சனி, செப்டம்பர் 03, 2016

தாய்லாந்து பயண அனுபவம்.

 அலைகளே ஏன் கொந்தளிக்கின்றீர்கள், நீங்களும் தாய்லாந்துக்காரர்களா.?'

இப்படி ஒரு கவிதையை நான் வேடிக்கையாகச் சொன்னபோது, தோழிகள் கலகலவென சிரித்தனர். அப்படியென்றால் அதன் உள்ளர்த்தம் எவ்வளவு பெரிய பாதிப்பை அவர்களுக்கும் உண்டு பண்ணியிருக்கவேண்டும் என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.

நாங்கள் முன்று நாள்கள் தாய்லாந்து கிராபியைச் சுற்றிவந்தோம். ஜாலியான ட்ரீப். நடப்பது, நீந்துவது, நீச்சல் பழகுவது, மார்கெட் சென்று அங்குள்ள உணவுகளைப் பொறுக்கித்தின்பது, நடு ரோட்டில் நடந்துகொண்டே வாங்கிய பலகாரங்களைச் சுவைப்பது, ஐஸ்க்கிரிம் வாங்கி எல்லோரும் நக்கிக்கொள்வது, பப்புக்கு சென்று பாட்டு டான்ஸ்சு டிஸ்கோ....,இரவு அறைக்கு வந்து விடிய விடிய கதை பேசுவது என முன்று நாள் பொழுது அமர்க்களமாக கழிந்தது.

கிராபி பற்றிச்சொல்லவேண்டுமென்றால், அழகிய தீவு. வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவ்வளவு அழகு. கடல் நீரில் எவ்வளவு வர்ணங்கள் உள்ளன என்பதனை அங்கே காணலாம். கரு நீலம், நீலம், கரும்பச்சை,பச்சை, வெள்ளை, வெள்ளை நீலம் பச்சை கலந்து உள்ள நீர் என அங்குள்ள கடல் கொள்ளையழகு. வர்ண மீன்கள் துள்ளிவிளையாடும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

சரி முதல் வரியில் சொன்ன விஷயத்திற்கு வருவோம்.

யாரும் யாருடனும் நின்று அமைதியாகப்பேசமாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் பரபரப்பாக எதையாவது செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு முறை சொன்னால் சொன்னதுதான். மீண்டும் அதையொட்டி கேள்விகள் எதெனும் கேட்டால், தொலைந்தோம். பதிலுக்கு ஒரு அலட்சியப்பார்வைதான் வரும். அது நம்மை என்னமோ செய்யும்.

உதாரணம் சொல்லுகிறேன், டூர் பேகெஜ் ஏற்பாடு செய்தோம் . நாங்களே முதல்நாள் சென்று பலவிவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டு சொந்தமாக புக் செய்துகொண்டோம்.எஜென்டுகளின் மூலம் எடுக்கவில்லை. விலை அதிகம் என்பதால் ..

மொழிப்பிரச்சனை வேறு அவர்களுக்கு. ஆங்கிலம் தெரியவில்லை. பெகெஜ் விற்பனை செய்கிறவர்களுக்கு கொஞ்சம் மலாய் தெரிந்திருந்தது. அது எங்களுக்கு உதவியது. அப்படி இப்படி என்று பெகெஜ்' புரிந்துகொண்டு மறுநாள் மற்றும் மூன்றாம் நாள் என இரண்டு நாள்கள் பயணத்திற்கு பணம் செலுத்திவிட்டு இரவு சந்தைக்குச்சென்றோம் சாப்பிட. வாகன ஓட்டுனரிடம் நாங்கள் பட அவஸ்தை இருக்கே ..சந்தை எத்தனை மணிக்கு மூடும் ?, அமைதியாக இருந்தார். மீண்டும் எத்தனை மணிக்கு நாங்கள் வரவேண்டும்? அமைதியாக இருந்தார். கடிகாரத்தைக் காட்டி எத்தனை மணிக்கு நாங்கள் வரலாம் .? அமைதியாக இருந்தார். வேனை நிறுத்திய பின் .. தென் தேர்ர்டி என்று ஒரு சத்தம் போடடார் பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிட்டோம்.

முதல்நாள் காலைமுதல் மாலைவரை தீவுகளை ஸ்பீட் போட் ஏறிச்சென்று சுற்றிப்பார்ப்பது, இரண்டாவது நாள் காலை முதல் மாலைவரை நிலத்தில் இருக்கின்ற இடங்களைச் சுற்றிப்பார்ப்பது. இதுதான் எங்களின் பேகெஜ்.

எந்த பேகெஜ் எப்போது என்பதைப்பற்றிய குழப்பம் எங்களுக்கு இருந்ததால், நீச்சல் ஆடையுடன் இன்று செல்லலாமா அல்லது நாளை செல்லலாமா? என்கிற முக்கிய வினா எங்களுக்குள் எழுந்தது.

எங்களுக்கு பெகெஜ் ஏற்பாடு செய்த தாய்லாந்துக்காரனிடம் கேட்கச்சென்றோம். ஒரு பெண் அங்கே அமர்ந்திருந்தாள். எங்கே அவன்.? அவளுக்குப் புரிந்தது. நைட் ஷிஃப்ட் என்றாள் ஒரே வார்த்தையில் . நாங்கள் இப்போ எங்கே செல்லவேண்டும்.? ரசீதைக் காட்டினோம். கைகளை ஒரு சந்தில் நீட்டி, அந்த பிங்க் போர்ட் தொங்குகிறதே அங்கே நில்லுங்கள், என்றாள். இன்று தீவு டூரா,லன்ட் டூரா? கேட்டோம். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் முதலில் காண்பித்த இடத்தை நோக்கிக் காண்பித்தாள்.

அங்கே சென்றோம். ஒரு பெண்மணி முகத்தில் ஒரு பயங்கர வெட்டு காயம் காய்ந்து ஆறிபோன தழும்புடன் பாதி மூக்கு காணாமல் போன நிலையுலும் கருத்தமேனியுடன் நின்றிருந்தாள். கோரமுகம் அவளுக்கு . அவளிடம் கேட்டோம். ஆங்கிலம் பேசினாள். அங்கே உட்காருங்கள், என்று ஓர் இடத்தைக் காண்பித்தாள்.

நாம் தான் எப்போதும் கேள்விக்கணைகளோடு உலா வருபவர்கள் ஆயிற்றே, கேள்விகள் கேட்க்காமல் இருக்கமுடியாதே, கேட்டோம்,

இன்று எங்கே செல்கிறோம்.? ''

பேகெஜ் ஏற்பாடு செய்தவர்கள் சொல்லவில்லையா.?'' கேட்டாள், கோபமாக.

சொன்னார்கள் ஆனால் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்குக் கேட்கிறோம்,'' என்றோம்.

ஒன்பது முப்பதுக்குச்சொல்கிறேன், அங்கே உட்காருங்கள்.'' என்று மீண்டும் விரட்டினாள் எங்களை .

மணி எட்டுமுப்பது அப்போது. வெறுமனே ஒரு மணிநேரம் காக்கவைக்கின்றார்களே, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு, வெயில் சுளீரென்று முகத்தில் பட, அவளின் முகத்தைப்பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தோம்.

