வெள்ளி, ஏப்ரல் 13, 2012

இறக்கி வைத்தேன்

நேரம் ஆக ஆக ஒரு வித பதற்றத்துடன் என் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.  பொழுதுவிடிந்தால் நான் வசிக்கும் இடத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் அப்பாலில் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செல்லவேண்டும். அதை நினைக்கும்போதே உடலும் மனமும் மிகவும் சோர்வாகவே இருந்தது.

நான் பணிபுரியும் கம்பனியின் நூறு ஆண்டு சாதனைக் கொண்டாட்ட விழா அங்கே வெகு விமர்சையாக நடைபெறவிருப்பதால் ஒவ்வொரு பணியாளர்களும் விசுவாச உணர்வோடு அதில் பங்குகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

முடிந்தவரையில் இதுபோன்ற நிகழ்வுகளை கொஞ்ச காலமாக தவிர்த்து வருகிறேன்.தவிர்ப்பதற்குக் காரணம், பெரும்பாலான வேளைகளில் வாகனமும் சாலையும், போக்குவரத்து நெரிசலுமாக அலைந்து அலைந்து பிரயாணமென்றால் பீதியைக்கிளப்புகிறது.

சொற்ப நேர பிரயாணமென்றால் பரவாயில்லை, இது குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணிநேரப் பிரயாணமாகும். அதுவும் சரியான சாலையமைப்பு இல்லாத காட்டுப்பாதையில் குறைந்தது ஒரு மணிநேரம் பிரயாணமாம். பஸ் பரதநாட்டியம் ஆடும் அந்த சாலையில் என ஆடிக்காட்டினான் என் சக ஊழியன்.

காலை ஒன்பது மணிக்கு பஸ் புறப்படும் என்று ஒலிப்பெருக்கியில் நான் தான் அறிவிப்பு செய்தேன். ஒன்பது என்றால் பத்து ஆகும் என்பது ஒருபக்கமிருந்தாலும், பஸ் புறப்பட்டுப் போய் சேர, மதியம் இரண்டாகும் என்கிறார்கள். சேர்ந்தவுடன் அங்கே எங்களுக்கென்றே தயாரித்து வைத்திருக்கின்ற மதிய உணவை எடுக்கவேண்டும். (உணவு என்ன லட்சணமாக இருக்குமோ என்பதை நினைத்தால், இப்போதே வயிற்றைப் பிரட்டுகிறது.)

அதன்பிறகு ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்ளவேண்டுமாம். அநாதைக்குழந்தைகளின் அவல நிலை, அவர்களைப் பராமறிக்கும் இல்லம் பற்றிய தகவல்கள், குழந்தை வளர்ப்பு, ஏன் குழந்தைகள் அநாதைகளாக் கப்படுகிறார்கள் போன்ற சிந்தனைத்தொகுப்பு.. தேநீர் விருந்தோடு. (எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுகிறது). கம்பனி பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை இது போன்ற நிகழ்வுகளில் பறைச்சாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் படங்கள் பத்திரிகைகளிலும் பரவலாக வரும், பணமும் கொடுப்பார்கள், நல்ல சேவைதான்.

செக் இன், ஹோட்டல் ரூம்மிற்கு. பெரிய கூட்டமாக இருப்பதால் அறையின் சாவி கிடைப்பதற்கு எப்படியும் மணி ஐந்து ஆகும். பிறகு அவரவர் அறைகளுக்குச்சென்று, குளித்து அலங்காரமெல்லாம் செய்துகொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் ballroom  ற்கு வந்துவிடவேண்டும். தாமதமானால், லக்கி ட்ரோ டிக்கட் கிழித்து போடப்படும் பெட்டியை மூடிவிடுவார்கள், இதனாலேயே சகஊழியர்கள் அடிபுடி என்று ஓடுவார்கள்.

விருந்து இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள். உணவு, சீன ரக உணவு. வேலை அனுபவத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ரக உணவைத்தின்னுத்தின்னு சலிப்பு வந்து விட்டது. அதுவும் ஒரு மேஜையில் பத்து பேர் அமரவேண்டும். அந்த பத்து பேரில் ஐவர் நன்கு சாப்பிடுகிறவர்கள் நம்மோடு அமர்ந்துவிட்டால், அவ்வளவுதான், மற்றவருக்கு உணவு கிடைக்காது. அதுவும் என்னைப்போன்றவர்கள், உணவு மிச்சம் இருந்தாலேயொழிய உணவில் கை வைப்பதில்லை. கரண்டியையும் முள்ளையும் டக்கு டொக்கு என்கிற சத்தத்துடன் உணவை உண்பார்கள்.. ஒரே டென்ஷனா இருக்கும்.

