திங்கள், பிப்ரவரி 10, 2014

பண்ணையாரும் பத்மினியும்

நகைச்சுவைத் ததும்பும் வசனங்கள். சிரிப்புக்கு பஞ்சமில்லை. சோகமுமில்லை. எல்லோரிடமும் எதார்த்தமான நடிப்பு.

நாம் நினைப்பதைப்போல் அங்கே எதுவும் நிகழவில்லை.
திருப்புமுனை வரும் என்று ஏமாறுகிறோம்.

நான் இறந்தால்? என்கிற வசனம் வரும்போது, இசை பேசுகிறது. இறுதிவரை ஒண்ணும் நடக்கவில்லை.

வில்லியான மகளால் வில்லங்கம் வரும் என்றால், அதுவும் இல்லை.

வில்லன் உண்டு, சண்டையே போடவில்லை.

வளைந்து நெளிந்து வேகமாக ஓடும் பஸ் - என்னாகும் என்கிற நெருடல்.. திக் திக் என்கிறது.. ஒன்றும் நடக்கவில்லை.

அசம்பாவிதம் நடக்குமோ என்றால்..ஹுஹும் இல்லை.

காதல் கைகூடாதோ.. அப்படி எதுவும் இல்லை.

காருக்கு எதும் ஆபத்து..? இல்லையே..

அப்பாவி பண்ணையார்.. அவருக்கு என்னாகும்? ஒண்ணும் நடக்கவில்லை.

இறுதியில் குடும்பத்துடன் பயணம் - அப்போதும் இப்பாவிமனம் நினைக்கிறது..கூண்டோடு கைலாசமா? அதுவும் இல்லை.

இப்படி ஏமாற்றியபடியே நகர்கிறது `பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற திரைப்படம்.

இருப்பினும் சன்ஸ்பன்ஸ் இறுதிவரை தொடர்கிறது.

கடைசியாக ஒன்றுமட்டும் புரிகிறது. அடுத்தவனுக்கு எதாவது ஏடாகூடமாக நிகழவேண்டுமென்று நினைக்கின்ற நமது மனம், நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கிறது..

திரையறங்கைவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.

மனம் மட்டும் கிசுகிசுக்கிறது.. நல்ல படம்.

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

நான் உள்ளே வரவா?

மாமிகதை :

மாமி படுக்கின்ற படுக்கையில் கரப்பான்பூச்சியைப் பார்த்துவிட்டாள் பணிப்பெண்.

காலையிலேயே படுக்கை, தலையணை, ரப்பர் விரிப்பு என எல்லாவற்றையும் உலர போட்டாள்.

மெத்தை தலையணை உலர்வதைக் கண்ட மாமி, `நான் தூங்கப்போகிறேன். இரவெல்லாம் உறக்கம் இல்லை. உடம்பில் அரிப்பு, இடுப்பு வலி, முதுகு வலி..’ என புலம்பிக்கொண்டே இருந்தார்.

நான் காலையில் கீழே இறங்கி வருகிறபோது.. `யம்மா, இவ அட்டகாசம் செய்கிறா.  எனக்குத்தூக்கம் வருது.’ என்றார்.
பணிப்பெண்ணிடம் `என்ன ஆச்சு.? மெத்தையைப்போடு, தூங்கட்டும்.’ என்றேன். அவள்.. `இப்போதுதான் வெயில் எட்டிப்பார்க்கிறது. கொஞ்ச நேரமாவது வெயில் படட்டுமே, தூங்குவதற்கு நன்றாக இருக்கும்.’ என்றாள். நியாயமாகவே பட்டது.

`சரி, அப்படியென்றால், இங்கே ஷோபாவில் படுத்துத்தூங்குங்கள்’ என்றேன். `ஈஸி சேரில்’ இருந்து சோபாவிற்கு அழைத்துச்சென்று படுக்கவைத்தோம்.
ஈஸி சேரில், இடுப்பு வலிக்கிறது. சோபாவில் சாய்ந்தால், முதுகு வலிக்கிறது. மீண்டும் புலம்பல். மணி காலை10.15. ஒன்பது மணிக்கு மெத்தை தலையணைகளைக் காயப்போட்டுள்ளாள் பணிப்பெண். ஏறக்குறைய ஒரு மணிநேரம்தான் ஆகிறது.

மகள் இறங்கிவந்தாள். மாமி தன் பேத்தியிடமும் அதே புலம்பல். பணிப்பெண்ணிற்கு கோபம் வந்தது. `பதினொரு மணிக்கு சாப்பாடு கேட்பாய் பாட்டி, கொஞ்ச நேரம் இரு.. எல்லோரிடமும் சொல்லாதே.’ என்று அதட்டினாள்.

நான் சமையல் வேலையை ஆரம்பித்தேன், பணிப்பெண் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

கணவர் இறங்கிவந்தார். கணவரைக் கண்டவுடன். மீண்டும் புலம்பல். `எனக்கு உட்கார முடியல, நடக்க முடியல, எழுந்திரிக்க முடியல, அங்கே வலி, இங்கே வலி.. நான் தூங்கணும். படுக்கையெல்லாம் வெயிலில் வெளியே கிடக்கு.. வேலைக்காரி ரொம்ப மோசம்.’ என்று ஆரம்பித்துவிட்டார்.