சரியாக ஒன்பது மணிக்கு கையில் ஒரு காகிதத்தை ஏந்தியவண்ணம் அந்தக்கடையில் இருந்து வெளியே வந்தாள். அதற்குள் பலர் அங்கே குழுமியிருந்தனர்.

ஹோட்டல் பெயரைச்சொல்லி அறை எண்களைச் சொல்லி அழைத்தாள் அனைவரையும். அழைப்பவர்கள் மட்டும் வந்து இந்தக் காகிதத்தில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டாள். நல்லவேளை நாங்கள் அதில் இருந்தோம். ஒரு குழுவின் ஹோட்டல் பெயரும் இல்லை அறை எண்களும் இல்லை. சீன நாட்டவர்கள். அவர்கள் அவளை நாடி, எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க. நான் அழைத்தவர்கள் மட்டும் என்னோடு வந்தால் போதும், அழைக்கப்படாதவர்களைப் பற்றி எனக்குத்தெரியாது, என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிட்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக இறங்கிவிட்டாள் அந்தக் கோரமூக்கி.

எல்லோரும் அங்கே நிற்கின்ற வேனில் ஏறுங்கள், என்றாள். நாங்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறப்பார்த்தோம். அறை எண் ஹோட்டல் பெயரைச் சொல்லி சத்தமாக எங்களை இப்படி வருமாறு கூச்சல் போட்டாள். நான் உங்களைப் போகச்சொன்னேனா.! சொன்னேனா? என்று அதட்டினாள்.

என்ன இவ, நல்லா சொல்லவேண்டியதுதானே. இப்படிக் கத்தறா. இதுவே வேற இடமா இருந்தா, அவள உண்டு இல்லென்னு பண்ணிடலாம், என்று, என் தோழி முணுமுணுத்தாள்.

தெரியாத ஊர், விளங்காத பாஷை, பழக்கமில்லாத மக்கள், அமைதியாக இருந்தோம். முதலில் சென்ற குழுவிற்கு அழகான வேன் வந்தது. எங்களுக்கு நாய் பிடிக்கும் லாரி போல் ஒரு வண்டி வந்தது, அதில் ஏறு என்றார்கள். ஏறி படகு துறைக்கு வந்தோம்.

நல்லவேளை நீச்சல் அடைகளை உள்ளே அணிந்திருந்தோம். வெள்ளைக்கார பெண்மணிகள் அனைவரும் நீச்சல் அடையிலேயே வந்திருந்தார்கள். அவர்களைக்கண்டவுடன் , நாங்கள் எங்களின் மேலாடைகளைக் கழற்றிவிட்டு நீச்சல் அடையிலேயே பவனிவந்தோம்.

ஸ்பீர்ட் போர்ட் வந்தது. எண் 99, மஞ்சள் வர்ணத்தில். அது அங்கே எங்களுக்காக காத்திருந்தது. ஒரு விரைவு படகில் 22பேர் ஏறலாம்.

மீண்டும் கணக்கெடுத்தாள். அறை எண்களைச்சொல்லி ஹோட்டல் பெயரைச்சொல்லச் சொல்ல அனைவரும் கையைத்தூக்கவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்பதால், உங்கள் மொழியில் `சவடிக்கா' எப்படிச்சொல்லவேண்டும்.? என்று கேட்டாள், வணக்கம் என்றோம். மலாய் மொழியில்? கேட்டாள், சொன்னோம் செலமட் பாகி. பிறகு ஸ்வீஸ் காரர்களிடம் கேட்டாள், சீனாக்காரர்கள், சிங்கப்பூர், போர்த்துகல் என பல பிரிவினர்கள் அங்கே இருந்தார்கள். எல்லோரிடமும் கேட்டுவிட்டு அதே போல் சொல்லிக்காட்டினாள். எல்லோரும் உற்சாகமானார்கள்.

இதில் நாங்கள்தான் `அண்டிகள்'. மற்ற அனைவரும் துள்ளலோடு விரைவுப் படகில் ஏறினார்கள்.

செல்வதற்கு முன் சில நிபந்தனைகளை எல்லோரிடமும் வைத்தாள் அந்த கோரமுக தாய்லாந்து பெண்மணி.

படகு மிகவேகமாகச்செல்லும். கடல் மிக மிக ஆழமானது. நாங்கள் சொல்கிற இடத்தில்தான் நீங்கள் அமரவேண்டும். நண்பர்கள் போய்/கேர்ல் பிரண்ட் பக்கத்தில்தான் அமரவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது,

படகில் நடமாடக்கூடாது. குதிக்கக்கூடாது. பாதுகாப்பு ஆடையினைக் கண்டிப்பாக அணிந்துகொள்ளவேண்டும். படகு நிறுத்தப்படுகிற இடத்தில் நாங்கள் சொல்கிற நேரத்திற்குள் வந்துவிடவேண்டும், இல்லையேல், நீங்கள் தீவுலேயே விடுபட்டுவிடுவீர்கள். மீண்டும் அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். அதில் 22பேர் இருந்தால், அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆக, எல்லாம் சரியாக நிகழவேண்டும் என்றால் தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள்.

நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் அங்கே கட்டப்பட்டிருக்கின்ற கையிற்றைச்சுற்றியே நீச்சல் அடிக்கவேண்டும். அதைதாண்டி சென்று ஆபத்துகள் எதேனும் ஏற்பட்டால் அதற்கு நாங்கள்பொறுப்பல்ல. சென்ற வாரம் ஒரு சீனப்பெண்மணி சொல்பேச்சு கேட்காமல் வட்டத்தைத்தாண்டி நீச்சல் அடிக்கச்சென்றபோது நீர் அவளை இழுத்துச்சென்றது, நாங்கள் அனைவரும் இறங்கி அவளைக் காப்பாற்ற முயன்றோம், இழுத்துவருகிறபோது உயிர் இருந்தது, கரை சேருகிறபோது இறந்துவிட்டார். பெரிய பிரச்சனையாகிப்போனது, அதன் பிறகு நாங்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உங்களின் பாதுக்காப்பிற்காகவே.. என்று முடித்தார்.

எங்கள் நால்வரின் முகத்தில் ஆடவில்லை. என்ன இவ்வளவு ஆபத்தான பயணத்தில் நாமே புகுந்துகொண்டோமே, என்று நடுக்கமாக இருந்தது.

அனைவரும் படகில் ஏறினோம். நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஏறினோம். காரணம் கால் வைத்து ஏறுகிற கம்பிப்படிகள் ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது. உதவிக்கு உள்ளவர்கள் எங்களைக்கைப்பிடித்து ஏற்றிவிட்டார்கள்.

படகு கிளம்பியது, இதுவரையில் நான் அனுபவித்திராத பயணம் அது. போகிற வேகத்தில் படகு சாய்வதைப்போல் இருந்தது. தோழி உட்காருகிற இடத்தில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தாள். ஒருவள் பைகளை கைகளில் ஏந்தி வாந்தி எடுத்தமேனியாக இருந்தாள். எனக்கு கிறுகிறு என்று வந்தது.

