ஞாயிறு, மார்ச் 25, 2012

பழைய வீடு

முன்பு நாங்கள் வசித்த இடம், வீடு, எங்களை அவ்வளவாகக் கவரவில்லை. பெரும்பாலும் மலாய்க்காரர்கள் வசிக்கும் ஓர் இடம் அது.

அவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லைதான். இருந்தபோதிலும், அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூனை வளர்ப்பார்கள். அவர்களின் அந்த வளர்ப்புப் பூனைகள் இரவு வேளைகளில் அந்த ஏரியாவையே சுற்றும். நாம் கதவை மூடிவைத்திருந்தாலும் அது நம் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து அடுப்பங்கரையில் குடும்பம் நடத்திக் குட்டிகள் போடும்.

ஒரு முறை அப்படித்தான், மகள் தூங்கும் அறையின் கட்டிலுக்கு அடியில் அமைதியாகப் படுத்துக்கொண்டது ஒரு கருப்புப்பூனை. நடு இரவில் அங்கே ஒரு எலி வர, அந்த எலியைப்பிடிப்பதற்குத் தாவிய பூனை, மகளில் மேல் பாய்ந்தது. அதைக்கண்டு அவள் அலற (பயங்கரமாக)  ஓரே அமளித்துமளியாகிவிட்டது.

அதுமட்டுமல்ல, இரவு நேரங்களில் வீட்டின் கூறையில் பூனைகளின் ராஜ்ஜியம் தாங்க முடியாத ஒன்று. நள்ளிரவு வேளைகளில் திடுதிமென தாறுமாறாக சத்தங்களை எழுப்பிக்கொண்டு ஓடும். ஓடுகளைப் பிராண்டும்.. அயர்ந்து உறங்கும் நமக்கு தீடிரென்று விழிப்பு வரும், அதன் பிறகு உறக்கம் களைந்து, உறங்காமலேயே எத்தனையோ இரவுப்பொழுதுகள் பாழாய்ப்போயின, இந்தப் பூனைகளால்..

பூனைகளுக்குள் பயகரச்சண்டையெல்லாம் வரும். சண்டைகள் கடுமையாகவே நிகழும். சண்டை என்று இறங்கிவிட்டால் அதுகளில் பேச்சையே அதுகள் கேட்காதுகள் போலிருக்கு. விடாமல் போராட்டம் நடக்கும்.

சிலவேளைகளில் குழந்தைகள் அழுவதைப்போன்ற சத்தத்தில், ஊளையிடும் பாருங்க, கேட்கவே பரிதாபமாக இருக்கும்.  சில நேரங்களில் பொழுது விடியும் வரை அதே போல் கத்திக்கொண்டே இருக்கும். ஒரு முறை கடுமையான கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பிரம்பால் வசமாக மாட்டிய ஒரு பூனையை வாங்கு வாங்கு என வாங்கினேன். அப்போது என் மகனுக்கு ஏழு வயது இருக்கும்..

``ஏம்மா, பேசவே முடியாத இந்த ஜீவனை அடிக்கிறீங்க? பாவம் இல்லையா? இந்த பிரம்பால் (ரோத்தான்) அடித்தால் எப்படி வலிக்கும் தெரியுமா? குடுங்க நான் உங்கள திருப்பி அடிக்கிறேன், எப்படி இருக்குன்னு அப்புறம் தெரியும்!. எனக்கு நீங்க சோறு ஊட்டறீங்க, அதுக்கு அவங்க அம்மா சோறு ஊட்டல, அதான் அது அழுவுது, அத போய் இப்படி அடிக்கிறீங்களே அறிவிருக்கா!?’’ என்று கைகளை முகத்திற்கு நேராக நீட்டி என்னைத் திட்டினான்.

அன்றுமுதல் எனக்கு பிடிச்சது சனியன் என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் சமைப்பதை, தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, பூனைகளுக்குக் கட்டாயம் போட்டாகவேண்டுமென்று, சமைத்து வைத்த உணவுகளை அப்படியே எடுத்து பூனைகளுக்கு உணவாகக் கொடுப்பான். ஒரு முறை மார்க்கெட்டில் இருந்து அப்போதுதான் வாங்கிவந்த வஞ்சரை மீன் துண்டு ஒன்றை அப்படியே தூக்கி பூனைக்குப் போட்டான்.

``மீன் விக்கிற விலைக்கு, பூனைக்கு மீன் கேட்குதா?, இரு உன்ன என்ன பண்ணுகிறேன் பார் என ஒரு முறை அவனையும் அடித்தேன். அசரவில்லை, தொடர்ந்து வீட்டில் உள்ள கருவாடு, சார்டின், நெத்திலி என ஓயாமல் எடுத்துப் போட்டுக்கொண்டே இருப்பான். இதனாலேயே, அவனைக்கண்டால் சில பூனைகள் உடனே ஓடிவந்து விடும்.

வீட்டு வாசட்படியில் உட்கார்ந்திருப்பான், அவனைச் சுற்றி பூனைகள் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும் `மீயாவ்,மீயாவ்’ என. என்னன்னவோ பேசிக்கொண்டிருப்பான் பூனைகளோடு.

அந்த பழைய வீட்டு வாசலில் ஒரே பூனை மலமாக இருக்கும். பூனையின் மலம்  துர்நாற்றம் வீசும். வீடே நாறும். நான் நட்டுவைத்துள்ள செடிகள் அனைத்தும் செத்துப்போகும் இந்தப் பூனை மலத்தின் கொடுமையால். பூனையின் மலம் புல்லில் பட்டால் கூட அந்த புற்கள் கருகிப்போகும். எத்தனையோ முறை முயன்று தோற்றுப்போனேன் துளசி செடியை முளைக்க வைப்பதற்காக.. பூனைகளின் அராஜகத்தால் துளசி செடி வளரவே வளராது. பூச்செடியில் உள்ள பூவைப் பறித்து பூஜைக்குப் போடுவதற்குக்கூட மனம் ஒவ்வாது, காரணம் அந்த செடியின் கீழ் ஒரே பூனை மலமாக இருக்கும். ஒரு முறை, என் மகனைத் திட்டினேன், உன் பூனைகளால் தான், அம்மாவிற்கு பூஜைக்குக் கூட பூக்கள் கிடப்பதில்லை என்று. !

