சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதுவும் ஒருவகை சித்துவேலையே. கண்கட்டி வித்தைக்காரனின் ஜாலம் போல், அங்கே வித்தைகள் மட்டுமே இருக்கும், பார்வையாளர்களின் கண்களை அகல விரியவைக்கும் வித்தைகளை, நுண்ணிய பார்வை கொண்டு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, ஆரய்ந்துப் பார்த்தோமென்றால், அங்கே ஒன்றுமேயிருப்பதில்லை. அதுபோல்தான் இவர்களின் கதைகளும், படிக்கும்போது எதோ ஒன்று இருப்பதைப் போன்ற தோற்றத்தைக்  கொடுக்குமேயொழிய அவைகள் காலங்கடந்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.

அதிகமான வர்ணனைகளையும் வார்த்தை ஜாலங்களையும் புகுத்தி, இழுவையாய் இழுத்து, மர்மத்தை நுழைத்து, அங்கேயும் இங்கேயும் தாவி, இறுதியில் இறந்து போன தாத்தாவின் பிணத்தை வாசகர்களின் பார்வைக்குக்கொண்டு வருகிறார்கள். இந்த இறப்பைச் சொல்வதற்கு எதற்கு வாசகர்களின் பொறுமையை சோதிக்கவேண்டும்.!? தாத்தா இறந்து விட்டார் என்பதில் என்ன நீதி இருக்கப்போகிறது? ஓ...தாத்தா எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்லுகின்றார்கள் போலிருக்கு! அவரவர்  தாத்தாக்கள்  வாழ்ந்த நிலையை பலர் பலவிதமான பாணியில் ஏற்கனவே சொன்ன விதமாகத்தானே இருக்கின்றார்கள், இன்னும் என்ன புதிய பாணியில்..?? கேட்டால், அதற்கும் இவர்களிடம் தட்டையாக மொக்கையாக  ஒரு விளக்கமும் இருக்கும், உப்புசப்பில்லாமல்.

இவர்களின் கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுங்களா, சராசரி வாசகர்கள், இவர்களின் எழுத்துகளில் எதுவுமே இல்லை என்று புறக்கணிக்க முடியாமல் திணறடிக்கச் செய்துவிடுவதுதான். எப்படிப் புறக்கணிப்பது? நல்ல தமிழ் இருக்கின்றது. அற்புத வர்ணனைகள் இருக்கின்றது, சூரிய ஒளி, ஜன்னல் வழியாக படுக்கையறைக்குள் நுழைந்து எப்படி வியாப்பித்திருக்கின்றது என்கிற வர்ணனை எவ்வளவு நீளமான விளக்க வரிகளில். எதுக்கு? இப்படியும், வாசிப்பவர்களை தலைசுற்றல் ஏற்படுத்துகிற ஆற்றல் வேறு, இன்னும் என்ன வேண்டும்?  வேறு வழியே இல்லாமல் இவைகள்தான் நல்ல கதைகள், நல்ல எழுத்துகள் என்கிற ஒரு மாயத்தோற்றதை உருவாக்கி விடுகிற புத்திசாலித்தனம் இவர்களின் சாமர்த்தியக் கலை.

இப்படிப்பட்டவர்களுக்கு வாசிப்பின் மகத்துவம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே  இல்லை. அவர்கள் எழுதுவதையே அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அட எதையும் வாசிக்காமல் கூட இருக்கலாம். தமிழில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொண்டு,  இவர்கள் காண்கின்ற கற்பனைக் கனவுகளை மொழிபெயர்த்துக்கொண்டு, அதற்கும் புரியாத நிலையில் ஒரு தலைப்பை வைத்து விட்டு, அப்படியே கற்பனைக் குதிரையை  தட்டிவிட்டு, அது எங்கெல்லாம் ஓடுகிறதோ, அங்கெல்லாம் தமது எழுதுகோலை மேயவிடுவார்கள். நன்கு கூர்ந்து கவனித்தால், அதில் ஒன்றுமே இருப்பதில்லை வர்ணனைகளைத்தவிர.  ஆனால் இவர்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்கிற முத்திரையை வெகு விரைவில்  மிகச்சுலபமாகத்  தட்டிச்சென்றுவிடுவார்கள். முதல் நிலை பரிசுகளைப் பல முறை வென்றவர்களான இவர்களின் படைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிற போதுதான் அதிகமாகத் தலைக்காட்டும். இந்த முறையில்  வெல்பவர்கள்  மக்கள் மத்தியில் சிறந்த படைப்பாளர்களாகப் பார்க்கபடுவதால்,  நிஜங்களைச் சொல்லும் அற்புத எழுத்துகள் தொடர்ந்து தோற்றுப் போகின்றன.

