ஞாயிறு, அக்டோபர் 28, 2012

எல்லாமே தலைகீழ்



தீபாவளிக்கு curtain ஆடர் செய்து தைக்கக்கொடுத்திருந்தேன். பெரிய பிரபல  பேரங்காடியில் துணி வாங்கி அங்கேயே professional curtain  tailors களிடம் தைக்கக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்  எல்லாம் ரெடி என அழைப்பு வரவும், வேலை முடிந்தவுடன்  அவசர அவசரமாகச் சென்று எடுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு விட்டேன், நம்பிக்கைதான்.

இன்று நேரமிருக்கவும் அதை எடுத்துப்பார்த்தால், எல்லாம் தலைகீழ். தையல் சரியாக இல்லை..மேலும் கீழுமாகத் தைத்து, அலங்கோலமாக இருந்தது பார்ப்பதற்கு. கோபம், கோபம்.. காரணம் விலை மலிவு அல்லவே...

அழைத்தேன் அந்த கம்பனிக்கு. ஒரு மலாய் பெண்மணி அழைப்பை எடுத்தாள். பேசுகிற நான் தமிழ்பெண் என்று தெரிந்தவுடன் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் அழைப்பைக்கொடுத்தாள்.

தமிழ்ப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை எடுத்துக்கொண்டு வாருங்கள், சூப்பர்வைசர் இருப்பார், அவர் செட்டல் செய்வார் கவலை வேண்டாம், என்றார். எல்லம் சரியே, ஆனால் தையல்காரி யார்? என்று கேட்டபோது, `ஒரு நாட்டுக்காரிதான்’ என்றார் பாருங்கள். எனக்கு கடுமையான எரிச்சல். அவள் நாட்டுக்காரி என்றால் நீ யார்?  அவர்களை (மலாய்க்காரர்களை) சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்வதுதான் எங்க ஊரில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். பேசிக்கொண்டிருந்த விவரத்தை விட, இது இன்னும் கூடுதல் கடுப்பேற்றியது என்னை. நம்ம பெண்ணை கொஞ்சம் கண்டித்து, இனி மேல் அவள் நாட்டுக்காரி, இவன் நாட்டுக்காரன், என்கிற அடையாள அடைமொழி எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் வந்தேறிகள்தான். இப்போது இது நம் நாடு. அது எல்லோருக்கும் சொந்தம், என எச்சரித்து விட்டு,  தொலைப்பேசியை வைத்தேன்.

அதற்குள் என் மகன்.. `ஏம்மா எல்லார் கிட்டேயும் சண்டை போடறீங்க?’ என்றான். அவனும் என் கணவரும் ஒன்று. எதையும் தட்டிக்கேட்கக்கூடாது. பொருள்களில் சேதமென்றால், பரவாயில்லை பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமென்றே செய்தார்களா, எதோ தவறு நடந்திருக்கும் .. நாம் என்ன பர்ஃபெக்ட்’ஆ? என்கிற தத்துவமெல்லாம் பேசி, புதிதாக வாங்குவார்களேயொழிய ஒரு போதும் நியாயம் கேட்க படையெடுக்கமாட்டார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஆண்கள் இப்படித்தானா?

வியாழன், அக்டோபர் 25, 2012

பத்திய விடுதி

இன்று மதியம் வித்தியாசமான தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகப்பெரிய எண்ணிக்கையில் மின்சாரப்பொருட்களை வாங்க எங்களின் கம்பனி ப்ரொஜெக்ட் ஜெனரல் மானேஜரை சந்திக்க வந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வுயரதிகாரி உணவருந்திவிட்டு திரும்புவதற்கு வெகுநேரமானதால், என்னிடம் சில விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

கம்பனியின் உற்பத்திப்பொருட்களின் தரம் பற்றியும், எங்களின் கம்பனிப்பொருட்களை அவர் இதுவரையில் பயன்படுத்தியதில்லை என்றும், பொருட்களில் பிரச்சனை என்று வரும்போது, விரைவு சேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும், அதனின் உபரி பொருட்களின் விலை பற்றியும் அவைகள் சுலபமாக எங்கும் கிடைக்குமா என்பதையும், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது அதனின் கழிவு எத்தனை விழுக்காடு  வரை குறையும் என்பதனைப்பற்றியும் ஓர் அறிமுக உரையாடல் நிகழ்ந்ததுக்கொண்டிருந்தது எங்களுக்குள்.

நம்மவர் என்பதால் எனக்குத்தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொண்டிருந்தேன்.பேச்சுவாக்கில் கேட்டேன் `எதற்கு சார், இவ்வளவு ஏர்கோண்ட், டீவி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் (air purifier)  கருவிகள், புதிதாக ஹோட்டல் எதும் திறக்கவிருக்கின்றீர்களா?’.  ஒவ்வொன்றிலும் எண்ணிக்கை தலா அறுபது வரை ஆடர் செய்ய, பட்டியலை கையோடு தயார் செய்து வைத்திருந்தார்..

