வியாழன், ஏப்ரல் 26, 2012

இயந்திர வாழ்வின் ஆரம்பம்

இப்போதெல்லாம் நான் தினமும் காலையிலே, எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் மகளை ஏற்றிக்கொண்டுதான் வேலைக்கு வந்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக.! அவள் பள்ளி விடுமுறையில் பக்கத்துக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். பதினேழு வயது பெண் தான். பள்ளி மாணவிபோல், அமைதியாகவே இருப்பாள். சிரிப்பதுகூட தவணை முறையில்தான். யோசித்து சிரிப்பாள். அவளை அழைத்துக்கொண்டு வருவதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பினும், அவர்களுக்கு வேறு வழியில்லை. நானும் உதவுகிறேன்.

உங்கள் ஏரியா உள்ளே நுழைய முடியவில்லை, வாகன நெரிசல், வெளியே எப்படியாவது வந்துவிடு, என்றேன். அவளும் இப்போது வெளியே ரோட்டோரமாகத்தான் நிற்கிறாள். மேட்டில் ரோடு என்றால், கீழே சாலையோறமாக அவளின் அம்மாவும், நான் வரும் வரை அங்கேயே காத்திருப்பார். இதுவரையில் அவள் தாமதமா வந்ததேயில்லை. நான் எவ்வளவு விரைவாகச் சென்றாலும், அவள் அங்கே அந்த பேருந்து நிலையத்தில் காத்திருப்பாள். 

வெளியே நிற்கச்சொல்லியும், அவளுக்கு நான் கொடுக்கும் கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. உதவுதல் என்றால் சும்மாவா! என் வசதிக்கேற்ப, இங்கே நிற்கவேண்டாம், காரை இந்த இடத்தில் நிறுத்த முடியாது, அதனால் அங்கே நில், என்றேன். அவளும் மறு நாள் அதே போல். அங்கே நின்றாள். அங்கே நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் பொறுமையை இழந்து ஹாரன் செய்யும் போது, எனக்கு தர்மசங்கடமாக இருந்ததால், இங்கே வேண்டாம், கொஞ்சம் தள்ளி அந்தப்பக்கம் நில் என்றேன், அவளும் அதுபோலவே.. இருப்பினும் என்க்கு அங்கு நிறுத்தி அவளை ஏற்றுவதும் கடினமாகவே இருந்தது. காரணம் அந்த சாலை ஒரு ஹைவே. கார்களின் வேகம் பற்றிச்  சொல்லவே வேண்டாம்.! அங்கும் நினைத்த நேரத்தில் இஷ்டம்போல் கார்களை நிறுத்தவே முடியாது . பின்னாலிலிருந்து அடித்துப்போட்டு விட்டுச்செல்லுகிற வாய்ப்பு உண்டு. அது ஆபத்து.

ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கும், அதற்கு முன்னால் ஒரு நீளமான மேம்பாலம் இருக்கும், அங்கே நிறுத்தலாம் ஏற்றலாம். காரணம் அந்தப்பக்கம் ஒரு பள்ளி இருப்பதால், வரும் கார்களின் வாகனம் கொஞ்சம் மெதுவாகவே இருக்கும், அதனால் அங்கு பயமில்லை. அங்கே நிற்கமுடியுமா? என்றேன். அமைதியானாள், காரணம் அவர்களின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் வரவேண்டும். நடந்து வரவேண்டுமென்றால் நேரமெடுக்கும், கண்டிப்பாக காரிலோ மோட்டாரிலோ தான் கொண்டுவந்து விடவேண்டும். பெற்றவர்கள் தான் செய்யவேண்டும். கடமையல்லவா! என்ன செய்வது, எல்லோருக்கும் தான் பிரச்சனை. ஒன்றும் பேசவில்லை அவரின் அம்மா, சரி செய்கிறேன் என்றார்.

மழையோ வெய்யிலோ.. அவர்கள் அங்கே இருப்பார்கள் இல்லையேல் நான் கிளம்பி விடுவேன். இப்படியே போராடி போராடி ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது.

இந்த ஒரு மாத காலத்தில், அவள் பண்ணிய ஒரே ஒரு கூத்து என்னெவென்றால்.. !! அன்று ஒரு நாள், வேலை முடிந்து, நான் வெளியே காத்திருந்தேன். முன்பெல்லாம் வேலை முடிந்தவுடன்,  தோழியைப் பார்க்கச்செல்வேன், மார்க்கெட் செல்வேன், நானும் தோழியும், அன்னா கடை ரொட்டி சானாய்’யும் ப்ரூ காப்பியும் குடிக்கச்செல்வோம், அந்த ஏரியா பக்கம், வியாழன் அன்று போடப்படும் இரவு சந்தைக்கு, இங்கே வேலை செய்யும்  தோழிகளோடு உலா செல்வேன். அங்கே விற்கப்படும் அப்பம்பாலிக் ரொம்ப ஸ்பெஷல். எங்குமே அந்த சுவை  கிடைக்காது. மேலும் அங்கே செய்கிற அப்பம்பாலிக் வெறும் கச்சான் மட்டும் போடப்பட்டு செய்யப்படுகிற அப்பம்பாலிக்காக  இருக்காது, அவை பலவித சுவைகளில் கிடைக்கும். வேறு எங்குமே அம்மாதிரியான அப்பம் பாலிக் நான் பார்த்ததில்லை. வாழப்பழ அப்பம்பாலிக், டுரியான் அப்பம்பாலிக், பலா அப்பம்பாலிக், சோள அப்பம்பாலிக், சாக்லெட் அப்பம் பலிக், ரொட்டிதூள் அப்பம்பாலிக் ச்சீஸ் அப்பம்பாலிக் என வித விதமாகக் கிடைக்கும். அதை வாங்குவதற்கென்றே செல்வோம்.