கீழே விழுந்த தோழியை நாங்கள் தூக்க எழுந்தபோது, யாரும் நகராதீர்கள், அலை மோசமாக இருக்கின்றது, கொஞ்சம் பொறுங்கள் நாங்கள் வருகிறோம், என்று சொல்லி, குண்டான பெண்மணியை எழச்சொல்லி இந்தப்பக்கம் வரவழைத்துவிட்டு,இருவர் ஒன்றுசேர வந்து, என் தோழியை தூக்கி உட்காரவைத்தார்கள்.

படகு பயணத்தின் போது அதே கோரமுகம் கொண்ட தாய்லாய்ந்து பெண்மணி பாட்டுப்பாடி டிஸ்கோ ஆடினாள். அருமையாக கைத்தேர்ந்த நடக்காரி போல் ஆடினாள். வியந்துபோனோம். ரசித்தோம். நன்கு பாடினாள். ஆங்கிலம், மலாய்ப் பாடல், தாய்லாந்து பாடல் என்று அருமையான குரல்வளம் கொண்ட அவள் பாடிக்கொண்டே ஆடினாள். படகில் வேகமான இசை ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லோரும் கைகளைத்தட்டி உற்சாகமூட்டினோம்.

செல்கிற ஒவ்வொரு இடத்திற்கும் அங்கே நிகழ்ந்த சில சுவாரிஸ்ய நிகழ்வுகளை கதைகள்போல் எங்களிடம் சொல்லி பயணத்தை உற்சாக மூட்டியபடியே இருந்தாள் அந்த கோரமுகம் கொண்ட பெண்மணி. ஜேம்ஸ்போடண்ட் ஐலண்ட், மங்கி ஐலண்ட், பெர்ட் நெஸ்ட், மஞ்சள் குகை என்று அனைத்தையும் படகில் நின்றபடியே ரசித்தோம். சில இடங்களில் நீச்சல் செய்தோம்.

பி பி ஐலண்ட் வந்துசேர்ந்தோம். அங்கேதான் மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. படகை நிறுத்திவிட்டு, இந்த பி.பி ஐலண்டைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.! கேட்டாள். எல்லோரும் ஆம் என்பதைப்போல் தலையை ஆட்டினார்கள். நாங்கள் டியூப் லைட் கொஞ்சம் தாமதமாகத்தாம் எல்லாமும் புரிந்தது. 24/12/2004 நினைவிருக்கிறதா.? கேட்டாள். எல்லோரும் அமைதியானோம்.

சுனாமி வந்து , கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டமனிதர்களை விழுங்கிய இடம் இது. இந்த பி.பி ஐலண்டில் உள்ள அனைத்தையும் சுனாமி அடித்துச்சென்றது. இதுபுதிய பி.பி ஐலண்ட், கடைகள் அனைத்தும் முற்றிலும் புதியது.

அதோ அங்கே தெரிகிறதே மொட்டையான தென்னை மரம், அதுவரையில் வந்தது சுனாமி, என்றதும் அனைவரும் ஒன்றாக அந்த மரத்தை நோக்கிவிட்டு ச்ச்ச் ச்ச்ச் என்று சோகஒலி எழுப்பினார்கள். எங்களின் வீடு இங்கேதான் இருந்தது. இப்போது இல்லை காரணம் என் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி தங்கைகள் என அனைவரையும் நான் இங்கே பலிகொடுத்துவிட்டேன். குடும்பத்தின் ஆறுபேரையும் சுனாமி அடித்துச்சென்றுவிட்டது. நான் எப்படித்தப்பித்தேன் என்கிறீர்களா.!?

உயிர் மட்டும்தான் இருந்தது எனக்கு மற்ற எல்லமும் போச்சு. நான் எவ்வளவு அழகி தெரியுமா.! என் முகம் இப்படி மாறியதற்கே, இந்த சுனாமிதான் காரணம் என்று நகைச்சுவையாகச்சொல்லி கண்களை சிமிட்டினாள். அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். என் மனதில் சோகம் படர்ந்தது. அவளின் கோரமுகம் என் மனதை விட்டு மறைந்தது. அவள் அழகானாள்.

மீண்டும் படகு ஏறி இக்கரைக்கு வந்தாக வேண்டுமே, மிகுந்த கலவரத்தில் படகு ஏறினோம். காரணம் கடுமையான மழை. நீர்மட்டம் கடலில் அதிமாக இருந்ததைப்போல் இருந்தது.

வரும்போது முட்டிவரை இருந்த நீருக்கே நான் பரதநாட்டியம் ஆடினேன். இப்போது இடுப்புவரை நீர், கால் வைத்து ஏறுகிற இடம்வேறு ஊஞ்சள் போல் வேகமாக ஆடியது. எல்லோரும் ஏறியாகிவிட்டது நாங்கள் தத்தளித்தோம். பரிடா வந்தாள், கைகளைப்பற்றிக்கொள் என்றாள், வேகமாக இழுத்து மேலே சுலபமாக ஏற்றினாள். அப்படி ஏறியபோது அவளை அணைக்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.

அத்தருணத்தின் போதுதான் தோளில் தொங்கிக்கொண்டிருந்த எனது ஹென்பேக் முழுமையாக நீரில் மூழ்கியது. ஸ்மார்ட் கைப்பேசி பாழாய்ப்போனது. வாங்கி இரண்டே மாதம்தான்... :(

எல்லாமும் முடித்து படகு கரைக்கு வர மாலை மணி நான்கு முப்பதாகி இருந்தது. விரைவாக இருட்டாகிப்போனதுபோல் தென்பட்டது . கடல்தாயே நன்றி, என்று கும்பிடு போட்டுவிட்டு ஹோட்டல் அறைக்குச்சென்றோம்.

அன்று முழுக்க உடல் அடித்துப்போட்டதுபோல் இருந்ததால், இரவு வொட்கா அருந்தினோம். உற்சாகம் பிறந்தது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்


 

சனி, ஜூலை 23, 2016

கபாலி

கபாலி நல்லா இருக்கா.? என்கிற கேள்வியினை வைத்தேன்.

நீங்கள் பார்த்துவிட்டு உங்களின் ரசனையைப் பதிவுசெய்யுங்கள் என்றார்கள்.
பார்த்தேன். என்னைக்கவரவில்லை. டைட்டல் போடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று வரும், ரசிகபெருமக்கள் கூச்சல் போட்டார்கள். அத்தோடு சரி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே கதை நகர்ந்தது.

பெயர் போடுகிறபோது, மலேசிய மக்களுக்கு நன்றி என்று வரும், நான் மட்டுமே கூச்சல் போட்டேன், விசில் அடித்தேன்(முயற்சி செய்து பார்த்தேன்).

கபாலி அதிரடி அஃக்ஷன் படம் என்றெல்லாம் சொல்லமுடியாது.சொல்லமுடியாது என்ன, அஃக்ஷனே இல்லை. மெட்ராஸ் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தலைகாட்டி இருந்தார்கள், கார்த்தியைத் தவிர.