மறுநாள் குழந்தை, பூனை மலங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். என்ன கொடுமை.!! நான் மலம் அல்லினாலும் அல்லுவேனேயேயொழிய அவைகளை விரட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தான்.

இதுவாவது பரவாயில்லை, ஒரு நாள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, மழையில் நனைத்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பூனைக் குட்டியை, கால்வாயில் இறங்கித் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். கால்வாயில் இறங்கியது எப்படித் தெரியுமென்றால், அவனின் வெள்ளைச் சட்டையெல்லாம் அழுக்கு.

பூனை தொப்பையாக நனைந்து, வெடவெட என நடுங்கிக்கொண்டிருந்தது. பள்ளிச் சீருடையைக்கூட கலற்றாமல், அந்தப் பூனைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். பால் கலக்குங்க, பாவம் பூனை என, எனக்கு வேறு ஆடர் கொடுத்துக்கொண்டிருந்தான். எங்கேயோ கிடந்த ஒரு காகிதப் பெட்டியைக் கொண்டு வந்து அதை அதனுள் வைத்து இங்கேயும் அங்கேயும் தூக்கிக்கொண்டு, அவனின் அக்காவிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, பள்ளி வீட்டுப்பாடங்களைக் கூட செய்யாமல், பூனைகளிலேயே கவனத்தைச் செலுத்தி பொழுதை ஓட்டினான்.

கணவர் அவனைத் தொடர்ந்து மிரட்டி எச்சரித்து, படிப்பில் கவனம் வைக்கச்சொல்லி,  கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பூனை பாசத்தை விலக்கினார்.

இப்படியாக பூனைக்கதைகள்...

மேலும் அந்தப் பழைய வீட்டில் கொசு தொல்லை அதிகம். அங்கே வசிப்பவர்கள் அதிக அளவில் டிங்கி காய்ச்சலுக்கு பலியாவார்கள். இதற்குக்காரணம், முறையான கால்வாய் துப்புறவுப் பணி  நடைபெறாததுவே. வீட்டின் பின்புறமிருக்கும் கால்வாயில் கழிவுகளின் அடைப்பு அடிக்கடி நிகழும். நான் வசித்த வீட்டின் எதிர் வீட்டில் மலாய்க்காரப்பெண்மணி ஒருவர் வீட்டிலேயே அதிக அளவில் சமைத்து கம்பனி கம்பனியாக கேட்டரிங் சப்ளை செய்து வியாபாரம் செய்கிறாள். அவள் சுத்தம் செய்கிற மீன்,கோழி, இறைச்சி, இரால், நண்டு போன்றவற்றின் கழிவுகள் அனைத்தும் அந்த கால்வாயிலேயே தேங்கி இரவுவேளைகளில் துர்நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். கடுமையான மழைவந்தால் ஒரிரு நாட்கள் விடுதலை கிடைக்கலாம், இல்லையேல் மூக்கைத்துளைக்கும் நாற்றத்திலேயே நாள்பொழுதுகள் நகரவேண்டியிருக்கும். இரவில் வெளியே ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு நாற்றம். எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டுதான் என் வீட்டையும் அவள் வீட்டையும் கடப்பார்கள்.

மக்கள் குடியிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற வியாபாரங்களுக்குத்  தடைவிதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  அதுவும் பானை பானையாக சமையல் செய்து கேட்டரிங் வியாபாரம் செய்வது கூடவே கூடாது. பிடித்தால் அபராதத்தொகை செலுத்துவதோடல்லாமல் வியாபாரத்திற்குப் பயன்படுத்துகிற பொருட்களையும் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

இருப்பினும் அப்பெண்மணியை மட்டும் யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு மூலக்காரணம் அவளின் கணவன் ஒரு போலிஸ் அதிகாரி என்பது கூடுதல் தகுதி அங்கே.  மேலும் அவர்கள் மலாய்க்காரர்கள். நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் வசிக்கின்ற தமிழர்கள் சிலர் ஒற்றுமையாக செயல் பட்டு புகார் கொடுத்தால், புகாரைத்தூக்கிக்கொண்டு, இன்னார் இன்னார்தான் இப்படிப்புகார் கொடுத்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே ஒருமுறை அப்படித்தான் நடந்தது. புகார் கொடுத்த அந்த தமிழ் குடும்பத்தை அப்படியே புறக்கணித்தார்கள் அங்குள்ள மலாய்க்காரகள். அவர்களின் புறக்கணிப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாதுதான் இருப்பினும், ஊருடன் கூடிவாழ் என்பது நமது தாரகமந்திரமாச்சே. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்தான் நமது முதல் சொந்தங்கள். பகைத்துக்கொள்ள முடியுமா?  இதற்கு பயந்துகொண்டே, புகார் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பொறுத்துக்கொண்டோம் நாற்றத்தை.

நாம் ஒரு நாய் வளர்த்தால் போதும் உடனே முனிசிபலுக்கு புகார் போகும்.. நாயைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

அந்த இடத்தில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், எங்களின் வீட்டு வரிசையின் பின்புற இறுதியில்தான் பொதுத்தொலைபேசிக் கூடாரம் உள்ளது. அதன் அருகிலேயே பஸ் நிறுத்தும் இடம் வேறு அமைந்துவிட்டதால், காலை மாலை இரவு என எந்த நேரமாக இருந்தாலும் ஆட்களில் நடமாட்டத்திற்கு குறைவே இருக்காது.