கணவர் வெளியே கிடந்த மெத்தையை உள்ளே எடுத்துவந்து கட்டிலில் போட்டார். படார் என்று சத்தம். என்ன சத்தம் என்று எட்டிப்பார்த்தால், அவரே, அவரின் அம்மாவிற்கு படுக்கையை தயார் செய்கிறாராம். எப்படி? பணிப்பெண் தூங்குகிற மெத்தையை இழுத்துவந்து அம்மாவின் கட்டிலில் கிடத்தி, அலமாரியில் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து விரித்து மெனகட்டுக்கொண்டிருந்தார்...

பணிப்பெண் ஓடிவந்து, `அது என்னுடையது, பரவாயில்லை விடுங்கள், நான் போடுகிறேன்..’ என்று சொல்லி, மெத்தையைத்தட்டி, வாசனைப் பூச்சித்திரவம் அடித்து, பேன்;ஐ முடுக்கி விட்டு, மாமியை உள்ளே அழைத்துச்சென்றாள்.
உள்ளே படுக்கவைத்த சில நொடியில், மீண்டும் அழைத்தார் மாமி..

`நான் கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?’

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், வயதானவர்களின் psychology’ஐ நாம் அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் வயதானவர்களின் மேல் வெறுப்பே மிஞ்சும். கோபம் வரும்..

புரிந்துகொள்வோம் என்பதற்காகவேதான்...

என் தோழி, வயதான அவளின் அம்மாவை வைத்துப்பார்த்துக்கொண்டாள். சக்கரை வியாதின் காரணமாக அம்மாவிற்கு ஒரு கால் இல்லை. பணம், நகை வீடு எல்லாம் மகன்களுக்குக் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட ஒன்றுமில்லா நிலையில் தமது ஒரே மகளின் வீட்டில் தங்கியிருப்பதற்கு தாயிற்கு அவ்வளவாக இஷ்டமில்லை. இருப்பினும் வேறு வழியில்லை. மருமகள்களின் நிராகரிப்பு.

வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம், கால் இல்லாத குறையைச் சொல்லிச்சொல்லி அலுத்துக்கொண்டார்கள். ஒருமுறை அந்தம்மா சொல்லியுள்ளார். எனக்கு ஏன் கால் இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள்.? கால் இருக்கே. வலி என்பதால் அதை உள்ளே மடக்கி மறைத்து வைத்திருக்கிறேன், என்றார். அதற்கு மகள், `நல்லா துணியைத் தூக்கிட்டுப் பார், உள்ளே ஒன்றரை கால் தான் இருக்கு.’ என்றவுடன்.. அந்தத்தாயின் முகம் மாறியதை என்னால் இன்னமும் மறக்கமுடியாது.

புரிந்துகொள்ள கஷ்டம்தான். கோபம் வரும். கோபப்படலாம். அதேவேளையில் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

செவ்வாய், ஜனவரி 21, 2014

நான்

உன் எழுத்தில் இருக்கின்ற `நான்’னில் எனக்கு உடன்பாடில்லை. 
வாசகியாகிய நான், அதில் தெரிகிற`நான்’ஐ வாசிக்கின்றபோது, சோர்ந்துபோகிறேன். 
உன் `நான்’ என்னைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவனைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவளைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவர்களைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ உயர்திணை மற்றும் அக்றிணையைச் சொன்னாலும் நான் பொறுத்துக்கொள்வேன்.
முழுக்க முழுக்க உன் `நான்’னில் நீயே மறைந்திருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது.?
உனது `நான்’ எதையும் பறைசாற்றாமல், `நான்..நான்’ என நீயே உன்னை வடித்துக்கொண்டிருப்பதால், நான் அதில் எதைக் கற்க.?
உனது `நான்’ சொல்லவரும் செய்திதான் என்ன?
உனது `நான்’னில் நான் என்ன தெளிவு கொள்ளமுடியும்.?
நீ கேட்கலாம், நீயும் எழுதுகிறாய், உனது `நான்’ என்ன சொல்லவருகிறது?
எனது `நான்’னில் நான் மட்டும் இருக்கமாட்டேன். நாசுக்காக நான் சொல்லும் `நான்’ நான் அல்ல. நீ.
நல்ல `நான்’ நீரோடைபோல், செல்கிற வழியெங்கும் பயிர்களைச் செழிக்கச்செய்யலாம்.
ஆனால், உனது நான்’னில் நீ மட்டுமே தெரிகிறாய்.
எதற்கு இந்த `நான்’...
விடு விடு..
வாசிக்கப்படுவாய்...
வாசகியாய் வேண்டுகிறேன்
நான்..