ரஜினி நடித்தார் என்பதைவிட சிரித்தார், நடந்தார், காரில் பயணம் செய்தார். சுட்டார்.
கதாநாயகியை, மவுன்டன் மென் படத்தில் பார்த்ததிலிருந்து எனக்கு பிடித்த நாயகி அவர். அழகி.

இன்னொரு மன்னன், பாஷா வருமா என்று ஏங்குகிறோம். வராது போலிருக்கிறது. தொடர் ரஜினி படம் ரசிகர்களை ஏமாற்றிவருகிறது.

அது இருக்கட்டும், படத்திற்கு யார் வசன‌கர்த்தா.? மலேசியாவில் நாங்கள் இப்படியா தமிழ் பேசுவோம்.!? சிலர் போதை தலைக்கு ஏறுகிறபோது உளறிய சில வார்த்தைகள் வைத்து, அதுதான் மலேசிய தமிழர்கள் பேசுகிற பாணி மலேசிய மக்களின் வட்டாரவழக்கு என்பதைப்போல் காட்டியிருப்பது, பொன்னடென்ஷன் போங்க.!

இந்தியா பெரிய நாடு, ஊருக்கு ஒரு பேச்சு வழக்கு இருக்கும், அதை உலகுக்குக் காட்டலாம், இங்கே எங்கள் நாடு, சென்னை அளவு கூட கிடையாது அவ்வளவு சிறிய நாடு, அதில் வட்டரவழக்கா.? நாட்டுவழக்கா,பேச்சா.? ஒண்ணுமே புரியல'லா. கச்சவு.

நாங்கள் பிறந்துவளர்ந்தது எல்லாம் கோலாலம்பூர்தான், எங்களுக்கே தெரியாத ஒரு பேச்சுவழக்கு, கோலாலம்பூரில் புழங்குகிறதா.! சூசாலே.

ரௌடிஷம் காட்டுகிறார்கள். நாட்டின் பொருட்களை சேதப்படுத்துகிறது,பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிரட்டல், திருட்டு, கொலை, வன்முறை, குழந்தைக் கடத்தல், வன்புணர்வு என அட்டூழியங்கள்
தொடர்கிறபோது, எப்படியேனும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தானே, அதிலென்ன நல்ல கேங்ஸ்டர், கெட்ட கேங்ஸ்டர்.! கேங்ஸ்டரிஷம் ஒழிய வேண்டும் என்பதுதானே பலரின் வேண்டுகோள். தொடர்ந்து இவன் அடிக்க, அவன் சுட, இவன் தேட, அவன் வெட்ட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

கோலாலம்பூரில் 80களில் இல்லாத ரௌடித்தன அராஜகமா.! போலிஸாரால் கூண்டோடு சுட்டுத்தள்ளிய காட்சிகள் அடைங்கிய‌ பத்திரிகைகளைக்கூட எங்களிடமிருந்து மறைப்பார் அப்பா. அப்படி இருக்கின்றபோது நல்ல ரௌடி கெட்ட ரௌடி என்று வகை பிரித்து காட்டியிருப்பது கேடித்தனம்.



ஒரு ஊர், அங்கே நடக்கின்ற பிரச்சனைகள், சம்பவங்கள் குறைந்தபட்சம் பத்துவிழுக்காடாவது உண்மை இருக்கவேண்டும், 0.01 விழுக்காடு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த மலேசியர்களைப் படம்பிடித்துக்காட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பியிருப்பது, மலேசியர்களான எங்களுக்குக் கோபத்தை வரவழைக்கின்ற ஒன்று.

நாங்கள் இங்கே சிறப்பாக வாழ்கிறோம். மொழிப்பற்று தமிழர்களிடையே அதிக அளவில் மேலோங்கி நிற்கிறது. ஏழு, ஆறு, ஐந்து என மக்கள்தொகை விழுக்காட்டில் கனிசமாகக் குறைந்துகொண்டே வருகிறோம். அதில் 0.01விழுக்காடு தமிழர்களின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களின் பிரச்சனைகளாகப் பார்க்கவேண்டாம். சினிமா கிடக்கட்டும். நாங்கள் சொல்கிறோம், எந்த ஊர் என்றாலும் எங்கள் ஊர் போல் வராது.
வளம் கொழிக்கும் நாடு எங்கள் நாடு. அரசியல் சித்துவேலைகள் எங்குதான் இல்லை. இங்குமட்டும் விதிவிலக்கா என்ன.! உணவுக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வேலை செய்து சம்பாத்தித்து ஊரில் வீடு நிலம் என வாங்கிப்போடுகிறார்கள். இங்கே பஞ்சம் பட்டினி என்றால் உழைக்கமறுப்பவர்களுக்குத்தான் இந்த கதி. இந்தச் சோம்பேறிகள் கிளப்பிவிடுகிற சில விவகாரங்கள்தான் உலகமக்களின் பார்வையில் பூதாகரமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பெயருக்கு ஊறு.
அதை மையமாக வைத்து சினிமா எடுத்து, அதுவும் ரஜினி படம், உலகமக்களால் விரும்பிப் பார்க்கப் படுகிற திரைப்படம் இப்படியா எங்கள் ஊரைப்பற்றிச் சொல்வது.! படம் முழுக்க ரௌடிஷம். கோலாலம்பூர், கோளாறு’ரும்ப்பூர் ஆக மாற்றியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் மலேசியாவில் எடுக்கப்பட்ட சீரியல் டிராமாவில் ரஜினி நடித்ததைப்போல் இருந்தது.அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.
அதில் ஒரு நன்மையும் இருந்தது. எவ்வளவு அழகாகக் காட்டியிருந்தார்கள் எம்மண்ணை... அழகுடா செல்லம் நீ.

வியாழன், ஜூன் 04, 2015

குடும்பத்தலைவன்கள்

சமைப்பதற்கு இஷ்டம்
சட்டிபானை கழுவவேண்டுமே..!?
கடைக்குச்செல்ல விருப்பம்
சாமான்களை கார்வரை தூக்கிவரவேண்டுமே.!?
மார்க்கெட் செல்ல பிடிக்கும்
வாங்கியவற்றை தூய்மைப்படுத்தி வைக்கவேண்டுமே..!?
துணிமணிகள் துவைக்கலாம்..
மடித்துவைக்கவேண்டுமே..!?
செடிவளர்க்க ஆசை
தினமும் பாதுகாக்கவேண்டுமே..!?
வளர்ப்புப்பிராணிமேல் பிரியம்
நமக்கே தலைசாய்க்கும் வரை வேலை..!?
வேலைக்குச்சென்றும்..
இதெல்லாம் நம்வேலை
உதவிக்கு வரவில்லை
கால் ஆட்டி
வாலையும் ஆட்டுகிறார்கள்..
சில குடும்பத்தவளைகள்..