இன்னொரு நெருடும் உண்மை என்னவென்றால், கதைகளைத் தேர்ந்தெடுக்க  நியமிக்கப்படும் கதைக்குழு ஆசிரியர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ பரந்த வாசிப்பனுபவமும், வாழ்வியல் கூறுகளை கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு ஆற்றலும் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால்,  புதிய பாணியில் எழுதப்படும் கதைகளின் போக்கு புரியாமல் போகவே, வெறும் வார்த்தை ஜாலக் கற்பனைக்கதைகளில் மது உணட வண்டாய் கிறங்கிப்போய், அவற்றையே சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்தும்   விடுகின்றனர்.

இதுபோன்ற கதைகளுக்குத் (பரிசு கிடைப்பதை வைத்து) தொடர்ந்து ஆதரவு இருப்பதைக் காண்கின்ற  அடுத்த தலைமுறையினரும், அதே போல்  `கோக்குமாக்காக’ படைப்புகளை எழுதி விரைவாக எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதிக்க, தற்காலிக புகழுக்காக  குளறுபடியான கதைகளை எழுத ஆயத்தமாகிவிடுகின்றனர். இந்நிலையில் எழுதப்படுகின்ற கதைகள்தான்  ஏராளமாக பிரசுரமாகி தற்போதைய ஏடுகளை அலங்கரித்து வருகின்றன. ஃபாஸ்ட் பூட் இஸ் ஆல்வேஸ் வேஸ்ட் ஃபூட்.

இது இலக்கியச் சூழலின் ஆரோக்கியமின்மையைப் பிரதிபலிக்கும்  எரிச்சலூட்டும் ஓர் நிலைப்பாடு. பத்திரிகையில்  பிரசுரமாகுகின்ற கதைகளைத் தேர்ந்தெடுகின்ற கதைக்குழு ஆசிரியர்கள், கதைகளுக்குப் புள்ளிகள் வழங்குகின்ற நீதிபதிகள் போன்றோருக்கு பரந்த வாசிப்பனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகே கதைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.ஜா, பிரபஞ்சன், சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் போன்றோர்கள்  யார் என்பது கூட தெரியாத நிலையில் இருப்பவர்களை கதைத் தேர்வுக் குழுவில் நியமித்தால், நல்ல கதைகள் அடையாளங் காணப்படாமல் புறந்தள்ளப்படும் என்பது உறுதி.

எழுத்தாளன் என்பவன் முதலில் நல்ல வாசகனாகத் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதே சிறப்பு. கற்பனையில் குதிரை ஓட்டுகிற சில வார்தை ஜால ஆசாமிகளைப் பிடித்து, வாசிப்பனுபவத்தை பரிசோதித்துப்பாருஙக்ள்.

பூஜியம் பூஜியம் பூஜியம் தான்.
  

திங்கள், அக்டோபர் 01, 2012

கவர்ந்த குட்டிக்கதை - படித்ததில் பிடித்தது

தலைப்பு : உலகத்திலேயே மிகவும் வேகமானது எது???
உலகப் பிரசித்திப்பெற்ற நிறுவனம் ஒன்றில் மிகவும் கௌரவமிக்க வேலை ஒன்று
காலியாக இருந்தது.  பலர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் சிலரை ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு நேரடி பேட்டிக்கு
வரும்படி அழைத்திருந்தது அந்த நிறுவனம்.

அவர்களில் நால்வர் மிகச்சிறந்தவர்களாகக் காணப்பட்டனர்.  நால்வரும்,
பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில்
அந்த நிறுவன அதிபருக்குக் குழப்பம்.