இந்த பெண்னை, நான் ஏற்றிச்செல்கிற கடமை வந்ததிலிருந்து, இந்த வேலையெல்லாம் இல்லாமல், வேலை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பி விடுவேன்.  (சோகமாக). அவளையும் அழைத்துக்கொண்டு சுற்றச்  செல்லலாம் தான், பாவம் அவளின் அம்மா, ரோட்டோறமாக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்.!? இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும் என, எனது சுற்றும் வேலைகளையெல்லாம் ஒத்திப்போட்டேன்.

வேலை முடிந்து விட்டது, நான் வெளியே காத்திருக்கிறேன். மணி  ஐந்தரை  ஆகி, ஆறாகிவிட்டது, போன் செய்கிறேன் வாயிஸ் மெசிஜ் போகிறது. அவங்க அம்மாவிற்கு அழைத்துச்சொன்னேன், அவரும் இதே பதில் தான், அழைப்பு போகவில்லை என. சரி கிளம்பிம்புவோம் என கிளம்பினேன் மனசு வரவில்லை. காத்திருந்தேன்.

மெதுவாக வந்தாள், எனக்கோ.. பயங்கர கோபம். ``ஏன் இவ்வளவு நேரம், எனக்கு என்ன, வேறு வேலை வெட்டி இல்லியா!? போன் அடிச்சாலும் கிடக்கல, என்ன விவரம்னு சொல்லிட்டா நானும் கொஞ்ச நேரம் ஆபிஸிலே உட்கார்ந்திருப்பேன்ல.. கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாமல், நான் என்ன நீங்க வைச்ச டிரைவரா, இஷ்டத்திற்கு ஆட்டிக்கிட்டு வறீங்க ஆ!?’’  கொஞ்சம் கடுமையாகவே திட்டி விட்டேன்.

மிகுந்த களைப்புடன்  சோர்வாக தென்பட்டாள்,  அமைதியாக பதில் வந்தது, `` சாரி அண்டி, திடீரென்று ஒரு வேலை, ஜாப் ஷிட் தயார் செய்யச் சொல்லி கடைசி நேரத்தில் பாஸ் கொண்டுவந்து கொடுத்தார். அவ்வேலையில் எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் சீனியர் வீட்டிற்குக் கிளம்பிட்டாங்க, அதனால நான் ஒண்டியா அந்த ஜாப் ஷிட் செய்யனும், முதல் முறையா தனியா அதை செய்வதால் கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது,  பிழை வேறு வந்துவிட்டது, பாஸ்  பக்கத்திலே இருந்தார், திட்டினார், ஒரு மாதமா செய்யற, இன்னும் நீ பிழை செய்வாயா’ன்னு. பதற்றத்தில் லேட் ஆயிடுச்சு. ஹேன்போன் பேட்டரி வீக், பாஸ் வேறு கோபமா இருந்ததால, ஆபிஸ் போன் பயன் படுத்த பயமா இருந்தது.. அதான்..”  என்றாள் தாழ்ந்த குரலில்.

யாரோ என் கன்னத்தில் பளாரென்று அரைந்தாட்போல இருந்தது. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. ச்ச்சே பாவம்...,  புதிதாக வேலைக்குச் சேர்ந்துக் கொள்பவர்கள்,  இது போன்ற சங்கடமெல்லாம் சந்தித்துத்தானே ஆகனும். அதுவும் இவள் வேலை அனுபவமே இல்லாத பள்ளி மாணவி, வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. இவளின் தாயும் ஒரு கிணற்றுத்தவளை, தந்தையும் படிப்பறிவு இல்லாதவர். நிலைமை புரியாமல் நான் தான் கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டேனோ!?  மனசு கிடந்து அடித்துக் கொண்டது. இருப்பினும் ஈகோவை விட்டுக்கொடுக்காமல்.. ``ம்ம்,சரி சரி பரவாயில்லை, இனி எதாவதென்றால் சொல்லிவிடு, நான் என் ஆபிஸிலே, கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேனே.. இப்படி சும்மா காரில் உட்கார்ந்திருப்பதை விட..’’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, மன்னிப்பு கூட கேட்காமல், காரை செலுத்தினேன். ஆனாலும் மனதிற்குள் லேசான வலி.

இருவரும் அமைதியாக சென்றோம். கொஞ்சம் தாமதமாகச் சென்றால் சாலை நெரிசலில் மாட்டிக்கொள்வது என்பது இங்கே வழக்கமானதுதான். அன்றும் சாலை நெரிசல்.  மழைவேறு, எப்படி இவளை மழையில் ரோட்டோறம் இறக்கிவிடுவது!? திட்டிவிட்டதால் குற்றவுணர்வில் வேறு குறுகுறுத்துக் கொண்டிருந்தேன்.

`சரி இன்னிக்கு அண்டி, வீட்டிலே கொண்டு இறக்கிவிடுகிறேன், அம்மாவை வரவேண்டாமென்று சொல்..’’ என்றேன். பதிலே இல்லை..  ஓ, போனில் சார்ஜ் இல்லையென்றாளே, சரி என, எனது போனை எடுத்து அவள் பக்கம், அவளைப் பார்க்காமலே கொடுத்து,  ``இந்தா அம்மாவிடம் சொல்’’, என்றேன். அதை அவள் வாங்கவில்லை.. என்ன என்று பார்த்தால், அசதியில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்தாள், வெளியே மழைவேறு..!