வேலை முடிந்து வந்து இரவாகும் நான் சமைத்து முடிக்க. இப்படித்தான் ஒருநாள் இரவுவேளையில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பெண் அலறும் குரல் கேட்டது,  ‘அக்கா கதவைத்திறங்கக்கா...! ஒருவன் என்னைத்தொடர்கிறான்..’ என்று என் பின் வாசல் அருகில் நின்றுக்கொண்டு மன்றாடினாள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யார், எவர் என்று தெரியாத பட்சத்தில் எப்படி வீட்டைத்திறந்து உதவுகிறேன் என்கிற பெயரில் அடைக்கலம் கொடுப்பது? காலம் வேறு கெட்டுக்கிடக்கிறது. நான் திருதிருவென முழித்து யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.. துரத்திவந்த அந்தத் திருட்டு ராஸ்கல், அவளை நெருங்கி, அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் கதற கதற பிடுங்கிச்சென்றான். என் கண் முன்னேயே நடந்தது அச்சம்பவம்.
கத்துகிறாள் கதறுகிறாள், காப்பாற்றுங்கள் திருடன் திருடன் என்று.. எந்த மலாய்க்காரர்களும் தமது கதவுகளைத் திறக்கவேயில்லை. சாட்சியாக நின்ற நானும் வாய்பேசா மௌனியாக உரைந்து போனேன்.

அவ்வீட்டின் சமையல் அறை பின் பக்கம் உள்ள ஒரு தாழ்வாரத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும். வீட்டோடு ஒட்டியிருந்தாலும் சமையல் அறை தனியாகவே இருந்தது. நான் கேட்டுக்கொண்டதின் பேரில் அதுமாதிரி கட்ட உத்தரவு போட்டார் கணவர். அங்கே பாதி சுவர், பாதி ஃகிரில் போடப்பட்டிருக்கும். பின் பக்கமாக போவோர் வருவோரெல்லாம் என் சமையல் மணத்தை நுகரலாம் அதோடு நான் சமைப்பதையும்   நன்றாகப்பார்க்கலாம். அவ்வேளையில் சிலரை அடிக்கடி சந்திப்பதால், சந்திக்கின்றபோதெல்லாம் ஒரு `ஹை’ சொல்லுவார்கள்.

பொதுவாக அதிகாலையில் எழுத்தவுடன் நேராக அடுப்பங்கரைக்குச் செல்வது என வழக்கம். அப்படிச்செல்லும் போதெல்லாம், யாராவது நடமாடுக்கிறார்களா என்று பார்ப்பது வழக்கமான ஒன்று. ஒரு நாள் அந்த அதிகாலைவேளையில்  இருட்டில் ஒரு பெண் மறைவாக நின்றுகொண்டு, என் வீட்டையே கண்காணித்துக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும்.!?  மனதிற்குள் கேட்டுக்கொண்டே, நானும் குனிந்து அவளை உற்று நோக்கினேன். அவள் வைத்தக்கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ``யாருங்க?’’ அவள் பதிலே பேசவில்லை. மீண்டும் குரல் கொடுத்தேன். அவள் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரத்தமே உரைந்து விடுவதைபோன்றதொரு பயம் கவ்வியது எனக்குள். கதவை விரைவாக மூடிவிட்டு உள்ளே ஓடினேன். வேலை முடிந்து வீடு திரும்பியதும், பக்கத்து வீட்டு மலாய் பெண் மூலமாகத்தெரிந்தது அவள் ஒரு போதைப் பித்தர், இரவில் பசங்களோடு தெருத்தெருவாக சுற்றுபவள் என்று.

அக்கம் பக்கத்தில் வீடுடைத்து உள்ளே நுழைந்து திருடுகிற திருட்டுச் சம்பவங்கள் வேறு சதா காதில் விழுந்தவண்ணமாகவே இருக்கும். நான் வசித்த வீட்டின் நேர் எதிர் வீட்டில், மகளை பள்ளி பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்புவதற்குள், உள்ளே நுழைந்து பணப்பை, கடிகாரம், கைப்பேசி என எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஊறுகாய் வியாபாரி, கார்பெட் வியாபாரி, தர்மம் கேட்பவர்கள், சிப்ஸ் பொறிகடலை வியாபாரிகள், ஜாதகம் ஜோசியம் பார்ப்பவர்கள் என சர்வசதா காலமும் யாராவது வீட்டின் வாசலில் கதவைத்தட்டி நின்ற வண்ணமாகவே இருப்பார்கள். பகல் வேளைகளில் நிம்மதியாக தலை சாய்க்கமுடியாது. (இப்போது தங்கியிருக்கும் வசிப்பிடத்தில் இந்தத் தொல்லைகளெல்லாம் இல்லை - நுழைவாசலில் இருக்கும் காவலாளிகள் யாரையும் எவரையும் லேசில் உள்ளே விட மாட்டார்கள், நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட, நிஜமாலுமே விருந்தாளிகள்தானா.!? என்பதனை அவர்களின் பின்னாலேயே வீடுவரை வந்து உறுதிபடுத்திக்கொள்வார்கள். )

அங்கே நடந்த இன்னோரு பயங்கரம், ஒரு நாள், நான் குளித்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரமாதலால், முன் கதவை தாழிடாமல் குளித்துக்கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை, ஆனால் யாரோ உள்ளே நுழைந்து விட்டதை என்னால் உணரமுடிந்தது. பிள்ளைகள் தான் வந்திருப்பார்கள் என நினைத்து, நானும் ஜாலியாகக் குளித்து விட்டு வெளியே (மாராப்புடன்) வந்தேன். ஒரு மலாய்க்காரன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து, வணக்கம் ஆச்சி என்றான்.  என் கை கால்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத்துவங்கி விட்டன. பட்டென்று மகளின் அறையில் புகுந்துகொண்டு, அவளின் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் மகனும் வந்துவிட்டான்.மகனின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, எங்கள் வீட்டில் உனக்கு என்ன வேலை.? என்று பதற்றத்துடன் கேட்டேன். தமது வீங்கிய கால்களைக் காட்டி, நான் தர்மம் வாங்கத்தான் வந்தேன் வேறு எந்த கெட்ட நோக்கமும் எனக்கில்லை அக்கா, என்னைத்திட்டாதே, என்றான். கையில் உள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்புவதைப்போல் அனுப்பிய பின் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தோம்.