வியாழன், ஜனவரி 09, 2014

தேங்காய்கள்

தைபூசத் திருநாள் நெருங்கினாலே தேங்காய்களின் விலை கிடுகிடுவென ஏறும்.

அதுவும் இந்த முறை அனைத்துப்பொருட்களும் அதிக அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், தைபூசத்திருநாளில் தேங்காய்களைக் குறிவைத்து அவைகளின் விலையையும் அதிக அளவில் ஏற்றிவிட்டார்கள். விளைப் பொருட்களின் பற்றாக்குறையால் அவைகளின் விலை, ஏற்றம் காண்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தைபூசத் திருநாளில் தெருவில் உடைப்பதெற்கென்றே பலகோடி தேங்காய்கள் தேவைப்படுவதால், தேங்காய்களின் விலை இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்வு கண்டு பக்தர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய பத்திரிகைச் செய்தியின் நிலவரப்படி, ஒரு தேங்காயின் விலை, சென்ற ஆண்டு ஒரு ரிங்கிட் இருபதுகாசு. இன்றைய விலை, இரண்டு ரிங்கிட் எண்பது காசு என உயர்வு கண்டுள்ளது. விலை உயர்ந்தால் என்ன..!?  நாங்கள் அவைகளை சாலையில் தெருவில் உடைத்து பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வோம், என்பதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் நம்மவர்கள்.

பண்டிகைக்காலமென்றாலே நமது இனத்தவர்கள் அதிக அளவில் பயிர்களையும் காய்கறிகளையும் தேவையில்லாமல் வீணடிக்கின்றனர் என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதன் பயன், பாதிப்பு, விலை யேற்றம், உணவுக்கு பயிர்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் போதாமை என்பனவற்றைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பயிர்களை நாசம் செய்து குதூகலிக்கின்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாமும் நம்மவர்களது என்றாகிவிட்டது.

சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் போது நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தோம், தீபாவளி ஷாப்பிங் செய்துகொண்டு.

விஜயதசமி, ஆயுதபூஜை செய்கிற நாட்களில் பயிர்கள், வாழைக்கன்றுகள், தென்னங்குறுத்துகள், மா இலைகள், வெற்றிலை, தேங்காய்கள் என வெட்டி வீதியெங்கும் நாசம் செய்திருந்த கலாச்சாரத்தைக் கண்டு திடுக்கிட்டோம்.

ஒவ்வொரு வாகனத்திலும், வீடுகளிலும், தெருவிலும், கடைகளிலும் எங்கு பார்த்தாலும் கொலையுண்ட பயிர்கள், கழுத்து அறுக்கப்பட்ட வாழைக்கன்றுகள்,  வீசி எறியப்பட்ட தாணியங்கள், தேங்காய்கள் என குப்பைக்குவியல்களாக வீதியெங்கும். காண்பதற்கு வியப்பாகவே இருந்தது எங்களுக்கு. தமிழர்களாக இந்துக்களாகப் பிறந்திருப்பினும்  இவ்வளவு மோசமான முறையில் பயிர்களை நாசம் செய்கின்ற கலாச்சாரத்தை இதுவரையில் எங்கும் கண்டதில்லை. இங்கே மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிற சிறிய வட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இவைகள் நடந்திருக்கலாம், அவை எங்களின் பார்வையில் படாமலும் இருந்திருக்கலாம். ஆனால்அங்கே (தமிழ்நாட்டில்), காண்கின்ற இடமெல்லாம் விழாக்கோலம் என்கிற பெயரில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டிருப்பதை ஜீரணித்துக்கொள்ளத்தான் முடியவில்லை.

பயிர்களை நாசம் செய்து விழாக்கோலம் காண்கிற இந்தக் கலாச்ச்சாரம் தற்போது இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து பெரிய அளவில் முகாமிட்டு நாடு தழுவிய நிலையில் விரிவடைந்து வியாபார  நோக்கமாக மாறி வருவது கண்கூடு.

தமிழர்கள் இந்துக்கள் பண்டிகைகள் என்றால் எதாவதொரு பயிர் நாசம் செய்யப்படுவதென்பது இயல்பான ஒன்று என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் அவைகள் நல்ல நோக்கத்திற்காக அமல்படுத்தப்பட்டிருப்பினும் தற்போதைய சூழலில் பண்டிகைகளுக்குப் பயன்படுத்துகிற பயிர்கள் தாணியங்கள் பெரும்பாலும் வீதியில் வீசியெறிகிற உபயோகமற்ற பொருளாகவே மாறிவிட்டது. அப்படியில்லையேல் மரியாதை நிமித்தமாக பொட்டலங்கட்டி ஆற்றில் வீசியெறிவதும் உண்டு. என்னைப் பொருத்தவரையில் இரண்டுமே வீண் விரையம்தான். இது காலத்தின் கோலமேயென்றாலும், இந்த நவநாகரீக காலகட்டத்தில் மனிதர்கள் சுற்றுப்புற சூழலின் மகத்தும் புரியாமல் கற்கால மனிதர்கள் போல் அறியாமையில் உழல்வதுதான் சிக்கல் இங்கே.  