இடையிடையே அதிஷ்டக்குலுக்கலும் நடைபெறும். எல்லோருக்கும் விழும், நமக்கு மட்டும் விழாது. ஒரே ஒரு ஆண்டு, ஒரு ரேடியோ கிடைத்தது. அதோடு ஒன்றுமில்லை. வாய் பிளந்து கையில் வைத்திருக்கும் அழைப்பு அட்டையை உர்ரென்று பார்த்துக்கொண்டு, பரபரப்பாக நம் எண்கள் வருமா வருமா என காத்திருந்து பழகிப்போச்சு என்றே சொல்லலாம். பொறுமையைச் சோதிக்கும் அதிஷ்ட எண்கள் சொல்லும் பாணி வேறு படபடப்பை ஏற்படுத்தும்.

ஒருவகையாக டின்னரும் முடியும். பிறகு பார்ட்டி டைம்.. டிஸ்கோ ஆடுவார்கள், ஸ்லோ டான்ஸ் ஆடுவார்கள், நமக்கு அதில் ஆர்வமில்லைதான் இருந்தபோதிலும், நம்மோடு தங்கியிருக்கும் ரூம்மெட் கள் ஆடுவார்களே..!! அவர்களுக்காக சும்மானாலும் உட்கார்ந்துக்கொண்டு, நிகழ்வு களைகட்ட கைகளைத்தட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

நீண்ட நேர பஸ் பிரயாணம், சாப்பிட்டும் சாப்பிடாத நிலை, இரவு பன்னிரெண்டு மணி வரை தூங்காமல், கராமுரா என இரைச்சலான மேல்நாட்டு இசையில், கண்களைப்பறிக்கும் வர்ண விளக்குகள், மினுக் மினுக்கென்று மின்னும் லேசர் ஒளிகள் என படும் அவஸ்தைகள் ஒருவருடம் தாங்கும்.

அதன் பிறகு அறைக்கு வந்து, யாரோ படுத்துப்புறண்ட படுக்கையில் தலை வைக்கக்கூட ஒவ்வாமல் கொண்டு வந்த துண்டை போர்த்திக்கொண்டு படுத்துத் தூங்கவேண்டும்.

காலை ஏழு மணிக்கு பசியாறை. கொஞ்சம் தாமதமானால், வாட்டிய ரொட்டிதான் கிடைக்கும். (அனுபவம்) அதற்கும் தாடாபுடா என ஓடவேண்டும். சாப்பிடுவார்கள் சாப்பிடுவார்கள் உணவையே இதுவரையில் பார்த்திராதது போல் சாப்பிடுவார்கள். புஃவ்வே தான், இருப்பினும் மிக விரைவாக உணவுகள் அனைத்தும் தீர்ந்துபோகும். ஒரு பெரிய பட்டாளமே திரண்டிருந்தால் எப்படி சமாளிப்பார்கள்!? கஷ்டம்தான்.

காலை உணவு முடிந்தவுடன் திடலுக்குச் செல்லவேண்டும், டெலிமேட்ச்.. அங்கே காலில் பலூன் கட்டி வெடிக்கச் சொல்வார்கள், பந்து எடுத்துக் கொண்டு ஓடி மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டும், சாக்கிற்குள் நுழைந்துக்கொண்டு ஓடவேண்டும், காகிதத்தை மடித்து சிறிது சிறிதாக்கி, அதில் நிற்கவேண்டும், பாட்னரை தூக்கிக்கொண்டு... கலகலப்பு மூட்டுகிறார்களாம்..

மதிய உணவு வேளையும் வரும். மதிய உணவிற்குப் பிறகு படகு சவாரியாம்.! இது எனக்குப் பெரிய தலைவலி. பாதிவழியிலே கடலில் வாந்தி எடுத்துள்ளேன். மதிய உணவு எல்லாம் வந்தி வழியாக மீன்களுக்கு இரையாகக் கொடுப்பேன். கொடுமை படுத்துவார்கள். ஒதுங்கி நின்றால் எங்களின் அதிகாரிகள் வந்து வந்து பேசுவார்கள். அவர்களிடம் பேசுவதைவிட பேசாமல் இந்த கொடுமைகளை அனுபவித்து விடலாம்.!

ஓய்ந்து களைத்து, மீண்டும் ரூம்மிற்குள் பிரவேசம். அக்கம் பக்கம் கடற்கரையோறமாக இருப்பதால், மீனவர்கள் விற்கும் மீன் கருவாடு நெத்திலி (கிடைக்காத பொருள் போல்) வாங்குவதற்கு நடந்தே ஷாப்பிங் செல்லலாம் என்கிற அனுமதி கிடைக்கும். உடனே புறப்படுவாள்கள். நானும் அடிவாங்கிய நாய்போல், தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே சுற்றுவேன். கால்கள் பிண்ணும் இருப்பினும் காட்டிக்கொள்வதில்லை.  அவர்கள் சளைக்காமல் சுற்றுகிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமையோ..!