அதுதான் முதல் முதலில் போலிஸுக்குப் அழைப்பு விடுத்த முதல் அனுபவம். போலிஸ்காரர்கள் கேட்டார்கள், `அவர் என்ன சட்டை போட்டிருக்கார்? என்ன கலர் ஆடை? முழு பேண்ட்’டா அரைக்கால் பேண்ட்’டா? அவன் உயரம் என்ன? அவன் கருப்பா சிகப்பா? எப்படி வந்தான்? நீ ஏன் கதவைப் பூட்டவில்லை? மோட்டார் ஓட்டி வந்தானா? இதற்கு முன் நீ அவனைப் பார்த்தாயா? அவன் எங்குள்ளவன்? புத்திசுவாதினமா? இப்போ அவன் எங்கே? இனிமேல் ஜாக்ரதையாக இரு...’ என்றார்கள். அவன் மலாய்க்காரர் என்றதுதான் போதும், நன்றாகத்திட்டினார்கள் என்னை. எப்படி நீ அப்படிச் சொல்லலாம்? இந்தோனிசியராகக் கூட இருக்கலாம்.! பங்களாதேசியாகக் கூட இருக்கலாம்.! ஏன் தமிழராகக்கூட இருக்கலாம்...! தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து இனத்தை அடையாளப்படுத்தாதே.. என்று கொஞ்சம் கடுமையாகவே எச்சரித்தார்கள். ஏன் தான் அழைப்புவிடுத்தோமே என்றிருந்தது.
ஒரு நாள் கடுமையான மழை, என் வீட்டு வாசலில் ஒருவன் விடிய விடிய உட்கார்ந்திருந்தான். மழைக்கு ஒதுங்க வந்திருப்பான் போலிருக்கிறது. உள்ளிருந்து நானும் என் கணவரும், ஜன்னல் வழியே அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருந்தோம். தாழ்வாரத்தின் கீழ், கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். காத்திருந்து காதிருந்து நாங்களும் உறங்கச்சென்று விட்டோம். காலையில் வீட்டு வாசலில், தீப்பெட்டி, சிகரெட் என சிதறிக்கிடந்தது.

இப்படியே ஒரு வழியாக விடுதலை கிடைத்தது அந்த இடத்திலிருந்து, புது வீடு வாங்கியப்பிறகு இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினேன். விடுதலை அவ்வளவு ஆறுதலாக இருந்தது...!!!

தற்போது தங்கியிருக்கின்ற வசிப்பிடத்தில் எந்தத் தொல்லையும் கிடையாது. காரில் ஸ்ட்டிக்கர் இருந்தால் தான் உள்ளே நுழைய  முடியும். வியாபாரிகள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. பால்காரர், பூக்காரர், ரொட்டிபாய் ஆகியோரைத்தான் பார்க்கலாம்.

அழகிய நந்தவனம் இந்த இடம். சுற்றிலும் அரசாங்க போலிஸ் அதிகாரிகள் காவல் காக்கும் அழகிய அடர்ந்த காடு. காட்டிற்குப் பாதுகாப்பு கொடுப்பதால், போலிஸ்காரர்கள் வட்டமிட்ட வண்ணமாகவே இருப்பார்கள். பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள், வக்கில், டாக்டர், தொழிலதிபர்கள்,அரசியவாதிகள், ஆன்மிகவாதிகள், தீயான மடம் என பெரிய பெரிய ஆட்கள் குடியிருக்கும் ஒர் குடியிருப்பு இது. தூய்மையாக அழகா இருக்கும்.

அண்மையில் கூட, சிலாங்கூர் மாநில சுல்தான் வருகை புரிந்திருந்தார்.  கோத்தோங் ரோயோங் முறைப்படி அவ்விடத்தை துப்புறவு செய்தார்கள். காட்டிற்குச் செல்ல எங்களின் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும், அவர் காட்டிற்கு வருகை புரிந்திருந்தார். அந்த காட்டின் உள்ளே, ஒரு பல்கலைக்கழக  (யூ.பி.எம்) ஆய்வுக்கூடமென்று மிக கம்பீரமாக இருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால், ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியும் உள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற, ஒன்று கூடல் நிகழ்வின் போது, பாதுகாவலாளிகளின் உதவியோடு நாங்களும் அங்கு சென்று வந்தோம்.

இன்று காலையில்,  எனது அந்தப் பழைய வீட்டை வாங்கிய மலாய் தோழி, என்னைத் தொலைப்பேசியில் அழைத்திருந்தாள். இன்னமும் அந்த வீட்டின் முகவரிக்குச் செல்லும் எங்களின் சில கடிதங்களை அவள் பத்திரமாக எடுத்து வைத்து, எங்களிடம் ஒப்படைப்பாள். மாதம் ஒரு முறை சென்று அவைகளை எடுத்துவருவேன். போன மாதம் செல்லவில்லை, அதனால் அதிகமான கடிதங்கள் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்தால். அப்படியே இந்தக் கேள்வியையும் கேட்டாள்.

``புது வீடு எப்படி இருக்கிறது, என்ன சொல்கிறது?’’

``என்ன இருந்தாலும், அந்த பழைய வீடு மாதிரி வராது, அங்குதான் அதிக மகிழ்ச்சி, எல்லா வசதிகளும் உண்டு.. ஏன் தான் விற்றோம், என்று கவலையாக உள்ளது.’’ என்றேன்.

நாங்கள் அதிர்ஷ்டசாலி என்று சொல்லி பெருமிதம் கொண்டாள்....




  

வெள்ளி, மார்ச் 23, 2012

ஆணாதிக்கம்

கொஞ்சம் சோகமான குட்டிக்கதை - யாரும் அழவேண்டாம்.

``ஹை பேபி, என்ன சமையல் இன்று?’’

``முட்டைக் குழம்பு வைத்தேன் மாமா.’’

``சாப்பாடு எடுத்து வை, மாமா குளித்து விட்டு வருகிறேன்.!’’

``சரி மாமா..’’

``ம்ம்ம்..சுவையோ சுவை. நல்லா சாப்பிட்டேன். என்ன மசாலா போட்டு சமைத்தாய் பேபி, மணம் தூக்கலாக இருக்கிறதே..?’’