நானே அவளின் அம்மாவிற்கு அழைத்து, நேரமாச்சு, மழை, நீங்கள் வரவேண்டாம், நானே கொண்டுவந்து வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி, அவளை வீட்டிலே கொண்டு விட்டு வந்தேன்.

அன்றிலிருந்து, தினமும் சரியான நேரத்தில் வந்துவிடுவாள். இப்போதெல்லாம் அவரின் அம்மா எனக்கும் மதிய உணவு, காலை பசியாற என தினமும் எதாவது. சில நேரம் வேண்டாம் என்றாலும் பெரும்பாலும் வாங்கிக்கொள்வேன். அறுசுவை உணவாக இருக்கும்.

இன்று காலையிலே ஒரு சம்பவம். வழக்கம்போல் அவளை ஏற்றுவதற்கு அந்த மேம்பாலத்தின் அருகே சென்றேன். நான் வருவதைக் கண்டவுடன், வேகமாக எழுந்து காருக்கருகில் வந்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில்தான் ஒரு அஃக்‌ஷிடண்ட் நடந்திருந்தது. இரண்டு மோட்டார்கள் மோதிக்கொண்டன. இருவர் சாலையில் கிடந்தனர். கார்கள் அதற்குள் அங்கே வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன. மோட்டாரில் செல்பவர்கள் கீழே இறங்கி உதவ முன்வந்துக்கொண்டிருந்தனர். ஒரு மோட்டாரில் ஒரு வயதானவர், இன்னொரு மோட்டாரில் ஒரு இளஞர் மற்றும் அவரின் மகள், பாலர் பள்ளிச் சீருடையுடன் நான்கு வயது பெண்குழந்தை. குழந்தை அழுதுக்கொண்டும். அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டும், கீழே விழுந்த மூதியவரை ஒரு கையில் பிடிக்க முயன்றுக்கொண்டும், அதற்குள் ஆட்கள் வரவே, எல்லோரும் சேர்ந்து இருவருக்கும் உதவிக்கொண்டும் ஒரே பரபரப்பாக இருந்தது அவ்விடம்.

நான் அங்கே செல்வதற்கு சில வினாடிகள் தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். யாருக்கும் அடி அவ்வளவாக இல்லை. குழந்தைதான் பயத்தில் தனது அப்பாவை இறுக்கிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தது.

காருக்குள் வந்து அமர்ந்த இவளிடம், ``எப்படி நடந்தது இந்த விபத்து?’’ என்றேன். ``எங்கே..எங்கே??” என்று தேடினாள். ``அடக் கடவுளே!, தோ, நீ உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில் தானே நடந்தது இச்சம்பவம்,  நீ பார்க்கவில்லையா?” என்றேன்.

`` இல்லையே,  நீங்கள் வரும் திசை நோக்கியே என் சிந்தனை..” என்றாள். தொடர்ந்து..``ஐயோ பிள்ளை ஏன் அழறது, ரொம்ப அடியா இருக்குமோ?”  என்று கேட்டுக்கொண்டே, திரும்பி அச்சம்பவத்தை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தாள்.

என்னன்னு சொல்வதுங்க..!!? மனிதன், இயந்திர வாழ்விற்குள் நுழைகின்ற ஆரம்ப காலகட்டம் எதுவென்பதை, ஆராய்ச்சி செய்யாமலேயே புரிந்து போனது எனக்கு.!!!!!
  

புதன், ஏப்ரல் 25, 2012

தலைவலி போ(பே)ய்

தலைவலி தலைவலி
தினமும் தலைவலி
தலையில் எந்த பக்கம் வலி
என்பது கூட தெரியாமல்
ஒருபக்கம் இல்லையேல்
இருபக்கமும் வலி
நடுமண்டையிலும்..வலி

எட்டு என்ன, ஒன்பது மணிநேரம்
தூங்கிப்பார்த்தேன்
தலைவலி விட்டபாடில்லை

சும்மா கணினியை விரைக்காதே
அறிவுரை வழங்கப்பட்டது
ஒரு நாள் முழுக்க
கணினியையும் தொலைக்காட்சியையும் கூட
பார்க்கவேயில்லை
தலைவலி தலைவலி

பளிச் விளக்கு வெளிச்சம் கூட
தலைவலிதான்
ஆலோசனைகள் குவிந்தன
இருட்டில் கிடந்துப்பார்த்தேன்
குறைந்தபாடில்லை

அதிக உஷ்ணமும் ஒரு காரணம்
வெயில் படாமல் உள்ளே இருந்துப்பார்த்தேன்
தலைவலி விடவில்லை

குளிரால் கூட இருக்கலாம்
ஏர்கோண்ட் பயன்பாட்டைத் தவிர்த்தேன்
தலைவலி காலையிலும் மாலையிலும்
தொடர்ந்தபடியாக

காப்பி.. டீ.. மசாலா,காரம்
தூரவிலகினேன்
அப்பவும் தலைவலிதான்

இரைச்சல் கூட தலைவலியாம்
சத்தமில்லாத இடத்திலும்
பதுங்கிப்பார்த்தேன்
ம்ஹும் விட்டபாடில்லை

இரத்த கொதிப்பின் ஆரம்பமோ!?
உடனே முழுபரிசோதனைக்கு
சென்று வந்தேன்
எல்லாமே நார்மல்தான்.
தலைவலி மட்டும் அப்நார்மலாக..