"
போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிறோம், பிரிதொரு நாளில் இறுதிப் பேட்டிக்கு வாருங்கள்" என்று கூறி அந்த நால்வரையும் அனுப்பி வைத்தார்.
வேறொரு தேதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டிக்கு அந்த நால்வரும் வந்தனர்.
அவர்களுடன் இரவு உணவில் கலந்துகொண்ட நிறுவன அதிபர், "நீங்கள் நால்வரும் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள்; முடிந்தால் உங்கள் அனைவரையுமே வேலைக்கு அமர்த்திக்கொள்ள ஆவலாக உள்ளேன்.  ஆனால், உங்கள் தகுதிக்குரிய வேறு வேலைகள் காலியில்லைஆகவே, இந்த கௌரவமிக்கப் பதவிக்கு உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாளை காலையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்.  அதில் யார் சிறந்த பதிலைக் கூறுகிறீர்களோ, அவருக்கே அந்த வேலை" என்று கூறிச்சென்றார்.
மறுநாள் காலை பேட்டி ஆரம்பமானது.
முதல் நபரிடம், "உலகிலேயே மிகவும் வேகமானது எது?" என்று கேட்டார் அதிபர்.

"
நொடிப்பொழுதில் வந்துபோகும் சிந்தனை" என்றார்.
இரண்டாமவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் அதிபர்.

"
இமைகளை மூடித்திறப்பது" என்றார் அவர்.
மூன்றாவது நபரிடமும் அதே கேள்வி.

"
மின்சாரம்தான் உலகிலேயே வேகமானதுஇங்கிருந்து விசையைத் தட்டினால் அந்த நொடியில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள விளக்கு எரிகிறது" என்றார்.

"
ஓ நல்ல பதில்" பாராட்டினார் அதிபர். இப்பொழுது நான்காவது நபர்.

"
வயிற்றுப் போக்கு, அதாவது பேதி" என்றார் பீதியுடன்.
பதில் கேட்டு முகம் சுளித்த அதிபர், "எப்படி?" என்றார்.

"
நேற்று இரவு உணவுக்குப்பின் அறையில் படுத்திருந்தேன்என் வாழ்நாளில் என்றுமே ஏற்படாத வயிற்றுக் கலக்கல் ஏற்பட்டதுகழிவறைக்குப்போக நான் 'சிந்திப்பதற்குள்'...
'
இமைகளை மூடித்திறப்பதற்குள்'... 'விளக்கின் விசையைத் தட்டுவதற்குள்'... ... சோரி... அங்கேயே பேதியாகிவிட்டது!"
அந்த நான்காவது நபர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.


                        ***
முற்றும்***
 எழுதியவர் : பாலகோபாலன் நம்பியார்.


வெள்ளி, செப்டம்பர் 28, 2012

கொஞ்சம் சோகம் இன்று...

சீனா குவங்சிங்கில்,  இறந்துப்போன தமது மகனை ஆறுவருடமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ள ஒரு தம்பதியினரின் செய்கை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வீட்டிற்கு வருகிற உறவுகள், எத்தனையோ முறை இந்த செய்கையைக் கண்டித்து, நோயின் காரணமாக இறந்துப்போன இக்குழந்தையை எரியூட்டச்சொல்லியும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரேதத்தை பத்திரப்படுத்தி, ஏக்கமாக இருக்கின்ற சமயத்தில், பெட்டியைத் திறந்து  தமது மகனைப் பார்த்து கொஞ்சி திருப்திப் பட்டுக்கொண்டார்களாம்.

கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் இப்படிச் செய்து வந்ததிற்குக் காரணமும் இருந்திருக்கிறது. முதன் முதலில் பிறந்த இவர்களின் மூதத மகளையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பே நோய் பறித்துக்கொண்டது. இரண்டாவதாகப் பிறந்த இந்த மகனையும் இதே நிலையில் பறிகொடுக்க நேர்ந்ததை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

`என் மகன் குளிர்சாதனப்பெட்டியில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக உயிரோடு இருப்பதைப்போலவே இருக்கின்றான். அவனின் முகத்தைப் பார்த்தாலே போதும், கவலைகளெல்லாம் பறந்துப்போகிறது. அவன் எங்களுடனே இருப்பதைப்போன்ற ஓர் உணர்வைக்கொடுக்கிறது இந்நிலை. அதனால்தான் அவனை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ எங்களுக்கு மனமில்லை..’ என்று சொல்லி  தாம் செய்து வந்த இச்செய்கைற்கு நியாயம் கற்பித்து வந்துள்ளனர் அத்தம்பதியினர்.