மீண்டும் இரவு உணவு. உறக்கம். மறுநாள் காலையில் ஒரு ஒன்றுகூடல் நிகழ்வும் உண்டு, நிகழ்வுகள் எப்படியிருந்தது என்கிற உணர்வுப் பரிமாற்றம். ஆஹா ஓஹோ என எல்லோரும் கூற நானும் ஒத்தூதுவேன். அவை முடிந்தபிறகுதான் பஸ் புறப்படும். வீடு வந்து சேர, ஞாயிறு இரவு ஆறு அல்லது ஏழு ஆகும். மறுநாள் வேலை..!!

இதனால், இந்த வருட அன்னுவல் டின்னருக்குச் செல்லவேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். அதற்கான காரணம், மாமியார் கீழே விழுந்து மண்டையில் பலத்த அடி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

இப்போதுதான் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் அதன் ஏற்பாட்டுக்குழு தலைவருக்கு. பதிலும் வந்தது ``ok.take care'' என்று.
ஒரு பாரத்தை இறக்கிவைத்ததைப்போன்ற தெளிவு மனதில்.

பி.கு : மாமி உண்மையிலே கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். மண்டையில் அடி. ரத்தம் வழிகிறதாம். அழைப்பு வந்தது, மூத்தார் வீட்டில் இருந்து. 

வியாழன், ஏப்ரல் 12, 2012

வேதம் என்பது?

வேதங்கள் நான்கு..
அவை என்ன சொல்கின்றன?
யாரால் எழுதப்பட்ட்து?
யார் யாருக்கு கொடுக்கப்பட்ட்து?
வேத்த்தில் வர்க்கப்பிரிவுகள் உள்ளனவா?
வேதம் சமஸ்கிருத மொழியில் உள்ளனவா?
வேத்த்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
யாருக்குச்சொந்தம் அது?
ஏன் எல்லோருக்கும் வேதம் போதிக்கப்படவில்லை?
இறைவனால் அளிக்கப்பட்ட்து என்றால், ஏன் எல்லோருக்கும் வேதம் தெரியவில்லை?
ராமாயணம்ம் மஹாபாரதம் வேத்த்தின் ஒரு பிரிவா?
வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா?
வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்த்து, ஆரியர்களின் வருகையால், அது மற்றப்பட்டது என்பது சரியா?

வேதங்களைப்பற்றிய சந்தேகங்களை, எனது தமிழ்நாட்டு நண்பர் ஒருவருக்கு மெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அவரின் எளிய விளக்கம் என்னை அதிகம் கவர்ந்து விட்டதால்,  இதை இங்கேயும் பகிர அனுமதி கேட்டுக்கொண்டேன்.


வேதங்கள் யாராலும் எழுதப் படவில்லை.வாய் வழியாகவே குரு அவரின் சீடர்கள் என்று பரப்பபட்டவை. வேதங்களை  தொகுத்து கொடுத்தவர் வியாசர். வேதம் சமஸ்க்ரித மொழியில்தான் உள்ளது. ஒரு காலத்தில் அனைவரும் வேதம் சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். பின் அவற்றை விட்டுவிட்டனர். பிராமணர்களில் ஒரு சிலர்தான் வேதம் பயில்கின்றனர். ராமாயணம் ,மகாபாரதம் வேதத்தில் வராது . அவை புராணங்கள் .

முதலில் ஆரிய / திராவிட வாதமே தவறு. அப்படி எதுவும் இல்லை/ ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கைகியின் விளைவுதான் ஆரிய திராவிட வாதம். ஆரியப் படையெடுப்பு இதெல்லாம். அதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை குழப்ப உபயோகித்துக் கொள்கின்றனர்.

//வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா
?// இன்றைய கால கட்டத்தில் ஆமாம். ஆனால் முன்பு ரிஷிகளில் கூட பலர் பிராமணர் அல்ல.

வேதம் அனைவருக்குமே சொல்லித் தரப்பட்டது
, கால போக்கில் அனைவரும் விட்டுவிட்டனர் (ப்ராமானர்களையும் சேர்த்துதான்)

நான்கு வேதங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான விஷயங்களை சொல்கிறது. உதாரனத்திற்க்கு அதர்வண வேதம்
, விமானம் செய்வது /மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றை சொல்கிறது.

நன்றி: கார்த்திக்

புதன், ஏப்ரல் 11, 2012

எனக்கு எந்த வருத்தமும் இல்லை

எங்களின் ஊரில், எடிட்டர்கள் இல்லையென்றால் பலர் எழுத்தாளர்களே இல்லை. !?

அதனால்தான் இந்த கணினி யுகத்திலும் பல வாசக எழுத்தாளர்களுக்கு சமூகவளைத்தளங்கள், பேஸ்புக், வலைச்சரம் போன்ற மின் ஊடங்களைப்பற்றிய போதிய ஞானம் இல்லை. இன்னமும் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவை வருமா வராதா என்று வாரவாரம் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.