``எல்லாம் தமிழ்நாட்டு மசாலாதான் மாமா’’.

``நானே நான்கு முட்டைகள் போட்டுச் சாப்பிட்டுவிட்டேன். உனக்கு இருக்கா?’’ அக்கறையோடு கேட்கிறார் மச்சான்.

``இருக்கு மாமா, பத்து முட்டைகள் போட்டுச் சமைத்தேன். இன்னும் இருக்கு, வேணுமா?’’ அப்பாவியாகச் சொல்கிறாள். தாய்மையுணர்வோடு.!

``என்ன!!!! ரெண்டு பேருக்கு பத்து முட்டைகளா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருக்கிறேயே? எதுக்கு இந்த அநாவசிய செலவு எல்லாம்? சிக்கனமா இருக்கத்தெரியாதா? ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால் போதாதா? மீதம் ஐந்து முட்டைகளை வேறு நாள் பயன்படுத்தலாமே.! இப்படியா ஊதாரியா இருப்ப!?’’  சொல்லம்புகள் பாய்கின்றன, இதயத்தைத் துளைக்கின்றன. இதை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

``மாமா, ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால், நீங்க நான்கு முட்டைகள் சாப்பிட்டு விட்டீர்கள், அப்போ எனக்கு?? ’’ கலங்கிய நெஞ்சத்துடன் பேபி.

``உண்டிக்குறைத்தல், பெண்டிற்கழகு... உனக்கு ஒண்ணு போதும். அலையாதே.!’’ .

.டிங்..டிடின்..டிங்..டிடின் ..டிங்..தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவள, யார் அடிச்சாரோ, யார் அடிச்சாரோ?

எங்கே இருக்கு சம உரிமை? பார்த்தீர்களா எப்படியெல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று?!? ஆணாதிக்கம் ஒழிக.

புதன், மார்ச் 21, 2012

மாம்பழம்


`லில்லி’ மாம்பழங்கள் வாங்கினேன். சாப்பிடத்தான் நேரமில்லை. மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். வாங்கியபோது இந்தியா மாம்பழங்கள் போல் தோலேல்லாம் பளபள என மஞ்சளும் லேசான சிகப்பும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அந்த மாம்பழத்தின் கொட்டை கூட முளைத்திருக்கும், சாப்பிட்டு, சப்பி எடுத்து வீசியிருப்பார்கள், காரணம் அவ்வளவு இனிப்பு. தித்திப்பான மாம்பழம். திகட்டாதா மாம்பழம். 

நேற்றுகூட அவர்,  பழம் வாங்கினாயே, எங்கே?  வெட்டி எடுத்திட்டு வா, சாப்பிடலாம் என்றார். வேலை செய்யுமிடத்தில், தோழி சில மாங்காய்களை வெட்டி வேகவைத்து, அதில் கச்சானை (கடலை) அரைத்து, ஊசி மிளகாய், உப்பு, கிச்சாப், ஒய்ஸ்ட்தெர் சாஸ் என ஊற்றி கலந்து ஒரு பாட்டலில் அடைத்துக்கொடுத்தாள். அதை அவர் முன் வைத்தவுடன், வாங்கி வைத்திருந்த  மாம்பழங்களை இருவரும் மறந்து, இந்த மாங்காய் பச்சடியின் ருசியில் மூழ்கினோம். உண்மையிலே சுவைதான். புளிப்பு,இனிப்பு, காரம், கச்சானின் சுவை என அசத்தல் தான் போங்க. இன்று கூட வேலை முடிந்து வந்தவுடன் அந்த மாங்காய் கச்சான் பச்சடி மீதமிருக்கா, என்று கேட்டுவிட்டு, மிச்ச மீதியெல்லாம் காலியாக்கினார். 

நானும் மாம்பழம் இருப்பது நினைவுக்கு வர, சரி, சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு, இன்று அதில் ஒன்றைச் சாப்பிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டு, வேலையெல்லாம் முடித்தவுடன், பழம் வைத்திருக்கும் கூடையைத் திறந்தேன். பெரிய பெரிய பழங்கள் மூன்று, பத்திரமாக இருந்தது. ஆனால், அதன் தோளில் இருந்த அந்தப் பளபளப்பு குறைந்து காணப்பட்டது. நிறம், மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்து அப்படியே.! 

ஒரு பழத்தைக் கையில் எடுத்தேன்.. கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன். நன்கு பெருத்த பழம். ஒரு பழமே குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். அதன் தோளில் கருப்புப் புள்ளிகள் அங்காங்கே. காம்பு உள்ள இடத்தில் கொஞ்சம் கருப்பு அதிகமாகவே இருந்தது. அதன் மூக்கு அப்படியே சிவந்து, பளப்பளப்பாகவே.. பழம் முழுக்கக் கருப்புப்புள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் பழம் அழுகவில்லை. 

கழுவினேன், கை நழுவி, கழுவும் இடத்தின், வஷிங் பேஷனில் பொத்தென்று விழுந்தது. விழுத்த பழத்தை பட்டென்று எடுத்து அதை மீண்டும் கழுவி தட்டில் வைத்தேன். பார்த்தேன். விழுந்த இடத்தில், பழத்திற்கு அடிப்பட்டு நீர் வடிந்தது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கை வைத்து அழுத்திப்பார்த்தேன், உள்ளே சென்றது, அதிலும் நீர் வடிந்தது. கொஞ்சம் பலங்கொண்டு அழுத்தினால் ஓட்டை விழுத்துவிடும் அளவிற்கு அந்த கரும்புள்ளிகள் உள்ள இடங்கள் அழுகியதுபோல் இருந்தது. இருந்தாலும் சாப்பிடலாம்.

இதுபோலவே இருந்த ஒரு பெண்ணின் காலை நேற்று நான் மருந்துவமனையில் பார்த்தேன். சக்கரை வியாதியின் கொடுமையால், அவளின் காலுக்கு ஏற்பட்ட கதி. இந்த மாம்பழம் போலவே இருந்தது, அவளின் காலும். அநேகமாக காலை எடுக்கவேண்டிய நிலை வரலாம்.   