`CONFINEMENT CENTRE ஆரம்பிக்கவுள்ளோம். முதலில் வீட்டில்தான் சிறிய அளவில் செய்து வந்தோம், இப்போது பிஸ்னஸ் வளர்ச்சியடைந்து விட்டது, வீடு கொள்ளவில்லை. நிறைய பேருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது, ஆறு மில்லியன் செலவில் இந்த  CONFINEMENT CENTRE கட்ட ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாடி கடைவீடுகளைச் சேர்த்து வாங்கி முழுமையாக இதற்கே பயன்படுத்தி  அதைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றோம். கீழே முப்பது அறைகள், மேல் மாடியில் முப்பது அறைகள். எல்லா அறைகளிலும் ஏசி, டீவி, air purifier என பொருத்த உள்ளோம். கட்டும்போதே முழுமையாக இவற்றையெல்லாம் செய்துவிட்டால், பிரச்சனை குறையும், இல்லையென்றால் அதற்கென்று வரும் செலவு சங்கடம் இன்னும் அதிகமாகும்..’ என்றார்.



எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  `CONFINEMENT CENTRE?? அப்படின்னா என்ன சார்?’ கேட்டேன்.

`ஆமாம், இங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க, அதுவும் அநேகமா தமிழர்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். காரணம், இது சீனர்கள் மற்றும் மேலை நாட்டவர்களின் கலாச்சாரம். நமது அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்த செண்டர் பிரபலம். சீனாவிலும் பரபரப்பாக இயங்கிவருகிறது. இங்கே நம் நாட்டை எடுத்துக்கொண்டால், நான் தான் முதல் முதலில் பெரிய அளவில் ஆரம்பிக்கவுள்ளேன். சிலர் தங்கியிருக்கின்ற வீட்டை விரிவுபடுத்தி லைசன்ஸ் எதுவுமில்லாமல் பணம் சம்பாதிக்க இந்த சேவையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கேள்விப்பட்டவரை பெரிய அளவில் செண்டர் திறப்பது நானாகத்தான் இருக்கனும். என் மனைவியின் (சீனப்பெண்) அம்மா சீன நாட்டுவைத்தியத்துறையில் கைத்தேர்ந்தவர். அதுவும் அத்துறையில் அவர் தேர்ச்சிப்பெற்றவர் என்கிற சான்றிதழ் எல்லாம் கைவசம் வைத்திருக்கிறார். வீடுவீடாகச் சென்று, பிரசவித்த பெண்மணிகளுக்கு சீன மூலிகை உணவுகளைத் தயார் செய்வது, பிறந்த குழந்தைகளைப் பராமறிப்பது, மகப்பேறு காலத்தில் தாய் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் களைவது, தாயயையும் சேயையும் பாதுகாத்துக்கொள்வது, போன்ற பல வேலைகளை பல வருடங்களாகச் செய்து வந்துள்ளார். என் மனைவி நவீன மருத்துவத் தாதி. பல மருத்துவர்களிடமும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இது அரிய வாய்ப்பாகவே பட்டதால் இந்த செண்டரை ஆரம்பிக்க நானும் துணிந்து விட்டேன். முக்கால்வாசி வேலைகள் முடியும் தருவாயில், கூடிய விரைவில் திறப்புவிழா நடைபெறும் கலந்துக்கொள்ளுங்கள்..’ என, அவரின் பெயர் அட்டையை என்னிடம் வழங்கினார்.

இத்துறை எனக்குப் புதுமையாகவும் சுவாரிஸ்யமாகவும் இருந்ததால் மேலும் தகவலறிய.. `ஓ, குழந்தை பிறந்தவுடன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பத்தியமாக இருப்பார்களே, அந்த காலகட்டத்தில் தாய் சேய் போன்றவர்களைக் கவனித்துக்கொள்கிற நர்சிங் ஹோம் மாதிரியா? ’

`ம்ம்..ஏறக்குறைய அதுபோல்தான்..’

`அப்படியென்றால் நிறைய ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டுமே.!, அது என்ன லேசுபட்ட வேலையா? அந்த துறையில் கைத்தேர்ந்தவர்களை தேடி எடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டுமே.. கஷடம் இல்லெ..ம்ம்.!!’

`அப்படியெல்லாம் இல்லிங்க, அவங்க அம்மா இருக்காங்க, அந்த கால ஆயம்மா. என் மனைவி இருக்காங்க இந்த கால நர்ஸ், அதற்கு மேலே, பொதுவான உதவியாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பிரச்சனையில்லை. மெயின் வேலைகளை அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள், மற்ற மற்ற  உதவிகளை சாதரண வேலையாட்கள் செய்வார்கள்.’ 