கூடியவிரைவில் பொங்கலை வரவேற்கக் காத்திருக்கின்றோம். அதற்குத்தயாரான நிலையில் ஆங்காங்கே கரும்புகளுக்கும் வேரோடு பிடுங்கிய மஞ்சள் செடிகளுக்கும், `ஆடர்கள்’ வேண்டி அழைப்புகள் ஒலித்தவண்ணமாகத்தான் இருக்கின்றன. சாங்கியத்திற்காவது வாசலில் கட்டிவைக்கவேண்டுமென்று வாங்கி, இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீதியில் குப்பைக்கூலங்களில் வீசி எறிவதைத்தவிர வேறொன்றும் சிறப்பாக நடந்துவிடாது.

கரும்பைக் கடித்து மென்று துப்புவதை யார் செய்கிறார்கள் இப்போதெல்லாம்.? மஞ்சள் இலை ஏன் கட்டுகிறோமென்பது கூட தெரியாத நிலையில், ஊரார் பார்த்து மெச்சுவதற்காகவே சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறன. சிலர் பொங்கலுக்குப் பொங்கிய பொங்கச்சோற்றைக்கூட சாப்பிட ஆள் இல்லாமல்/கிடைக்காமல் வீசிவிடுகிறார்கள்.  இனிப்பு கெடுதல் என்கிற கலாச்சரம் வேறு விஷவாயு போல் மிக வேகமாகப் பரவி விட்டது. பழத்தின் இயற்கையான இனிப்பு என்றாலும் கூட, “ஐய்யோ இனிப்பா? வேண்டாம்.” என்கிற நவநாகரீக சூழலில் நாம் சிக்குண்டுக்கிடக்கின்றோம்.

பண்டிகைகளின் மகத்துவத்தை மறந்து, உலகிற்கு நாம், நமது கலை கலாச்சாரங்களை விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் என்பதைப் பறைச்சாற்றுவதற்காகவே பலவிதமான பயிர்தாணிய விரைய வேலைகளில் ஈடுபட்டு சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம் என்கிற உணர்வில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

தைப்பொங்கல்தான் வருடத்தின் முதல் பண்டிகை. அதற்குப் பிறகு வரிசையாக வரும் அனைத்துப்பண்டிகைகளிலும் எதாவதொரு பயிர் பலிகடா ஆகும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா.?

திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் மிளகாய் ,எலுமிச்சை, பூசணி, பூ என நம்மையறியாமலேயே பல விளைப்பொருட்களை விரையம் செய்துகொண்டிருக்கின்றோம்.

யோசிப்போம்...
    

புதன், டிசம்பர் 25, 2013

முரண்படுகிறேன்..

நிறைய படித்தவர்களை விட இலக்கியவாதிகள் உயர்ந்தவர்கள் என்று எப்படிச்சொல்கிறீர்கள் அம்மா.?.

எல்லா படித்தவர்களுக்கும் மனோத்தத்துவம் தெரியாது. ஆனால் இலக்கியவாதி என்பவர் உளவியல் அறிஞர். 

அப்படியென்றால் உங்களை நீங்கள் உளவியல் அறிஞர் என்கிறீர்களா அம்மா?

நான் இலக்கியவாதி இல்லையே..!

எழுதுகிறீர்கள்..?

எழுதுபவர்கள் எல்லோரும் இலக்கியவாதியா?

நீங்கள் சொல்வது அப்படித்தானே இருக்கு..!?

நான் சொல்வது உனக்கு விளங்கவேண்டுமென்றால், நீ ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருக்கவேண்டும்..!

அப்போ என்னிடம் ஆழ்ந்த வாசிப்பு இல்லையா? நான் ஒரு மருத்துவர்.

யாராக இருந்தாலும் இலக்கியவாதியிடம் நிறக முடியாது.

நீங்கள் முரண்படுகிறீர்கள் அம்மா.!

(உரைக்கு முற்றுப்புள்ளி...)

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மு.அன்புச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் எனக்கு ஏறக்குறைய இருபது ஆண்டு கால நண்பர்.

எழுத்துத்துறையில் அதிகமாக ஊக்கமூட்டியவர்.  பாராட்டிக்கொண்டே இருப்பார். `ஆஹா என்ன அற்புதமா எழுதறீங்க. பெரிய எழுத்தாளர் பாணிங்க இது. கலக்கறீங்க. உங்களின் படிவம் வந்தால் அதைத்தான் முதலில் வாசிப்பேன், தொடர்ந்து எழுதுங்க.. என்பார். (டூப்பு)

அன்று நான் எழுதிய பதிவுகளை இன்று வாசிக்க நேருகிறபோது, `ச்சே என்ன இப்படி இருந்திருக்கு நமது சிந்தனை.! இதுவா எழுத்து.? அப்படிப்பாராட்டினாரே ஆசிரியர் அன்புச்செல்வன்..’ என்றெல்லாம் யோசித்து உடனே அவரை அழைத்து `என்ன சார், இதுவா எழுத்து, அன்று ஒரேடியா ஐஸ் வைச்சீங்களே..?’ என்று கேட்கின்றபோது.. `ஹிஹிஹி’ என்று சிரிப்பார்.