அந்தக்காட்சி நினைவுக்கு வர, பழத்தை மீண்டும் கூடையிலே வைத்தேன். நாளைக்குத்தான் ஃப்ரூட் லாசி செய்யவேண்டும், மாம்பழங்களை வெட்டி தயிர் விட்டு கிரைண்டர் செய்தால் ப்ரூட் லாசி தயார்.


செவ்வாய், மார்ச் 20, 2012

காலநேரம்


மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். மாமி அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமியின் கிட்னி ரெண்டும் பழுதாகிவிட்டதால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஒரு குழாயும் இடது கையில் ஒரு குழாயும் பொருத்தி, ஒன்றினில் நீர் இறங்கிக்கொண்டும், ஒன்றினில் நீர் வெளியேறிக்கொண்டும் இருந்தது. இரண்டு கால்களிலும் புண். நடக்க முடியாதபடி கால்கள் வீங்கியவண்ணமாகவே இருந்தன. மருத்துவமனை ஸ்பெஷலிஸ்ட் என்பதால், நல்ல கண்காணிப்பு, தரமான சிகிச்சை முறை, இரவு பகல் பாராமல் தாதிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

நாங்கள் சென்றபோது பயங்கர குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் மாமி. கூடுதலாக போர்வைகள் வாங்கிப்போர்த்தியும் குளிர் விட்டபாடில்லை. ஏர்கோண்ட் அதிக குளிராக இருப்பதால் வந்த நிலை இது. அந்த ஏர்கோண்ட்’ஐ கொஞ்சம் குறைக்க முடியுமா.? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன். குறைக்க மாட்டார்களாம். சூழல் உஷ்ணமாக இருந்தால் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுமாம்! சூடான சிதோஷ்ண நிலையில் அது அதிவிரைவாகப் பெருகுமாம், பரவுமாம்.. (சொன்னார்கள்)

பசியில்லை தூக்கமில்லை என்றார். கணவர் வெளியே டாக்டரிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

காலையில் யாரோ பக்கத்து வீட்டில் (வார்ட் என்பதற்கு வீடு என்றார்) இறந்துவிட்டார்களாம், அந்த பையனின் அம்மா பயங்கரமாகச் சத்தம் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஆட்கள் குவிந்து விட்டார்கள். மாலை பூ என எக்கச்சக்கமாக.. என்னம்மா பெட்டியெல்லாம் கூட கொண்டுவந்து விடார்கள்! அப்படிக்கத்துகிறார்கள், மனசே நல்லா இல்லை. தோ நல்லா கேள், மோட்டார் சத்தம் இன்னமும் கேட்கிறது பார், என்றார்.

அது மோட்டார் சத்தம் அல்ல, ட்ரோலியின் சத்தம். அழுக்குத்துணிகளை பணியாட்கள் எடுத்துச்செல்கிறார்கள், என்றேன்.

ம்ம்ம்.. பக்கத்தில் ஒரு சீனத்தி இருக்கின்றாள், ஓயாமல் எதையெதையோ சாப்பிடுகிறாள் ஆனால் என்னிடம் மட்டும் பேசவில்லை, யார் இறந்தார்கள்? என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாள். ரொம்ப மோசம்மா டவுன்’ல உள்ளவர்கள். அங்கெல்லாம் அப்படியில்லை, கேட்காமலேயே சொல்வார்கள்.

ஆஸ்பித்திரி என்றால் இதெல்லாம் சகஜம். நீங்க ஏன் அதெல்லாம் பார்கறீங்க?

ச்சே, மக்க மனுஷாளுங்க.. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? எதையுமே கண்டுக்காமல் இருந்தால் என்ன புண்ணியம்?

சரி மணியாச்சு தூங்குங்க என்றேன்.

எங்கம்மா தூக்கம் வருது? பசியே எடுக்க மாட்டேங்கிறது. துக்கமும் வரமாட்டேங்கிறது... கதை பேசறாங்க டாக்டர் நர்ஸ் எல்லாம், விடிய விடிய...,  கல்யாணமான பொண்ணுங்க, நம்ம தமிழ் பொண்ணுங்கக் கூட ஆம்பள பசங்கக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுதுங்க. தொட்டுத்தொட்டு பேசுதுங்க.. படித்த டாக்டரெல்லாம் கூட.. ச்சே, என்ன கண்றாவியோ..!

அதற்குள் பக்கத்து சீனத்தி என்னமோ சொல்ல, விரலை உதட்டருகே வைத்து உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு, அவள் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்கிறார். எப்படி விளங்கும், அவள் சீன மொழியில் பேசுகிறாளே?

உதடுகளைப் பிதுக்கி, கண்களை ஓரமாகக் கொண்டு ஜாடை காட்டினார், அவர்களின் பேச்சு விளங்கியதைப்போல..!

சரி இதற்கு மேலும் இருப்பது சரியல்ல, நோயாளிகள் தூங்க வேண்டும், விளக்கை எல்லாம் பணியாட்கள் அணைக்கத்துவங்கியதைப் பார்த்தவுடன். நாங்களும் கிளம்பவேண்டுமே.!


ம்ம்ம், சரி நாங்க கிளம்பறோம்மா. நாளைக்கு காலையிலே அண்ணி வருவாங்க.. சரியா? என்றேன். அதற்குள் கணவரும் அருகில் வந்தார். கிளம்பறோம் என்றோம்.

ரெண்டு வெள்ளியிருந்தா கொடுய்யா.. அம்மா காலையிலே பசியாற எதாவது வாங்கிக்கொள்கிறேன் என்றார். நடக்கவேமுடியாதபடி உடம்பெல்லாம் ட்யூப். இதில் எப்படி. ? சரி, குழந்தையான அம்மாவிற்கு ரெண்டு வெள்ளி கொடுத்து விட்டுக்கிளம்பினோம்.

வெளியே வரும்போது, ஒரு நர்ஸ் எதிரில் வந்தார், அவரிடம் கேட்டேன், என்ன சிஸ், காலையிலே யாரோ இறந்து ஒரே அமளிதுமளியாச்சாமே?