செவ்வாய், மே 05, 2015

பண்டோங் பயணம்

ஜகார்த்தா பண்டொங் - இந்தோனீசியா சென்று வந்தேன்
மொழி ஏறக்குறைய விளங்குவதால், மக்களுடன் கலந்து சரளமாக உரையாட முடிந்தது.
உணவு - ஆடர் கொடுக்கத்தெரிந்தால் அருமையான உணவுகளை உண்டு சுவைக்கலாம்.
பெரிய ஹோட்டல்களைவிட ஒட்டுக் கடைகளில் உணவுகள் அறுசுவை. தூய்மையாக உணவுகளைத்தயார் செய்கிறார்கள்.
சுட்ட சோளம், ஈக்கான் பாக்கார் (சுட்ட மீன்), ஆயாம் பென்ஞெட் (சுட்ட கோழி) பூளுட் பாக்கார், ரொஜாக், சூப் வகைகள், பொரி கடலை வகைகள் என எங்கு பார்த்தாலும் தின்பண்டங்கள். போகிற இடமெல்லாம் தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.
அங்கே சுற்றிப்பார்ப்பதற்கு வெடித்துச்சிதறிய எரிமலைகள்தான் புகைகளைக் கக்கிக்கொண்டு காட்சியளிக்கின்றன. அவைகளைச் சென்று காண வளைந்து வளைந்து செல்லும் மலைகளைக் கடக்கவேண்டும். மோசமான பாதைகள். குதிரை வண்டியில் செல்வதைப்போல் உடல் குலுங்கிற்று. வாந்தி மயக்கம் தலைசுற்றல் இல்லாமல் என்னால் அச்சூழலைக் கடக்கமுடியவில்லை. இருந்தபோதிலும் அழகிய இடங்கள் அவை.
ஷோப்பிங்க செல்ல பண்டொங் அற்புதமான இடம். கைவினைப் பொருட்கள், துணிமணிகள், கைப்பைகள் என, நம் நாட்டைவிட பொருட்களின் விலை மலிவு. மலேசிய வியாபாரிகள் (மலாய்க்காரர்கள்) பொருட்களைப் பேரம்பேசி வாங்கி குவித்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கே சீனர்கள் செல்வச்செழிப்புடன் சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் காரக்குடியில் இருக்கின்ற கோட்டைகள் போல் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் சீனர்கள். இந்தோனீசியர்கள் பெரும்பாலும் அவர்களிடம் பணிபுரிகின்ற ஊழியர்களாகவே இருக்கின்றார்கள். ஏழைகள் மிக ஏழைகளாகவும் செல்வச்செழிப்பில் வாழ்கிறவர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகவும் வாழ்ந்துவருகிறார்கள்.
அரசு பணிக்குச்செல்லவேண்டுமென்றால் ‘சுவாஃப்’ செய்யவேண்டுமாம். லஞ்சம் கொடுப்பதை இப்படித்தான் சொல்கின்றார்கள். அப்படிக்கொடுத்தும் வேலை கிடைக்குமா .(.!?) என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார் எங்களுக்கு வாகனம் ஓட்டிய தம்பி.
ஜகர்த்தாவின் ஆறு கால்வாய்கள் எல்லாம் நீரோட்டம் இன்றி தேங்கியகுட்டைபோல் சலனமில்லாமல் இருக்கின்றன. சாலையும் அந்த நீர்தேக்கமும் ஒரே அளவில் இருப்பது கலவரத்தை உண்டுபண்ணியது.
``ஏன் இப்படி? கொஞ்சம் மழைபெய்தாலே வெள்ளம் வரும் போலிருக்கே.!? நான் இக்காட்சியினை எங்கும் கண்டதில்லை. இந்தோனீசியாவின் தலைநகரமாகத் திகழ்கின்ற மிகப்பெரிய பட்டிணத்தில் மழைவராமலேயே வெள்ள அபாய அறிகுறிகள் தென்படுகின்றனவே, என்ன கொடுமை இது.?” என்று நான், என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
``கொடுமைதான் அக்கா. என்ன செய்ய.? மழைவந்தால் வெள்ளம் நிச்சயம் உண்டு.”
``ஏன் உங்கள் அரசாங்கம் இதை நிவர்த்தி செய்யவில்லை? லஞ்ச ஊழல் அதிகமோ.?’’ கேட்டேன்.
``இல்லையக்கா. ஜகர்த்தா கடலோரம் இருக்கின்ற ஒரு ஊர். இங்குள்ள நீர்தேக்கமெல்லாம் மிக அருகில் இருக்கின்ற கடலை நோக்கியே பயணிக்கும், கடலின் நீர் மட்டம் குறைகிறபோது இங்குள்ள கால்வாய் ஆறுகளில் சலசலப்பு இருக்கும். அங்கே அதிகரிக்கின்றபோது நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும். இதுதான் இங்குள்ள நிலை. ’’ என்று விளக்கமளித்தார்.
எங்கு பார்த்தாலும் நீர்த்தேக்கமாக இருப்பதால் டிங்கிக் காய்ச்சல் அபாயம் அதிகம் என்கிறார் ஓட்டுனர்.
இரவு வேளைகளில் கொசு நம்மை உறிஞ்சு எடுக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலிலும் கொசுத்தொல்லை.
மற்றுமொரு சகிக்கவியலா பிரச்சனை, கடுமையான சாலை நெரிசல். எங்கு நுழைந்தாலும் சாலை நெரிசல். சாலை நெரிசல். சாலை நெரிசல். அங்கே இருக்கும் வரை `சாலைநெரிசலோப்போபியா’ என்னை வாட்டி வதைத்தது. கண்ணயரும் போதெல்லாம் சாலை நெரிசல் கனவிலும் வந்து தொல்லை கொடுத்தது. பயணமே இந்த கடுமையான சாலை நெரிசலால் பாழ்பட்டுக்கொண்டிருந்தது.
எல்லா நாட்டிலும் சாலை நெரிசல் உண்டுதான் இல்லை என்றல்ல. ஆனால் நமக்கு மாற்று வழிகள் நிறையவே உண்டு. அங்கே மாற்றுவழிகள் அறவே இல்லை. நெரிசலை நெரிசலோடு நெரிசலாக கடந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
இரவு 7.40க்கு எங்களின் விமானம். நாங்கள் மதிய உணவைக் கூட எடுக்காமல் இறுதிகட்ட ஷோப்பிங்கில் மூழ்கியிருந்தோம். எங்களைத்தேடி வந்த எங்களின் ஓட்டுனர், `நேரத்திற்கு வீடு திரும்பவேண்டுமா, வேண்டாமாக்கா?’ என்று கேட்டார்.இன்னும் நேரமிருக்கு தம்பி கொஞ்சம் பொறு.’, என்றோம். `முடியாதுக்கா.. கிளம்பலாம்,’ என்றார் கறாராக.
என்ன அநியாயமா இருக்கு.! இங்கிருந்து 10கிலோ மீட்டர்தான் ஏர்ப்போர்ட்’க்கு. அதற்குள் அவசரப்படுத்துகிறானே.! என்று முனகிக்கொண்டே கிளம்பினோம். அப்போது மணி மாலை 3.15.
அங்கிருந்து வெளியேறி ஏர்போர்ட் செல்லும் சாலையில் நுழைகிறபோது மாலை மணி 4.00. பிடித்தது நெரிசல். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து நகர்ந்து ஏர்ப்போர்ட் வந்துசேர மாலை மணி 6.15. அதன் பிறகு என்ன ..ஓட்டமும் நடையுமாய் எல்லா வேலைகளையும் கார்ட்டூன் போல் செய்து முடித்தோம். சாப்பிடவே இல்லை. மன உளைச்சல். வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. தப்பித்தோம் இறைவா, என மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டோம்.
எங்களோடு பயணித்த என் தோழிக்கு இதுதான் முதல் விமானப் பயணம். விமானத்தில் ஏறியவுடன். ஜபமாலைகளைக் கைகளில் ஏந்தி `ஆண்டவரே நீர்தான் பைலட், ஆண்டவரே நீர்தான் என்னருகில், ஆண்டவரே எனக்கு மூன்று பிள்ளைகள், எங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பீராக.. ஆண்டவரே என் பயத்தைத் தூக்கி தூரப்போடுவீராக.. ஆண்டவரே ஜீஸஸ்.. என விமானம் தரையிறங்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே வந்தாள்.
பசி.. பசி என ஆளாய்ப்பறந்த அவள், விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவைக்கூட விழுங்கமுடியாமல் பீதியில் மூழ்கிக் கிடந்தாள். அவளைப் பார்த்து மூத்திரம் முட்டுகிற அளவிற்கு சிரிப்பை அடக்கிக்கொண்டு பயணித்தோம்.
போதுமடாசாமி - ஒருமுறை பயணிக்கலாம்.