எழுத்தில் ஆர்வம் இருக்கின்ற எந்த வாசகரையும் ஆசிரியர்கள் அவமதிக்கலாகாது. எழுத்து ஆர்வம் எல்லோருக்கும் வந்துவிடாது. எனக்குத்தெரிந்தது எழுத்து மட்டும்தான். இந்த எழுத்தும் வாசிப்பும் எனக்கு இல்லையென்றால் நான் என்றோ பைத்தியக்காரன் ஆகியிருப்பேன். எழுத்து என்னைக் குதூகலமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பழக்கம் பயிற்சி எல்லோருக்கும் வரவேண்டும் என்பதால்தான், எழுத நினைக்கின்ற அத்தனை வாசக எழுத்தாளர்களையும் நான் உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கின்றேன்.’ என்பார்.

எழுதுகிறவர்களின் எழுத்துப்பிழைகளையும் கருத்துப்பிழைகளையும் அழகாகத் திருத்தி பிரசுரிப்பார். சில படைப்புகளை அப்படியே மாற்றிவிடுவார். ஒரு காலகட்டம் வரை அவரின் திருத்தம் எனக்குத் திருப்தியளித்தது. அதன்பிறகு, நமது கருத்துகளின் அநாவசியமாக கைவைக்கின்றார், நம் படைப்பில் நாம் இல்லை அவர்தான் இருக்கின்றார், என்கிற நெருடல் என்னைக் குடையவே படைப்புகளை அவருக்குக்கொடுப்பதைக் குறைத்துக்கொண்டேன். (சரியாக எழுதவராது என்பது வேறு விஷயம்..!)

சில பத்திரிகைகள் அவரை  மாறி மாறி பந்தாடியபோது, அவர் வேலை இல்லாமல் இருந்தார். அந்த மனவுளைச்சல் அவரை நோயாளியாய் ஆக்கியது. அப்போது அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் வியாதி வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். TB யாக இருக்குமோ என்று கூட சோதனை செய்துகொண்டார்.

எப்போதும் சரளமாக தங்குதடையில்லாமல் உரையாடும் அவர் கொஞ்ச காலமாக பேசுவதற்குக்கூட முடியாமல் சதா இரும்பியவண்ணமாக இருந்தார். `போதுங்க செத்துவிடுவேன் போலிருக்கு.’ என்று சொல்லி, சிலவேளைகளில் அழைப்பை அவரே துண்டித்துவிடுவார். சரி, ஏன் தொந்தரவு செய்வானேன், என்று நினைத்து அழைக்காமல் விட்டு விட்டால், குறுந்தகவல் அனுப்பி கிண்டல் செய்வார்.. `விஜயா என்கிற தலைசிறந்த பெண் எழுத்தாளரைக் காணவில்லை, தேடிக்கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப்படும்.’ என்று எழுதி அனுப்பிவைப்பார்.

பழகுவதற்க்கு இனிமையானவர். பேசுகிறபோதெல்லாம்.. அடிக்கடி எழுதுங்கள்.. என்று, எழுத்தில் ஆர்வமூட்டிக்கொண்டே இருப்பார். எதையாவது எழுதுங்கள். எழுத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பார். படைப்புகளைக் கேட்டு வாங்குவார். என்னமோ நாம் பெரிய எழுத்தாளர் போல..!

அவரிடம் நான் இறுதியாகப் பேசிய (குறுந்தகவல் வழி) வார்த்தை - சென்ற ஞாயிறு மலரில் (15/12/2013) வெளியான `வேலி மனிதர்கள்’ என்கிற சிறுகதையைப் பற்றியதுதான். ஒரு அற்புதமான சிறுகதை அது. நல்ல தேர்வு. கதை தேர்வில் உங்களை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. என்கிற குறுஞ்செய்திதான் அது.

எப்போதும் குறுந்தகவல் அனுப்பினால், `இப்போதுதான் என் ஞாபகம் வந்ததா? இந்த விஜயா அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்..’ என்று கிண்டல் செய்கிற அன்புச்செல்வன், இந்த முறை என்னுடைய குறுந்தகவலுக்கு `tq' என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தார்.

அப்போது அவர் (19/12/2013) மருத்துவமனையில் இருந்துள்ளார் என்று, இன்று அவரின் மரணத்தின் போது (21/12/2013)  எனக்குத்தெரியவந்தது. முன்பெல்லாம் அடிக்கடி பேசுகிற நான், அன்றைய நாளில் ஒரு அழைப்பு கொடுத்துப்பார்த்திருக்கலாமே, என்று இறப்புச்செய்தி வந்தவுடன் மனங்கலங்கி வருந்தினேன்.