நர்ஸ் சொன்னார், அப்படி எதுவும் நடக்கவில்லை, மெம்.

வாசகர் கடிதம்

ஒரு அழைப்பு வந்தது. இதுவரையிலும் பேசாத ஒரு எழுத்தாளார். என் உற்ற நண்பர் ஒருவரிடமிருந்து எனது தொலைப்பேசி எண்களை வாங்கி அழைத்திருந்தார்

“வணக்கம் விஜி, நான் தான் ..................”

“வணக்கம் எழுத்தாளரே.. மிக்க மகிழ்ச்சி உங்களின் அழைப்பிற்கு. எதிர்ப்பார்க்காத திடீர் அழைப்பு இது. நலமா?”

“நலமுங்க, நீண்ட நாள் ஆசை உங்களிடம் பேச வேண்டுமென்று, இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.  நந்தாவிடம் தான் தொலைப்பேசி எண்களை வாங்கினேன். உங்களிடம் கேட்காமல், உங்களின் எண்களைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரைத் திட்டாதீர்கள்.!”

“அது நீங்க எப்படி பேசறீங்க என்பதைப்பொருத்துத்தான் இருக்கு.!”

“ஐயோ..அப்படின்னா, பார்த்துத்தான் பேசணும் போலிருக்கு..!!”

“இல்லை, இல்லை..பேசுங்க, பிரச்சனையில்லை.!”

“ஏங்க, உங்களுக்குள் எவ்வளவு திறமை.! உங்க எழுத்திற்கு நான் ரசிகணுங்க. அற்புதமா எழுதறீங்க, கவிதை கூட நல்லா வருது உங்களுக்கு. அன்னிக்கு ஒரு நான்கு வரி கவிதை எழுதியிருந்தீங்களே, ஆஹா என்றிருந்தது. உங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. தேவையில்லாமல் வாசகர் கடிதங்கள் எழுதுவதால் ஒரு புரோஜனமுமில்லை. எவன் படிக்கிறான் அதையெல்லாம்..? வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சம் கூட வளராத சில வாசகர்கள் போடும் சண்டையில், ஏன் நீங்க வீனாக உங்களின் சக்தியை செலவழிக்கின்றீர்கள்!? உங்களின் எழுத்து பலரால் வாசிக்கப்படுகிறது, நீங்க சிறியதாக எதை எழுதினாலும் அதை முதலில் வாசிக்க நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். உங்களுடைய ஒரு கட்டுரை கூட அண்மையில் ஒரு இதழில் வந்திருந்தது, படித்து வியந்துபோனேன். எவ்வளவு அற்புதமாகச் சொல்லப் பட்ட விவரம் அது...!!”

”அப்படிங்களா? நான் எழுதினேனா? என்ன கட்டுரை, எங்கே? ”

“அதாங்க... ஒரு கட்டுரை, அந்ந்ந்த இதப்பத்தி...!! இது..!! சரியா ஞாபகத்தில் இல்லை... ”

“எதைப்பற்றிங்க..? கட்டுரைகள் எழுதியே ரொம்ப நாளாச்சு.., வாசகர் கடிதத்தைப் பற்றி சொல்கிறீர்கள் போலிருக்கு! ”

“ஆங்.. ஆமாம் ஆமாம் வாசகர் கடிதம், அதேதான், பிச்சு விளாசு விளாசுன்னு விளாசுனீங்களே..அதான் அதான்.....”

“விளாசினேனா.. !@#$%^ ?? இல்லையே,  நையாண்டியா நகைச்சுவையா சொல்லியிருப்பேனே, வாசிப்பு பழக்கைத்தைப் பற்றி...! வாசகர்கள் இன்னமும் சின்னச் சின்ன பகிர்வுகளிலேயே ஈடுபாடு காட்டி பொழுதைக்கழிப்பதால், நல்ல வாசிப்புப் பழக்கமில்லாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்குண்டுக்கிடக்கின்றார்கள் என்கிற, ஒரு பகிர்வையல்லவா பகிர்ந்திருந்தேன்.., நீங்களே போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு, விளாசுகிறேன் என்று... தேவையா இதெல்லாம்.!?”

“ஹிஹி.. உங்களச் சீண்டி விடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றார்கள்... அதைத் தான் நானும் சொல்ல வந்தேன், இப்படிப் போய் அதுகளிடம் மாட்டிக்கொண்டு தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன வரப்போகிறது? நீங்க என்ன சொன்னாலும் அங்கே எடுபடாதுங்க. அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் அப்படியே இருந்து பழகிப்போயிட்டாங்க. எங்க வாசகர் வட்டக் குழுவிற்கும் அதான் கவலை. உங்களின் வாசிப்புத் திறன் அபாரமுங்க. நிறைய வாசிக்கறீங்க.. அன்னிக்குக் கூட ஒரு புத்தகத்தைப்பற்றிய விவரமொன்றை சிறிய விமர்சனமாகச் சொல்லியிருந்தீங்க.. அந்தப் புத்தகத்தை நான் கோலாலம்பூரில் தேடி அலையாத கடை கிடையாதுங்க..”

மனதிற்குள்... எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன்!!?? இந்த ஆளு எதுக்காக இப்போ கதை விட்டுக்கொண்டிருக்கிறார்..! கட் பண்ணலாமா? சரி கொஞ்ச நேரம் பேசுவோம்.. எதோ ஆர்வத்தில் உளறுகிறார், கேட்டுப்பார்ப்போம்.

“ஓ..அப்படிங்களா? அப்புறம் அந்த புக்கு கிடைத்ததா இல்லையா? என்ன புக்குபத்தி சொன்னேன்னு நினைவிலே இல்லைங்க எனக்கு, கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்..”

“அது எனக்கும் சரியா நினைவுல இல்லை, எழுதி வைச்சுருக்கேன், அப்புறமா சொல்றேங்க..”

“ம்ம்ம்...”