 

படைப்புகளுக்கு ஏற்ப தலைப்பைப் போடுவது, பத்திகள் பிரிப்பது, பிழைகளைத் திருத்தம்செய்வது, மோசமான கருத்துப்பிழைகளை கண்டறிவது, சுருக்குவது, நீட்டுவது, சரியான வார்த்தைகளைக்கொண்டு பத்திகளை நிறைவுசெய்வது, தேவையற்றதை நீக்குவது போன்றனவற்றில் விழிப்புணர்வு இல்லாத்தால், அவ்வரிய காரியத்தை பத்திரிகை எடிட்டர்கள் செய்து பல `எழுத்தாளர்களை’ எழுத்தாளர் அந்தஸ்திற்கு உருவாக்கி உயர்த்துள்ளனர்.


 

ஒரு முறை, பத்திரிக்கை அலுவலகமொன்றிற்குச் சென்றிருந்தேன். சொந்த பணியின் காரணமாக அப்பக்கம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், பத்திரிகை அலுவலகமும் செல்லும் வழியிலேயே இருந்துவிட்டதால், எனது சிறுகதை ஒன்றினை  அப்பத்திரிகை  ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடலாமே என்றெண்ணி அப்பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றேன்.   

 

படைப்புகளை நேராக வந்தும் கொடுக்கலாம், அதில் ஒரு பிரச்சனையும் இல்லை  என்று அப்பத்திரிகை ஆசிரியரே ஒப்புதல் வழங்கியதால்தான் படைப்பை கையுடன் எடுத்துச் சென்றேன். 

 

நான் அங்கு சென்று சேர்ந்தபோது, அந்த ஆசிரியர் அவசர அவசரமாக ஒரு வேலையில் மிக மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு படைப்பை பக்கம் பக்கமாக திருத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். என்னதாக இருக்குமென்று எட்டிப் பார்த்தால், ஒரு `பிரபல’ எழுத்தாளரின் படைப்பு அது. தலையே சுற்றியது எனக்கு. பல ஆண்டுகளாக பத்திரிகைகளிலும் இதழ்களிலும் விடாமல் எழுதிக்கொண்டிருப்பவரான அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு மோசமான எழுத்துப்பிழைகளோடு வந்திருப்பது எனக்குப் பெரும் அதிர்ச்சி.! ஆசிரியர் சிகப்புப் பேனாவால்  பிழைத்திருத்தங்களை செய்துகொண்டிருந்ததால்,  பளிச்சென்று கண்களுக்குத்தென்பட்டன அங்கே அவர் திருத்தம் செய்திருந்த பிழைகள்.  

 

எதற்காகப் போடவேண்டும்? முயன்று, வாசிப்பில் கவனம் செலுத்தி நன்றாக எழுதவரும்போது அவைகளை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே, என்றதிற்கு, பாவம், எழுத்தில் அதிக ஆர்வமிருக்கிறது, மேலும் தமிழில் எழுதுபவர்கள் வேறு குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்நிலையில் ஆர்வம் உள்ளவர்களை எங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் வளர்த்துவிடவேண்டும். பிறகு பய்யப்பய்ய எழுத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்கிறார்..!

 

எப்போது? எத்தனை ஆண்டுகளாக இந்நிலை..?


 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறுகதை கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிற்பதற்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில், பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் பத்து கதைகளை சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அந்த ஆய்வுகளை அக்கருத்தரங்கில் வாசித்து விமர்சனம் செய்தார்கள். விமர்சனங்கள் அனைத்தும் அற்புதம். செய்தவர் ஒரு முனைவர் என்பதால் நிகழ்வு சோர்வாக இல்லாமல் சுவரஸ்யமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. அனைத்தும் அற்புதமான கதைகள்.

 

ஒவ்வொன்றாக விமர்சனம் செய்துகொண்டே வரும்போது, ஒரு கதையின் விமர்சனம் எனக்குள் சிறு நெருடலை உண்டு பண்ணியது. அக்கதை அப்பட்டமான காப்பி.  சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் ஒன்றான பின்நோக்கிச் சென்று வள்ளுவரையும் சித்தர்களையும் சந்தித்துவிட்ட பிறகு முன்நோக்கிச்செல்வதைப்போன்ற ஓர் அற்புதக்கதை அது. அதை அப்படியே நகல் எடுத்து தமது பெயரை போட்டுக்கொண்டு போட்டிக்கு அனுப்பியுள்ளார் ஒருவர். அச்சமயத்தில் நான் மிக அண்மையில் படித்த கதை அது என்பதால், அக்கதை அப்படியே மனதில் பதிந்துபோயிருந்தது. 