இப்போ மூக்கின் மேல் ஒரு கண்ணாடி
தூரப்பார்வைக்கும்
கிட்டப்பார்வைக்கும் ஒரே லென்ஸில்

தலைவலி போய்
புருவத்தில் வலி
இமைகள் வலி
கண்ணின் கருவிழி வலி
கடவாய்ப்பல் வலி
கண்ணாடி அழுத்துகிற மூக்கில்
ஒருவித நெருடல் வலி
கண்ணாடியை பிடித்துக்கொள்கிற
காதுமடல்களின் பின்புறம் வலி
நெற்றிப்பொட்டில்
அருவருக்கும் ஒருவித வலி
பிடரியில் வலி
நடுமுதுகில் ஒருவித வலி
வாந்தி வருவதைப் போல்
வயிற்றிலும் வலி
நெஞ்சுவலி என
பலவித வலிகள்

இயற்கையே தேவலாம்...
தலைவலிபோல்



செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அம்மா திட்டுவார்

சென்ற ஆண்டு, எங்களின் கம்பனியில் நாங்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு நெட்பால் டீம் உருவாக்கியிருந்தோம்.

எங்களுடைய கம்பனி, பல கிளை நிறுவனங்களைக் கொண்டது. எல்லா கிளை நிறுவனங்களிலும் இந்த நெட்பால் டீம், மிக கடுமையான பயிற்சிகளின் மூலம் படு வேகமாக முன்னேறி, பல இடங்களுக்கு போட்டியிடச்சென்று, கிளைகள் சாரா வெளி நிறுவனங்களோடும் போட்டியிட்டு, வென்று, வாகைசூடி, கம்பனியின் பெயரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். எங்களது நிறுவனமானது தலைமை நிறுவனம், அதாவது ஆசியன் எச் ஃக்யூ.  ஆனால் பேர் சொல்லிக்கொள்ளும் படி, பெண்களின் பங்களிப்பு இந்த  விளையாட்டுத் துறையில் அவ்வளவாக இல்லை.

இப்போது, விளையாட்டுத்துறையில் இந்த திடீர் ஆர்வம் வந்ததிற்கு முக்கிய காரணம்;  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்களின் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமும், அதே வேளையில், காற்பந்து விளையாட்டில், எண்பதுகளில் தேசிய அளவில் விளையாடி, வென்று வெற்றிக்கொடி நாட்டிய ஒரு காற்பந்து வீரரை (தமிழர்)  உயர் அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அவர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, தூங்கிக்கிடந்த எங்களின் விளையாட்டுத்துறையை தூசு தட்ட ஆரம்பித்து விட்டார்.

பல குழுக்களைத் தயார் செய்தார். பகுதி பகுதியாக ஆட்களைப் பிரித்து, பல விதமான விளையாட்டுகளில் சேர்த்துவிட்டார். FUTSAL, NETBALL, TUG OF WAR, GOLF, TENNIS, VOLLEY BALL, BASKET BALL, BADMINTON, TABLE TENNIS, CAROM AND BOWLING என.

எல்லா விளையாட்டிற்கும் ஆட்கள் கணிசமாக சேர்ந்துவிட்டவேளையில் நெட்பால் விளையாட்டிற்கு மட்டும் வரவேற்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த அதிகாரி, எல்லா பெண் பணியாளர்களையும் ஒன்று திரட்டி, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து எல்லோரையும் வரும்படி மின்னஞ்சல் வழி அழைப்பு விடுத்திருந்தார். அனைவரும் சென்றோம். பேச்சிற்கே இடமில்லை, எல்லோரும் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.

குழந்தைகளை பள்ளியில் இருந்து ஏற்ற வேண்டும், கைப்பிள்ளைகள் வைத்திருப்பவர்களைத் தவிர மற்ற எல்லோரும் கண்டிப்பாக பயிற்சிகளில் பங்கு பெற வேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சிலர் சிணுங்கினார்கள் என்னைப்போல். விலை அதிகமுள்ள பிரண்டட் விளையாட்டு ஆடை, விளையாட்டுக் காலணி என உடனே அளவு எடுக்கப்பட்டதால், நிராகரிக்க முடியாமல், நிராகரிப்பதைப்போல் ஏற்றுக்கொண்டோம். கிடைக்காது இது போன்ற விலை அதிகமுள்ள ஆடைகள் காலணிகள் என எல்லோரும் நான் நீ என்று முந்தி கொண்டு அளவு கொடுத்து விட்டோம்.  அதுவும் அவர் முன்னிலையிலே. விடுவாரா!? தினமும் எங்களின் டீம் லீடரிடம் கேட்பார், பயிற்சிகள் எங்கே? இப்போ அதன் நிலை என்ன? தேர்ச்சி என்ன? இன்னும் என்னவெல்லாம் வேண்டும்? யார் யார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை? யாரெல்லாம் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர்? போன்ற விவரங்களை வாங்கிய வண்ணம் இருப்பார்.