“அதாங்க, நாங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா, உங்க கதையைத்தான் பேசுவோம், எவ்வளவு அருமையா எழுதறாங்க, ஏன் இப்படிப் போய் சர்சைகளில் மாட்டிக்கொண்டு, வாசகர் கடிதமெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கறாங்க?  வம்பளக்கும் பெண் வாசகின்னு பெயர் எடுக்கறாங்க’ன்னு பேசிக்குவோம். எழுத்தாளர்/கவிஞர் அந்தஸ்துக்கு நீங்க உயர்ந்துட்டீங்கங்க..பின்னே ஏன் இன்னும்..!!? இப்படின்னு தான் எங்களுக்குள் பேசிக்கொண்டு குழம்புவோம். உங்களை எல்லோரும் நல்ல வாசகி, விமர்சகர் என்பதைவிட நல்ல கவிஞர், எழுத்தாளர்’ன்னு சொல்லணும். மலேசியாவில் முத்திரைப்பதிக்கின்ற இலக்கியவாதிகளில் ஒருவராக நீங்க வரணும்ங்கிறது எங்களின் தீராத ஆசை..”

“ஏங்க இப்படி ஓரேடியா?? எழுதுபவர்களை எதோ எழுதறாங்க, எழுத்தாளர்கள்’ன்னு சொல்லிக்கலாம், ஆனால் கவிதை என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கவிஞர்களா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.? நான் எங்கேங்க கவிதை எழுதறேன்.. சில எண்ணக்குவியல்களை எழுத்துக்களால் அடுக்கியிருப்பேன், அது கவிதையா?”

“உங்களின் திறமைகள் உங்களுக்குத்தெரியாது, பிறர் சொல்லும் போதுதான் அது வெளிப்படும்..என்ன நாஞ்சொல்றது?”

“சரிங்க, நீங்க சொல்வதாகவே இருக்கட்டுமே, கவிதை எழுதினேன், கவர்ந்தது என்கிறீர்களே, அப்படியென்றால், என்னுடைய கிறுக்கள்களில் உங்களை அதிகம் கவர்ந்தது?” (மாட்டிகிட்டியா மகராசா), மனதிற்குள்.

“ அந்த... இந்த... புக் ல எழுதினீங்களே..!!!?? அட என்ன கவிதை அது..!!!??? அந்த இது..இது..இது !!!”

“சரிங்க, ரொம்ப நன்றி, யோசித்து நினைவிற்கு வரும் போது, மீண்டும் கூப்பிடுங்க..கொஞ்சம் வேலையிருக்கு..ஒகே வா?”

“அட என்னங்க நீங்க, இருங்க.., என்னுடைய ரெண்டு கதைகள் இந்த வாரம் சூப்பரா வந்திருக்கே, படிச்சீங்களா?”

“ஆமாங்க, எல்லாவற்றையும் படிப்பேன், அந்த ரெண்டு கதைகளில் ‘மதில் மேல் பூனை’ நல்லா இருக்குங்க. அந்தக் கதையின் நடை அற்புதம். நல்லா எழுதியிருக்கீங்க. தமிழ் ஆளுமையும் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்.”

“உண்மைக் கதைங்க..!”

“அட அப்படியா? அப்போ அந்தப் பொண்ணு இப்போ விபச்சாரத்தில்.!!? அப்படின்னா அந்த ஆண் குழந்தைக்கு யாருங்க அப்பா, நீங்களா?” சிரித்துக் கொண்டுதான் கேட்டேன்.

“நினைச்சேன் கேட்பீங்கன்னு.. இல்லேங்க, என் நண்பரின் கதை அது. அவளை இன்னமும் வைச்சிருக்கார்..”. அவரும் சிரித்துக்கொண்டே.

“ஓ..அப்படியா..! ஒகே ஒகே..!”

“எழுதுங்களேன் இதைப்பற்றி ஒரு விமர்சனம், நல்ல அறிமுகமா இருக்கட்டுமே.!”

“எழுதினாலும் வாசகர் கடிதத்தில் தான் வரும், பரவாயில்லையா?..”

“ஏங்க வாசகர் கடிதம்னா கேவலமா? நீங்க எழுதுங்க ஜோரா..!”




அணுவணுவாக....

உன் ஞாபகம் போக்க
எல்லாவற்றிலும் நுழைகிறேன்
வடிவின் சின்னமாய்
அணுவிலும் நீ இருப்பதை
வெளியேறும் போதும்
உணர்கிறேன்

என் காதல்
உன்னை ஒன்றும் செய்யாது
ஏன் தெரியுமா?
அந்த உணர்வு
எனக்கும் எதிரிதான்.!

தவிப்பு வரும் போதெல்லாம்
என்னை நானே
கொலை செய்துகொள்கிறேன்
அருவருப்பில்...

செத்துக்கொண்டிருப்பதால்
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்
குழந்தையாகவே..

அதற்காகவே உன்னைப் பிரியேன்


ஞாயிறு, மார்ச் 18, 2012

மடல்தான்

நீ அப்பாவியா இரு, ஆனால் உன்னைப்பற்றி தப்பாகப்பேசப்படுகிறதே, அதில் உனக்கு தெளிவு வேண்டாமா? எப்படி உன்னிடம் சொல்வது? அதை நான் உன்னிடம் சொல்கிற போது, அட இப்படி எதார்த்தமாக இருந்துவிட்டோமே, என்கிற குற்றவுணர்வு உனக்கு வரும், அதை எப்படி நான் ஜீரணிப்பது? அந்த முக பாவனையை நான் எப்படி எதிர்க்கொள்வது!? நீ எதார்த்தவாதியாகவே இரு, ஆனால் எதார்த்தத்தை போற்றத்தெரியாதவர்களை அடையாளங் கண்ட்டுக்கொள். அப்பாவியாக இருக்காதே. சுற்றியிருப்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். அதற்காக சூழ்ச்சிக்காரியாக மாறு என்று நான் சொல்ல மாட்டேன், வாழ்வதற்கு அதுவும் கொஞ்சம் தேவை என்கிறேன். துளி கூட சொரணை இல்லாமல் எப்படி வாழ்வது?