 

தவறு, எழுதியவரின் மேல் இல்லை. எழுதுபவர்கள் இப்படித்தான் எதையாவது செய்து தம்மை நிலைநிறுத்தப்பார்ப்பார்கள். கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அக்கதைகளை ஆய்வு செய்பவர்களுக்கும் எங்கே போனது சுரணையை உணர்வு? அவர்களின் வாசிப்பின் பரப்பளவு என்ன? புதிதாக எழுதுகிற ஒருவர், எழுதிய உடனேயே மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாணி தெரிகின்ற போதே, அவைகளை ஆராயவேண்டாமா..!? 

 

நிகழ்வில் ஓய்வு நேரம் வழங்கப்பட்டது. அப்போது, கதைகளை ஆய்வுசெய்திருந்த முனைவர் ஐய்யா அவர்களை தனிப்பட்டமுறையில் சந்தித்து, கதைகளில் ஒன்று அப்பட்டமான காப்பி என்றும், எனக்குத்தெரிந்த ஒன்று காப்பி என்பதால் மற்றவைகளையும் கொஞ்சம் ஆராய்வதுதான் சிறப்பு என்பதனை தயங்கித்தயங்கியே சொன்னேன். 

 

கண்களை அகல விரித்து ஆச்சிரியமாகப் பார்த்தார் என்னை. அப்படியா? அதுமாதிரியே எழுதியிருக்கலாமல்லவா.!? என்றார் படபடப்பை மறைத்தவண்ணம்.  எனக்கும் இச்சூழல்  தர்மசங்கடத்தை  ஏற்படுத்தியதால், அமைதியாக வந்துவிட்டேன். இதுபோல் இன்னும் எத்தனை காப்பிக் கதைகளை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ..  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

 

இதையொட்டி, அந்நிகழ்வை எடுத்து நடத்திய பத்திரிகைக்கும் தகுந்த ஆதாரத்தோடு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.. அதையும் மூடுமந்திரம் செய்தார்கள்.


 

தமிழ் நாட்டு மோகத்தில் ஆட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பவர்களின் படைப்புகள் கூட அச்சு அசப்பில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சாயல் உள்ளதுவே.

 

இங்குள்ள மற்றவர்களுக்கு இதுபுரியாமல் இருக்கலாம் ஆனால் நான் தினமும் இரண்டு தமிழ்நாட்டு சிறுகதைகளையாவது படித்துவிடுபவள். இந்தச் சாயல் மோகம் தப்பு என்று சொல்லவில்லை, நல்ல விஷயம் தான். பெரிய வளர்ச்சி. அவர்கள் போல் கதை எழுதுவது சாமானியமான ஒன்றா!? ஒரு முதிர்ந்த நிலை பார்வையில் கதைகளைப் புனைவது பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். 


இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒருவர் என்னைக் கேட்டார், மலேசிய இலக்கியத்திற்கு உனது உழைப்பு என்ன?


எனது பதில்: குப்பைகளை எழுதிக் குவிப்பதுதான் உழைப்பு என்றால் - எனது உழைப்பு ஒன்றுமேயில்லைதான். நான் ஒரு சாதாரண வாசகி. 


என்னைப்போல் இலக்கியங்களை விமர்சனம் செய்ய முடியுமா உன்னால்!!? என்றால்...


 

எனது பதில்: என்னால் முடியாதுதான், நான் ``நல்லாருக்கு, நல்லாலை’’ என்கிற வார்த்தையோடு முடித்துக்கொள்வேன். தேவையில்லாமல் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் எழுத்தாளர்களின் மனதை இரணமாக்க நான் தயாராக இல்லை. அவரவரின் பார்வையில், படைப்புகளின் தன்மை வேறுபடலாம். ஏன் நன்றாக இல்லை என்பதற்கு, நான் 100 காரணங்களை வைத்தால், ஏன் நன்றாக இருக்கு என்பதற்கு அவர்கள் 200 காரணங்களைக் கொடுக்கமுடியும். இதில் யாருக்கு என்ன லாபம்?

 

எது சரியான படைப்பு என்பது படிப்பவரின் பக்குவத்தைப் பொருத்தது. ஒருவர் மனது அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எழுதியது எழுதியதுதான். நான் ஒருவள் தனிப்பட்ட முறையில் `ஆஹா.. ஓஹோ’ என்பதாலும் அல்லது, இது எழுத்து அல்ல குப்பை என்பதாலும் , எழுதியவரின் வங்கித்தொகையில் கூடுதல் ஆயிரம் ரிங்கிட் கூட்டியோ குறைந்தோ போவதில்லை.  


 

எழுத்துக்களின் மூலம், அவரவர் பார்வையில் அவலம் என்பதை அவரவர் பாணியில் பிரித்துப் பகுத்துச் சொல்ல வருகிறார்கள், அவற்றில் அங்கீகாரம் தேடுகிறார்கள், புகழ் சேர்க்கப் பார்க்கிறார்கள், தம்மை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோசம். கிடைக்காவிட்டால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 


 

மிகப் பிரபலமாக பேசப்பட்ட, பல புகழ்பெற்ற எழுத்தாளர்களே, இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை (தமிழில்). நமக்குள் ஏன் பிரியோஜனமேயில்லாத வாக்கு வாதம்.!? 