முதலில், எங்களின் பயிற்சி ஒரு பள்ளியில் தொடங்கிற்று. பயிற்சிபெற்ற ஒரு ஆசிரியை எங்களுக்கு அவ்விளையாட்டு பற்றிய பயிற்சிகளை வழங்கினார். பந்தை எப்படிஅடுத்தவரிடம் கொடுப்பது, பந்து வீசும் போது கைகள் கால்கள் எந்த நிலையில் இருக்கவேண்டும், பந்து கையில் கிடைத்தவுடன் கால்களின் தடங்களில் கவனம் செலுத்துவது, நகராமல் இருப்பது, எங்கே நகர்வது, எங்கே நிற்பது, வருகிற பந்தை எப்படி வாங்குவது, எதிராளியின் கையில் பந்து கிடைத்து விட்டால் அதைப்பிடுங்காமல் எப்படி தன் கையிற்கு அந்த பந்தை வரவழைப்பது போன்றவற்றை மிக கவனமாக பயிற்சியின் வழி சொல்லிக் கொடுத்தார்.

எங்களில் பலர் அவ்விளையாட்டை முறையாகக் கற்காதவர்களாதலால்.. பயிற்சி சில மாதங்கள் தொடர்ந்தது. பயிற்சிகள் முடிந்து திடலுக்கு விளையாட அழைத்துச்செல்லுகையில் ஏறக்குறைய விளையாட கற்றுக்கொண்டோம். இருப்பினும் பலவிதமான குளறுபடிகள்தான்.

திடலில் நடந்த கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. விளையாடும் பெண்மணிகள் நாங்கள் எல்லோரும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். சிலரின் உடம்பு ஒத்துழைக்கவில்லை, சிலரின் வயது ஒத்துழைக்கவில்லை.  திடலிலே கால் சுளுக்கு ஏற்பட்டு நீலகிரி தையலமெல்லாம் கொண்டுவந்து ஒருவர் மாற்றி ஒருவர் கால்களைப்பிடித்து உறுவிக்கொண்டிருந்தோம். அதன்படி, தொடர்ந்து விளையாட முடியாமல் உட்கார்ந்து கொண்டவர்களும் உண்டு.

 ஆரம்பத்தில் எங்களுக்குள் பகுதியாக குழு பிரித்து, நாங்களே, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் எங்க ஆட்களுடனேயே மோதி விளையாடினோம், வெற்றிக் களிப்பில் மாறி மாறி ஒரே ஆர்ப்பாட்டம். விளையாடிய அலுப்பே தெரியாமல் வீடு திரும்புவோம். மிகவும் ஜாலியாக இருந்தது. நாங்கள் நன்றாக நெட்பால் விளையாடுகின்றோம் என்று பேஸ்புக்கில் பதிவேற்றம்.. நண்பர்களுக்கும் பந்தாவாக எஸ்.எம்.எஸ் பகிர்வு வேறு. ஒரே ஆர்வக்கோளாறுதான் போங்க..

எங்களால் ஓரளவு விளையாட முடியுமென்கிற நம்பிக்கை துளிர்விட்டவுடன், எங்களை, பக்கத்து கம்பனியின் டீம்’மோடு மோதவிட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அந்த விளையாட்டின் சிக்கல். நாக்கு வெளியே தள்ளி, மரங்களைச் சாய்க்கும் அளவிற்கு மூச்சு தஸ் புஸ்ஸ்ஸ் என்று ஒரு பக்கம்.. திடலில் அங்கப்பிரதிஷ்டை செய்து, சேற்றில் மூழ்கி, கை கால்களிலெல்லாம் தேய்ந்து. முட்டியெல்லாம் வீங்கி... படு மோசமாகிவிட்டது நிலைமை.

அன்று முதல், பயிற்சி என்றால், ஒரு கலவரத்துடன் காணப்பட்டார்கள் வீராங்கணைகள். ஒவ்வொரு குழுவுடன் மோதும் போது (வெவ்வேறு கம்பனிகளுடன்) படுதோல்வியைத்தான் தழுவி மண்ணைக்கவ்வுவோம். அவர்களின் வேகத்திற்கு அரைகிழவிகளான எங்களால் ஈடு கொடுக்க முடியாமல் திணறி தடுமாறினோம். என்ன செய்வது, உடை காலணிகள் எல்லாம் அவரவர் அளவிற்கு ஏற்றாட்போல் ஆடர் கொடுத்தாகிவிட்டது.. கம்பனியின் ஸ்போர்ட்ஸ் வேறு கூடிய விரைவில் நடக்கவிருந்தது... பின் வாங்க முடியாமல் தத்தளித்தோம்.

பயிற்சி போதவில்லை என மீண்டும் பந்து பிடிக்கும், பந்து வீசும், பந்தை அடிக்கும் பயிற்சியும், திடலைச்சுற்றி ஓடுவது, கால்கள் நாட்டியம் ஆடுவதைப்போல் ஒன்று,இரண்டு, மூன்று என முன்னே இருந்து பின்னேயும், பின்னேயிருந்து முன்னேயும் நகரும் பயிற்சிகள் என வேலையிலிருந்து விடுப்பு எடுத்து பயிற்சிகள் பரபரப்பாக நடத்தப்பட்டது.
இருப்பினும் எல்லாம் கானல் நீராய்.. ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் ஸ்போர்ட்ஸில் படு தோல்வியைத் தழுவியே முடிவுற்றது சென்ற ஆண்டின் நெட்பால் குழு..