நிலையில்லா வாழ்வு, நம்மை மிகவிரைவாக நகர்த்திச்செல்கிறது. நேற்றுப்பார்த்தவர் இன்று இல்லை. நினைத்துப்பார்க்காததெல்லாம் நடக்கிறது. மேலும் அவருக்கு எழுபத்தொன்று வயது என்று இன்றைய பத்திரிகைகள் (22/12/2013) சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. குரலும் எழுத்தும்தான் அறிமுகம் அவருக்கு. இனிமயாகப் பேசுவதால் நாற்பது நாற்பத்தைந்து இருக்குமென்று நினைத்திருந்தேன். வயதைப்பற்றியெல்லாம் இருவரும் விசாரித்ததில்லை. அவரும் சொன்னதில்லை.

அவரின் மற்றொரு சிறப்பு, என்னுடைய எழுத்து இங்கே வந்துள்ளது.. அங்கே வந்துள்ளது. எனக்கு இந்த பட்டம் எல்லாம் கிடைத்துள்ளது, நான் இவ்வளவு எழுதியுள்ளேன், என் எழுத்தை வாசித்துப்பாருங்கள். நான் எழுதியதை வாசித்தீர்களா? என்று, இதுவரையிலும் கேட்டதில்லை. அவருடனேயான நட்பில் எனக்கு இதுதான் மிகப்பெரிய ஆச்சிரியம். எதை எழுதினாலும், என் படைப்பை வாசித்தீர்களா.? என்று கேட்டதே இல்லை. நாமே சொன்னாலும்.. ஹ்ம்ம் அது.. ஓ.. ஹ்ம்ம் என்று மழுப்பிவிடுவார்.

அவருடன் நட்பு பாரட்டுதலில், எனக்கு அவர் அனுப்பிய பரிசு, அவரின் மூன்று புத்தகங்கள். 1.விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்.(சிறுகதைகள்) 2. மு.அன்புச்செல்வனின் அரை நூற்றாண்டுச் சிறுகதைகள்.  3. திரைப்படங்களின் தாக்கங்கள். (கட்டுரைகள்)

இவைகளில் இரண்டு புத்தகங்களை முழுமையாக வாசித்துமுடித்துவிட்டு, சிறுகதைகளைப்பற்றிய எனது கருத்தினை அவரிடம் கூறுகையில். `பெரிய எழுத்தாளர் நீங்கள். என் புத்தகத்தை நீங்கள் தொட்டு வாசித்ததே நான் என் பிறப்புப் பலனை  அடைந்துவிட்டேன். கருத்துவேறு கூறுகின்றீர்களே, பயமாக இருக்கின்றது என்று கலாய்ப்பார். செம ரகளையாக இருக்கும்.

அன்றைய எனது எழுத்துகளை, நான் இப்போது வாசிக்கின்றபோது, அன்றைய என்னை இன்றைய நான் வெறுக்கிறேன். இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் வலிமையான வளமையான கருத்துக்களை நுழைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் வரும். அதனால் எனது எழுத்துகளை பாராட்டுகிறவர்களை விட, திட்டுகிறவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன், என்பார்.

நான் நடந்து வந்த எழுத்துலக பாதை சுவாரஸ்யமானது. ஆனால் எழுத்தில் நான் இன்னும் கத்துக்குட்டியே, என்பார். இதை நான் தன்னடக்கம் என்று சொல்லமாட்டேன். அதுதான் உண்மையும் கூட.

அவரிடம் நான் முரண்படுகிற கருத்து, இன்னமும் எழுத்து என்றால், மு.வ, ந.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், கல்கி, சாவி, சிவசங்கரி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன் போன்றோர்களின் எழுத்து பாணியைத்தான் எழுத்து என்பார். அவர்களைத்தவிர வேறு யாரையும் நான் வாசிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய நவீன எழுத்து நவீனத்துவம் என்பதெல்லாம் சும்மா எழுத்தை வைத்து விளையாடும் சித்து விளையாட்டேயன்றி வேறில்லை. பொழப்பில்லாதவனுங்க. எழுத்துலகத்தை நாசம் செய்யறானுங்க. இதையெல்லாம் நவீன் மற்றும் பாலமுருகனிடமோ சொல்லிவிடாதீர்கள். எழுதியே சாகடிச்சிபுடுவானுங்க. யம்மயம்மா இலக்கிய உலகைப் படுத்தறானுங்கய்யா... ரத்தக்கொதிப்பே வருது. நான் கொஞ்ச காலம் வாழணும். என்பார் நகைச்சுவையாக.

படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால், வசீகரமிக்க எழுத்தாற்றல் கொண்டவர். பஞ்ச பாண்டவர்களின் கதைகளையும் இராமாயணத்தையும் நன்கு உள்வாங்கிக் கரைத்துக்குடித்துவிட்டு அதிலிருந்து சில பகுதிகளை கதைகளில் சேர்ந்து, சொந்த கற்பனைகளையும் கலந்து கதை வடித்துக் கொடுப்பதில் கில்லாடி எழுத்தாளர்.  மிக மிக அழகாக சிறுகதைகளை எழுதுவார். சோர்வில்லாத வாசிப்பினை கொடுக்கின்ற ஆற்றல் அவரின் எழுத்திற்கு உண்டு. எல்லாக்கதைகளும் பழய பாணிக்கதைகள்தான். ஆழ்ந்த வாசிப்பில்லாமல் மேலோட்டமாக கண்களை மேயவிட்டாலே புரிந்துகொள்ளலாம். இருப்பினும் அழகிய கதைகள்தான் அனைத்தும்.