 

தயவு செய்து தமிழ் நாட்டு இலக்கியவாதிகளின் சர்ச்சைகளில் இதில் சேர்க்கவேண்டாம். அவர்களுக்கு எழுத்து முழுநேரத் தொழில், இங்கே நாம், பொழுதுபோக்கு எழுத்தாளர்கள். லட்சியமில்லாத எழுத்து பலருக்கு. எழுத்தால் என்ன மறுமலர்ச்சி புரட்சி வந்தது என்று யாராவது கேட்டால், எனக்குத்தெரியாது, தெரிந்தால் பகிருங்கள். கோபமில்லாமல். நான் கேள்விப்பட்டதில்லை (பத்திரிகை நிருபர்களின் எழுத்தைத் தவிர, பத்திரிக்கை நிருபர்கள் எழுத்தாளர்கள் அல்ல - அதுவும் அவர்களின் பிழைப்பு) 


 

அரசியல் தலைவர்களை மட்டம் தட்டி, அரசியல் சூழலை மையமாக வைத்து சில தகிடதத்தோம் எழுத்துகளை எழுதிவிட்டால், அது அதிரடி அரசியல்    எழுத்தாகிவிடுமா?  அதனால் வந்த மாற்றம் என்ன என்பது தான் இங்கே கேள்வி. மாற்றமே வராது, ஆனால் ``நான் எருமை வாங்கினால் உன் தோட்டதில்தான் மேயவிடுவேன்’’ என்கிற கதையில், நடக்காத விஷயத்திற்காக வரும் சண்டையிடும் நிலைதான் இங்கு  இலக்கிய வட்டத்தில் அவ்வப்போது நடக்கும் கூத்து.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

புரட்சியாளர்கள்

கையில் `ரிமோர்ட்’
ஓயாத புலம்பல்
ஒலி(ளி)பரப்பு சரியில்லை
பொதுநல புரட்சியாளர்கள்

`ரிமோர்ட்’ என்பது
தமிழ் அல்ல
தமிழ் கொலை செய்யாதீர்கள்
தமிழ் புரட்சியாளர்கள்

புரட்சி என்பதே
தமிழ் அல்ல
சம்ஸ்கிருதம்
சமஸ்கிருத மறுப்பாளர்களின்
புரட்சி.

நோக்கமே புரட்சியானால்
புரட்சியில்
ஒரு வெங்காயமும் இல்லை


திங்கள், ஏப்ரல் 09, 2012

தொட்டுக்க புளிச்சக்கீரை....

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் என்றால், சமையல்  தடபுடலாக இருக்கும். கோழி, இரால், நண்டு, இறைச்சி என நன்றாகச்சமைப்பேன். ஆனால் நேற்று, நோயாளியான மாமியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதால், அவரின் நாவிற்கு என்ன கேட்கிறதோ அதையே கூடுதலாக எல்லோருக்கும் சமைத்தேன்.

‘புளிப்பாக எதையாவது சமைம்மா, நாக்கு செத்துப்போச்சு..’ என்றார். சரி என்ன வேணும்னு சொல்லுங்க!? கேட்டேன். ``நல்லா காரமாக புள்ளிச்சைக்கீரையும், புளிப்பாக மாங்காய் துவையலும் செய்..’’ என்றார். இரண்டுமே புளிப்பு சம்பந்தப்பட்டதாகக் கேட்கிறார் என்றால், மருத்துவமனையில் அவர் சாப்பிட்ட உணவின் கொடுமையை நினைக்கும் போது, பரிதாபமாகத்தான் இருந்தது.

`கேட்பதைச் செய்துக்கொடு’, என்பதுதான் கட்டளை, இருப்பினும் கேட்பதையெல்லாம் செய்துக்கொடுக்க முடியுமா என்ன!? அததற்கு எது எது தோதாக இருக்குமோ, அதைத்தானே செய்ய வேண்டும்.!

புளிச்சக்கீரையை வாங்கி, நிறைய சிறிய வெங்காயங்களைச் சேர்த்து, எண்ணெய் கீரையாகக் கடைந்து, வவ்வாள் மீனை, எண்ணெய் இல்லாமல், எழுமிச்சஞ்சாறு பிழிந்து, பொன்நிறமாக வாட்டிக் கொடுத்தேன். வாட்டிய மீனைத் தொடவேயில்லை, புள்ளிச்சைக்கீரையை நக்கிக்கொண்டே, கஞ்சியைக் குடித்தார்.