மேலும் விவரமறிய..`எப்படிங்க, அங்கே வந்து பிரசவித்துக்கொள்வார்களா? ’

`அடடா, அது பிசவ செண்டர் இல்லிங்க. எப்படின்னா.. ஆஸ்பித்திரியில் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சில தாய்மார்களுக்கு பணம் இருக்கும், ஆனால் முறையாக பாதுகாப்பு வழங்குகிற உறவுகள் இருக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, குழந்தை பெற்றபின் எவ்வளவு வேதனைகளை ஒரு தாய் அனுபவிக்கின்றாள் என்று..! குழந்தையைத் தூக்கி பால் கொடுக்கக்கூட முடியாமல் சிரமப்படும் பெண்கள், ஆப்ரேஷன் மூலமாக குழந்தையைப் பிரசவித்த பெண்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவது, பிரசவம் முடிந்தவுடம் கடுமையான காய்ச்சல், பால்கட்டிக்கொண்டு வலி, பயங்கர முதுகுவலி, நரம்பு வலி, அடிபாதம் வலி போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. சில பெண்கள் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடுமென்று அமைதியாய் இருந்து விடுவார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் இவற்றிற்கெல்லாம் நாங்கள் நல்ல தீர்வு வழங்குவோம். வீட்டில் உள்ள யாவருக்கும் தொல்லை கொடுக்காமல், பெரிசுகளையும் துன்புறுத்தாமல், எங்களின் செண்டரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்..’

`நீங்கள் சொல்கிற தீர்வு என்பது?’ இன்னும் அதிகாரி வரவில்லை..பேச்சைத்தொடர்ந்தேன்.

`தாயிற்கு, நேராநேரத்திற்கு பத்திய உணவு சமைத்துக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியம் பேணுவது, நல்ல முறையில் குளிப்பாட்டுவது, சருமங்களைப் பாதுகாப்பது, உடம்பு பிடித்து விடுவது, நன்கு உறக்கம் கொள்ளவைப்பது. அதாவது குழந்தைகளை அவர்களின் அருகில் விடாமல் அவர்களை ஓய்வெடுக்கவைப்பது. சமசீர் உணவு வழங்குவது, அழுக்குத்துணிகளை துவைப்பது, மெல்லிசையில் தாலாட்டுவது, மூலிகை மருந்தளிப்பது போன்ற பராமறிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறும். குழைந்தகளுக்கும் அதே போன்ற சேவைகளை வழங்குவோம், தாயிடம் தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு பயிற்சி அளிப்பது, அமைதியாகத் தூங்கும் முறைகளைப் பழக்குவது, வேளாவேளைக்கு பால் அருந்தக்கொடுப்பது, நோய் வராமல் பார்த்துக்கொள்வது, முறையாகக் குளிப்பாட்டுவது, என அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வோம்...’ சொல்லிமுடித்தார், அவர் யாருக்காக காத்திருந்தாரோ அந்த அதிகாரியும் வந்துவிட்டார்.  இருவரும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தார்கள்.

எனக்கு ஆச்சிரியமாகவே இருந்தது. என்னன்னமோ சேவைகள். அந்த சேவைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடின.

குழந்தை பிறந்த மறுகணம் எவ்வளவு அவஸ்தைகள். அம்மா பாட்டிமார்கள் பார்க்கிறேன் என இன்னும் கூடுதல் கொடுமைகளையல்லவா கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நம்மை நிம்மதியாகவே விடமாட்டார்களே.!

``நாங்களெல்லாம் அந்த காலத்திலே..எ.. எ.. எ.. வேலைக்குப்போய் வந்து வீட்டிலே பெத்துபோட்டோம். காலையிலே பெத்துட்டு, மாலையிலே காண்டா போட்டு வாளியில் தண்ணி தூக்கியிருக்கோம். பத்தியமெல்லாம் கிடையாது, வெந்தத சாப்பிட்டு விதியேன்னு கிடப்போம்.. ஆத்துல போய் துணிதுவச்சு கொண்டுவரணும். பதினாறு இருபது பேருக்கு மூணு வேளையும் சமைச்சுப்போடணும், புட்டி பால் எல்லாம் கிடையாது, மார்ல சொறக்கிற பாலத்தான் ஆறு வயசு வரைக்கும் குடுப்போம்.. ம்ம்ம், இப்போ என்னாடான்னா, பார்க்க ஆளு இருக்கு, ஆனாக்கா வீட்டுல வேலை செய்யவே நோவுது இதுகளுக்கு.. அங்க வலி இங்க வலின்னு கத்தறாளுங்க.. தொட்டா குத்தங்கிறாளுங்க. பெத்த புள்ளய தூக்கமாட்டேகிறாளுங்க.. நடக்க முடியலங்கிறாளுங்க, ஒரு புள்ள பெத்துட்டு இப்படி பெருத்து கிடக்கறாளுங்க, கண்டதெல்லாம் திங்கணுங்கிறாளுங்க, எண்ணெயில பொரிச்சதெல்லாம் விலாசறாளுங்க, வாயக்கட்டமாட்டேங்கிறாளுங்க, நொறுக்குத்தீனி திங்கறாளுங்க... எஹேம்ம்ம்.. !!!’’ இப்படி அலுத்துக்கொண்ட பெருசுகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க தம்கட்டி வலிகளைப்பொருத்துக்கொண்டு மனவுளைச்சலில் உழன்று அமைதி காத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு செண்டர் அப்பவே இருந்திருந்தால், உடலை நன்கு தேற்றியிருக்கலாம்.. நினைவுகளை அசைப்போட்ட வண்ணம் கண்கள் எதையோ கணினியில் தேட, ஒரு மணி நேரங்கழித்து..