இச்செய்தியைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் சோகம்தான். என்ன செய்வது வாழ்வில் இரவு பகல், மேடு பள்ளம், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் இரண்டாகத்தானே வகுத்துள்ளார்கள்.

மிக அண்மையில் ஒரு பெண்மணியை உணவுக்கடையில் சந்தித்தேன். பழைய நட்பு. நட்பு என்பதை விட, முன்பு நான் சிறுவணிக முதலாளி. ஒரு கடை வைத்து வியாபரம் செய்துவந்தேன். விடுமுறை நாட்களில் கடையைத் திறப்பேன். `பியூட்டி ஷாப்’ அது, பலவிதமான அலங்காரப்பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்து வியாபாரம் செய்துவருவேன்.

அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களை விட, என்னோடு மணிக் கணக்காக  கதையளக்க சிலர் வருவார்கள்.  `கஸ்டமர்’ இல்லையென்றால் எனக்கும் பொழுது போகும் இவர்களால். அப்போது ஏற்பட்ட பல நட்புகளில் இவரும் ஒருவர். பெயர் மல்லிகா.

அவரும் ஒரு சிறுதொழில் வியாபாரிதான். அவரின் பொருட்கள், ஒரு பிரபலமான `டைரக்ட் சேலிங்’. அப்பொருட்களைக் கொண்டு வந்து என் கடையில் கொடுத்து விற்பனை செய்யச்சொல்லி தொல்லை கொடுத்த வண்ணமாக இருப்பார். ஒரு நாள், ``சரி விற்றுக்கொடுக்கிறேன், ஆனால் பணம் உடனே கொடுக்க முடியாது, வியாபாரம் ஓடினால் தான் தருவேன், இல்லையென்றால் பொருளை எடுத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்..” என்று எச்சரித்தேன்.

ஒரே சொற்பொழிவு மழைதான் போங்க. `தமிழர்கள் வாழ்வு, உருப்படாத நிலை, பணம் வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்கிறார்கள். வாரி கட்டிக்கொண்டா போகப்போகிறார்கள்.! வியாபாரம் தெரியாதவர்கள். திடீர் பணக்காரர்கள், இவர்களைப் பாருங்கள், அவர்களைப் பாருங்கள். நாசமாய் போன இந்த சமூகத்தைப் பாருங்கள். என்னைப் பார், இன்னும் கொஞ்ச நாளில் நான் மெஸ் கார் வாங்குவேன், என்னைப் பார்த்து நீ ஆச்சிரியப்படுவாய். அப்போது நானே உனக்கு சாமான்களை இலவசமாகத் தந்துத் தொலைக்கிறேன்... ஆ..வூ....’ என, ஒரே பிதற்றல்.

இப்படிக் காரசாரமாகப் பேசினாலும், ஆள் படு உற்சாகமான பேர்வழி. என் கடைக்குள் நுழைந்து விட்டால், இடம் களைக்கட்டும். இதற்காகவே இவர் வருவாரா என காத்திருப்பேன். எல்லா சூழலிலும் நேர்மறையான பேச்சுதான். திட்டினாலும் சுவாரிஸ்யமான நட்பு.

இப்போது கடை இல்லை. உதவிற்கு ஆள் இல்லை மேலும் வியாபாரம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்துகொண்டேன். கடையை விற்றுவிட்டேன். அதோடு அங்கே ஏற்பட்ட சில நட்புகளும்   தொடர்பில்லாமல்  போனது. ஐந்து ஆறு வருடங்கள் ஆகியிருக்கும்.