``ரொம்ப நாளுக்குப்பிறகு சுறுக்’னு சாப்பிட்டேன்ம்மா’’ என்றார். என்ன சாப்பாடு போங்க, இரெண்டு மொடக்கு கஞ்சிதான், அதோடு போதும், வாந்தி வரமாதிரி இருக்கிறது என்கிறார். நோயாளியல்லவா..!

காலையில் எழுந்தவுடன், பசியாறுகிறாரோ இல்லையோ, ஆனால் நேரம் தவறாமல் மருந்து மாத்திரைகளை விழுங்கியாக வேண்டும்.   அம்மருந்து மாத்திரைகளைப் பார்க்க நமக்கு மளைப்பாக இருக்கும். அவ்வளவு மாத்திரைகள், விதவிதமான வடிவத்தில், பல நிறங்களில். கொடுத்தே ஆக வேண்டும், இல்லையேல் இனிப்பின் அளவு ஏழுலிருந்து இரண்டிற்கும், இரண்டிலிருந்து இருபதிற்கும் மாறிமாறி நோயாளியை இம்சை படுத்தும். அது பேராபத்து, நோயாளியை ஸ்ட்ரோக் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள். அவஸ்தைதான்.!

வந்த முதல் நாளிலேயே, மாத்திரைகளைப் பற்றி, மாமி வாய் திறக்கவில்லை. அவருக்கு மருந்து எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை என்பதை உணர்ந்துக்கொண்ட நான், மாத்திரைகளை எடுப்பதற்கு அவரை வற்புறுத்தவில்லை. கணவர் வந்தவுடன், மாத்திரைகளைக் கொடுத்தாயா? என்பார். இருவரும் விழிப்போம்!. வசை எனக்குத்தான். என்ன செய்வது, வயதானவர்கள் குழந்தைகளாகிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளையும் பிடிவாதங்களையும் ரசிக்கலாம் சகித்துக்கொள்ளலாம், ஆனால் வயதானவர்களின் நச்சரிப்பும் புலம்பலும் பெரும் எரிச்சலைத்தான் கொடுக்கிறது. அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதில் அவர்களுக்கே தெளிவு இருப்பதில்லை. சிறுபிள்ளைகளைப்போல் அது வேண்டும், இது வேண்டுமென்று நச்சரிப்பார்கள், ஆனால் கொடுத்தால் வேண்டாம் என்பார்கள்.

இப்படித்தான் ஒரு நாள், பால் வேண்டுமென்றார், பால்மாவு உள்ளது, பால் கலக்கிக்கொடுக்கவா? என்றேன்.  வேண்டாம் ஃப்ரெஷ் மில்க் வேண்டும் என்றார். உடனே, கடைக்குச்சென்று ப்ரெஷ் மில்க் வாங்கி வந்தேன். பாலைக் காய்ச்சி, நன்கு ஆறவைத்து டம்லரில் ஊற்றிக் கொண்டுவந்தால், வேண்டாம், குடலைப்பிரட்டுகிறது என்று சொல்லி படுத்துக்கொண்டார். சரி, காய்ச்ச பாலை விணாக்கவேண்டாமே என்று, அதில் கொஞ்சம் காப்பியைக் கலந்து, நான் குடித்துவிட்டேன். மகன் வந்தவுடன், புகார் செய்கிறார்,  பால் கேட்டேன், கொடுக்கவில்லை. என்று..!? திட்டவும்  முடியாமல், கோபித்துக்கொள்ளவும் முடியாமல்.. என்ன செய்வது!?

சனிக்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லை. கணவர் ஒரு ஒன்றுகூடல் நிகழ்விற்குச் சென்றுவிட்டார். நானும் வருடா வருடம் இந்நிகழ்விற்கு அவருடன் செல்வேன் . இந்த வருடம் கலந்துகொள்ள முடியாமல் போனது. சென்ற ஆண்டின் போது நான் தான் பேச்சாளர். சும்மா நமக்குத்தெரிந்த சில விவரங்களைப் பற்றி பேசலாம். வள்ளலார் பற்றிப்பேசினேன். மிக மகிழ்வாக இருந்தது, நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.  இவ்வருடம் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

மாமியால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லைதான்.  உணவு கொடுத்து விட்டால், அமைதியாக உறங்குவார். ஆனாலும் எங்களுக்கு மனசு கேட்கவில்லை.  அவரை தனிமையில் விட்டு விட்டு எப்படி நிகழ்விற்குச் செல்வது? அதனால் இவ்வருட நிகழ்விற்குச் செல்ல எனக்குத்தடை. அந்நிகழ்வு, தமிழ் பள்ளி மாணவர்களின் உயர்விற்காக, கணவர் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சேவை அன்பளிப்பு நிகழ்வு.