 `சரிங்க பேசியாச்சு..quotation கொடுக்கறேன் என்றிருக்கார். பார்ப்போம்.. அப்ப நான் கிளம்பறேன். எதுவொண்ணுன்னா கூப்பிடுங்க.. யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணுங்க, என்னுடைய பெயர் அட்டையை கூடுதலாக கொடுக்கிறேன், விசாரிப்பவர்களுக்கு கொடுங்கள், சரியா..!’ என்று சொல்லி விடைப்பெற்றவரை அழைத்து..

` பீஸ் எவ்வளவு வருங்க ஒரு மாசத்திற்கு?’

`நம்ம பணம் நாலாயிரத்தி எண்ணூறு (RM4,800) வெள்ளிங்க.. !’

@#$%^&

நல்லவேளை.. அம்மாவிற்கு நான் வெறும் நூற்றைம்பது வெள்ளிதான் கொடுத்தேன்.. என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி விட்ட  பாட்டிக்கு ஒரு புதுப் புடவை மட்டுமே..

செவ்வாய், அக்டோபர் 23, 2012

நவராத்திரி அறியாமல் கொண்டாடப்படும் திருநாளா?

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும் முக்கியத் திருநாள்களில் ஒன்று நவராத்திரி ஆகும். 

நவராத்திரி : வடமொழியில் நவராத்திரி என்றால் - ஒன்பது இரவுகள் என்று பொருள்படும். பெயரே சொல்லிவிடும் இது தென்னாட்டு திருவிழா இல்லை என்று. பெரும்பாலும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளில் வாழ்வோரும் வேறுவேறு விதமாகவே நவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சொல்லும் காரணக் கதைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது. 

ப்ரௌஸ்தபாத மாதம், அதாவது இந்திய நாட்காட்டியின் படி ஆறாவது மாதம் பிரதம் திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நோன்பு நோற்று கொண்டாடுவதே இந்த நவராத்திரி ஆகும். நம் எத்தனை இந்துக்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது இது ஒன்று மட்டும் நவராத்திரி அல்ல, ஆண்டுக்கு ஐந்து முறை நவராத்திரிக் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமானவை குளிர்க்காலம், வசந்தக் காலம் / வெயில் காலம் ஆகியவற்றின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் இந்த இரு நவராத்திரிகளே ஆகும். 

பின்னணி புனைவுகள் : இந்தக் குளிர்க்காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியே மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. இவற்றைப் பிண்ணி பல புனைவுக் கதைகள் இருக்கின்றன, அதாவது ராமன் - ராவணன் யுத்தம் நடந்த காலமாகவும், கிருஷ்ணன் - நரகாசூரனை வதம் செய்ததாகவும், துர்க்கா - மகிஷாசூரனை வதம் செய்ததாகவும் பல புனைவுக் கதைகள் நிலவுகின்றன. உண்மையில் இக்கதைகள் உண்மை இல்லை என்பதை ஒரு ஒற்றுமை பாங்கில்லாமல் கதைகள் உலாவுவதில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். அல்லது இதனை ஆரியர் - திராவிடர் மீது தொடுத்த போர்களின் வெற்றியின் பின்னணியில் எழுந்தவையாகக் கூட இருக்கலாம். ஏனெனில் இலங்கையை ஆண்ட ராவணன், அசாமை ஆண்ட நரகாசூரன், கருநாடகத்தை ஆண்ட மகிஷாசூரன் போன்ற திராவிட முதற்குடி மன்னர்கள் அழிவில் இருந்து வந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் இக்கதைகள் ஒன்றுமே நான்கு வேதங்களில் இல்லை என்பதால், இவை யாவும் பிற்கால இடைச் செருகல் என்பதில் ஐயமே இல்லை. 