திடலில் நடந்த கூத்துகளையும் சொல்லத்தான் வேண்டும். ஒரு முறை எங்களின் ஸ்போர்ட்ஸ் கிளஃப் சேர்மென், நாங்கள் விளையாடுவதைப் பார்க்க திடலுக்கு வந்திருந்தார். அமைதியாக நாங்கள் விளையாடுவதைக் கண்ணுற்றார். நானும் அங்கேயும் இங்கேயும் மூச்சு வாங்க, ஓடினேன் ஓடினேன் திடலின் எல்லைக்கே ஓடினேன், பந்து மட்டும் கையில் கிடைத்த பாடில்லை. எங்கள் குழுவில் உள்ள ஒருவளுக்கு முட்டி வலி,  இங்கிருந்து அந்த பக்கமும், அங்கிருந்து இந்த பக்கமும் நடையாய் நடந்தே விளையாடி முடித்தாள்.  பந்து கிட்ட வரும் போது ஒரு குதி குதிப்பாள் அவ்வளவுதான், சும்மாலும் காற்றில் ஒரு அடி வைப்பதைப்போல் மேலே கையை உயர்த்தி ஒரு அடி அடிப்பாள், அதைப் பார்க்க எனக்கு வேறு பயங்கரக் காமடியாக இருக்கும்.. அப்படியே உட்கார்ந்து `காக்க்காக்க்கா’ என சிரித்து விடுவேன். ஒரு முறை எங்களின் கோர்ச் என்னைத் திட்டினாள், நீ என்னமோ சரியாய் விளையாடுவதைப்போல் அடுத்தவரைப் பார்த்து சிரிக்கின்றாயா? என.. நான் சிரித்த சிரிப்பில் அவளுக்கே தாங்க முடியாமல், அவளும் விழுந்து விழுந்து சிரித்து விட்டாள்.

இந்த முறை அப்படிசிரிக்கமுடியாமல், ஸ்போர்ட்ஸ் சேர்மென் அமர்ந்திருந்ததால், சிரிப்பை அடக்கிக்கொண்டு, விளையாடுவதைப்போல் பவனை செய்தேன். பலர் நிஜமாகவே கடுமையாக விளையாடினார்கள். சேர்மென் பலமுறை தலையை வலது இடது புறமாக ஆட்டிக் கொண்டேயிருந்தார்..(லட்டு சிலேபி கொடுக்கும் போது, சக்கரை வியாதிக்காரர்கள், வேண்டாம் வேண்டாம் என்பார்களே, அதுபோல்) அப்போதே அவர் சிலரை நீக்கி விடச் சொல்லி பட்டியல் கொடுத்து விட்டுச்சென்றார். அதில் என் பெயரும் வந்தது என் அதிர்ஷ்டமே!.

இந்த வருடமும் கூடிய விரைவில் ஸ்போர்ட்ஸ் வரப்போகிறது. பல பயிற்சிகள் தொடங்கிவிட்டன. வேலை முடிந்தவுடன், சார்ட்ஸ் டீசர்ட்ஸ் என, உடைகள் மாற்றிக்கொண்டு திடலுக்கு பயிற்சி மேற்கொள்ளச் செல்பவர்களைக் காணலாம். நெட்பால் குழுவும் இம்முறை பயிற்சியில் நன்கு தேறியிருந்தனர். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்  இம்முறை அதிக அளவில் இருப்பதால், எங்களில் பலர் (விலையுயர்ந்த டீ சர்ட், காலணிகளுக்கும் விளையாடும், போங்கு வீராங்கணைகள்) அந்தக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். முழுக்க முழுக்க இளைஞர்களையே பங்கு பெற வைத்து, சாதித்துக்காட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.. சென்ற வருட மூக்கறுப்பை சரிக்கட்ட.!

அதே பழைய சேர்மென் தான் இம்முறையும், அவர் என்னிடம் வந்து, நிறைய  மாணவர்கள், நம்ம பிள்ளைகள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கின்றார்களே, அவர்களையெல்லாம் விளையாட்டிற்கு அழைக்கவேண்டியதுதானே!? சீனர்கள், மலாய்க்காரர்களைப் பார், எல்லோரும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர். நம் பெண் பிள்ளைகள் சும்மா, இன்னும் கொஞ்ச நாளில், கம்பனியில் யார் மிகப்பெரிய குண்டுப்பெண் என்றால், சிலருக்கு முதல் பரிசு கிடைக்கலாம், என்று சொல்லி கண்களைச் சிமிட்டினார். எனக்கு சுறுக்கென்றது. நான் உங்களைச் சொல்லவில்லை என்றும் முன்னெச்சரிக்கையாக வேறு சொல்லிச்சென்றார்..!

நீங்கள், அவர்கள் எல்லோரையும் சந்தித்து, கண்டிப்பாக எதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள்ளச்சொல்லுங்கள், கம்பனியில் இது ஒரு அற்புதமான வாய்ப்பு, நன்கு பயன்படுத்திக்கொள்ளலாமே, என்று ஆலோசனையும் வழங்கினார்.

நானும் ஒவ்வொருவராக அழைத்து, விளையாட்டுகளைப் பற்றிச்சொல்லி, எதில் ஆர்வம் இருக்கிறது.? என்றும் கேட்டேன். ஒருவருக்கும், எதிலுமே ஆர்வம் இருப்பதாகத்தெரியவில்லை. வேலை முடிந்து, வீட்டுக்கு விரைவாகச் செல்ல வேண்டும். `அம்மா திட்டுவார் ’என்கிற பதில் தான் வந்தது.

அம்மா திட்டுவார்.. அம்மா திட்டுவார் என்கிற சாக்குப்போக்குகளைச் சொல்லிச்சொல்லியே - நாங்கள் சும்மா ஆனது போதுமே.. நீங்களாவது ஓடி விளையாடுங்கள் பாப்பா..