இரவு வெகுநேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். மாமிக்கு இப்போதெல்லாம் தூக்கமே வருவதில்லையாம். விடிய விடிய தூங்காமல் விழித்திருப்பாராம். ஏன் இந்த மாதிரியான சிக்கலில் இறைவன் தம்மை  தவிக்கவிடுகிறான், என என்னிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களையும், அங்கிருந்து வந்தவுடன், மூத்த மகனின் வீட்டில் நடந்தவைகளையும், மகள் வீட்டீற்குச் சென்றிருந்த போது  பேரன்கள் பொழிந்த பாச மழை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாமி மீது வைத்திருக்கும்  அக்கறை, என,  எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருந்தார். நானும் கணினியில், முகநூலில் வலம் வந்துக்கொண்டே, `உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

பேச்சுவாக்கில் அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ள, `அந்த’ பழக்கத்தைப்பற்றியும் கூறினார். அதிகமாகக் குளிரும் போது ஒரு `பேக்’ போட்டுக்கொள்வாராம்.! மகன்கள் பேரன்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டு, ஊர் திரும்புகையில்,  நிச்சயம் பாட்டிக்கென்று வெளிநாட்டு மதுபானங்களை ஒன்று அல்லது இரண்டு பாட்டல்களை  வாங்கி வந்துவிடுவார்கள்.  இது எனக்குத் தெரிந்த ஒன்றுதான்.  இருப்பினும், மருந்து, ட்ரீப்ஸ், ஊசி, மூத்திரப்பிரச்சனை, மலச்சிக்கல், தோள் அரிப்பு, கால்களில் புண், கண் பார்வையில் பிரச்சனை, ஜீரணக்கோளாறு, வாயு கோளாறு என அத்தனை கோளாறுகளால் அவதியுறும் இந்த சூழலில், எப்படிக்கொடுப்பது?

கொஞ்சம் குடித்தால் இந்தக் குளிருக்கு இதமாக இருக்குமென்றார். எனக்கு, திக் என்றது. எப்படிக்கொடுப்பது?? யோசித்தேன்,  கொஞ்சமாக ஊற்றி, சுடுநீர் கலந்து, நானும் மாமியும் சீயர்ஸ் செய்துக் குடித்தோம். யாருக்கும்  தெரியாது.

நாம் செய்கிற செயல் நமக்குச் சரியென்று பட்டுவிட்டால், யாரிடமும் ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ கேட்கவே கூடாது என்பார்களே, அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அன்றிரவு அறிந்துகொண்டேன்.!

இரவு கணவர் வீடு திரும்பியதும், ஜாடை மாடையாக, இது பற்றி ஒன்றுமறியாதது போல் வினா எழுப்பினேன்.

``குளிர் அதிகம், உடலெல்லாம் நடுங்குகிறதென்று அம்மா புலம்புகிறார்களே, கொஞ்சம் விஸ்கி,ப்ராண்டி கொடுத்துப்பார்த்தால்..!?”

``ஐயோ, அந்த மாதிரி முட்டாள் தனமாக எதுவும் செய்துவிடாதே.! வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைப்போல் ஆகிவிடும். கை கால் இழுத்துக்கொள்ளும். உடம்பில் ஏற்றியிருக்கும் அனைத்து மருந்துகளும் பாழாகி பிரிரோஜனமில்லாமல் போய்விடும். ஜாக்ரதை.!!” என்றார்.

எனக்கு அடிவயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. எதோ தவறு நிகழ்த்திவிட்டதைப்போல் மனம் பதைபதைத்தது. இந்த விவரகாரம் வெளியே தெரிந்தால், நான் தான் மாட்டிக்கொள்வேன். படித்திருந்தும் புத்தியில்லாமல் காரியம் ஆற்றிவிட்டேனென்று பல திசைகளில் இருந்து எதிர்ப்புக்குக் குரல்கள் கிளம்பலாம்.! மாமியின் காதிலும் லேசாக ஓதிவிட்டேன். அவரும் மௌனம் காத்தார். (குடிகாரிகள்)

காலையில், வேலைக்கு வந்தவுடன், முதல் வேலையாக என் மருத்துவ நண்பருக்கு தொலைப்பேசியில் அழைத்து,  இந்த விவரத்தைச் சொன்னேன்.

``அதில் தப்பே இல்லை. இனி என்ன? என்ன கேட்டாலும் கொடுங்கள், சந்தோசமாக இருந்து விட்டுப்போகட்டும். மது கூட மருந்துதான் சீரான ரத்த ஓட்டதிற்கு. அதிகமானால் எல்லாமே விஷம், உணவும் கூட. ”

நிம்மதிப்பெருமூச்சு வந்தது..

  

சனி, ஏப்ரல் 07, 2012

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

தீ(தி)ட்டுகிறேன்

என்னை நானே
ஓவியம் தீட்டிக்கொள்கிறேன்
ஒவ்வொரு முறையும்
மூக்கு சரியில்லை
காது சரியில்லை
உதடு சரியில்லை
வாய் சரியில்லை
பேச்சும் தான் சரியில்லை
சரியாக வரும் வரை
திட்டுவேன்..