ஐரோப்பியத் தொடர்பு : ஆனால் என்னைக் கேட்டால் நவராத்திரி பண்டிகை என்பது தாய்வழி சமூகம் சார்ந்த மக்களால் குறிப்பாக மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஆதி - ஆரியக் குடிகளிடம் இருந்து தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் இரண்டு முக்கிய நவராத்திரிப் பண்டிகையும் பெண் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்புடையாதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இலையுதிக் கால முடிவிலும், வசந்தக் காலத் தொடக்கத்திலும் கொண்டாடப்படுகின்றது. அதாவது மத்திய ஆசியா உட்பட ஐரோப்பா பகுதிகளில் இந்த நாளில் தான் குளிர் காலம் மிகச் சரியாகத் தொடங்குகின்றது. அத்தோடு குளிர் கால ஆயத்தங்களைச் செய்யவும், கோடைக் காலத்தில் கிடைத்த விளைச்சல்களைப் பத்திரப்படுத்தவும், விளைச்சல்களுக்கு நன்றி சொல்லவும் இயற்கை அன்னையை அவர்கள் வணங்கி இருக்கக் கூடும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. 

தென்னாட்டில் நவராத்திரிக் கொண்டாடங்கள் இருந்தமைக்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனலாம், சங்கம் மருவிய காலப் பகுதியில் எழுந்த இலக்கியத்தில் தான் தென்படத் தொடங்குகின்றது. அத்தோடு இந்து மதம் ஆதிக்கம் செலுத்தாத இலங்கை, மியன்மார் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை இல்லை எனலாம். ஆகவே நிச்சயம் இது வடக்கில் இருந்து வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அத்தோடு இன்று கற்பனைக் கடவுளாகச் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கா ஆகியோர் இடம்பெற்றுவிட்ட போதும், முன்புக் காலங்களில் விளைச்சலைக் கொடுத்த இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் தினமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றச் செய்கின்றது. அத்தோடு வேட்டைக் கருவிகள், விவசாய உபகரணங்களைச் சீர்ப்படுத்திப் பத்திரப்படுத்தி வைக்கும் தினமாகவே ஆயுதப் பூஜைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்தத் திருநாளானாது இரு காலநிலையைக் கொண்ட வெப்ப மண்டலப் பகுதியைக் காட்டிலும், நான்கு கால நிலையைக் கொண்ட குளிர் பகுதிகள் சார்ந்த வாழ்க்கை முறைக்கே பெரிதும் பொருந்திவருகின்றது. 

இயற்கைத் தாய் : மனித சமூகம் நாகரிகம் அடைந்த காலக் கட்டத்தில், அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. மண், பெண் இரண்டும் முக்கியமாகக் கருதப்பட்டன. இரண்டும் விளைச்சலைத் தருவதாக எண்ணினார்கள். மண்ணைப் பெண் உருவில் கண்டார்கள். தாய் மொழி, தாய் நாடு, பூமித் தாய், ஆறுகள், குளங்கள் கூடப் பெண்ணாகக் கருதப்பட்டன. ஆகவே ! விளைச்சலைத் தந்த பூமிக்கும், இயற்கைக்கும் நன்றி சொன்னார்கள், படையல் இட்டார்கள், உண்டு மகிழ்ந்து பகிர்ந்துக் கொண்டார்கள். குளிர் காலம் கொடுமையாக இருக்கும் என்பதால் அதற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்தார்கள். இதுவே நவராத்திரியின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். பின்னர் மத்திய ஆசிய மக்கள் நகர்ந்து நகர்ந்து தெற்கே வரவும், அவர்களின் வாழ்க்கைச் சார்ந்த குண நலங்களும் இங்கும் வந்துவிட்டன. 

கற்பனைக் கடவுளர்கள் : மண்ணைப் பெண்ணாக்கி, கடவுளாகக் கருதிய மக்கள். காலம் செல்ல செல்ல மண்ணை மறந்து பெண் கடவுளர்களை மட்டும் வழிப்படத் தொடங்கி விட்டார்கள். இயற்கை அன்னைக்கு நன்றி சொல்வதை மறந்து கற்பனை தேவதைகளுக்கு நன்றி சொல்லி விழா எடுத்தார்கள், வரங்கள் கிடைக்கும் என நம்பினார்கள். பழங்குடி வழிப்பாடுகள் கட்டமைக்கப்பட்டு வைதிக மதமாக உருமாறிய போது பிராமணர்கள் பல புனைவுக் கதைகளை உருவாக்கி பரப்பி விட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. 