திங்கள், ஏப்ரல் 23, 2012

சுட்டுவிடு

காதலால் என்னை மூழ்கடி
தற்கொலையை விட
கொலை பிடித்திருக்கு
அதுவும் கொலைக்காரன் நீ என்பதால்
ஆத்ம திருப்தியுடன்
துப்பாக்கியை நானே எடுத்து
சுட்டுக்கொள்கிறேன்

சனி, ஏப்ரல் 21, 2012

தூசுகள்

உணரப்படும் 
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
துரத்தப்படுகின்றன..

துரத்தப்படுகின்ற
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
உணரப்படுகிறது...

தூசியும் தும்மலும்
துரத்தமுடியாதது தான்
உணரப்படுகின்ற போது

தூசு என்பது மறைமுகம்
தும்மல் என்பது வெளிப்படை..

நகைச்சுவை

எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதைக் கண் கூடாகக் காணலாம். ஆனால் நகைச்சுவை செய்வதில் மட்டும் ஆண்கள் தான் முன்னிலையில். 

ஆண்களுடைய நகைச்சுவைகள் கவர்வதைப்போல் பெண்களின் நகைச்சுவைகள் கவர்வதில்லை. நகைச்சுவைப் படங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, பெண்களின் body language தான் சிரிக்கவைக்குமேயொழிய அவர்களின் வசனம் அவ்வளவாக சிரிக்கவைக்காது. அப்படியே அவர்களின் வசனம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும்,அது ஒரு ஆண் எழுதிய நகைச்சுவை வசனமாகத்தான் இருக்கும். குறிப்பாக மகளிர் மட்டும் திரைப்படம், ஊர்வசியின் போடி லங்குவேஜ் தான் காப்பாற்றியது அப்படத்தை.

மனோரமா கூட, நகைச்சுவையை விட நவரச நடிப்பில் தான் முத்திரை பதித்தார். மனோரமாவின் நகைச்சுவை அறவே பிடிக்காது எனக்கு.

கோவை சரளா சொல்லவே வேண்டாம், பேசுகிற பாணியே ரசிக்கமுடியாது. கணவனை எட்டி உதைத்து சிரிக்கவைப்பார்.

ஆனால் என்.எஸ்.கே, தங்கவேலு முதல் நாகேஷ், கவுண்டமணி, விவேக் வடிவேலு சந்தானம் வரை எப்போதுமே ஆண்கள் தான் இந்த நகைச்சுவைத் துறையில் மிளிர்கின்றனர். 


நகைச்சுவைக் கதைகள் என்று வரும்போது, தங்கவேலு எப்படிப்பண்ணினார், கவுண்டமணி சொன்னார் பாருங்க, நாகேஷ் இல்லேன்னா.. விவேக் என, சொல்லிச் சொல்லி சிரிப்போம் ஆனால் பெண்கள் பேசிய நகைச்சுவை  வசனங்களை குறிப்பிட்டு யாருமே பேசுவதில்லை.. நான் கேள்விப்பட்டவரை. 

நண்பர்கள் கூட; பல பெண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆண்களாக இருப்பதற்கு இந்த நகைச்சுவை உணர்வுதான் முக்கிய காரணம். இந்த உணர்வு இல்லையென்றால் பெண்களை நெருங்கவே முடியாது. ஏன் இவளுக்கு ஆண்கள்தான் நிறைய நண்பர்க்ள் என் சிலர் நினைக்கலாம் .. எல்லாம் நகைச்சுவை உணர்வேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!  ஒரு பெண்ணிற்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்களேயென்றால் அவள் எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பாள். பெண்களின் இந்த ரசனை உணர்வை மெருகேற்றுவதற்காகவே சில ஆண்கள் தமது நகைச்சுவை உணர்வை அதிகமாக வளர்த்துக்கொள்வார்கள்.

ஆண்களின் நகைச்சுவை உணர்வின் மர்மத்தை ஆராயனும். எல்லா இனத்திலும் இதுதான்.!

வியாழன், ஏப்ரல் 19, 2012

அலுத்துப்போச்சோ...

நாளை நேர்முகத் தேர்வு. தேர்விற்கு வரவிருக்கும் இருபது பேருக்கு இன்று மதியம்தான் நினைவுறுத்தல் அழைப்பு விடுத்து ஓய்ந்தது. தேர்வு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.

நிறைய பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுக்கச்சொன்னார்கள். அந்த ஐம்பது பேர்களில் பத்து பேர் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பத்து பேர், சில தவிர்க்க முடியா காரணங்களால் வரமுடியாது என்றார்கள். மறுபடியும் அழைத்து உறுதி படுத்துக்கொள்கிறோம் என்கிற கோரிக்கையோடு.
ஆக முப்பது பேர் வரமுடியும் என்கிற நிலையில் அன்று.!

இன்று, மறுபடியும் நினைவுறுத்தல் அழைப்பு விடுக்கும் போது, அதில் இருபது பேர்தான் தேறினார்கள். ஒருவர் வரத்தெரியாது என்றும், ஒருவர் மன்னிக்கவும் என்றும் ஒருவர் பிடிக்கவில்லை என்றும், சிலர் தொலைப்பேசி அழைப்பை எடுக்காமலும்....