ஞாயிறு, மார்ச் 15, 2015

குறையொன்றுமில்லை..

தலைநகரில் நடைபெற்ற சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றுவந்தேன்.

சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு அது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்து வழிந்தார்கள் என்பதைவிட, இணைய இதழாகச் செயல்பட்டுவரும் வல்லினத்தின் இலக்கிய ஈடுபாடுகளின் பால் தீராத காதல் கொண்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வு சிறக்க பேருதவியாக இருந்தார்கள்.

டாக்டர் சண்முகசிவ அவர்களின் உரையை நன்கு ரசித்தேன். எல்லாம் கலந்த கலவையாக அது அமைந்திருந்தது. நான் என்னை வைத்து உலகத்தைப் பார்ப்பவன். எதிலும் குறைகள் இருப்பதாக எனக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. சுவாமி அவர்கள் சமுதாயத்தை வைத்து உலகத்தைப்பார்க்கின்றார். அங்கே நிகழ்கின்ற சீர்கேடுகளை இலக்கிய ஆன்மிக பார்வையுடன் கூர்ந்துநோக்கி, அதை அறச்சீற்றமாக மீள்பதிவேற்றி, பத்தி மற்றும் சிறுகதை வடிவில் நமக்குக்கொடுத்திருக்கின்றார். குறைகள் ஆங்காங்கே இருப்பினும் `குறையொன்றுமில்லை’ என்று கூறி தமது நீண்ட உரையை நிகழ்த்திமுடித்தார்.

பாண்டியனின் உரை ஆன்மிகத்தில் இலக்கியம். நமது எல்லா பக்தி இலக்கிய படைப்புகளின் இலக்கியப்பங்கேற்ப்பைப்பற்றி உரையாற்றினார். எல்லா பக்தி இலக்கியங்களைப் பற்றியும் மேலோட்டமாகத் தொட்டு விட்டுச்சென்றார். ஆன்மிகத்தில் இலக்கியம் என்பது பத்துநிமிட பேச்சில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் பிசகாமல்  `லேசான’ படபடப்பில் சிறப்பாகவே தமது பங்களிப்பை வழங்கியிருந்தார் பாண்டியன். எனக்கு அவரின் உரையைவிட  எழுத்தின்மேல் கிறக்கம் அதிகம். நன்றாக எழுதுகிறவர்களுக்கு பேச்சுக்கலை தடுமாறும் என்பார்கள்.  

ஆனால், பூங்குழலிக்கு எல்லாமும் அத்துப்படி. மூன்றாவது பேச்சாளர் பூங்குழலி. சுவாமி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூலை முழுமையாக வாசித்து அதில் அவரைக் கவர்ந்த விஷயங்களை பார்வையாளர்களோடு பகிந்துகொண்டார். சுருக்கமாகப் பேசிய குழலியின் உரை அற்புதம். நுலைப்பற்றி அவர் சொன்னதைவிட, அழகிய தமிழில் குரலின் ஏற்ற இறக்கங்களோடு சொல்லவந்ததை மிக அழகாகப் பகிர்ந்தவிதம் - எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இறுதியாக சுவாமியின் உரை. புத்தகத்தைத்தொட்டு அவர் ஒன்றும் சொல்லவில்லை. வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய ஆன்மிக சொற்பொழிவாகவே அது இருந்தது. குறிப்பாக மிக நெருக்கமான ஒருவர் மரணத்தைத் தழுவுகின்றபோது அங்கே மஹா கருணையாளனாக பேரன்பு நிறைந்தவனாக நாம் போற்றி வந்திருக்கின்ற இறைவன், நிஜமாலுமே கருணையாளனா? பேரன்பு நிறைந்தவனா.?   இக்கேள்விகளுக்கு நாம் விடைதேட எத்தனிக்கின்றபோதுதான், இலக்கியம் கைகொடுக்கிறது. இலக்கியமும் ஆன்மிகமும் வெவ்வேறு அல்ல, ஆழமாகச்செல்லுகையில் இரண்டும் ஒரே நேர்கோட்டில்தான் போதித்து நிற்கும். அற்புதமாகப்பேசினார் ஐய்யா அவர்கள்.

``நிகழ்விற்கு வந்துவிடுங்கள். வருகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். உங்களின் வரவை உறுதிபடுத்துங்கள். (வரலன்னாத்தான் இருக்கு..!! என்கிறதொனியில், ஒவ்வொரு முறையும் மேசெஜ் வாசிக்கின்ற போது, அரிவாளை கையில் ஏந்திக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு.. எனக்கு எச்சரிக்கை அழைப்பு விடுப்பதைப்போல் இருந்தது. நவீனின் நினைவுறுத்தல். - மனபிராந்தி..) என்று வல்லின இணைய இதழ் ஆசிரியர் நவீனின் நினைவுறுத்தல். நிகழ்விற்கு முழு பொறுப்பாளரான அவர், எதிலும் பங்குகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். சிம்பளாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வாழ்த்துகள் நவீன். (மீ கோரிங்க் நல்லா இருந்துச்சி.. ஆனாக்கா உப்பு கூட.)

நிகழ்ச்சியினை அற்புதமாகத்தொகுத்து வழங்கிய என் தம்பியைப்பற்றிச் (தயாஜி) சொல்லியே ஆகவேண்டும். அடேயப்பா, என்ன ஒரு வளர்ச்சி இந்த ஒராண்டில். முன்பெல்லாம் பேச்சில் மொண்ணைத்தனம் அதிகமாக இருக்கும். வளவளா பேச்சில் நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என போர்’அடிப்பார் தம்பி. (மன்னியுங்கள் தம்பி). ஆனால் தற்போதைய அறிவிப்பில் எவ்வளவு பெரிய மாற்றம்.! எனக்கே வியப்பாக இருக்கின்றது தம்பி. தெளிவான உரை. நிறைய அறிவுப்பூர்வ எடுத்துக்காட்டுகள். அழகான தமிழ்.  நிதானமான பேச்சு. அழகிய உடல்மொழி. சிறந்த மேடைப்பேச்சாளராக வருவதற்கான அனைத்துத் திறமைகளும் அமையப்பெற்ற ஓர் சிறந்த அறிவிப்பாளராக மிளிர்கின்றீர்கள். எனது மனப்பூர்வ வாழ்த்துகள் தம்பி. நல்லா வருவீங்கப்பா..