ஆகவே ! இன்றைய காலக்கட்டத்தில் இந்தப் பண்டிகை அவசியமா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், குளிர் காலத்தை எதிர்க்கொள்ளவும் திருவிழாக் கொண்டாடுவது பிழையல்ல. ஆனால் ! அதன் அடிப்படைக் குணங்களை மறந்து அதீத கற்பனைக் கடவுள்களை வணங்கியும், உணவு உட்படப் பல்வேறு பொருட்களை வீணடித்தும் ஒரு மாபெரும் விழா தேவையா என்பது தான் எனது கேள்வியே. முக்கியமாகப் பெண்ணை ஒரு மண்ணாகக் கூட மதிக்காமல் அவளை அடக்கி, துன்புறுத்தி, காமப் பொருளாகப் பாவித்து, பாலியல் தொழில் தள்ளிவிட்டு, பாலியல் வன்புணர்வுகள் செய்துவிட்டு, அதிகாரங்களைக் கூடப் பகிர முடியாமல் திணறும் நிலையில் - வெறும் கற்பனையில் உருவகித்துக் கொண்ட பெண் தெய்வங்களை மட்டும் வணங்குவதால் என்ன பயன் சொல்லுங்கள். 

இதற்கு கொலு வைப்பதும், கொலுக்கட்டை அவிப்பதும், பார்ப்பனர்களுக்கு காசினை வாரி இழைப்பதும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் அடிப்படையில் நல்ல நிலையில் தோன்றிய ஒரு திருவிழா மிக மோசமாக வன்புணரப் பட்டு மாற்றப்பட்டு உள்ளது. 

பெண்ணுக்கு சமமான கல்வி இல்லாமல் கலைமகளையும், பெண்ணுக்கு போதிய சொத்து உரிமைகள் இல்லாமல் திருமகளையும், பெண்ணுக்கு அதிகார பலங்கள் இல்லாமல் மலைமகளையும் வணங்குவதைக் கண்டு என்னால் நகைக்கத் தான் முடிகின்றது. இந்திய மக்கள் வெறும் மரபுகளுக்காகவே எதனையும் செய்பவர்கள், ஆழமாகச் சிந்திக்கவோ, எதார்த்த மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளவோ தவறியவர்கள் என்பதன் வெளிப்பாடே இந்த நவராத்திரி. பெண்கள் சமமாக மதிக்கப்படாமல், பெண் உருவாகக் கருதப்பட்ட நிலமும், நீரும், வளங்களும் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவதைத் தடுக்காமலும் வெறும் சடங்குகளுக்காகக் குளிர்க்காலப் பண்டிக்கையைக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.


தொகுப்பு...
நன்றி இக்பால் செல்வம்.


அவரின் வலைத்தளம், பகுத்தறிவுப்பெட்டகம்.

திங்கள், அக்டோபர் 22, 2012

பற்று

நாம் தான்
Breakfast
Lunch
Dinner
supper, என
உணவுவேளைகளைப் பிரித்து வைத்துள்ளோம்
தமிழர்கள்
காலை உணவு
மதிய உணவு
இரவு உணவு
என்று மட்டுமே சொல்வார்கள்
நம் மொழியே சிறந்தது
ஒரு ஐரோப்பியனும்
எங்கோ ஒரு மூலையில்
மொழிப்பற்றை பறைசாற்றலாம்.

சனி, அக்டோபர் 20, 2012

நவராத்திரி பூஜை


நவராத்திரி ஒன்பது பத்து நாள் பூஜை செய்கிறேனோ இல்லையோ.. ஆனால் சரஸ்வதி பூஜை மட்டும் கண்டிப்பாகச் செய்வேன். செய்வேன் என்றால் வடை பாயாச விருந்தெல்லாம் கிடையாது.. (செய்கிறேன் வா, என்றால்.. என்ன சமைக்கின்றாய் என்றுதான் கேட்பார்கள் அதனால் சொல்கிறேன்)

வீட்டிலேயே பூஜை செய்வேன், வீட்டில் வீணை மற்றும் மிருதங்கம் இருப்பதாலும், எனக்கும்  தொடர் வாசிப்பு பழக்கம் இருப்பதாலும், புத்தகங்கள் போன்றவைகளை வைத்து சிறப்புப்பூஜை செய்வது வழக்கம். பூஜையை நானே செய்வேன். தெய்வீகம் நிலைத்திருக்க.

அதற்குத்தயாராகும் நிலையில், கிடப்பில் உள்ள வீணையையும் மிருதங்கத்தையும் சுத்தம் செய்கிற போது.. சில நிகழ்வுகள் பின்நோக்கி நகர்ந்தன..

என் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது வீணை மற்றும் மிருதங்க வகுப்பில் சேர்த்து விட்டேன். அவைகளைக் கற்றுக்கொண்டு வீட்டிலும் வாசித்து வந்தார்கள். அமைதியான சூழலுக்கு வருடலாய் வரும் கீதங்கள் அவை. அதுவும் என் மகள் தேவார திருவாசங்களைப் பாடிக்கொண்டே வீணையை மீட்டுவாள். வீடே களைக்கட்டும். ரசிப்பேன்.