இந்த இறுதிநேர, நேர்முகத்தேர்வின் உறுதிபாடு அவசியம், காரணம் சில முன்னேற்பாடுளை செய்யவேண்டும். அதிகமானோர் என்றால், இரண்டு அறைகள் தயார் செய்யவேண்டும். முறைப்படி நேர ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் எல்லோரும் வந்து விட்டால் அவர்கள் அமர்வதற்கு இடம், பூர்த்தி செய்யபடுகிற விண்ணப்ப பாரங்கள், அனுப்பியிருக்கின்ற ரிஷுமி’யை  வரிசைப்படி தயார் படுத்துதல், நகல் எடுத்தல் போன்ற வேலைகள் சரியாகச் செய்யப்படுவதற்கே இந்த இறுதி கட்ட தயார் நிலையும் நினவுறுத்தலும்.

மேலும் யாருடைய நேரத்தையும் வீனடிக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை என்பதால், இதுபோன்ற எச்சரிக்கைகளில் நிர்வாகம் முழுக்கவனம் செலுத்துகிறது.

இன்று காலையில் ஒருவருக்கு அழைதிருந்தேன். படு சுவாரஸ்யமான அழைப்பு இது. சென்ற வாரம் இவருக்கு அழைப்பு விடுத்தபொழுதே, வேண்டா வெறுப்பாகவே வெட்டி வெட்டிப்பேசி அழைப்பை அலட்சியம் செய்தார். கோபம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு, `டேய் வர்றீயா, இல்லியா, அத மொதல்ல சொல்லு, கஸ்மாலம்’ என்று திட்டவேண்டும் போல் இருந்தது. இருப்பினும் இமெஜ் காக்க, வாயை மூடிக்கொண்டு..`யெஸ் சர், நோ ச்ர்’என்று முடித்துக்கொண்டேன். கம்பனி இமெஜ் முக்கியம், பிறகு மேலிடத்தில் எதாவது போட்டுக்கொடுத்தால், மேமோ வரும்.. ஏற்கனவே எனக்கு வந்திருக்கு. தனியறையில் வைத்து `ஆத்து ஆத்துன்னு’ ஆதிட்டானுங்க அறிவுரையை. போதுண்டா சாமி. இனி தேவையா என, அன்று முதல் மிக பவ்வியம் தான் எல்லோரிடமும்.

இன்று மீண்டும் அதே நபருக்கு அழைத்து, நாங்கள் அனுப்பிய மெயில் கிடைத்ததா? யெஸ்’ என்றார். இங்கே வருவதற்கு எதேனும் பிரச்சனை உள்ளதா? நோ’ என்றார். ``அப்படியென்றால் அந்த மெயிலில் குறிப்பிட்ட நேரப்படி சரியாக வந்து விடு, நன்றி.. என முடிக்கும் போது..`நில்லு, உன்னிடம் ஒரு கேள்வி’ என்றான். `யெஸ்’ என்றேன்.

யார் இண்டர்வியூ செய்வார்கள், நீ யா? என்றான். இல்லை, அந்த டிப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் என்றேன். `எம்.டி ஆர் ஜீ.எம்?’ கேட்டான். `இருவரும் அல்ல, மூன்று மனேஜர்கள் இருப்பார்கள்’ என்றேன். `இரண்டாவது இண்டர்வி யூ இருக்குமா?’ என்றான். `உங்களைத் தேர்ந்தெடுத்தால், சம்பளம் அலவன்ஸ் போன்றவற்றைப் பேசுவதற்கு நிச்சயம் வரச் சொல்வார்கள் தானே!’ என்றேன். ஆரம்பித்து விட்டான்.. ``முதலில் மானேஜர்கள் இண்டர்வியூ எடுப்பார்கள், பிறகு இரண்டாவது இண்டர்வியூ இருக்கு வா’ன்னு, ஜீ.எம்’கள் எடுப்பார்கள். அதன் பின்னர் எம்.டி எடுப்பார் வா’ன்னு மூணாவது இண்டர்வியூ வரும்.. பிறகு எம்.டி’ க்கு பிடிக்கவில்லைன்னு சொல்லி ரிஜெக்ட் செய்வீர்கள், இது எனக்குத் தேவையா? முதல் இண்டர்வியூவிலேயே பெரிய சூப்பர் ஸ்டார் கணக்கா கேள்விகள் கேட்கிறார்களே, பிறகு எதற்கு இரண்டாவது மூன்றாவது இண்டர்வியூ? மூன்று பேரும் ஒன்றாக இண்டர்வியூ செய்யமுடியாதா? நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? அழைக்கும்போதெல்லாம் வருவதற்கு. !!? எவ்வளவு தூரம் அலையவேண்டும்!? பெட்ரொல் டோல் என எவ்வளவு செலவு? எங்களின் நேரம் வினடிக்கப்படுகிறது. சக்தி வீனடிக்கப்படுகிறது. இப்போ வேலை செய்யுமிடத்தில் லீவு கேட்பதும் கிடைப்பதும் பெரும் பாடாகிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தில் அல்லல்பட்டு வந்தால், ரிஜெக்ட் செய்கிறீர்கள் சர்வ சாதாணரமாக..தேவையா இது எங்களுக்கு!?’’ புலம்பினான். நான் என்ன செய்ய முடியும்.? என் கடன், ஆணைப்படி பணி செய்துக் கிடப்பதே. !

ஒரே கேள்விதான் அவனிடம், கொஞ்சம் அதட்டலாக. `` நீ வறியா இல்லையா?, வரவில்லையென்றால் நன்றி. வணக்கம்’’ அவ்வளவுதான்.

``யெஸ் மேடம், ஐ எம் கமிங்க்’’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தான், இறுதியாக...