வா மரணமே என்கிற அவரின் சிறுகதையில் எமனோடு பேசுவதைப்போல் ஒரு உரை வரும். அதில் `நீ சொல்லும் மரணத்தை நான் எப்போதே சந்தித்துவிட்டேன். இப்போது வெறும் கட்டையாக இருப்பத்தைத்தான் உணர்கிறேன். எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த கலைஞர் என்றைக்கோ வசனம் பேசியிருக்கின்றார். கனவுகளற்ற தூக்கம் போன்றது மரணம் என்றால் அதற்காக நான் ஏன் பயப்படவேண்டும். மரணம் என்பது விழிப்பில்லாத ஒரு நெடிய தூக்கம். மீண்டும் கண்விழித்துப்பார்க்கமுடியாத ஒரு மயக்க நிலை...’

ஆம், மயக்க் நிலையில்தான் உள்ளார் மு.அன்புச்செல்வன். மரணம் தழுவிக்கொண்டது என்கிறோம்.

அவர் அடிக்கடி எனக்கு நினைவுறுத்தும் வாசகம்...

`எழுத்தாளர்கள் விமர்சனங்களுக்கு மனச்சஞ்சலம் கொள்தல் கூடாது. அது நல்லனவையாக இருக்கட்டும் அல்லது தூற்றுதலாகவோ இருக்கட்டும்.. எழுதிக்கொண்டே இருங்கள்.. நல்ல கருத்துக்களைக் கொடுக்கமுடியாதவன், பன்னி என்பான் நாய் என்பான்... அவனை சமூதாயம் அடயாளங்கண்டுகொள்ளும்.. பதில் கொடுத்து நம் முகத்தில் நாமே காறி உமிழ்தல் மட்டும் கூடாது.’ 

பக்குவப்பட்ட பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா என்ன.! இது ஒன்றே போதும். 


அவரின் மற்ற நூல்கள் -

ஒரு புதிய இலக்கை நோக்கி (செந்தூல் வரலாறு)
தவத்தின் வலிமை (சிறுகதைகள்)
தீபங்கள் (சிறுகதைகள்)
பிச்சைப் பாத்திரங்கள் (சிறுகதைகள்)
விலாங்குகள் (நாவல்)

எழுத்தாளருக்கு மரணமில்லை. அவர் என்றென்றும் அவரின் எழுத்தில் ஜீவித்திருப்பார். இருப்பினும் கடிதங்கள் மற்றும் படைப்புகளை அவருக்கு அனுப்புகின்றபோது இறுதியில் நான் அவருக்குச்சொல்லும் வாசகம். ..
``நன்றி சார்...’’

ஆனால் இன்று....  GOOD BYE சார். WILL MISS YOU FOREVER.



கண்களையாவது திறந்துவை..

ரிஷிமூலம் கதைக்கு - கதையை விட ஜெயகாந்தன் எழுதிய முன்னுரை இருக்கே.., ஒவ்வொரு வரியும் தத்துவம். எல்லாவற்றையும் எழுதவேண்டும்போல் தேன்றினாலும் சில இங்கே உங்களின் பார்வைக்கு.. :-

1965தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளான ரிஷிமூலத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய விளக்கம் இது. படித்துப்பாருங்கள். அற்புதம். நம்முடைய தற்போதைய நிலவரத்திற்கு பதில் சொல்வதைப்போல் உள்ளது.

1. இந்தக் கதையை எழுதியதின் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கின்றேன் என்பதைத்தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கெடுத்து விட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கம் எதுவும் கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்குக்கிடையாது. இந்தச் சமூதாயத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதர்களுக்கு என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு.

2. நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப் பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச்சொன்னதை நான் உலகத்திற்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன்.
அது அற்பமாக அசிங்கமாக கேவலமாக அல்லது அதுவே உயர்வாக உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்.?

3. நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக்கூட்டத்திற்கும் எப்போதும் தாலி கட்டிக்கொண்டதில்லை.

4. எத்தனையோ சமூதயப்பிரச்சனைகள் இருக்க, இதை ஏன் நீ எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள். நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள் நான் எழுதாததைப்பற்றி கேள்விகள் எழுப்புவது என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப்புரியவில்லை.

5. தங்கள் அரை வேக்காடு படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்யவேண்டுமென்று நினைக்கிறவரக்ள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழங்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே. ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர் கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.