தங்கை மணிமொழி, யோகி, விஜி, கவிதா என அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.

ரயில் விட்டு இறங்கியவுடன், எழுத்தாளர் பாண்டியனை அங்கேயே சந்தித்தேன். டாஃக்சி எடுத்து நிகழ்ச்சி நடக்கின்ற விடுதிக்கு வரவேண்டும். எல்லோரும் ஒரே டாஃக்சியில் ஏறி வந்தோம். டாஃக்சிக்கு பாண்டியன் தான் பணம் செலுத்தினார். மிக்க நன்றி.
அடுத்தமுறை ஏதேனும் நிகழ்வு நடந்தால் - எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். ரயில் ஸ்டேஷனின் சந்திக்கலாம். ஹிஹி...

நன்றி நவீன் 

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

கலாச்சார காவலர்களே....

நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, அதாவது விரைவாக உணர்ச்சிவசப்படுவது. எந்த ஒரு ஆய்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லோரும் சொல்கிறார்கள் அது நிச்சயம் தப்பாகத்தான் இருக்கும். என்று ஒத்தூதிக்கொண்டு சரமாரியாக சர்ச்சையில் ஈடுபடுவது. சரி தப்பு என்று சொல்வதற்கு சில அறிவுப்பூர்வமான விவரங்களை பொதுவில் வைக்கத்திறன் இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, சமயம், கண்ணியம் என கூப்பாடு போட்டுக்கொண்டு வன்முறையில் ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள்.

அண்மையில் ஒரு வட்சாப் புகைப்படம் பரவலாக பலருக்குப் பகிரப்பட்டது. அத்தோடு சேர்த்து ஒரு அநாமதயப்போர்வழியின் குரலும் அப்புகைப்படத்தின் கீழ் பதிவு செய்து அனுப்பப்பட்டது. அக்குரல் ஒரு ஆணுக்குச்சொந்தமானது. அவர் என்ன சொல்கிறார் என்றால், இவள் ஒரு பெண்ணா? என்று ஆரம்பித்து பண்பாடு கலாச்சாரம் கோவில் என காரசாரமாக புலம்பியிருக்கின்றார். இறுதியில் `த்தூ’ என காறித்துப்பிவிட்டு அப்பெண்ணின் முதுகில் குத்தியிருக்கின்ற பச்சையை மேற்கோல் காட்டி அதையும் அசிங்கமாக விமர்சித்து தனிநபர் தாக்குதல் நடத்திவிட்டு,  `நான் தப்பாகச்சொல்லவில்லை.இப்படிக் கண்டித்தால்தான் அடுத்து கோவிலுக்கு வருகிற பெண்கள் கலாச்சார உடையுடன் அடக்க ஒடுக்கமாக வருவார்கள்,’ என்கிற மிரட்டல் எச்சரிக்கையோடு முடித்திருக்கின்றார்.

இது சட்டநடவடிக்கைக்கு உற்பட்ட ஒரு செய்கை என்பதை அறிந்துத்தான் செய்துள்ளாரா, அந்தப் `பண்பாட்டுக்’காவலர்.? இது ஒரு சைபர் கிரைம்.

ஒருவருக்குத்தெரியாமல் அவரை பின்பக்கமிருந்து புகைப்படம் எடுப்பது.
அவரைப்பற்றி அவதூறாகப் பேசி பதிவு செய்து பரவலாகப் பரப்பிவிடுவது.
அவர் எம்மதத்தைச்சேர்ந்தவர் என்பதை அறியாமல், அவர் நம் கலாச்சார பண்பாட்டுக்கூறுகளைக் கடைபிடிக்கவில்லை என்று கூப்பாடு போடுவது.. போன்றவற்றைக்குறிப்பிடலாம்

நாடுமுழுக்க அந்தப் புகைப்படம் எல்லோர் கைப்பேசியிலும் வந்து, அவனவன் இஷ்டத்திற்கு அப்பெண்ணின் புகைப்படத்தை எடிட் செய்து பெண்களை பொதுவில் கேவலப்படுத்திக்கொண்டிருப்பது இந்த சமூகத்தின் மீதும் ஆணாதிக்க அட்டூழியத்தின் மீதும் கூடுதல் வெறுப்புதான் மிஞ்சுகிறது.

அவனவன் வீட்டில் நடக்கின்ற அனைத்து ஒழுக்கக்கேடுகளையும் மூடுமந்திரம் செய்துவிட்டு, பொதுவில் பண்பாட்டுக்காவலர்கள் என்கிற முகத்திரையோடு உலாவருவது சுயமரியாதையாக்கப்பட்டுவிட்டது இங்கே.

ஒரு பெண்ணை அவளுக்குத்தெரியாமல் புகைப்படம் எடுப்பதே ஒழுக்கக்கேடான செய்கைதான் என்பதை உணராமல், கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றைப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது இவர்களுக்கெல்லாம்.? எவளோ ஒருவளைப் புகைப்படம் எடுத்து ஒட்டுமொத்த பெண்குலத்தையே கேவலப்படுத்துவது எந்த காலத்துத் தமிழ் கலாச்சாரம்.?

அப்பெண்ணின் அண்ணனோ மாமனோ மச்சானோ அப்பாவோ அங்கிருந்து, நீ அப்புகைப்படத்தை எடுக்கின்றபோது அதை அவர்கள் பார்த்து பெரிய பிரச்சனையாகி, வாய்ச்சண்டையாகி, கைச்சண்டையாகி, குண்டர் சண்டையாகி, வெட்டுக்குத்துவரை சென்றிருந்தால், நம் சமூகத்திற்குக் கெட்ட பெயர்தானே.! கோவிலில் சண்டை போடுகிறார்கள் என கொட்டை எழுத்தில் பிற இனத்தவர்களின் பத்திரைகையின் முதல் பக்கச்செய்தியாக வருமே. அப்போது யார் மீது குற்றம் சொல்வது. ? தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைத்த நீதானே அங்கே குற்றவாளி.! இது சமுதாயக் கேடு இல்லையா.?

இப்படிப்புகைப்படமெடுத்துப்போட்டால்தான் மக்கள் திருந்துவார்களாம்..! அப்படியென்றால் தினமும் நடக்கின்ற குண்டர் சண்டைகளை மிகக்கேவலமாகச் சித்தரித்து பத்திரிகையில் போட்டுவருகிறார்களே.! திருந்துகிறதா இந்தச்சமூகம்.? தைபூசத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புகூட பார்க்கிங் பிரச்சனையில் ஒருவனின் கைகால்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டதே.. அப்புகைப்படமும் பொதுவில் பரப்பப்பட்டதே.. ! இந்த ஆண்வர்க்கத்தால்தான் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் பாழாகிறது என எந்தப்பெண்ணாவது கூப்பாடு போட்டு புகைப்படங்களை பரப்பி வந்தாளா?