இப்போதும் அவைகளைத் தொடர்ந்து வாசிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தால், `மறந்தாச்சு, மீண்டும் கற்க வேண்டும். நேரமில்லை..பிறகு பார்க்கலாம்’ என்கிறார்கள். படிப்பதற்கே எவ்வளவு இருக்கு, எங்கே அதைத் தொடுவது என்கிறார்கள்.!

அதுவும் என் மகன் இருக்காரே, `வேண்டாம் நான் வாசிக்கல, வெட்கமாக இருக்கிறது..’, என்கிறார். மகளாவது மற்றவர் முன்னிலையில் வாசித்து பாராட்டு பெற்றுள்ளார். ஆனால் மகன், தெரிந்ததை தெரியுமென்று காட்டிக்கொள்ளாமல், யாருமில்லாத சமையத்தில்தான் வாசிப்பார். நான் கூட மறைந்திருந்துதான் கேட்டு ரசித்துள்ளேன். ஆட்களைப் பார்த்தால், வாசிப்பதை நிறுத்திவிடுவார்.

செமஸ்டர் ப்ரெக், மூன்று வார விடுமுறையில் வந்துள்ளார் மகன், எஞ்ஜினியரிங் காலெஜ் படிக்கிறார். படிப்பு படிப்பு என உளைச்சலாகி இருப்பியே, விடுமுறையில் எதாவது கலை சம்பந்தப்பட்டதில் உன்னை ஈடுபடுத்திக்கொள், மீண்டும் குருவிடம் செல், மிருதங்கம் தொடர்ந்து கற்றுக்கொள், என்றால்.. ஆள விடு, எனக்கு இதெல்லாம் சரி பட்டு வராது, என்கிறார்..

இப்போது ஓரளவு வசதியாய் இருக்கின்றோம், ஆனால் இந்த மிருதங்கம் மற்றும் வீணையை வாங்குவதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குருவி மாதிரி சேமித்து வைத்த பணத்தை அப்படியே ரொக்கமாகக் கொடுத்து வீணையை வாங்கினேன்.

வகுப்பில் மற்ற மாணவிகளின் வீணையை இரவல் வாங்கி வாசிக்கின்றாள் உங்களின் மகள். மற்றவர் வாசிக்கும் வரை, அவர்களையே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றாள், கண்டிப்பாக நீங்கள் ஒரு வீணையை வாங்கியே ஆக வேண்டும் என்று வீணை ஆசிரியை என்னிடம் சொன்ன போது, நிஜமாலுமே கலங்கிப்போனேன். எனக்குக் கிடைக்காதது எல்லாம் என் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமென்கிற ஆதங்கம் எனக்கு எப்போதுமே இருக்கும்.

இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைகளுக்குப் படையெடுத்தேன். எங்குமே கிடைக்கவில்லை . `ஆடர் செய்து தமிழ்நாட்டிலிருந்து வர கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகலாம். முன் பணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளுங்கள்’, என்றார்கள் கடைக்காரர்கள். எனக்கு உடனே வேண்டுமே என்று பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கிள்ளானில் ஒரு கடையில்  ஒரே ஒரு வீணை மட்டுமே இருந்தது. அதை உடனே வங்கிக்கொண்டேன்.


மகள், இசை வகுப்பிற்குச்செல்லுகையில் அதைத்தூக்கிக்கொண்டு இரண்டு மாடி ஏறி இறங்குவேன். வகுப்பு இரண்டு மணி நேரம், வீடு வந்து செல்வது சரிப்பட்டு வராது என்பதால், அருகில் உள்ள ப்ளே கிராவுண்டில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தனிமையில் உட்கார்ந்திருப்பேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இதே போல் கழிந்தது என் சனிக்கிழமை பொழுதுகள்.

மிருதங்க ஆசிரியர் சர்மா அவர்கள், `பையன் நல்லா வாசிக்கின்றார். என்னுடைய மிருதங்கத்தைத் தருகிறேன். தஞ்சாவூர் இசைக்கச்சேரி மேடைகளில் பல வித்துவான்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட மிருதங்கம் இது. தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. நல்ல ராசியான மிருதங்கம். இதை வீட்டில் வைத்திருப்பதே ஐஸ்வரியம். வைத்துக்கொள்ளுங்கள், பையன் படிக்கட்டும், நன்கு வாசிக்கட்டும், பணம் இருக்கும் போது மட்டும் கொடுங்கள். ஒண்ணும் அவசரமில்லை, என்றார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி முடித்தேன்.
பார்க்கச் சிறியதாகத்தானே இருக்கின்றது.! மிகவும் கனமானது. தூக்கமுடியாது. இதையும் நான் தான் தூக்கிக்கொண்டு அலைவேன். என் கணவர் என்ன செய்வார் என்று கேட்க நினைப்பவர்களுக்கு. அவருக்கு இதுபோன்ற நுண்கலைகளில் ஆர்வமில்லை. எனது ஆர்வத்தை பிள்ளைகளிடம் நுழைத்தேன். அதனால் நான் தான் எல்லாவற்றையும் செய்தேன்.