6. நான் சமூதாயத்தை உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோஷலிஸமே எனது லட்சியம். புரட்சி ஓங்குக. தொழிலாளி வர்க்கம் ஜிந்தாபாத்.! நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்காகவே என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடை போட்டு வருவது என்னைப்பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே.

7. மனோதத்துவமும் இலக்கியம் அதிகத் தொடர்புடையன. பிராய்டும் கூடத் தன்னுடைய சில ஆராய்ச்சி முடிவுகளுக்கு அனுசரணையான சான்றுகளை இலக்கிய ஆசிரியரின் நூல்களிலிருந்தே எடுத்துக்காட்டுவான்.

8. சமூதாயம் என்னைத்தூக்கி எறிந்துவிடும் என்கிற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில் தூக்கி எறியப்படப்போகிற ஒரு சமுதாயத்தின் மூர்க்கமான அலறலையே நான் கேட்கிறேன்.

9. உண்மையாக இலக்கியம் படைக்கிற தகுதி உடைய எவனும் நான் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக எழுதுகிறேன் என்கிற வாக்குமூலத்துடன் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

10. பாலுணர்ச்சிப் பிரச்ச்னைகளை அடிபப்டையாகக் கொண்டு நான் கதை எழுதுகிறேன் என்பது இன்னொரு தாக்குதல். பாலுணர்ச்சி பிரச்சனை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சனை அல்ல. அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சனைதான்.

11. பாலுணர்வுப்பிரச்சனை என்பது ஏதோ பணக்கார வர்க்கத்துப்பிரச்னை என்று எண்ணுவது வடிகட்டிய பாமரத்தனம். பாலுறவு பற்றிய ஆரோக்கியமான கண்ணோட்டமில்லாத தனி மனிதன் வளர்ந்த மனிதனாக மாட்டான். அப்படிப்பட்ட சமுதாயம் வளார்ந்த சமுதாயம் ஆகாது.

12. ஒரு மனநோயாளியின் மன உணர்வுகளைத் தன்னிலையில் இருந்து எழுதுவதன் மூலம் விமர்சகர்களையே அதை என் நிலை என்று நான் எண்ண வைத்துவிட்டேன் என்றால் என் எழுத்தின் வலிமைக்காக நான் கர்வம் கொள்கிறேன்.

13. கதையின் நாயகன் ஒரு மன நோயாளி. ஒரு மனநோயாளியின் மனசுக்குள்ளே நிகழ்கின்ற சம்வாதங்கள் , தர்க்கங்கள், சுய மறுப்புகள் சுய தரிசனங்கள் எவ்வளவு அற்புதமாக நிகழ்கின்றன என்பதைக் காணும்போது இவன் இப்படி ஆனதிற்கு நாம் வருத்தம் கொள்ளுதல் வேண்டும். மூடத்தனமான சமூக குடும்பக் கட்டுகளும் தனக்குத்தானே போட்டுக்கொள்கிற கட்டுகளும் சமுதாயப் பிரச்சனை அல்லவா.?

14. இன்று நம் சமுதாயமே ஒரு மடமாகவும் ஒவ்வொரு தனிமனிதனும் பாதிச் சாமியாராகவும் வேஷம் போடுகிற பண்பாடு வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். எனவே இங்கே  SEX ஒரு பிரச்சனையாகிறது. இப்படிப்பட்ட கட்டுகளினாலும் இந்தச் சமுதாயத்தில் சிறந்த தனி மனிதர்கள் உருவாக முடிவதில்லை. கல்வியும் பொருளாதார அந்தஸ்தும் இருந்தும்கூட மனவளம் படைத்த மனிதர்கள் இங்கே உருவாவதற்குச் சிரமங்கள் உள்ளன.

15. சிறந்த தனி மனிதர்களை உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது. செக்கு மாடுகளை உற்பத்தி செய்யும் சமுதாயம் தேங்கி அழிகிற சமுதாயம்.

16. நான் உன்னில் ஓர் அங்கம்தான் ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம் அல்ல..

17. நீ என்னைத்தூக்கி எறிந்துவிடுவாய் என்ற அச்சுறுத்தலுக்கு நான் பயப்படமாட்டேன். என்னிடம் யாரும் சமுதாயப்பூச்சாண்டி காட்ட வேண்டாம்.

18. இந்தச் சமுதாயத்தை என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாகக் கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துகளைப் பாடப்புத்தமாக வைக்கச்சொல்லி நான் மனு போடவில்லை. எனது எழுத்துகளுக்கு அந்தத்தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிக்கு  அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை.

19. இங்கே தமிழில் படிப்பதற்கு ஒன்றுமில்லை. சாரமற்ற வம்புகளும் சத்தில்லாத பொழுதுபோக்குக் குப்பைகளும் மலிந்து வருகிறது.  இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்தில்  தான் கற்கவேண்டும். (அப்போ நீ ஏன் தமிழில் எழுதுகிறாய்? என்று கேட்டால் அதற்கும் அவர் பதில் கொடுக்கிறார்.)

20. அறிவை, மனசைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்களையாவது திறந்துவை.