எவ்வளவோ சொன்னார்கள்.. சுருட்டு பிடிக்காதீர்கள். பீர் அருந்தாதீர்கள். கத்திமேல் நிற்காதீர்கள் பேன்ஸி காவடிகளையெல்லாம் எடுக்காதீர்கள் என, யார் கேட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் தைபூசத்தின் போது இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருந்தது. முற்றாக அழிந்துவிட்டதா? ஏன் அவைகளைக் கேவலமாகச் சித்தரித்து குரல் பதிவுகள் வரவில்லை. ? பிரச்சனை பெரிசாகும். குண்டர் சண்டைகள் வரும் என்கிற பயம்தானே.!. சமய ஆசான்களே இவைகளை பொதுவில் சொல்கிறபோது, கொஞ்சம் பவ்வியமாகத்தான் எடுத்தியம்புகிறார்கள். காரணம் நம்மவர்களின் நிலைமை அப்படி.

ஆனால் அதுவே பெண்களின் பிரச்சனைகள் என்றால் கூடுதல் இளக்காரம். குடும்ப மானம், கணவன், பிள்ளைகள் அண்ணன் அப்பா என எல்லோரையும் சந்திக்கு இழுத்து கேவலப்படுத்தலாம் இஷ்டம்போல். அது நமது கலாச்சாரம், அப்படித்தானே. !

ஒரு அனுபவம் சொல்கிறேன்..
சென்றவாரம் நானும் என் அக்காவும் காய்கறி சந்தைக்குச்சென்றோம். என் அக்கா மொட்டை போட்டு முடி இப்போதுதான் வளர்கிறது. அவர் நிறத்தில் கொஞ்சம் கருப்புதான். நான் மாநிறம்.

இருவரும் ஒரு மீன் கடைக்குச் சென்றோம். பேசிக்கொண்டே, மீன்களின் செவுள்களை திறந்து திறந்து புதிய மீன்களா என ஆராய்ந்துகொண்டிருந்தோம். அப்போது அந்த வியாபாரி (சீனப்பெண்), மலாய்மொழியில் சொன்னாள், அக்கா எல்லாம் புது மீன்தான்.. சந்தேகமே வேண்டாம். தாராளமாக வாங்கலாம்.... என்று சொல்லி முடிப்பதற்குள்.. ஆஆ.. சாரி. மலாய் தெரியுமா? என்று கேட்டாள். ஏன் அப்படிக்கேட்கிறாய்? என்றதிற்கு, நீக்ரோவோ என்று நினைத்தேன்.  என்றாள். . உடனே நான் என் அக்காவிடம் திரும்பி,  இனி நீ, கூந்தல் நீளமாக வளரும் வரை என் கூட வராதே. என்னையும் நீக்ரோவாக நினைக்கின்றார்கள், என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு,  `நீக்ரோதான் டாப்ஸ் பட்டேலா பேடுகிறாளா? பொட்டு வைக்கிறாளா.? என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். அதற்கு அவள், அக்கா நீக்ரோ மட்டுமல்ல நாங்களும் இப்போதெல்லாம் சிலவேளைகளில் உங்களைப்போல்தான் உடுத்துவோம். புடவை கட்டுவோம். சுடிதார் போடுவோம். என்றாள். சந்தோசம்.

இதை நான் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், மூவினம் கடந்து பல இனங்கள் வாழுகிற நம் நாட்டில் எல்லா ஆடைகளும் எல்லோருக்கும் சாத்தியம். மிகச் சுலபமாக நமது கலாச்சார ஆடைகள் எல்லா இடத்திலேயும் கிடைக்கின்ற பட்சத்தில் பலரும் அதை பரவலாக அணிந்து வருவது சகஜமாகிவிட்ட நிலையில், புடவை கட்டியிருப்பவர் எல்லாம் இந்துக்கள்தான் என முடிவெடுப்பது சரியா? கண்ணால் காண்பதெல்லாம் மெய்யா?

சரி இன்னொரு கேள்வி வரலாம். கோவிலில் அப்பெண் இருக்கின்றாள், உடை சரியில்லை. ? பத்துமலை தைபூசம் இப்போது உள்ளூரில் இருக்கின்ற உலகமக்களால் கொண்டாடப்படுகிற ஒரு பொது விழா. யார்வேண்டுமானாலும் அங்கே செல்லலாம். இம்முறை மலாக்காரர்களும் அதிகம் பேர், வரிசையில் நின்று உணவு வாங்கிச்சாப்பிட்டார்கள். (பார்ப்பதற்கு மலாய்க்காரர்கள் போலத்தான் இருந்தார்கள். ஆனால் முஸ்லீமா என எனக்குத்தெரியாது. மன்னிக்கவும்) ..

இந்துக்கள் மட்டும்தான் செல்லவேண்டும், மலையேறவேண்டும் என்கிற சட்டதிட்டமெல்லாம் அங்கே யாரும் இன்னும் கொண்டுவரவில்லை. அப்படி ஒரு சமய சட்டம் இந்துக்களிடையே இல்லை என்பதைச் சொல்லிக்கொள்வதில் இந்துவான எனக்குப்பெருமையே. !

ஆங்கிலேயப்பெண்மணிகள் புடவை கட்டியிருக்க நம்ம பெண்களுக்கு புடவை கட்ட கசக்குதா? ! இப்படி ஒரு குற்றச்சாட்டு. வெறும் அரைகால் பேண்ட், மொட்டைக்கை சட்டை போட்ட ஆங்கிலேயப்பெண்மணிகள் கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு உலாவந்ததையும் நான் பார்த்தேனே. ரசித்தேனே... தவறில்லை உஷ்ணமான சிதோஷ்ணநிலையில் அவர்களின் ஆடைதேர்வு அப்படி.

கோவிலுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டுமென்று பாடம் நடத்த நினைக்கின்ற பலர், கோவில் வளாகத்தில் நுழைந்த நொடியில் இறை சிந்தனையோடு மட்டுமே இருக்கவேண்டிய இடத்தில் கேமராவை வைத்துக்கொண்டு எவள் எம்மாதிரி ஆடை அணிந்திருக்கின்றாள் என்று வேவு பார்ப்பது மட்டும் பண்பாடா?

அவளின் ஆடை உடுத்தல் என்னை வழிபாடு செய்யவிடாமல் தடுக்கிறது என்றால், புகைப்படத்தில் இருக்கின்ற பெண் கோவிலில் நிற்கவில்லையே. வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றாள். வேடிக்கைப்பார்க்கவந்த மற்ற இனத்துப்பெண்ணாக அவள் இருக்கலாமே.!?

முதுகு தெரிகிற ஒரு ரவிக்கையால் எங்கள் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு பாழ்படுகிறது என்றால், தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களின் சிலைகளுக்கு ரவிக்கையும் இல்லை தாவணியும் இல்லை.