வீணை ஆசிரியை முன்பெல்லாம் தொலைப்பேசியில் அடிக்கடி அழைத்து, அரங்கேற்றத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த உங்களின் மகள் அற்புதமான இசைப்பிரியர். விடாமல் கற்றுக்கொள்ளச்சொல்லுங்கள் என்பார்.

மிருதங்க குருவை கோவிலில் சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும் பையனை வரச்சொல்லுங்கள். இதுபோன்ற கலையில் இங்கே பலருக்கு ஆர்வமிருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் கலையைக் கற்கின்ற களம் சரியாக அமைவதில்லை. நல்ல குருவும் கிடைப்பதில்லை.நான் இந்த பூமியில் இருக்கும் வரை, எத்தனை பேரை உருவாக்க முடியுமோ அத்தனை பேரை உருவாக்கிவிட்டுச் செல்கிறேன், என்கிறார்.

என்ன செய்ய..! குழந்தைகளாக இருக்கும் போது நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். இப்போது அவர்கள் சொல்வதை நாம் கேட்டுக்கொள்கிறோம்! உலகம் மட்டுமல்ல வாழ்வும் வட்டமே.





வியாழன், அக்டோபர் 18, 2012

தொட்டில் பழக்கம்

குழந்தைப்பருவத்தில்
கதைப்புத்தகங்களில்
ஓவியங்களையும் புகைப்படங்களையும்
கண்குளிர கண்டுகளித்த பின்
கதைகளில் நுழைகின்ற நிலை
இன்னமும் தொடர்கிறது
தொட்டில் பழக்கமாக..

மிகவும் பிடித்த ப்ளாக்

எழுத்தாளர் சாருவின் அறிமுகத்தால் பல தமிழ் எழுத்தாளர்களைக் கண்டு கொண்டேன். அவ்வரிசையில் புதிதாக அறிமுகமானவர் கவிஞர் கலாப்பிரியா

இன்று காலையிலேயே கலப்பிரியா அவர்களின் ப்ளாக்’ஐ வலம் வந்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றிய தேடலில், அவர் follow பண்ணும் ப்ளாக்’குகளைக் கண்ணுற்றேன். அங்கே என்னை அதிகம் கவர்ந்த ஒரு வித்தியாசமான வலைப்பூவைப் கண்டவுடன் மனம் குதூகலித்தது.

அற்புதமான இனிய கானங்களின் இசைத்தொகுப்புகள் அடங்கிய ப்ளாக் அது. ஞானவெட்டியான் திண்டுக்கல் அவர்கள் தேர்ந்தெடுத்த செவிக்கினிய பாடல்கள்

இதுபோனறதொரு தொகுப்பைத்தான் நான் பலநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். அதைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் உடனே பாடல்களைக் கேட்கத்துவங்கிவிட்டேன். 

என்ன இனிமையான பாடல்கள் அனைத்தும். நாமே முயன்று தேடினாலும் கிடைக்காது இதுபோன்றதொரு இசைக் கலவை. முதல் பாடலே என்னைத்தாலாட்டிச்சென்றது..

பாடல்களுக்கு இசையமைப்பதில் அறுபது எழுபதாம் ஆண்டு சினிமா இசைமேதைகள் முத்திரை பதித்ததுவிட்டுச்சென்றுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கலாகாது. நான் இந்த பூமியில் பிறக்காத காலகட்டமாக அவைகள் இருப்பினும், அக்காலக்கட்ட பாடல்களே என்னை அதிகமாக ஆக்கிரமிக்கின்றன.

எங்களின் காலகட்டமான எண்பதாம் ஆண்டுப்பாடல்களில் ஒரு வித சோர்வு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பலமுறை கேட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒலியேற்றி சலிப்பை ஏற்படுத்தி விட்டனர் வானொலி நிலையத்தினர்.

அறுபதாம் எழுபதாம் ஆண்டுப்பாடல்களை முற்றாக புறக்கணித்த நிலையில் இன்றைய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன (மலேசிய சூழலில்). அப்படித்தேன்றும் ரசிகர்களுக்கு இந்த ப்ளாக் புத்துணர்வைக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேட்டுப்பாருங்கள் நீங்களும் மயங்கிவிடுவீர்கள். முதல் பாடலே...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...



செவிக்கினிய பாடல்கள்