அன்று உணவுக்கடையில் அவரைச் சந்தித்தவுடன், முதலில் எங்கேயோ பார்த்ததைப் போலத்தான்  இருந்தது, அவருக்கும் அப்படியே தோன்றியிருக்கக்கூடும், என்னையே உற்று நோக்கினார். ஆனாலும் நானே  முதலில் கண்டுபிடித்து,

`ஹாலோ பிஸ்னஸ் லேடி, மெஸ் கார் வாங்கியாச்சா?’ என்றேன்.

`ஹாய் விஜி, எப்படியிருக்கீங்க? கடை இன்னும் இருக்கா?’  என, மிகவும் அமைதியான தொனியில் கேட்டார்.

`என்ன பழைய உற்சாகமெல்லாம் காணாமல் போச்சு. பிஸ்னஸ் பெரிய அளவில் வந்துவிட்டதோ, எங்களிடம் பேசக்கூட பிடிக்கவில்லை மேடத்திற்கு..’ என கிண்டல் செய்தேன்.  முகம் வாடியது, தலை கீழே கவிழ்ந்தது. கண்கள் பனித்தன. `என்னாச்சு? அட விடுங்க, பிஸ்னஸ் என்ன பிஸ்னஸ்.. அது எல்லோருக்கு சரிப்பட்டு வராது. இப்ப என்ன செய்றீங்க அத சொல்லுங்க! ’ என்றேன்.

வாடிய முகம் வாடியபடியே.. ` பிஸ்னஸ் நல்லா வந்ததுங்க.. வேகமா உயர்ந்து வந்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடி எல்லாமே அமோகமாக வந்தவேளையில், கடவுள் என் இருபத்தொன்று வயது மகனை எடுத்துக்கொண்டான். ஒரு கார் விபத்தில் முழுசா எம்மவனைப் பறிகொடுத்து விட்டேன். என்னிக்கு அவனை இழந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம், என் பிள்ளைதான் வேண்டும். அவன் தான் என் உயிர்.. இந்த இரண்டு வருடமா நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அவன் ஒரு முறைதான் செத்தான், நான் தினம் தினம் சாகிறேன்.’ என்றார்.

என்ன சொல்ல? அந்த நிலையில் நாம் இருந்தால்தான், அதனின் வலிதெரியும், அதுவரையில், ஆறுதல் என்கிற பெயரில் காயங்களைச் சீண்டிப்பார்க்க எனக்கு எப்போதுமே இஷ்டமில்லை. பேச்சை வேறு பக்கம் திருப்பி, அட வாங்க சாப்பிடப்போகலாம் என்று சொல்லி,  அந்த பேச்சையே எடுக்காமல், அற்புதமான உணவுகளை ஆடர் செய்து, சாப்பிட்டு வந்தோம்.

பிஸ்னஸ், செய்யுங்கள். உங்களுக்கு அந்த திறமை இருக்கிறது. அது எல்லோருக்கும் வராது. என்று சொல்லி மட்டும் , விடைபெற்றேன்.    


வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.






புதன், செப்டம்பர் 26, 2012

எழுத்தாளர்களே நில்லுங்கள்....

படித்ததில் பிடித்தது

தி.ஜா ஐயாவே இப்படிச்சொன்னால், நாமெல்லாம்???

*******
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல்எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் , வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

*********

எழுத்தாளர் தி. ஜானகிராமன், 1969 யில் எழுதிய `சிறுகதை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரை இது.  நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்று நேற்று சொல்லப்பட்டது போல், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதுதான் இக்கட்டுரையின் தனிச்சிறப்பு.

என் மனதின் தேடலுக்கு ஒத்துப்போவதைப் போல் அமைந்த  ஓர்  அற்புதமான ஆய்வுக்கட்டுரை.  

நன்றி : அழியாச்சுடர்கள்.  

அழகான வரிகள்

மெயிலில் வந்தது. தினம் தினம் அழகழகான வரிகளைக்கொண்ட ஆங்கில தத்துவங்களை காலை வேளையில் அனுப்பி உற்சாகமூட்டிவரும் பார்த்தி. இது பார்த்தி அனுப்பிய பாப்பாத்த்தி.

நன்றி: பார்த்திபன்.